July

July

ஆயுதப் போராட்டம் முடிவடைந்தாலும் தமிழரின் அபிலாசைக்கான போராட்டம் முடியவில்லை – இரா. சம்பந்தன்

images-r-sam.jpgவடக்கே நடைபெறவுள்ள உள்ளூராட்சி தேர்தல் முடிவுகள் மூலம் தமிழ் மக்கள் தமது அரசியல் அபிலாசைகளை எவ்வாறு வெளிப்படுத்தப்போகிறார்களென்று சர்வதேச சமூகமும் தென்னிலங்கையும் அவதானித்துக்கொண்டிருக்கின்றன. எனவே தமிழ்பேசும் மக்கள் இத்தேர்தலில் சரியான முடிவுகளை எடுக்கவேண்டுமென்று தமிழ்த் தேசிய கூட்டமைப்பின் பாராளுமன்றக் குழுத் தலைவர் இரா.சம்பந்தன் தெரிவித்துள்ளார்.

வவுனியா நகர சபைத் தேர்தலில் போட்டியிடும் இலங்கைத் தமிழரசுக் கட்சி வேட்பாளர்களை ஆதரித்து நேற்று சனிக்கிழமை நண்பகல் நடைபெற்ற பிரசாரக் கூட்டத்தில் உரையாற்றும்போதே அவர் இதனைத் தெரிவித்தார்.  கண்டி வீதியில் நடைபெற்ற இக் கூட்டத்தில் சம்பந்தன் எம்.பி. மேலும் கூறியதாவது;

இந்த நாட்டில் பயங்கரவாதப் பிரச்சினை முடிந்துவிட்டது. அதற்கு முற்றுப்புள்ளி வைத்துவிட்டோம் என்று அரசு கூறிவருகிறது.  அத்துடன், நாட்டில் எதுவித பிரச்சினைகளும் இல்லை. சகலரும் ஒற்றுமையாக வாழ்கின்றனர் எனவும் அரசு கூறிவருகிறது.  எமது மக்களைப் பொறுத்தவரை சரித்திர ரீதியாக இந்த நாட்டில் நாம் வாழ்ந்து வருகின்றோம். எமது உரிமைக்காகவே போராடியும் வருகிறோம்.

குறைந்தது சமஷ்டி அடிப்படையிலான சுயாட்சி அமைப்பு முறையான இந்தக் கோரிக்கையை நாம் நீண்டகாலமாகவே விடுத்துவருகின்றோம்.  எமது சுயநிர்ணய உரிமையை,சரித்திர ரீதியாக நாம் வாழ்ந்து வரும் பிரதேசத்தில் அங்கீகரிக்கப்படவேண்டும். நடைபெற்ற ஆயுதப்போராட்டமானது நீண்டகால போராட்டத்தின் ஒரு அங்கமே. அந்த போராட்டம் முடிவடைந்திருக்கலாம். ஆனால், தமிழ் மக்களின் அபிலாசைக்கான போராட்டம் இன்னமும் பூர்த்தியாகவில்லை.

எம்மை பொறுத்தவரையில் எமது அபிலாசைகள் பூர்த்தி அடைந்து ஒரு அரசியல் நிலைமை ஏற்பட்டால்தான் நாம் இந்த நாட்டில் சம உரிமையுடன் கௌரவத்துடன் சுயமரியாதையுடன் வாழ முடியும். அதனால் இந்தக் கேள்விக்கு பதிலளிக்கவேண்டிய பொறுப்பு தற்போது வவுனியா நகரில் வாழ்கின்ற மக்களையும் யாழ். மாநகர சபை எல்லைக்குள் வாழுகின்ற மக்களையும் சார்ந்தது.

நாம் யாரையும் எதிர்க்கவில்லை, வெறுக்கவில்லை இந்த நாட்டில் வாழுகின்ற சகல மக்களையும் நேசிக்கின்றோம். சகோதரர்களாக கருதுகின்றோம். ஆனால் எமக்கு இந்த நாட்டில் சமத்துவம், சம உரிமை, பாதுகாப்பு வேண்டும். இலங்கை தமிழரசு கட்சியின் சின்னத்தில் நாம் வவுனியாவிலும் யாழ்ப்பாணத்திலும் வேட்பாளர்களை நிறுத்தியுள்ளோம். என்றார்.

இராஜதந்திரப் பாதையினை முன்னெடுக்கும் அதேவேளையில் ஏன் ஆயுதப் போராட்டத்தையும் முன்னெடுக்க முடியாது? – செ.பத்மநாதன்

kp.jpgஇராஜ தந்திரப் பாதையினை முன்னெடுக்கும் அதேவேளையில் ஏன் ஆயுதப் போராட்டத்தையும் முன்னெடுக்க முடியாது என்பது தொடர்பாக தமிழீழ விடுதலைப் புலிகளின் அனைத்துலக உறவுகளுக்கான செயலகத்தின் பொறுப்பாளர் செல்வராஜா பத்மநாதன் விளக்கமளித்துள்ளார். இது தொடர்பாக தமிழீழ விடுதலைப் புலிகளின் அனைத்துலக உறவுகளுக்கான செயலகத்தின் இணையத்தளத்தில்  அவர் வெளியிட்டுள்ள அறிக்கையில் மேலும் தெரிவித்துள்ளதாவது:

அடுத்துவரும் காலங்களில் தமிழீழ மக்களின் தேசிய விடுதலைக்கான போரினை பிரதானமாக அரசியல், இராஐதந்திர வழிமுறை ஊடான அழுத்தங்களுடன் முன்னெடுப்பதே சாத்தியமானதும், வலுவானதுமாகும் என்ற முடிவுக்கு விடுதலைப் புலிகள் இயக்கம் வந்துள்ளதாக கடந்த வாரப் பக்கங்களில் குறிப்பிட்டிருந்தேன்.

மக்களின் தற்போதைய கடினமான வாழ்க்கை நிலையை முன்னிறுத்தியும், அண்மையில் நமது விடுதலைப்போராட்டம் எதிர்கொண்ட பெரும் பின்னடைவினைக் கருத்தில் கொண்டும், சமகால அனைத்துலக சூழல், பிராந்திய நெருக்குவாரம், தமிழீழ சமூகத்தினுள் நிலவும் அகப்புற சூழல்கள் என்பனவற்றினை கவனத்தில் எடுத்தும், இம் முடிவுக்கு விடுதலைப் புலிகள் இயக்கம் வந்துள்ளதாகவும் அந்தப் பக்கங்களில் தெரிவித்திருந்தேன்.

இதன் அடிப்படையில், முள்ளிவாய்க்காலில் வைத்து நமது தலைவர் எடுத்த தீர்மானத்திற்கு அமைய ஆயுதங்கள் மௌனிக்கப்பட்டு, நமது விடுதலை இலட்சியத்தினை வென்றெடுப்பதற்கான அடுத்தகட்டப்பயணம் அரசியல், இராஜதந்திர வழிமுறைகளுக்கூடாகத் தொடரும் எனவும் தெரிவித்திருந்தேன்.

இது நமது அடுத்தகட்டப் போராட்டம் குறித்த முக்கியமான ஒரு அரசியல் நிலைப்பாடு எனவும் இது குறித்த ஏனைய விடயங்களை இந்த வாரம் நோக்கவுள்ளதாகவும் கடந்த வாரம் குறிப்பிட்டிருந்தேன்.

நாம் நமது புதிய அரசியல் இராஜதந்திரப் பாதையினை அறிவித்த பின்னர் என்னிடம் உரையாடிய சிலர் என்னிடம் கேட்ட ஒன்றோடு ஒன்று தொடர்புபட்ட இரு கேள்விகளை ஆராய்வது இந்த வாரப் பக்கங்களுக்கு முக்கியமாகப்படுகிறது.

அரசியல் இராஜதந்திரப் பாதையினை முன்னெடுக்கும் அதேவேளை கெரில்லாப் போராட்டத்தையும் முன்னெடுக்க முடியாதா? அது சிறிலங்கா அரசுக்கு கூடுதல் அழுத்தத்ததைக் கொடுத்து, அரசியல் இராஜதந்திர நகர்வுகளுக்குப் பக்க பலமாக அமையும் அல்லவா?  இவையே அந்தக் கேள்விகள்.

முதலில், நான் ஒரு விடயத்தினைத் தெளிவாகக் குறிப்பிட விரும்புகிறேன்.
முள்ளிவாய்க்கால் நிகழ்வுகளுக்குப் பிற்பாடு, அரசியல் இராஜதந்திரப் பாதையில் பயணத்தினைத் தொடர்வது என்ற முடிவினை நான் மட்டும் தனித்து எடுக்கவில்லை. களத்தில் நிற்கும் தளபதிகள் மற்றும் தொடர்பில் இருந்த ஏனைய துறைசார் போராளிகளுடன் கலந்தாலோசிக்கப்பட்டே இந்த முடிவு எடுக்கப்பட்டது. தற்போதைய அனைத்துலக ஒழுங்கில் நாம் அரசியல் இராஜதந்திரப் பாதையில் பயணிக்கும் அதேவேளையில் ஆயுதப் போராட்டத்தினையும் சமநேரத்தில் முன்னெடுப்பது முரணான இருதிசைகளில் பயணிப்பதற்கு ஒத்ததாக இருக்கின்றது. இது எமது மக்களின் நலன்களை மையப்படுத்தும் விடுதலைப் போரினை அடுத்தகட்டத்திற்கு நகர்த்திச் செல்வதற்கு பலவித நடைமுறைத் தடைகளை ஏற்படுத்தும்.
நாம் ஒரு பேச்சுக்கு கெரில்லாத் தாக்குதல்களில் ஈடுபட முனைகிறோம் என வைத்துக் கொள்வோம்.  அதன் விளைவுகள் எத்தகையவையாக இருக்கும்? சற்றுச் சிந்தித்துப் பார்ப்போம்.  இந்த தாக்குதல் முனைப்புக்களை சிறிலங்கா அரசு தனது தமிழ் இன அழிப்பு நடவடிக்கைகளை மேலும் துரிதப்படுத்தவே பயன்படுத்தும்.

இதன் உடனடித் தாக்கம் இன்று தடுப்பு முகாம்களுக்குள் தடுத்து வைக்கப்பட்டிருக்கும் 3 லட்சத்திற்கும் மேற்பட்ட மக்களினதும் போராளிகளினதும் பாதுகாப்பில் பாதகமாகப் பிரதிபலிக்கும்.  அனைத்துலக சட்டங்களுக்கு முரணாக சிங்கள அரசினால் தடுத்து வைக்கபட்டும், தனிமைப்படுத்தப்பட்டும், சித்திரவதைகளுக்குட்பட்டும் வருகின்ற 10 ஆயிரத்துக்கும் அதிகமான விடுதலைப் போராளிகள் பாதுகாப்பு மிகுந்த கேள்விக்குறியாகும்.

மக்கள் தத்தமது இடங்களில் இயன்றளவு விரைவாக குடியமர்த்தப்படுவதற்குரிய அரசியல் இராஜதந்திர அழுத்தங்களை முன்னெடுப்பது பலவீனமடைந்து, மக்களை நீண்டநாட்களுக்கு தடுப்பு முகாம்களுக்கள் முடக்குவதற்கு வழிகோலும்.  இது ஏற்கனவே மிகுந்த வேதனைக்குள்ளாகியிருக்கும் மக்களை மேலும் துன்பத்துக்குள்ளாக்கும். இந்த மக்கள் தமது வாழ்க்கையை மீளக் கட்டி எழுப்புவதற்கு ஆதாரமாய் நிற்கவேண்டியது தமிழீழ தேசத்தின் கடமை.  இந்நிலையில் மக்கள் தமது சொந்த இடங்களில் விரைவாக குடியமர்வதற்கு நாம் எந்த வகையிலும் இடையுறாக இருக்க முடியாது.

மேலும், மக்களை தடுப்பு முகாம்களுக்குள் முடக்கியபடி வன்னிப்பெரு நிலத்தின் குடிசனப்பரம்பலை குடியேற்றங்கள் மூலமும் மாவட்ட எல்லைகளை மாற்றியமைப்பதன் மூலமும் தமிழ்ப் பெரும்பான்மையற்ற முறையில் மாற்றியமைத்திட முனையும் சிறிலங்கா அரசுக்கு நாமும் துணை புரிவதாய் அமைந்து விடும்.

தமிழர் பிரதேசங்களை மிக நீண்ட நாட்களுக்கு இராணுவ ஆக்கிரமிப்பக்குள் வைத்திட முனையும் சிறிலங்கா அரசுக்கு நாமே வாய்ப்புக்களை வழங்குவதாய் அமைந்து விடும். அனைத்துலக அரங்கில் நமது விடுதலை இயக்கத்திற்கு எதிராக பரப்புரைகளையும் இராஜதந்திர நகர்வுகளையும் மேற்கொண்டு நமது விடுதலைப்போராட்டக் கட்டமைப்புக்களுக்கு ஆபத்தை உண்டு பண்ணும் சிறிலங்கா அரசின் செயற்பாடுகளை இலகுவாக்கிவிடும்.

இவை மட்டுமன்றி, அரசு அல்லாத தரப்புக்களின் ஆயுதப்போர் பற்றிய இன்றைய உலக அணுகுமுறையினால் எம்மால் எவ்விதமான அரசியல் இராஜதந்திர நகர்வுகளை முன்னெடுக்கவோ அல்லது அரசியல் இராஜதந்திர அழுத்தங்களை சிறிலங்கா அரசுக்கு எதிரானப் பிரயோகிக்கவோ முடியாமல் போகும்.  மாறாக, நாங்கள் இதுகாலவரை எமது தேசியத் தலைவரின் வழிநடத்தலில் நிகழ்த்திய ஆயுதம் தரித்த விடுதலைப் போர் ஏற்படுத்தித் தந்த அடித்தளத்தில் இருந்து அடுத்தகட்ட ஈழப்போரினை முன்னெடுப்பதே சமகால உலக உறவுகள், அரசியல் – பொருளாதார நிலைப்பாடுகளின் வெளிச்சத்தில் வெற்றிக்கான வழித்தடமாக இருக்கும்.

அந்த அடித்தளங்கள் எவை?. எமது ஆயுதம் தரித்த விடுதலைப் போர் தமிழீழ மக்களிடையே வலுவான தேசிய எழுச்சியினை ஏற்படுத்தியுள்ளது. தேசிய சுயநிர்ணய உரிமை, தாயகம் தேசியம் என்கின்ற அடிப்படை விடயங்களை முதன்மையான விடயங்களாக வலுவாக முன்னிறுத்தியுள்ளது. தாயகத்திலும், புலத்திலும் அரசு, இறைமை என்பன போன்ற விடயங்களில் புரட்சிகரமான சிந்தனை மாற்றங்களை ஏற்படுத்தியுள்ளது.

சிங்கள தேசியவாத அரசின் செல்வாக்கிற்கு வெளியே தேசிய இனச்சிக்கலை கையாளும் வாய்ப்புக்களை உருவாக்கியது. உலக தமிழ்ச் சமூகம் மத்தியில் தமிழீழம் சார்ந்த ஆதரவுத் தளத்தினை ஏற்படுத்தியது. இவ்வாறு இந்த அடித்தளங்களை பட்டியலிடலாம்.  அனைத்திலும் மேலாக அர்ப்பணிப்புக்களால் கட்டியெழுப்பப்பட்ட தமிழர் விடுதலைப் போர் என்கின்ற தார்மீகம் எங்கள் அரசியல் நிலைப்பாட்டினை ஆதரமாக தாங்கியுள்ளது. இந்த இடத்தில் இருந்து போராட்ட வடிவத்தினை அடுத்த கட்டத்திற்கு எடுத்துச் செல்வது பற்றியே நாங்கள் கவனத்திற் கொள்ள வேண்டும்.

இங்கு போராட்ட இலக்கு மற்றும் போராட்ட வடிவம், இவற்றிற்கிடையே உள்ள தொடர்பு குறித்த தெளிவான பார்வை முக்கியமானது. நமது போராட்ட இலக்கினை அடைந்து கொள்ள எத்தகைய போராட்ட வடிவம் கூடுதல் பயன் தருமோ அந்த வடிவங்களை நாம் அந்தந்த காலகட்டத்தில் பயன்படுத்த வேண்டும். இதையே நமது தலைவர் 1987 ஆம் ஆண்டில் போராட்ட வடிவங்கள் மாறலாம், ஆனால் இலக்கு மாறாது எனக் குறிப்பிட்டிருந்தார்.

தற்போதைய காலகட்டத்தில், போராட்ட இலக்கினை முன்நோக்கி நகர்த்துவததற்கு போராட்ட வடிவத்தினை மாற்றுவது தவிர்க்க முடியாதது. நாம் மக்களுக்கு உண்மையாகவும் விசுவாசமாகவும் இருப்பது மிகவும் அவசிமானதாகும். இந்த அடிப்படையிலேயே போராட்ட வடிவமாற்றமும் முக்கியமானதாகும்.  நாம் முன்னர் ஆயுதப்போராட்டத்தை நடத்தியவாறு தானே அரசியல் இராஜதந்திர நகர்வுகளை முன்னெடுத்தோம் என்ற கேள்வி சிலர் மத்தியில் இந்த தருணத்தில் எழலாம்.  உண்மை தான். ஆனால் முன்னர் இருந்த சூழலுடன் தற்போதைய சூழலை நாம் ஒப்பிட முடியாது. 1970-களில் ஒற்றைத் துப்பாக்கியுடன் நமது தலைவரால் ஆரம்பிக்கப்பட்ட நமது விடுதலை இயக்கம் எத்தனையோ சோதனைகள் வேதனைகள் தாண்டி, இமாலய சாதனைகள் புரிந்து வரலாற்றில் ஈட்டிய வெற்றிகள் ஊடாகவே நமக்கு அனைத்துலக அரசியல் இராஜதந்திரக் கதவுகள் திறந்தன.

இருந்தும் அனைத்துலகத்தின் நலன்களும் நமது நலன்களும் ஒரே கோட்டில் சந்திக்காமையால் திறக்கப்பட்ட அனைத்துலக அரசியல் இராஜதந்திரக் கதவுகள் ஊடாக நம்மை நன்மைகள் பெரியளவில் வந்தடையவில்லை. இறுதியில் சிங்கள அரசு அனைத்துலக சமூகத்தை தன்வசப்படுத்தியவாறே போரை முன்னெடுத்தது. நமக்கு திறக்கப்பட்டிருந்த அனைத்துலக அரசியல் இராஜதந்திரக் கதவுகள் ஊடாக நம்மை நன்மைகள் வந்தடையாமைக்கு அடிப்படையில் இரண்டு முக்கிய காரணங்கள் இருந்தன. அவையாவன:

1. தென்னாசியாவினதும் இந்து சமுத்திரப் பிராந்தியத்தினதும் புவிசார் அரசியல் நலன்கள் அடிப்படையில் இந்தியா, அமெரிக்கா, சீனா போன்ற வல்லாண்மைச் சக்திகள் இலங்கைத் தீவினை ஒரே நாடாகப் பேணியவாறு தமது நலன்களை அடைந்த கொள்வதே உசிதமானதாகக் கருதியமை. இது தமிழீழம் என்ற நமது இலட்சியத்திற்கு எதிரான உலக நிலைப்பாட்டுக்கு வழிகோலியது.

2. இலங்கைத் தீவில் ஆயுதப்போராட்டம் ஏதோ ஒரு வழியில் முடிவுக்கு வரவேண்டும் என்பதிலும் அனைத்துலகம் ஒரே கருத்துக்கு வந்திருந்தது. இதனால் தமிழீழ விடுதலைக்கான ஆயுதப்போராட்டத்திற்கும் உலக ஆதரவினை திரட்டுவது சாத்திமற்றதாக இருந்தது. நாம் தற்போது நமது தாயகச் சூழல் கருதியும் அனைத்துலக நிலைமைகளை மதிப்பீடு செய்தும் நமது விடுதலை இலட்சியத்தில் உறுதியாக நின்று கொண்டு போராட்ட வடிவத்தை மாற்றுகிறோம்.

இதன் ஊடாக உலக நலன்களுடன் நமது நலன்கள் முரண்படும் மேற்குறிப்பிட்ட இரு விடயங்களில் ஒன்றினில் முரண்பாட்டைத் தவிர்க்கிறோம். உலகம் தற்போது ஏற்க மறுப்பதற்காக நமது தமிழீழ இலட்சியத்தில் இருந்து நாம் பின்வாங்க முடியாது. வேகமாய் இயங்கிக் கொண்டிருக்கும் உலகில் மாற்றங்கள் நிகழ்ந்து கொண்டேயிருக்கும். இந்த மாற்றங்கள் ஈழத்தழிழ் மக்களின் விடுதலைக்கான கதவுகள் திறக்கப்படுவதற்கான நிலைமைகள் உருவாகுவதற்கான வாய்ப்புக்களையும் கொண்டுவரும்.

இலங்கைத் தீவினை ஒரே நாடாகப் பேணியவாறு தமது நலன்களை அடைந்து கொள்ளும் உலக சக்திகளின் புவிசார் அரசியல் தோல்வியினை அடையும் சூழலும் இந்த மாற்றங்களின் ஊடாக உருவாகும். அப்போது நமக்கான தமிழீழ தேசத்தை நாம் அமைத்துக் கொள்வதற்கான நிலைமைகளும் உருவாகும். இந்த நம்பிக்கையுடன் நமது விடுதலைப் போராட்டத்தை அரசியல் இராஜதந்திரப் பாதையின் ஊடாக நாம் முன்னெடுக்க வேண்டும்.

அரசியல் இராஜதந்திரப் பாதையின் ஊடாக பயணம் செய்வது என்பதும் இலகுவான ஒரு விடயம் அல்ல. பல சவால்களையும் எதிர்கொண்டு மிகுந்த சகிப்புத்தன்மையுடன் மேற்கொள்ள வேண்டிய நீண்ட தூரப் பயணம் இது. இந்தப் பயணத்திற்கு உரிய அரசியல் லேலைத்திட்டம் மிகவும் முக்கியம். இவ்வாறாக அவர் அவ்வறிக்கையில் குறிப்பிட்டிருந்தார்.

இந்தியாவின் முதல் அணு சக்தி நீர்மூழ்கிக் கப்பல்

ins-arihant.jpgஇந்தியா வின்  முதலாவது,  முற்றிலும் உள்நாட்டுத் தொழில்நுட்பத்தில் உருவாக்கப்பட்டுள்ள அணு சக்தியில் இயங்கக் கூடிய, அணு ஆயுதங்களை ஏந்திச் செல்லக் கூடிய ஐஎன்எஸ் அரிஹாந்த் நீர்மூழ்கிக் கப்பலை பிரதமர் மன்மோகன் சிங் இன்று நாட்டுக்கு அர்ப்பணித்து வைத்தார். விசாகப்பட்டனத்தில் இன்று நடந்த இந்த வரலாற்றுச் சிறப்பு வாய்ந்த நிகழ்ச்சியில், பிரதமரின் துணைவியார் குர்சரண் கெளர் நீர்மூழ்கியைத் தொடங்கி வைத்தார்.

பல்வேறு கடல் பரிசோதனைகளுக்குப் பின்னர் இந்த நீர்மூழ்கி கப்பல் கடற்படையில் இணைக்கப்படும். இதேபோல மூன்று கப்பல்களை இந்தியா வடிவமைத்து வருகிறது. அதில் முதல் கப்பல்தான் இன்று தொடங்கி வைக்கப்பட்டுள்ளது.

அரிஹாந்த் நீர்மூழ்கிக் கப்பல் 112 மீட்டர் நீளமுடையது. 6000 டன் எடையுடன் கூடியது. 2 ஆண்டுளுக்கு இது கடல் பரிசோதனைக்கு உட்படுத்தப்படவுள்ளது. அதன் பின்னர் இது கடற்படையில் சேர்க்கப்படும். அணு சக்தி நீர்மூழ்கிக் கப்பலை இந்தியா உருவாக்கி தொடங்கியிருப்பதன் மூலம், இத்தகைய கப்பல்களை வைத்துள்ள அமெரிக்கா, ரஷ்யா, சீனா, பிரான்ஸ், இங்கிலாந்து ஆகிய நாடுகளின் வரிசையில் இந்தியாவும் இணைந்துள்ளது. அணு சக்தியில் இயங்கும் நீர்மூழ்கியைத் தொடங்கியிருப்பதன் மூலம் வான், நிலம் மற்றும் கடல் மார்க்கமாக அணு ஆயுதங்களைக் கையாளக் கூடிய வல்லமையை இந்தியா பெற்றுள்ளது என்பது முக்கியமானது.

அலரிவிதை உண்டு 9 மாணவர்கள் தற்கொலைக்கு முயற்சி; மாணவி மரணம்

images000.jpgஅலரி விதைகளை உட்கொண்டு தற்கொலை செய்ய முயன்ற ஒன்பது மாணவர்களில் ஒரு மாணவி மரணமான சம்பவம் தம்புள்ளை பகுதியில் இடம்பெற்றுள்ளது. தம்புள்ளை பக்கனே கங்கேயாய மகா வித்தியாலயத்தில் கல்வி கற்கும் 10 ஆம் தர மாணவியே இவ்வாறு மரணமடைந்துள்ளார்.

வெள்ளிக்கிழமை இப்பாடசாலைவளவில் வைத்து இவர்கள் அலரி விதைகளை உட்கொண்டதாக பொலிஸ் விசாரணைகள் மூலம் தெரியவந்துள்ளது.  ஒரு மாணவி வாந்தியெடுத்து பொலநறுவை ஆஸ்பத்திரியில் அனுமதிக்கப்பட்டார். அதன் போது தன்னுடன் சேர்ந்து அலரி விதைகளை உண்ட ஏனைய மாணவர்களின் விபரத்தை அவர் வெளியிட்டார்.

பொலநறுவை ஆஸ்பத்திரி நிர்வாகம் இது தொடர்பாக பொலநறுவை பொலிஸாருக்கு தகவல் கொடுத்ததையடுத்து பொலிஸார் ஏனைய மாணவர்களின் வீடுகளுக்குச் சென்று அவர்களின் பெற்றோருக்கு சம்பவத்தைக் கூறினார்கள். இதனையடுத்த மூன்று மாணவர்களும் ஐந்து மாணவிகளும் தம்புள்ளை ஆஸ்பத்திரியில், அனுமதிக்கப்பட்டனர்.

இதேவேளை, பொலநறுவை ஆஸ்பத்திரியில் அனுமதிக்கப்பட்ட மாணவியின் நிலைமை மோசமாகவே அவர் கண்டி ஆஸ்பத்திரிக்கு மாற்றப்பட்டு சிறிது நேரத்தில் உயிரிழந்தார். தம்புள்ளை ஆஸ்பத்திரியில் அனுமதிக்கப்பட்ட எட்டு மாணவர்களில் இருவர் பின்னர் கண்டி ஆஸ்பத்திரிக்கு மாற்றப்பட்டனர்.

ஆறு மாணவிகளின் பெயர்கள் எழுதப்பட்ட பிறந்த தின வாழ்த்து அட்டைகள் மாணவன் ஒருவரின் புத்தகத்தில் இருந்து ஆசிரியரால் கண்டெடுக்கப்பட்ட சம்பவத்தையடுத்து திங்கட்கிழமை அதிபரிடம் இதனைக் கூறப்போவதாக ஆசிரியர் எச்சரித்ததே இவர்களின் தற்கொலை முயற்சிக்கு காரணமென்று பொலிஸ் விசாரணைகள் மூலம் தெரியவந்துள்ளது.

இலங்கைக்கு 2.6 பில்லியன் டொலர் கடன் வழங்க நாணய நிதியம் அங்கீகாரம்

050709imf_.jpgஇலங்கைக்கு 2.6 பில்லியன் டொலர் கடனை வழங்க சர்வதேச நாணய நிதியம் முடிவு செய்துள்ளது. நிதியத்தின் நிறைவேற்றுப் பணிப்பாளர் சபை இதற்கான அங்கீகாரத்தை நேற்று வழங்கியுள்ளது. முதல் தவணையாக 320 மில்லியன் டாலர்களை இலங்கை உடனடியாகப் பெற முடியும் என்றும், அடுத்த கட்ட கொடுப்பனவுகள், ஒவ்வொரு காலாண்டிலும் மேற்கொள்ளப்படும் மீளாய்வுகளின் அடிப்படையில் வழங்கப்படும் என்றும், சர்வதேச நாணய நிதியம் கூறியுள்ளது.

நாட்டின் பொருளாதார மறுசீரமைப்புக்கு உதவி புரிந்து பொருளாதார நிலையை வலுப்படுத் தும் முகமாக இலங்கைக்கு இந்தக் கடன் வழங்கப்படுவதாக சர்வதேச நாணய நிதியம் விடுத்துள்ள ஊடக அறிக்கையில் தெரிவிக்கப்பட்டுள்ளது.

நாணய நிதியத்திடமிருந்து 1.9 பில்லியன் டொலர் கடனைப் பெறுவதற்கு அரசாங்கம் கடந்த மார்ச் மாதம் பேச்சுவார்த்தைகளை ஆரம்பித்தது. இதனையடுத்து 2.5 பில்லியன் டொலராகக் கடனை அதிகரித்து வழங்குவதெனக் கடந்த வாரம் அறிவித்திருந்தது. இந்நிலையில், நேற்று முன்தினம் வொஷிங்டனில் கூடிய சர்வதேச நாணய நிதியத்தின் நிறைவேற்றுப் பணிப்பாளர் சபை, 2.6 பில்லியன் டொலர் கடனை வழங்க அங்கீகரித்துள்ளது.

இது தொடர்பான உத்தியோகபூர்வ அறிவித்தல் இலங்கை நேரப்படி நேற்று (25) அதிகாலை வெளியானது. இலங்கைக்கு இந்தக் கடனை வழங்குவது தொடர்பாக நிறைவேற்றுச் சபைக் கூட்டத்தில் கருத்துத் தெரிவித்த நிதியத்தின் பிரதி முகாமைத்துவப் பணிப்பாளரும், பதில் தலைவருமான டக்காரொஷி கட்டா, உலகப் பொருளாதார நெருக்கடி இலங்கையின் பொருளாதாரத்தில் குறிப்பிடத்தக்க தாக்கத்தை ஏற்படுத்தியதாகவும், அதிலிருந்து மீள்வதற்கு இந்தக் கடன் உறுதுணை புரியுமென்றும் தெரிவித்துள்ளார்.

யுத்தத்திற்குப் பின்னரான மறுசீரமைப்புப் பணிகளுக்கும் நிவாரணங்களுக்குமான வளங்களைப் பெற்றுக் கொள்ளவும், சர்வதேச கையிருப்பை மீளக்கட்டியெழுப்பி இலங்கையின் உள்ளகப் பொருளாதார முறைமையை வலுப்படுத்தவும் இந்தக் கடன் ஏதுவாக அமையுமென்றும் அவர் தெரிவித்துள்ளார்.

இதேவேளை, சர்வதேச நாணய நிதியம் இலங்கைக்குக் கடன் வழங்கியமை நல்ல விளைவுகளை ஏற்படுத்தும் என்று பொருளாதார நிபுணர்கள் தெரிவித்துள்ளனர். இந்தக் கடன் இலங்கையின் பொருளாதார மீட்சிக்கும், மேம்பாட்டுக்கும் வழிவகுக்குமென கொழும்பு பல்கலைக்கழகத்தின் பொருளாதார விரிவுரையாளர் அமிர்தலிங்கம் தெரிவித்தார். இதன்மூலம் நடைமுறைக் கணக்கின் பற்றாக்குறை நிவர்த்தியாக செல்மதி நிலுவை உறுதியாக்கப்படுமென்று அவர் சுட்டிக்காட்டினார்

விடுதலைப்புலிகளை தோற்கடித்த அரசாங்கப் படைகளின் அண்மைய தாக்குதல்களின் போது எழுந்துள்ள மனிதாபிமான அதிருப்திகளை முன்வைத்து, சர்வதேச நாணய நிதியத்தின் நிர்வாக சபையின் இந்த முடிவை ஆதரிக்க பிரிட்டனும், அமெரிக்காவும் மறுத்து விட்டன.

நாணய நிதிய வாக்கெடுப்பில் பிரிட்டன் கலந்துகொள்ளவில்லை

இலங்கைக்கு 2.6 பில்லியன் டொலர் கடனை வழங்க சர்வதேச நாணய நிதியம் வெள்ளிக்கிழமை இரவு அங்கீகாரம் வழங்கியிருக்கும் அதேசமயம், இது தொடர்பான வாக்கெடுப்பில் பிரிட்டன் கலந்துகொள்ளவில்லை. நாணய நிதிய நிகழ்ச்சித்திட்டம் வெற்றியடைவதற்கு இலங்கையின் அரசியல் சூழ்நிலை நெருக்கடியானதாக இருப்பதாக பிரிட்டனின் நிதியமைச்சர் ஸ்ரீபன் ரிம்ஸ் பாராளுமன்ற உறுப்பினர்களுக்கு எழுதிய கடிதத்தில் குறிப்பிட்டிருந்ததுடன், முகாம்களில் உள்ள அகதிகள் தொடர்பாகவும் கவலையை வெளிப்படுத்தி இருந்ததாக லண்டன் ரைம்ஸ் பத்திரிகை நேற்று சனிக்கிழமை தெரிவித்திருந்தது.

சமூக மற்றும் மீள் கட்டுமான நடவடிக்கைகளுக்காக அனுசரணையான இந்தக்கடன் வழங்கும் திட்டமானது இராணுவ பலவீன ஒதுக்கீட்டிற்கு உள்ளடக்கப்படுகின்றதா என்பதை பிரிட்டன் கவனிக்கும் என்று பிரிட்டிஷ் அரசாங்க வட்டாரங்களை மேற்கோள்காட்டி “ரைம்ஸ்’ பத்திரிகை தெரிவித்துள்ளது.

அத்துடன் அகதிமுகாம்களுக்கு இந்த நிதியை செலவிடுமாறும் பிரிட்டன் அழைப்பு விடுத்திருப்பதாக அந்த வட்டாரங்கள் தெரிவித்துள்ளன. சர்வதேச நாணய நிதியத்தின் நிறைவேற்றுச் சபையில் 5 சதவீத வாக்களிக்கும் உரிமையை பிரிட்டன் கொண்டுள்ளது. 51 சதவீதமான வாக்குகள் கிடைத்தால் பிரேரணையை நிறைவேற்று சபை நிறைவேற்ற முடியும். ஆனால், யுத்தம் முடிவடைந்துள்ளதால் சமாதானத்தை இலங்கை எட்டமுடியுமென்று சர்வதேச நாணய நிதியமும் வெளிநாட்டு முதலீட்டாளர்களும் நம்புகின்றனர்.

இலங்கை மற்றும் தமிழர்களுக்கான சர்வகட்சி பாராளுமன்றக் குழுவுக்கு நிதியமைச்சர் ஸ்ரீபன் ரிம்ஸ் எழுதியுள்ள கடிதத்தில்,”சர்வதேச நாணய நிதியத்தின் ஏற்பாட்டிற்கு பிரிட்டன் ஆதரவு வழங்கவில்லை. இந்தத்திட்டத்தை முன்னெடுப்பதற்கு இது பொருத்தமான நேரம் அல்ல என்று பிரிட்டன் கருதுகிறது. சமூகங்களுக்கிடையில் நல்லிணக்கத்தை ஏற்படுத்துவதன் ஊடாக இலங்கை நீண்டகால சமாதானம், சுபிட்சத்தை ஏற்படுத்த வேண்டுமென பிரிட்டன் விரும்புகிறது. ஆயினும் முகாம்களில் உள்ள இடம்பெயர்ந்த மக்களின் மனிதாபிமான நிலைவரம் தொடர்பாக தொடர்ந்தும் நாம் கவலையடைத்துள்ளோம். இடம்பெயர்ந்த மக்களின் சுதந்திர நடமாட்டம் அவசியமானதாகும். இடம்பெயர்ந்த மக்களை மீளக்குயமர்த்தும் விரிவான நடவடிக்கைகளை மேம்படுத்த வேண்டுமென்று ஐ.நா. அண்மையில் விடுத்திருக்கும் கோரிக்கைக்கு நாம் ஆதரவளிக்கிறோம். சாத்தியமான அளவுக்கு அந்த மக்கள் வீடுகளுக்கு திரும்பிச் செல்ல இடமளிக்க வேண்டும். இதனைத் தாமதமின்றி நடை முறைப்படுத்துமாறு அரசாங்கத்தை நாம் வலியுறுத்துகிறோம்.

இதன் அடிப்படையில் இலங்கை தற்போதைய அரசியல் நிலைவரம் கடினமானதாக இருப்பதாக நாம் நம்புகிறோம். நிகழ்ச்சித்திட்டத்தை அமுல்படுத்துவதற்கான நிலைமை கடினமானதாக உள்ளது. மனிதாபிமான நிலைவரம் கரிசனைக்குரியதாகத் தொடர்ந்து இருந்துவருகிறது. 180 நாட்களுக்குள் அகதிகள் முகாம்களிலிருந்து தமது சொந்த இடங்களுக்கு திரும்பிச் செல்வார்கள் என்று அளிக்கப்பட்ட உறுதிமொழிக்கிணங்க செயற்படுமாறு அரசாங்கத்தை நாம் வலியுறுத்துகிறோம் என்று ரிம்ஸ் கூறியிருக்கிறார்.

இலங்கை அரசாங்கத்துடனான கடன் விடய நிபந்தனைகளுக்கு சர்வதேச நாணய நிதியம் இணங்கி இருப்பதாக இந்த வாரம் சர்வதேச நாணய நிதியத்தின் முகாமைத்துவப் பணிப்பாளர் டொமினிக் ஸ்ரோர்ஸ்கான் தெரிவித்தார்.

அபிவிருத்தி என்பது கொழும்புக்கு மட்டுமல்ல. வடக்கு, கிழக்கு உட்பட தென்பகுதிக்கும் அது பொருந்தும்- ஜனாதிபதி

mahinda-rajapa.jpg“யுத்தத்தை முடித்து விட்டோம்; இந்த வெற்றியின் மூலம் நாட்டை அபிவிருத்தி செய்வதையே பெரும் வெற்றியாக நான் கருதுகிறேன்” என ஜனாதிபதி மஹிந்த ராஜபக்ஷ கூறினார். அபிவிருத்தி என்பது கொழும்புக்கு மட்டுமல்ல வடக்கு, கிழக்கு உட்பட தென்பகுதிக்கும் அது பொருந்தும் எனவும் ஜனாதிபதி சுட்டிக்காட்டினார்.

கண்டி ஜனாதிபதி மாளிகையில் நேற்று முன்தினம் மாலை ஸ்ரீல.சு.கவினது பதுளைக் கிளை நிர்வாக சபை உறுப்பினர்கள் மற்றும் மகளிர் பிரிவு அணிகள் ஸ்ரீல.சு.கட்சிக்கு அவர்கள் ஆற்றிய அர்ப்பணிப்புக்கு நன்றி பாராட்டும் வகையில் இடம்பெற்ற கூட்டத்தில் கலந்து கொண்டு பேசும் போதே ஜனாதிபதி மஹிந்த ராஜபக்ஷ இவ்வாறு தெரிவித்தார்.

ஜனாதிபதி தொடர்ந்து அங்கு உரையாற்றுகையில், பிரிக்கப்பட்ட இந்த நாட்டை ஒன்றிணைத்து சுதந்திரத்தை மீட்டுத்தர வேண்டுமென எதிர்பார்த்து எமக்கு புள்ளடியிட்டதன் பயனை தாங்கள் தற்போது நன்றாகப் புரிந்திருப்பீர்கள். நாம் இன்று பயங்கரவாதிகளை ஒழித்தும், பயங்கரவாதிகளின் தலைவரையும் ஒழித்து நாட்டில் அனைவரும் அச்சமின்றி வாழும் ஒரு சிறந்த சூழலை ஏற்படுத்தியுள்ளோம் இந்த வெற்றியின் மூலம் நாட்டின் அபிவிருத்தியையே பெரும் வெற்றியாக நான் கருதுகிறேன்.

காலாகாலமாக ஐ.தே.க. உறுப்பினர்கள் பெருமளவில் எம்முடன் இணைந்து கொண்டதற்கான காரணம் நாம் அண்மையில் பெற்றுக் கொண்ட வெற்றியின் காரணமாகும். இந்த நாட்டின் அபிவிருத்தியை நாம் ஒரு போதும் ஓரம்கட்டி விடவில்லை. தீவிரவாதிகளை ஒழித்துக்கட்டும் அச்சந்தர்ப்பத்திலும் கூட நாம் நாட்டின் பல்வேறு அபிவிருத்தி திட்டங்களை மேற்கொண்டு வந்துள்ளோம். யுத்தத்தை காட்டி நாம் எப்போதும் எதையும் காலம் தாழ்த்த முடியாது. தற்போது நாட்டில் சுதந்திரமான ஒரு சூழ்நிலை நிலவியுள்ளதனால் அதிகமான அபிவிருத்திப் பணிகளை மேற்கொள்ளப் பாடுபடுவோம்.

ஆனால், முன்பு அரசியல் செய்தவர், கொத்மலை மற்றும் நுரைச்சோலை மின் திட்டங்களை அரசியல் வாக்குக்கு மட்டும் பயன்படுத்தினர். அரசியலில் தோல்வியை கண்டதும் அதை கைவிட்டுவிடுவார்கள். யுத்த காலத்திலும் கூட நுரைச்சோலை கொத்மலை திட்டங்களைக் கைவிடவில்லை. நாம் ஒரு போதும் வெறும் தேர்தல் வாக்குகளுக்காக மட்டும் அபிவிருத்தித் திட்டங்களை மேற்கொள்ள மாட்டோம்.

யுத்தம் தொடர்பில் பல தலைவர்கள் எமக்கு உதவினார்கள், அதாவது பாதுகாப்பு தொடர்பில் ‘கிடைத்த தலைவரைக் கொண்டு யுத்தத்தை வென்றோம். அது போன்று அபிவிருத்தி தொடர்பிலும் எத்தனையோ பிரதேச, நகர், மாகாண சபை தலைவர்கள் இருக்கின்றனர். இவர்கள் எமக்குக் காட்டும் வழிகள் மூலம் அனைவரும் ஒன்றிணைந்து அபிவிருத்திப் பணிகளை மேற்கொள்ள வேண்டிய காலம் வந்து விட்டது. சுதந்திரக் காற்றை அனுபவிக்கும் நாம் உலகத்திற்கு மீண்டும் ஒரு முறை நினைவுபடுத்த நாம் அனைவரும் ஒன்றுபடுவோம் எனவும் ஜனாதிபதி மேலும் தெரிவித்தார்.

ரணவக்க எம்.பி. காலமானார்

sarath-ranawaka.jpgகளுத்துறை மாவட்ட ஐ.தே. கட்சி பாராளுமன்ற உறுப்பினர் சரத் ரணவக்க நேற்றுக் காலமானார்.  பல மாதகாலமாக நோய்வாய்ப்பட்டிருந்த இவர் ஸ்ரீ ஜயவர்தனபுர ஆஸ்பத்திரியில் காலமானார்.

புளத்சிங்கள, அகலவத்த தொகுதிகளின் ஐ.தே.கட்சி அமைப்பாளராக பதவி வகித்த சரத் ரணவக்க களுத்துறை மாவட்ட பாராளுமன்ற உறுப்பினராக 15 வருடங்களுக்கு மேல் அங்கம் வகித்தார்.

ஈரான் பயணிகள் விமானம் ஓடுபாதை சுவரில் மோதி விபத்து – 17 பேர் பலி

25-iran-plane-crash.jpgஈரானில் பயணிகள் விமானம் ஒன்று ஓடுபாதையின் சுவற்றில் மோதி தீப்பிடித்து விபத்துக்குள்ளானதில் 17 பேர் பலியானார்கள். ஈரான் தலைநகர் தெஹ்ரானில் இருந்து 153 பயணிகளுடன் மாஷாத்வந்த விமானம் ஒன்று மாஷாத் சர்வதேச விமான நிலையத்தில் தரை இறங்கியது.

எதிர்பாராவிதமாக ஓடு பாதையின் நடுப்பகுதியில் விமானத்தை விமானி தரை இறக்கியதால் குறைந்த தூரமே உள்ள ஓடுபாதையில் வேகமாக சென்ற அந்த விமானம் சுற்றுச்சுவரில் மோதி விபத்துக்குள்ளானது. இதில் விமானத்தின் முன்பகுதி சேதம் அடைந்து தீப்பிடித்தது. அவர்களில் முன்பகுதியில் அமர்ந்திருந்த 17 பேர் விபத்தில் சிக்கி பலியானார்கள். 19 பேர் படுகாயம் அடைந்தனர். விபத்து நடந்ததும் தீயணைப்பு படையினர் விரைந்து சென்று தீயை அணைத்தனர். விமானத்தில் இருந்த மற்ற பயணிகள் மீட்கப்பட்டு பாதுகாப்புடன் வெளியே அழைத்துச் செல்லப்பட்டனர்.

பேருவளை கோஷ்டி மோதலில் மூவர் பலி நிலைமை கட்டுப்பாட்டில்; பலத்த பாதுகாப்பு

beruwela.jpgபேருவளை மஹகொடை பகுதியில் இரு முஸ்லிம் கோஷ்டியினரிடையே ஏற்பட்ட மோதல் நிலை தற்போது தணிந்து அமைதி நிலவுகிறது.

இரு கோஷ்டிகளுக்கிடையே நேற்று அதிகாலை 1.30 அளவில் ஏற்பட்ட மோதலில் மூவர் கொல்லப்பட்டனர். மேலும் 11 பேர் காயமடைந்தனரென பொலிஸார் தெரிவித்தனர். ஆயினும் நிலைமை கட்டுப்பாட்டுக்குள் கொண்டுவரப்பட்டுள்ளதோடு அமைதி நிலவுவதாகவும் பொலிஸார் கூறினர். இப் பகுதியில் கடைகள் திறக்கப்பட்டு வியாபார நடவடிக்கைகள் இடம்பெற்றது. வழமை போல் மக்கள் இப்பகுதிகளில் நடமாடுவதைக் காணக் கூடியதாக இருந்தது.

பைத்துல் முபாரக் முஸ்தபவிய்யா புஹாரித் தக்கியா, தீவைத்து கொளுத்தப்பட்ட மஸ்ஜிதுர் ரஹ்மான் பள்ளிவாசல் பகுதிகளில் விசேட அதிரடிப் படையினரும், இராணுவத்தினரும் பொலிஸாரும் இணைந்து பாதுகாப்புக் கடமையில் ஈடுபட்டிருந்தனர். அமைதியைப் பேணுமாறு இரு குழுக்களிடையேயும் முக்கிய பிரமுகர்கள் வேண்டுகோள் விடுத்துள்ளனர்.

பள்ளிவாசல் வளவில் நிறுத்தி வைக்கப்பட்டிருந்த மோட்டார் சைக்கிள்கள், துவிச்சக்கர வண்டிகளும் தீயினால் எரிந்து நாசமாகியுள்ளன. பேருவளை பொலிஸார் மேலதிக புலன் விசாரணைகளை மேற்கொண்டுள்ளனர்.

யாழ்.பயணிகளின் போக்குவரத்திற்காக பஸ்ரயில் இணைப்புச் சேவைக்கு கோரிக்கை

bussss.jpgகொழும் பிலிருந்து காங்கேசன்துறை வரை யாழ்தேவி புகையிரத சேவையை ஆரம்பிக்கும் வரை, யாழ்ப்பாணத்திலிருந்து தாண்டிக்குளம் வரை பஸ் போக்குவரத்தையும் தாண்டிக்குளத்திலிருந்து கொழும்புக்கு ரயில் போக்குவரத்தையும் ஏற்பாடு செய்ய வேண்டுமென யாழ்ப்பாணம் மேல் நீதி மன்ற நீதிபதி த. விக்னராஜா ஜனாதிபதியின் சிரேஷ்ட ஆலோசகரும் அமைச்சருமான பசில் ராஜபக்ஷவிடம் கோரிக்கை விடுத்துள்ளனர்.

யாழ். பொது நூலகத்தில் புதன்கிழமை இடம்பெற்ற, வடக்கின் வசந்தம் மீளாய்வு கூட்டத்தின்போதே நீதிபதி த.விக்னராஜா இவ்வாறு தெரிவித்தார். அவர் அங்கு மேலும் பேசுகையில்;

இன்று ஆரம்பித்து வைக்கப்பட்டுள்ள ஏ9 வீதி ஊடான தரைவழிப் போக்குவரத்து யாழ்ப்பாணத்திலிருந்து மதவாச்சி வரை பஸ் போக்குவரத்தை நடத்தி தாண்டிக்குளத்திற்கு அப்பால் யாழ்தேவி புகையிரதச் சேவை மேற்கொள்ளப்படவுள்ளது. இந்தப்பொது மக்கள் போக்குவரத்தை இலகுபடுத்துவதற்கு யாழ்ப்பாணத்திலிருந்து தாண்டிக்குளம் வரை அப்பால் யாழ்தேவி புகையிரத சேவையை மேற்கொள்ள நடவடிக்கை எடுக்கப்பட வேண்டும். அதுபோல் கொழும்பிலிருந்து யாழ்.வருபவர்கள் தாண்டிக்குளத்திலிருந்து பஸ் போக்குவரத்தை மேற்கொள்வதற்கு நடவடிக்கை எடுத்தல் வேண்டும்.

தற்பொழுது நடைமுறையில் பயணிகள் அனுமதிப்பத்திரம் பெறும் முறை இலகுபடுத்தப்பட வேண்டும்.  அதற்காக முன்னாள் யாழ்.மாவட்ட இராணுவக் கட்டளைத் தளபதி சந்திரசிறி முன்னர் மேற்கொண்டிருந்த யாழ். மாவட்ட மக்களுக்கான விசேட இராணுவ அடையாள அட்டையைத் தற்பொழுது வழங்கி அதன் மூலம் போக்குவரத்தை இலகு படுத்த வேண்டுமெனத் தெரிவித்தார்.

யாழ். மேல் நீதிமன்றில் சட்டத்தரணிகள் அலுவலகம் ஒன்று அமைக்கவும் நீதி மன்றத்திற்கான கேட்போர் கூடம் சட்டத்தரணிகள் வாகனத்தரிப்பிடம் என்பனவற்றையும் அமைத்துத் தரவேண்டும் என்ற மகஜர் ஒன்றை மேல் நீதிமன்ற சட்டத்தரணிகள் சங்கம் சார்பில் பசில் ராஜபக்ஷவிடம் நீதிபதி த.விக்னராஜா கையளித்துள்ளார்.