07

07

சுகாதார மத்திய நிலையம் அமைக்குமாறு கோரிக்கை

hizbullah.jpgதிருகோ ணமலை தொகுதியின் வடபகுதி எல்லைக் கிராமமான ரொட்டேவாவில் சுகாதார மத்திய நிலையம் ஒன்றை அமைத்து அப்பகுதி மக்களின் வைத்திய தேவைகளை நிவர்த்தி செய்ய நடவடிக்கை எடுக்கும்படி கிழக்கு மாகாணசபைப் பேரவையின் தவிசாளரும் திருகோணமலை மாவட்ட மாகாணசபை உறுப்பினருமான ஏ.எம்.எம்.பாயிஸ் கோரியுள்ளார். கிழக்கு மாகாண சுகாதார அபிவிருத்தி தொடர்பான கலந்துரையாடல் ஒன்று திருகோணமலையில் உள்ள கிழக்கு மாகாண சுகாதார அமைச்சின் மாநாட்டு மண்டபத்தில் மாகாண சுகாதார அமைச்சர் எம்.எல்.ஏ.எம். ஹிஸ்புல்லாஹ் தலைமையில் நடைபெற்றது.

அக்கூட்டத்திலே தவிசாளர் பாயிஸ் இக்கோரிக்கையைச் சமர்ப்பித்தார்.

ரொட்டேவா கிராமம் அபிவிருத்தியில் புறக்கணிக்கப்பட்டுள்ளது. கல்வி, சுகாதாரம் மற்றும் துறைகளில் இக்கிராமத்தில் அபிவிருத்தி வேலைகள் உடனடியாக ஆரம்பிக்கப்படவேண்டும். சுகாதார மத்திய நிலையம் இக்கிராமத்தில் உடனே நிறுவப்பட வேண்டும் என்று தவிசாளர் பாயிஸ் தெரிவித்தார். அவரின் இக்கோரிக்கையை நிறைவேற்றுவதற்குத் தேவையான நடவடிக்கை எடுக்கப்படும் என்று மாகாண அமைச்சர் ஹிஸ்புல்லாஹ் உறுதியளித்தார்.

அவசர காலச்சட்டம் 92 மேலதிக வாக்குகளால் நிறைவேற்றம்

26parliament.jpgநாட்டில் அவசரகாலச் சட்டத்தை மேலும் ஒரு மாதத்துக்கு நீடிக்கும் பிரேரணை 92 மேலதிக வாக்குகளால் நிறைவேற்றப்பட்டது. பொது மக்கள் பாதுகாப்புச் சட்டத்தின்கீழ் பிரதமர் ரட்னசிறி விக்ரமநாயக்கவினால் இன்று பாராளுமன்றத்தில் முன்வைக்கப்பட்ட இப்பிரேரணைக்கு ஆதரவாக் 103 வாக்குகளும் எதிராக 11 வாக்குகளும் அளிக்கப்பட்டன.

தமிழ்த் தேசிய கூட்டமைப்பினர் பிரேரணையை எதிர்த்து வாக்களித்தனர். வாக்களிப்பு நடைபெற்ற நேரம் ஐக்கிய தேசியக் கட்சி உறுப்பினர்கள் சபையில் இருக்கவில்லை என்றும் அறிவிக்கப்பட்டுள்ளது.

இலங்கையருக்கு நிவாரணம் வழங்க இந்திய வரவு செலவுத் திட்டத்தில் 500 கோடி ரூபா ஒதுக்கீடு

இலங் கையின் வடக்கில் நலன்புரி நிலையங்களில் தங்கியுள்ளோருக்கு நிவாரணம் வழங்கவென இந்திய வரவு செலவுத் திட்டத்தில்  500 கோடி ரூபா ஒதுக்கப்பட்டுள்ளதாக இந்தியா அறிவித்துள்ளது. இந்தியாவின் 2009-2010 ஆம் ஆண்டுக்கான வரவு-செலவுத் திட்டம் இந்தியப் பாராளுமன்றத்தில் நேற்று சமர்பிக்கப்பட்டது.

இந்த வரவு- செலவுத் திட்டத்தை இந்திய நிதியமைச்சர் பிரணாப் முக்கர்ஜி சமர்ப்பித்தார். இந்த நிதி வடக்கில் மக்களை மீளக்குடியமர்த்துவதற்கும் மக்களின் சேமலாப நலனுக்கும் பயன்படுத்தப்படுமெனவும் நிதியமைச்சர் பிரணாப் முக்கர்ஜி தெரிவித்துள்ளார்.

நலன்புரி நிலையங்களிலுள்ள மூன்று இலட்சம் சிவிலியன்களை துரிதமாக மீளக்குடியமர்த்த இலங்கை அரசாங்கம் எடுத்து வரும் நிகழ்ச்சித் திட்டத்தை இந்திய அரசாங்கம் பாராட்டியுள்ளது

முதலமைச்சர் மஹிபால ஹேரத் கொழும்பு பெரியாஸ்பத்திரிக்கு மாற்றம்

maheepala_herath_min.jpgஇன்று அதிகாலை குருநாகலில் நடைபெற்ற வாகன விபத்தில் படுகாயமுற்ற சபரகமுவ மாகாண முதலமைச்சர் மஹிபால ஹேரத் மேலதிக சிகிச்சைக்காக கொழும்பு பெரியாஸ்பத்திரி விபத்துப் பிரிவுக்கு கொண்டுவரப்பட்டார் என ஆஸ்பத்திரி வட்டாரங்கள் தெரிவித்தன.

அலோக் பிரசாத் தலைமையிலான குழு இன்று யாழ். விஜயம்!

இந்தியத் தூதுவர் அலோக் பிரசாத் தலைமையிலான இந்தியத் தூதரகக் குழு ஒன்று இரண்டு நாள் விஜயம் ஒன்றை மேற்கொண்டு இன்று யாழ்ப்பாணம் செல்கின்றது. நாளை மாலை வரை இக்குழுவினர் யாழ்ப்பாணத்தில் தங்கியிருந்து பல்வேறு நிகழ்வுகளிலும் கலந்துகொள்வர் எனத் தெரிவிக்கப்படுகின்றது.

இந்தியத் தூதுவர் அலோக் பிரசாத் பிரதித் தூதுவர் விக்ரம் மிஸ்ரி, பாதுகாப்புப் பிரிவு இணைப்பாளர் கப்டன் பிரதாப்சிங்,  அரசியல் பிரிவு அதிகாரி ஆகியோர் அடங்கிய குழுவினரே இன்று செல்கின்றனர். அவர்கள் யாழ். போதனா வைத்தியசாலை,  யாழ். பல்கலைக்கழகம், யாழ். பொது நூலகம் ஆகியவற்றுக்கு நேரில் விஜயம் செய்து அங்கு இந்தியப் பங்களிப்புடன் மேற்கொள்ளப்படக்கூடிய அபிவிருத்தித் திட்டங்கள் குறித்து ஆராய்வர்.

யாழ். குடாநாட்டில் கலாசாரப் பரிவர்த்தனைத் திட்டங்கள், அபிவிருத்தி நடவடிக்கைகள் போன்றவற்றிலும் மக்களின் சமூக அபிவிருத்திச் செயற்பாடுகளிலும் இந்தியா ஆற்றக்கூடிய ஆக்கபூர்வமான ஒத்துழைப்புக்கான வாய்ப்புகள் குறித்தும் இக்குழு கண்டறியும் எனத் தெரிவிக்கப்படுகின்றது 

கொழும்பு கட்டுநாயக்க அதிவேப் பாதை அமைப்புப் பணிகளுக்கு சீன உதவி

18rohitha_bogollagama_.jpgஇடை நிறுத்தி வைக்கப்பட்டிருந்த கொழும்பு கட்டுநாயக்க அதிவேப் பாதை அமைப்புப் பணிகள் சீன அரசாங்கத்தின் உதவியுடன் மீண்டும் ஆரம்பிக்கப்படும் என வெளிவிவகார அமைச்சர் ரோஹித்த போகொல்லாகம தெரிவித்தார்.சீனாவுக்கான ஐந்து நாள் உத்தியோகபூர்வ விஜயம் ஒன்றை மேற்கொண்டபின்னர் நேற்று நாடு திரும்பிய அமைச்சர் கட்டுநாயக்க விமான நிலையத்தில் ஊடகவியலாளரிடம் இதனைத் தெரிவித்தார்.

சீன வெளிவிவகார அமைச்சருடன் இடம்பெற்ற பேச்சுவார்த்தையின்போது இதற்கான இணக்கம் ஏற்பட்டதாக அமைச்சர் கூறினார். இலங்கையில் வீதி அபிவிருத்தி நடவடிக்கைகளுக்காக சீனா ஒரு பில்லியன் டொலர்களை ஏற்கவே வழங்கியுள்ளதாகவும் அமைச்சர் இங்கு குறிப்பிட்டார். இதேவேளை, சீனாவின் சின்சுவான் பிரதேசத்தில் இலங்கையின் உதவித் தூதுவர் காரியாலயம் ஒன்றைத் திறப்பது தொடர்பாக சீனாவின் கம்யனிஸ்ட் கட்சியின் செயலாளருடன் அமைச்சர் பேச்சசுவார்த்தை நடத்தியுள்ளதாகவும் அறிவிக்கப்பட்டுள்ளது.

இலங்கைக்கு இந்திய இராணுவத்தினர் உதவி – இந்திய வெளியுறவுச் செயலாளர தகவல்

புலிகளிடமிருந்து மீட்கப்பட்ட பிரதேசங்களிலில் உள்ள நிலக்கண்ணி வெடிகளை அகற்றும் பணியில் ஈடுபடுவதற்காக இந்திய இராணுவத்தினரின் உதவியை வழங்க உள்ளதாக  இந்திய வெளியுறவு செயலாளர் சிவ்சங்கர் மேனன் தெரிவித்துள்ளார். நிலக்கண்ணி வெடிகளை கண்டுபிடிக்கும் செயற்பாட்டிற்கும் அவற்றை செயலிழக்க வைக்கும் நடவடிக்கைகளுக்கும் இந்திய இராணுவக் குழுவினர்ää இலங்கை அதிகாரிகளுக்கு உதவிகளை வழங்குவார்கள் எனவும் அவர் ஊடகவியலாளர்களிடம் நேற்று தெரிவித்துள்ளார்.

கண்ணிவெடிகளை அகற்றுவதற்கு இந்திய இராணுவ வல்லுனர்களையும் இராணுவ உபகரணங்களையும் இலங்கைக்கு அனுப்பி வைக்கவுள்ளோம். இங்கு இராணுவ வல்லுனர்களை அனுப்பும் விடயமானது சாத்தியமாகவுள்ளது என அவர் மேலும் தெரிவித்தார்.

வடக்கில் பாதிக்கப்பட்ட மக்களுக்கு இந்திய மருத்துவ குழுவினர் மருத்துவ சேவைகளை வழங்கி வருகின்றனமை குறிப்பிடத்தக்கது.

முன்பள்ளி ஆசிரியர் கழுத்து நெரித்துக் கொலை

அக்கரப்பத்தனை பொலிஸ் பிரிவிற்குட்பட்ட டயகம கொலனியில் தனிமையில் வாழ்ந்த பெண்ணொருவர் கழுத்து நெரிக்கப்பட்டு கொலை செய்யப்பட்டுள்ளார். டயகம பிரதேசத்தில் முன்பள்ளி ஒன்றில் ஆசிரியையாக சேவையாற்றி வந்த 65 வயது மதிக்கத்தக்க பெண்ணே இவ்வாறு கொலை செய்யப்பட்டுள்ளார். கடந்த சனிக்கிழமை முற்பகல் வேளை வரை ஆசிரியை முன்பள்ளிக்கு வருகைதராததால் பெற்றோர்கள், ஆசிரியையின் வீட்டுக்குச் சென்று பார்த்த போது ஆசிரியை கொலை செய்யப்பட்டுள்ளமையை அறிந்து அக்கரப்பத்தனை பொலிஸாருக்கு அறிவித்துள்ளனர்.

இதனைத் தொடர்ந்து சம்பவம் இடம்பெற்ற இடத்துக்கு வருகைதந்த பொலிஸார் விசாரணைகளில் ஈடுபட்டனர். இந்தக் கொலைச்சம்பவம் தொடர்பாக இதுவரை எவரும் கைது செய்யப்படவில்லை. கணவனை இழந்து தனிமையில் வாழ்ந்து வந்த இந்த முன்பள்ளி ஆசிரியை கொலை செய்யப்பட்டமையானது டயகம பிரதேச மக்கள் மத்தியில் ஆச்சரியத்தை ஏற்படுத்தியுள்ளது.

பெடரர் வரலாறு படைத்தார்

padaral.jpg
விம்பிள்டன் டென்னிஸ் போட்டியில் போராட்டத்திற்கு பின்னர் மகுடம் சூடிய பெடரர், பீட் சாம்ப்ராஸின் அதிக கிராண்ட்ஸ்லாம் சாதனையையும் முறியடித்தார். கிராண்ட்ஸ்லாம் அந்தஸ்து பெற்ற போட்டிகளில் மிகவும் கௌரவமிக்க பந்தயமான விம்பிள்டன் டென்னிஸ் போட்டி கடந்த இரண்டு வார காலமாக இங்கிலாந்து தலைநகர் லண்டனில் நடந்து வந்தது. கடைசி நாள ஆண்கள் ஒற்றையர் பிரிவில் இறுதிப் போட்டி அரங்கேறியது.

கிண்ணத்திற்காக இறுதிப் போட்டியில் உலகின் 2ஆம் நிலை வீரராக இருந்த சுவிட்ஸர்லாந்தின் ரொஜர் பெடரரும், 6ஆம் நிலை வீரர் அமெரிக்காவின் அன்டி ரொடிக்கும் சந்தித்தனர்.  இறுதிப் போட்டிக்கே உரிய விறுவிறுப்புடன் இருவரும் விட்டுக்கொடுக்காமல் கடைசிவரை போராடினர். இதனால் ஆட்டம் 5 செட்கள் வரை நீடித்தது. இதில் 4 மணி 16 நிமிடங்கள் போராடிய பெடரர் முடிவில் 5-7, 7-6, (86), 7-6, (75), 3-6, 1-614 என்ற செட் கணக்கில் வெற்றியை ருசித்து சாம்பியன் பட்டத்தை தட்டிச் சென்றார். கடைசி செட் மட்டும் ஒன்றரை மணி நேரத்திற்கு மேலாக நீடித்தமை குறிப்பிடத்தக்கது. இந்த மோதலில் பெடரர் 50 ஏஸ்களும், ரொடிக் 27 ஏஸ்களும் வீசியிருந்தனர்.   27 வயதான பெடரர் 6ஆவது முறையாக விம்பிள்டன் பட்டத்தை வென்றுள்ளார்.

அது மட்டுமின்றி இந்த விம்பிள்டனை வென்றதன் மூலம் பெடரரின் கிராண்ட்ஸ்லாம் பட்டத்தின் எண்ணிக்கை 15ஆக உயர்ந்தது. இதையடுத்து அதிக கிராண்ட்ஸ்லாம் பட்டம் வென்ற பெருமையை இதுவரை தக்க வைத்திருந்த அமெரிக்க  பீட் சாம்ப்ராஸின் (14 கிராண்ட்ஸ்லாம்) சாதனையை பெடரர் முறியடித்து சரித்திரத்தில் இடம்பெற்றார்.

ஓய்வு பெற்ற பீட் சாம்ப்ராஸ் விம்பிள்டனை 7 முறையும் அமெரிக்க ஓபனை 5 முறையும், அவுஸ்திரேலிய ஓபனை 2 முறையும் வென்றுள்ளார். ஆனால், பிரெஞ்ச் ஓபனை மட்டும் அவரால் கடைசி வரை வெல்ல முடியாமல் போய்விட்டது என்பது குறிப்பிடத்தக்கது.

வைத்தியர்களின் அடையாள வேலை நிறுத்தம்: வைத்திய சேவைகள் பாதிப்பு

கிழக்கு மாகாண வைத்தியசாலைகளிலும் மருத்துவர்கள் இன்று அடையாள வேலை நிறுத்தத்தில் ஈடுபட்டமையினால் வைத்திய சேவைகளின் வழமை நிலை பாதிக்கப்பட்டிருந்தது. உள்ளக மருத்துவர்கள் நியமனம் தொடர்பாக சுகாதார அமைச்சினால் வெளியிடப்பட்டுள்ள இரண்டு சுற்றிக்கைகளிலும் முரண்பாடுகள் இருப்பதால் அதனை ரத்து செய்யக் கோரி அரசாங்க மருத்துவ அதிகாரிகள் சங்கம் நாடெங்கிலும் இந்த வேலை நிறுத்தத்திற்கான அழைப்பை விடுத்திருந்தது.

மட்டக்களப்பு போதனா வைத்தியசாலையில் அவசர சிகிச்சைகள் மட்டுமே இன்று இடம்பெற்றதாக வைத்தியசாலையின் பணிப்பாளர் டாக்டர் கே.முருகானந்தம் கூறினார். அதேவேளை, உள்ளக மருத்துவர்கள் நியமனம் தொடர்பான முரண்பாடு உட்பட பல்வேறு விடயங்கள் குறித்து அரசாங்க மருத்துவ அதிகாரிகள் சங்கம் இன்று ஜனாதிபதி மஹிந்த ராஜபக்ஷவைச் சந்தித்து பேச்சுவார்த்தை நடத்தியுள்ளதாகத் தகவல்கள் தெரிவிக்கின்றன.