16

16

12 ரசிகர்கள் தற்கொலை செய்து கொண்டுள்ளனராம்.

maical-jak.jpgபாப் மன்னன் மைக்கேல் ஜாக்சனின் மறைவைத் தாங்க முடியாமல், இதுவரை உலகம் முழுவதும் 12 ரசிகர்கள் தற்கொலை செய்து கொண்டுள்ளனராம். மேலும், ஏராளமான ரசிகர்கள் தற்கொலை எண்ணத்திலிருந்து வெளிவர உதவுமாறு அதற்கான ஹாட்லைன் வசதியைத் தொடர்பு கொண்டபடி உள்ளனராம். இதுவரை 50க்கும் மேற்பட்டோர் உதவி கோரி தொடர்பு கொண்டுள்ளதாக மன நல ஆலோசகர்கள் தெரிவிக்கின்றனர்.

லண்டனைச் சேர்ந்த ஜாக்சனின் ரசிகரான கேரி டெய்லர் என்பவர் ஜாக்சனுக்கான இன்டர்நெட் ரசிகர் மன்றத்தை நடத்தி வருகிறார். அவர் கூறுகையில், இதுவரை 12 ரசிகர்கள் தற்கொலை செய்து கொண்டுள்ளனர். இது மிகவும் கவலைகரமானது. மைக்கேல் ஜாக்சன் இதுபோன்ற மரணத்தை விரும்ப மாட்டார். அதை ரசிகர்கள் புரிந்து கொள்ள வேண்டும். வாழ்க்கையை வாழ வேண்டும் என்பதே ஜாக்சனின் விருப்பம் என்றார்.

ஜாக்சனின் மரணத்தால் அவரது பல ரசிகர்கள் மன ரீதியாக பாதிக்கப்பட்டுள்ளனராம். இதுபோன்ற பிரபலங்கள் மரணமடையும்போது அது மனதளவில் பலரையும் வெகுவாக பாதித்து விடுகிறது என்கிறார் லைப்லைன் என்கிற மன நல ஆலோசனை அமைப்பின் தலைமை செயலதிகாரி டான் ஓ நீல்.

இதற்கிடையே, ஜாக்சனின் குடும்ப நண்பரான ஜெசி ஜாக்சன் ரசிகர்களுக்கு ஒரு வேண்டுகோள் வைத்துள்ளார். அதில், யாரும் தங்களைத் தாங்களே மாய்த்துக் கொள்ளக் கூடாது. இதயத்தை பலப்படுத்திக் கொள்ள வேண்டிய நேரம் இது.

ஜாக்சனின் மரணம் பெரும் வலிதான். ஆனால் ஜாக்சனின் வாழ்க்கையை நாம் அனைவரும் கொண்டாட வேண்டும். அதுதான் ஜாக்சனுக்கு நாம் செலுத்தும் உண்மையான மரியாதையாக இருக்கும் என்றார்.

மரண தண்டனையை மீண்டும் அமுலாக்க அரசாங்கம் ஆலோசனை – நீதியமைச்சின் செயலாளர் தகவல்

gallow.jpgமரண தண்டனையை இலங்கையில் மீண்டும் அமுல்படுத்துவதற்கு அரசாங்கம் ஆலோசித்து வருவதாக  நீதியமைச்சின் செயலாளர் சுகத கம்லத் தெரிவித்தார். ஜனாதிபதி மஹிந்த ராஜபக்ஷ எகிப்திலிருந்து நாடுதிரும்பியதும் மரணதண்டனையை இலங்கையில் அமுல்படுத்துவது தொடர்பில் இறுதித் தீர்மானம்  எடுக்கப்படும்  என்றும் அவர் கூறினார்

நீதி சட்ட மறுசீரமைப்பு அமைச்சின் கேட்போர் கூடத்தில் நேற்று புதன்கிழமை நடைபெற்ற ஊடகவியலாளர் சந்திப்பில் கலந்து கொண்டு கருத்து தெரிவித்த போதே அவர் இவ்வாறு கூறினார். இங்கு அவர் தொடர்ந்தும் கருத்துத் தெரிவிக்கையில்ää

மரண தண்டனை விதிக்கப்பட்ட சுமார் 200 கைதிகள் சிறைச்சாலைகளில் இருக்கின்றனர். மரண தண்டனையை நிறைவேற்றிக்கொள்வதில் சமூக மற்றும் சட்டப்பிரச்சினைகள் உள்ளன.

மரண தண்டனையை அமுல்படுத்துவதன் ஊடாக குற்றச்செயல்களை கட்டுப்படுத்தலாம் என்றும் கட்டுப்படுத்த முடியாது என்ற விவாதங்களும் முன்வைக்கப்படுகின்றன. எனினும் மரண தண்டனையை மீண்டும் அமுல்படுத்த வேண்டும் என்பதில் நீதியமைச்சு கூடுதலான அக்கறை செலுத்திவருக்கின்றது.

ஜனாதிபதி எகிப்திலிருந்து நாடு திரும்பியதும் இது தொடர்பில் இறுதித்தீர்மானம் மேற்கொள்ளப்படும் என்றும் அவர் கூறினார்.

ஈரானில் விபத்துக்குள்ளான விமானத்தின் இரு கருப்புப் பெட்டிகள் மீட்பு

iran-plane.jpgஈரானில் நேற்று விபத்துக்குள்ளான விமானத்தின் மூன்று கருப்புப் பெட்டிகளில் இரண்டு கண்டுபிடிக்கப்பட்டுள்ளதாகவும் மற்றதைத் தேடும் பணிகள் தொடர்ந்தும் இடம்பெற்று வருவதாகவும் அந்நாட்டின் வீதி மற்றும் போக்குவரத்து அமைச்சு அறிவித்துள்ளது.

மீட்கப்பட்ட இரு கருப்புப் பெட்டிகளும் பலத்த சேதத்துக்குள்ளாகியுள்ளன. எனினும் அவற்றிலிருந்து தகவல்களைப் பெற்றுக்கொள்வதற்கு முயற்சிகள் மேற்கொள்ளப்பட்டு வருவதாக அமைச்சின் அனர்த்த செயற்பாட்டுக் குழுத் தலைவர் அஹ்மத் மாஜித் தெரிவித்துள்ளார்.

இந்த விமானத்தில் பயணம் செய்த 15 விமான ஊழியர்கள் உட்பட 168 பேரும் பலியாகியுள்ளனர். அவர்களுள் 7 பேர் வெளிநாட்டவர்கள். ஏனைய அனைவரும் ஈரானைச் சேர்ந்தவர்கள் என்றும் அவர் மேலும் குறிப்பிட்டுள்ளார்.

ஈரானின் தலைநகரான தெஹ்ரானிலிருந்து ஆர்மேனியாவின் தலைநகரான யேரேவான் நகருக்குப் பயணித்துக்கொண்டிருந்த இவ்விமானம் நேற்று அந்நாட்டின் வடமேற்குப் பிரதேசத்திலுள்ள குவாஸ்வின் நகர பகுதியில் வைத்து விபத்துள்ளாகியுள்ளது.

இந்த விபத்தின் சில காட்சிகள் வீடியோவில் பதிவாகியுள்ளன. இவ்விபத்து காரணமாக நிலத்தில் ஒரு பாரிய பள்ளம் ஏற்பட்டிருப்பதையும்,  விமானத்தின் சிதறிய பகுதிகளிலிருந்து புகை வந்து கொண்டிருப்பதையும் ஈரானின் அரச தொலைக்காட்சி காண்பித்தாகவும் அறிவிக்கப்பட்டுள்ளது.

இவ்வருடம் உலகில் நிகழ்ந்த மிகப்பெரிய 5ஆவது விமான விபத்தாக ஈரான் விமான விபத்து கருதப்படுவதாக சீ.என்.என். சர்வதேச செய்திச் சேவை அறிவித்துள்ளமை குறிப்பிடத்தக்கது. 

இடம்பெயர்ந்த மக்களை உடனடியாக மீளக் குடியமர்த்தி அவர்களது வாழ்வாதாரத்துக்கு வழி ஏற்படுத்துவதே எமது நோக்கம் – ஜனாதிபதி

mahinda.jpg“வடக்கில் இடம்பெயர்ந்துள்ள மக்களை உடனடியாக அவர்களது சொந்த இடங்களில் மீளக் குடியேற்றி அவர்களது வாழ்வாதாரத்துக்கு வழி ஏற்படுத்திக் கொடுப்பதே எமது நோக்கமாகும்” என ஜனாதிபதி மஹிந்த ராஜபக்ஷ கூறினார். அணிசேரா நாடுகளின் உச்சி மாநாட்டில் கலந்துகொண்ட ஜனாதிபதி மேற்கண்டவாறு கூறினார்.

அணிசேரா நாடுகளின் 15வது உச்சி மாநாடு நேற்று எகிப்து, சார்ம் எல்ஷேக் நகரத்திலுள்ள மெரிரைம் மண் டபத்தில் நேற்று ஆரம்பமாகியது. 118 நாடுகள் அங்கம் வகிக்கும் இந்த அமைப்பின் தலைவர்கள் நேற்றைய மாநாட்டில் கலந்துகொண்டனர்.

இங்கு, இலங்கை நேரப்படி இரவு 8 மணியளவில் ஜனாதிபதி மஹிந்த ராஜபக்ஷ உரையாற்றினார். அவர் மேலும் கூறியதாவது :-

உலகில் கொடூரமான பயங்கரவாத அமைப்பொன்றை வேருடன் பிடுங்கி எறிவதற்கு எமது நாட்டால் முடிந்துள்ளது என்பதை முதலில் கூறிக்கொள்வதையிட்டு நான் பெருமையடைகிறேன். அது எவ்வகையிலும் விடுதலை அமைப்பு ஒன்று அல்ல.

வன்முறைகளை அடிப்படையாகக் கொண்ட தேச விரோதம் உக்கிரமடைந்த பிரிவினைவாத குழுவாகும். எனினும், இவ்வாறான பிரிவினைவாத பயங்கரவாத அமைப்பை சில நாடுகள் பிரசாரம் பண்ணுவதற்கு முனைந்திருப்பது கவலைக்குரிய விடயமாகும். அவ்வாறு செய்வதற்கு அவர்களால் முடிந்துள்ளமைக்கு காரணம் அசாதாரணமான அரசியல் நிலைமைதான் என்பது தெளிவாகிறது. ஏனெனில் அந்த நாடுகளுக்கு பயங்கரவாதம் சவாலாக இல்லையென்பதையே தெளிவாகக் காட்டுகிது.

பயங்கரவாதம் எம்மை அச்சமடையச் செய்வதுடன் பலவீனப்படுத்திவிடும். அதற்கு முகம் கொடுத்த சந்தர்ப்பங்களில் எமக்கு நிரந்தரமாக ஒத்துழைப்பு வழங்கிய அணிசேரா நாடுகளுக்கு நன்றிகளை தெரிவித்துக்கொள்கிறோம்.

எவ்வாறான பயங்கரவாதமாக இருந்தாலும் இலங்கை அதனை எதிர்ப்பு தெரிவித்த நாடாகும். எமது நாட்டின் பயங்கரவாதத்தை அடியுடன் தோல்வியுறச் செய்யக் கிடைத்தமை மகிழ்ச்சிகுரிய விடயமாகும்.

எமது நாட்டு மக்கள் கடந்த 27 வருடங்களாக மரணபயத்துடன் வாழ்ந்தார்கள். இறுதியாக பயங்கரவாதத்திலிருந்து விடுபட்ட பின் இன்று எமது நாடு முழுமையாக நிம்மதியடைந்துள்ளது. இலங்கையிலுள்ள அனைத்து மக்களும் எதிர்காலம் தொடர்பில் எதிர்பார்ப்புடன் இருக்கின்றனர்.

எங்களுக்கு உதவிகள் தேவைப்பட்ட இக்கட்டான நிலைமைகளின் போது எங்களுடன் இணைந்து சினேகபூர்வமாக செயற்பட்டவர்கள் எதிர்காலத்திலும் அவ்வாறு செய்வார்களென்றும் இலங்கை மக்களின் நலன் மற்றும் அபிவிருத்திக்காக முன்னெடுக்கப்படும் நடவடிக்கைகளுக்குத் தொடர்ந்தும் உதவுவார்களென்பது எமது பாரிய நம்பிக்கையாகும்.

இடம்பெயர்ந்துள்ளவர்களை உடனடியாக அவர்களது வீடுகளில் மீளக்குடியேற்றி அவர்களது வாழ்வாதாரத்துக்கு வழி ஏற்படுத்திக் கொடுப்பதே எமது நோக்கமாகும். இடம் பெயர்ந்தவர்களது தேவைகள் மிகவும் முக்கியமானதாகும். அவர்களின் நலனுக்காக எங்களுக்கு உதவிய சர்வதேச பிரஜைகளுக்கு இந்த தருணத்தில் நன்றிகளைத் தெரிவித்துக் கொள்கிறோம். அவ்வாறு ஐக்கிய நாடுகள் அமைப்புக்கும் விசேடமாக இலங்கைக்கு சமுகமளித்த ஐக்கிய நாட்டுப் பிரஜைகளுக்காகவும் எமக்கு உதவிய அதன் செயலாளர் நாயகத்துக்கும் எனது விசேட நன்றிகளை தெரிவித்துக்கொள்கிறேன்.

எமது நாட்டு மக்கள் ஏனைய மக்களுக்கு உதவுவதற்கு பழக்கப்பட்டவர்கள். அதனாலேயே இக்கட்டான நிலைமைகளின் போது எமது நாட்டின் ஏனைய பிரதேசங்களைச் சேர்ந்த மக்கள் இடம்பெயர்ந்தவர்களுக்காக உதவ முன்வந்தனர். இடம்பெயர்ந்த மக்களுக்கு கூடிய விரைவில் அவர்களின் வாழ்வாதாரத்தை ஏற்படுத்திக் கொடுப்பதற்கு எனது அரசாங்கம் மேற்கொண்டுள்ள சமூக, அரசியல் மற்றும் பொருளாதார வேலைத் திட்டத்துக்கு அவர்களது பங்களிப்பினை பெற்றுக்கொள்வதற்கும் எங்களது அரசுக்கு முடியுமென நான் நம்புகின்றேன்.

வேறு விடயங்களுள் பாதிக்கப்பட்ட நாடுகள் தற்போதைய சவால்களை வெற்றிகொள்வதற்காக தேவையான குறுகியகால கடனை திருப்பிச் செலுத்துவதை தற்காலிகமாக இடை நிறுத்துவதை கவனத்திற்கொள்ளுமாறு நான் மிகவும் பணிவன்போடு கேட்டுக்கொள்கிறேன்.

பல்வேறு நாடுகளைக் கொண்ட சிறிய அமைப்பாக சார்க் அமைப்பு விளங்குகின்றது. இந்த சார்க் அமைப்புக்கு நிரந்தர செயலகம் ஒன்று உள்ளது. துரதிஷ்டவசமாக அணிசேரா அமைப்புக்கு 50 ஆண்டுகளுக்கு மேலாகியும் இன்னும் நிரந்தரமான செயலகமொன்றை ஸ்தாபித்துக் கொள்வதற்கு முடியாமல் போயுள்ளது. எமது அமைப்புக்காக செயலகமொன்றை ஸ்தாபிப்பதற்கு அணிசேரா அமைப்பின் தலைவர்களாகிய நாங்கள் ஒன்றிணைந்து செயற்படுவோமென்று நான் ஆலோசனை வழங்குகிறேன்.

தாங்கள் இந்த சந்தர்ப்பத்திலே பயங்கரவாதத்திற்கு எப்பொழுதும் தலைதூக்க முடியாத படி சமூகத்தில் சமாதானம் மற்றும் பாதுகாப்புக்காக ஒற்றுமையாக செயற்படுவதற்கும் எமது இனங்களின் ஒருமைப்பாடு மற்றும் அபிவிருத்தி பொருளாதாரக் கட்டமைப்பு ஒன்றை ஏற்படுத்திக் கொடுப்பதற்கு பொறுப்புடன் செயற்பட ஒன்றுபடுவோம் எனவும் ஜனாதிபதி தனது உரையில் தெரிவித்துள்ளார்.

விடுதலைப்புலிகளின் தயாமோகன் மலேசியாவுக்கு தப்பிச் சென்றுவிட்டார் – அமைச்சர் முரளீதரன் தெரிவிப்பு

விடுதலைப்புலிகளின் சிரேஷ்ட தலைவர்களில் ஒருவரான தயாமோகன் மலேசியாவுக்கு தப்பிச் சென்று விட்டதாக அமைச்சர் விநாயகமூர்த்தி முரளீதரன் (கருணா) கூறியுள்ளார். கடந்த மே மாதம் விடுதலைப்புலிகள் தோற்கடிக்கப்பட்ட பின்பு புலி உறுப்பினர்கள் சரணடைய முயற்சிப்பதாகவும் அல்லது வெளியேற விரும்புவதாகவும் முன்னர் அமைச்சர் முரளீதரன் கூறியிருந்தார்.

பி.பி.சி.யின் சந்தேசிய சேவைக்கு இதனைத் தெரிவித்துள்ள அமைச்சர் முரளீதரன் அம்பாறைக் காட்டுக்குள் இருந்த தயாமோகனும் கேணல் ராமும் தப்பிச் சென்றுவிட்டதாக கூறியுள்ளார். ஆனால், இந்த தகவல் தொடர்பான தமது வட்டாரம் குறித்த விபரத்தை அவர் வழங்கியிருக்கவில்லை என்று பி.பி.சி. செய்திச் சேவை தெரிவித்தது.

விடுதலைப்புலிகள் தோற்கடிக்கப்பட்ட பின் பி.பி.சி. தமிழ்ச் சேவைக்கு கிழக்கிலுள்ள உறுப்பினர்கள் சரணடைவது குறித்துச் சிந்திக்கவில்லை என்று தயாமோகன் கூறியிருந்தார். இதேவேளை, இடம்பெயர்ந்த மக்களின் மீள்குடியேற்றம் மற்றும் ஒருங்கிணைதல் தொடர்பாக கருத்துத் தெரிவித்துள்ள அமைச்சர் முரளீதரன் கண்ணிவெடி அகற்றப்பட்ட பின்பு 300 குடும்பங்கள் மன்னார் பகுதியின் இரு கிராமங்களில் மீளக்குடியமர்த்தப்பட்டுள்ளதாக தெரிவித்துள்ளார்.

தமிழ்ப் படையணியை இலங்கை இராணுவம் உருவாக்குவது தொடர்பாக முன்னர் குறிப்பிட்டிருந்தது குறித்து கருத்து தெரிவித்த அவர்; ஆயுதப் படைகளில் தமிழ் இளைஞர்கள் இணைவதற்கு அரசாங்கம் ஊக்குவிப்பதாக கூறியுள்ளார்.

இதுவரை அவரின் 600 ஆதரவாளர்கள் இராணுவத்திலும் பொலிஸிலும் இணைந்துள்ளனர். மட்டக்களப்பில் பொலிஸ் பயிற்சி ஏற்பாடு செய்யப்பட்டுள்ளது என்று அவர் கூறியுள்ளார்.

200 மில். டொலர் கனரக ஆயுத ரவை கொள்வனவு நிறுத்தம்

sarath-pon-eka.jpgபுலிகளுக்கு எதிரான யுத்தத்தின் போது பயன்படுத்தவென சீனாவிடமிருந்து தருவிக்கப்படவிருந்த 200 மில்லியன் அமெரிக்க டொலர் பெறுமதியான கனரக ஆயுத ரவைகள் நிறுத்தப்பட்டதாக புதிய பிரதான பாதுகாப்பு அதிகாரியாக பதவியேற்ற ஜெனரல் சரத் பொன்சேகா தெரிவித்தார்.

பயங்கரவாதத்திற்கு எதிரான யுத்தம் குறித்த காலத்திற்குள் முடிவுற்றமையினாலும், புலிகளிடமிருந்து பெருந்தொகையான கன ரக ஆயுதங்கள், குண்டுகள் மீட்டெடுக்கப்பட்டமையிலுமே மேற்படி நடவடிக்கை எடுக்கப்பட்டதாக அவர் மேலும் தெரிவித்தார்.

புதிய பிரதான பாதுகாப்பு அதிகாரியாக ஜனாதிபதி மஹிந்த ராஜபக்ஷவினால் நியமிக்கப்பட்ட ஜெனரல் சரத் பொன்சேகா நேற்று தனது கடமைகளை பொறுப்பேற்றார். இதன் பின்னர் நடத்திய செய்தியாளர் மாநாட்டில் கலந்து கொண்டு உரையாற்றும் போதே அவர் மேற்கண்டவாறு குறிப்பிட்டார்.

கொழும்பு இராணுவத் தலைமையகத்திலுள்ள கூட்டுப் படைத் தலைமையகத்தில் நடைபெற்ற இந்த செய்தியாளர் மாநாட்டில் ஜெனரல் பொன்சேகா மேலும் உரையாற்றுகையில்:

யுத்தத்தின் இறுதிக் கட்டத்தில் பெருமளவிலான ரவைகள் பாவிக்கப்பட்டன. அதே சமயம் நாளுக்கு நாள் புலிகளின் கட்டுப் பாட்டிலிருந்த பிரதேசங்களை கைப்பற்றிய படையினர் அங்கிருந்து பெருந்தொகையான ஆயுதங்கள், துப்பாக்கி ரவைகள் மற்றும் பல்வேறு யுத்த உபகரணங்களை மீட்டெடுத்தனர்.

மீட்டெடுக்கப்பட்ட பெருந்தொகையான ஆயுதங்கள் மற்றும் உபகரணங்களில் சில அந்த சமயமே யுத்த காலத்தில் பயன்படுத்தப்பட்டன.

எஞ்சியுள்ள ஆயுதங்களையும், உபகரணங்களையும் பயிற்சி நடவடிக்கைகளுக்காக பயன்படுத்தவுள்ளதுடன் மேலதிக களஞ்சியமாகவும் வைக்கவுள்ளோம். ஜெனரல் பொன்சேகா கடமைகளை பொறுப்பேற்க முன்னர் முப்படைகளினால் வழங்கப்பட்ட மரியாதை அணி வகுப்புக் களையும் ஏற்றுக்கொண்டார்.

இந்த நிகழ்வில் பிரியாவிடை பெற்றுச் செல்லும் பிரதான பாதுகாப்பு அதிகாரி ஏயார் சீப் மார்ஷல் டொனால்ட் பெரேரா, புதிய இராணுவத் தளபதி லெப்டினன்ட் ஜெனரல் ஜகத் ஜயசூரி, விமானப்படைத் தளபதி எயார் சீப் மார்ஷல் ரொஷான் குணதிலக்க, புதிய கடற்படைத் தளபதி ரியர் அட்மிரல் திஸர சமரசிங்க, பொலிஸ் மா அதிபர் ஜயந்த விக்ரமரத்ன ஆகியோரும் கலந்துகொண்டனர்

யுத்தம், கடல்கோளால் பாதிக்கப்பட்டோருக்கு தொழில்வாய்ப்பு வழங்க நடவடிக்கை

அம்பாறை மாவட்டத்தில் கடந்தகால யுத்த சூழ்நிலை மற்றும் கடல்கோள் அனர்த்தத்தினால் பாதிக்கப்பட்ட இளைஞர் யுவதிகளுக்கு தொழில் வசதிகளை ஏற்படுத்திக் கொடுக்கும் நோக்கில் ஆடைத் தொழிற்சாலைகளை அமைப்பதற்கான நடவடிக்கைகளை கைத்தொழில் அபிவிருத்தி அமைச்சு மேற்கொண்டு வருகின்றது. “கிழக்கு உதயம்’ வேலைத் திட்டத்தின் கீழ் வெளிநாட்டு முதலீட்டாளர்களின் நிதியுதவியுடன் சம்மாந்துறை, உகனை மற்றும் அக்கரைப்பற்று போன்ற இடங்களிலே இவ்வாறான ஆடைத் தொழிற்சாலைகள் அமைக்கப்படவுள்ளன.

அம்பாறை மாவட்டத்தில் இவ்வாறான தொழிற்சாலைகளை அமைப்பதற்காக முதற்கட்டமாக உபயோகமில்லாது காணப்படும் கட்டிடங்கள் தெரிவு செய்யப்பட்டுள்ளன. அத்துடன், இதற்கு மேலதிகமாக புதிய கட்டிடங்களும் நிர்மாணிக்கப்படவுள்ளன.

மேலும், ஆலையடிவேம்பு, அம்பாறை மற்றும் மருதமுனை போன்ற இடங்களில் கைத்தறி நெசவுத் தொழிலை அபிவிருத்தி செய்வதற்கான அமைப்புகளை ஏற்படுத்தி ஒவ்வொரு நிலையத்திலும் தலா 100 யுவதிகளுக்கு பயிற்சிகளை வழங்கி பின்னர் அந்த நிலையங்களிலே தொழில்வாய்ப்பினை வழங்கவும் கைத்தொழில் அபிவிருத்தி அமைச்சு நடவடிக்கைகளை மேற்கொண்டுள்ளது.

ஜனாதிபதி மஹிந்த – லிபிய தலைவர் சந்திப்பு

111111.jpgஅணி சேரா நாடுகளின் உச்சி மாநாட்டில் பங்கு பற்றுவதற்காக எகிப்துக்கு விஜயம் செய்திருக்கும் ஜனாதிபதி மஹிந்த ராஜபக்ஷவுக்கும், லிபியத் தலைவர் கேர்ணல் முஅம்மர் கடாபி க்குமிடையில் நேற்றுக் காலையில் விசேட நல்லெண்ண சந்திப்பொன்று நடைபெற்றது.

இச்சந்திப்பின் போது இருநாடுகளுக்குமிடையிலான நட்புறவு தொடர்பாகவும் அதனை மேலும் மேம்படுத்துவது குறித்தும், இரு நாட்டுத் தலைவர்களும் விசேட கவனம் செலுத்தினர்.

அதேநேரம், இலங்கை ஜனாதிபதி மஹிந்த ராஜபக்ஷ தலைமையிலான குழுவினர் அண்மையில் லிபியாவுக்கு மேற்கொண்டிருந்த ராஜதந்திர விஜயத்தின் போது இணக்கம் காணப்பட்டிருக்கும் விடயங்கள் குறித்தும் இரு நாட்டுத் தலைவர்களும் கவனம் செலுத்தினர். ஜனாதிபதி மஹிந்த ராஜபக்ஷ, இலங்கையின் தற்போதைய நிலைமை தொடர்பாக லிபியத் தலைவருக்கு எடுத்துக் கூறினார்.

பயங்கரவாதம் முழுமையாக தோற்கடிக்கப்பட்டதைத் தொடர்ந்து வடக்கு, கிழக்கு பிரதேச மக்களின் வாழ்வாதாரத்தை மேம்படுத்துவதற்காக அரசாங்கம் மேற்கொள்ளுகின்ற வேலைத் திட்டங்கள் தொடர்பாகவும் ஜனாதிபதி மஹிந்த ராஜபக்ஷ லிபியத் தலைவருக்குத் தெளிவுபடுத்தினார்.

இலங்கைக்குக் கடந்த மூன்று தசாப்தங்களாகப் பெரும் தலையிடியாக இருந்து வந்த பயங்கரவாதத்தை முழுமையாகத் தோற்கடித்தமைக்காக லிபியத் தலைவர் கடாபி இலங்கை ஜனாதிபதிக்கு நல்வாழ்த்துக்களைத் தெரிவித்தார்.

கட்டியெழுப்பப்படுகின்ற புதிய இலங்கையுடனான நட்புறவை நிலைநிறுத்தி, மேம்படுத்திக்கொள்வதற்கு எமது அரசாங்கம் எதிர்பார்ப்பதாகவும் லிபியத் தலைவர் கடாபி அச்சமயம் தெரிவித்துள்ளார். அணிசேரா மாநாடு நடைபெறும் எகிப்தின் ஷாம் அல் ஷெய்க் நகரில் இரு நாட்டுத் தலைவர்களுக்குமிடை யிலான இச்சந்திப்பு நடைபெற்றது.

தமிழர் விடயத்தில் கண் திறக்கப்படாவிட்டால் அது மோசமான விளைவுகளுக்கே வழிவகுக்கும் – சோமவன்ச

நிமிடத்துக்கு நிமிடம் விஸ்வரூபமெடுத்துக் கொண்டிருக்கும் தமிழர் பிரச்சினை தொடர்பில் அரசாங்கத்திடம் தெளிவான நோக்கு காணப்படவில்லை. தேசிய பிரச்சினை விடயத்தில் தொடர்ந்தும் கண் திறக்கப்படாத நிலை ஏற்படுமிடத்து பிற்காலத்தில் மிக மோசமான விளைவுகளையே அது ஏற்படுத்தப் போகின்றது என்று ஜே.வி.பி. யின் தலைவர் சோமவன்ச அமரசிங்க தெரிவிக்கின்றார்.

தீர்வுத் திட்டங்கள் பிற்போடப்பட்டு வருகின்ற காரணத்தினாலேயே அந்நிய சக்திகள் எமது உள்வீட்டுப் பிரச்சினைகளுக்குள் தலையிடுகின்றன. வன்னி மக்களின் நிலைமைகள் குறித்து கருணாநிதியோ அல்லது அவரது மகள் கனிமொழியோ கவலைப்படத் தேவையில்லை என்றும் அவர் சொன்னார்.

கட்சித் தலைமை அலுவலகத்தில் நடைபெற்ற செய்தியாளர் மாநாட்டிலேயே ஜே.வி.பி. தலைவர் சோமவன்ச இதனைத் தெரிவித்தார். இங்கு அவர் மேலும் கூறுகையில்,

பயங்கரவாதமும் பிரிவினைவாதமும் தோற்கடிக்கப்பட்டுள்ள நிலையில் சகோதரத்துவம் மற்றும் ஐக்கியத்துடனான இலங்கையை கட்டியெழுப்புவதே சகல இனத்தவரதும் எதிர்பார்ப்பாகும். தேசிய ஒற்றுமையை கட்டியெழுப்புவதற்காக நாம் எதிர் கொண்டுள்ள தேசிய பிரச்சினையாக தோற்றம் பெற்றுள்ள தமிழ் மக்களின் பிரச்சினைகளை சரியானதும் தீர்க்கமானதுமான வழியில் புரிந்து அதற்கு தீர்வைப் பெற்றுக் கொடுப்பதுமே இன்றைய முதற் கட்டப் பணியாக இருக்கின்றது.

இது சவால் மிக்கதாகும். இந்த சவால்மிக்க பணியை முன்னெடுப்பதற்கான வேலைத்திட்டம் அல்லது ஒழுங்கமைப்பு அரசாங்கத்திடம் இல்லை. பிரச்சினைக்கு தீர்வு காண்பதற்குப் பதிலாக தற்போது அதனை குழப்பியடித்துக் கொண்டிருக்கின்றது. இருப்பினும், இனங்களுக்கிடையிலான சமத்துவமின்மையை துடைத்தெறிவதற்கான ஆரம்ப கட்ட வேலைத்திட்டங்களையேனும் முன்னெடுக்க வேண்டிய தேவை எழுந்துள்ளது.

முல்லைத்தீவு, கிளிநொச்சி, ஒட்டுசுட்டான் பிரதேசங்களுக்கு நேற்று முதல் மின்சாரம்

basil-raja.jpgவடக்கு வசந்தம் திட்டத்தின் கீழ் கிளிநொச்சி முல்லைத்தீவு ஒட்டிசுட்டான் மற்றும் நெடுங்கேணி ஆகிய பிரதேசங்களுக்கு நேற்று (15) மின்சார வசதி அளிக்கப்பட்டது. வடக்கு அபிவிருத்திக்கான ஜனாதிபதி செயலணியின் தலைவரும் ஜனாதிபதியின் சிரேஷ்ட ஆலோசகருமான பெசில் ராஜபக்ஷ மின்சாரம் வழங்கும் நிகழ்வில் கலந்து கொண்டு ஆரம்பித்து வைத்தார்.

மின்சக்தி, எரிசக்தி அமைச்சர் டபிள்யு. டி. ஜே. செனவிரத்தினவின் ஆலோசனையின் பிரகாரம் இப்பகுதிகளுக்கு மின்சார வசதி வழங்கப்பட்டுள்ளது. வடக்கு வசந்தம் திட்டத்தின் கீழ் 180 நாட்களுக்குள் வடபகுதியிலுள்ள பல இடங்களுக்கு துரிதமாக மின்சார வசதி அளிக்க மின்சக்தி, எரிசக்தி அமைச்சு நடவடிக்கை எடுத்துள்ளது.

வவுனியா, மன்னார், கிளிநொச்சி, முல்லைதீவு மற்றும் யாழ். நகரங்களில் உப மின்நிலையங்கள் அமைக்கும் பணிகள் ஆரம்பிக்கப்பட்டுள்ளதோடு இந்தப் பணிகள் 2 1/2 வருட காலத்தில் பூர்த்தி செய்யப்படவுள்ளன. மாங்குளத்தில் இருந்து 30 கிலோ மீட்டர் தூரத்துக்கு மின்மாற்றித் தொகுதி அமைக்கும் பணிகளும் ஆரம்பிக்கப்பட்டுள்ளதாக மின்சக்தி, எரிசக்தி அமைச்சு கூறியது.

இது தவிர வவுனியாவில் இருந்து மாங்குளம் வரை மின்சார இணைப்புத் தொகுதி யொன்று நிர்மாணிக்கவும் நடவடிக்கை எடுக்கப்பட்டுள்ளது. எதிர்வரும் இரு வருடங்களுக்குள் வடக்கில் உள்ள சகல கிராமங்களுக்கும் மின்சாரம் வழங்கும் மேற்படி திட்டங்களுக்கு 6000 மில்லியன் ரூபா செலவாகும் என எதிர் பார்க்கப்படுகிறது.

மோதல் காரணமாக வட பகுதியிலுள்ள பல கிராமங்களுக்கு நீண்டகாலமாக மின்சார வசதி வழங்கப்பட்டிருக்கவில்லை. மோதல்களின் போது புலிகள் மின்மாற்றிகள், உப மின்நிலையங்கள் என் பவற்றை அழித்திருந்தது குறிப்பிடத்தக்கது.