23

23

“சட்ட மூலங்களுக்கு ஐ.தே.க. ஆதரவளிக்கும்’

joshepmichel.jpgபாராளு மன்றத்தில் இவ்வாரம் சமர்ப்பிக்கப்படவுள்ள சிலசட்ட மூலங்களுக்கு தாம் எதிர்ப்புக் தெரிவிக்கப் போவதில்லையென எதிர்க்கட்சியின் பிரதான அமைப்பாளர் ஜோசப் மைக்கல் பெரேரா தெரிவித்தார். பாராளுமன்ற கட்சிகளின் குழுக் கூட்டம் நேற்று திங்கட்கிழமை நடைபெற்ற போதே இதனை அவர் தெரிவித்துள்ளார். இதேவேளை, இன்று செவ்வாய்க்கிழமை நடைபெறவுள்ள பாராளுமன்ற அமர்வின் போது பொது விமான சேவைகள் தொடர்பான சட்ட மூலம் சமர்ப்பிக்கப்படவுள்ளது. அதேபோல் எதிர்வரும் வியாழக்கிழமை கூட்டுப்படைகளின் கட்டளைத் தளபதிக்கு அதிக அதிகாரங்களுடன் ஒருவரை நியமிப்பது தொடர்பான சட்ட மூலம் சமர்ப்பிக்கப்படவுள்ளது.

அத்துடன், வியாழக்கிழமை மாலை நடைபெறும் அமர்வில் டெங்கு தொற்று தொடர்பான சட்ட மூலத்தை பிற்போடுவது தொடர்பான விவாதம் இவ்வார அமர்வில் இடம்பெறவுள்ளது.

பர்தாவை கண்டித்துப் பேசிய சர்கோசி

பிரான்ஸ் நாட்டின் அதிபர் நிகோலஸ் சர்கோசி அவர்கள் பிரான்ஸ் நாட்டில் முஸ்லிம் பெண்கள் பர்தாவை அணிவதை கடுமையாக கண்டித்து பேசியிருக்கிறார். நாட்டின் நாடாளுமன்றத்தின் இரு அவைகளிலும், தமது கொள்கை தொடர்பாக அவர் ஆற்றிய உரையிலேயே இதனை தெரிவித்திருந்தார்.

பெண்களின் தலையிலிருந்து கால் வரை மூடும் இந்த பர்தாவை அணிவது என்பது பெண்களை அடிமைப்படுத்துவதாகவும், அவர்களின் கண்ணியத்தை குறைப்பதாகவும், அதனால் பர்தா உடை பிரான்சில் வரவேற்கப்படாது என்றும் அவர் கூறினார். இத்தகைய பர்தாவை பொது இடங்களில் அணிவதற்கு தடை விதிக்கலாமா என்பதை ஆராய்வதற்காக நாடாளுமன்ற நிலைக்குழுவை அமைப்பதற்கு சர்கோசி தமது ஆதரவை அளித்தார்.

பிரான்ஸ் நாடாளுமன்றத்தில் நாட்டின் அதிபர் ஒருவர் உரை நிகழ்த்தியிருப்பது நூறு ஆண்டுகளுக்குப் பிறகு இதுவே முதல் முறை. இதற்கு எதிரான சட்ட ரீதியிலான தடையானது குறுகிய பெரும்பான்மையுடன் கடந்த ஆண்டு நீக்கப்பட்டது.

வெற்றிலைச் சின்னத்தில் ஈ.பி.டி.பி. போட்டி

21deva.jpgயாழ் மாநகரசபை மற்றும் வவுனியா நகரசபைத் தேர்தல்களில் ஈழ மக்கள் ஜனநாயகக் கட்சி (ஈ.பி.டி.பி) ஆளும் ஐக்கிய மக்கள் சுதந்திரக் கூட்டமைப்பின் வெற்றிலைச் சின்னத்தின் கீழ் போட்டியிடத் தீர்மானித்துள்ளது. யாழ்ப்பாணத்தில் இன்று செவ்வாய்க்கிழமை நடைபெற்ற கூட்டத்திலேயே இது குறித்துத் தீர்மானம் எடுக்கப்பட்டதாக ஈழமக்கள் ஜனநாயக் கட்சியின் செயலாளரும்,  சமூகசேவைகள் மற்றும் சமூக நலன்புரித்துறை அமைச்சருமான டக்ளஸ் தேவானந்தா தெரிவித்தார்.

அத்துடன்,  வெற்றிலைச் சின்னத்தின் கீழ் ரெலோ (சிறி அணி) மற்றும் ஈரோஸ் ஆகியனவும் போட்டியிடவுள்ளன. யாழ் மாநகரசபை மற்றும் வவுனியா நகரசபைத் தேர்தல்களுக்கான வேட்புமனுக்களை ஐக்கிய,  யாழ் மாநகரசபை மற்றும் வவுனியா நகரசபைத் தேர்தல்களுக்கான வேட்புமனுக்களை தாக்கல் செய்வதற்கான வேலைகளில் ஈடுபட்டிருக்கும் தமிழ்த் தேசியக் கூட்டமைப்பு,  வவுனியா நகரசபைத் தேர்தலுக்கான வேட்புமனுவை நாளை புதன்கிழமை தாக்கல் செய்யவிருப்பதாகவும் தெரிவிக்கப்படுகிறது.

இது தவிர,  ஜனநாயகத் தமிழ்த் தேசியக் கூட்டமைப்பு யாழ் மாநகரசபைத் தேர்தலில் உதயசூரியன் சின்னத்திலும்,  வவுனியா நகரசபைத் தேர்தலில் நங்கூரம் சின்னத்திலும் போட்டியிடவுள்ளது. இக்கட்சி தனது வேட்புமனுக்களை இறுதிநாளான நாளை புதன்கிழமை தாக்கல் செய்யவுள்ளது. 

அதேநேரம் பிரதான எதிர்க்கட்சியான ஐக்கிய தேசியக் கட்சி யாழ் மாநகரசபைத் தேர்தலுக்கான வேட்புமனுவை நேற்றுத் திங்கட்கிழமை தாக்கல் செய்திருந்த நிலையில்,  வவுனியா நகரசபைத் தேர்தலுக்கான வேட்புமனுவை ஐக்கிய தேசியக் கட்சி இன்று செவ்வாய்க்கிழமை தாக்கல் செய்துள்ளது.

ஐ.தே.க. வெற்றி பெற்றால் 24 மணித்தியாலங்களுக்குள் ஏ9 வீதி மக்கள் போக்குவரத்திற்காக திறக்கப்படும்

election_ballot_.jpgயாழ்.  மாநகர சபைத் தேர்தலில் ஐ.தே.க. வெற்றி பெற்றால் 24 மணித்தியாலங்களுக்குள் ஏ9 வீதி மக்கள் போக்குவரத்திற்காக திறக்கப்படுவதுடன், யாழ் நகரம் நவீனமயப்படுத்தப்படுமென ஐ.தே.க.வின் பாராளுமன்ற உறுப்பினர் ஜயலத் ஜெயவர்தன தெரிவித்தார்.

யாழ்.மாநகர சபைத் தேர்தலில் போட்டியிடுவதற்கான ஐ.தே.கட்சியின் வேட்பு மனுவை யாழ்.மாவட்டத் தேர்தல் திணைக்களத்தில் நேற்று திங்கட்கிழமை தாக்கல் செய்த பின்னர் பத்திரிகையாளர்களைச் சந்தித்துக் கருத்துக் கூறுகையிலேயே அவர் மேற்கண்டவாறு தெரிவித்தார்.

நேற்று முற்பகல் 11 மணியளவில் பொலிஸ் மற்றும் இராணுவப் பாதுகாப்புடன் மாவட்டச் செயலகத்தேர்தல் திணைக்களத்திற்கு வருகை தந்த ஜயலத் ஜயவர்தன , ஏ.எஸ்.சத்தியேந்திராவை முதன்மை வேட்பாளராகக் கொண்ட வேட்பு மனுவைத் தாக்கல் செய்தார். ஐ.தே.கட்சியின் சார்பில் யாழ். மாநகர சபைத்தேர்தலில் போட்டியிடவுள்ள 29 வேட்பாளர்களும் யாழ்.மாவட்டத்தைச் சேர்ந்தவர்களெனவும் இவர்களில் 28 தமிழர்களும் ஒரு முஸ்லிமும் உள்ளடங்குவதோடு, 5 பெண் வேட்பாளர்களும் உள்ளனர். வேட்புமனுவை தாக்கல் செய்த பின்னர் ஜயலத் ஜயவர்தன எம்.பி.கூறுகையில்;

ஐக்கிய தேசியக் கட்சி ஜனநாயகத்தையும் நிலையான அமைதியையுமே விரும்புகிறது. வட பகுதியிலுள்ள மக்கள் யுத்தம் உட்பட பல்வேறு காரணங்களாலும் துன்பப்பட்டிருக்கிறார்கள். இந்த நிலையில், நடைபெறவுள்ள தேர்தல் சுதந்திரமானதாகவும் நியாயமானதாகவும் நடைபெறுமா என்பது தொடர்பாக எங்களால் தற்போது எந்தக் கருத்தையும் கூற முடியாமலிருக்கின்றது. எவ்வாறான சூழ்நிலைகள் இருக்கின்ற போதிலும் எமது கட்சியும் இந்தத் தேர்தலில் போட்டியிட வேண்டுமென்று முடிவெடுத்திருக்கிறது. நாங்கள் எந்தக் கட்சிக்கும் எதிராகச் செயற்படுபவர்கள் அல்ல.

நடைபெறவுள்ள தேர்தலில் எமது கட்சி வெற்றி பெற்றால் 24 மணித்தியாலங்களுக்குள் ஏ9 வீதி திறக்கப்பட்டு மக்களின் போக்குவரத்திற்கு ஏற்பாடு செய்யப்படும். யாழ்நகரிலுள்ள மத்திய பஸ் நிலையம் மற்றும் நவீன சந்தை போன்றன மறு சீரமைக்கப்பட்டு யாழ்நகரம் நவீன மயப்படுத்தப்படும். தமிழ் மக்களின் பிரச்சினைகளை முறையாக அணுகி அதற்குத் தீர்வு காண்பதன் மூலமே தேசியப் பிரச்சினைக்கு சுமுகமாகத் தீர்வு காண முடியும். இதற்காக அனைத்துத் தரப்பினரும் ஒன்றிணைந்து செயற்பட வேண்டும்.

தமிழ் மக்கள் தன்னுடைய உறவினர்கள் என்றும் தமிழ்ச் சிறுவர்கள் தன்னுடைய பிள்ளைகள் என்றும் ஜனாதிபதி மகிந்த ராஜபக்ஷ கூறுவது பேச்சளவில் நின்றுவிடக்கூடாது. அதைச் செயலுருப்படுத்துவதன் மூலமே தமிழ் மக்களின் பிரச்சினைகளுக்கு உண்மையான தீர்வைக் காண முடியும் என்றார். யாழ்.மாநகர சபைத் தேர்தலில் போட்டியிடுவதற்கு பல அரசியல் கட்சிகளும் சுயேச்சைக் குழுக்களும் தயாராகிக்கொண்டிருக்கின்ற போதிலும் முதன் முதலாக வேட்பு மனுவைத் தாக்கல் செய்தது ஐ.தே.கட்சி என்பது குறிப்பிடத்தக்கது.

ஐக்கிய தேசிய கட்சியும், சிறிலங்கா முஸ்லிம் காங்கிரசும் வேட்பு மனு தாக்கல்

21tissa.jpgவவுனியா நகரசபைத் தேர்தலில் போட்டியிடுவதற்காக ஐக்கிய தேசிய கட்சியும் சிறிலங்கா முஸ்லிம் காங்கிரசும் இன்று வேட்பு மனுக்களைத் தாக்கல் செய்துள்ளன.

ஐக்கிய தேசிய கட்சியின் பொதுச் செயலாளர் திஸ்ஸ அத்தநாயக்காவும் நாடாளுமன்ற உறுப்பி்னர் டாக்டர் ஜயலத் ஜயவர்தனவும் வேட்பு மனு தாக்கல் செய்வதற்காக விசேடமாகக் கொழும்பில் இருந்து வவுனியாவுக்கு வருகை தந்திருந்தார்கள் என்பது குறிப்பிடத்தக்கது.

யாழ். விவசாயிகளுக்கு இன்று உழவு இயந்திரங்கள் பகிர்ந்தளிப்பு

ஜப்பானிய உதவித் திட்டத்தின் கீழ் கிடைக்கப் பெற்றுள்ள 20 உழவு இயந்திரங்களை சமூக சேவைகள் மற்றும் சமூக நலத்துறை அமைச்சர் டக்ளஸ் தேவானந்தா யாழ்ப்பாண விவசாயிகளுக்கு இன்று பகிர்ந்தளிக்கவுள்ளார்.யாழ். மாவட்டச் செயலகத்தில் இன்று பிற்பகல் 2.30 மணிக்கு இந்நிகழ்வு நடைபெறவுள்ளது. இந்நிகழ்வில் அமைச்சர் டக்ளஸ் தேவானந்தா இவ் உழவு இயந்திரங்களை விவசாயிகளுக்குக் கையளிப்பாரென மேற்படி அமைச்சு தெரிவித்தது.

ஜப்பானிய ஜென் உதவித் திட்டத்தின் கீழ் இந்த உழவு இயந்திரங்கள் விவசாய மற்றும் கமநல சேவைகள் அபிவிருத்தி அமைச்சிற்கு வழங்கப்பட்டவையாகும். யாழ். விவசாயிகளின் விவசாய நடவடிக்கைகளுக்கு ஊக்குவிப்பு வழங்குமுகமாக அமைச்சர் டக்ளஸ் தேவானந்தா இவற்றை யாழ். விவசாயிகளுக்குப் பெற்றுக் கொடுப்பதாக அமைச்சு தெரிவித்தது. இதேவேளை யாழ்ப்பாணத்திலிருந்து தெற்கிற்கு குடாநாட்டு உற்பத்திப் பொருட்களை போக்குவரத்துச் செய்யும் லொறி உரிமையாளர்கள் மானிப்பாய் வீதியிலுள்ள யாழ். வணிகர் கழகத்துடன் தொடர்பு கொண்டு இது தொடர்பான விபரங்களைப் பெற்றுக் கொள்ள முடியு மெனவும் அமைச்சு தெரிவிக்கின்றது.

வடபகுதி மாணவர்களின் உயர் கல்வி மேம்பாட்டுக்கு விசேட திட்டம்

visvawarnapala.jpgவட பகுதியைச் சேர்ந்த  பாடசாலை மாணவர்களின் உயர் கல்வியை அபிவிருத்தி செய்யும் நோக்கில் விசேட திட்டமொன்றை செயற்படுத்த உயர்கல்வி அமைச்சு நடவடிக்கை எடுத்துள்ளதாக உயர் கல்வி அமைச்சர் பேராசிரியர் விஸ்வா வர்ணபால தெரிவித்தார்.

வடக்கின் வசந்தம்’ வேலைத் திட்டத்தின் கீழ் 1058 மில்லியன் ரூபா செலவில் ஆரம்பிக்கப்பட்டுள்ள இந்தத் திட்டத்தில் யாழ்ப்பாணம் மற்றும் வவுனியாவிலுள்ள உயர் கல்வி நிறுவனங்களின் உட்கட்டமைப்பு வசதிகள் உள்ளிட்ட ஏனைய வசதிகளை அபிவிருத்தி செய்யவிருப்பதாக குறிப்பிட்டார்.

மோதல்கள் காரணமாக வடக்கில் உயர் கல்வியைத் தொடர முடியாத மாணவர்கள் குறித்து விவரம் சேகரிக்கும் நடவடிக்கை தற்போது ஆரம்பிக்கப்பட்டுள்ளது. யாழ். பல்கலைக்கழகத்தின் மருத்துவ பீடத்தில் கல்வி கற்கும் மாணவர்களின் நலனைக் கருத்திற்கொண்டு 90.33 மில்லியன் ரூபா செலவில் புதிய விடுதியொன்று அமைக்கப்பட்டிருப்பதுடன் யாழ் உயர் தொழில் நுட்ப நிறுவனத்திற்கு 609.89 மில்லியன் ரூபா செலவில் நிர்வாகக் கட்டடமொன்று நிர்மாணிக்கப்பட்டுள்ளது.

அங்கே கற்பிக்கும் பாடநெறிகளை பலனுள்ளதாக்குவதற்கும் மேலும் புதிய பாடநெறிகளை அறிமுகப்படுத்துவதற்குமென 30 மில்லியன் ரூபா செலவிடப்பட்டுள்ளதுடன் இதன் உட்கட்டமைப்பு வசதிகளை மேம்படுத்துவதற்காக 14.45 மில்லியன் ரூபா செலவிடப்படவிருப்பதாகவும் அவர் கூறினார்.

இதேவேளை, வவுனியாவில் 65 மில்லியன் ரூபா செலவில் உயர் தொழில்நுட்ப நிறுவனமொன்று ஸ்தாபிக்கப்படவிருப்பதாக் அமைச்சர் மேலும் குறிப்பிட்டார். 

சர்வ கட்சிக் குழுவில் பங்குபற்ற ஐ.தே.க. ஜே.வி.பி. மற்றும் தமிழ் தேசியக் கூட்டமைப்புக்கு மீண்டும் அழைப்பு

சர்வ கட்சி பிரதிநிதிகள் குழுவில் கலந்துகொள்ள ஐ.தே.க. ஜே.வி.பி. மற்றும் தமிழ் தேசியக் கூட்டமைப்பு ஆகிய கட்சிகளுக்கு; மீண்டும் அழைப்பு விடுக்கவுள்ளதாக  விஞ்ஞான தொழில்நுட்ப அமைச்சரும் சர்வகட்சிக் குழுவின் தலைவருமான பேராசிரியர் திஸ்ஸ வித்தாரண தெரிவித்தார். சர்வகட்சிக் குழுவின் யோசனைகள் எதிர்வரும் மூன்று மாத காலத்திற்குள் சமர்ப்பிக்கப்படும் என்று விஞ்ஞான தொழில்நுட்ப அமைச்சரும் சர்வகட்சிக் குழுவின் தலைவருமான பேராசிரியர் திஸ்ஸ வித்தாரண தெரிவித்தார்.

ஐ.தே.க. சர்வகட்சிக் குழு கூட்டத்தில் கலந்துகொண்ட சமயம்ää எழுத்து மூலம் பல கருத்துகளை முன்வைத்தது. அந்த கருத்துகள் குறித்து பல தடவைகள் ஆராயப்பட்டு அதில் தேவையானவை மட்டும் எடுத்துக்கொள்ளப்பட்டன. தற்பொழுது இவர்கள் பிரிந்து நிற்கின்றனர். சிறந்த ஒரு தீர்வை முன்வைப்பதற்கு அதிகாரத்தை பகிர்வதற்கு சகலரும் ஒத்துழைக்க வேண்டும். ஒவ்வொரு கட்சிகளும் பின்வாங்குவதில் எவ்வித அர்த்தமும் இல்லை. நெநோ தொழில்நுட்ப வேலைத்திட்டம் தொடர்பாக ஊடகங்களுக்கு விளக்கமளிக்கும் செய்தியாளர் மாநாடு நேற்று பிற்பகல் நார ஹேன்பிட்டியிலுள்ள அரசாங்க தகவல் திணைக்களத்தின் கேட்போர் கூடத்தில் நடை பெற்றது.

இதன் போது ஊடகவியலாளர்கள் எழுப்பிய கேள்விக்கு பதிலளிக்கும்போதே அமைச்சர் மேற்கண்டவாறு தெரிவி த்தார். அமைச்சர் மேலும் உரையாற்றுகையில்:-

சகல தரப்பினரும் ஏற்றுக்கொள்ளக்கூடிய தீர்வை பெற்றுக்கொடுப்பதே எமது பிரதான நோக்கமாகும் என்று அவர் மேலும் தெரிவித்தார்.சகல தரப்பினரும் ஏற்றுக்கொள்ளக்கூடிய உரிய தீர்வு முன்வைக்கப்படும். அதிகாரம் பகிரப்படும். அவ்வாறு பகிரப்படாவிடின் தீவிரவாதமும் பிரிவினைவாதமும் திரும்பவும் உருவாகும். பிரபாகரனைப் போன்று பலர் உருவாகலாம்.

இதுவரை 120 அமர்வுகள் இடம்பெற்றுள்ளன. ஒவ்வொரு அமர்வுகளும் பல மணித்தியாலங்கள் நடைபெற்றன. இதற்கு பிரதான காரணம்ää இங்கு நடைபெற்ற சகல கூட்டங்களின் போதும் சகலருக்கும் கருத்து வழங்க இடமளிக்கப்பட்டதேயாகும். கூட்டங்களின்போது பேசப்படும் சகல தகவல்களும் ஹன்சார்ட்கள் போன்று பதிவு செய்யப்பட்டு அடுத்த கூட்டத்திற்கு முன்னர் சமர்பிக்கப்பட்டு தேவையான மாற்றங்களும் வழங்கப்படும்.

வெளிநாடுகளின் தலையீடுகள் இருப்பதாக சிலர் தெரிவிக்கின்றனர். அதில் எவ்வித உண்மையுமில்லை. தற்பொழுது எமக்கு ஒரு நாடு உள்ளது. அதனை பாதுகாக்க வேண்டும். அதேசமயம் உரிய தீர்வும் வழங்கப்பட வேண்டும் என்றும் அமைச்சர் சுட்டிக்காட்டினார்.

வடமாகாணத்தில் 11.5 பில்லியன் ரூபா செலவில் 325,000 வீடுகள்

jaffna-000.jpgமூன்று வருட வேலைத்திட்டத்திற்கமைய வடமாகாணத்தில் 11.5 பில்லியன் ரூபா செலவில் புதிதாக 325,000 வீடுகள் அமைக்கப்படும். அதேநேரம், அங்குள்ள 150,000 வீடுகள் புனரமைத்துக் கொடுக்கப்படும் என ஜனாதிபதி செயலகம் அறிவித்துள்ளது.

மோதல்களால் பாதிக்கப்பட்ட பகுதிகளின் அபிவிருத்தி தொடர்பாக, வடக்கின் அபிவிருத்திக்கான ஜனாதிபதி விசேட செயலணிக் குழுவின் தலைவரும், ஜனாதிபதியின் சிரேஷ்ட ஆலோசகருமான பசில் ராஜபக்ஷ தலைமையில் கடந்த ஞாயிற்றுக்கிழமை சந்திப்பொன்றில் இந்த முடிவு எடுக்கப்பட்டது.

மோதல்களால் பாதிக்கப்பட்ட வடபகுதியின் பெருந்தெருக்கள், மின்சார விநியோகம், வீடுகள், நீர் விநியோகம், விவசாயம், சுகாதாரம் மற்றும் கல்வி அபிவிருத்திகள் போன்ற பல்வேறு விடயங்கள் பற்றியும் இச்சந்திப்பின்போது ஆராயப்பட்டதாக அரச தகவல் திணைக்களம் தெரிவித்துள்ளது.

இந்தக் கூட்டத்தில் வடமாகாண ஆளுநர் டிக்சன் டெல பண்டார, மீள்குடியேற்ற அமைச்சர் ரிசாட் பதியுதீன், மாவட்டச் செயலாளர் மற்றும் மீள்குடியேற்றம் மற்றும் மனிதநேய விவகாரங்களுக்கான பொறுப்பதிகாரி மேஜர் ஜெனரல் ஜீ.ஏ.சந்திரசிறி ஆகியோர் கலந்துகொண்டனர்.

வடக்கில் மீட்கப்பட்ட பகுதிகளில் – சிவில் நிர்வாகத்தை ஏற்படுத்த நடவடிக்கை

வடக்கில் புதிதாக மீட்கப்பட்ட பகுதிகளில் சிவில் நிர்வாகத்தை ஏற்படுத்துவதற்கான முன்னோடி நடவடிக்கைகளை பொதுநிர்வாக உள்நாட்டலுவல்கள் அமைச்சு மேற்கொண்ட வருகிறது. அதற்கான திட்டமொன்று தயார்படுத்தப்பட்டுள்ளதுடன் விரைவில் அதிகாரிகள் குழுவொன்று வடக்கிற்கு செல்லவுள்ளதாகவும் அமைச்சின் செயலாளர் டி. திசாநாயக்க தெரிவித்தார்.

அங்குள்ள நிலைமைகள் தொடர்பாக ஆராய்ந்து உடனடியாக அப்பிரதேசங்களில் மேற்கொள்ளப்படக்கூடிய நடவடிக்கைகள் சம்பந்தமாக அறிக்கை சமர்ப்பிக்குசுமாறும் சம்பந்தப்பட்ட மாவட்டச் செயலாளர்கள் மற்றும் அரச அதிபர்களுக்கும் பணிப்புரை விடுத்துள்ளதாகவும் அவர் தெரிவித்தார்.

வடக்கில் புதிதாகக் கைப்பற்றப்பட்ட பிரதேசங்களில் சிவில் நிர்வாகத்தைக் கட்டியெழுப்புவது தொடர்பில் அவர் மேலும் தெரிவிக்கையில்:- வன்னியில் பல மாவட்டங்களிலிருந்தும் இலட்சக்கணக் கான மக்கள் யுத்தத்தினால் இடம்பெயர்ந்து வவுனியா நலன்புரிக் கிராமங்களில் தங்கவைக்கப்பட்டுள்ளனர்.

அவர்களை அவர்களது சொந்த இடங்களில் மீளக் குடியமர்த்துவதற்கு முன் அந்தந்த பிரதேசங்களில் மாவட்டச் செயல கங்கள் பிரதேச செயலகங்கள், கிராம சேவை அதிகாரிகள் அலுவலகங்கள் திறக்கப்படுவது முக்கியம். இதற்கு முன்பதாக சம்பந்தப்பட்ட பிரதேசங்களில் மிதி வெடி அகற்றும் பணிகளை மேற்கொள்ள வேண்டியுள்ளது. இது தொடர்பில் அங்குள்ள உயர் படை அதிகாரிகளுடன் பேச்சுவார்த்தை நடத்தப்பட்டுள்ளது.

அதற்கு முன்னோடியாக சம்பந்தப்பட்ட மாவட்டச் செயலாளர்கள் பாதுகாப்புப் படை அதிகாரிகளுடன் இணை ந்து பாதிக்கப்பட்டுள்ள பிரதேசங்களைப் பார்வையிட வுள்ளனர். இதனையடுத்து படிப்படியாக அடுத்த கட்ட நடவடிக்கைகள் முன்னெடுக்கப்படும். எவ்வாறாயினும் இடம்பெயர்ந்த மக்களை மீளக் குடியமர்த்துவதற்கு முன்னர் அதற்கு வசதியாக அப்பகுதியில் அரச அலுவலகங்கள் ஏற்படுத்தப்படும் எனவும் அவர் மேலும் தெரிவித்தார்.