(கட்டுரையாளர் தேசம்நெற்றுக்கு தன்னை வெளிப்படுத்திக் கொண்டுள்ளார். ஆயினும் தன்னை இனம் காட்டுவது இன்றைய சூழலில் அவருக்கு ஆபத்தை ஏற்படுத்தும் என்று கருதுவதால் அவர் தனது பெயரைக் குறிப்பிடவில்லை. கட்டுரையாளர் மட்டு அம்பாறையைச் சேர்ந்த முன்னாள் ரெலோ போராளி.)
தமிழீழ விடுதலை இயக்கம் (ரெலோ) 1986 இல் விடுதலைப் புலிகளால் அழிக்கப்பட்டு அதன் அப்பாவி உறுப்பினர்கள் புலிகளால் வேட்டையாடப்பட்டனர். இதைத் தொடர்ந்து ரெலோ உறுப்பினர்கள் பலர் வெளிநாடுகளுக்கு தப்பி ஓடினர். சிலர் புலிகளிடம் தாங்கள் அரசியலில் ஈடுபடப் போவதில்லை என எழுதிக் கொடுத்து விட்டு சாதாரண வாழ்க்கையை புலிகளின் சந்தேகங்களுக்கு முகம் கொடுத்த வண்ணம் இலங்கையில் வாழ மிகச்சிலர் அரச பாதுகாப்பு படையுடன் சேர்ந்து புலி எதிர்ப்பு நடவடிக்கைகளில் ஈடுபட்டு வந்தனர் என்பது எல்லோருக்கும் நினைவிருக்கலாம்.
இதனைத் தொடர்ந்து தமிழ் தேசிய கூட்டமைப்பில் சங்கமமான அரச ஆதரவு ரெலோவினர் தங்களது ஆதரவை புலிகளுக்கு நல்கி பல எம். பி பதவிகளை பெற்றுக் கொண்டனர். இதில் உண்மையை கூற வேண்டும் எனில் செல்வம் அடைக்கலநாதன் போன்றோருக்கு மன்னாரில் அவரது சாதி வாக்குகள் மிகத் தாராளமாக விழுந்ததை நாம் கவனத்தில் கொள்ள வேண்டும். ஆனால் இவர்களின் கண்மூடித்தனமான புலி ஆதரவு நாட்டிலும் வெளிநாடுகளிலும் ரெலோவினர் மத்தியில் எரிச்சலை உண்டு பண்ணியது. வெளிநாடுகளில் நடந்த ரெலோ கூட்டங்களில் சிறிகாந்தா சிவாஜிலிங்கம் போன்றோர் நேரடியாக விமர்சிக்கப்பட்டனர்.
இதன் தொடர்ச்சியாக லண்டனில் 20 வருடங்களுக்கு மேலாக வாழ்ந்து வரும் ஜனநாயக முகமூடியணிந்த ( இவர் புலிகளின் ஜனநாயக மனித உரிமை மீறல்களை மாத்திரம் விமர்சிப்பாராம்.) தலித் அரசியல் செய்யும் (பெரும்பான்மை) வெள்ளாளரான நெற்றிக் கண்ணை திறப்பினும் குற்றம் குற்றமே என பெயரில் மாத்திரம் கொண்டுள்ள முன்னாள் ரெலோ உறுப்பினரான ஒரு நபர் தனது அரச தொடர்புகளைக் கொண்டு, சிறி ரெலோவையும் அதன் வெப்சைட்டையும் நடத்தி வருகின்றார். முன்னாள் ரெலோ உறுப்பினர்களான எங்கள் முன் ஏராளம் கேள்விகள் உள்ளன.
ஜனநாயகம் பேசும் சிறிரெலோ புலிகள் அழிக்கப்படுவதற்கு முன் தான் செய்த ஜனநாயக மீறல்கள் பற்றி எங்காவது சுயவிமர்சனம் செய்ததா? சுதன், ரமேஸ் பிரச்சனையில் எத்தனை போராளிகளின் உயிர் பறிக்கப்பட்டது? எத்தனை போராளிகள் அடித்து முறிக்கப்பட்டது? சேலம் கொல்லி மலையில் எத்தனை பேர் கொல்லப்பட்டனர்? த.வி.கூட்டணி எம்.பிக்கள் ஆலாலசுந்தரம், தருமலிங்கத்தை ஏன் கொன்றீர்கள்? சமாதானம் பேச வருமாறு கூறி தாஸ், பீற்றர், காளி மற்றும் பலரை யாழ் போதனாசாலையில் வைத்துக் கொன்றொழித்தது பற்றி ஏதாவது கூறியுள்ளதா? இதை கண்டித்து ஊர்வலமாக வந்த மக்கள் மேல் துப்பாக்கி சூடு நடத்தியதை என்னவென்று கூறுவது?
பின்பு தாஸ் குழுவை நாடு கடத்தியது (நன்றி : தமிழ் மக்கள் பாதுகாப்பு பேரவை) ஏன்? ஒரு தோழர் கூறுகிறார் சிறி சபா மிகவும் நல்லவராம் – அவர் தாஸ் குழுவை கொல்லாமல் (புலிகள் போல்) அனுப்பினவராம்! அந்த ஒரு விடயத்தில் மாத்திரம் சிறிசபா ஒழுங்காக கணக்குப் போட்டுள்ளார். ஏனெனில் அவருக்கு தனது அணியின் பலம் தெரிந்துதான் தாஸ் குழுவுடன் மோதவில்லை. விமல், நேரு போன்ற N.L.F.T அனுதாபிகளில் ஒருவரை செட்டி அவர்களைக் கொண்டே கிடங்கு வெட்டச் சொல்லி கொலை செய்தது, பல ரெலோ உறுப்பினர்களின் மக்கள் விரோத அராஜக நடவடிக்கைகள் இவையெல்லாம் சிறிசபாவின் தலைமையில் கீழ் தான் நடந்தது. அவர் இதை ஒருபோதும் கண்டித்ததில்லை – தண்டித்ததில்லை. ஆனால் இங்கு ஒரு கும்பல் சிறி சபாவின் பெயரில் ஒரு இயக்கம் அதுவும் ஜனநாயகம், மனித உரிமை போன்றவற்றின் பெயரால்…..! சரி – அதை விடுவோம்!
ஜனநாயகம், சுபீட்சம், புனர்வாழ்வு என்ற பெயரால் ஏன் புதிதாக ஒரு கட்சி (சிறி ரெலோ) இயங்க வேண்டும்? பேசாமல் மகிந்தவின் கட்சியிலோ அல்லது டக்கிளசின் கட்சியிலோ சேர்ந்து மக்கள் சேவையை புரியலாம்தானே? பெடரல் பார்டியை எப்படி தமிழரசுக் கட்சி என செல்வா, அமிர் கூறினார்கள் என கேள்வி கேட்ட அதே நபர்கள் ஐக்கிய இலங்கைக்குள் சிறி ரெலோ விடுதலை இயக்கம் என்ற பெயரில் கட்சி நடத்தி தமிழ் மக்களை ஏமாற்றுகிறார்கள்? ரெலோவை புலி மாத்திரம் அழிக்கவில்லை. சிறிசபா தாஸ் குழுவை அழித்த போதே ரெலோவின் அழிவு தொடங்கி விட்டது! தாஸ் குழு இருந்திருந்தால் புலிகள் இலேசில் ரெலோவின் மேல் கைவைத்திருக்க மாட்டார்கள். இதன் மறுதலை தாஸ் புகழ் பாடுவது அல்ல. ரெலோ பலமாக உள்ளது என புலிகள் நினைத்திருப்பார்கள்.
ரெலோ புலிகளால் அழிக்கப்பட்ட பின்பு, இலங்கை அரசபடைகளுடன் சேர்ந்து இயங்கக் கூடாது என சொன்னவர்கள் பின்பு ரி.என்.ஏ இல் ரெலோ இயங்கிய போதும் புலிகளுடன் உறவு வைக்கக் கூடாது என சொன்னவர்கள் நாம். எனவே யாரோ சிலரின் பிழைப்பிற்காக ஒரு கட்சியை நடத்தி பாவப்பட்ட மக்கள் மேல் மேலும் தொல்லைகள் கொடுக்காதீர்கள் என தயவு செய்து நாம் மன்றாடி கேட்டுக் கொள்கிறோம்.
தமிழ் பேசும் சிறுபான்மை மக்களின் பிரச்சனைகளை எந்தளவிலும் இலங்கை அரசு தீர்க்கவில்லை அல்லது தீர்க்கப் போவதில்லை என்பதே எமது நிலையாகும். ஆனால் சிறி ரெலோவை இயக்கும் இந்த நபர்கள் தமிழ்பேசும் சிறுபான்மை மக்களின் அடிப்படை அரசியலின் நலன்களுக்கு எதிராக இனவாரியான தரப்படுத்தல், சிங்கள குடியேற்றங்கள் சரியென்றும், இலங்கைத் தீவில் தமிழர்களுக்கு எந்தவித பிரச்சனைகளும் இல்லையென்றும் பேசித்திரிகின்றார்கள். இவர்களது கருத்துப்படி பார்த்தால், பிரச்சனைகளற்ற தமிழ்பேசும் தமிழீழ மக்களுக்காக தமிழீழ விடுதலை இயக்கம் என்ற பெயரில் கட்சி நடத்தி தம் கருத்துக்களுடனேயே முரண்பட்டு கொள்கின்றனர்.
இந்திய சுதந்திரத்தின் பின்னர் காந்தியடிகள் காங்கிரஸை கலைத்து விடும்படி கூறினார்கள். அது போல் நாமும் இவர்களிடம் கோருகின்றோம் – ரெலோவைக் கலைத்து விடுங்கள் என்று! உங்கள் கருத்துப்படி பிரச்சினைகளற்ற தமிழ் மக்களுக்கு அது தேவையும் இல்லை!!
முன்னாள் ரெலோ உறுப்பினர்.
(பிற்குறிப்பு – இப்போதுள்ள செல்வம் ரெலோ ரெலோவை மூடிவிடுமாறு நாம் கோரிக்கை விடுத்து நீண்ட நாட்களாகின்றன.)