13

13

நாடு கடந்த தமிழீழ அரசு அவசியம் ஏன்? : உருத்திரகுமாரன் விளக்கம்

120909rudrakumaaran_v.jpgஇலங்கையின் அரசியல் நீரோட்டத்தில் தமிழர்கள் பங்கு பெறுவது சாத்தியம் அற்றதாகிவிட்டதால், அந்த தீவிற்கு வெளியிலேயே தமிழர்கள் தமது உரிமைகளை நிலைநாட்டுவதற்கான முன்னெடுப்பு முயற்சிகளைத் தற்போதைக்குத் தொடர முடியும். எனவேதான் அனைத்துலக சட்ட மரபு நெறிகளுக்கு உட்பட்டு, தாயகத்திலும் வெளிநாடுகளிலும் பரவி வரும் தமிழ் ஈழத்தவர்கள் தற்போது ‘நாடு கடந்த தமிழீழ அரசாங்கம்’ (Provisional Transnational Government of Tamil Eelam) ஒன்றினை உருவாக்குதல் அத்தியாவசிம் எனக் கருதுகின்றார்கள் என்று அந்த அரசாங்கத்தை உருவாக்கும் முயற்சியில் ஈடுபடவுள்ள செயற்குழுவின் தலைவர் வி.உருத்திரகுமாரன் தெரிவித்துள்ளார்.

இதுதொடர்பாக அவர் வெளியிட்டுள்ள அறிக்கையில், இந்தச் செயற்குழுவின் ஆலோசகர்களாக இயங்குவதற்கு முன்வந்துள்ள பல்துறை நிபுணர்களின் பெயர்களையும் வெளியிட்டுள்ளார். அந்த அறிக்கையில் அவர் மேலும் கூறியிருப்பதாவது:

மானிடம் பேணும் சட்டநெறிகளையும் மனித நாகரீகத்தின் அனைத்துப் பண்புகளையும் முற்று முழுதாக மீறி, கொடூரமிக்க, அதீத இராணுவ ஆக்கிரமிப்பின் மூலம் சிங்கள அரசு, தமிழ் மக்களின் நியாயமான தன்னாட்சித் தீர்மான முன்னெடுப்புக்களை நசுக்கிச் சிதைத்துள்ளது.

வன்னிப் பிராந்தியத்தில் தமிழர்கள் மீது கட்டவிழ்த்து விடப்பட்ட கொலைக்களரியானது முழு உலகையுமே பேரதிர்ச்சியிலும் ஆழ்ந்த வேதனையிலும் அமிழ்த்தியுள்ளது.

குறிப்பாக தடைசெய்யப்பட்ட கனரகப் போர் ஆயுதங்களினாலும், அறாத்தொடர்ச்சியான எறிகணைகளாலும், பீரங்கிக் குண்டுகளினாலும் 30 ஆயிரத்துக்கும் அதிகமான தமிழர்கள் பாதுகாப்பு வலயம் என அறிவிக்கப்பட்ட பகுதியில் கொன்று குவிக்கப்பட்டனர்.

இன்று சிங்கள இராணுவத்தினரால் சுற்றிவளைக்கப்பட்ட சிறை முகாம்களில் 3 லட்சத்திற்கும் அதிகமான தமிழர்கள் அடைக்கப்பட்டுள்ளனர்.

ஐக்கிய நாடுகள் சார்ந்த நிறுவனங்களும், அனைத்துலக அரச நிறுவனங்களும் ஊடகவியலாளர்களும் இந்த முகாம்களுக்கு செல்வதற்கு தடை விதிக்கப்பட்டுள்ளது.

முகாம்களுக்கு வெளியேயுள்ள தமிழர்களும் நடைப்பிணங்களாகவே வாழ்கின்றனர். யாழ் தீபகற்பம் ஒரு திறந்தவெளி மறியல் சாலையாகவே உள்ளது. கிழக்கு மாகாணம் இராணுவ ஆட்சி நிலவும் நிலமாக உள்ளது.

சிறிலங்காவின் தெற்குப்பகுதியில் சிங்களப் பேராதிக்கக் கட்டுப்பாட்டில் தமிழ் மக்கள் பாதுகாப்பற்று, பயமுறுத்தப்பட்டு, பல்வேறு இம்சைகளுக்கு உள்ளாக்கப்படுவது தினந்தோறும் நடைபெறுகிறது.

தமிழர்கள் என்ற ஒரே காரணத்திற்காவே இவர்கள் குறிவைக்கப்படுகின்றனர். நன்கு திட்டமிட்ட கொலைகள், கடத்தல், காணாமல் போதல், வன்மையான அடையாள அழிப்பு, தமிழீழ நிலப்பறிப்பு, இனச்சுத்திகரிப்பு போன்றவற்றினால் தமிழ் மக்களின் தேசிய இனத்துவ முழுமை சிதைக்கப்பட்டு வருகின்றது.

இலங்கைத் தீவில் தமிழ் மக்களின் உயிர் வாழ்க்கை கேள்விக்குறியாகியுள்ளது மட்டுமல்லாமல் அவர்களது நியாயமான அரசியல் அபிலாசைகளை எடுத்துரைக்கும் அரசுரிமை வெளியும் அழிந்து போய் உள்ளது.

மக்களின் குரலைப் பிரதிநிதித்துவப்படுத்தும் அரசியல்வாதிகள் உயிர் ஆபத்தின் விளிம்பில் வாழ்கின்றனர். யோசப் பரராச சிங்கம் (2005), நடராசா ரவிராஜ் (2006), க.ந.சிவநேசன் (2008) ஆகிய தமிழ்த் தேசியக் கூட்டமைப்பு நாடாளுமன்ற உறுப்பினர்கள் கொல்லப்பட்டுள்ளனர்.

ஏனைய நாடாளுமன்ற உறுப்பினர்கள் உயிர் ஆபத்தை எதிர்கொண்ட போதும் அசாத்தியத் துணிவுடன் பணியாற்றுகின்றனர்.

இவை தவிர, இலங்கை சுதந்திரம் பெற்ற காலம் முதல் திட்டமிட்ட நில ஆக்கிரமிப்பு, தேர்தல் தொகுதிகளின் எல்லைகளைக் கபடமாக மாற்றியமைத்தல் போன்றவற்றினாலும், புதிய வாக்காளர்களைப் பதியாமல் விட்டமை, மற்றும் தொடர்ந்து போரினால் ஏற்பட்ட இடப்பெயர்வுகள் ஆகியனவும் நாடாளுமன்றத்தில் தமிழ்ப் பிரதிநிதித்துவத்தை குறுகச் செய்துள்ளது.

இவை அனைத்துமே இலங்கைத் தீவின் அரசியல் நீரோட்டத்தில் தமிழர்கள் பங்கு பெறுவதை சாத்தியமற்றதாக்கி உள்ளது.

இந்நிலையில் சிறிலங்காவின் அரச அமைப்பிலும் அதன் யாப்பு முறையிலும் தமிழ் மக்களின் அரசியல் அபிலாசைகளை ஆக்கபூர்வமான, பயன்தரும் வகையில் முன்னெடுப்பதற்கான எத்தகைய அரசியல்வெளியும் இல்லை.

இத்தீவில் தமிழர்களின் பாதுகாப்பினை உறுதி செய்யும் வழி எதுவுமே இல்லை. எனவே இலங்கைத் தீவுக்கு வெளியிலேயே தமிழர்கள் தமது உரிமைகளை நிலை நிறுத்துவதற்கான முன்னெடுப்பு முயற்சிகளைத் தொடரமுடியும்.

ஆகவே தமிழீழத்தில் வாழும் மக்களும் வெளிநாடுகளில் பரவி வாழும் தமிழ் ஈழத்தவர்களும் தற்பொழுது நாடு கடந்த தமிழீழ அரசாங்கம் (Provisional Transnational Government of Tamil Eelam) ஒன்றினை உருவாக்குதல் அத்தியாவசியமான, மிக முக்கிய பணி எனக் கருதுகின்றார்கள்.

சட்டபூர்வமற்ற முறையில் இராணுவ பலத்தைப் பிரயோகிப்பதும் சித்திரவதைக்காக மக்களைக் கடத்துவதும் திட்டமிட்டு இன அழிப்பில் ஈடுபடுவதும் இவை போன்ற போர்க் குற்றங்களும் பெண்கள் மீதான பாலியல் வன்முறைகளும் குழந்தைகளைக் கடத்துவதுமாகிய கொடூரங்களும் இவற்றினூடாக அரசியற் தலைவர்களை புறந்தள்ளலும் ius cogens அடிப்படை சட்டநெறித் தத்துவங்களுக்கு முற்றிலும் முரணானதாகும்.

இத்தகைய சூழலில் நாடு கடந்த நிலையில் சட்டபூர்வமான அரசாட்சியை நிறுவுதற்கான தேவையினை செயற்படுத்துவதற்கு அனைத்துலக சட்ட மரபுநெறிகள் இடம் தருகின்றன.

இது தொடர்பாக நாடு கடந்த தமிழீழ அரசாங்கம் ஒன்றினை தற்பொழுதிற்கு அமைப்பதற்கான திட்டம் ஒன்றினை முன்வைக்க விரும்புகின்றோம். எமது செயற்பாடுகளும் திட்ட முறைமைகளும் ஜனநாயக அடிப்படையில் அமைந்தவையாகும்.

நன்றி: வெப்துனியா

குழந்தை வயிற்றில் குழந்தை

130909baby.jpgசீனாவில் ஒரு வயதுடைய காங் மெங்ரூ என்ற பெண் குழந்தையின் வயிற்றில், இரட்டை சிசு உள்ள ஆபூர்வம் நடந்துள்ளது.

அக்குழந்தையின் வயிற்று பகுதி நாளுக்கு நாள் பெரிதாகி கொண்டே போவதால், குழந்தையின் பெற்றோர் மருத்துவமனைக்கு காங் மெங்ரூவை கொண்டு சென்றனர். மருத்துவர்கள் குழந்தை பரிசோதனை செய்த போது, குழந்தையின் வயிற்றில் இரட்டை சிசு உள்ளது கண்டுபிடிக்கப்பட்டது.

இதுபோன்று வினோதமான நிகழ்வு 500,000 பிரசவத்திற்கு ஒரு முறை நடக்கும் என மருத்துவர்கள் தெரிவித்துள்ளனர். காங் மெங்ரூவிற்கு விரைவில் அறுவைசிகிச்சை நடக்க உள்ளது.

கூட்டமைப்பைக் கலைத்துவிட்டு தனித்தனிக் கட்சிகளாக இணைந்து செயற்படுவதே பலனளிக்கும் – சித்தார்த்தன்

130909sittar.jpgத. தே. கூட்டமைப்பில் ஏனைய கட்சிகள் சேர்வதால் தெற்கில் மேலும் சந்தேகமும் அவநம்பிக்கையும் வளர இடமுண்டு. பிரச்சினைகளைத் தீர்ப்பதற்குப் பதிலாக அதனை மேலும் சிக்கலாக்கிக் குழப்பிவிட இது காரணமாக அமைந்துவிடும் என்று புளொட் அமைப்பின் தலைவர் தர்மலிங்கம் சித்தார்த்தன் கூறியுள்ளார்

புளொட் அமைப்பின் தலைவர் தர்மலிங்கம் சித்தார்த்தன் தினகரன் வாரமஞ்சரிக்கு வழங்கிய நேர்காணல் வருமாறு

கேள்வி: தற்போதைய அரசியல் நிலைமைகள் எப்படியிருக்கின்றன?

பதில்: அரசியல் நிலைமை பற்றி கூறுவதானால் ஜனாதிபதித் தேர்தல், பாராளுமன்றத் தேர்தல் இவை இரண்டும் முடியும் வரையிலும் அரசியல் ரீதியான எந்தவொரு முன்னெடுப்பையும் அரசாங்கம் நிச்சயமாக எடுக்கப்போவதில்லை என்றே நான் நம்புகின்றேன்.

அதனை முன்னெடுப்பதற்கான பலம் அரசிடம் இல்லை. பாராளுமன்றத்தைப் பொறுத்தவரையில் ஜே. வி. பி, ஹெல உறுமய, விமல் வீரவன்ச மூன்று பகுதியினரும் ஒரு நிலைப்பாட்டை எடுக்கின்றனர்.

இவ்வாறு எடுக்கும்போது அரசியல் ரீதியான ஒரு தீர்வோ அல்லது பாராளுமன்றத்தில் அரசியல் அமைப்பை மாற்றுவதற்கான முயற்சியோ சாத்தியமில்லை. ஆகவே, அடுத்த பாராளுமன்றத் தேர்தலுக்கு பின்னர் அரசின் பக்கம் பாராளுமன்ற உறுப்பினர்களாக யார் வரப்போகின்றார்கள் கடும் போக்காளர்கள் மக்களால் ஒதுக்கப்படுவார்களா என்பவற்றைப் பொறுத்துத்தான் ஒரு அரசியல் தீர்வை நாம் பார்க்க முடியும்.

சர்வதேச ரீதியில் அழுத்தங்கள் கொடுக்கப்பட்டு வந்தாலும் இப்போது அவை படிப்படியாகக் குறைந்து வருவதை அவதானிக்கக் கூடியதாக இருக்கிறது. மேற்குலக நாடுகள் கூட தமிழ் மக்களின் பிரச்சினைக்கான அரசியல் தீர்வைக் காட்டிலும் இப்போது மனித உரிமைகள் பற்றிப் பேச ஆரம்பித்திருக்கின்றன.

யுத்த காலத்தில் நடைபெற்ற விடயங்களில் அக்கறை காட்டுவதன் மூலம் இங்கு மீண்டும் இனங்களுக்கிடையே ஒற்றுமையற்ற நிலைமையை உருவாக்குவதற்கான சந்தர்ப்பத்தை ஏற்படுத்த முனைகிறார்கள்.

யுத்த காலத்தில் எமது உறுப்பினர்கள் பலர் புலிகளால் கடத்திச் செல்லப்பட்டுக் கொல்லப்பட்டுள்ளனர். இவ்வாறான சம்பவங்களை நாம் ஆதாரபூர்வமாக இலங்கை கண்காணிப்பு பணியகத்திற்கும் சர்வதேசத்திற்கும் எடுத்துக் கூறிய போதும் அவர்கள் அதுபற்றி எவ்வித அக்கறையும் எடுக்கவில்லை. அன்று முதல் இன்றுவரை அவர்களின் நடவடிக்கைகள் அனைத்தும் பக்கசார்பானதாக இருந்து வருவதை நாம் பார்க்கிறோம்.

முதலில் இனங்களுக்கிடையே சுமுகமான உறவுகளை ஏற்படுத்த வேண்டும். நீண்ட காலமாக யுத்தத்தினால் மூவினங்களுக்கிடையேயும் ஒரு அவநம்பிக்கை வளர்ந்திருப்பதும் அரசியல் தீர்வைக் கொண்டு வர முடியாமைக்கான ஒரு முக்கிய காரணமாகும். ஆகவே இனங்களுக்கிடையே நம்பிக்கையைக் கட்டியெழுப்ப முற்பட வேண்டும்.

தமிழ் மக்கள் மத்தியில் கூட கடந்த காலங்களில் பல கசப்பான சம்பவங்கள் நடந்திருக்கின்றன. அவற்றை மறக்க முடியாவிட்டாலும் கூட ஒருவரையொருவர் மன்னித்து ஓன்றுபட்ட நிலையை உருவாக்கி சரியானதொரு தீர்வை நோக்கி முன்னேற வேண்டும்.

கேள்வி: தமிழ்த் தேசிய கூட்டமைப்பு கடந்த வாரம் ஜனாதிபதியைச் சந்தித்தது. இச் சந்திப்பு தமிழ் மக்களிடையே ஒரு நம்பிக்கையைத் தோற்றுவிக்குமா?

பதில்: எம்மைப் பொறுத்தவரையில் த. தே. கூட்டமைப்பு கடந்த காலத்தில் புலிகளால் ஆரம்பிக்கப்பட்ட அமைப்பாகும். புலிகளாலேயே 22 பாராளுமன்ற உறுப்பினர்கள் வெல்லக்கூடியதாக இருந்தது. புலிகள் எதைக் கூறினார்களோ அதனையே த. தே. கூட்டமைப்பும் செய்து வந்திருக்கிறது.

இன்று புலிகள் இராணுவ ரீதியில் முற்றாக அழிக்கப்பட்ட பின்னர் கூட்டமைப்பினர் சுயமாக சிந்தித்து ஒரு முடிவை எடுக்கக்கூடிய நிலையில் இருக்கின்றனர். யார் விரும்புகிறார்களோ இல்லையோ மஹிந்த ராஜபக்ஷ தான் இந்நாட்டின் ஜனாதிபதி.

எமது பகுதிகளில் வாழும் மக்களின் அன்றாடப் பிரச்சினைகள் (நான் இங்கு அரசியல் தீர்வுப் பிரச்சினையைக் கூறவில்லை) மிக அதிகளவில் இருப்பதால், யுத்தத்தினால் அழிக்கப்பட்டு அகதிகளாக்கப்பட்ட மக்கள் அகதி முகாம்களில் வாழும் இந்நிலைக்கு ஜனாதிபதியுடன் பேசாமல் ஒரு தீர்வு காண முடியாது.

ஆகவே இவர்கள் கடந்த காலங்களில் வாய்ப்புகள் வழங்கப்பட்ட போதெல்லாம் ஜனாதிபதியைச் சந்திக்க மாட்டோம் என்ற நிலைப்பாட்டை கொண்டிருந்தனர். அவ்வாறு இறுமாப்போடு இருந்ததால் மக்களுக்குச் செய்யக்கூடிய பல அடிப்படையான விடயங்களைக்கூட செய்ய முடியாமல் போனது. அவ்வாறு தட்டிக்கழித்ததால் அது அவர்களுக்கு வசதியாக இருந்திருக்கிறது.

ஆகவே இன்று இவர்கள் இப்படியானதொரு நிலைப்பாட்டை எடுத்திருப்பதை மக்களும் நிச்சயம் வரவேற்பார்கள். மக்களைக் பொறுத்தவரையில் அடிப்படைப் பிரச்சினைகளுக்கு ஒரு அரசியல் தீர்வைக் காண வேண்டும் என்பது ஒருபுறமிருக்க ஒவ்வொரு தனிமனிதனும் தனது அன்றாடப் பிரச்சினைகள் தீர வேண்டும் என்பதில் அக்கறையாக இருப்பர்.

அகதி முகாம்களில் மூன்று இலட்சம் மக்கள் இருக்கும் இவ்வேளையில் அரசியல் பிரச்சினைகளை விட அவர்கள் தமது சொந்த இடங்களுக்குச் சென்று அமைதியாகவும் சுதந்திரமாகவும் வாழக்கூடிய வாழ்க்கையை ஆரம்பிக்க வேண்டும் என்பதே முக்கிய பிரச்சினையாகும்.

இதையே நாமும் இன்று முதலில் கவனத்தில் கொள்ள வேண்டும்.

இவ்வாறான சூழ்நிலையில் தமிழ்த் தேசிய கூட்டமைப்பு ஜனாதிபதியை சந்தித்தது உண்மையில் வரவேற்கக்கூடிய விடயமாகும். இதுவொரு ஆரம்பமாக இருக்கலாம். இச்சந்திப்பினால் உடனடியாக எந்தவொரு பிரச்சினையும் தீர்க்கப்படாது போனாலும் இது நல்லதொரு ஆரம்பம். த. தே. கூட்டமைப்பை பொறுத்தவரையில் சரியோ பிழையோ இன்று வடக்கு, கிழக்கில் மிகப்பெரிய பலம் பொருந்திய 22 பாராளுமன்ற உறுப்பினர்களைக் கொண்ட கட்சியாக இருக்கின்றது.

ஆகவே அவர்களுக்கு ஒரு கடமை இருக்கிறது. வெறுமனே நாங்கள் ஜனாதிபதியைச் சந்திக்க மாட்டோம், தமிழ் மக்களின் தன்மானத்தைக் காப்போம் எனக்கூறிக்கொண்டு மாத்திரம் இருக்காது அந்த மக்களின் அன்றாட பிரச்சினைகளைத் தீர்க்க முன்வர வேண்டும். அதற்கானதொரு நல்ல ஆரம்பமாகவே நான் இதனைப் பார்க்கிறேன்.

கேள்வி: தமிழ்த் தேசிய கூட்டமைப்பின் எதிர்கால நடவடிக்கைகள் எப்படி இருக்குமென நீங்கள் கருதுகிaர்கள்?

பதில்: அதனைப் பொறுத்திருந்துதான் பார்க்க வேண்டும். ஏனெனில் கடந்த 5 வருட காலமாக புலிகளே ஏக பிரதிநிதிகள் என்ற கொள்கையைக் கொண்டிருந்தனர். யுத்தம் நடைபெற்றபோது கூட யுத்தத்தால் பாதிக்கப்பட்ட மக்களைப் பற்றி உலகமே கவலைப்பட்டுக் கொண்டிருக்கையில், அவர்கள் மக்களைக் காப்பாற்றுவதை விட புலிகளைக் காப்பாற்றுவதில்தான் அதிக கவனம் செலுத்தினர்.

ஆயிரக்கணக்கான சிறுவர்களை புலிகள் தமது படையில் பலவந்தமாக சேர்த்தபோது உலகமே அதைப்பற்றி பேசியது. அப்போதும் த. தே. கூட்டமைப்பு அதனை நியாயப்படுத்திப் பேசியது. பாராளுமன்றத்திற்குள்ளேயும் வெளியிலும் அச்சிறுவர்கள் தாங்களாகவே சென்று சேர்ந்துகொள்வதாக கூறினர்.

ஒரு விடயத்தில் நாம் அனைவரும் தெளிவுடன் இருப்போமானால் அனைத்து பிரச்சினைகளும் ஒரு முடிவுக்கு வரும். அதாவது மே 18 இற்கு முந்திய காலம், மே 18 இற்கு பிந்திய காலம் அல்லது பிரபாகரனுக்கு முன்பு, பிரபாகரனுக்கு பின்பு என தமிழ் மக்களின் பிரச்சினைகளை வகுக்க வேண்டும்.

மே 18 இற்கு முன் நடந்தது நடந்தவையாகவே இருக்கட்டும். மே 18 இற்குப் பின் நடப்பவை நல்லவையாகவே இருக்கட்டும். நாம் அனைவருமே ஒரு கருத்தொருமையுடன் சிந்தித்து செயற்படுவோமேயானால் நிச்சயம் தமிழ் மக்களுக்கு ஏதோ எங்களால் முடிந்த சேவையை ஆற்ற முடியுமென்று நான் நம்புகிறேன்.
கேள்வி : தமிழ்த் தரப்புகள் ஒன்றிணைந்து செயற்படுவதற்கான முயற்சிகள் மேற்கொள்ளப்படுவதாக கூறப்படுகிறதே?
பதில்: தமிழ் மக்களின் நலன் விரும்பிகள் மத்தியில் இவ்வாறானதொரு எதிர்பார்ப்பும், எண்ணமும் இருக்கின்றது. எம்மைப் பொறுத்தவரையில் தமிழ்த்தேசியக் கூட்டமைப்பு என்பது புலிகளால் உருவாக்கப்பட்ட, தெற்கில் சந்தேகத்துடன் பார்க்கப்படும் ஒரு அமைப்பாகும்.

தமிழ்த் தேசியவாத சாயம் பூசப்பட்ட அமைப்பாகவே பெரும்பான்மை இன மத்தியில் பேசப்படுகிறது. ஆகவே தமிழ்த் தேசிய கூட்டமைப்புடன் ஏனைய அமைப்புகள் சேரவேண்டும் என்பது முக்கியமல்ல. த. தே. கூட்டமைப்பு என்ற பெயரெல்லாம் கைவிடப்பட்டு அனைத்து கட்சிகளும் தனித்தனியாகவும், ஒன்றாகவும் கூடிப்பேசி ஒரு அமைப்பை கொண்டு வருவதுதான் தமிழ் மக்களுக்கு நன்மை தருவதாக அமையும். த. தே. கூட்டமைப்பில் ஏனைய கட்சிகள் சேர்வதால் தெற்கில் மேலும் சந்தேகமும் அவநம்பிக்கையும் வளர இடமுண்டு.

பிரச்சினைகளைத் தீர்ப்பதற்குப் பதிலாக அதனை மேலும் சிக்கலாக்கிக் குழப்பிவிட இது காரணமாக அமைந்துவிடும்.

கேள்வி: உங்களைப் போன்றோர் இவ்வாறான விடயங்களை முன்வந்து செய்ய முடியாதா?

பதில்: நாங்கள் அதனைச் செய்யத் தயாராகவும், ஆர்வமாகவும் இருக்கிறோம். ஆனால் இதனை தனியொரு தரப்பினரால் முன்னெடுக்க முடியாது. தனிநபராகவோ அல்லது தனிக் குழுவின் செயற்பாடாகவோ இருக்கக் கூடாது. ஏகப் பிரதிநிதித்துவக் கதைகளை விட்டுவிட்டு தமிழ்த் தரப்புக்களிடையே கருத்தொருமைப்பாட்டை ஏற்படுத்துவதே இப்போதைய தேவையாக இருக்கிறது. தமிழ் மக்களை மேலும் கூறு போடாது இருப்பதன் மூலமே பிரச்சினையைத் தீர்க்க முடியும்.

கேள்வி: 13ஆவது அரசியலமைப்பு திருத்தத்தை, நடைமுறைப்படுத்துவது பற்றிய உங்கள் கருத்தென்ன?

பதில்: நிச்சயமாக இது தமிழ் மக்களின் அபிலாஷைகளைப் பூர்த்தி செய்து அவர்களின் பிரச்சினைகளைத் தீர்க்க உதவாது. ஜே. ஆர். ஜயவர்த்தன ஆட்சிக் காலத்தில் ஒரு இலட்சத்திற்கு மேலான இந்திய அமைதிப் படையின் வருகை, இந்தியாவின் அழுத்தம் என்பன இருந்தும் கூட எம்மால் 13ஆவது திருத்தத்தையும் அதன் மூலம் கிடைத்த மாகாண சபையையுமே எம்மால் பெற முடிந்தது.  இன்று தமிழ் மக்களின் அரசியல் நிலமை மிகவும் பலவீனமான நிலையிலேயே இருக்கின்றது.

விடுதலைப் புலிகள் ஏனைய அனைவரையும் பலவீனப்படுத்திய பின் அவர்களே தம்மை ஏகப் பிரதிநிதிகள் எனக் கூறிச்செயற்பட்டனர். இன்று அவர்களும் முற்றாக அழிக்கப்பட்ட நிலையில் தமிழ் மக்கள் அரசியல் ரீதியில் மிகவும் பலவீனமான நிலைக்குத் தள்ளப்பட்டிருக்கும் இத்தருணத்தில் 13ஆவது திருத்தத்திற்குக் கூடுதலாக எதையும் நாம் பெற்றுவிட முடியாது.

அது மாத்திரமல்ல. இந்திய அரசாங்கம் கூட அன்று 13ஆவது திருத்தத்தை விடக் கூடுதலாக அதிகாரங்கள் கொடுக்க வேண்டும் என்ற நிலையில் இருந்த போதிலும் இன்று 13 + என்ற எல்லையில் நின்று கொண்டிருக்கின்றனர். ஆகவே 13ஆம் திருத்தத்திற்கு இன்னும் சில முக்கிய அம்சங்களை சேர்த்துக்கொள்ள வேண்டும்.

ஏனெனில் கிழக்கு மாகாணத்தில் சுயமாக எதையும் செய்ய முடியவில்லையென அதன் முதலமைச்சர் கூறுகிறார். 13ஆவது திருத்தத்தை ஒரு நல்ல ஆரம்பமாக எடுத்துக்கொண்டு அதிலிருந்து படிப்படியாக தேவையான அம்சங்களை அதிகாரங்களை இணைத்துக்கொள்ள வேண்டும். 13ஆவது திருத்தம் ஒரு முடிவாக அல்லாமல் ஆரம்பமாகவே அமைய வேண்டும்.

கேள்வி: வடக்கு கிழக்கு இணைப்பு பற்றிய உங்கள் கருத்தென்ன?

பதில்: வடக்கு கிழக்கு தமிழர் தாயகம். அது இணைந்ததாகவே இருக்கவேண்டும் என்பதே எனது கருத்தாகும்.

கேள்வி: இனப்பிரச்சினைக்கான தீர்வில் இடதுசாரிக் கட்சிகளின் நிலைப்பாடு எப்படியிருக்கின்றது?

பதில்: ஜே. வி. பியை இடதுசாரிக் கட்சியெனக் கூற முடியாது. ஏனெனில் அவர்கள் அடிப்படையில் இனவாதக் கருத்துக்களையே முதன்மைப்படுத்துகின்றனர். ஏனைய இடதுசாரிக் கட்சிகள் இனப்பிரச்சினையின் தீர்வு தொடர்பாக ஆக்கபூர்வமான கருத்துகளைக் கொண்டுள்ளன.

ஆனால் துரதிஷ்டவசமாக அவர்களின் பலம் போதுமானதாக இல்லை. இடதுசாரிக் கட்சிகளுடன் நெருங்கிய தொடர்புகள் இன்னும் இருக்கின்றன. கிழக்கு மாகாண சபைத் தேர்தலில் இடதுசாரிக் கட்சிகளுடன் இணைந்து செயற்பட்டோம். எதிர்வரும் காலங்களிலும் இடதுசாரிக் கட்சிகளுடன் இணைந்தே செயற்படுவோம்.

கேள்வி: இனப்பிரச்சினையின் தீர்வு தொடர்பாக ஆராயும் சர்வகட்சி மாநாடு தொடர்பில் உங்களது கருத்தென்ன?

பதில்: பேராசிரியர் திஸ்ஸ விதாரண இவ்விடயத்தில் மிகவும் ஆர்வத்துடன் செயற்பட்ட போதிலும் அதில் ஐ. தே. க., த. தே. கூட்டமைப்பு ஆகிய பிரதான கட்சிகள் பங்குபற்றவில்லை.

இதனால் ஒரு தீர்வைக்காண முடியுமா என்பது சந்தேகம்தான். உண்மையாக ஒரு தீர்வைக்காண வேண்டுமானால் எதிர்க்கட்சியான ஐ. தே. க. மற்றும் த. தே. கூட்டமைப்பு ஆகியன இதில் பங்குபற்றியே ஆகவேண்டும்.

கேள்வி: கட்சியின் எதிர்கால நடவடிக்கைகளை எவ்வாறு முன்னெடுக்க திட்டமிட்டுள்ளிர்கள்?

பதில்: எதிர்கால நடவடிக்கைகள் பற்றி எதிர்வுகூற முடியாவிட்டாலும் கூட இன்று இடம்பெயர்ந்து மிகவும் இக்கட்டானதும் துரதிஷ்டமானதுமான நிலையில் வாழ்ந்து வரும் எமது மக்களுக்குத் தொடர்ந்தும் பிச்சை கொடுத்துக் கொண்டிராமல் அவர்களின் எதிர்காலத்தை உறுதிப்படுத்த வேண்டும்.

சொந்த இடத்தில் சுதந்திரமானதும், நிம்மதியானதுமான வாழ்க்கையினை அவர்கள் பெறுவதற்கு வெறுமனே அரசாங்கத்தை குறைகூறாமல், புலம்பெயர் மக்கள், சக்திகள் உட்பட சகல வளங்களையும் பயன்படுத்தி எமது மக்களை மிக விரைவில் நல்வாழ்வுக்கு இட்டுச்செல்ல வேண்டும் என்பதே எமது எதிர்பார்ப்பாகும்.

நேர்கண்டவர் பி. வீரசிங்கம்

சட்டவிரோதமாக சென்ற மற்றுமொரு படகு அவுஸ்திரேலியாவில் தடுத்து வைப்பு

இலங்கையர்களும் உள்ளடங்குவதாக சந்தேகிக்கப்படும் அரசியல் தஞ்சம் கோரியோர்களை  ஏற்றிச் சென்ற படகு ஒன்றை அவுஸ்திரேலிய கடற்படையினர் தடுத்து வைத்துள்ளதாக ரொய்ட்டர்ஸ் செய்தி வெளியிட்டுள்ளது.
 
அரசியல் தஞ்சம் கோரிய 83 பேரை  ஏற்றிச் சென்ற இந்த படகு, அவுஸ்திரேலியாவின் அஸ்மோர் தீவுக்கு அருகில் வைத்து மீட்கப்பட்டுள்ளதாக தெரிவிக்கப்பட்டுள்ளது.

படகுடன், 83 அரசியல் தஞ்சம் கோரியவர்களையும், குறித்த படகோட்டிகள் நான்கு பேரையும் அவுஸ்திரேலிய கடற்படையினர் கைது செய்துள்ளனர்.

இவ்வாறு அரசியல் தஞ்சம் கோரியவர்களை  ஏற்றிச் சென்ற  20 வது படகே இன்று மீட்கப்பட்டுள்ளது. கைது செய்யப்பட்டவர்கள் தற்போது கிரிஸ்மஸ் தீவில் உள்ள இடைத்தங்கல் முகாமிற்கு அழைத்துச் செல்லப்பட்டுள்ளதாக அவுஸ்திரேலிய உள்துறை அமைச்சர் ப்ரண்டன் ஓ கோனர் தெரிவித்துள்ளார்.

தொழிலாளர்களுக்கு 405 ரூபா நாளாந்தம் சம்பளம்:தொழிற்சங்கங்கள்-முதலாளிமார் சம்மேளனம் நேற்றிரவு இணக்கம்

080909teawomen.jpgதோட்டத் தொழிலாளர்களின் சம்பள விவகாரம் தொடர்பாக தொழிற்சங்கங்களுக்கும் முதலாளிமார் சம்மேளனத்திற்கும் இடையில் நடைபெற்ற இறுதிக் கட்ட பேச்சுவார்த்தையில் இணக்கப்பாடு காணப்பட்டுள்ளதாக இ.தொ.கா. உபதலைவர் ஆர்.யோகராஜன் தெரிவித்தார். இதன் அடிப்படையில் தோட்டத் தொழிலாளர்கள் நாளொன்றுக்கு 405ரூபா சம்பளத்தைப் பெறுவார்கள்

பத்மநாதனிடம் பாகிஸ்தான் அதிகாரிகளும் விசாரணைகளை நடத்தவுள்ளனர்

தமிழீழ விடுதலைப் புலிகளின் சர்வதேச விவகாரப் பொறுப்பாளர் குமரன் பத்மநாதனிடம் விசாரணைகளை நடத்த வேண்டுமென பாகிஸ்தானிய அதிகாரிகளும் கோரிக்கை விடுத்துள்ளனர்.  கடந்த மார்ச் மாதம் பாகிஸ்தானின் லாகூர் நகரில் இலங்கைக் கிரிக்கட் அணி மீது நடத்தப்பட்ட தீவிரவாதத் தாக்குதல் தொடர்பில் கே.பி.யிடம் விசாரணை நடத்தப்பட வேண்டுமென பாகிஸ்தானிய அதிகாரிகள் கோரியுள்ளனர்.

அண்மையில் லிபியாவில் வைத்து ஜனாதிபதி மஹிந்தவிடம், இலங்கை கிரிக்கெட் அணி மீது லாகூரில்  நடத்தப்பட்ட தாக்குதலுடன் விடுதலைப்புலிகளுக்கு தொடர்பு உள்ளதாக பாகிஸ்தான் பிரதமர் ஹிலார்னி தெரிவித்திருந்தார்.

இதன்படி, குமரன் பத்மநாதனிடம் விசாரணைகளை மேற்கொள்ளும் நோக்கில் பாகிஸ்தானிய உயரதிகாரிகள் குழுவொன்று இலங்கைக்கு எதிர்வரும் வாரத்தில் விஜயம் செய்யக் கூடுமென எதிர்பார்க்கப்படுகிறது.

இந்தியாவின் முன்னாள் பிரதமர் ராஜீவ் படுகொலைச் சம்பவம் தொடர்பில் விசாரணை நடத்தப்பட வேண்டுமென இந்தியா ஏற்கனவே கோரிக்கை விடுத்திருந்தமை குறிப்பிடத்தக்கது.  இந்நிலையில் பத்மநாதனை விசாரணை செய்யும் இந்திய புலனாய்வுக் குழுவினர் விரைவில் இலங்கை வரவுள்ளதாக தெரிவிக்கப்படுகிறது.

அரசியலுக்கும் பணத்திற்கும் ஏமாந்து தாய்நாட்டை காட்டி கொடுக்க வேண்டாம் -ஜனாதிபதி வேண்டுகோள்

mahinda-rajapaksha.jpgஅரசியல் நிகழ்ச்சித் திட்டங்களுக்கும், பணத்திற்கும் ஏமாந்து தாய்நாட்டைக் காட்டிக் கொடுக்க வேண்டாமென ஜனாதிபதி மஹிந்த ராஜபக்ஷ நேற்று முன்தினம் (11ம் திகதி) காலியில் வேண்டுகோள் விடுத்தார்.

பயங்கரவாதத்தை முழுமையாக ஒழித்துக்கட்டும் நோக்கில் மனிதாபிமான நடவடிக்கை முன்னெடுக்கப்பட்ட போதும், பயங்கரவாதம் தோற்கடிக்கப்பட்ட பின்னரும் கூட தாயகத்திற்கு எதிராக பலவகைகளிலும் சூழ்ச்சிகள் இடம்பெறுவதாகவும் ஜனாதிபதி மஹிந்த ராஜபக்ஷ சுட்டிக்காட்டினார்.

தேசிய மட்டத்திலும், சர்வதேச மட்டத்திலும் நாட்டுக்கு எதிராக இடம்பெறுகின்ற சூழ்ச்சிகளுக்கு ஆதரவளிப்பதற்காக இந்த மண்ணில் பிறந்து, வளர்ந்த ஒருசிலர் தகவல்களைத் திரட்டி நாட்டைக் காட்டிக் கொடுக்க முயற்சி செய்கின்றார்கள். பெற்றுள்ள வெற்றியைப் பேணிப் பாதுகாப்பதென்பது பெரும் சிரமமான காரியம் என்பதை ஒவ்வொருவரும் நினைவில் வைத்துக்கொள்ள வேண்டும் எனவும் ஜனாதிபதி கூறினார்.

காலி, யட்டகல ரஜமகா விகாரை வளாகத்தில் நேற்று முன்தினம் நடைபெற்ற வைபவத்தில் பிரதம அதிதியாகக் கலந்துகொண்டு உரையாற்றும் போதே ஜனாதிபதி மேற் கண்டவாறு குறிப்பிட்டார். மெட்டரம்ப ஹேமரத்ன தேரருக்கு சங்க நாயக்கர் பதவி வழங்கும் வைபவமும், ‘புனருதய’ கலை விழா – 2009 நிகழ்வும் யட்டகல ரஜமகா விகாரை வளாகத்தில் நேற்று முன்தினம் நடைபெற்றது.

இவ்வைபவத்தில் ஜனாதிபதி மஹிந்த ராஜபக்ஷ தொட ர்ந்தும் உரையாற்றுகையில் :- மனிதாபிமான நடவடிக்கை மூலம் பயங்கரவாதம் முழு மையாகத் தோற்கடிக்கப்பட்டுள்ளது. இந்த நடவடிக்கை எந்தவொரு இனத்திற்கும், மதத்திற்கும் எதிராக முன் னெடுக்கப்பட்டதல்ல. மாறாக புலிப் பயங்கரவாதத்திற்கு எதிராகவே இந்நடவடிக்கை முன்னெடுக்கப்பட்டது. அதன் பயனாக சகல தரப்பினரதும் ஒத்துழைப்புடன் பயங்கரவா தம் குறுகிய காலத்தில் முழுமையாக ஒழிக்கப்பட்டு நாட்டுக்கு வெற்றி பெற்றுக் கொடுக்கப்பட்டிருக்கின்றது.

தாயகத்திற்கு இந்த வெற்றியைப் பெற்றுக் கொடுப்பதற் காக படைவீரர்கள் 26 ஆயிரம் பேர் தங்களது உயிர்களை அர்ப்பணித்தார்கள்.

இவ்வாறு பாரிய அர்ப்பணிப்புடன் அடையப் பெற்றி ருக்கும் இவ்வெற்றியை அரசியல் லாபம் பெறுவதற்காக குறைத்து மதிப்பிட வேண்டாம். பயங்கரவாதம் ஒழித்துக் கட்டப்பட்டு நாடு ஐக்கியப் படுத்தப்பட்டுள்ளது. நாட்டைத் துண்டாட இடமளிக்க முடியாது.

பயங்கரவாதத்தின் பிடியிலிருந்து விடுவிக்கப் பட்டிருக் கும் நாட்டை இன, மத, கட்சி, மொழி, நிற பேதங் களுக்கு அப்பால் ஒன்றுபட்டு பாதுகாக்க வேண் டும். இது சகலரதும் பொறுப்பாகும்.

புலிப் பயங்கரவாதத்திற்கு எதிராக மனிதாபிமான இராணுவ நடவடிக்கை முன்னெடுக்கப்பட்ட போதும், அதன் பின்னரும் எமது தாயகத்திற்கு எதிராகச் சூழ்ச்சிகள் முன் னெடுக்கப்படுகின்றன. அற்ப அரசியல் லாபம் பெற்றுக் கொள்ளுவதற்காக சிலர் நாட்டைக் காட்டிக்கொடுக்க முய ற்சி செய்கின்றனர். ஆனால், நாம் அரசியல் செய்வதற்கு நாடு இருக்க வேண்டும் என்பதை இவர்கள் முதலில் உணர்ந்துகொள்வது அவசியம். அதனால் ஒவ்வொருவரும் தாய் நாட்டுக்கே முதலிடமளிக்க வேண்டும். நாட்டைக் காட்டிக்கொடுக்கக் கூடாது.

பாராளுமன்றத்தில் சிலர் எழுப்புகின்ற கேள்விகள் என்ன நோக்கத்திற்காக? யாருடைய தேவையை நிறை வேற்றுவதற்காக எழுப்பப்படுகின்றன என்பதை நாமறிவோம். சிலர் பணத்திற்காக எதையும் செய்யத் தயாராக இரு க்கின்றார்கள். அவர்களுக்கு பணமே முக்கியம். இவ் வாறான சிலர் ஏற்கனவே கைது செய்யப்பட்டிருக்கின்றார்கள். பாதாள உலகம் கூட பணத்திற்காகவே இயங்குகின்றது.

இந்நாட்டுக்கு எதிராக தேசிய மட்டத்திலும், சர்வதேச மட்டத்திலும் சூழ்ச்சிகள் இடம்பெறக் காரணம் எமது படையினர் பயங்கரவாதத்தை முழுமையாக ஒழித்து அடைந்திருக்கும் வெற்றியேயாகும். இதனை ஒவ்வொரு வரும் நினைவில் கொள்ள வேண்டும். இப்போது நாட்டு மக்கள் மத்தியில் தாயகம் மீதான பற்று அதிகரித்திருக் கின்றது. தேசியக் கொடிக்கு முன்னொருபோதுமே இல்லாத அளவுக்கு முக்கியத்துவம் கிடைக்கப் பெற்றிருக்கின்றது.

தாயகத்தின் மீது அன்பும், பற்றும் கொண்டவர்களாக குழந்தைகளை உருவாக்க வேண்டும். அவர்களை நற்பண்புகள் நிறைந்தவர்களாக வளர்த்தெடுக்க வேண்டும். இல்லாவிட்டால் நாம் என்ன அபிவிருத்தி செய்தாலும் அவை பிரயோசனமற்றதாகிவிடும் என்றார்.

இவ்வைபவத்தில் அமைச்சர்களான டப்ளியூ. டி. ஜே. செனவிரட்ன, பியசேன கமகே, ஹேமகுமார, வட மத்திய மாகாண முதலமைச்சர் பேர்டி பிரேமலால் திஸாநாயக்க, தென் மாகாண ஆளுநர் குமாரி பாலசூரிய, பிரதியமை ச்சர் லயனல் பிரேமசிறி உட்பட முக்கியஸ்தர்கள் பலரும் கலந்துகொண்டார்கள்.

7334 முதியோர் வெளியேற அனுமதி

வவுனியாவில் உள்ள மனிக்பாம் இடைத்தங்கல் முகாம் உட்பட இடம்பெயர்ந்தவர்கள் தங்கியுள்ள பல்வேறு முகாம்களில் இருந்து இதுவரையில் 7334 முதியவர்கள் வெளியில் செல்வதற்கு அனுமதிக்கப்பட்டிருப்பதாக அரசாங்கம் தெரிவித்துள்ளது.

இந்த முதியவர்கள் உறவினர்களிடம் செல்வதற்கும், உறவினர்கள் அல்லது உற்றார் இல்லாத முதியவர்கள் பலர் பல்வேறு முதியோர் இல்லங்களிடம் ஒப்படைக்கப்பட்டுள்ளதாக அதிகாரிகள் தெரிவித்துள்ளனர். அத்துடன் வவுனியா மன்னார் வீதியில் சனசமூக சேவைகள் அமைச்சினால் நடத்தப்பட்டு வரும் முதியோர் இல்லத்திலும் வைத்துப் பராமரிக்கப்பட்டு வருவதாக அதிகாரிகள் தெரிவித்துள்ளனர்.

இப்போதைக்கு அரசியலில் ஈடுபடும் எண்ணம் இல்லை- ரஜினி

13-rajini.jpgஅரசியலில் ஈடுபடும் எண்ணம் எதுவும் இப்போதைக்கு இல்லை என்று மீண்டும் அறிவித்துள்ளார் நடிகர் ரஜினிகாந்த்.பேரறிஞர் அண்ணா நூற்றாண்டு விழாவையொட்டி திமுக தலைமையகமான அண்ணா அறிவாலயத்தில் கவிஞர் வாலி தலைமையில் கருத்தரங்கம் நடைபெற்றது.

கவிஞர் வைரமுத்து உள்ளிட்ட பலர் கலந்து கொண்டு உரையாற்றிய இந்த கருத்தரங்குக்கு சிறப்பு அழைப்பாளராக ரஜினிகாந்த் அண்ணா அறிவாலயத்துக்கு அழைக்கப்பட்டிருந்தார். பின்னர் அங்குள்ள கலைஞர் கருவூலத்தை சுற்றிப் பார்த்த ரஜினி, “கலைஞர் கருவூலத்தைச் சுற்றிப் பார்க்க ஒரு நாள் போதாது. இதன் வரலாற்றை தெரிந்துக் கொள்ளவும் ஒரு நாள் போதாது’ என்றார்.

காங்கிரஸ் கட்சியில் சேருவதற்கு ராகுல் காந்தி அழைப்பு விடுத்துள்ளாரே என செய்தியாளர்கள் கேட்டதற்கு “அவரது அழைப்புக்கு நன்றி. அரசியலில் ஈடுபடும் எண்ணம் எதுவும் இப்போது இல்லை. அரசியல் வாழ்க்கை பற்றி முடிவெடுத்தால் அது பற்றி யோசிப்பேன்’ என்றார் ரஜினிகாந்த்.

பின்னர் முதல்வர் கருணாநிதிக்குப் பக்கத்தில் அமர்ந்தபடி இரண்டரை மணிநேரம் நிகழ்ச்சியைக் கண்டு ரசித்தார். திமுகவை உரசும் விதத்தில் ராகுலின் சமீபத்திய சென்னை விசிட் அமைந்திருந்தது. ரஜினியை காங்கிரசில் சேர அழைத்திருந்த ராகுல், அடுத்து தமிழகத்தில் காங்கிரஸ் தனித்து ஆட்சியமைக்கும் என்றார்.

ராகுலுக்கு சரியான பதிலடி தரவே ரஜினியை அறிவாலயத்துக்கு அழைத்து, அவர் வாயாலேயே காங்கிரஸ்காரர்களுக்கு பதிலும் சொல்ல வைத்தார் கலைஞர் என்கிறார்கள் திமுக வட்டாரத்தில்

ஒருநாள் கிரிக்கெட் போட்டிகளில் சச்சின் யோசனையை பரிசீலிக்க ஐசிசி முடிவு

ஒருநாள் கிரிக்கெட் போட்டிகளில் தற்போதுள்ள நடைமுறையை முறையை மாற்றி இரு அணிகளுக்கும் தலா ஒரு இன்னிங்ஸ் என்பதற்கு பதிலாக, 25 ஓவர்களாக பிரித்து 2 இன்னிங்ஸ் வழங்க வேண்டும் என்ற சச்சின் டெண்டுல்கரின் யோசனை பரிசீலனை செய்ய உள்ளதாக ஐ.சி.சி. அறிவித்துள்ளது. இருபது ஓவர் கிரிக்கெட் போட்டியின் அதிரடியான பிரபலத்தால் 50 ஓவர் (ஒருநாள்) போட்டிக்கு பாதிப்பு ஏற்படலாம் என்ற கருத்து சர்வதேச கிரிக்கெட் ரசிகர்கள் மத்தியில் நிலவுகிறது.

இதனால் 50 ஓவர் போட்டியை மேலும் விறுவிறுப்பு ஏற்படுத்தும் வகையில் இரண்டு 25 ஓவர்களாக பிரித்து விளையாட வேண்டும் என்று ஒரு சில நாட்களுக்கு முன் டெண்டுல்கர் யோசனை தெரிவித்திருந்தார். இந்த யோசனைக்கு ஒரு சில முன்னாள் கிரிக்கெட் வீரர்கள் ஆதரவும், கபில்தேவ் உள்ளிட்ட ஒரு சிலர் எதிர்ப்பும் கிளம்பியது.

இந்நிலையில் சச்சினின் யோசனை குறித்து சர்வதேச கிரிக்கெட் கூட்டமைப்பு (ஐ.சி.சி) மேலாளர் (கிரிக்கெட்) ரிச்சர்ட்சன் கூறுகையில், சச்சினின் யோசனை நல்லது தான். இந்த யோசனையை தென்ஆப்ரிக்கா பரிசீலனை செய்தால் நன்றாக இருக்கும். பகலிரவு போட்டியை பொறுத்தமட்டில் ஒரு அணிக்கு பகலில் பேட்டிங் செய்யும் வாய்ப்பும், மற்றொரு அணிக்கு இரவில் பேட்டிங் செய்யும் வாய்ப்பும் கிடைக்கிறது.

இதனால் ஒரு அணிக்கு சாதமாக சூழலும், எதிரணிக்கு சாதகமற்ற சூழலும் ஏற்படுகிறது. பூவா-தலையா ஜெயித்து முதலில் ஆடும் அணிக்கு வெற்றி வாய்ப்பு அதிகம் இருப்பதை முன்கூட்டியே கணித்து விட முடிகிறது.

சச்சினின் யோசனை குறித்து ஐ.சி.சி. கூட்டத்தில் விவாதிக்கப்பட்டு இருக்கும் என்று நினைக்கிறேன். 20 ஓவர் போட்டி பிரபலத்தால் 50 ஓவர் போட்டிக்கு ஆபத்து ஏற்பட்டு இருப்பதால் ஆட்டத்தில் விறுவிறுப்பு ஏற்படுத்த வேண்டியது அவசியமானதாகும். அதே நேரத்தில் 25 ஓவர்களாக பிரித்து ஆடுவதால் பேட்ஸ்மேன்கள் அதிக ரன் குவிக்க முடியாத நிலையும் ஏற்படும் என்பதையும் கருத்தில் கொள்ள வேண்டும் என்றார்.