July

July

கிளிநொச்சியில் 3050 குடும்பங்கள் ஆகஸ்ட்15 இல் முதற்கட்ட மீள் குடியேற்றம்

north-governor.jpgகிளிநொச்சி மாவட்டத்தில் உள்ள ஏழு கிராம சேவகர் பிரிவுகளில் 3050 குடும்பங்களைச் சேர்ந்த பதினையாயிரம் பேர் (15,000) ஆகஸ்ட் மாதம் 15ம் திகதி முதற்கட்டமாக மீளக் குடியமர்த்தப்படுவார்கள் என்று கிளிநொச்சி அரசாங்க அதிபர் நா. வேதநாயகன் நேற்றுத் தெரிவித்தார்.

பூநகரி உதவி அரசாங்க அதிபர் பிரிவில் உள்ள முழங்காவில், நாச்சிகுடா கிராம சேவகர் பிரிவுகளில் 1350 குடும்பங்களைச் சேர்ந்த ஐயாயிரம் பேரும், கரச்சி உதவி அரசாங்க அதிபர் பிரிவில் உள்ள ஜெயந்திநகர், புதுமுறிப்பு, கனகபுரம், கிருஷ்ணபுரம், உருத்திரபுரம் கிழக்கு ஆகிய கிராம சேவகர்களில் 2700 குடும்பங்களைச் சேர்ந்த பத்தாயிரம் பேரும் மீளக்குடியமர்த்தப் படவிருப்பதாகவும் அவர் கூறினார்.

இக்கிராமங்களில் மீள்குடியேற்றத்தை மேற்கொள்ளவென உட்கட்டமைப்பு வசதிகளை மேம்படுத்தும் பணிகள் துரிதப்படுத்தப்பட்டிருப்பதாகவும் அவர் குறிப்பிட்டார்.

இதேவேளை வடமாகாண ஆளுநர் மேஜர் ஜெனரல் ஜி.ஏ. சந்திரசிறி தலைமையில் நேற்று நடைபெற்ற உயர் மட்ட கூட்டத்தில் வவுனியா மாவட்டத்தில் உள்ள 35 கிராமங் களில் ஆகஸ்ட் மாதம் 7ம் திகதி முதற் கட்ட மீள்குடியேற்றத்தை மேற்கொள்ளத் தீர்மானிக்கப்பட்டுள்ளது.

இத்தீர்மானத்திற்கு அமைய வவுனியா உதவி அரசாங்க அதிபர் பிரிவில் 18 கிராமங்களிலும், வெங்கள செட்டிக்குளம் உதவி அரசாங்க அதிபர் பிரிவில் 12 கிராமங்களிலும் வவுனியா தெற்கு உதவி அரசாங்க அதிபர் பிரிவில் 5 கிராமங்களிலும் இம் மீள் குடியேற்றம் மேற்கொள்ளப்படவிருப்பதாக வவுனியா கச்சேரி அதிகாரியொருவர் குறிப்பிட்டார்.

இம்மீள்குடியேற்றத்தின் நிமித்தம் உட்கட்டமைப்பு வசதிகளை மேம் படுத்தும் நடவடிக்கைகள் துரிதப்படுத்தப் பட்டிருப்பதாகவும் அவர் கூறினார்.

‘அயலகத் தமிழறிஞர்கள்” – இலங்கைத் தமிழறிஞர்களின் வாழ்க்கை வரலாறு

ilnco.jpgஇலங்கைத் தமிழறிஞர்களின் வாழ்க்கை வரலாறு இடம்பெற்றுள்ள ‘அயலகத் தமிழறிஞர்கள்” என்ற தலைப்பில் தமிழக அறிஞர் முனைவர் மு.இளங்கோவன் அவர்கள் எழுதிய இந்த நூல் ஆகஸ்ட் மாதம் முதல் வாரத்தில் வெளிவர உள்ளது.

இலங்கைத் தமிழறிஞர்கள் தனிநாயகம் அடிகளார், க.சிவத்தம்பி, கா.கைலாசபதி, ஈழத்துப்பூராடனார் (செல்வராசகோபால்),  சி.மௌனகுரு, அ.சண்முகதாசு, எம்.ஏ.நுஃமான், சுப்பிரமணியன், ஆ.வேலுப்பிள்ளை உள்ளிட்டோர் வாழ்க்கை வரலாறு இடம் பெற்றுள்ள அயலகத் தமிழறிஞர்கள் என்னும் தலைப்பிலான நூல் தமிழ்நாட்டில் வெளிவர உள்ளது. 200 பக்கம் அளவில் அயலகத் தமிழறிஞர்கள் என்ற தலைப்பில் முனைவர் மு.இளங்கோவன் அவர்கள் இந்த நூலை எழுதியுள்ளார். 

ayalaka.jpgதமிழகத்தில் வெளிவரும் தமிழ் ஓசை நாளிதழில் ஞாயிறுதோறும் வெளிவந்த களஞ்சியம் பதிப்பில் ஆறு மாதங்களாக அயலகத் தமிழறிஞர்கள் என்ற தலைப்பில் ஒரு தொடர் வெளியானது. அதில் 30 அயலகத் தமிழறிஞர்களின் வாழ்க்கை வரலாறு, தமிழ் இலக்கியப்பணிகள் இடம்பெற்றிருந்தது. கால்டுவெல், போப் அடிகளார், தனிநாயகம் அடிகளார், அ.கி.இராமனுசன்,  கமில் சுவலபில், க.கைலாசபதி, கா.சிவத்தம்பி, அலெக்சாண்டர் துபியான்சுகி,  தாமசு லேமான், சுப.திண்ணப்பன், ஆ.இரா.சிவகுமாரன், முரசு.நெடுமாறன் உள்ளிட்ட முப்பது தமிழுக்கு உழைத்த அறிஞர்களின் வாழ்க்கை வரலாறு இடம்பெற்றுள்ளது.

தமிழகத்தில் இந்தத் தொடர் அறிஞர்களிடையே நல்ல வரவேற்பைப் பெற்றது. இந்தத் தொடரில் இடம்பெற்ற கட்டுரைகள் இணையத்தில் வெளிவந்ததால் உலக அளவில் இந்தத்தொடருக்கு ஆதரவு இருந்தது. தொடர் நிறைவு பெற்றதும் வயல்வெளிப் பதிப்பகத்தின் சார்பில் இந்த நூல் வெளிவர உள்ளது. தமிழக விலை 200 ரூபாவாகும்.

முனைவர் மு இளங்கோவன் எழுதிய இணையம் கற்போம் என்ற நூலும் அதேநாளில் வெளிவர உள்ளது. இணையத் தமிழறிஞர் பட்டம் பெற்ற முனைவர் மு. இளங்கோவன் தமிழறிஞர்களின் வாழ்க்கை, கலை, இலக்கியம், கல்வெட்டு, சிற்பம் குறித்து தொடர்ந்து இணையத்தில் எழுதி வருபவர். தமிழ் இணையப் பயிலரங்கைத் தமிழகம் முழுவதும் நடத்தி தமிழ் மாணவர்களுக்கு இணையம் குறித்த விழிப்புணர்ச்சியை ஏற்படுத்தி வருபவர். தமிழ்த்தட்டச்சு, மின்னஞ்சல்,  வலைப்பூ உருவாக்கம், விக்கிப்பீடியாவில் எழுதுதல், மின்னிதழ்கள் உள்ளிட்ட துறை பற்றி எழுதிய பதினைந்து கட்டுரைகள் இந்த நூலில் இடம்பெற்றுள்ளன.112 பக்கம் அளவுள்ள இந்த நூலின் தமிழக விலை 100 ரூபாவாகும். 

நூல் ஆசிரியரிடம் தொடர்புகொள்ள பின்வரும் மின்னஞ்சல் முகவரியைப் பயன்படுத்தலாம்

.muelangovan@gmail.com
 

காந்தி தங்கியிருந்த தென்னாப்பிரிக்க வீடு விற்பனைக்கு?

gandhi.jpgதென்னா பிரிக்காவில் மகாத்மா காந்தி தங்கியிருந்த வீடு தற்போது விற்பனைக்கு வந்துள்ளது. இந்த வீட்டில் மகாத்மா காந்தி 3 ஆண்டுகள் தங்கியிருந்தார். இந்த வீடு விற்பனை செய்வதற்கான அறிவிப்பு வெளியாகியும்,  இதை வாங்க யாரும் ஆர்வம் காட்டவில்லை. தென்னாப்பிரிக்காவில் வாழும் இந்தியர்களில் சிலர் மட்டுமே சிறிதளவு ஆர்வம் காட்டி வருகின்றனர்.

ஜோகன்னஸ்பர்க்கின் வடக்குப் பகுதியில் அமைந்துள்ள இந்த வீடு மரங்கள் சுழ கட்டப்பட்டுள்ளது. மகாத்மா காந்திக்கு மிகவும் நம்பிக்கைக்கு உரியவராயிருந்த ஹெர்மான் காலின்பாக் இந்த வீட்டை வடிவமைத்துள்ளார். மேற்கூரை வேயப்பட்ட இந்த வீட்டில் 1908-ம் ஆண்டிலிருந்து காந்தி மூன்று ஆண்டுகள் தங்கியிருந்தார். இந்த வீட்டின் உரிமையாளர் நான்சி பால் கடந்த 25 ஆண்டுகளாக இதில் வசித்து வந்தார். இவர் தற்போது கேப்டவுனுக்கு குடிபெயரத் திட்டமிட்டுள்ளார்.

பிரசித்தி பெற்ற இந்த வீட்டை வாங்க யாரும் ஆர்வம் காட்டாததால் அவர் விளம்பரம் கொடுத்து இதை விற்க முடிவு செய்துள்ளார் என்று அங்கிருந்து வெளியாகும் செய்திகள் தெரிவிக்கின்றன. இருப்பினும் இந்த வீட்டின் விலையை அவர் தெரிவிக்கவில்லை இதனிடையே விட்வாட்டர்ஸ்ராண்ட் பல்கலைக் கழகத்தின் இந்திய கல்வி குறித்த பிரிவை உருவாக்கிய ஸ்டீபன் கெல்ஃபின் உதவியை நான்சி பால் நாடியுள்ளார்.

இந்த வீட்டை வாங்கக் கூடிய இந்தியர்களை தேடி வருகிறார் ஸ்டீபன் கெல்ஃப். இந்த வீட்டை வாங்கி இங்கு வரும் பேராசிரியர்கள் தங்கிச் செல்லும் இல்லமாக இதை மாற்றுவது குறித்தும் அவர் ஆராய்ந்து வருகிறார். தென்னாப்பிரிக்காவில் ஜோகன்னஸ்பர்க்கில் மற்றொரு இடமும் மிகவும் பிரபலமானது. இங்குள்ள காந்தி பண்ணையில்தான் தனது ஆதரவாளர்களுடன் சத்யாகிரஹத்தை அவர் போதித்தார்.

தொடக்கத்தில் டர்பனின் வட பகுதியில்தான் மகாத்மா காந்தியின் ஆதரவாளர்கள் பலரும் குடியேறினர். இங்குதான் சத்யாக்கிரஹத்தை அவர் போதித்தார். பின்னரே அவர் தனது போராட்டத்தை இனவெறிக்கெதிரான போராட்டமாக மாற்றினார். 1800 மற்றும் 1900-ம் ஆண்டுகளில் அவர் நடத்திய போராட்டத்தின் விளைவு இன்றும் நினைவு கூரப்படுகிறது. பல நிறுவனங்களும்,  தெருக்களும் காந்தியின் பெயரை தாங்கி நிற்கின்றன.

மகாத்மா காந்தி பயன்படுத்திய பொருள்கள் சமீபத்தில் லண்டனில் ஏலத்துக்கு வந்தது. அதை இந்தியாவைச் சேர்ந்த தொழிலதிபர் விஜய் மல்லையா பெரும் தொகை கொடுத்து வாங்கி அரசிடம் ஒப்படைத்தார். தற்போது காந்தி வசித்த வீடு விற்பனைக்கு உள்ளது.

எலிக்காய்ச்சல் தடுப்பு பக்ரீறியாவை வழங்க கியூபா முன்வருகை

இலங்கையில் டெங்கு நோய் தடுப்புக்கு பி.ரி.ஐ. பக்ரீறியாவை வழங்க உடன்பட்டிருப்பது போல், எலிக் காய்ச்சல் தடுப்புக்கான பக்ரீறியா ஒன்றை வழங்கவும் கியூபா முன்வந்திருப்பதாக சுகாதார அமைச்சு தெரிவிக்கிறது. சுகாதார அமைச்சர் நிமால் சிறிபால டி சில்வா, இலங்கையிலுள்ள கியூபா தூதுவர் மூலம் விடுத்த வேண்டுகோளுக்கு இணங்கவே கியூபா இதற்கு இணக்கம் தெரிவித்திருப்பதாக சுகாதார அமைச்சின் பேச்சாளர் டபிள்யூ.எம்.டி. வன்னிநாயக்க தெரிவித்தார்.

இதேநேரம், இவ்வருட ஆரம்பம் தொடக்கம் இதுவரை எலிக் காய்ச்சலினால் 70 பேர் வரை உயிரிழந்துள்ளதுடன், 1,500 பேர் வரை அக் காய்ச்சலினால் பாதிக்கப்பட்டவர்களென இனங் காணப்பட்டிருப்பதாகவும் அவர் கூறினார். அத்துடன், டெங்கு ஒழிப்புக்கு இலங்கையில் பி.ரி.ஐ. பக்ரீறியாக்களை பயன்படுத்துவதற்கு இருக்கும் சாத்தியக் கூறுகள் பற்றி ஆராய்ச்சி செய்வதற்கென அண்மையில் இலங்கை வந்த கியூபா நாட்டு நிபுணர்கள் இருவரும் தற்போது அம்பாந்தோட்டையில் தங்களது நடவடிக்கைகளில் ஈடுபட்டு வருவதுடன், நாளை புதன்கிழமை முதல் அவர்கள் கண்டி செல்லவிருப்பதாகவும் வன்னிநாயக்க குறிப்பிட்டார்.

நாட்டின் 13 மாவட்டங்களில் டெங்கு தொற்று அதிகமாக காணப்படுகின்ற போதிலும், முதற்கட்டமாக அம்பாந்தோட்டை மற்றும் கண்டி மாவட்டங்களை அடிப்படையாகக் கொண்டே பரிசோதனைகள் நடத்தப்படுவதாகவும், பரிசோதனைகளின் இறுதியில் கியூப நாட்டு நிபுணர்களால் சுகாதார அமைச்சுக்கு அறிக்கையொன்று சமர்ப்பிக்கப்படவிருப்பதாகவும் அவர் தெரிவித்தார்.

அந்த அறிக்கையின் பிரகாரமே இலங்கையில் டெங்கு ஒழிப்புக்கு பி.ரி.ஐ. பக்ரீறியாவை பயன்படுத்துவது பற்றி இறுதித் தீர்மானம் எடுக்கப்படுமென்று கூறிய வன்னிநாயக்க, ஜனவரி மாதம் முதல் இதுவரை டெங்கினால் 208 பேர் உயிரிழந்துள்ளதுடன், 19 ஆயிரத்திற்கும் மேற்பட்டவர்கள் பாதிக்கப்பட்டு சிகிச்சை பெற்றிருப்பதாகவும் தெரிவித்தார்.

பஹ்ரேன் பிரதமர் தலைமையில் உயர்மட்ட குழு இலங்கை வருகை – விமான நிலையத்தில் செங்கம்பள வரவேற்பு

kalifa-shik-binsalman.jpgபஹ்ரேன் பிரதமர், பிரதிப் பிரதமர் உட்பட உயர்மட்டக் குழுவினர் நேற்று மாலை இலங்கை வந்தனர். கட்டுநாயக்க சர்வதேச விமான நிலையத்தில் வைத்து அந்நாட்டின் பிரதமர் செய்க் கலிபா பின் சல்மான் அல்- கலிபா மற்றும் பிரதிப் பிரதமர் செய்க் மொஹமட் பின் முபாரக் அல்-கலிபா ஆகியோருக்கு இராணுவ அணிவகுப்பு மரியாதையுடன் கூடிய செங்கம்பள வரவேற்பு அளிக்கப்பட்டது.

இலங்கை வந்திருக்கும் பஹ்ரேன் பிரதமர், பிரதிப் பிரதமர் உள்ளிட்ட குழுவினர் நேற்று மாலை கொழும்பு ஹில்டன் ஹோட்டலில் வெளிவிவகார அமைச்சர் ரோஹித்த போகொல்லாகமவை சந்தித்து இரு தரப்புப் பேச்சுவார்த்தை நடத்தினர். பயங்கரவாதத்தை முற்றாக ஒழித்து நாட்டில் அமைதி நிலைநாட்டியிருப்பதற்காக ஜனாதிபதி மஹிந்த ராஜபக்ஷவுக்கு, இலங்கை வந்திருக்கும் பஹ்ரேன் பிரதமர் வாழ்த்துக்களை இச்சந்தர்ப்பத்தில் தெரிவித்துக் கொண்டதாக அமைச்சர் போகொல்லாகம கூறினார்.

சந்திப்பையடுத்து வெளிவிவகார அமைச்சர் செய்தியாளர்களுக்கு விளக்கமளிக்கையில் கூறியதாவது :- இடம்யெர்ந்துள்ளவர்களை மீளக் குடியமர்த்துவதற்கு பஹ்ரேன் அரசாங்கம் முழுமையான ஒத்துழைப்பை பெற்றுத்தருமென அந்நாட்டின் பிரதமர் உறுதியளித்தார்.

அரசாங்கத்தின் 180 நாள் வேலைத்திட்டம் தொடர்பாக நான் அவர்களிடம் விளக்கிக் கூறினேன். அதனை நன்கு புரிந்துகொண்டதாக கூறிய பஹ்ரேன் பிரதமர், அதனை வெற்றிகரமாக செய்து முடிப்பதற்கு அனைத்து வளைகுடா நாடுகளினதும் ஒத்துழைப்பை பெற்று தருவதாகவும் தெரிவித்தார்.

இரு நாடுகளுக்குமிடையில் வர்த்தக மற்றும் பொருளாதாரத்தைக் கட்டியெழுப்புவது குறித்தும் பேச்சுவார்த்தையில் கூடுதல் கவனம் செலுத்தப்பட்டது. பெரும் எண்ணிக்கையான இலங்கையர்கள் பஹ்ரேனில் சேவையாற்றி வருகின்றார்கள். எதிர்காலத்தில் அங்கே சேவையாற்றும் இலங்கையர்களின் எண்ணிக்கையை அதிகரிப்பது தொடர்பாகவும் இந்த சந்திப்பின்போது கலந்தாலோசிக்கப்பட்டது என்றும் வெளிவிவகார அமைச்சர் போகொல்லாகம கூறினார்.

இதேவேளை, பஹ்ரேன் பிரதமர் மற்றும் பிரதிப் பிரதமர் ஆகியோர் இன்று ஜனாதிபதி மஹிந்த ராஜபக்ஷவை சந்தித்து பேச்சுவார்த்தை நடத்தவுள்ளதோடு இருதரப்பு உடன்படிக்கைகளில் கைச்சாத்திடுவர்.

ஆகஸ்ட் 31 இற்கு முன்னர் வெலிஓயாவில் மீள்குடியேற்றம் – பசில் ராஜபக்ஷ தெரிவிப்பு

basil-raja.jpgவெலிஓயா (மணலாறு) பிரதேச செயலாளர் பிரிவைச் சேர்ந்த இடம்பெயர்ந்த மக்களை மீளக்குடியேற்றும் நடவடிக்கைகள் ஆகஸ்ட் 31 இற்கு முன்னர் பூர்த்தியடையுமென்று ஜனாதிபதியின் சிரேஷ்ட ஆலோசகரும் எம்.பி.யுமான பசில் ராஜபக்ஷ கூறியுள்ளார்.

இதற்கிணங்க கல்யாணிபுர, மொரவேவ, கஜபாபுர கிராமங்களிலுள்ள இடம்பெயர்ந்த குடும்பங்கள் மீளக்குடியமர்த்தப்படவிருக்கின்றனர். இந்தப் பகுதிக்கான வீதிக்கட்டமைப்பை நிர்மாணிப்பதற்கு பதவியா பிரதேச சபைக்கு 5 கோடி ரூபா வழங்கப்படும். இதற்கு மேலதிகமாக இந்தக் கிராமங்களிலுள்ள வீதிகள் கமநெகும திட்டத்தின் கீழ் அபிவிருத்தி செய்யப்படும்.

வெலிஓயாப் பகுதியிலுள்ள சகல கிராமங்களுக்கும் மின்சாரம் , நீர்ப்பாசனம், போக்குவரத்து வசதிகள் மேற்கொள்ளப்படும்.  மீள்குடியேற்றம் தொடர்பாக வெலிஓயாவில் ஞாயிற்றுக்கிழமை இடம்பெற்ற கலந்துரையாடலின் போது இந்த விபரங்களை பசில் ராஜபக்ஷ தெரிவித்துள்ளார்.

அந்தப் பகுதியில் கண்ணிவெடி அகற்றும் பணிக்கு முழுமையான ஆதரவை இராணுவத்தின் பொறியியல் பிரிவு வழங்கியுள்ளது. கனகபுர, கஜபாபுர, அதாவெ துணுவௌ கிராமங்களில் கண்ணிவெடியகற்றும் பணிகள் இடம்பெறவுள்ளது. அதாவெதுணுவௌ? நெடுங்கேணி வீதியை நிர்மாணித்துத் தருவதாக பாராளுமன்ற உறுப்பினர் பசில் ராஜபக்ஷ உறுதியளித்துள்ளார்.

இந்திய மாவோயிஸ்ட்டுக்களின் இரகசிய ஆவணத்தில் புலிகள் தொடர்பாக பல குறிப்புகள்

இந்தியாவின் பாதுகாப்புக்குப் பாரிய சவாலாக விளங்குகிறார்களென பிரதமர் மன்மோகன்சிங் தெரிவித்திருந்த மாவோயிஸ்ட்டுக்கள், ஆயுதப் போராட்டம் மற்றும் நாடளாவிய ரீதியில் எதிரிப் படைகளுக்கு கடுமையான இழப்புகளை ஏற்படுத்துவதன் மூலம் அரசியல் அதிகாரத்தைக் கைப்பற்றுவதற்கான துணிச்சலான திட்டத்தைத் தயாரித்துள்ளனர். அதே சமயம், இலங்கையில் விடுதலைப் புலிகள் இல்லாதொழிக்கப்பட்டமை தொடர்பாக பாடம் கற்றுக்கொள்ளுமாறு தமது கெரில்லாக்களுக்கு தடைசெய்யப்பட்டுள்ள இந்திய கம்யூனிஸ்ட் கட்சி மாவோயிஸ்ட்க்கள் கூறியுள்ளதுடன் அளவுக்கு அதிகமாக நம்பிக்கை கொண்டிருக்கவேண்டமெனவும் கூறியுள்ளதாக ஐ.ஏ.என்.எஸ்.செய்திச் சேவையை மேற்கோள்காட்டி “த வீக்’ தெரிவித்திருக்கிறது. மாவோயிஸ்ட்டுக்களின் நிகழ்ச்சித்திட்டமானது 20 பக்க இரகசியக் கொள்கை ஆவணத்தின் பகுதியாக உள்ளது. கடந்த மாதம் மறைவான காட்டுப் பகுதியிலிருந்து மாவோயிஸ்ட்டுக்களின் தலைமைத்துவத்தால் இது தீர்மானிக்கப்பட்டுள்ளது. ஜூன் 12 ஆம் திகதியிடப்பட்ட அந்த ஆவணத்தின் பிரதியை ஐ.ஏ.என்.எஸ்.வைத்திருக்கிறது.

பிரிட்டிஷ் காலனி ஆட்சிக்கு எதிராக இந்தியா நடத்திய அரசியல் அதிகாரத்தைக் கைப்பற்றும் போராட்டத்திலும் பார்க்க இந்திய அரசாங்கத்திற்கு எதிரான புதிய யுத்தமானது “அதிகளவு நீண்டதாகவும் அதிகளவுக்கு கசப்பானதாகவும்’ இருக்கும் என்று மாவோயிஸ்ட்டுக்கள் எச்சரித்துள்ளனர்.

“தேர்தலுக்குப் பின்னரான நிலைவரம், எமது இலக்குகள்’ என்ற இந்த ஆவணம் ஆங்கிலத்தில் உள்ளது. விடுதலைப் புலிகள் அடைந்த பின்னடைவுகளை மனதில் கொண்டு மாற்றம் செய்யப்பட்ட தந்திரோபாயத்துடன் எவ்வாறு, எங்கே தாக்குதல்களை அதிகரிப்பது என்ற திட்டம் மாவோயிஸ்ட்க்களால் வகுக்கப்பட்டுள்ளது.

“உடனடி இலக்குகள்’ என்ற உப தலைப்பின் கீழ் கட்சியும் அதன் ஆயுதக் கிளைகளும் தந்திரோபாயமான பதில்தாக்குதல்களை பல்வேறு வடிவங்களிலான ஆயுத எதிர்ப்பு நடவடிக்கைகளை மேற்கொண்டு எதிர்ச் சக்திகளுக்கு கடுமையான இழப்புகளை ஏற்படுத்த வேண்டிய தேவை பற்றி குறிப்பிடப்பட்டுள்ளது.

பகைவரின் புதிய யுத்தத்தைத் தோற்கடிக்கவும் மக்கள் யுத்தத்தை தக்கவைக்கவும் நாடளாவிய ரீதியில் மக்கள் எழுச்சியை ஏற்படுத்துவது அவசியம் என்று குறிப்பிடப்பட்டுள்ளது.

தண்ட காரண்யம், பிகாரி, ஜார்கண்ட், ஒரிசா, ஆந்திர பிரதேசம், மேற்கு வங்கம், மகாராஷ்டிரா, கர்நாடகா மற்றும் ஏனைய இடங்களில் போராட்டங்களை மேற்கொள்வது பற்றியும் குறிப்பிடப்பட்டுள்ளது.

தண்ட காரண்ய வனமானது சட்டிஸ்கார் மாநிலத்தின் கனியவளம் நிறைந்த பகுதியான பாஸ்தார் பிராந்தியத்தையும் இந்தியாவின் அடர்ந்த காட்டுப்பிரதேசமான அபுஜ்மார் மலைக்குன்று பகுதிகளையும் உள்ளடக்கியதாகும். அங்குதான் மாவோயிஸ்ட்டுக்களின் இராணுவ தலைமையாகமும் தலைவர்களின் மறைவிடங்களும் இருப்பதாக இந்தியப் பொலிஸார் நம்புகின்றனர்.  இந்த ஆவணத்தில் விடுதலைப் புலிகள் பற்றிய பல குறிப்புகள் உள்ளடங்கியிருப்பதாக “த விக்’ தெரிவித்திருக்கிறது.

விடுதலைப்புலிகளின் பின்னடைவானது இந்தியாவிலுள்ள புரட்சிகர இயக்கத்திற்கு எதிர் மறையான விளைவை ஏற்படுத்தியிருப்பதாகவும் அத்துடன் தெற்காசிய மற்றும் முழு உலகுக்குமே எதிர் மறையான தாக்கத்தை ஏற்படுத்தியிருப்பதாகவும் தெரிவிக்கப்பட்டுள்ளது.

இலங்கையில் புலிகளின் தோல்வியால் பெற்ற அனுபவமானது ஆராய்வதற்கும் கற்றுக் கொள்வதற்கும் முக்கியமானதாகும். விடுதலைப்புலிகளின் தவறானது அதன் பகைவரின் தந்திரோபாய மாற்றங்களையும் ஆற்றலையும் ஆய்வு செய்வதிலிருந்த குறைபாட்டையும் எதிராளியை குறைவாக மதிப்பிட்டும் தனது சொந்தப் படையின் ஆற்றலை மிகையாக மதிப்பிட்டிருந்தமையாகும் என்று தெரிவிக்கப்பட்டுள்ளது.

எதிரிப்படைகளுக்கு அதிக நெருக்கடிகளை உருவாக்கும் அதேசமயம் கொரில்லாப் போரை புதிய இடங்களுக்கு விரிவுபடுத்தி பரந்தளவிலான பகுதிகளுக்கு எதிரிப்படையை கலைத்து இருக்க செய்தலும் மாவோயிஸ்ட்டுகளின் திட்டத்தில் உள்ளது.

அதேசமயம் தலைமைத் துவத்தை பாதுகாத்து தேவையற்ற உறுப்பினர்களின் இழப்புகளை தவிர்ப்பது தேவையெனவும் அத்திட்டத்தில் கூறப்பட்டுள்ளது. மேற்கு வங்கத்தின் நக்கல் பாரி கிராமத்தில் 1967 இல் மாவோயிஸ்ட் இயக்கம் ஆரம்பமானது. இங்கு ஆரம்பமானதால் அந்த அமைப்பை சேர்ந்தோர் நக்சலைட்டுக்கள் என்று அழைக்கப்பட்டனர். நூற்றுக்கணக்கான மாவோயிஸ்ட்டுகள் கொல்லபட்டிருக்கின்றபோதும் அவர்கள் பல பகுதிகளில் தொடர்ந்தும் இயங்கிவருகின்றனர்.

யாழ்ப்பாணத்தில் தொழிற்பயிற்சி அதிகார சபையின் அலுவலகம் திறந்து வைப்பு

jaffna1.jpgவடக்கின் வசந்தம் திட்டத்தின் கீழ் இலங்கைத் தொழிற்பயிற்சி அதிகார சபையின் யாழ். மாவட்ட அலுவலகம் நேற்று முன்தினம் திறந்து வைக்கப்பட்டதாக தொழில் மற்றும் தொழில்நுட்பப் பயிற்சி அமைச்சு தெரிவித்துள்ளது.

யாழ்ப்பாணம் காங்கேசன்துறை வீதியில் அமைந்துள்ள தனியார் கட்டிடமொன்றில் அமைக்கப்பட்டுள்ள இந்த அலுவலகத்தை தொழில் மற்றும் தொழில்நுட்பப் பயிற்சி அமைச்சர் பியசேன கமகே திறந்து வைத்தார். இந்நிகழ்வில் சமூக சேவைகள் மற்றும் சமூகநலத்துறை அமைச்சர் டக்ளஸ் தேவானந்தா மற்றும் மேல் மாகாண சபை உறுப்பினர் ரெஜினோல்ட் குரே ஆகியோரும் கலந்துகொண்டனர்.

வடக்கின் வசந்தம் வேலைத் திட்டத்தின் கீழ் தொழிற்பயிற்சி அதிகார சபை யாழ்ப்பாண இளைஞர் யுவதிகளுக்குத் தொழிற்பயிற்சிகளை அளித்து வருவதுடன் தேசிய தகைமையுடைய சான்றிதழ்களையும் வழங்கி வருகின்றது.

நேற்றைய முன்தின நிகழ்வில் தொழிற்பயிற்சிக் கற்கை நெறிகளைப் பூர்த்தி செய்த 140 பேருக்கு சான்றிதழ்கள் வழங்கப்பட்டதுடன் அவர்களில் திறமை காட்டிய 100 பேர் கௌரவிக்கப்பட்டு அவர்களுக்குத் தொழிற் பயிற்சி உபகரணங்கள் வழங்கப்பட்டதாகவும் அமைச்சு மேலும் குறிப்பிடப்பட்டுள்ளது.

இரானில் அஞ்சலிக் கூட்டம் நடத்த எதிர்கட்சிகளுக்கு அனுமதி மறுப்பு

இரானில் கடந்த மாதம் இடம் பெற்ற சர்ச்சைக்குரிய அதிபர் தேர்தலின் முடிவை எதிர்த்து நடைபெற்ற போராட்டங்களில் பலியானவர்களுக்கான நினைவு நிகழ்வை எதிர்கட்சியினர் நடத்துவதற்கு அந்நாட்டின் அரசாங்கம் அனுமதி வழங்க மறுத்துள்ளது.

இது தொடர்பில் தோல்வியடைந்த வேட்பாளர்களான மிர் ஹுசைன் முசவி மற்றும் மெஹ்டி கரூபி ஆகியோரிடமிருந்து வந்த வேண்டுகோள், தேவையான சட்ட திட்டங்களை பூர்த்தி செய்யவில்லை என்று, உள்துறை அமைச்சகம் ஃபார்ஸ் செய்தி நிறுவனத்திடம் தெரிவித்துள்ளது. வியாழக்கிழமை நடைபெறவுள்ள அந்த நினைவு நிகழ்ச்சியின் போது உரையேதும் நிகழ்த்தப்பட மாட்டாது என்று தோல்வியடைந்துள்ள வேட்பாளர்கள் தெரிவித்துள்ளனர்.

இதனிடையே தேர்தலையடுத்து நடைபெற்ற போராட்டங்களின் போது கைது செய்யப்பட்டவர்கள் தடுத்து வைக்கப்பட்டுள்ள முகாமை மூடும்படி நாட்டின் அதியுயர் மதத் தலைவர் உத்தரவிட்டுள்ளார்.

சீனாவில் இரண்டு குழந்தைகள் பெற அனுமதி – ஒரு குழந்தை சட்டத்தில் மாற்றம்

chinaflag.jpgசீனப் பிரஜை ஒருவருக்கு இரண்டு குழந்தைகளைப் பெற்றுக்கொள்ள அனுமதி வழங்கப்பட்டுள்ளது. ஒரு குழந்தைக்கு மேல் பெற்றுக்கொள்ளக்கூடாது,  என்ற சட்டத்தில் சீன அரசு திருத்தம் கொண்டுவந்துள்ளது. அதன்படி இரண்டாவது குழந்தை பெற்று கொள்ள தற்போது அனுமதி வழங்கியுள்ளது.

உலகிலேயே அதிக மக்கள் தொகை கொண்ட நாடு சீனா. தற்போது அங்கு 130 கோடிக்கும் அதிகமான மக்கள் உள்ளனர். வேகமாக வளர்ந்து வரும் மக்கள் தொகையை கட்டுப்படுத்துவதற்காக 30 ஆண்டுகளுக்கு முன்பு, “ஒரு குழந்தை’ திட்டத்தை சீன அரசு சட்டமாக்கியது. தவறி போய் இரண்டாவது குழந்தை உருவானால் கருச்சிதைவு செய்யும் படி பெண்கள் வற்புறுத்தப்பட்டனர்.சீனாவின் இந்த கடும் சட்டம் நல்ல பலன் கொடுத்தது. இதன் விளைவாக தற்போது சீனாவில் இளைஞர்களின் எண்ணிக்கை கணிசமாக குறைந்து விட்டது. வயதானவர்களின் எண்ணிக்கை அதிகரித்து விட்டது.

இதே நிலை நீடித்தால் சீனாவில் ஓய்வூதியம் பெருகின்றவர்களின்; கூட்டமே அதிகரிக்கும் என்றும் தொழிலாளர்களின் எண்ணிக்கை குறைவடையும் என்றும் கருதியே  சீன அரசு தன்னுடைய உத்தரவை மறுபரிசீலனை செய்துள்ளது. சீனாவின் வர்த்தக பகுதியான ஷாங்காயில் 60 வயதுக்கு மேற்பட்டோர் 21 சதவீதத்துக்கும் அதிகமாக உள்ளனர். 2020ம் ஆண்டில் வயதானோர் எண்ணிக்கை 34 சதவீதத்துக்கும் அதிகமாகும்,  என கணக்கிடப்பட்டுள்ளது.