06

06

இலங்கை இனப்பிரச்சினை : இரா. அன்பரசு – தமிழ்நாடு காங்கிரஸ் துணைத் தலைவர் அறிக்கை

Indiaபத்திரிக்கை அறிக்கை

இரா. அன்பரசு Ex-M.P.

(நாடாளுமன்ற காங்கிரஸ் கட்சி முன்னாள் செயலாளர்,

தமிழ்நாடு காங்கிரஸ் கட்சியின் மூத்த துணைத்தலைவர்)

அண்மையில் இந்திய அரசின் வெளியுறவுத் துறை அமைச்சராக பொறுப்பேற்ற மறுநாளே மாண்புமிகு S.M. கிருஸ்ணா அவர்களை இலங்கைத் தமிழர்களின் துயர் துடைக்கவும் அவர்களுடைய வாழ்க்கை நிலை அச்சம் நீங்கி பழைய நிலைக்கு திரும்பி அவர்கள் புதிய வாழ்க்கையைத் துவங்கிட வேண்டுமெனவும், பயங்கரவாதம் ஒழிந்து விட்ட நிலையில் இனியாவது இலங்கை வாழ் ஒவ்வொரு தமிழ்க் குடிமகனும் சிங்கள மக்களோடு சரிநிகர் சமானமான வாழ்வுரிமையைப் பெற்றிடவும் இந்திய அரசு முன் வரவேண்டும் என்ற கருத்தினை வலியுறுத்தினேன்.

அமரர் இந்திரா காந்தி, அமரர் இராஜீவ்காந்தி வாழ்ந்த காலங்களிலிருந்து ஈழத்தமிழர்கள் வாழ்வுரிமை பெற்றிட நான் ஆற்றிய பணியையும் அவருக்கு எடுத்துரைத்தேன். 1987-ம் ஆண்டு ஏற்பட்ட இந்திய-இலங்கை ஒப்பந்தத்தில் எவ்வாறு நானும் ஈடுபட்டேன் என்பதையும் தெளிவுப்படுத்தினேன். இலங்கையில் உள்ள தமிழர்களின் அரசியல் இயக்கத் தலைவர்களில் ஒரு சிலர் என்னிடத்தில் தொடர்புகொண்டுள்ளார்கள் என்பதையும் எடுத்துரைத்தேன்.

தலைமை இன்றி இலங்கை தமிழர்கள் தவித்திடும் இந்த நேரத்திலும் இந்தியாவில் உள்ள ஒரு சில தலைவர்களும், இலங்கை அரசும், இந்திய நாடு இலங்கைத் தமிழர்களுக்கு விரோதி நாடு என்ற திரிபுவாதத்தை முன்வைத்து தீவிரப் பிரசாரத்தில் இறங்கி வருகிறார்கள். இத்தகைய செயலில் ஒரு சில தமிழக அரசியல் தலைவர்களும், இலங்கை அரசும் ஒரே வித விச விதையை இணைந்தே தூவி வருகிறார்கள். இந்த நிலை நீடிக்குமானால் சொல்லொண்ணாத் துயரத்திற்கு ஆளாகி இருக்கும் இலங்கைத் தமிழர்கள் உதவிக்கு இந்தியாவிடம் நேச கரம் நீட்டமுடியாமல் போய்விடும்.

இதை முறியடிக்கும் வகையில் இந்தியப் பேரரசு பல்வேறு நல்வாழ்வு திட்டங்களை இலங்கைத் தமிழர்களுக்காக எடுத்திட இலங்கை அரசை நிர்ப்பந்தம் செய்ய வேண்டும். இலங்கையில் தமிழர்கள் வாழ்ந்த பகுதிகளில் சிங்களவர்களை குடியேற்றி தமிழினத்தையே இலங்கை அரசு அழித்துவிடும் என்ற அச்சம் இலங்கைத் தமிழர்களின் மத்தியில் நிலவி இருப்பதைத் தடுத்து நிறுத்தவேண்டும் என்ற கோரிக்கையையும் எடுத்துரைத்தேன். அப்போது தான் இலங்கைத் தமிழர்கள் மத்தியில் இந்தியாவின் மீது புதிய நம்பிக்கையும் நல்லெண்ணமும் பிறந்திடும் எனக் கூறினேன்.

இதையெலலாம் கவனமாகக் கேட்ட வெளியுறவுத் துறை அமைச்சர் மாண்புமிகு S.M. கிருஸ்ணா அவர்கள் உங்கள் கோரிக்கையில் நியாயம் இருப்பதை உணர்கிறேன். ஆனால் இலங்கையில் உள்ள அரசியல் கட்சித் தலைவர்கள் என்னை தனித்தனியாக சந்திக்கிறார்கள். அவர்கள்

அனைவரும் ஒன்று சேர்ந்து ஒரு குறிப்பிட்ட தீர்வோடு என்னை அணுகினால் அதை பரிசீலிக்க இந்திய அரசு தயாராக இருக்கிறது என்று உறுதி அளித்தார்கள். மேலும் நீங்கள் நாடாளுமன்ற காங்கிரஸ் கட்சி செயலாளராக இருந்த போது இலங்கைப் பிர்சினையில் மிகுந்த ஈடுபாடு கொண்டிருந்தீர்கள். எனவே நீங்களே இலங்கை அரசியல் தலைவர்களோடு தொடர்பு கொண்டு அவர்கள் அனைவரையும் ஒரே குழுவாக அழைத்து வாருங்கள் என்று என்னை பணித்தார்கள்.

தமிழகத்தில் இருக்கின்ற ஒரு சில தலைவர்கள் இலங்கைத் தமிழர்கள் போரில் கொல்லப்பட்டதற்கு காரணம் இந்தியா தான். இந்திய நாடு தான் இலங்கை அரசுக்கு போர்த் தளவாடங்களை கொடுத்து உதவியது என்ற பொய்ப் பிரச்சாரத்தை இன்னும் தொடர்ந்து பரப்பிவருகிறார்கள். இதை இந்திய அரசு மறுத்தது மட்டுமல்ல இலங்கை அரசின் விமானத் தளபதி (Chief Marshall) ரோஸன் கூனிதிலகா என்பவரும் ஜே.வி.பி. இயக்கத் தலைவர் சோமவான்சா அமரசிங்கே என்பவரும் இலங்கை இராணுவத்திற்கு சீனா, பாகிஸ்தான், ரஸ்யா போன்ற நாடுகளிலிருந்து தான் இராணுவத் தளவாடங்களை வாங்கினோம் என்று கூறியிருக்கிறார்கள். இலங்கை இராணுவத்தினுடைய செய்தி தொடர்பாளர் பிரிகேடியர் உதய நானாயேகாரா என்பவர் T-55 என்ற இராணுவ டாங்குகளையும் (T-55 Main Battle Tanks) செகோஸ்லோவாகியா, சீனா, ரஸ்யா போன்ற நாடுகளில் தான் வாங்கினோமே தவிர இந்தியாவில் அல்ல. இந்தியாவிடமிருந்து ஏற்கெனவே போடப்பட்ட நிரந்தர ஒப்பந்தத்தின் படி ஒரே ஒரு ராடாரையும் அதை இயக்குபவரையும் தான் இந்தியாவிடமிருந்து பெற்றோமே தவிர வேறு எந்த ஆயுதங்களையும் இந்தியாவிலிருந்து வாங்கவில்லை என்று கூறியுள்ளார். அதுவும் விடுதலைப் புலிகள் கொழும்பின் மீது விமான தாக்குதல் நடத்துவதை தடுத்து நிறுத்துவதற்காகத்தான் இந்தியா ராடாரை வழங்கியது. இலங்கைத் தமிழர்களை கொல்வதற்கு எந்த ஆயுதங்களையும் வழங்கவில்லை என்பது அப்பட்டமான உண்மை!

இந்தியா இராணுவத்தளவாடங்களை இலங்கை இராணுவத்திற்கு விற்கவோ அல்லது அனுப்பவோ மறுத்துவிட்டது என்றும் இவ்வாறு இந்தியா இராணுவத்தளவாடங்களை மறுத்த காரணத்தினால் தான் பாகிஸ்தான், ரஸ்யா, சீனா போன்ற வேறு நாடுகளை நாடவேண்டிய கட்டாயம் ஏற்பட்டது என்றும் இலங்கை இராணுவப் படைத்தலைவர் சரத்பொன்சேகா என்பவரும் NDTV-க்கு அளித்த பேட்டியில் கூறியுள்ளார்.

இப்படி இருந்தும் தமிழகத் தலைவர்களில் ஒரு சிலர் இந்தியா தான் இந்த போரை நடத்தியது என்ற கோயபல் பிரச்சாரத்தை இன்னும் தொடர்ந்து கொண்டிருக்கிறார்கள். இத்தகைய புளுகு மூட்டை தமிழக அரசியல்வாதிகளின் முகத்திரையைக் கிழிப்பதோடு சொல்லொண்ணாத் துன்பத்திலும் துயரத்திலும் உள்ளாயிருக்கும் இலங்கைத் தமிழர்களுக்கு உடனடியாக இந்திய அரசு போர்க்கால அடிப்படையில் பல்வேறு உதவிகளை விரைந்து செயல்படுத்துவது தான் உடனடித் தேவையாகும். ஏற்கனவே நான் திரு. ஞானசேகரன் (ராஜன்), திரு.சுரேஸ் பிரேமச்சந்திரன், திரு. கஜேந்திரன், திரு. செல்வம் அடைக்கலநாதன், திரு. சேனாதிராஜா, திரு. ஆனந்தசங்கரி போன்றவர்களுடன் தொலைபேசியில் தொடர்புகொண்டு என்னை சந்திக்கும்படி அழைத்தேன். இவர்கள் என்னை சந்தித்து இனி ஆற்ற வேண்டிய பணிகள் குறித்து பேசினார்கள். மற்ற தலைவர்களும் என்னை தொடர்பு கொண்டால் இலங்கைத் தமிழர்கள் நல்வாழ்வுக்காகத் தொடர்ந்து பணியாற்றிட நான் தயாராக இருக்கிறேன் என்பதை தெரிவித்துக்கொள்கிறேன். இதுவரை இந்திய நாட்டுக்கு எதிராகவே அவதூறு பிரச்சாரம் செய்து வந்த இலங்கை தமிழ் எம்.பி. சிவாஜிலிங்கம் மாலைமுரசு நாளிதழுக்கு அளித்த பேட்டியில் இந்திய அரசு இனியாவது எங்கள் மீது இரக்கம் காட்டவேண்டும் என்று கூறியிருப்பது வரவேற்கத் தகுந்த ஒன்றே. ஆனால் இந்திய அரசின் தலைமை ஏற்படுத்திய கொள்கை மாற்றத்தால் தான் இலங்கையில் பேரழிவு ஏற்பட்டது, இந்திய பேரரசு இயக்கிவிட்ட துருப்புச் சீட்டுகளாகத்தான் சிங்கள இராணுவம் தாக்கியது என்று மீண்டும் இந்திய நாட்டை குறை கூறியிருப்பது உண்மைக்குப் புறம்பானது.

ஒருபக்கம் இந்தியாவை குறை கூறிக்கொண்டு இந்தியாவின் உதவி வேண்டும் என்று சிவாஜிலிங்கம் கூறுவதை யாரும் ஏற்றுக்கொள்ள மாட்டார்கள். இப்போக்கை அவர்கள் மாற்றிக்கொண்டு இந்தியாவிடம் நேசக்கரம் நீட்ட வேண்டும்.

இரண்டாவது கட்டமாக இலங்கைத் தமிழர்களுக்கு நிரந்தர அரசியல் தீர்வு ஒன்றினை ஏற்படுத்த வேண்டும். அதற்கு 1987-ல் ஏற்பட்ட ராஜீவ்காந்தி-ஜெயவர்த்தனே ஒப்பந்தத்தை மீண்டும் புதுப்பித்து நடவடிக்கை எடுப்பதோ அல்லது புதிய கொள்கைகளை வகுத்து புதிய திட்டத்தை உருவாக்குவதோ இலங்கைத் தமிழர்களின் திட்டமாக இருக்க வேண்டும். தங்களுக்கு நல்ல அரசியல் தீர்வு எது என்பதை இலங்கை வாழ் தமிழர்களும் அங்குள்ள பல்வேறு அரசியல் கட்சி தலைவர்களும் புலம் பெயர்ந்து பல வெளிநாடுகளில் குடியிருக்கும் இலங்கைத் தமிழர்களும் தான் ஒருங்கிணைந்து முடிவெடுக்க வேண்டும்.

பிரபாகரன் போரில் மரணம் அடைந்துவிட்டார் என்று இலங்கை அரசு அறிவிப்பதும், தமிழகத்தில் உள்ள ஒரு சில தலைவர்கள் அவர் உயிரோடு இருக்கிறார், ஒருநாள் எழுந்து வரத்தான் போகிறார் என்று சொல்வதுமாக பட்டிமன்றம் நடத்த தேவையில்லை. இதைப்பற்றி பட்டிமன்றம் நடத்துவதை தவிர்த்து, இனி இலங்கையில் இன்னல்களுக்கு மத்தியில் வாழ்ந்துகொண்டிருக்கும் தமிழர்களின் நல்வாழ்விற்கு என்ன செய்யப்போகிறோம் என்ற தீர்க்கதரிசனத்தோடு செயல்படுவதே உடனடி தேவையாகும்.

எனவே, இனியாவது இலங்கை அரசியல் தலைவர்கள் அனைவரும் ஒன்று கூடி தங்களுக்குள் ஒரு தலைவரை தேர்ந்தெடுத்துக் கொண்டு சரியான அரசியல் தீர்வினை இந்திய அரசிடம் முன்வைக்க வேண்டும். ஒரே தலைமையின் கீழு; ஒன்றுபட்டு செயலாற்ற இயலவில்லையெனில் ஒரு கூட்டுத் தலைமையையாவது ஏற்படுத்திக் கொண்டு ஒருங்கிணைந்து செயல்பட முன் வரவேண்டுமென்று நான் வேண்டிக் கேட்டுக்கொள்கிறேன். இல்லையெனில் பிரித்தாளும் சூழ்ச்சியில் கைத்தேர்ந்த இலங்கை அரசு இலங்கையில் தமிழினமே அழிந்து போகும் நிலைமையை உருவாக்கிடும்.

அதுமட்டுமல்ல ஒரு தலைமையில்லாமல் தவித்துக்கொண்டிருக்கும் இலங்கைத் தமிழர்களுக்கு ஒரு தலைமையை ஏற்படுத்தி செயல்படுவது காலத்தின் கட்டாயமாகும்.

இந்தியா என்றுமே இலங்கைத் தமிழர்களுக்கு பல்வேறு நிலைகளில் உதவியிருக்கிறது. இன்று உதவுவதற்கு தயாராக இருக்கிறது. இந்திய நாட்டின் உதவியால் தான் இலங்கைத் தமிழர்களுக்கு மறுவாழ்வும் மறுமலர்ச்சியும் ஏற்படும். எனவே, அருள்கூர்ந்து தனிப்பட்ட மன வேறுபாடுகளை குழி தோண்டி புதைத்துவிட்டு இலங்கைத் தமிழர்களுக்கு நல்வாழ்வு கிடைத்திட நல்ல அரசியல் தீர்வு ஏற்படுத்திட ஒன்றுபட்டு செயலாற்ற வாருங்கள் என்று இலங்கையில் உள்ள பல்வேறு அரசியல், இயக்கத் தலைவர்களையும் பல்வேறு நாடுகளில் குடியேறியுள்ள இலங்கைத் தமிழர்களின் முன்னோடித் தலைவர்களையும் வேண்டிக் கேட்டுக்கொள்கிறேன்.

இப்படிக்கு,

(இரா. அன்பரசு)

துணைத் தலைவர்,

தமிழ்நாடு காங்கிரஸ் கமிட்டி

06-06-2009

விவாதத்தை முடித்து கொண்ட பாதுகாப்பு கவுன்சில்

06bankimoon.jpgஐ.நா.  இலங்கை இனப்பிரச்சினை தொடர்பான தனது கடைசிக் கூட்டத்தை முடித்துக் கொண்டது ஐ.நா. பாதுகாப்பு கவுன்சில். அகதிகள் முகாமிலிருந்து 13 ஆயிரம் பேர் காணாமல் போனது தொடர்பாகவும், 20 ஆயிரத்திற்கும் மேற்பட்டோர் கொல்லப்பட்டது தொடர்பாகவும் விளக்கம் அளிப்பார் என எதிர்பார்க்கப்பட்ட ஐ.நா. பொதுச் செயலாளர் பான் கி மூன் விளக்கம் தரவில்லை.

இலங்கைப் பிரச்சினை குறித்து பொதுவாகவே அவர் பேசினார்.

ஈழத்தில் நடந்த இறுதிப் போரின்போது 20 ஆயிரத்திற்கும் மேற்பட்ட தமிழர்கள் படுகொலை செய்யப்பட்டது குறித்து ஐ.நா. பாதுகாப்பு கவுன்சில் நேற்று விவாதித்தது. இலங்கையில் இடம்பெற்ற போரின் கடைசி நாட்களில் 20 ஆயிரத்திற்கும் அதிகமான அப்பாவித் தமிழர்கள் படுகொலை செய்யப்பட்டிருப்பது குறித்தும் 13 ஆயிரத்திற்கும் அதிகமான தமிழர்கள் அகதிகள் முகாமில் இருந்து காணாமல் போய் இருப்பது குறித்தும் ஐக்கிய நாடுகள் சபையின் பாதுகாப்புச் சபையில் நேற்று கூட்டம் நடந்தது.

இக்கூட்டத்தில் பாதுகாப்பு கவுன்சில் உறுப்பினர்கள் கலந்து கொண்டனர்.கூட்டத்திற்கு வந்த அமெரிக்க தூதர் ரோஸ்மேரி டிகார்லோ கூறுகையில், இது சாதாரண கூட்டம்தான். இந்தக் கூட்டத்தின் முடிவில் எந்தவிதமான அறிக்கையும் வெளியிடப்பட மாட்டாது. இலங்கை நிலவரம் உள்ளிட்ட பல்வேறு விவகாரங்கள் குறித்து எங்களுக்கு தெரிவிக்கவுள்ளனர், அவ்வளவுதான் என்றார்.

இக்கூட்டத்தில் இலங்கை தவிர வட கொரியா குறித்தும் உறுப்பினர்களுக்கு எடுத்துரைக்கப்பட்டதாம். கூட்டத்தில் ஐ.நா. பொதுச் செயலாளர் பான் கி மூன் தனது ஆலோசகர்களான விஜய் நம்பியார் மற்றும் கிம் வோன் சூ ஆகியோருடன் கலந்து கொண்டார். பான் கி மூனின் செய்தித் தொடர்பாளர் மிஷல் மோன்டாஸும் அவருடன் சென்றார். நேற்றைய கூட்டத்தில் கூறப்பட்டபடி பான் கி மூன் இலங்கை இனப்படுகொலை தொடர்பாக விளக்கம் ஏதும் தரவில்லை என்று இன்னர் சிட்டி பிரஸ் தெரிவிக்கிறது.

மேலும் நேற்றைய கூட்டம்  ஒரு மேலெழுந்தவாரியான கூட்டம் என்றும், அதிகாரப்பூர்வ கூட்டம் இல்லை என்றும் ஐரோப்பிய கவுன்சில் வட்டாரத் தகவல்கள் கூறுவதாக இன்னர் சிட்டி பிரஸ் கூறியுள்ளது. பிற்பகல் 3.15 மணிக்கு கூட்ட அரங்குக்குள் போன பான் கி மூன், ஜப்பான் தூதர் டகாஷு, இலங்கை தூதர் ஆகியோருடன் மாலை 5 மணியளவில் வெளியில் வந்தார். பான் கி மூனிடம் செய்தியாளர்கள் அகதிகள்முகாமிலிருந்து காணாமல் போனவர்கள் குறித்து கேட்டபோது, போர் பாதித்த பகுதியில் சிகிச்சை அளித்து வந்த டாக்டர்கள் பிடித்து வைத்திருப்பது குறித்து நான் அதிபர் ராஜபக்சேவுடன் பேசியுள்ளேன். இலங்கை வெளியுறவு அமைச்சரிடமும் பேசியுள்ளேன் என்றார்.

அப்போது உடன் இருந்த இலங்கை தூதர், சம்பந்தப்பட்ட டாக்டர்களை சந்திக்க சர்வதேச செஞ்சிலுவைச் சங்கத்தினருக்கு, இலங்கை சட்ட திட்டத்தின்படி அனுமதி தரப்படுகிறது என்றார். அகதிகள் முகாம்களிலிருந்து காணாமல் போன தமிழர்கள்  குறித்தோ, கடைசி நாட்களில் 20 ஆயிரத்திற்கும் மேற்பட்டோர் கொல்லப்பட்டது குறித்தோ பான் கி மூன் கருத்து தெரிவிக்க மறுத்து விட்டார்.

நேற்றைய கூட்டத்தோடு இனிமேல் இலங்கை  தொடர்பாக பாதுகாப்பு  கவுன்சிலில் விவாதிக்கப்படாது என தெரிவிக்கப்பட்டு விட்டது.

வெற்றிடமான 3 எம்.பி.க்களின் இடங்களுக்கு புதிய உறுப்பினர்கள் – 9ஆம் திகதி சத்தியப்பிரமாணம்

06arliament.jpgவெற்றி டமாகியுள்ள மூன்று பாராளுமன்ற உறுப்பினர்களின் இடங்களுக்கு புதிய எம்.பிக்கள் 3 பேர் நியமிக்கப்படவுள்ளதோடு எதிர்வரும் 9ஆம் திகதி பாராளுமன்றம் மீண்டும் கூடும்போது இவர்கள் மூவரும் சத்தியப்பிரமாணம் செய்வார்கள் என ஆளும் கட்சி பிரதம கொரடாவும் அமைச்சருமான தினேஷ் குணவர்தன தெரிவித்துள்ளார்.

காலஞ்சென்ற பாராளுமன்ற உறுப்பினர்களான முன்னாள் அமைச்சர் அமரசிறி தொடங்கொட,  ஐ.தே.கட்சியின் சிரேஷ்ட உறுப்பினர் அலிக் அலுவிஹார மற்றும் இலங்கை தமிழரசுக் கட்சியின் கே. பத்மநாதன் ஆகியோரின் இடங்களுக்கே இவர்கள் நியமிக்கப்படவுள்ளனர்.

முன்னாள் அமைச்சர் அமரசிறி தொடங்கொடவின் இடத்துக்கு ஐ.ம.சு.முன்னணி காலி மாவட்ட பட்டியலில் அடுத்ததாகவுள்ள சமிந்த வீரக்கொடி நியமிக்கப்படவுள்ளதோடு அலிக் அலுவிஹாரவின் இடத்துக்கு மாத்தளை மாவட்ட ஐ.தே.க. பட்டியலில் அடுத்ததாகவுள்ள நந்தமித்ர ஏக்கநாயக்க நியமிக்கப்படவுள்ளார். இதேவேளை,  இலங்கை தமிழரசுக் கட்சி எம்.பி.யான கே. பத்மநாதனின் இடத்துக்கு இதுவரை எவரும் தெரிவு செய்யப்படவில்லை என்றும் அமைச்சர் மேலும் குறிப்பிட்டார். 

பொசன் நிகழ்வுகள் இன்று ஆரம்பம்

poson_s.jpgபொசன் நிகழ்வுகள் அநுராதபுரம், மிஹிந்தலையில் இன்று ஆரம்பமாகின்றன. மூன்று தினங்களாக நடைபெறவுள்ள பொசன் நிகழ்வுகளுக்கான சகல ஏற்பாடுகளும் பூர்த்தி செய்யப்பட்டுள்ளதாக அநுராதபுர மாவட்ட செயலாளரும் பொசன் குழுவின் தலைவருமான எச்.எம்.கே. ஹேரத் தெரிவித்தார்.

பொசன் நிகழ்வுகளை முன்னிட்டு விசேட போக்குவரத்துச் சேவையை வழங்க இலங்கை போக்குவரத்துச் சபை இணக்கம் தெரிவித்துள்ளது. இதுதவிர மலசலகூட வசதிகளை வழங்க அநுராதபுரம் மாநகர சபையும் நீர் சுத்திகரிப்பு வேலைகளை மேற்கொள்ள தேசிய நீர் வழங்கல் வடிகாலமைப்புச் சபையும்  இணங்கியுள்ளன.

இதேவேளை,  பொசன் நிகழ்வுகள் நடைபெறும் மூன்று தினங்களிலும் அநுராதபுரம் மற்றும் மிஹிந்தலை நகரங்கள், பௌத்த விகாரைகள் என்பவற்றை மின் விளக்குகளால் அலங்கரிப்பதற்குரிய ஏற்பாடுகளை இலங்கை மின்சாரசபை மேற்கொண்டுள்ளது. நிகழ்வுக்கு வருகை தரும் பக்தர்களின் பாதுகாப்புக் கருதி அநுராதபுரம் பொலிஸார் விசேட பாதுகாப்பு ஏற்பாடுகளைச் செய்துள்ளனர் என்றும் அவர் மேலும் தெரிவித்தார். 

மலையகத்தில் இடி, மின்னலுடன் மழை தெலைபேசி, மின்சார உபகரணங்கள் சேதம்

rain.jpgமலை யகத்தில் கடந்த இரண்டு மூன்று வாரங்களாக இடிமின்னலுடன் கடும் மழை பெய்து வருவதோடு பலத்த காற்றும் வீசத் தொடங்கியுள்ளது. இதனால் மின்சார உபரகணங்கள், தொலைபேசி, தொலைக்காட்சி மற்றும் வானொலிப் பெட்டிகளும் சேதமடைந்துள்ளதாகத் தெரிவிக்கப்படுகின்றது. எனவே இடி, மின்னலுடன் மழை பெய்யும் போது மின்சார உபகரணங்கள் மற்றும் தொலைபேசி முதலானவற்றைப் பயன்படுத்துவதில் கவனம் எடுக்க வேண்டுமென வேண்டுகோள் விடுக்கப்பட்டுள்ளது.

மேலும் அடை மழைபெய்து வருவதால் வரட்சியின் போது வற்றியிருந்த மவுசாக்கலை, காசல் ரீ ,கெனியன், நோட்டன் பிரிட்ஜ், விமல சுரேந்திர நீர்த் தேக்கங்களின் நீர்மட்டம் விறுவிறுவென உயர்ந்து வருகின்றது. அத்தோடு புதுவெள்ளம் பாய்ந்து வருவதால் நீர்த்தேக்கங்களின் கரையோரத்தில் மீன் பிடிப்பவர்களின் தொகையும் அதிகரித்து வருகின்றது.

நீதியின் முன் அனைத்து இனமும் சமம் : ஓய்வு பெறும் பிரதம நீதியரசர்

06srilanks_chief_judge.jpgநீதியில் சிங்கள பௌத்தம் என ஒன்று இல்லை. எல்லா இனமும் சமயமும் ஒன்று தான். நான் இனவாதியாக இருக்கவில்லை.” இளைப்பாறிச் செல்லும் பிரதம நீதியரசர் சரத் என். சில்வா மேற்கண்டவாறு தெரிவித்துள்ளார்.

“தமிழ் மக்களுக்கு, உகந்த நீதி மற்றும் சமூக கட்டமைப்புகள் மூலம், சட்டத்தின் கீழ் உரிய பாதுகாப்பு அளிக்காவிட்டால் தமிழ் மக்களிடையே ஆயுத மோதலுக்குப் பதிலாக மற்றொரு கிளர்ச்சி வெடிக்கும் சாத்தியம் உள்ளது.

சரியான முறையில் தமிழர் உரிமைகள் வழங்கப்படாத பட்சத்தில் மீண்டுமொரு ஆயுத போராட்டத்தை சந்திக்க நேரிடலாம்” எனவும் அவர் சுட்டிக்காட்டியுள்ளார்.

பிரதம நீதியரசர் பதவியில் இருந்து நேற்றுடன் விடைபெறுவதை ஒட்டி அவர் நடத்திய செய்தியாளர் மாநாட்டில் அவர் இதனைக் கூறினார்.

அவர் மேலும் தெரிவிக்கையில்,

“அரசமைப்பின் 13 ஆவது திருத்தம் போதிய ஆய்வோ, யோசனை செய்தோ இயற்றப்படவில்லை. இந்திய அரசமைப்பைப் பார்த்து அந்தத் திருத்தம் கொண்டுவரப்பட்டது. இந்தியாவுக்கு இது சரியாக இருக்கலாம். இலங்கைக்கு அது ஏற்புடையதல்ல.

பொலிஸ் அதிகாரத்தை பரவலாக்கினால் பொலிஸ் மா அதிபர் அதிகாரம் அற்றவராகவே இருப்பார். மாகாணங்களுக்கு அதிகாரங்களைக் கொடுத்துவிட்டு அவர் சும்மா இருக்க வேண்டும்.

இதேபோல் காணி விவகாரமும் உயர்வானது. மொத்தத்தில் 13 ஆவது திருத்தம் பல ஓட்டைகளைக் கொண்டது. இலங்கையில் மாகாணங்களுக்கு சரியான எல்லைகள் வரையறுக்கப்படவில்லை. எல்லைகள் வரையறுக்காமல் எதனையும் செய்யமுடியாது.

சரியான முறையில் எல்லைகள் வகுக்க முறையேதும் இல்லை.

நீதியில் சிங்கள பௌத்தம் என ஒன்று இல்லை. எல்லா இனமும் சமயமும் ஒன்று தான். நான் இனவாதியாக இருக்கவில்லை. இலங்கையன் என்றே செயற்பட்டேன். சகல மக்களின் உரிமைகளும் பாதுகாக்கப்பட வேண்டும். அப்படி பாதுகாக்கப்படாவிட்டால் மோதல்கள் எதிர்காலத்தில் ஏற்படலாம். நலன்புரி நிலையங்களில் உள்ளவர்களை நடமாட அனுமதிக்க வேண்டும். இல்லையேல் சர்வதேசத்தின் கெட்ட பெயரை சம்பாதிக்க வேண்டி வரும்” என்றார்.

யாழ்ப்பாணத்தில் ஆயுத கிடங்கு தீப்பற்றியுள்ளது

யாழ்ப் பாணம் மயிலிட்டி பகுதியில் படையினரின் ஆயுதக் கிடங்கு தீப்பற்றியுள்ளதாக இராணுவ பேச்சாளர் உதய நாணயக்கார தெரிவித்துள்ளார். தற்பொழுது இந்த தீ கட்டுப்பாட்டிற்குள் கொண்டுவரப்பட்டுள்தாகவும் அவர் மேலும் கூறினார்.

ஜனநாயக அரசியலில் ஈடுபடுவோருக்குப் பாதுகாப்பு தேவை : த.ம.வி.பு. பொதுச் செயலாளர்

“ஆயுதங்களைக் களைந்து விட்டு முழுமையான ஜனநாயக அரசியலில் ஈடுபட்டுள்ள தமது கட்சி உறுப்பினர்களின் பாதுகாப்பை உறுதிப்படுத்த காவல்துறை நடவடிக்கை எடுக்க வேண்டும்” என தமிழ் மக்கள் விடுதலைப் புலிகளின் பொதுச் செயலாளர் எட்வின் சில்வா கைலேஸ்வரராஜா வலியுறுத்தியுள்ளார்.

தமிழ் மக்கள் விடுதலைப் புலிகளின் உறுப்பினரான அறவன் என அழைக்கப்படும் இராமலிங்கம் ஜெயக்குமார் மட்டக்களப்பு புதுநகரில் நேற்று முன் தினமிரவு இனந்தெரியாத ஆயுததாரிகளினால் சுட்டுக் கொல்லப்பட்ட சம்பவம் தொடர்பாக விடுத்துள்ள அறிக்கையிலேயே அவர் தமது கட்சி உறுப்பினர்களின் பாதுகாப்பு தொடர்பாக இவ்வாறு குறிப்பிட்டுள்ளார்.

அவர் தொடர்ந்தும் தெரிவிக்கையில்,

“வன்முறைக் கலாசாரத்தை கைவிட்டு ஜனநாயக அரசியல் செயற்பாடுகளில் முழுநம்பிக்கை கொண்டு மக்களுக்கு சேவையாற்ற வந்த தமிழ் மக்கள் விடுதலைப் புலிகள் அரசியல் கட்சி உறுப்பினர்களின் பாதுகாப்பு உறுதிப்படுத்தப்பட வேண்டும்.

எதிர்காலத்தில் இவ்வாறான படுகொலைச் சம்பவங்கள் நாட்டின் எப்பாகத்திலும் இடம் பெறக்கூடாது என்பதே சகல மக்களினதும் எதிர்பார்ப்பாகும்.

கட்சியின் உறுப்பினர்கள் மக்களுக்கு அர்ப்பணிப்புடன் சேவையாற்ற இருக்கும் நிலையில், அவர்கள் மிகவும் ஈனத்தனமாக படுகொலை செய்யப்படுவதால் எதிர்காலத்தில் மக்களுக்கான அரசியல் சார்ந்த சேவைகளை ஆற்றுவதற்கான சந்தர்ப்பங்கள் சீர்குலைந்து போகும் அபாயம் தோன்றியுள்ளது. அதுமட்டுமல்ல, பொது மக்கள் மத்தியிலும் ஒருவகை அச்சமும் ஏற்பட்டுள்ளதை அறிய முடிகிறது.

கட்சியின் சிரேஷ்ட உறுப்பினரான அறவான் படுகொலையானது மிகவும் கண்டிக்கப்பட வேண்டியது. இவ்வாறான படுகொலைகளை, கட்சி பேதங்களை மறந்து உண்மையான ஜனநாயகத்தை விரும்பும் அனைத்து அரசியல் கட்சிகளும் கண்டிக்க வேண்டும்.

பயங்கரவாதம் இலங்கையின் ஜனாதிபதியால் அடியோடு வேரறுக்கப்பட்டு நாட்டில் சமாதானமும் அபிவிருத்திக்கான வாய்ப்புகளும் நாட்டு மக்களுக்கு ஏற்படுத்திக் கொடுக்கப்பட்டிருக்கும் இச்சந்தர்ப்பத்தில் மீண்டும் ஆயுதக் கலாசாரத்தை ஊக்குவிக்கும் தீயசக்திகளின் பின்புலத்தைக் கண்டுபிடிக்க, ஜனநாயகத்தை நாட்டில் ஸ்தாபிக்க விரும்பும் அனைத்து அரசியல் கட்சிகளும் தமது ஒத்துழைப்பினை காவல்துறையினருக்கு வழங்க வேண்டும்.

கட்சி உறுப்பினர்கள் சுதந்திரமாக தமது பணியை எதிர்காலத்தில் மேற்கொள்வதற்குக் காவல் துறையினர் பாதுகாப்பளிக்க வேண்டும். நாம் எப்போதும் காவல் துறையினரின் பாதுகாப்பையே முழுமையாக நம்புகின்றோம்” என்றார். 

பிரதம நீதியரசர் பங்குகொள்ளும் உத்தியோகபூர்வ இறுதி நிகழ்வு

06srilanks_chief_judge.jpgநீதி, சட்ட மறுசீரமைப்பு பதில் அமைச்சர் வீ. புத் திரசிகாமணியின், அழைப்பின் பேரில் இன்று தம்புள்ள நீதவான் நீதிமன்றம் காலை 9.30 மணிக்கு பிரதம நீதியரசர் சரத் என். சில்வாவினால் திறந்து வைக்கப்படவிருக்கி ன்றது.

பிரதம நீதியரசர் சரத் என் சில்வா பங்கு கொள்ளும் உத்தியோகபூர்வ இறுதி நிகழ்வு இது என்பது குறிப்பிடத்தக்கது.

நீண்டநாள் யுத்த வெற்றிக் கொண்டாட்டங்கள் பாதகமான விளைவுகளை ஏற்படுத்தும் : பான் கீ மூன் எச்சரிக்கை

06bankimoon.jpgதமிழீழ விடுதலைப் புலிகளுக்கு எதிராக இடம்பெற்ற யுத்தத்தில் பெற்ற வெற்றியை கொண்டாடும் நீண்ட நாள் நிகழ்வுகள் பாதகமான விளைவுகளை ஏற்படுத்தக் கூடும் என ஐக்கிய நாடுகளின் பொதுச் செயலாளர் பான் கீ மூன் எச்சரிக்கை விடுத்துள்ளார்.

ஐக்கிய நாடுகளின் பாதுகாப்புப் பேரவையின் 15 உறுப்பு நாடுகளுடனான சந்திப்பின் பின்னர் நடைபெற்ற ஊடகவியலாளர் மாநாட்டின் போது அவர் இதனைக் குறிப்பிட்டுள்ளார்.வெற்றிக் களிப்பில் ஈடுபடுவதைவிட நாட்டில் பாதிக்கப்பட்ட மக்கள் அனைவரினதும் வேதனைகளைப் பகிர்ந்து கொள்வதே காலத்தின் தேவையாக உள்ளதென அவர் தெரிவித்துள்ளார்.