06

06

முள்ளி வாய்க்கால் : விஜி

Nanthi_Kadal_lagoon
புல் வெளியும்
கொஞ்ச மரங்களும்
கொண்ட இடங்களெல்லாம்
முள்ளிவாய்க்காலாய்தான்
கண்முன் விரிகிறது.

கடலின் நினைவு
அச்சம் தருகிறது
அதன் ஓ வென்ற
இரைச்சல்; தாண்டி
மனிதர்களின்
மரண ஓலம் மேலெழுகின்றது!

கடல் அறியுமோ
எங்கள் மனிதர்களின்
கண்ணீரின் உப்பையும்
குருதியின் அடர்த்தியையும்!

எந்தக் குழந்தை
தன் இறுதி மூச்சை
எங்கு நிறுத்தியதோ?
இன்னும் குழந்தைகள்
வழிதவறி அங்கு
அலைந்து திரியுமோ?

நீர்க்கரையில்
பாத்திரங்கள் பண்டங்கள்
சிதறிக் கிடக்கின்றன.
யாருக்காய் அவை காத்திருக்கின்றனவோ?

தனியே தொங்கும்
கைப்பை
சோகமாய் பார்த்திருக்கிறதே
போனவர் எப்போது
திரும்பி வருவாரோ?

புலம்பெயர் தெருக்களில்
இப்போது
சுடு சாம்பல்
காற்றில் மணக்கிறது!
சுற்றிலும்
மரண ஓலம் ஓயாது
துரத்துகிறது!

எந்தக்காலம் இனி
முள்ளிவாய்க்கால்
தன்
கதை பேசும்?

 விஜி

இறுதி ஆட்டத்தில் இந்தியா : சீன ஆதிக்கத்தில் இலங்கை – வீரகேசரி

Indo - Lanka Accordநூற்றாண்டு காலமாக புலம் பெயர்ந்திருந்த ஓரினம், இரண்டாம் உலகப் போருக்குப் பின், தங்களுக்கென்றொரு தாய் திருநாட்டைப் பெற்றதும், அதை எப்படி உலக அரங்கில் முன்னிலைப்படுத்தியிருக்கிறது என்பதை நினைவில் வைத்துக் கொள்ள வேண்டுமென தமிழக எழுத்தாளர் இந்திரா பார்த்தசாரதி கூறியுள்ளார்.

இவர் அழுத்திக் கூறியிருக்கும் விடயம், புலம்பெயர்ந்த ஈழத் தமிழனத்தை நோக்கி, முன்வைக்கப்பட்டிருப்பதாகக் கருதலாம்.சுயநிர்ணய உரிமைக்கான ஆயுதப் போராட்டம் ஒடுக்கப்பட்ட நிலையில், சர்வதேசப் பரப்பெங்கும், அதன் நீட்சியை அசைத்துச் செல்ல வேண்டிய கடப்பாடு, எவ்வாறு மேற்கொள்ளப்படலாமென்பதை வரலாற்றுப் பதிவுகள் உணர்த்துகின்றன.

இத்தகைய களநிலை மாற்றங்களின் பௌதிக தன்மைகளை அவதானிக்கும் அதேவேளை, சுயநிர்ணய உரிமை சார்ந்த அடிப்படைக் கருத்துருவத்தையும் அதன் பண்புகளையும் உயிர்ப்புடன் தக்க வைக்க புவிசார் அரசியலைப் புரிந்து கொள்ள வேண்டும்.

இவையொன்றும் புரிந்து கொள்ளப்பட முடியாத கடினமான விடயமல்ல.இந்திராகாந்தி முதல் சோனியா காந்தி வரை ஈழப்பிரச்சினை குறித்தான அவர்களின் பார்வையினையும், வெளியுறவுக் கொள்கையினையும், ஒரு மதிப்பீட்டு ஆய்விற்கு உட்படுத்தினால், தற்போதைய களநிலைவரத்தின் நிஜத் தன்மையை புரிந்து கொள்ளலாம். 80களில், போராட்ட இயக்கங்களுக்கு படைக்கல உதவி மற்றும் பயிற்சிகளை வழங்கிய இந்தியா, 1987 இல் இலங்கையுடன் ஏற்படுத்திய ஒப்பந்தத்தில், தமிழ்மக்களின் அடிப்படை அரசியல் அபிலாஷைகளை உள்ளடக்க முயலவில்லை.

இந்திய மத்தியஸ்தத்தில் நடைபெற்ற திம்பு மகாநாட்டில், சகல இயக்கங்களினாலும் முன்வைக்கப்பட்ட நான்கு அம்சக் கோரிக்கைகளையும் அந்த ஒப்பந்தத்தில் உள்ளடக்கவுமில்லை. அது குறித்து பரிசீலிக்கவுமில்லை. ஏற்கனவே இலங்கையினால் நிராகரிக்கப்பட்ட திம்புக் கோரிக்கைகளை முன்வைத்து அழுத்தம் கொடுத்தால், தனது பிராந்திய நலனை முன்னிறுத்தும் ஒப்பந்தம், நிறைவேறாமல் போகும் வாய்ப்பு ஏற்படலாமென்பதை அன்று இந்தியா உணர்ந்து கொண்டது.

உண்மையாகவே ஈழ மக்களின் மீது இந்தியாவிற்கு அக்கறை இருந்திருந்தால், போராட்டச் சக்திகளை அந்த ஒப்பந்தம் குறித்த பேச்சுவார்த்தைகளில் இணைத்து, தனது உறுதியான நிலைப்பாட்டினை நிரூபித்திருக்க முடியும்.இலங்கையின் வான்பரப்பு இறையாண்மை மீறி, பூமாலை நடவடிக்கை மூலம், குடாநாட்டில் உணவுப் பொட்டலங்களை வீசிய காந்திதேசம், இலங்கைத் தமிழ் மக்களுக்கான பிறப்புரிமை அரசியல் கோட்பாடு சார்ந்த விடயத்தில், மேலதிக அழுத்தத்தை பிரயோகித்திருக்கலாம்.

ஆனாலும், இலங்கையை தனது இராஜதந்திரப் பிடிக்குள் கொண்டு வர, தமிழ்மக்களுக்கு அன்று பூமாலை போட்டது. இன்று இலங்கை அரசாங்கத்தின் இராணுவ நடவடிக்கைககளுக்கு பக்க பலமாக நின்ற இந்தியா, தமிழ் மக்களுக்கு புதிய பூமாலையைப் போடுமென்று எண்ணியது தவறானதாகும்.

பூமாலை தொடுப்பதும், எதை மற்றவர்களின் கழுத்தில் போடுவதும், உள்நோக்கம் கருதி நிறைவேற்றப்படும் விவகாரமென்பதை பலர் புரிந்து கொள்ளவில்லை. பல்லின மக்கள் வாழும் இந்திய பெருநிலப்பரப்பில், தேசிய இனங்களின் சுய நிர்ணய உரிமைப் போராட்டங்கள் தொடர்ந்த வண்ண முள்ளன. இரணுவப் பலத்தை ஏவிவிட்டு அடக்குமுறைகள் கட்டவிழ்த்து விடப்படுகின்றன.

தேசியக் கட்சிகளுக்கு மாற்றீடாக பல மாநிலக் கட்சிகள் புதிதாக உருவாகுவதன் காரணிகளை, இந்தியக் கட்டமைப்பின் பலவீனத்திலிருந்து உணரலாம். இத்தகைய நிலப்பிரபுத்துவ தன்மை அழியாத, இந்திய அதிகார வர்க்க அரசியல் கட்டமைப்பானது இனத்துவ தேசியத்தின் உள்ளார்ந்த பண்புகளை உள்வாங்கிக் கொள்ளுமென்று கற்பிதம் கொள்ள முடியாது.

ஆளும் இந்திய அதிகார பீடமானது, தனது மாநிலங்களைக் காலனிகளாகப் பார்க்கும் அரசியல் சூத்திரத்தை, ஈழத் தமிழ் மக்கள் விளங்கிக் கொள்ளவில்லை. தமிழகத்தினூடாக இந்திய அரசியல் பற்றிய புரிதல் வெளிப்படுத்தும் செய்தி, பிராந்திய நலன் சார்ந்த பார்வையினையும், அந்நாட்டின் அதிகார பீட அசைவியக்கத்தையும் உணர்ந்து கொள்ள முடியாதவாறு தடுக்கின்றது.

தமிழக மக்களின் ஈழத்தமிழர் ஆதரவு எழுச்சிகளும், போராட்டங்களும் சர்வதேச அளவில் புலம்பெயர் மக்களால் முன்னெடுக்கப்படும் சுயநிர்ணய உரிமை முழக்கத்திற்கு ஒரு உந்து சக்தியாக அமையுமே தவிர, இந்திய மத்திய அரசின் வெளியுறவுக் கொள்கையில் துளியளவு மாறுதல்களையும் ஏற்படுத்த உதவாது.

இலங்கை குறித்த மத்திய அரசின் கொள்கையே தமது கொள்கையென சில தமிழக அரசியல் தலைவர்கள் வெளிப்படுத்தியிருந்ததை தமிழ் மக்கள் கவனிக்கவில்லை. அவர்களை இனவிரோத சக்திகளென்றும் யுத்தமொன்று நடைபெறும் போது பொது மக்கள் கொல்லப்படுவது இயற்கை என்று கூறியவருக்கு வாழ்த்துச் செய்தி அனுப்புவதுமாக, தமிழ்நாட்டு அரசியல் பாணியில், விடுதலைப் போராட்ட அரசியலை முன்னெடுத்த தவறுகளையும் புரிந்துகொள்ள வேண்டும்.

இன்னமும், இந்திய இரட்சகர்களின் கைகளிலேயே ஈழத் தமிழனத்தின் வாழ்வு ஒப்படைக்கப்பட்டிருக்கிறதென்று கூறும், வரலாற்று உண்மைகளை மூடிமறைக்கும் சக்திகள் குறித்தும் மிகுந்த அவதானம் தேவைப்படுகிறது.

சீனா, பாகிஸ்தான் போன்ற ஆசிய நாடுகள், இலங்கையினுள் கால்பதிக்கக் கூடாதென்பதற்காக ஈழத் தமிழ் மக்கள் மீதான இராணுவ அடக்குமுறைக்கு இந்தியா உதவி புரிகிறதென்று பெருமை கொள்வது மிகக் கேவலமானது. அதேவேளை இலங்கையில், இனப்பிரச்சினை என்கிற விவகாரமொன்று இல்லாதிருந்தால், எவ்வாறு இந்தியாவால் இலங்கையில் கால் பதித்திருக்க முடியும்?

இதற்கான பதிலில்தான், சகல முடிச்சுகளும் ஒன்று குவிக்கப்பட்டிருக்கின்றன. இந்தியா, சீனா, பாகிஸ்தான் மற்றும் ரஷ்யா போன்ற நாடுகளின் உதவிகளினால் ஆயுதப் போராட்டம் ஒடுக்கப்பட்டுள்ளதாக கூறப்படுகிறது. மேற்குலக நாடுகளும் படைக்கல உதவி புரிந்ததாக லண்டன் ரைம்ஸ் பத்திரிகை தெரிவித்துள்ளது.

ஆகவே தமிழ் தேசிய கூட்டமைப்போடு பேச்சுவார்த்தைகளில் ஈடுபடும் இந்தியாவின் அடுத்த கட்ட நிகழ்ச்சி நிரல் என்ன?  ஏற்கெனவே இப்போரினால் பாதிப்புற்ற தாயக, புலம்பெயர்ந்த ஈழத் தமிழினம், இந்தியா மீது, வன்மம் கலந்த வெறுப்புணர்வோடு இருப்பதாக ஆய்வாளர் பி.ராமன் எச்சரிக்கின்றார்.

புலம்பெயர்ந்த நாட்டில் பிறந்து வளரும் புதிய தலைமுறையினர் இந்தியாவின் பிராந்திய சுயநலன் குறித்து தெளிவாகப் புரிந்துள்ளார்கள். இந்நிலையில் ஈழத் தமிழினத்தின் அரசியல் அபிலாஷைகள் மீது, கரிசனை கொண்டவர்கள் போன்று சித்திரிப்பதற்காக, இந்தியா சில நகர்வுகளை மேற்கொள்ள எத்தனிக்கின்றது. ஸ்ரீலங்கா சுதந்திரக் கட்சியோடு சங்கமிக்க விரும்பாத ஏனைய அரச சார்பு தமிழ் கட்சிகளை, தமிழ்த் தேசியக் கூட்டமைப்போடு இணைத்து விடும் முயற்சிகளில் இந்தியா ஈடுபடலாம்.

இந்திய அமைதிப்படைக் காலத்தில் இவ்வகையான நகர்வொன்றில் இறங்கி அதில் வெற்றியும் பெற்றிருந்தது. அப்போது மாகாண சபைத் தேர்தலில் இச் சூத்திரம் நிறைவேற்றப்பட்டாலும், நாடாளுமன்றப் பொதுத் தேர்தலில் இந்திய எதிர்பார்ப்பு நிறைவேறவில்லை. ஈரோஸ், அமைப்பு தனியாகப் போட்டியிட்டமை குறிப்பிடத்தக்கது. இத்தகைய இந்திய நகர்வினை, இலங்கை ஆட்சியாளர்கள் கவனிக்கவில்லையென்று நினைப்பது தவறு.

இலங்கை நாடாளுமன்றத்திலிருந்து தமிழ்த் தேசியக் கூட்டமைப்பை வெளியேற்றுவோமென அரசாங்க உயர் மட்டத்தினர் விடுக்கும் எச்சரிக்கைகளிலிருந்து, இந்திய இலங்கையின் புதிய உரசல் போக்குகளை அவதானிக்கலாம். ஏனைய தமிழ்க் கட்சிகள், தமது ஈழம் என்கிற பெயர் கொண்ட கட்சிகளை கலைத்து விட வேண்டுமென மேற்கொள்ளப்படும் அதிரடி நகர்வுகளும், தமிழ்த் தேசியக் கூட்டமைப்பை உடைக்க முயலும் எத்தனிப்புகளும் பல செய்திகளை இந்தியாவிற்கு வழங்குமென்று எதிர்பார்க்கலாம்.

அதாவது ஜனநாயக அரசியல் முகமில்லாத மனிதர்களாக, ஈழத் தமிழர்களை ஆக்கும் முயற்சியில், பேரினவாத சக்திகள் ஒருமித்து செயல்படுகின்றன. ஆனாலும், விடுதலைப் புலிகளின் இராணுவப் பலத்தை சிதைப்பதில் பேருதவி புரிந்த, இந்தியாவை விட்டு அகல முடியாத இக்கட்டான சூழ்நிலையில் இலங்கை இருப்பதை புரிந்து கொள்ள வேண்டும்.

இன்னமும் போர்க்குற்றம், மனித உரிமை மீறல், இனப்படுகொலை என்கிற அரசாங் கத்தின் மீதான குற்றச்சாட்டுகள், சர்வதேச மட்டத்தில் உயிர்ப்புடன் உலா வருகின்றன. இத்தகைய குற்றச்சாட்டுகளிலிருந்து தன்னை விடுவித்துக்கொள்ள சீனாவைவிட, இந்தியாவின் சர்வதேச இராஜதந்திரப் பலமே இலங்கை அரசாங்கத்துக்குத் தேவை.

அதுவரை இந்தியாவுடன் அனுசரித்துச் செல்லும் தந்திரோபாயத்தை, இலங்கை மேற்கொள்ளுமென்பதை ஊகிப்பது கடினமான விடயமல்ல.கடந்த மாதம் 47 நாடுகளைக் கொண்ட ஐ.நா. மனித உரிமைப் பேரவையில் இலங்கைக்கு எதிராக மேற்குலக நாடுகளால் கொண்டு வரப்பட்ட தீர்மானத்தில், லத்தீன் அமெரிக்க மற்றும் ஆபிரிக்க நாடுகள் அரசிற்கு ஆதரவளித்தன.

இந்தியாவின் இராஜதந்திர நகர்விற்கு கிடைத்த வெற்றியாகவே பல சர்வதேச அரசியல் ஆய்வாளர்கள் கருத்துத் தெரிவித்தனர். ஆனாலும், ஐ.நா. மனித உரிமைப் பேரவையில் மறுபடியும் இவ்விவகாரம் முன்னெடுக்கப்படக் கூடிய வாய்ப்புகள் தென்படுகின்றன. இதில் அமெரிக்காவும் இணைந்து கொள்ளலாம். யுத்தம் உச்ச கட்டத்தை அடைந்த இறுதி மூன்று நாட்களில், அங்கு என்ன நடந்தது என்பது தமக்கு நன்றாகத் தெரியுமென அமெரிக்கா தரிவித்த கருத்து இங்கு கவனிக்கத்தக்கது.

சீனாவைப் பொறுத்தவரை அந்நாட்டின் வெளிவிவகார அமைச்சு அண்மைக்காலமாக தெரிவித்து வரும் கருத்துகளையும் அவதானிக்க வேண்டும். இலங்கையின் உள்நாட்டு விவகாரத்தில் அண்டை நாடோ (இந்தியா) அல்லது சர்வதேசமோ தலையிடக் கூடாதென சீனா எச்சரிக்கிறது. அத்தோடு மனிதாபிமான உதவியினை மட்டுமே இவர்கள் இலங்கைக்கு வழங்கலாமென நிபந்தனைகளையும் விதிக்கின்றது.

இந்நிலையில் இந்திய நலனிற்காக, விரும்பியோ அல்லது விரும்பாமலோ தமது வாழ்வாதாரங்களை தொலைத்த ஈழத் தமிழ் மக்களுக்கு காந்தி தேசம் என்ன செய்யப் போகிறது?

சர்வதேச அரங்கில் முன்னெடுக்கப்படும், மனித உரிமை மீறல் குற்றச்சாட்டுகளை முறியடிப்பதற்கு, இந்தியா தொடர்ந்தும் உதவி புரிந்தால், இடைவெளி நீளும், தென்னாசியாவில் எஞ்சியிருக்கும் ஈழத் தமிழர்களின் ஆதரவினையும் இந்திய அரசு இழக்கும்.

வவுனியா அகதிமுகாம்களில் மூளைக்காய்ச்சல் தொற்றுநோய் – இது வரை 34 பேர் உயிரிழப்பு

brain-fever.jpgவடக்கே இடம்பெயர்ந்துள்ள மக்கள் மத்தியில் மூளைக்காய்ச்சல் தொற்று நோய்பரவுவது அவதானிக்கப்பட்டிருக்கின்றது. கடந்த 3 மாதங்களில் இதனால் பாதிக்கப்பட்ட 64 பேரில் 34 பேர் உயிரிழந்துள்ளனர் என வவுனியா அரச வைத்தியசாலையைச் சேர்ந்த வைத்திய நிபுணர் மகேஸ்வரன் உமாகாந்த் நேற்றிரவு பி.பி.ஸி.தமிழோசைக்கு  தெரிவித்தார்.  உயிரிழந்தவர்களில் 24 பேர் இளவயதினர் என்றும், வைரஸ் மூலம் தொற்றுகின்ற  இந்த நோயைக் கண்டுபிடிப்பதற்கான வசதிகள் வவுனியாவில் இல்லாத நிலையில் கண்டியில் உள்ள வைத்திய நிபுணர்களின் உதவியோடு இந்த நோயை ஆரம்ப நிலையில் அடையாளம் காண்பதற்கான வசதிகள் தற்பொழுது கிடைத்துள்ளன எனவும் அவர் பி.பி.ஸிக்கு கூறினார்.

அதிஉயர் பாதுகாப்பு வலயமாக முல்லைத்தீவு பிரகடனம் : அரசாங்க அதிபர்

mullai-ga.jpgமுல்லைத் தீவு நகர் அதி உயர் பாதுகாப்பு வலயமாக பிரகடனப்படுத்தப்பட்டுள்ளதாக முல்லைத்தீவு அரசாங்க அதிபர் திருமதி மேரி இமெல்டா சுகுமார் தெரிவித்துள்ளார் என இணைய தள செய்தி ஒன்று குறிப்பிடுகிறது.  அச்செய்தியில் மேலும் தெரிவிக்கப்படுவதாவது :

திருகோணமலை புல்மோட்டையிலுள்ள ‘சகனகம’ நிவாரணக் கிராமங்களில் தங்க வைக்கப்பட்டுள்ள முல்லைத்தீவு மாவட்ட இடம்பெயர் மக்களை நேற்று ஞாயிற்றுக்கிழமை நேரில் வந்து பார்வையிட்டபோதே அவர் இவ்வாறு தெரிவித்தார்.

வன்னியில் இடம்பெற்ற இராணுவ நடவடிக்கையையடுத்து அங்கிருந்து இடம்பெயர்ந்து வந்த ஆயிரக்கணக்கான மக்கள் தற்போது புல்மோட்டை சகனகம நிவாரணக் கிராமங்களில் தங்க வைக்கப்பட்டுள்ளனர். இவர்களைச் சந்தித்த அரச அதிபர் அந்த மக்களின் குறை,நிறைகள் குறித்து கேட்டறிந்து கொண்டதுடன் அவர்களது கேள்விகளுக்கும் பதிலளித்தார். இதன்போது அவர் கூறுகையில்,

“தற்போதைய நிலையில் குறைந்தது அடுத்த மூன்று மாதங்களுக்கு இங்குள்ள முகாம்களிலேயே நீங்கள் தங்க வேண்டியிருக்கும். அதன்பின் முல்லைத்தீவு அரசாங்க அதிபர் பணிமனை மாங்குளம் பகுதியிலேயே அமையவுள்ளது.

இடம்பெயர்ந்த முல்லைத்தீவு மக்கள் அனைவரும் மாங்குளம் பகுதிக்கே அழைத்துச் செல்லப்படுவர். முல்லைத்தீவு நகர் அதிஉயர் பாதுகாப்பு வலயமாகப் பிரகடனப்படுத்தப்பட்டுள்ளது. எனவே முல்லைத்தீவுக்கு எவரையும் அழைத்துச் செல்ல முடியாது. அதனால் அனைவரையும் மாங்குளத்திற்கே அழைத்துச் செல்வோம்” என்றார். இவ்வாறு அச்செய்தியில் குறிப்பிடப்படுகின்றது.

2011ம் ஆண்டு உலகக் கோப்பைப் போட்டியை இந்தியா, இலங்கை, வங்கதேசம் இணைந்து நடத்தும்

icc-world-cup-2011.jpgஇந்தியா, இலங்கை, வங்கதேசம் ஆகியவை இணைந்து 2011ம் ஆண்டு உலகக் கோப்பைப் போட்டியை நடத்தும். அதில் எந்த மாற்றமும் இல்லை என்று சர்வதேச கிரிக்கெட் கவுன்சில் திட்டவட்டமாக தெரிவித்துள்ளது. இதன் மூலம் பாகிஸ்தானில் உலகக் கோப்பைப் போட்டிகள் நடத்தப்பட மாட்டாது என்பதை மீண்டும் உறுதிப்படுத்தியுள்ளது ஐசிசி.

லாகூரில் இலங்கை கிரிக்கெட் அணியினர் மீது நடத்தப்பட்ட தீவிரவாதத் தாக்குதலைத் தொடர்ந்து இந்தப் போட்டியை கூட்டாக நடத்தவிருந்த பொருப்பிலிருந்து பாகிஸ்தானை விலக்கியது ஐசிசி என்பது நினைவிருக்கலாம். பாகிஸ்தானுக்கு ஒதுக்கப்பட்ட 14 போட்டிகளையும் இந்தியா, இலங்கை, வங்கதேசத்திற்கு பிரித்துக் கொடுத்து விட்டது ஐசிசி.

ஆனால் இதை எதிர்த்து சட்டப்பூர்வமாக நடவடிக்கை எடுக்கப் போவதாக பாகிஸ்தான் கிரிக்கெட் வாரியம் தெரிவித்துள்ளது. இருப்பினும் தனது நிலையில் எந்த மாறறமும் இல்லை என்று ஐசிசி தெரிவித்துள்ளது.

இதுகுறித்து ஐசிசி தலைவர் டேவிட் மார்கன் கூறுகையில், பாகிஸ்தான் எடுக்கும் எந்த நடவடிக்கையும் போட்டியை, இந்தியா, வங்கதேசம், இலங்கை இணைந்து நடத்துவதில் மாற்றத்தை ஏற்படுத்தாது.

தெற்காசியாவை விட்டு போட்டித் தொடரை மாற்றும் எண்ணமே இல்லை. அதற்கான தேவையும் இருப்பதாக நான் கருதவில்லை. இந்தியா, இலங்கை, வங்கதேசமே போட்டித் தொடரை நடத்தும் என்றார் மார்கன்.

இரான் தூதுரக பணியாளர்கள் விவகாரம் தொடர்கிறது

miliband_.jpgஇரானால் இன்னமும் தடுத்து வைக்கப்பட்டுள்ள இரண்டு பிரிட்டிஷ் தூதரக பணியாளர்களில் ஒருவரை விடுதலைச் செய்வதற்கான ஆவணங்கள் கையொப்பமாகி விட்டதாக பிரிட்டிஷ் வெளியுறவுத்துறை செயலர் டேவிட் மிலிபேண்ட் தெரிவித்துள்ளார்.

இரானின் செயலால் தான் கடும் கோபமுற்று இருப்பதாக கூறிய டேவிட் மிலிபேண்ட், இவ்வாறு தொடர்ந்து வம்புக்கிழுக்கும் செயலை செய்து வந்தால் இரான் விளைவுகளை சந்திக்க வேண்டும் என்றும் எச்சரித்தார்.

கடந்த மாதம் இரானில் அதிபர் தேர்தல் நடைபெற்று முடிந்த பின்னர் நடைபெற்ற வன்முறையை பிரிட்டன் தூண்டி விட்டதாக இரான் குற்றம் சுமத்தி பிரிட்டன் தூதரகத்தின் அரசியல் மற்றும் பொருளாதார பிரிவை சேர்ந்த ஒன்பது பேரை கைது செய்தது.

ஜனாதிபதி தேர்தலின் பின்னரே அரசியல் தீர்வுக்கான திட்டம்: ஜனதிபதி

he_president.jpgஇலங்கை இனப்பிரச்சினைக்கான தமது தீர்வுத்திட்டம் அடுத்த ஜனாதிபதி தேர்தலில் தான் வெற்றி பெற்ற பின்னரே வரும் எனவும் ஆனால், சமஷ்டி தீர்வுக்கு இலங்கையில் இடம் கிடையாது எனவும்  இலங்கை ஜனாதிபதி மஹிந்த ராஜபக்ஷ அவர்கள் கூறியுள்ளார் என இந்தியாவின் ஹிந்து பத்திரிகைக்கு வழங்கிய செவ்வி ஒன்றினை மேற்கோள்காட்டி பீ.பீ.ஸி தமிழ் சேவை செய்தி வெளியிட்டுள்ளது.

தனது அரசியல் தீர்வுத்திட்டமான, ‘’13 வது அரசியல் யாப்புத் திருத்தத்தை சற்று மேம்படுத்திய திட்டம்’’ குறித்து பேசியுள்ள ஜனாதிபதி மஹிந்த ராஜபக்ஷ அவர்கள், தனது மனதில் ஒரு தீர்வுத்திட்டம் இருப்பதாகவும்,  ஆயினும்,  அது குறித்து தமிழ் தேசியக் கூட்டமைப்பு உட்பட அனைத்து அரசியல் கட்சிகளின் கருத்தை விவாதித்து பெற வேண்டியுள்ளதாகவும் கூறியுள்ளார்.

தான் இவற்றுக்காக காத்திருப்பதாக கூறியுள்ள ஜனாதிபதி, இருந்தபோதிலும், அடுத்த ஜனாதிபதி தேர்தலில் தான் தேர்வு செய்யப்பட்ட பின்னரே தீர்வுத்திட்டம் வெளியிடப்படும் என்றும் கூறியுள்ளார். அதேவேளை, எதனை கொடுக்க வேண்டும், எதனைக் கொடுக்கக் கூடாது என்று தனக்கு தெரியும் என்றும், மக்கள் தனக்கு அதற்கான ஆணையை தந்திருப்பதாகவும், அதனை தான் பயன்படுத்தப் போவதாகவும் அவர் கூறியுள்ளார்.

அதேவேளை, தான் இது தொடர்பில் தமிழ் தேசியக் கூட்டமைப்பினரின் உடன்பாட்டுக்காக காத்திருப்பதாக, கூறியுள்ள ஜனாதிபதி, அவர்களுக்கு எது கிடைக்கக் கூடியதாக இருக்கும், எது கிடைக்காது என்பது தெரிந்திருக்க வேண்டும் என்று கூறியிருப்பதுடன், இந்த நாட்டில் ‘’சமஷ்டிக்கு’’ இடம் கிடையாது என்றும், தேசிய நல்லிணக்கத்துக்கு பல்லினங்களின் கலப்பு அவசியம் என்றும் அவர் கூறியுள்ளார்.

ஹிந்து பத்திரிகைக்கு வழங்கிய அப்பேட்டியில் மேலும் தெரிவிக்கப்பட்டிருந்ததாவது: 

வடக்கிலிருந்து இடம்பெயர்ந்துள்ள சுமார் மூன்று இலட்சம் மக்களையும் விரைவில் மீளக் குடியமர்த்துவது அரசாங்கத்தின் பிரதான நோக்கமாகுமெனவும், பயங்கரவாதம் தோற்கடிக்கப்பட்டு ஒரு மாதகாலம் கடந்துள்ள நிலையில் நாட்டின் அனைத்துப் பிரச்சினகைளுக்கும் தீர்வுகளை எதிர்பார்க்க முடியாது எனவும்,  தெரிவித்துள்ள ஜனாதிபதி இடம்பெயர்ந்த மக்களுக்கான அடிப்படைத் தேவைகளைப் பெற்றுக் கொடுக்க அரசாங்கம் பெருந்தொகை நிதியை ஒதுக்கியுள்ளதெனவும் தெரிவித்துள்ளார்.

அரசாங்கத்தின் அபிவிருத்தி நடவடிக்கைகள் வெற்றிகரமாக முன்னெடுக்கப்பட்டு வருவதாகத் தெரிவித்துள்ள அவர்,  இவற்றின் பிரதிபலன்களை விரைவில் காண முடியுமெனவும் தெரிவித்துள்ளார்.  இலங்கை மக்களின் சுபீட்சத்துக்காகவே இந்த அனைத்து நடவடிக்கைகளும் மேற்கொள்ளப்பட்டு வருவதாக ஜனாதிபதி தெரிவித்துள்ளார்.

தொழில்வாய்ப்பை இழந்தவர்களுக்கு நிவாரணம் வழங்க பொதிமுறை அறிமுகம்

உலக பொருளாதார நெருக்கடி காரணமாக தொழில் வாய்ப்பை இழந்தவர்களுக்கு நிவாரணம் வழங்கும் வகையில் பொதிமுறை ஒன்றை அறிமுகப்படுத்த தொழில் உறவுகள் மற்றும் மனித வள அமைச்சு நடவடிக்கை எடுத்து வருகிறது. ஜனாதிபதி மஹிந்த ராஜபக்ஷவின் ஆலோசனைகளுக்கமைய இதற்கான கலக ஏற்பாடுகளும் மேற்கொள்ளப்பட்டு வருவதாக தொழில் உறவுகள் மற்றும் மனித வள அமைச்சின் செயலாளர் மஹிந்த மதிஹேவா நேற்று தெரிவித்தார்.

இந்த புதிய பொதிமுறைக்கு வேலையற்றவர்களுக்கான சேமநலன் காப்புறுதி திட்டம்  என பெயரிடப்பட்டுள்ளது. தொழில் இழந்தவர்களுக்கு மாதாந்த நஷ்டஈடு கொடுப்பனவு ஒன்று இந்த பொதிமுறைக்கமைய வழங்கப்படும்.

இந்த புதிய பொதிமுறை தொடர்பான யோசனைகளை ஜனாதிபதி மஹிந்த ராஜபக்ஷ தொழில் உறவுகள் மற்றும் மனிதவலு அமைச்சர் அதாவுத செனவிரட்னவுக்கு வழங்கியுள்ளதுடன், விஷேட குழுவொன்றையும் நியமித்துள்ளார். நிதி, தொழில் உறவுகள், கைத்தொழில் ஆகிய அமைச்சுக்கள், மத்திய வங்கி, இலங்கை முதலீட்டுச் சபை, ஊழியர், சேமலாப நிதியம் மற்றும் ஊழியர் நம்பிக்கை நிதியம் ஆகிய நிறுவனங்களின் அதிகாரிகள் ஜனாதிபதியால் நியமிக்கப்பட்ட இக்குழுவில் அடங்குவர்.

இந்த பொதிமுறையை நடைமுறைப்படுத்துவது தொடர்பான விஷேட கூட்டம் எதிர்வரும் 9ம் திகதி வியாழக்கிழமை தனது தலைமையில் கூடி ஆலோசனை செய்து, ஆரம்பக்கட்ட அறிக்கையை ஜனாதிபதிக்கு சமர்ப்பிக்கவுள்ளதாக அமைச்சின் செயலாளர் குறிப்பிட்டார். தொழில் இழந்தவர்களுக்கு இந்த புதிய பொதிமுறைக்கமைய மாதாந்தம் நஷ்டஈட்டுக் கொடுப்பனவு வழங்கப்படவுள்ளது. தொழி லிழக்கும்போது ஏற்கனவே எடுத்துக்கொண்டிருந்த மாதாந்த சம்பளத்தை அடிப்படையாக வைத்து 50 வீத கொடுப்பனவு சுமார் ஒருவருட காலத்திற்கு வழங்கப்படவுள்ளது.

திரும்ப தொழில் கிடைக்கும் வரை அல்லது இழந்த தொழில் மீண்டும் நியமிக்கப்படும் வரை இந்த தொகை வழங்க திட்டமிடப்பட்டுள்ளது. ஒவ்வொரு ஆறு மாத காலத்தில் இது மீளாய்வு செய்யப்பட்டு, ஒவ்வொருவரது தகுதி அடிப்படையில் நடவடிக்கை எடுக்கப்படும்.

ஜனாதிபதி அவசர யோசனை முன்வைத்ததை அடுத்து தொழில் அமைச்சர் குறுகிய காலத்தில் இதற்கான திட்ட வரைபை தயாரித்து வருகின்றார். உலக பொருளாதார நெருக்கடியை அடுத்து கைத்தொழில் துறையைச் சேர்ந்த 6.5 மில்லியன் மக்கள் உலகளாவிய ரீதியில் தொழில்களை இழந்தனர்.

இந்நிலையில் உலக வங்கியின் அண்மைக்கால அறிக்கையின் படி மிகவும் குறைந்த அளவு பாதிக்கப்பட்ட நாடாக இலங்கை உள்வாங்கப்பட்டுள்ளது. எமது நாட்டின் ஏற்றுமதி துறை சிறிய பாதிப்புக்குள்ளான போதிலும், தற்பொழுது அது சீராகிவருகின்றது என்றார்.

இதேவேளை, ஜனாதிபதி மஹிந்த ராஜபக்ஷ 1994-1997 ஆம் ஆண்டு காலத்தில் தொழில் அமைச்சராக இருந்த காலத்தில் இதுபோன்ற நெருக்கடிக்கு ‘சிரம வாசனா’ என்ற நிதியத்தை ஆரம்பித்து உரிய நடவடிக்கையை எடுத்திருந்தார். இந்த திட்டம் புதிய பொதிமுறைக்கு உந்து சக்தியாக அமையும் என்றும் அவர் குறிப்பிட்டார்.

யாழ்தேவி ரயிலில் தீப்பிடிப்பு: இரு பெட்டிகள் முற்றாக சேதம்

train.jpgயாழ்தேவி ரயில் நேற்றுக் காலை திடீரென தீப்பற்றிக்கொண்டது.

கொழும்பிலிருந்து நேற்றுக் காலை தாண்டிக்குளம் நோக்கிச் சென்ற யாழ்தேவி ரயிலிலே காலை 10.40 மணியவில் தீப்பிடித்துக் கொண்டதாக பொலிஸ் ஊடகப் பேச்சாளர் சிரேஷ்ட பொலிஸ் அத்தியட்சகர் ரஞ்சித் குணசேகர தெரிவித்தார். யாழ்தேவி ரயில் அநுராதபுரம் சாலியபுரம் ரயில்வே நிலையத்தை அடையும் தறுவாயிலேயே ரயிலின் இரண்டு பெட்டிகளில் தீ பரவியதாக அநுராதபுரம் ரயில்வே நிலைய கட்டுப்பாட்டாளர் கூறினார்.

ரயிலின் சிற்றுண்டிச்சாலை அமைந்துள்ள பெட்டியிலேயே முதலில் தீ ஏற்பட்டுள்ளது. பின்னர் இத்தீ வேகமாக இரண்டாவது பெட்டிக்கும் பரவியுள்ளது. இதனால் ரயிலில் பயணம் செய்த பயணிகள் அச்சத்தினால் அல்லோலகல்லோலம் அடைந்ததையடுத்து ரயில் திறுத்தப்பட்டு பயணிகள் பாதுகாப்பாக வெளியேற்றப்பட்டுள்ளனர்.

இத் தீப்பிடிப்பு சம்பவத்தினால் பயணிகள் எவரும் பாதிப்படையவில்லையெனவும் அநுராதபுரம் ரயில்வே கட்டுப்பாட்டதிகாரி தெரிவித்தார்.

இச்சம்பவத்தினால் யாழ்தேவியின் ரயிலின் ஒரு பெட்டி முற்றாக எரிந்து நாசமாகியுள்ளதுடன் மற்றைய ரயில் பெட்டியும் பெருமளவு சேதமாகியுள்ளது. சிற்றுண்டிச்சாலை அமைத்துள்ள பகுதியிலேயே தீ ஏற்பட்டதனால் சமையல் எரிவாயு ஒழுக்கின் காரணமாக இச் சம்பவம் நிகழ்ந்திருக்கலாமென்ற சந்தேகம் ஆரம்பக்கட்ட விசாரணைகளிலிருந்து ஏற்பட்டிருப்பதாகத் தெரிவித்த ரயில்வே கட்டுப்பாட்டாளர், இது தொடர்பான தீவிர விசாரணைகளை பொலிஸார் முன்னெடுத்து வருவதாகவும் குறிப்பிட்டார்.

வாகனங்களில் இருக்கைப்பட்டி அணியாமல் பயணம் செய்தால் 2 ஆயிரம் ரூபா அபராதம்

வடக்கு, கிழக்கு உட்பட நாட்டின் சகல பகுதிகளிலும் வாகனங்களில் பயணம் செய்வோருக்கு இருக்கை பட்டி (Seat belt)கட்டாயப்படுத்தப்படவுள்ளதாக மோட்டார் வாகன பொலிஸ் திணைக்களம் அறிவித்துள்ளது. நாட்டில் அதிகரித்துவரும் வாகன விபத்துகளை கருத்திற் கொள்ளும் போது வாகனங்களில் பயணம் செய்யும் பயணிகள் இருக்கைப் பட்டி அணியாமையினாலேயே அதிகமானோர் உயிரிழந்துள்ளமை தெரியவந்துள்ளது.

இதனைத் தொடர்ந்து பழைய வாகனங்கள் உட்பட சகல வாகனங்களிலும் பயணிப்போர் இருக்கைப்பட்டி அணிவது கட்டாயப்படுத்தப்படவுள்ளதுடன், இதற்கமைய முதற் தடவையாக இருக்கைப்பட்டி அணியாமல் பிடிபடுபவர்களுக்கு 1000 ரூபா முதல் 2000 ரூபா வரைக்கும், இரண்டாவது தடவைக்கு 2000 ரூபா முதல் 3000 ரூபா வரைக்கும், மூன்றாவது தடவைக்கு 3000 ரூபா முதல் 4000 ரூபா வரைக்கும் அபராதம் அறவிடப்படவுள்ளது. அத்துடன் வாகன சாரதியின் அனுமதி பத்திரமும் பறிமுதல் செய்யப்படும் என அறிவிக்கப்பட்டுள்ளது.