14

14

அணிசேரா அமைய உச்சிமாநாடு இன்று எகிப்தில் ஆரம்பம்

111111.jpgஎகிப்தின் ஷார்ம் எல்சேக்கில் இன்றும் நாளையும் இடம்பெறும் அணிசேரா அமைய உச்சி மாநாட்டில் 118 நாடுகளின் தலைவர்களும் பிரதிநிதிகளும் பங்கேற்கவுள்ளதுடன் இருதரப்பு சந்திப்புகளையும் அரசாங்கங்களின் தலைவர்கள் நடத்தவுள்ளனர்.

ஜனாதிபதி மகிந்த ராஜபக்ஷவுக்கும் இந்தியப் பிரதமர் மன்மோகன் சிங்கிற்கும் இடையில் சந்திப்பு இடம்பெறவுள்ளது. பாகிஸ்தான் பிரதமர் கிலானியை சந்தித்து பேச்சுவார்த்தை நடத்தவுள்ள மன்மோகன் சிங் இலங்கை, பங்களாதேஷ், எகிப்து, நேபாளம், வியட்நாம் அரச தலைவர்களுடனும் பேச்சுவார்த்தை மேற்கொள்வாரென ஐ.எ.என்.எஸ். செய்திச் சேவை தெரிவித்தது.

அணி சேராமை இந்தியாவின் வெளிநாட்டுக் கொள்கையின் அடிப்படைக் கோட்பாடாகும். ஜவஹர்லால் நேரு உத்தியோகபூர்வமாக அறிவித்த காலம் முதல் இது அடிப்படைக் கொள்கையாக இருந்து வருகிறது. நம்பிக்கைக்கான அணிகலனாக அது எம்மிடம் உள்ளது என்று இந்தியப் பிரதமர் மன்மோகன் சிங் கூறியுள்ளார்.

கெடுபிடி யுத்தத்தின் பின்னரான காலகட்டத்தில் இரு இராணுவ அணிகளாக உலகம் நீண்ட காலத்திற்கு பிளவுபட்டு இருக்கவில்லை. உலக ஒழுங்கில் பங்களிப்பினை வழங்கக் கூடிய விதத்தில் அணிசேரா அமையம் தோற்றம் பெற்றுவருகிறது.

அணிசேரா அமையத்தின் வேறுபட்ட தன்மையும் உலகளாவிய தன்மையும் இன்றைய சவால்களுக்கு தீர்வு காண்பதற்கு தனித்துவமான வாய்ப்பை வழங்குவதாக இந்தியப் பிரதமர் கூறியுள்ளார்.

அபிவிருத்தி அடைந்து வரும் நாடுகளின் அபிவிருத்தி இலக்கு, காலநிலை மாற்றம், உணவுப் பாதுகாப்பு, சக்திப் பாதுகாப்பு, பயங்கரவாதம், சர்வதேச ஆட்சி முறைமை, வடிவமைப்பில் மறுசீரமைப்பு உட்பட பல விடயங்கள் தொடர்பாக அணிசேரா அமைய உச்சி மாநாட்டில் ஆராயப்படவுள்ளது.

கெப்டன் கொலராடோ நிவாரண உதவிகள் இந்த வாரத்துக்குள் விநியோகம்!

ship121212.jpgஇந்தியா விலிருந்து இலங்கைக்கு கெப்டன் கொலராடோ கப்பல் மூலம் கொண்டுவரப்பட்ட நிவாரண உதவிகள் இந்த வாரத்துக்குள் வவுனியா நிவாரணக் கிராமங்களில் உள்ள மக்களுக்கு விநியோகிக்கப்படும் என இலங்கை செஞ்சிலுவைச் சங்கம் அறிவித்துள்ளது.

இலங்கைக்கு கடந்த வாரம் கெண்டுவரப்பட்ட 16.7 மில்லியன் ரூபா பெறுமதியான 650 மெற்றிக் தொன் நிவாரண உதவிப் பொருட்களில் அரிசி, மா,  பால்மா,  மற்றும் மருந்துப் பொருட்கள் அடங்கியுள்ளதாக அறிவிக்கப்பட்டுள்ளது.  27 கொள்கலன்களின் கொண்டுவரப்பட்டுள்ள இப்பொருட்கள் இப்போது கொழும்புத் துறைமுகத்தில் சுங்க அதிகாரிகள் பரிசோதனைக்கு உட்படுத்தப்பட்டுள்ளது.

புலம் பெயர்ந்து தமிழ் மக்களால் ‘வணங்கா மண்’ கப்பல் மூலம் அனுப்பப்பட்ட இந்த நிவாரண உதவிகள் சென்னைத் துறைமுகத்தில் இறக்கப்பட்ட பின்னர் அங்கிருந்து ‘கெப்டன் கொலராடோ’  கப்பல் மூலம் இலங்கைக்கு கொண்டுவரப்பட்டது குறிப்பிடத்தக்கது.

தமிழர்களின் பிரச்சினைக்கான தீர்வினை இழுத்தடிக்க ஜனாதிபதிக்கு உரிமையில்லை -மனோ கணேசன்

mono.jpgதேர்தல் களைக் குறிக்கோளாகக் கொண்டு காலத்தை வீணடிப்பதற்கும் தமிழர் பிரச்சினைக்கான தீர்வை இழுத்தடிப்பதற்கும் ஜனாதிபதிக்கு உரிமையில்லை. இதய சுத்தியுடன் செயற்பட்டால் கட்சி பேதமற்ற வகையில் இணைந்து செயற்படுவதற்கு தயாராகவே இருக்கின்றோம் என ஜனநாயக மக்கள் முன்னணியின் தலைவரும் மக்கள் கண்காணிப்புக்குழுத் தலைவருமான மனோ கணேசன் எம்.பி. தெரிவித்தார்.

அதிகாரப்பகிர்வு தொடர்பில் அரசாங்கத்துக்குள் மாத்திரமல்ல ஐக்கிய தேசியக் கட்சிக்குள்ளும் குழப்பநிலை நிலவிக் கொண்டிருக்கின்றது. எனவே, சர்வஜன வாக்கெடுப்பு ஒன்றை உடனடியாக நடத்துவதன் மூலம் தேசிய பிரச்சினைக்கு தீர்வு பெற்றுக் கொடுப்பதற்கான மக்கள் ஆணையைப் பெறமுடியும் என்றும் அவர் சொன்னார். சமாதானத்தை வென்றெடுக்கும் அரசியல் தீர்வைப் பெற்றுத்தாரும் என்ற தொணிப்பொருளில் ராஜகிரியவில் அமைந்துள்ள ஸ்ரீலங்கா சுதந்திரக்கட்சி மக்கள் பிரிவு அலுவலகத்தில் இன்று நடைபெற்ற செய்தியாளர் மாநாட்டிலேயே மனோ கணேசன் எம்.பி. இதனைத் தெரிவித்தார்.

22ம் தேதி சுனாமி வரும் – எஸ்.எம்.எஸ்., மெயில் மூலம் புரளி

tsunami111.jpgமுழு சூரிய கிரகண தினமான வருகிற 22ம் தேதி ஜப்பான் கடல் பகுதியில் பயங்கர பூகம்பம் ஏற்படும். இதனால் இந்தியா உள்ளிட்ட நாடுகளை சுனாமி தாக்கும் என்று ஒரு எஸ்.எம்.எஸ் தகவல் படு வேகமாக பரவி வருகிறது. இமெயில், எஸ்.எம்.எஸ். மூலம் பரப்பப்பட்டு வரும் இந்த தகவல், உலக நாடுகள் பலவற்றிற்கும் போய்க் கொண்டிருக்கிறது.

அந்த மெயிலில் உள்ள தகவல் இதுதான்…வரும் 22ம் தேதி முழு சூரிய கிரகணம் ஏற்பட உள்ளது. 6 நிமிடம் 39 விநாடிகள் நீடிக்கும் இந்த கிரகணத்தின் போது, சூரியனின் ஈர்ப்பு சக்தி பூமியை வழக்கத்தை விட வேகமாக இழுக்கும். இதனால், பூமிக்கு ஆதாரமாக விளங்கும் பிளேட்டுகள் நகர்ந்து பயங்கர பூகம்பம் ஏற்படும் அபாயம் இருக்கிறது.

ஜப்பானின் தெற்கு பகுதியில் பசிபிக் பெருங்கடலுக்கு அடியில் 22ம் தேதி இந்திய நேரப்படி மதியம் 11.30க்கு பூகம்பம் ஏற்பட வாய்ப்பு உள்ளது. ரிக்டர் அளவுகோலில் 6 புள்ளிக்கு மேல் பதிவாகும் இந்த பயங்கர பூகம்பத்தால் சுனாமி உருவாகும் அபாயம் இருக்கிறது.

அடுத்த 2 மணி நேரத்தில் ஜப்பான், பிலிப்பைன்ஸ், இந்தோனேசியாவையும், 4 மணி நேரத்துக்கு பின் மதியம் 3.30 மணிக்கு இந்தியா, இலங்கை, மாலத்தீவு கடலோர பகுதிகளையும் பேரலைகள் தாக்கும். இந்த சுனாமியில் இருந்து தப்பிக்க கடலோர பகுதிக்கு செல்லாதீர்கள் என்று கூறப்பட்டுள்ளது.

இந்த எஸ்.எம்.எஸ்., இமெயில் தகவலால் புதிய பரபரப்பு ஏற்பட்டுள்ளது.

தேசம்நெற் வன்னி முகாம்களில் மேற்கொள்ளும் கல்வித் திட்டம் – கேள்வியும் பதிலும் & தேசம்நெற் வாசகர்களிடம் ஒரு விண்ணப்பமும்

students.jpgவன்னி முகாம்களில் தங்கியுள்ள 5ம் தர மாணவர்களின் கல்வி முன்னேற்றத்திற்காக மேற்கொள்ளப்பட்ட நூல் விநியோகத்திட்டத்திற்கு இன்னமும் 3 65 000 ரூபாய் (2000 பவுண்) தேவைப்படுகின்றது. மேற்படி தொகையை தேசம்நெற் வாசகர்களிடம் இருந்து எதிர்பார்க்கின்றோம். இத்திட்டத்திற்கு பங்களிக்க விரும்புபவர்கள் தேசம்நெற்றுடன் தொடர்பு கொள்ளவும். தங்களை நேரடியாக இனம்காட்டிக் கொள்ள விரும்பாதவர்கள் மின்அஞ்சலூடாக தொடர்பு கொள்ள முடியும்.

தொடர்பு விபரங்கள்:
தொடர்புகளுக்கு: த ஜெயபாலன் – ரி சோதிலிங்கம்
தொலைபேசி இல – 0044 208 279 0354
கைத் தொலைபேசி இல – 0044 7800 596 786 – 0044 7846 322 369
மின்அஞ்சல் : thesam97@hotmail.com

வன்னி முகாம்களில் தமது புலமைப் பரிசில் பரீட்சையை எதிர்நோக்கி இருக்கும் மாணவர்களின் கல்விச் செயற்பாடுகளுக்கு உதவுமுகமாக 28 இலட்சம் (27 77 000) ரூபாய் செலவில் நூல் வழங்கும் திட்டம் ஒன்றை தேசம்நெற் முன்னெடுத்தது அனைவரும் அறிந்ததே. தற்போது இத்திட்டத்தின் இறுதிப் பகுதியில் நாங்கள் உள்ளோம். மேலும் ஓகஸ்ட் நடுப்பகுதியில் பரீட்சைகள் நடக்க இருக்கின்றது. அதனால் இன்னும் சில தினங்களுக்குள் மாணவர்களுக்கான நூல்கள் அனைத்தும் விநியோகிக்கப்பட வேண்டியுள்ளது.

இத்திட்டத்திற்கு இதுவரை பங்களித்தவர்கள் விபரம் வருமாறு:
9 25 000 ரூபாய் : சிந்தனை வட்டம்
7 00 000 ரூபாய் : மத்திய இலங்கை முஸ்லீம் பட்டதாரிகள் ஒன்றியம் (இலங்கை)
5 50 000 ரூபாய் (3000 பவுண்) : அகிலன் பவுண்டேசன் (லண்டன்)
2 00 000 ரூபாய் : தேசம்நெற்    
   37 000 ரூபாய் (200 பவுண்) : பி சோமசுந்தரம் (லண்டன்)
      
24 12 000 ரூபாய் : மொத்தமாக இதுவரை உறுதியளிக்கப்பட்ட தொகை

இவற்றைக் கருத்தில்கொண்டு தேசம்நெற் அதன் வாசகர்களிடம் இந்த உதவி விண்ணப்பத்தை முன் வைக்கின்றது. இத்திட்டம் பற்றிய முழுமையான விபரங்களை கேள்வி பதில் வடிவில் வழங்கி உள்ளோம். மேலதிக விபரங்களுக்கு மேலுள்ள தொடர்பு இலக்கங்களுடன் தொடர்பு கொள்ளவும். இக்கல்வித்திட்டம் தொடர்பாக பரிமாறப்பட்ட கடிதங்களைப் பார்க்க அருகில் உள்ள இணைப்பை அழுத்தவும்.

தேசம்நெற் முன்னெடுக்கும் 5ம் தர மாணவர்களுக்கான புலமைப்பரிசில் பரீட்சைக்கான கல்வித் திட்டம் – கேள்வியும் பதிலும்

புலமைப் பரிசில் பரீட்சை என்றால் என்ன:
இலங்கையில் அரசாங்கப் பரீட்சை என்ற அடிப்படையில் 03 பிரதான பரீட்சைகள் நடைபெறுகின்றன.
1. தரம் 05 புலமைப்பரிசில் பரீட்சை
2. க.பொ.த சாதாரணதர பரீட்சை
3. க.பொ.த உயர்தர பரீட்சை

இப்பரீட்சைகளுள் தரம் 05 புலமைப்பரிசில் பரீட்சையை பாடசாலை மாணவனொருவன் எதிர்நோக்கும் முதலாவது பரீட்சையாகும்.

இதனை லண்டனில் நடைபெறும் 11 பிளஸ் பரீட்சைக்கு ஒப்பிடமுடியும்.

இப் பரீட்சையில் சித்தியடைவதால் மாணவர்களுக்குக் கிடைக்கும் நன்மைகள் என்ன:
தரம் 05 புலமைப்பரிசில் பரீட்சையானது மாணவர்களை உயர்தர பாடசாலைகளுக்குத் தேர்ந்தெடுப்பதற்கும், மாணவர்களுக்கு உதவிப் பணம் வழங்குவதற்குமான பரீட்சையாக அமைந்துள்ளது. இப்பரீட்சையில் அதிகூடிய புள்ளிகளைப் பெறும் மாணவர்கள் இலங்கையிலுள்ள மிகவும் பிரபல்யமான பாடசாலைகளுக்கு அனுமதிக்கப்படுவர்.

அதேநேரம், இப்பரீட்சையில் சித்தியடையும் மாணவர்களுக்கு க.பொ.த. உயர்தரம் சித்தியடையும் வரை மாதந்தோறும் (தற்போது) ரூபாய் 500 உதவிப் பணமாக அரசாங்கத்தால் வழங்கப்படும். உரிய மாணவன் பல்கலைக்கழகத்துக்குத் தெரிவு செய்யப்பட்டாலும் இத்தொகை அதிகரிக்கப்பட்டு வழங்கப்படும்.

எத்தனை மாணவர்கள் இப்பரீட்சையில் தோற்றுகின்றனர்:
தரம் 05 புலமைப்பரிசில் பரீட்சையானது ஒரு போட்டிப் பரீட்சையாகும். சராசரியாக ஆண்டொன்றுக்கு 70 000 மாணவர்கள் மட்டில் அகில இலங்கை ரீதியில் தமிழ்மொழி மூலமாக தோற்றுவர். இவர்களுள் சுமார் 3500 மாணவர்கள் மட்டில் சித்தியடைவர்.

தற்போது இப்பரீட்சையில் தோற்றவுள்ள எத்தனை மாணவர்கள் இடப்பெயர்வு முகாம்களில் உள்ளனர்:
இடப்பெயர்வு முகாம்களில் உள்ள 4872 மாணவர்கள் இப்பரீட்சையில் தோற்ற உள்ளனர்.

இலங்கை இலவசக் கல்வி வழங்கும் நாடாக இருக்கையில் எதற்காக அம்மாணவர்களுக்கு இந்த உதவிகள் வழங்கப்பட வேண்டி உள்ளது:
அண்மைய வருடங்களாக இடம்பெற்ற உள்நாட்டு யுத்தத்தால் கடந்த ஆறு மாதங்கள் முதல் இரண்டு ஆண்டுகள் வரை வன்னிப் பகுதியில் உள்ள பாடசாலைகள் இயங்கவில்லை. அதனால் அந்த மாணவர்களுக்கான பாடப் புத்தகங்களும் விநியோகிக்கப்படவில்லை. தற்போது அவர்கள் அனைத்தையும் இழந்து இடம்பெயர்ந்துள்ள நிலையில் அவர்கள் பாடப் புத்தகங்களைப் பெற்று படிப்பதற்கான வாய்ப்பான சூழல் இடம்பெயர்வு முகாம்களில் இல்லை.

மேலும் இந்நிலைக்கு முன்னதாகவே புலமைப் பரிசில் பரீட்சைக்கான துரித வழிகாட்டல் நூல்களை அரசின் இலவச கல்வித் திட்டத்தின் கீழ் வழங்குவதில்லை. அதனால் மாணவர்கள் அதனை தனிப்பட்ட முறையில் வாங்கியே தமது கற்கைகளை மேற்கொள்கின்றனர்.

ஏற்கனவே கல்வி பாதிக்கப்பட்ட நிலையில் பரீட்சைக்குத் தோற்றும் இம்மாணவர்களுக்கு துரித மீட்டல் செய்வதற்கான வினா விடைத் தொகுப்புகளும் அதற்கான வழிகாட்டி நூல்களும் மிகவும் அவசியம்.

எதற்காச் சிந்தனை வட்டத்தின் வெளியீடுகள் தெரிவு செய்யப்பட்டது:
சிந்தனை வட்டம் கடந்த 15 வருடங்களாக புலமைப் பரிசில் பரீட்சைகளுக்கான நூல்களை வெளியிட்டு வருகின்றது. இலங்கை பூராவும் உள்ள 700க்கும் மேற்பட்ட பாடசாலைகளுக்கு சிந்தனைவட்டம் இந்நூல்களை விநியோகித்து உள்ளது. சிந்தனை வட்டத்தின் நூல்களின் தரம் இத்துறையில் நீண்டகாலம் நிலை பெற்ற காரணங்களினால் விசேட கல்விப் பணிப்பாளர் தனது உதவிக் கோரிக்கையை சிந்தனை வட்டத்திடம் வைத்தார்.

இந்நூல் திட்டத்திற்கு ஏற்படும் செலவு என்ன:
ஒவ்வொரு மாணவருக்கும்
30 வினாத்தாள்கள் கொண்ட வினாத் தொகுப்பு (148 பக்கங்கள்) 180.00 ரூபாய்
வழிகாட்டி நூல் 1 97.50 ரூபாய்
வழிகாட்டி நூல் 2 97.50 ரூபாய்
வழிகாட்டி நூல் 3 97.50 ரூபாய்
வழிகாட்டி நூல் 4 97.50 ரூபாய்

570.00 ரூபாய் : ஒரு மாணவருக்கு இந்நூல் தொகுப்பை வழங்க ஏற்படும் செலவு 
(வழிகாட்டி நூல்கள் இல்லாது 100 பக்கம் கொண்ட வினாத் தொகுப்பின் சந்தை மதிப்பு 200 முதல் 225 ரூபாய்)

27 77 000.00 ரூபாய் : 4872 மாணவர்களுக்கும் தொகுப்பை வழங்க ஏற்படும் செலவு

வெளியீட்டாளர்களான சிந்தனை வட்டம் செலவு தொகையின் மூன்றிலொரு பகுதியைப் பொறுப்பேற்பதுடன் விநியோகத்தையும் மேற்கொள்கின்றனர்.
9 25 000.00 ரூபாய் : சிந்தனை வட்டம் பொறுப்பேற்றசெலவுத் தொகை.

18 52 000.00 ரூபாய் : சிந்தனை வட்டம் பொறுப்பேற்ற பின் நூல்தொகுப்பை வழங்க ஏற்படும் செலவு.

இந்நூல் திட்டத்திற்கான செலவை எவ்வாறு பெற்றுக்கொள்வது:
ஆரம்பித்தில் தேசம்நெற் இம்முயற்சியை முன்னெடுத்திருந்தது. தற்போது மாணவர்களின் தொகை அதிகரித்துள்ள நிலையில் தேசம்நெற் தனித்து இத்திட்டத்தை நிறைவேற்றும் பொருளாதாரப் பலத்தை கொண்டிருக்காததால் வெவ்வேறு உதவி நிறுவனங்கள் தனிநபர்களுக்கு வேண்டுகோள் விடுக்கப்பட்டது. அதன் மூலம் பெறப்பட்ட உதவிகள் வருமாறு

7 00 000 ரூபாய் : மத்திய இலங்கை முஸ்லீம் பட்டதாரிகள் ஒன்றியம் (இலங்கை)
5 50 000 ரூபாய் (3000 பவுண்) : அகிலன் பவுண்டேசன் (லண்டன்)
2 00 000 ரூபாய் : தேசம்நெற்    
   37 000 ரூபாய் (200 பவுண்) : பி சோமசுந்தரம் (லண்டன்)

14 87 000 ரூபாய் : மொத்தமாக இதுவரை உறுதியளிக்கப்பட்ட தொகை.

3 65 000 ரூபாய் (2000 பவுண்) : இத்திட்டத்தினை நிறைவேற்ற இன்னமும் தேவையான நிதி.

இதன் நம்பகத் தன்மையை எவ்வாறு உறுதிப்படுத்துவது:
இந்நூல் திட்டத்திற்கு பங்களிப்பு செய்யதவர்களின் முழுமையான விபரங்கள் செலவீனங்களுக்கான கணக்கு விபரங்கள் நூல்கள் விநியோகிக்கப்பட்டதற்கான ஆதாரங்கள் அனைத்தும் தேசம்நெற் இணையத்திலும் லண்டன் குரல் பத்திரிகையிலும் வெளியிடப்படும்.

இத்திட்டத்திற்கு உதவ விரும்புபவர்கள் எவ்வாறு உதவலாம்:
இந்நூல் திட்டத்திற்கு உதவ விரும்புபவர்கள் தேசம்நெற்றுடன் நேரடியாகத் தொடர்பு கொண்டு தங்கள் உதவியை வழங்கலாம். உதவி வழங்குபவரின் பெயரும் உதவித்தொகையும் முழுமையான கணக்கு விபரமும் தேசம்நெற் இணையத் தளத்திலும் லண்டன் குரல் பத்திரிகையிலும் பிரசுரிக்கப்படும்.

எப்படித் தொடர்பு கொள்வது:
தொடர்புகளுக்கு: த ஜெயபாலன் – ரி சோதிலிங்கம்
தொலைபேசி இல – 0044 208 279 0354
கைத் தொலைபேசி இல – 0044 7800 596 786 – 0044 7846 322 369
மின்அஞ்சல் : thesam97@hotmail.com

இந்நூல் திட்டத்தின் பயனை எவ்வாறு மதிப்பிட முடியும்:
சூழல் இடம்கொடுத்தால் இம்மாணவர்கள் மாதிரிப் பரீட்சைகளுக்கு அமர்த்தப்பட்டு அவற்றின் மதிப்பீடுகள் உதவி வழங்குபவர்களுக்கு தெரியப்படுத்தப்படும். மேலும் இம்மாணவர்கள் ஓகஸ்ட் நடுப்பகுதியில் நடைபெறவுள்ள புலமைப் பரிசில் பரீட்சைகளில் தோற்றிப் பெறும் பெறுபேறுகள் உதவி வழங்கியவர்களுக்கு அனுப்பி வைக்கப்படும்.

சமூக வளர்ச்சியின் அடிப்படை கல்வி!
இளமையில் கல்வி சமூகத்தின் அஸ்திவாரம்!

வட மாகாண பொருளாதார அபிவிருத்திக்கு விசேட கடன் திட்டம்!

வடக்கின் பொருளாதாரத் துறைகளை மீளக் கட்டியெழுப்பும் நோக்கில் மத்திய வங்கியினால் நடைமுறைப்படுத்தப்படவுள்ள ‘வடக்கின் எழுச்சி ’ விசேட கடன் திட்டத்தை ஜனாதிபதி மஹிந்த ராஜபக்ஷ நேற்று உத்தியோகபூர்வமாக அறிமுகப்படுத்திவைத்தார். வடக்கில் விவசாயம், கால்நடை, கடற்றொழில் உள்ளிட்ட பொருளாதாரத் துறைகளைக் கட்டியெழுப்ப வசதியாக இப்புதிய கடன் திட்டம் அறிமுகப்படுத்தப்பட்டுள்ளதுடன் வடக்கு மக்களின் வாழ்வாதாரத்தைத் துரிதமாக மேம்படுத்தவும் இது வழிவகுக்குமென மத்திய வங்கி தெரிவித்தது.

வட மாகாணத்தின் அபிவிருத்திக்காக வங்கிகளின் பங்களிப்பினைப் பெற்றுக்கொள்ளும் வகையில் வங்கித்துறையினர் கலந்துகொண்ட விசேட கலந்துரையாடலொன்று நேற்று ஜனாதிபதி மஹிந்த ராஜபக்ஷவின் தலைமையில் நடைபெற்றது.

அலரி மாளிகையில் நேற்றுக்காலை இடம்பெற்ற இந்நிகழ்வின்போதே இலங்கை மத்திய வங்கியின்  ‘வடக்கின் எழுச்சி ’ கடன் திட்டத்தை உத்தியோகபூர்வமாக ஜனாதிபதி அறிமுகப்படுத்தி வைத்தார். இக்கடன் திட்டத்தின் கீழ் கடன் வழங்குவதற்காக தேர்ந்தெடுக்கப்பட்ட நிதி நிறுவனங்கள் தகுதியெனக் கருதும் சிறிய மற்றும் மத்திய தர வர்த்தக நடவடிக்கைகளுக்காக இலகு வட்டியில் கடன் வழங்கப்படவுள்ளது.

இதற்கென 3.000 மில்லியன் ரூபா நிதி ஒதுக்கப்பட்டுள்ளது. வட மாகாணத்தில் பல்வேறு வளங்கள் உள்ளன. அவற்றை முறையாகப் பயன்படுத்தி மக்களின் வாழ்வாதாரத்திற்குப் பயனளிப்பதற்காக அவற்றை மாற்ற வழிவகை செய்யப்படவுள்ளன.

இலங்கையின் வருடாந்த நெல் உற்பத்தியில் பத்துவீதம் வடக்கிலிருந்தே கிடைக்கின்றன. வெங்காயம்,  மிளகாய்,  பயறு,  நிலக் கடலை உட்பட பல்வேறு பயிர்ச் செய்கைகளிலும் வட மாகாணம் சிறந்து விளங்குகிறது.

நாட்டில் கடற்றொழிலில் ஈடுபட்டுள்ளவர்களில் 20 வீதமானோர் வடக்கைச் சார்ந்தவர்கள். அங்கு 219 மீனவர் கிராமங்கள் உள்ளதுடன் 1.29.000 குடும்பங்கள் அங்கு வாழ்கின்றன. இவர்களுக்கு வங்கிக் கடன் வசதிகளை பெற்றுக்கொடுப்பதன் மூலம் அவர்களின் வருமானத்தை அதிகரிக்க முடியுமென மத்திய வங்கி சுட்டிக்காட்டியுள்ளது.

ஓய்வு பெற்றுச் செல்லும் பிரதான பாதுகாப்பு அதிகாரி ஜனாதிபதியூடன் சந்திப்பு!

donald_perera.jpgதமது சேவையிலிருந்து ஓய்வு பெற்றுச் செல்லும் பிரதான பாதுகாப்பு அதிகாரி எயார் சீப் மார்ஷல் டொனால்ட் பெரேரா நேற்று ஜனாதிபதி மஹிந்த ராஜபக்ஷவைச் சந்தித்து கலந்துரையாடினார்.

அலரி மாளிகையில் இச்சந்திப்பு இடம்பெற்றது. எயார் சீப் மார்ஷல் டொனால்ட் பெரேராவின் சேவையை கௌரவிக்கும் முகமாக அவருக்கு ஜனாதிபதி நினைவுக் கேடயம் ஒன்றைப் பரிசளித்தார். 

மிஹின்-லங்கா இன்றுமுதல் திருச்சிக்கு புதிய சேவை

mihinlankaflight.jpgமிஹின்- லங்கா விமான நிறுவனம் கொழும்பிலிருந்து இந்தியாவின் திருச்சி நகருக்கான சேவையை இன்றுமுதல் ஆரம்பித்துள்ளது. வாரத்தில் நான்கு தடவைகள் திருச்சிக்கான போக்குவரத்தில் ஈடுபடவுள்ள மிஹின்-லங்கா விமான சேவையில் கத்தோலிக்க பக்தர்களின் வசதியைக் கருத்திற்கொண்டு புதிய சலுகைகள் அறிமுகப்படுத்தப்பட்டுள்ளதாக விமான சேவைகள் பிரதி அமைச்சர் சரத் குமார குணரத்ன தெரிவித்துள்ளார்.

இன்று திருச்சிக்குச் செல்லும் விமானத்தில் பிரதி அமைச்சர் சரத் குமார குணரத்னவுடன் கத்தோலிக்க மத குருக்கள் மற்றும் பக்தர்கள் பயணம் செய்யவுள்ளதாகவும் அறிவிக்கப்பட்டுள்ளது.

மட்டக்களப்பில் தங்கியிருந்த 37 குடும்பங்கள் இன்று மீள்குடியேற்றம!

உயர் பாதுகாப்பு வலயம் காரணமாக மூதூர் கிழக்கிலிருந்து இடம்பெயர்ந்து மட்டக்களப்பு மாவட்டத்தில் தங்கியிருந்த 37 குடும்பங்கைளச் சார்ந்தவர்கள் இன்று கிளிவெட்டியில் மீள் குடியேற்றப்பட்டனர். சத்துருக்கொன்டான் – இலக்கம் 02 முகாமில் கடந்த 3 வருடங்களாக தங்கியிருந்தவர்களில் நான்காவது தொகுதியினராக  37 குடும்பங்கைளச் சேர்ந்த 122 பேர் 7 பஸ் வண்டிகளில் வெருகல் ஊடாக கிளிவெட்டிக்கு அதிகாரிகளினால் அனுப்பி வைக்கப்பட்டுள்ளனர்.

சுயவிருப்பத்துடனேயே இக்குடும்பங்கள் கிளிவெட்டி இடைத்தரிப்பு முகாமிற்கு அனுப்பி வைக்கப்பட்டுள்ளதாக அதிகாரிகள் தெரிவிக்கின்றனர். குறிப்பிட்ட உயர் பாதுகாப்பு வலயம் காரணமாக தமது இருப்பிடங்களை இழந்துள்ள குடும்பங்களில் 745 குடும்பங்களைச் சேர்ந்த 2565 பேர் மட்டக்களப்பு மாவட்டத்திலுள்ள 11 முகாம்களிலும் உறவினர்கள் மற்றும் நண்பர்கள் வீடுகளிலும் தங்கியிருந்தனர்.

அதிகாரிகளின் தகவல்களின் படி மட்டக்களப்பு மாவட்டத்தில் இது வரை பலாச்சோலை, மாவடிவேம்பு, கிரிமுட்டி ஆரையம்பதி ஆதிவைரவர் கோவிலடி முகாம் மற்றும் சத்துருக்கொன்டான் இலக்கம் -02 ஆகிய முகாம்கள் மூடப்பட்டு 4 கட்டங்களில் கடந்த யூன் 16 ஆம் திகதி முதல் 155 குடும்பங்களைச் சேர்ந்த 608 பேர் இது வரை அங்கு அழைத்துச் செல்லப்பட்டுள்ளனர்

அணிசேரா நாடுகளின் உச்சிமாநாட்டில் கலந்துகொள்ள ஜனாதிபதி இன்று எகிப்து பயணம்

mahinda-rajapa.jpgஅணிசேரா நாடுகளின் 15ஆவது உச்சிமாநாட்டில் கலந்துகொள்வதற்காக ஜனாதிபதி மஹிந்த ராஜபக்ஷ இன்று எகிப்துக்குச் செல்லவுள்ளார். இந்த உச்சிமாநாடு எகிப்தின் ஷாம் அல்-ஷேக் நகரில் நாளை ஆரம்பமாகவுள்ளது. இரண்டு நாட்களுக்கு நடைபெறவுள்ள இம்மாநாட்டின் நாளைய முதல் நாள் அமர்வில் ஜனாதிபதி உரையாற்றவுள்ளார் என வெளிவிவகார அமைச்சு தெரிவித்துள்ளது.

இந்த மாநாட்டில் பங்குபற்றுவதற்காக எகிப்து செல்லவுள்ள ஜனாதிபதி தலைமையிலான இலங்கைக் குழுவில் வெளிவிவகார அமைச்சர் ரோஹித போகொல்லாகம, வெளிவிவகார அமைச்சின் செயலாளர் கலாநிதி பாலித கொஹன மற்றும் ஜனாதிபதியின் செயலாளர் லலித் வீரதுங்க ஆகியோர் உட்பட சிரேஷ்ட அதிகாரிகள் பலரும் கலந்துகொள்ளவுள்ளனர்.

அபிவிருத்திக்கான சமாதானமும் சர்வதேச ஒருமைப்பாடும் எனும் தொனிப்பொருளில் நடைபெறவுள்ள இந்த உச்சிமாநாட்டில் உலகம் எதிர்நோக்கும் சவால்கள், பாதுகாப்பு, ஆயுதக் களைவு, சூழல் மாற்றம், மற்றும் மனித உரிமைகள் உட்பட பல்வேறு முக்கிய விடயங்கள் தொடர்பாக ஆராயப்படவுள்ளன.

இதேவேளை, ஜனாதிபதி மஹிந்த ராஜபக்ஷ இம்மாநாட்டில் கலந்துகொள்ளும் அணிசேரா நாடுகளின் தலைவர்களைச் சந்தித்துப் பேச்சுவார்த்தை நடத்தவுள்ளதோடு, இலங்கையின் பயங்கரவாத ஒழிப்பு மற்றும் நாட்டின் சமகால நிலைவரங்கள் என்பன தொடர்பாக இச்சந்திப்புக்களின்போது அவர்களுக்கு விளக்கிக் கூறவுள்ளார் என்றும் வெளிவிவகார அமைச்சு மேலும் குறிப்பிட்டுள்ளது.

அணிசேரா நாடுகள் அமைப்பில் 118 நாடுகள் அங்கத்துவம் வகிக்கின்றமை குறிப்பிடத்தக்கது.