02

02

நாடு கடந்த தமிழீழ அரசுக்கான பிரதிநிதிகளை தேர்ந்தெடுக்கும் தேர்தல் 2010 ஏப்ரலில்: வி.உருத்திரகுமாரன்

rudrakumaaran_v.jpgநாடு கடந்த தமிழீழ அரசுக்கான பிரதிநிதிகளைத் தேர்ந்தெடுக்கும் தேர்தல்கள் 2010 ஆம் ஆண்டு ஏப்ரல் மாதமளவில் நடைபெறலாம் என்று அதனை உருவாக்குவதற்காக நாடு கடந்த தமிழீழ அரசு அமைக்கும் செயற்திட்டக் குழுவின் ஒருங்கிணைப்பாளர் சட்டத்தரணி விசுவநாதன் உருத்திரகுமாரன் தெரிவித்துள்ளார்.
இந்தியாவில் இருந்து வெளியாகும் ‘தெகல்கா’ வார ஏட்டுக்கு வழங்கிய நேர்காணலிலேயே அவர் இதனைத் தெரிவித்தார்.

அவரது நேர்காணலின் முழு விபரம் வருமாறு:

நாடு கடந்த தமிழீழ அரசின் வெற்றி தொடர்பில் நீங்கள் எவ்வளவு நம்பிக்கையுடன் இருக்கிறீர்கள்? உலகின் பல்வேறு பிரதேசங்களில் காணப்படும் புறநிலை அரசுகளில் இருந்து இது எந்த வகையில் வேறுபட்டு அமைகின்றது?

எமது முயற்சி வெற்றிபெறும் என்பதில் எமக்கு அசைக்க முடியாத நம்பிக்கை இருக்கிறது. தமிழர்களின் ஆயுதப் போராட்டத்தை மிகக் கொடூரமான முறையில்  இலங்கை அரசு அடக்கி விட்டாலும்கூட, சுதந்திரம், சமத்துவம் மற்றும் மதிப்பு என்பவற்றுக்கான அவர்களின் வேட்கையை அடக்க முடியவில்லை.

இப்போது, இலங்கையில் தமிழர்களின் இருப்பு கேள்விக்குறியாகி உள்ளதுடன் மட்டுமல்ல அவர்கள் தமது அரசியல் வேட்கைகளை வெளிப்படுத்துவதற்கான வசதிகள் கூடக் கிடையாது. அதனால் தமிழர்களின் அரசியல் போராட்டங்கள் முழுவதும் வெளியில் இருந்தே மேற்கொள்ளப்பட முடியும்.

நாங்கள் உருவாக்க முனைவது புறநிலை அரசு அல்ல. நாடு கடந்த அரசு ஒன்றையே நாம் உருவாக்க உள்ளோம். இதற்கு எந்த ஒரு நாடும் (அதாவது நிலப்பரப்பும்) தேவை இல்லை. இந்த அரசு புலம்பெயர் தமிழர்கள் மத்தியில் இருந்தே தேர்வு செய்யப்படும்.

இதற்கு முன் எந்தவொரு இனக் குழுவும் இத்தகைய நாடு கடந்த அரசுகளை உருவாக்கியதில்லை. இந்தக் கருத்துருவாக்கமானது அரசியலுக்கும் அரசியல் தத்துவங்களுக்கும் எங்களின் பங்களிப்பாக இருக்கும்.

தமிழ்நாட்டில் வாழும் ஈழத் தமிழ் அகதிகள் இந்த நடவடிக்கையில் பங்கேற்பார்களா? இந்திய அரசினதும் மாநில கட்சிகளினதும் ஆதரவைக் கோருவீர்களா?

நிச்சயமாக. நாங்கள் அவர்களின் ஆதரவைப் கோருவோம்.

முதலமைச்சர் மு.கருணாநிதியையும் ஏனைய தமிழ் தலைவர்களையும் சந்திப்பதற்காக தமிழ்நாட்டுக்கு பயணம் மேற்கொள்ள எண்ணியிருக்கிறீர்களா?

கருணாநிதி, ஜெயலலிதா, நெடுமாறன், வைகோ, பாண்டியன் மற்றும் ஏனைய தலைவர்கள் அனைவரையும் சந்தித்துப் பேசுவதற்கு எண்ணியுள்ளோம். டில்லியிலும் தமிழ் நாட்டிலும் உள்ள கல்விமான்களையும் சமூகத் தலைவர்களையும் கூட சந்தித்துப் பேசுவதற்கு நாம் எண்ணியுள்ளோம். இந்தியாவின் ஆதரவு எமக்கு மிக முக்கியமானது.

நீங்கள் முன்வைத்துள்ள நாடு கடந்த தமிழீழ அரசுக்கான பிரதிநிதிகள் சபையை தேர்ந்தெடுப்பதற்கான தேர்தல்களை எப்போது நடத்தப் போகிறீர்கள்? எந்த முறையில் தேர்தல்கள் நடத்தப்படப் போகின்றன?

2010 ஆம் ஆண்டு ஏப்ரல் மாதத்தில் தேர்தல்களை நடத்தலாம் என்று நாங்கள் எதிர்பார்க்கிறோம். இருந்தாலும், நடவடிக்கைகளை விரைவுபடுத்துமாறு மக்கள் எங்களைக் கேட்டிருக்கின்றனர். மக்கள் வாக்களிப்பு நிலையங்களுக்குச் சென்று வாக்களிக்க வேண்டும் என்றே எதிர்பார்க்கிறோம்.

ஈழத்தை அடைவதற்காக நீங்கள் கொண்டிருக்கக்கூடிய வழிகாட்டு வரைபடம் என்ன?

நாடு கடந்த தமிழீழ அரசு தான். அதன் சட்டபூர்வ நிலை, புகழ் மற்றும் அனைத்துலக ஆதரவு காரணமாக அது அதிகார மையமாகும். சிங்கள தேசத்திற்கும் தமிழ் தேசத்திற்கும் இடையிலான நடுநிலை அதிகாரம் ஒன்றை அது உருவாக்கும். சிங்கள, தமிழ், முஸ்லிம் மக்கள் அமைதியுடன் வாழக்கூடிய அரசியல் ஒப்பந்தங்களை உருவாக்குவதற்கு அது தனது பங்களிப்பை வழங்கும்.

இது தொடர்பில் எந்த நாட்டிடம் இருந்தாவது சாதகமான பிரதிபலிப்பு கிடைத்திருக்கிறதா?

இந்த முயற்சிக்கு அனைத்துலக நாடுகளின் ஆதரவு மிக அத்தியாவசியமானது. ஜனநாயக நெறிமுறைகளின் அடிப்படையில் நாடு கடந்த தமிழீழ அரசு அமையும்போது, எங்கள் முயற்சிக்கு ஜனநாயக நாடுகள் ஆதரவு தரும் என்று நாங்கள் எதிர்பார்க்கின்றோம். இப்போதே சில நாடுகளில் இருந்து சாதகமான பிரதிபலிப்புக்களை நாங்கள் பெற்றிருக்கிறோம்.

36,000 சிறுவர்களுக்கு சின்னமுத்து தடுப்பு மருந்தேற்றும் திட்டம்

vaccine.jpgசிறப்பு சிறுவர் சுகாதார பிரசார திட்டத்தின் மூலம் இடம்பெயர்ந்தோர் நலன்புரி நிலையங்களில் உள்ள 36,000 சிறுவர்களுக்கு சின்னமுத்து நோய்க்கு எதிரான நிர்ப்பீடனம் செய்யப்படும். சுகாதார அமைச்சு, ஐக்கிய நாடுகள் சிறுவர் நிதியம், உலக சுகாதார நிறுவனம் ஆகியன இணைந்து இதனை முன்னெடுக்கும். இம்முயற்சியானது, கடந்த காலத்தில் வெகுவாக பரவிய சின்னமுத்து நோயானது, மேலும் பரந்தளவில் பரவாமல் தடுப்பதை நோக்கமாகக் கொண்டுள்ளது.

ஐந்து வயதுக்குட்பட்ட சிறுவர்கள் இந்த சிறப்பு திட்டத்தில் உள்ளடக்கப்படுவார்கள். வவுனியாவில் உள்ள 30 நிலையங்களில், ஏறக்குறைய 100 பொது சுகாதார மருத்துவதாதிகளும் 1200 தொண்டர்களும் இம் முயற்சியில் பங்கெடுக்கவுள்ளனர். இதற்காக பல வாரகாலமாக, நிர்ப்பீடன மருந்து வழங்கல்களை எற்பாடு செய்தல், சுகாதார பணியாளர்களுக்கு பயிற்சியளித்தல், தொண்டர்களை அணிதிரட்டுதல் என முன்னேற்ற நடவடிக்கைகள் பல மேற் கொள்ளப்பட்டிருந்தன.

இலங்கை அரசாங்கமானது சிறுவர் சுகாதாரத்துக்கு முன்னுரிமை அளிக்கின்றது- இடம்பெயர்ந்தோர் பாதுகாப்பை உறுதிப்படுத்துவதில் நாம் உறுதியுடன் உள்ளோம்’ என சுகாதார அமைச்சின் செயலாளர் டாக்டர் அதுல காந்தலியனகே தெரிவித்தார்.

சின்னமுத்துக்கு எதிராக நிர்ப்பீடனம் வழங்குவதுடன், சிறுவர்களை தாக்கும் பல நோய்களுக்கான எதிர்ப்பு சக்தியை மேம்படுத்தவும், போஷாக்கின்மையை தடு க்கவுமென அவர்களுக்கு விற்றமின் ஏ மற்றும் பூச்சி மருந்து என்பனவும் வழங்கப்படவுள்ளன. அவர்களுக்கு போலியோ தடுப்பு மருந்தும் வழங்கப்படும்.

‘ஒரு அவசரநிலையின் போது, ஐந்து வயதுக்கு உட்பட்ட சிறுவர்களே அதிகம் பாதிப்படைவர். இம்முயற்சியினாது, பல உயிர்களைக் காக்கும்’, என ஐக்கிய நாடு கள் சிறுவர் நிதியத்தின் பதில் வதிவிடப் பிரதிநிதி டெசிரா ஜோன்ஸ்மா தெரிவித்தார். சுகாதார அமைச்சு, போஷாக்கு மற் றும் நோய் தொற்று பிரிவு உட்பட இம் முயற்சியில் ஈடுபட்ட ஏனைய பங்காளர்களுக்கும் அவர் பாராட்டு தெரிவித்தார்.

சரணடைந்த சிறுவர்களுக்கென வவுனியாவில் இரு புதிய பாடசாலைகள் செப். 7 முதல் செயற்படும்

school-children000.jpgபுலிகள் இயக்கத்திலிரு ந்து படையினரிடம் சரண டைந்துள்ள சிறுவர்களுக்கென வவுனியா பூந்தோட்டத்தில் இரண்டு புதிய பாடசாலைகள் இயங்கவுள்ளன. வவுனியா பூந்தோட்டம் கூட்டுறவு சங்க கட்டடத்தில் தங்க வைக்கப் பட்டுள்ளவர்களுள் 18 வயதுக்குட்பட்ட 250 சிறுவர் சிறுமியர்களுக்கென இரண்டு தற்காலிக கொட்டில்கள் அமைக்கப்பட்டு கல்வி நடவடிக்கைகள் ஆரம்பிக்க ப்படவுள்ளன.

8ஆம், 9ஆம், 10ஆம், 11ஆம், 12ஆம் வகுப்புகள் இயங்கும் விதத்தில் ஒரு அதிபரின் கீழ் 15 ஆசிரியர்கள் கற்றல் நடவடிக்கைகளுக்கென ஈடுபடுத்தப்படவுள்ளதாக வவுனியா வலய கல்விப் பணிப்பாளர் திருமதி ரஞ்ஜனி ஒஸ்வர்ல்ட் தெரிவித்தார். செப்டம்பர் மாதம் 7ஆம் திகதி முதல் பாடசாலைகள் இயங்கும் விதத்தில் இரண்டு தற்காலிக கொட்டில்களும் அமைக்கப்படவுள்ளன.

வவுனியா வலய கல்விப் பணிப்பாளர் திருமதி ரஞ்ஜனி ஒஸ்வர்ல்ட், யுனிசெப் பிரதிநிதிகள், படைத்தரப்பின் பொறுப்பதிகாரிகள் அடங்கிய குழுவினர் பூந்தோட்ட முகாமுக்குச் சென்று பார்வையிட்டனர்.

மேற்படி 250 மாணவர்களுக்கும் தேவையான பாடநூல்களை வவுனியா வலய கல்விப் பணிப்பாளர் அலுவலகம் நாளை திங்கட்கிழமை வழங்குகிறது. மாணவர்களுக்குத் தேவையான அப்பியாசக் கொப்பிகள், பாடசாலை உபகரணங்களை யுனிசெப் நிறுவனம் வழங்க முன்வந்துள்ளது என பணிப்பாளர் திருமதி ரஞ்ஜனி ஒஸ்வர்ல்ட் தெரிவித்தார்.

பன்றிக் காய்ச்சலால் பீடிக்கப்பட்டவர் சம்மாந்துறையில் கண்டுபிடிப்பு

ah1n1.jpgபன்றிக் காய்ச்சல் (AH1N1  வைரஸ்) நோயினால் பீடிக்கப்பட்ட ஒருவர் சம்மாந்துறையில் கண்டுபிடிக்கப்பட்டார். சம்மாந்துறை, பிரதேச செயலகப் பிரிவுக்குட்பட்ட மல்கம்பிட்டியைச் சேர்ந்த 31 வயதுடைய ஒருவரே இவ்வாறு அடையாளம் காணப்பட்டுள்ளார்.

சம்மாந்துறை பொலிஸாருக்கு கிடைத்த தகவலையடுத்து கைதுசெய்யப்பட்டு இவர் கல்முனை அஷ்ரஃப் ஆதார வைத்தியசாலையில் ஒப்படைக்கப் பட்டிருப்பதாக சம்மாந்துறை பொலிஸ் நிலைய பொறுப்பதிகாரி எம். ஆர். நூர்தீன் தெரிவித்துள்ளார். சவூதி அரேபியாவிலிருந்து கட்டுநாயக்க விமான நிலையத்துக்கு வந்திறங்கிய பிரயாணிகள், குறித்த பரிசோதனைக்குட்படுத்தப்பட்ட போது ஐந்து பேர் பன்றிக் காய்ச்சல் தொற்றுடையவர்களென கண்டுபிடிக்கப்பட்டுள்ளனர். ஏனைய நான்கு பேரும் கைது செய்யப்பட்ட அதே சமயம் குறித்த நபர் அங்கிருந்து தப்பியுள்ளார். இவருடைய தகவல்களை கொண்டு விமான நிலைய பாதுகாப்புப் பிரிவினரால் சம்மாந்துறை பொலிஸாருக்கு வழங்கப்பட்ட தகவலை அடுத்தே இந்நபர் நேற்றிரவு கைது செய்யப்பட்டுள்ளாரென பொலிஸ் நிலையப் பொறுப்பதிகாரி கூறினார்.

இடம்பெயர் முகாம்களுக்கு மேலும் 15 மருத்துவர்கள் : சுகாதார அமைச்சர் தெரிவிப்பு

sri-lankan-doctors.jpgஇடம் பெயர்ந்த மக்கள் தங்க வைக்கப்பட்டுள்ள முகாம்களில் பணியாற்றவென மேலும் 15 மருத்துவர்கள் அனுப்பி வைக்கப்பட உள்ளதாக சுகாதார அமைச்சர் நிமால் சிறிபால டி சில்வா தெரிவித்துள்ளார். இடம்பெயர்ந்தோர் தங்க வைக்கப்பட்டுள்ள முகாம்களில் ஏற்கனவே 102 மருத்துவர்கள் பணியாற்றி வருவதாகவும் அதற்கு மேலதிகமாக இந்த 15 மருத்துவர்களை அங்கு அனுப்பி வைக்க உள்ளதாகவும் அமைச்சர் தெரிவித்தார்.

முகாம்களில் 100க்கும் மேற்பட்ட மருத்துவர்கள் இருப்பதாக அரசாங்கம் கூறிய போதிலும் அங்குள்ள மக்களுக்கு போதிய மருத்துவ சிகிச்சைகள் வழங்கப்படுவதில்லை என முன்னர் தகவல்கள் வெளியாகி இருந்தன.

ஒரு நாள் சிகிச்சையளிக்கும் மருத்துவர்கள் மறுநாள் அங்கிருப்பதில்லை எனவும் இதனால் தொடர்ந்தும் சிகிச்சைப் பெற வேண்டிய நீரிழிவு உள்ளிட்ட நோயாளர்கள் பெரும் சிரமங்களை எதிர்நோக்கி வருவதாகவும் தெரிவிக்கப்படுகிறது. அத்துடன் மருத்துவ சிகிச்சைக்காக நீண்ட வரிசையில் நிற்க வேண்டியுள்ளதாகவும் கூறப்படுகிறது. இது குறித்து அமைச்சரின் கவனத்துக்குக் கொண்டு வந்ததையடுத்தே மேலதிக மருத்துவர்களை அனுப்பி வைப்பதாக அவர் தெரிவித்துள்ளார். 

குடாநாட்டில் எரிபொருட்களுக்கு புதிய விலை நிர்ணயம்

jaffna1.jpgயாழ். மாவட்டத்தில் எரிபொருட்களுக்கான புதிய விலைகளை இலங்கை பெற்றோலியக் கூட்டுத்தாபனம் அறிவித்துள்ளது. பெற்றோல் 90 ஒக்டேன் ஒரு லீற்றர் 134 ரூபா ஆகவும் லங்கா ஓட்டோ டீசல் ஒரு லீற்றர் 78 ரூபா 50 சதமாகவும் மண்ணெண்ணெய் ஒரு லீற்றர் 54 ரூபாவாகவும் விற்பனை செய்யப்பட வேண்டும்.

வடக்கின் வசந்தம் நிகழ்ச்சித்திட்ட செயலணித் தலைவரும் பாராளுமன்ற உறுப்பினருமான பசில் ராஜபக்ஷ எரிபொருட்கள் ஏ9 பாதையால் எடுத்து வரப்படுவதால் அவற்றின் விலையைக் குறைப்பதற்கு ஆவன செய்ததையடுத்து புதிய விலைகளை இலங்கை பெற்றோலியக் கூட்டுத்தாபனம் அறிவித்துள்ளது.

வினாத்தாள் குளறுபடி: விசாரணை செய்து அறிக்கை சமர்ப்பிக்க ஜனாதிபதி பணிப்பு

sri-lanka-school.jpgஇரண்டாம் தவணைப் பரீட்சைக்குரிய வினாத்தாள்களில் ஏற்பட்ட குளறுபடிகள் தொடர்பாக மாகாண, வலய மட்டத்தில் விசாரணைகளை மேற்கொண்டு உடனடியாக அறிக்கை சமர்ப்பிக்குமாறு ஜனாதிபதி மஹிந்த ராஜபக்ஷ கல்வி அமைச்சருக்கு பணிப்புரை வழங்கியுள்ளார்.

வினாத்தாள்களில் குளறுபடிகள் ஏற்பட்டுள்ளதாக கூறப்படும், மாகாணங்கள், வலயங்களிலிருந்து விசாரணைகள் மேற்கொண்டு தகவல்களை சேகரிக்கும் வேலைகளை கல்வி அமைச்சு தொடங்கியுள்ளது.

தவணைப் பரீட்சைகள் நடத்தும் போது எதிர்காலத்தில் இவ்வாறான தவறுகள் ஏற்படாதவாறு பரீட்சைகளை நடத்துவது தொடர்பாக தேசிய கல்வி நிறுவகத்தின் பணிப்பாளர் நாயகம் பேராசிரியர்லால் பெரேராவின் தலைமையிலான குழுவொன்று மேற்படி விசாரணைகளை நடத்துகிறது. விசாரணைகளின் இறுதியில் சமர்ப்பிக்கப்படும் அறிக்கையின் அடிப்படையில் இரண்டு வாரத்துள் தீர்மானம் எடுக்கப்படும் என கல்வி அமைச்சு தெரிவிக்கிறது.

தனியார் பஸ் கட்டணங்களை 5.3 வீதத்தால் அதிகரிக்கலாம்

bus.jpgதனியார் பஸ் கட்டணங்களை 5.3 வீதத்தால் மட்டுமே அதிகரிக்க முடியுமென தேசிய போக்குவரத்து ஆணைக்குழு அறிவித்துள்ளது. தனியார் பஸ் உரிமையாளர்கள் 7 வீத பஸ் கட்டண உயர்வைக் கோருகின்ற போதும் தாம் அதற்கு அனுமதிக்கப் போவதில்லையென தேசிய போக்குவரத்து ஆணைக்குழுவின் தலைவர் பேராசிரியர் அமல் குமாரகே தெரிவித்துள்ளார்.

எரிபொருள் விலையுயர்வு மற்றும் பஸ் சம்பந்தப்பட்ட செலவு தொடர்பிலேயே 7 வீத பஸ் கட்டண உயர்வை தனியார் பஸ் உரிமையாளர் சங்கம் கோரியுள்ளது.

‘தமிழ் மக்களுடைய அரசியல் எதிர்காலத்தின் குறைந்தபட்ச வரையறை’

1. புலிகளின் பலவீனம், அவர்கள் தங்கள் தலைமையைத் தக்க வைப்பதற்கான பேரம் பேசலில் மக்களைப் பணயம் வைக்கப் போகின்றார்கள் பல்லாயிரக் கணக்கான மக்கள் கொல்லப்படப் போகின்றார்கள் என்பவை எதிர்பார்க்கப்பட்டதாக இருந்தாலும் ஒரே நாளில் யுத்தம் முடிவுக்கு வந்தவிதம் எதிர்பாராததாகவே அமைந்தது.

2. சாதாரண தமிழ் மக்கள் மத்தியில் மட்டுமல்ல புரட்சிகர அல்லது முற்போக்கு முன்னோடிகள் என்று சொல்லப்படுபவர்கள் மத்தியிலும் புலிகள் பற்றிய பிம்பங்கள் காணப்பட்டதை மறுக்க முடியாது. அதனாலேயே பிரபாவின் உடலை சர்வதேச ஊடகங்களே காட்சிப்படுத்திக் கொண்டிருந்த போதும் தமிழ் சமூகத்தால் அதனை ஏற்றுக் கொள்ள முடியவில்லை. அங்கு கோவணத்துடன் நின்றது பிரபா மட்டுமல்ல மொத்த தமிழ் தேசமும் தான்.  இந்நிலையை ஏற்படுத்திய பெருமை பிரபாவையும் அவர் தலைமை வகித்த இயக்கத்தையுமே சேரும்.

3. மிகப்பெரும்  மனித அவலம் ஒன்று ஏற்பட இருந்ததை உணர்வதற்கு ரொக்கற் விஞ்ஞான அறிவு எதுவும் யாருக்கும் தேவைப்பட்டிருக்கவில்லை. அதனாலேயே நாம் தேசம்நெற்ம் ரவி சுந்தரலிங்கமும் புலிகள் ஆயுதங்களை சர்வதேசத்திடம் ஒப்படைக்க வேண்டும் என்று மீண்டும் மீண்டும் வலியுறுத்தினோம்.

4. ஆனால் இறப்புகளின் எண்ணிக்கை ஒரு சிலவாக இருந்து நூறாகி ஆயிரமாகிய போது நாங்கள் தமிழீழத்தை நெருங்கிவிட்டோம் என்று மேற்கு நாடுகளின் வீதிகளில் விர முழங்கங்கள் தள யதார்த்தத்திற்கு முற்றிலும் மாறானதாக இருந்தது.’ மோட்டுச் சிங்களவன்’ என்று தங்கள் அறிவை தாங்களே மெச்சிக்கொண்டு ‘பனை மரத்தில் வெளவாளா தலைவருக்கே சவாலா’ என்ற கூக்குரல்கள் மட்டும் ஓங்கி ஒலித்தது.

5. 2009 ஏப்ரல் 30ல் புலிகளை முடிவுக்கு கொண்டு வருகின்றோம் என்று ஐந்து ஆண்டுகளுக்கு முன் போடப்பட்ட புரொஜக்ற் பீக்கன் திட்டப்படி கால அட்டவணை போட்டு அதற்கமைவாக 18 நாட்கள் தாமதத்தில் புலிகள் அமைப்பு அழிக்கப்பட்டது.

6. இன்று கொல்லப்பட்ட வீரமரணமடைந்த தளபதிகளுக்கும் தலைவருக்கும் அஞ்சலி கூட நடத்த முடியாத பலவீனமான உள்நெருக்கடிக்குள் புலிகள் தள்ளப்பட்டு உள்ளனர். பிரபா கொல்லப்பட்டதை அறிவிக்கும் பட்சத்தில் புலிகள் அமைப்பும் அதனுடன் சேர்ந்து மங்கி மறைந்துவிடும் என்ற அச்சம் புலம்பெயர்ந்த புலிகளிடம் காணப்படுகின்றது. மேலும் தனிநபர்களின் கட்டுப்பாட்டில் உள்ள 300 மில்லியன் டொலர் ஆண்டு வருமானத்தைக் கொண்ட ஒரு பில்லியன் டொலர் அசையும் அசையாச் சொத்துக்களுக்கான முரண்பாடுகளும் எழாமல் இல்லை.

7. புலிகள் அமைப்பின் அதிகாரத்திற்கும் அதன் சொத்துக்களுக்குமான போட்டியில் அவர்களிடையே எழுந்துள்ள முரண்பாடு தற்போது ஏற்பட்டுள்ள அரசியல் வெற்றிடத்தை நிரப்பும் போட்டியிலும் தங்களை இணைத்துள்ளனர். அதுவே கே பி யின் நாடு கடந்த தமிழீழ அரசு. அதற்கு மாற்றாக அவரை நிராகரிக்கும் புலிகள் வேறு வழிகளை நோக்குகிறார்கள். அவர்களின் பின்னணியில் பிரித்தானிய தமிழர் பேரவையும் ஒரு கட்டமைப்பை உருவாக்க முயல்கிறது.

8. புலிகளின் தலைமை அழிக்கப்பட்டதைத் தொடர்ந்து தற்போது ஏற்பட்டுள்ள அரசியல் வெற்றிடத்தை நிரப்பும் முயற்சியில் புலிகள் அல்லாத பிரிவினரும் ஈடுபட்ட உள்ளனர். இவர்களை பெரும்பாலும் இரு வகைக்குள் கொண்டுவரமுடியும்.
அ) அரச ஆதரவு சக்திகள் – இலங்கை அரசுடன் அனுசரித்து நடந்தே தீர்வை ஏற்படுத்த முடியும் என நம்புகின்றனர்.
ஆ) அரசுடனும் புலிகளுடனும் தங்களை அடையாளப்படுத்தாத அணி சேரா அணி.

9. பல்வேறு முரண்பட்ட பிரிவினரும் வெவ்வேறு வகையான தீர்வுகளை நோக்கி செயற்படுகின்றனர்.
அ) தமிழீழ – புலிகள் தங்களுக்குள் முரண்பட்டாலும் கொள்கையளவில் தமிழீழத்தைக் கைவிடவில்லை. அவ்வாறு கைவிடும் பட்சத்தில் அவர்கள் புலிகள் என்ற அடையாளத்தைக் கொண்டிருக்க முடியாது. அதே சமயம் புலிகளுடனும் அரசுடனும் அணி சேரா அணியில் உள்ள சிறு பிரிவினரும் கொள்கையளவில் தமிழிழத்தை தொடர்ந்தும் வைத்துள்ளனர்.

ஆ) ஐக்கியப்பட்ட இலங்கைக்குள் தீர்வு – புலிகளுடனும் அரசுடனும் அணி சேரா அணியில் உள்ளவர்களில் பெரும்பாலானவர்கள் இம்முடிவிலேயே ஏற்கனவே இருந்தனர். இன்று இவர்கள் தீவிரமாக இதனை வலியுறுத்துகின்றனர். புலிகளின் தோல்வியால் ஏற்பட்ட விரக்தி தமிழீழம் சாத்தியப்படாது என்ற முடிவுக்கு அவர்களை நிர்ப்பந்தித்து உள்ளது.

இ) இலங்கை அரசு தருவதை பெற்றுக் கொண்டு நகர்வது – இயலாமையின் மொத்தத் தீர்வாக இது உள்ளது. பெரும்பாலும் தீவிர புலி எதிர்பாளர்களும் அரச ஆதரவு அணியின் நிலை இதுவாக உள்ளது.

10. தமிழ் அரசியல் சக்திகளிடையே குறைந்தபட்ச புரிந்தணர்வை ஏற்படுத்தி தமிழ் மக்களின் அரசியல் எதிர்காலம் தொடர்பான குறைந்தபட்ச வரையறையை நிர்ணயம் செய்வது இன்று காலத்தின் அவசியமாக உள்ளது. இதன் மூலம் பல்வேறு முரண்பட்ட அரசியல் சக்திகள் தற்போதுள்ள அரசியல் வெற்றிடத்தை நிரப்ப முற்பட்டாலும் அவர்கள் குறைந்தபட்ச வரையறைக்குக் கீழ் செல்வதை தமிழ் அரசியல் சமூகம் தடுத்து நிறுத்த முடியும்.
._._._._._. 

தமிழீழ விடுதலைப் புலிகள் இராணுவ ரீதியில் தோற்கடிக்கப்பட்டதைத் தொடர்ந்து அவர்கள் வலிந்து எடுத்து தக்கவைத்துக் கொண்ட தமிழ் மக்களின் அரசியலில்  மிகப்பெரும் வெற்றிடம் ஒன்று ஏற்பட்டுள்ளது. இவ்வெற்றிடத்தை நிரப்புவதற்கான முயற்சியில் பல்வேறு சக்திகளும் ஈடுபட்டுள்ளன. இவ்வெற்றிடத்தை நிரப்ப முயற்சிப்பவர்கள் தமிழ் அரசியலை மீண்டும் ஒரு நச்சுச் சுழற்சிக்குள் தள்ளி விடுகின்ற அபாயம் உள்ளது. அதனால் இது தொடர்பான புரிந்தணர்வு அரசியல் முரண்பாடுடையவர்களிடம் எட்டப்படுவது அவசியம்.

அந்த வகையில் கடந்த யூன் 21ல் ‘அடுத்த நகர்வை நோக்கிய பன்மைத்துவ அரசியல் கலந்துரையாடல்’ என்ற தலைப்பிலான சந்திப்பு ஒன்றை தேசம்நெற் ஏற்பாடு செய்திருந்தது. இலங்கைத் தமிழ் மக்களின் அரசியலில் ஈடுபாடுடைய ஆர்வமுடைய பல்வேறு அரசியல் பின்னணிகளை உடையவர்களும் இதில் கலந்துகொண்டனர். இச்சந்திப்பில் பல்வேறு அரசியல் முரண்பாடுடையவர்கள் மத்தியிலும் புரிந்துணர்வு ஏற்படுத்தப்பட வேண்டும் என்றும் அதற்கான உரையாடல்கள் அவசியம் என்பதும் வலியுறுத்தப்பட்டது. மேலும் தமிழ் மக்களுடைய அரசியல் எதிர்காலம் பற்றிய உரையாடலில் குறைந்தபட்ச எல்லை வரையறை செய்யப்பட்டு அது புரிந்துணர்வுடன் ஏற்றுக்கொள்ளப்பட வேண்டும் எனவும் தெரிவிக்கப்பட்டது.

அதன் அடிப்படையில் ஓகஸ்ட் 2ல் மற்றுமொரு சந்திப்பு ஏற்பாடு செய்யப்பட்டுள்ளது. இச்சந்திப்பில் தமிழ் மக்களுடைய அரசியல் எதிர்காலத்தின் குறைந்தபட்ச எல்லை எது என்பது பற்றி விவாதிக்கப்பட உள்ளது.

அண்மையில் தாயகத்தில் இடம்பெற்ற நிகழ்வுகள் ஓர் வரலாற்றுத் திருப்பத்தை ஏற்படுத்தியுள்ளதுடன் தமிழ் அரசியல் சூழலில் ஒரு வெற்றிடத்தையும் ஏற்படுத்தி உள்ளது. இவ்வெற்றிடம் மீண்டும் தவறான அரசியல் போக்குகளினால் நிரப்பப்படும் அபாயம் பற்றிய அச்சம் தமிழ் அரசியலாளர்களிடையே ஏற்படுவது தவிர்க்க முடியாதது. தமிழ் மக்களின் அரசியல் எதிர்காலத்தில் அக்கறையுடைய ஒவ்வொருவரையும் இந்த சடுதியான மாற்றங்கள் மிகவும் பாதித்து உள்ளது. பல்வேறு கசப்புணர்வுகளையும் வலிகளையும் கடந்து அடுத்த கட்டம் நோக்கி நாம் பயணிக்க வேண்டியுள்ளோம். நாம் கடந்து வந்த பாதைகள் மிகக் கரடுமுரடானதாகவும் மிக மோசமானதாகவும் இருந்துள்ளது. அதனால் அனுபவங்களில் இருந்து படிப்பினைகளைக் கற்றுக் கொண்டு எமது நகர்வுகளை மேற்கொள்வது அவசியமானதும் அவசரமானதுமாகும்.

அந்த வகையில் பன்மைத்துவ அரசியல் பின்னணியுடைய புலம்பெயர் தமிழ்ச் சமூகம் தனது அடுத்தகட்ட நகர்வை ஏற்படுத்துவதற்கு முன் தங்களிடையே ஒரு கலந்துரையாடலை ஏற்படுத்துவது அவசியமாகும். இக்கலந்துரையாடல்கள் மூலம் தமிழ் மக்களின் அரசியல் எதிர்காலத்தின் குறைந்தபட்ச எல்லை பற்றிய பரஸ்பரம் புரிந்துணர்வை ஏற்படுத்துவதற்கு  உங்களை அழைக்கின்றோம். இக்கலந்துரையாடலில் பங்கேற்று நிகழ்வை ஆரோக்கியம் உள்ளதாக்குவீர்கள் என்று எதிர்பார்க்கின்றோம்.

தேசம் சஞ்சிகை ஒரு பொது ஊடகம் என்ற வகையில், இன்றைய காலத்துடன் தொடர்புபட்ட விடயங்களை விவாதிப்பதற்கான ஒரு தளமாக இருக்கின்றது. அந்த வகையில் யூன் 21ல் இடம்பெற்ற சந்திப்பின் தொடர்ச்சியாக இந்த உரையாடலுக்கான தளத்தை ஏற்படுத்தித் தருவதில் மிகுந்த மகிழ்ச்சி அடைகின்றோம்.

நீங்கள் குறித்த நேரத்தில் கலந்து கொள்வதன் மூலம் கலந்துரையாடப்படும் விடயங்களை தவறவிடாது தொடர முடியும். மேலும் கலந்துரையாடலில் பேசப்பட்ட விடயங்களை மீண்டும் மீண்டும் பேசுவதையும் தவிர்க்க முடியும்.

இக்கலந்துரையாடல் ஆக்கபூர்வமானதாக அமைய உங்கள் அனைவரது ஒத்துழைப்பையும் எதிர்பார்க்கிறோம்.

இக்கலந்துரையாடல் ஒரு பொதுக் கூட்டம் அல்ல. அழைக்கப்படுபவர்களுக்கு மட்டுமாக மட்டுப்படுத்தப் பட்டுள்ளது. அழைப்பிதழ் கிடைக்காதவர்கள் கலந்துகொள்ள விரும்பினால் கீழுள்ள தொடர்பிலக்கத்துடன் தொடர்பு கொள்ளவும்.

காலம் : 02 ஓகஸ்ட் 2009 மாலை 14:30

இடம்: Quakers Meeting House, Bush Road, Wanstead, London, E11 3AU.

தொடர்பு : த ஜெயபாலன்: 07800 596 786 ரி சோதிலிங்கம் 07846 322 369

விமான நிலைய பார்வையாளர் மண்டபம் நாளை முதல் மீண்டும் திறப்பு

mihinlankaflight.jpg இதுவரை காலமும் மூடப்பட்டிருந்த கட்டுநாயக்கா சர்வதேச விமான நிலையத்தின் பார்வையாளர் மண்டபம் நாளை 3ஆம் திகதி முதல் பொதுமக்களின் பாவனைக்காக திறந்துவிடப்படவுள்ளது.

சிற்றுண்டிச்சாலை வசதியுடன் நவீன வசதிகளுடன் கூடியதாக இப் பார்வையாளர் மண்டபம் அமைந்துள்ளதுடன் விமானம் ஒன்றின் உட்புறம் எவ்வாறு உள்ளது என்பதை பொதுமக்கள், மாணவர்கள் கண்டுகளிக்கும் வகையில் மாதிரி விமானமொன்றும் பார்வையாளர் மண்டபத்தின் ஒரு பகுதியில் வைக்கப்பட்டுள்ளதாக விமான நிலைய அதிகாரி ஒருவர் தெரிவித்தார்.

பார்வையாளர் மண்டபத்திலிருந்து விமான ஓடுபாதை, விமானங்கள் தரையிறங்குதல், புறப்பட்டுச் செல்லல் என்பவற்றை காணமுடியும் இதற்கு நுழைவுக்கட்டணமாக 20 ரூபா அறவிடப்படும் என்றும் விமான நிலைய முகாமையாளர் தெரிவித்தார்.