02

02

இராணுவசேவை அதிகாரசபையின் தலைவராக பொன்சேகாவின் மனைவி

முன்னாள் இராணுவத் தளபதி சரத் பொன்சேகாவின் மனைவி அனோமா பொன்சேகா இலங்கை இராணுவ அதிகார சபையின் தலைவராக நியமிக்கப்பட்டுள்ளார். அவர் காலை 9.07 மணிக்குத் தமது பதவியைப் பொறுப்பேற்றுக்கொண்டார். முன்னாள் இராணுவத் தளபதி சரத் பொன்சேகாவுடனான உறவுகளை மீளப் புதுப்பிப்பதை நோக்கமாகக் கொண்டு ஜனாதிபதி மஹிந்த ராஜபக்ஷ இலங்கை இராணுவ அதிகாரசபையின் தலைவர் பதவியை சரத் பொன்சேகாவின் மனைவிக்கு வழங்கியுள்ளார் என்று அரசியல் வட்டாரங்களில் பேசப்படுகின்றது.

இராணுவ அதிகார சபையின் தலைவராகப் பதவியேற்றிருக்கும் அனோமா பொன்சேகா இலங்கை இராணுவத்தின் சிங்கப் படையணியின் மகளிர் பிரிவில் சுமார் 15 வருடங்கள் பணியாற்றியுள்ளார்.

விஸா இன்றி தமிழ்ப்பெண் லண்டனுக்கு அனுப்பியது தொடர்பாக பிரிட்டன் தூதரகம் விளக்கம்

visa.jpgகொழும் பில் உள்ள பிரிட்டன் தூதரக அதிகாரிகளின் உதவியுடன் முறையான விஸா  இன்றி தமிழ்ப் பெண் ஒருவர் லண்டனுக்கு அனுப்பப்பட்டது தொடர்பில் கொழும்பில் உள்ள பிரிட்டன் தூதரகம் விளக்கம் தெரிவித்துள்ளது. அந்தப் பெண் பிரிட்டன் நீதிமன்றத்தில் தாக்கல் செய்திருந்த பிரஜாவுரிமை வழக்கு அவருக்குச் சாதகமாகத் தீர்ப்பானதால் அவரை பிரித்தானிய அரசே தனது செலவில் லண்டனுக்கு அழைத்துச் சென்றது என அந்த விளக்கத்தில் தெரிவிக்கப்பட்டுள்ளது.

அங்கையற்கண்ணி கிருஷ்ணபிள்ளை (40 வயது) பெண்மணியே இவ்வாறு லண்டனுக்கு பிரிட்டன் தூதரக அதிகாரிகளின் உதவியுடன் அனுப்பப்பட்டிருந்தார். குடிவரவுச் சட்டங்களின் பிரகாரம் அவர்  லண்டனில் இருந்து வெளியேற்றப்பட்டிருந்தார்.

எனினும் அதனை எதிர்த்து பிரிட்டன்  நீதிமன்றத்தில் அப்பெண் தாக்கல் செய்திருந்த வழக்கில் அவருக்கு சாதகமாகத் தீர்ப்பு வழங்கப்பட்டதுடன், பாதிக்கப்பட்ட பெண்  விடயத்தில் பிரிட்டன் எல்லை முகவர் அமைப்பு உதவவேண்டும் எனவும் நீதிமன்றம் உத்தரவு பிறப்பித்திருந்தது எனவும் கூறப்பட்டுள்ளது.

இதனால் அரச செலவில் லண்டன் திரும்ப வேண்டும் என பிரித்தானிய எல்லை முகவர் அமைப்பு அறிவித்ததுடன், அதற்கான உதவிகளை கொழும்பில் உள்ள பிரிட்டன்  தூதரக அதிகாரி மேற்கொள்ளவேண்டும் எனவும்  அறிவுறுத்தப்பட்டிருந்தது. இத்தகைய சூழ்நிலையிலேயே அவருக்கு விஸா இன்றி லண்டன் அனுப்பப்பட்டிருந்தார். என்று இது தொடர்பாக கொழும்பிலுள்ள தூதரகம் வெளியிட்ட அறிக்கையில் தெரிவிக்கப்பட்டுள்ளது.

சனல் 4 விவகாரம் தொடர்பில் அரசு உண்மையை வெளிப்படுத்த வேண்டும்: 3 கட்சிகளின் தலைவர்கள் வேண்டுகோள்

man0-mangala.jpg‘சனல் 4’ தொலைக்காட்சியில் வெளியிடப்பட்ட காட்சிகள் தொடர்பில் ஆராய்ந்து அதன் உண்மைத் தன்மையினை அரசாங்கம் உடனடியாக வெளிப்படுத்த வேண்டும்.  இதன் மூலமே நாட்டுக்கு ஏற்பட்டுள்ள அபகீர்த்தியினைப் போக்க முடியும். இவ்வாறு மூன்று கட்சிகளின் தலைவர்கள் கோரிக்கை விடுத்துள்ளனர். ஸ்ரீ லங்கா சுதந்திரக் கட்சி மக்கள் பிரிவு அலுவலகத்தில் நேற்று நடைபெற்ற விஷேட செய்தியாளர் மாநாட்டில் கலந்து கொண்டு கருத்து தெரிவித்த அக்கட்சியின் தலைவரும் எம்.பி.யுமான மங்கள சமரவீர, ஜனநாயக மக்கள் முன்னணியின் தலைவரும் எம்.பியுமான மனோ கணேசன், புதிய சிஹல உறுமயவின் தலைவர் சரத் மனமேந்திரா ஆகியோரே மேற்கண்டவாறு வலியுறுத்தினர்.

லிபிய சுதந்திரதின வைபவத்தில் இலங்கை இராணுவத்தின் விசேட அணிவகுப்பு

libiya.jpgலிபியா வின் தலைநகர் திரிபோலியில் நேற்று வெகு விமரிசையாக ஆரம்பிக்கப்பட்ட லிபியாவின் 40 ஆவது சுதந்திரதின வைபவ நிகழ்வுகளில் இலங்கை இராணுவத்தினரின் அணிவகுப்பு மதியாதை விசேட அம்சமாக இடம்பெற்றது. சுதந்திரதின வைபவத்தில் கலந்துகொள்வதற்காக அங்கு சென்றிருக்கும் ஜனாதிபதி மஹிந்த ராஜபக்ஷ ஏனைய 40 நாடுகளிலிருந்த வருகை தந்திருந்த தலைவர்களுடன் இந்த நிகழ்வுகளைப் பார்வையிட்டார்.

லிபியப் புரட்சி மூலம் கேணல் முஅம்மர் கடாபியால் நாட்டில் ஏற்படுத்தப்பட்டுள்ள அபிவிருத்தியை பறைசாற்றும் நிகழ்வாக இந்த சுதந்திரக் கொண்டாட்டம் அமைந்திருந்தது.

சுதந்திரதின வைபவத்தில் கலந்துகொள்வதற்காக வருகை தந்திருக்கும் வெளிநாட்டுத் தலைவர்களை ஜனாதிபதி மஹிந்த ராஜபக்ஷ சந்தித்து தனித்தனியாக இரு தரப்பு பேச்சுவார்த்தைகளை நடத்தினார்.
பிலிப்பைன்ஸ் ஜனாதிபதி குளோரியா அரோயா மற்றும் பாகிஸ்தானிய பிரதமர் யூசுப் ரசா கிலானி ஆகியோரை ஜனாதிபதி மஹிந்த ராஜபக்ஷ நேற்று தனித்தனியாக சந்தித்து இரு தரப்பு பேச்சுவார்த்தை நடத்தினார்.

இன்று மாலை வெனிசுலா ஜனாதிபதி ஹியூகோ சாவஸடன் ஜனாதிபதி விசேட கலந்துரையாடல் ஒன்றை நடத்தவுள்ளனார் என அறிவிக்கப்பட்டுள்ளது. 

திங்களன்று தமிழ்த் தேசியக் கூட்டமைப்பு – ஜனாதிபதி சந்திப்பு

sampanthan-1111.jpgதமிழ்த் தேசியக் கூட்டமைப்பு எதிர்வரும் திங்கட்கிழமை ஜனாதிபதி மஹிந்த ராஜபக்ஷவை சந்திக்கவிருக்கின்றது. தமிழ் தேசிய கூட்டமைப்பு இது தொடர்பாக ஜனாதிபதியிடம் விடுத்த கோரிக்கையின் பேரில் இச்சந்திப்பு நடைபெறவிருக்கின்றது.

இச்சந்திப்பின் போது குறிப்பாக வடக்கு, கிழக்கு மாகாணங்களின் தற்போதைய நிலவரம், நிவாரண கிராமங்களில் தங்கியுள்ள துரித மீள் குடியேற்றம், சிறைச்சாலைகளிலுள்ள தமிழ் அரசியல் கைதிகள் விவகாரம், அத்துமீறிய குடியேற்றங்கள்,மற்றும் அரசியல் தீர்வு போன்ற விடயங்கள் குறித்து முக்கியமாக கலந்துரையாடப்படும் என நாடாளுமன்ற உறுப்பினர் பா.அரியநேத்திரன் தெரிவித்தார்.

2004ஆம் ஆண்டு நாடாளுமன்ற தேர்தலின் பின்னர் தமது கட்சி முதல் தடவையாக ஜனாதிபதியுடன் தனித்து பேசவிருப்பதாகவும் அவர் குறிப்பிட்டார். இதற்கிடையில் இச்சந்திப்பில் கலந்துரையாடப்பட வேண்டிய விடயங்கள் குறித்து ஆராய்வதற்காக தமிழ்த் தேசியக் கூட்டமைப்பின் நாடாளுமன்ற குழு நாளை கூடவிருப்பாதாகவும் அவர் தெரிவித்தார்

ரெட்டி மாயம் – சிதம்பரத்துடன் சோனியா அவசர ஆலோசனை

02-rajasekara-reddy.jpgகாணாமல் போயுள்ள ஆந்திர முதல்வர் ராஜசேகர ரெட்டியை தேடும் பணியை முடுக்கி விடுவது தொடர்பாக உள்துறை அமைச்சர் ப.சிதம்பரத்துடன் காங்கிரஸ் தலைவர் சோனியா காந்தி அவசர ஆலோசனை நடத்தியுள்ளார். ஆந்திர முதல்வர் ரெட்டி மாயமானது நாடு முழுவதும் பெரும் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது.

ரெட்டியைத் தேடும் பணியில் பிரதமர் அலுவலகம், சோனியா காந்தியின் அலுவலகம், ஆந்திர அரசு, உள்துறை, பாதுகாப்புத் துறை ஆகியவை ஒருங்கிணைந்து செயல்படுகின்றன. இன்று காங்கிரஸ் தலைவர் சோனியா காந்தியை, உள்துறை அமைச்சர் ப.சிதம்பரம் சந்தித்து ரெட்டி தேடுதல் வேட்டை குறித்து விவரித்தார்.

ரெட்டியைத் தேடும் பணியில், ஆந்திர அரசுக்குத் தேவைப்படும் அனைத்து உதவிகளையும் செய்யுமாறு அப்போது ப.சிதம்பரத்தை கேட்டுக் கொண்டார் சோனியா. இதேபோல ஆந்திர மாநில காங்கிரஸ் பொறுப்பாளரான வீரப்ப மொய்லியும், சோனியா காந்தியை சந்தித்து ஆலோசனை நடத்தினார்.

இதற்கிடையே, ஆந்திர முதல்வர் விரைவில் நலமுடன் திரும்ப கடவுளைப் பிரார்த்தித்து வருவதாக காங்கிரஸ் பொதுச் செயலாளர் மணீஷ் திவாரி கூறியுள்ளார்.

வட இலங்கையின் தலைநகராக மாங்குளம்

இலங்கை யின் வடமாகாணத்தின் தலைநகராக மாங்குளத்தை இலங்கை அரசாங்கம் அறிவித்துள்ளது.

இந்த விடயம் தொடர்பாக அமைச்சரவை கூட்டத்தில் பரிந்துரைக்கப்பட்டதாக கூறுகின்ற அமைச்சர் டக்ளஸ் தேவானந்தா அவர்கள், இருப்பினும் மாங்குளத்தில் இருக்கக்கூடிய குடிநீர் பிரச்சினையைக் கருத்தில் கொண்டு அதனை மீள் பரிசீலனைக்கு உட்படுத்த வேண்டும் என்ற கருத்தும் காணப்படுவதாகக் கூறினார்.

யாழ் மாவட்டத்துக்கு வெளியே வட மாகாணத்துக்கான தலைநகரை கொண்டு செல்வதற்கு அந்த மாவட்டத்தின் சனநெரிசல் போன்ற சில விடயங்களே காரணம் என்றும் அமைச்சர் தெரிவித்துள்ளார்.

செனல் – 4 வீடியோ விசாரணை ஐ.நா. உதவியுடன் நடத்தப்பட வேண்டும் : பிலிப் அல்ஸ்ரன்

ExtraJudicialKillingsஇலங்கை இராணுவத்தினர், தமிழ்ப் போராளிகளை சர்வதேச சட்ட விதிகளுக்கு முரணாகச் சுட்டுக்கொன்றனர் என்பது உண்மைதானா, இல்லையா என்று கண்டறிவதற்கு ஐக்கிய நாடுகள் சபையின் அனுசரணையுடன், சர்வதேச மட்டத்தில், முழு அளவிலான விசாரணை நடத்தப்பட வேண்டும்.  இவ்வாறு ஐ.நாவின் சட்டவிரோத கைதுகள் மற்றும் படுகொலைகளுக்கான விசேட அதிகாரி பிலிப் அல்ஸ்ரன் ரொய்ட்டர் செய்தி நிறுவனத்துக்கு வழங்கிய தகவலில் தெரிவித்துள்ளார்.

ஐக்கிய நாடுகள் சபையின் சட்டவிரோத கைதுகள் மற்றும் படுகொலைகளுக்கான விசேட அதிகாரி பிலிப் அல்ஸ்ரன், லண்டனிலிருந்து ஒளிபரப்பாகும் ‘சனல் 4’ தொலைக்காட்சி வெளியிட்ட வீடியோக் காட்சி குறித்து கருத்து வெளியிடுகையிலேயே மேற்கண்ட கருத்தை வலியுறுத்தியிருக்கின்றார்.

வீடியோக் காட்சி போலியானது என்று இலங்கை அரசு நிராகரித்து வரும் நிலையில் ஐ.நா. அதிகாரி இந்தக் கருத்தை வெளியிட்டிருப்பதாக ரொய்ட்டர் சுட்டிக்காட்டியுள்ளது.  பிலிப் அல்ஸ்ரன் இது குறித்து ரொய்ட்டருக்கு மேலும் தெரிவிக்கையில்,

‘சனல்4’ தொலைக் காட்சியில் வெளியான காட்சிகள் உண்மையற்றவை, உறுதிப்படுத்தப்படாதவை என்று மேலெழுந்தவாரியாகச் சொல்வதற்கு ஆதாரம் எதுவும் இல்லை. இத்தகைய சந்தர்ப்பத்தில் அல்லது சூழ்நிலையில், இது விடயம் மிகுந்த கவலையைத் தோற்றுவிப்பதாக உள்ளது.

அதேவேளை, இவ்வாறான சூழ்நிலையில் இலங்கை அரசாங்கம் இது குறித்த விசாரணைகளை ஆரம்பிக்க வேண்டும். அவ்வாறு செய்வதே அந்த நாட்டு அரசின் கடமையும் பொறுப்புமாகும்.  கடந்த காலங்களில் இதுபோன்ற விசாரணைகளுக்கான விடயத்தில் அந்நாட்டு அரசின் செயற்பாடுகள் திருப்தி தருவனவாக அமையவில்லை.

சுதந்திரமான, பக்கச் சார்பற்ற விசாரணைகள் சர்வதேச மட்டத்தில் நடத்தப்படுவது அவசியமானது என்பதே எனது கருத்து.  ஐக்கிய நாடுகள் சபையின் அனுசரணையில் இந்த விசாரணைகள் நடத்தப்படுவது மிகவும் விரும்பத்தக்கதாக அமையும்” என்றார்.

இலங்கை ஜனாதிபதி ஓர் ஒப்பற்ற தலைவர் – பிலிப்பைன்ஸ் ஜனாதிபதி குளோரியா புகழாரம்

philippines-president.jpgதோற்கடிக்க முடியாததெனக் கருதப்பட்டு வந்த பயங்கரவாதத்தை முற்றாக ஒழித்த ஜனாதிபதி மஹிந்த ராஜபக்ஷ ஓர் ஒப்பற்ற தலைவர் என பிலிப்பைன்ஸ் ஜனாதிபதி குளோரியா அரோயோ தெரிவித்துள்ளார்.

லிபியாவின் 40 ஆவது சுதந்திரதின நிகழ்வுகளில் கலந்துகொள்வதற்காக அந்நாட்டுக்கு விஜயம் செய்துள்ள ஜனாதிபதி மஹிந்த ராஜபக்ஷவை நேற்று சந்தித்துக் கலந்துரையாடியபோதே பிலிப்பைன்ஸ் ஜனாதிபதி இவ்வாறு தெரிவித்தார்.

இரு தலைவர்களுக்குமிடையிலான இந்தப் பேச்சுவார்த்தையின்போது பயங்கரவாதத்தை முற்றாக ஒழிப்பது தொடர்பில் கவனம் செலுத்தப்பட்டதோடு பயங்கரவாதத்துக்கு எதிராக சர்வதேச ரீதியாகவும் தென்கிழக்கு ஆசியப் பிராந்திய ரீதியிலும் போராடுவது குறித்தும் ஆராயப்பட்டது.

இலங்கையில் பயங்கரவாதத்தை முற்றாக ஒழிப்பதற்கு பாதுகாப்புப் படையினருக்கு சிறந்த வழிகாட்டல்களை வழங்கியமைக்காக ஜனாதிபதி மஹிந்த ராஜபக்ஷவை பிலிப்பைன்ஸ் ஜனாதிபதி பாராட்டினார் என்றும் அறிவிக்கப்பட்டுள்ளது. 

ஆந்திர முதல்வர் ராஜசேகர ரெட்டி மாயம்- இதுவரை தகவல் இல்லை

02-rajasekara-reddy.jpgஆந்திர மாநில முதல்வர் ஒய்.எஸ். ராஜசேகர ரெட்டி பயணம் செய்த ஹெலிகாப்டர், 7 மணி நேரத்துக்கு மேலாகியும் எங்கு சென்றது என்று கண்டுபிடிக்கப்படவில்லை. அதையடுத்து, ஆந்திர முதல்வர் எங்கு இருக்கிறார் என்பது குறித்தோ, அவரது பாதுகாப்பு குறித்தோ எந்தத் தகவலும் இல்லை.

ஆந்திராவின் கர்னூலில் இருந்து சித்தூருக்கு இன்று காலை ஹெலிகாப்டரில் சென்றார் ராஜசேகர ரெட்டி. சுமார் 9.35 மணிக்கு, அவரது ஹெலிகாப்டருனான தகவல் தொடர்பு துண்டிக்கப்பட்டது.

இதுவரை, முதல்வர் எங்கு இருக்கிறார் என்பது குறித்து கண்டுபிடிக்கப்படவில்லை என்று ஆந்திர அரசுத் தரப்பில் தெரிவிக்கப்பட்டுள்ளது. இந்திய விமானப்படை ஹெலிகாப்டர் உள்பட ஏழு ஹெலிகாப்டர்கள் தேடுதல் பணியில் ஈடுபடுத்தப்பட்டு்ள்ளன. அதுதவிர, ஆளில்லாத விமானமும் தேடுதல் பணியில் ஈடுபடுத்தப்படுவதாக தெரிவிக்கப்பட்டுள்ளது. அடர்ந்த வனப்பகுதியாக இருப்பதாலும், மோசமான வானிலை காரணமாகவும் தேடுதல் பணி பாதிக்கப்பட்டிருப்பதாக ஆந்திர அரசு தெரிவித்துள்ளது.

ஆந்திர முதல்வரின் ஹெலிகாப்டர் வனப்பகுதியில் இறங்கியதால், அவர் அங்கிருந்து பாதுகாப்பான இடத்துக்குக் கொண்டு செல்லபப்படிருப்பதாகவும், அங்கு நக்ஸலைட்டுகள் ஆதிக்கம் அதிகமாக இருப்பதால், பாதுகாப்புக் காரணங்களுக்காக அந்தத் தகவல் ரகசியமாக வைக்கப்பட்டிருப்பதாகவும் கூறப்படுகிறது. ஆனால், எந்தத் தகவலும் உறுதிப்படுத்தப்படவில்லை.