13

13

உறுதிமொழிகளை நிறைவேற்ற ராஜபக்ஸவை வலியுறுத்துவோம்: ப.சிதம்பரம்

08chidambaram.jpgஇலங் கைத் தமிழர்களை மீண்டும் அவர்களது இருப்பிடங்களில் மீண்டும் குடியமர்த்துவது, சமவுரிமை அளிப்பது உள்ளிட்ட உறுதிமொழிகளை ராஜபக்ஸ நிறைவேற்ற தொடர்ந்து இந்தியா வலியுறுத்தும் என்று உள்துறை அமைச்சர் ப.சிதம்பரம் கூறியுள்ளார்.

சென்னையில் தமிழக காங்கிரஸ் கட்சி அலுவலகத்தில் செய்தியாளர்களுக்கு அளித்த பேட்டியின்போது அவர் இதைத் தெரிவித்தார். ”ராஜபக்ஸ தனது உறுதிமொழிகளை நிறைவேற்றுவார் என்று இப்போது வரை நம்புகிறோம். பொறுத்திருந்து பார்ப்போம். இலங்கையில் தமிழர்கள் சமவுரிமை பெறுவது தான் எங்களது நோக்கம்” என்றும் ப.சிதம்பரம் கூறினார்.

அகதிகளை முகாம்களில் தடுத்து வைத்திருப்பதை ஆட்சேபித்து அடிப்படை உரிமை மீறல் மனுக்கள்

02supreme.jpgவன்னி யிலிருந்து இடம்பெயர்ந்து வந்துள்ள மக்களை,  முகாம்களில் தடுத்து வைத் திருப்பது அடிப்படை உரிமை மீறல் எனத் தெரிவித்து, அதற்கு எதிராக உயர்நீதி மன்றத்தில் இரண்டு மனுக்கள் தாக்கல் செய்யப்பட்டுள்ளன. அவற்றில் ஒரு மனுவை, மாற்றுக் கொள்கைகளுக்கான நிலையத்தின் பணிப்பாளர் பாக்கியசோதி சரவணமுத்து சார்பில் சட்டத்தரணி நிலாந்தி டி.சில்வா நேற்று உயர்நீதி மன்றத்தில் தாக்கல் செய்துள்ளார்.

இதேவேளை இடம்பெயர்ந்து கொடிகாமம் மற்றும் வவுனியா முகாம்களில் தங்கியுள்ள ஐவர் சார்பில், சட்டத்தரணி கௌரிசங்கரி தவராஜா, அடிப்படை உரிமை மீறல் மனுவை நேற்றுமுன்தினம் உயர்நீதிமன்றத்தில் தாக்கல் செய்தார். அந்த மனு விசாரணைக்கு ஏற்றுக்கொள்ளப்பட்டுள்ளது.

மனுவை ஏற்றுக்கொண்ட உயர்நீதிமன்ற நீதியரசர்கள் ஜெகத் பாலபட்டபென்டி, சந்திரா  ஏக்கநாயக்கா ஆகியோரைக்கொண்ட ஆயம், ஆட்சேபனைகளை எதிர்வரும்  பதினேழாம் (17) திகதி சமர்ப்பிக்குமாறு உத்தரவிடப்பட்டுள்ளது.                                                             

மாற்றுக்கொள்கை நிலையத்தின் மனு வன்னியிலிருந்து இடம்பெயர்ந்து வந்துள்ள பல்லாயிரக் கணக்கான  பொதுமக்கள் நலன்புரி நிலையங்களில் அவசரகாலச் சட்டத்தின் கீழ் தடுத்து வைக்கப்பட்டுள்ளனர். அவர்களின் அடிப்படை உரிமைகள் மீறப்படுகின்றன என மாற்றுக் கொள்கைகளுக்கான நிலையம் மனுத்தாக்கல் செய்துள்ளது. யுத்தத்தினால் இடம்பெயர்ந்து நலன்புரி நிலையங்களில் உள்ளவர்கள் தடுத்து வைக்கப்பட்டுள்ளார்கள். அவர்கள் அவசரகாலச்சட்டத்தின் 19(1) என்ற விதியின் கீழ் தடுத்து வைக்கப்பட்டிருக்கின்றனர். இது சட்ட விரோதமான செயற்பாடு. இதனால் அந்த மக்களின் அடிப்படை உரிமைகள் மீறப்படுகின்றன.

அரசமைப்பில் உறுதிப்படுத்தப்பட்டுள்ள நடமாடும் சுதந்திரம், சம அந்தஸ்து, பொதுச் சுதந்திரம் என்பன இவ்வாறான தடுத்துவைத்தல் மூலம் மீறப்பட்டுள்ளன.
இவர்கள்  சுதந்திரமான முறையில் வெளியில் நடமாட தடைவிதித்திருக்கும் நடைமுறைக்கு எதிராக ஒரு இடைக்கால உத்தரவை நீதிமன்றம் விடுக்கவேண்டும்  என அந்த மனுவில் கோரப்பட்டுள்ளது.ஜனாதிபதி, பாதுகாப்பு அமைச்சின் செயலாளர் கோட்டாபய ராஜபக்ஷ, இடர் முகாமைத்துவ மற்றும் மனித உரிமைகள் அமைச்சின் செயலாளர் பேராசிரியர் ரஜீவ விஜயசிங்க மற்றும் மீள்குடியேற்ற அமைச்சின் செயலாளர் ஆகியோர் பிரதிவாதிகளாக மனுவில் குறிப்பிடப்பட்டுள்ளனர். 

கொடிகாமம், வவுனியா ஆகிய இடங்களில் உள்ள நலன்புரி நிலையங்களில் தங்கியுள்ள இடம்பெயர்ந்தவர்களில் ஐவர் சார்பாக சட்டத்தரணி கௌரிசங்கரி தவராஜா தாக்கல் செய்த அடிப்படை உரிமை மீறல் மனு விசாரணைக்கு ஏற்கப்பட்டுள்ளது. பிரஸ்தாப மனுவில் குறிப்பிடப்பட்டுள்ள பிரதிவாதிகள் தமது ஆட்சேபங்களை எதிர்வரும் 17 ஆம் திகதி சமர்ப்பிக்க வேண்டும் என்று உத்தரவிடப்பட்டுள்ளது.

கொடிகாமம் நலன்புரிநிலையத்தில் தங்கவைக்கப்பட்டுள்ள மாணிக்கராஜா சிவபாக்கியம், சோபிகா சுரேந்திரநாதன், வவுனியா நலன்புரி நிலையத்தில் தங்கவைக்கப்பட்டுள்ள ஜெயராணி சுரேந்திரநாதன், பொன்னுச்சாமி சுரேந்திரநாதன், நேசனா சுரேந்திரநாதன் ஆகியோர் சார்பில் இந்த மனுத் தாக்கல் செய்யப்பட்டுள்ளது.
மனுதாரர்களின் உறவினரான சட்டத்தரணி அன்னபாக்கியம் சிதம்பரப்பிள்ளையின் அறிவுறுத்தலுக்கு அமைய இந்த மனுத் தாக்கல் செய்யப்பட்டுள்ளது.

இந்த மனுவில் பிரதிவாதிகளாக யாழ்.அரச அதிபர், தென்மராட்சி பிரதேச செயலர், யாழ்.படைகளின் தளபதி, பொலிஸ்மா அதிபர், சட்டமா அதிபர், பட்டாணிச்சிப்புளியங்குளம் கிராம சேவையாளர், வவுனியா பிரதேச செயலர், வவுனியா அரச அதிபர், வவுனியா சைவப்பிரகாச நலன்புரி நிலைய கிராம சேவையாளர், வன்னி படைகளின் தளபதி, நலன்புரிநிலைய இணைப்பதிகாரி ஆகியோர் மனுவில் குறிப்பிடப்பட்டுள்ளனர்.

சேது சமுத்திர திட்டத்தை எதிர்ப்பது ஏன்? ஜெயல‌‌லிதா ‌விள‌க்க‌ம்

jayalaitha.jpgசேது சமுத்திர திட்டத்தில் சுற்றுச்சூழல் தாக்க மதிப்பீடு குறித்த அறிக்கையில் முரண்பாடுகள் இருப்பதாக தெரிவித்ததன் அடிப்படையிலும், இத்திட்டத்தால் தங்களது வாழ்வாதாரம் பாதிக்கப்படும் என்று பல லட்சக்கணக்கான மீனவர்கள் கருத்து தெரிவித்ததன் அடிப்படையிலும்தான் அ.இ.அ.தி.மு.க. இ‌ந்த ‌தி‌ட்ட‌த்தை எதிர்‌க்‌கிறது எ‌ன்று அ‌க்க‌ட்‌சி‌யி‌ன் பொதுச் செயலர் ஜெயலலிதா விளக்கம் அளித்துள்ளார்.

இது தொட‌ர்பாக அவ‌ர் இ‌ன்று வெ‌ளி‌யி‌ட்டு‌ள்ள அ‌றி‌க்கை‌யி‌ல், ”2006ஆம் ஆண்டு அ.இ.அ.தி.மு.க வெளியிட்ட தேர்தல் அறிக்கையில் சேது சமுத்திர திட்டம் நிறைவேற்றப்படும் என்று கூறியிருப்பதாக முதலமை‌ச்ச‌ர் கருணாநிதி தனது அறிக்கையில் தெரிவித்திருக்கிறார். சொல்லாத ஒன்றை அவர் கூறியிருக்கிறார்.

சேது கால்வாய் திட்டம் எம்.ஜி.ஆராலும், என்னாலும் தொடர்ந்து மேற்கொள்ளப்பட வேண்டும் என்று வற்புறுத்தப்பட்ட திட்டம் என்பதை நான் மறுக்கவில்லை. ஆனால் இந்த திட்டம் செயல்படுத்தப்பட்டால், 3600க்கும் மேற்பட்ட கடல் உயிரினங்கள் மற்றும் கடல் தாவரங்கள் அழிந்துவிடும் என்று சுற்றுச்சூழல் விஞ்ஞானிகள் தெரிவித்ததன் அடிப்படையிலும், மும்பை இயற்கை வரலாறு குழுமம் சேது சமுத்திர திட்டத்தில் சுற்றுச்சூழல் தாக்க மதிப்பீடு குறித்த அறிக்கையில் முரண்பாடுகள் இருப்பதாக தெரிவித்ததன் அடிப்படையிலும், இத்திட்டத்தால் தங்களது வாழ்வாதாரம் பாதிக்கப்படும் என்று பல லட்சக்கணக்கான மீனவர்கள் கருத்து தெரிவித்ததன் அடிப்படையிலும்தான் பொதுமக்களின் கருத்துக்களுக்கு மதிப்பளிக்கும் வகையில் அ.இ.அ.தி.மு.க இத்திட்டத்தை எதிர்க்க ஆரம்பித்தது.

மக்களுக்காகவே திட்டம் என்பதில் அ.இ.அ.தி.மு.க உறுதியாக உள்ளது. சராசரி மக்களின் வாழ்வாதாரங்களை கொள்ளையடித்து சுற்றுச்சூழலுக்கு ஆபத்தை ஏற்படுத்தும் கருணாநிதியின் தன்னல திட்டத்தை எப்படி ஏற்றுக்கொள்ள முடியும்.

சேது சமுத்திர திட்டம் குறித்த பொதுமக்கள் கேட்புரை கூட்டங்களின் அறிக்கையை 7 நாட்களுக்குள் அனுப்பி வைக்கும்படி தமிழ்நாடு மாசுகட்டுப்பாட்டு வாரியத்துக்கு உத்தரவிட்டதோடு மட்டுமல்லாமல், தவறினால் சுற்றுச்சூழல் பாதுகாப்பு சட்டம் 1986 பிரிவு 15ன் கீழ் தண்டனைக்குரிய பிரிவுகள் செயல்படுத்தப்படும் என மிரட்டிய கருணாநிதி முழுவதுமாக மாநில அரசை புறக்கணித்து சுனாமியால் பாதிக்கப்பட்ட பகுதிகளுக்கான ராஜீவ்காந்தி மறுவாழ்வு திட்டம் பொதுத்துறை வங்கிகள் மூலம் செயல்படுத்தப்படும் என்று அப்போதைய மத்திய நிதியமைச்சர் சிதம்பரம் மூலம் அறிவிக்க செய்த கருணாநிதி, கடலோர பகுதிகளை மேம்படுத்தும் மாநில அரசுகளின் அதிகாரங்களை நியாயமற்ற முறையில் அபகரிக்க காரணமாக இருந்த கருணாநிதி சமீபத்தில் மாநில சுயாட்சி குறித்துஅறிக்கை விட்டதுதான் உலகமகா அதிசயமாகும்” எ‌ன்று ஜெயல‌லிதா கூறியுள்ளார்.

இலங்கையின் இறைமை பாதுகாக்கப்பட வேண்டும்.

 asoka-de-silva.jpgபுதிதாக பிரதம நீதியரசராக பதவியேற்ற திரு. ஆசோக டீ சில்வா அவர்ளை வரவேற்கும் சம்பவம் ஒன்றில் பேசிய அவர், இலங்கை ஏனைய தேசங்களோடு சேர்ந்தும் இசைந்தும் சகிப்புத்தன்மையோடும் வாழும் அதே நேரத்தில், தனது இறைமையையும் தனித்துவத்தையும் இறுக்கமாகப் பாதுகாக்க வேண்டும் என தெரிவித்தார்.

ஜனாதிபதி மியன்மாருக்கு விஜயம்

he_speech_ranaviru_.jpgஜனாதிபதி மகிந்த ராஜபக்ஷ இன்று (13.06.2009) மியன்மாருக்கு செல்கின்றார். அங்கு இரண்டு நாட்கள் தங்கியிருப்பார் என தெரிவிக்கப்பட்டுள்ளது. இரு நாடுகளுக்கும் இடையில் இராஜதந்திர உறவுகள் ஏற்பட்டு 60 ஆண்டுகள் பூர்தியடைவதை முன்னிட்டு இந்த விஜயம் ஒழுங்கு செய்யப்பட்டுள்ளது. மியன்மாரில் 2008ம் ஆண்டு ஏற்பட்ட நர்க்கிஸ் புயலில் பாதிக்கப்பட்டு மீள புனரமைக்கப்பட்ட கிராமம் ஒன்றை ஜனாதிபதி இந்த விஜயத்தின் போது அங்குரார்ப்பணம் செய்யவுள்ளதாக தெரிவிக்கப்படுகிறது. இந்த கிராமத்தின் நிர்மாணப்பணிகளுக்கென இலங்கை பிக்குமார் நிதியுதவி வழங்கியுள்ளதாக தெரிவிக்கப்படுகிறது.

நிதி உதவி கேட்டு நாம் யாரையும் கெஞ்சமாட்டோம் பிச்சைப் பாத்திரம் ஏந்தத்தயார் இல்லை- மத்திய வங்கி கப்ரால்

_niward.jpgசர்வதேச நாணய நிதியத்தின் நிதியுதவி எமக்கு கிடைக்கும் என்ற நம்பிக்கையுண்டு. ஆனாலும் நாம் யாரிடமும் நிதி கேட்டு பிச்சையெடுக்கவோ கெஞ்சவோ மாட்டோம் என்று மத்திய வங்கியின் ஆளுநர் அஜித் கப்ரால் தெரிவித்துள்ளார்.

பிச்சைப் பாத்திரத்தை கையில் எடுத்துக் கொண்டு எந்த நாட்டிடமும், எந்த நிதியத்திடமும் போய் பணம் கொடுங்கள் என நாங்கள் கெஞ்ச மாட்டோம். சொந்தக் காலில் நிற்கும் தகுதி எங்களுக்கு உண்டு. பங்குச் சந்தைகள் மூலம் பணம் திரட்டிக் கொள்ளும் வாய்ப்புகளும் எங்களிடம் அதிகமாகவே உள்ளன என்றும் அவர் கூறியுள்ளார்.

இது குறித்து ஏ.எப்.பி. செய்திச் சேவைக்கு அவர் மேலும் கருத்து தெரிவிக்கையில், சர்வதேச நிதியத்தின் நிதியுதவி எங்களுக்கு கிடைக்கும் என்ற நம்பிக்கை உள்ளது. இலங்கையின் வடக்கில் இடம்பெயர்ந்து வந்துள்ள 3 இலட்சத்திற்கும் மேற்பட்ட மக்களுக்குத் தேவையானதை செய்ய எங்களிடம் போதுமான நிதி உள்ளது. மேலும் பல தரப்பிடமிருந்து நிதி வந்து கொண்டுள்ளது. எனவே, பிரச்சினை இல்லை. உண்மையைச் சொல்வதாக இருந்தால் சர்வதேச நிதியத்தின் நிதியுதவி கண்டிப்பாக தேவை என்ற கட்டாயம் படிப்படியாக குறைந்து வருகிறது. எங்களுக்கு அந்த நிதியுதவி தேவையில்லை என்று நான் கூற மாட்டேன். அதே சமயம், யாரிடமும் போய் நாங்கள் பிச்சை கேட்க வேண்டிய அவசியம் இல்லை என்பதையும் சொல்லிக் கொள்கிறேன்.

சுற்றுலா அபிவிருத்திக்கு இலங்கை இந்தியா கூட்டுத் திட்டம்

milindamoragoda1.jpgசுற்றுலாத் துறையின் மேம்பாட்டுக்காக இலங்கையும் இந்தியாவும் இணைந்து விசேட திட்டம் ஒன்றை முதற்தடவையாக ஆரம்பித்துள்ளன. சீன சுற்றுலாப் பயணிகளை இலக்கு வைத்தே இந்தத்திட்டம்  ஆரம்பிக்கப்பட்டுள்ளது.

இலங்கைக்கான சீன சுற்றுலாப் பயணிகளின் வருகையை அதிகரிக்கச் செய்யவும இந்திய உப கண்டத்தில் காணப்படும் கவர்ச்சிகரமான சுழலை மற்றும் சரித்திர முக்கியத்துவம் வாய்ந்ததும் கலாசார முக்கியத்துவம் வாய்ந்ததுமான இடங்களை சீன சுற்றுலாப் பயணிகள் பார்வையிடுவதற்கான வாய்ப்பை ஏற்படுத்துவதற்கும்  இதன் மூலம் எதிர்பார்க்கப்படுகிறது.

இலங்கைக்கு வருடத்துக்கு ஆயிரக் கணக்கான சீன சுற்றுப் பயணிகள் வருகை தருகின்றனர். அவர்களை இந்தியாவுக்கும் அழைத்துச் செல்ல இத்திட்டத்தின் மூலம் உத்தேசிக்கப்பட்டுள்ளது. அத்துடன் இலங்கைக்கு வருகின்ற சீன சுற்றுலாப் பயணிகளின் எண்ணிக்கைகை அதிகரிக்கவும் திட்டமிடப் பட்டுள்ளது.

சீனாவுக்கு விஜயம் செய்த சுற்றுலாத்துறை அமைச்சர் மிலிந்த மொரகொட அங்குள்ள இந்தியத்தூதுவர் நிருபமா ரவோவுடன் நடத்திய பேச்சுவார்தைக்கு ஏற்ப இத்திட்டம் மேற்கொள்ளப்படுகிறது. சீனாவுக்கான இலங்கைத் தூதுவர் கருணாதிலக்க அமுனுகம இத்திட்டத்தை மேற்கொண்டு வருகின்றார். 

ஈரான் ஜனாதிபதி தேர்தலில் அகமதிநிஜாத் பெரும் வெற்றி!!

president-ahamadinejad.jpgஈரான் ஜனாதிபதி தேர்தலில் அதிபர் மஹமூத் அகமதிநிஜாத் பெரும் வெற்றி பெற்றுள்ளார். ஆனால் “இந்தத் தேர்தல் மோசடியாக நடந்துள்ளது. நானே வெற்றி பெற்றுள்ளேன். ஆனால் அதைத் திரித்து அகமதிநிஜாத் வெற்றி பெற்றதாக கூறியுள்ளனர்” என்று அவரை எதிர்த்துப் போட்டியிட்ட முன்னாள் பிரதமர் மீர் உசேன் மெளசவி.கூறியுள்ளார்

ஈரான் ஜனாதிபதி தேர்தல் விதிப்படி மொத்தம் பதிவான வாக்குகளில் 50 சதவீதத்தைப் பெறுபவர்தான் ஜனாதிபதிக முடியும். இல்லாவிட்டால் மறுபடியும் தேர்தல் நடத்தப்படும். ஆனால் அகமதி நிஜாத் 60 சதவீதத்திற்கும் மேலான வாக்குகளைப் பெற்றுள்ளாக தகவல்கள் கூறுகின்றன. இதையடுத்து அவரது ஆதரவாளர்கள் நாடு முழுவதும் பெரும் கொண்டாட்டங்களில் ஈடுபட்டுள்ளனர். ஈரான் ஜனாதிபதி தேர்தல் முடிவை உலக நாடுகள் ஆவலுடன் எதிர்பார்த்து வந்தன. மெளசவி வெற்றி பெறக் கூடும் என சில செய்திகள் கூறி வந்தன. ஆனால் அகமதிநிஜாத் அபார வெற்றி பெற்றுள்ளார்.

பத்திரிகை சம்மேளனத் தலைவர் நேற்று கடமைகளைப் பொறுப்பேற்பு

somarathna_balasuriya_prof.jpgஇலங்கை பத்திரிகை சம்மேளனத்தின் தலைவராக நியமிக்கப்பட்ட பேராசிரியர் சோமரத்ன பாலசூரிய நேற்று தமது கடமைகளைப் பொறுப்பேற்றார்.

கொழும்பிலுள்ள சம்மேளத்தின் அலுவலகத்தில் நடைபெற்ற இந்த நிகழ்வில் தகவல், ஊடகத்துறை அமைச்சின் செயலாளர் ஏ. திசாநாயக்க, திருமதி நிரோஷனி டி சில்வா மற்றும் ஏ.எஸ். ஜகத்சிறி ஆகியோரும் கலந்துகொண்டதாக அறிவிக்கப்பட்டுள்ளது.

இலங்கைக்கு தொடர்ந்தும் அழுத்தம் கொடுக்க முடியாது என சர்வதேச சமூகம் உணர்ந்துள்ளது

keheliyas.jpgஇலங்கை மீது தொடர்ந்தும் அழுத்தங்களைப் பிரயோகிக்க முடியாது என்பதை சர்வதேச சமூகம் உணர்ந்து கொண்டுள்ளது என பாதுகாப்புத்துறை பேச்சாளரும் வெளிநாட்டு வேலைவாய்ப்பு ஊக்குவிப்பு மற்றும் நலனோம்புகை அமைச்சருமான கெஹலிய ரம்புக்வெல தெரிவித்தார். தேசிய வானொலிச் சேவைக்கு நேற்று  தொலைபேசி மூலம் கருத்துத் தெரிவிக்கும்போதே அவர் இவ்வாறு கூறினார்.

பயங்கரவாதத்தை ஒழித்துக்கட்டும் நடவடிக்கைகளின்போது இலங்கை மீது உலகின் பல நாடுகள் பெருமளவு வற்புறுத்தல்களை மேற்கொண்டிருந்தன. எனினும் எத்தகைய வற்புறுத்தல்களையும் சவால்களையும் இலங்கைக்கு எதிர்கொள்ள முடியும் என்பதை ஜனாதிபதி மஹிந்த ராஜபக்ஷ நிரூபித்துக் காட்டியுள்ளார். இதற்காக நாம் ஜனாதிபதிக்கு நன்றி தெரிவிக்க வேண்டும் என்றும் அமைச்சர் மேலும் குறிப்பிட்டார்.