01

01

புலிகளுக்கு ஆயுதம் விநியோகித்த சிங்கப்பூர் அரசியல்வாதி கைது!

011009-singapore-police.jpgபுலிகளுக்கு ஆயுதங்களை விநியோகித்தார் என்ற குற்றச்சாட்டின் பேரில் சிங்கப்பூரின் பிரபல அரசியல்வாதியும் கோடிஸ்வர வர்த்தகருமான பால்ராஜ் நாயுடு என்பவர் சிங்கப்பூர் பொலிஸாரால் கைது செய்யப்பட்டுள்ளதாகத் தெரிவிக்கப்படுகிறது. கடந்தவாரம் தமது வீட்டில் வைத்து கைது செய்யப்பட்ட அவர், நேற்று முன்தினம் செவ்வாய்கிழமை நீதிமன்றில் ஆஜர்படுத்தப்பட்டார்.

அவர் மீது குற்றச்சாட்டுக்கள் எதுவும் உத்தியோகபூர்வமாக தாக்கல் செய்யப்படவில்லை என்றும் அவர் மீதான வழக்கு எதிர்வரும் 5ஆம் திகதிக்கு ஒத்திவைக்கப்பட்டுள்ளதுதாகவும் தெரிவிக்கப்படுகின்றது.

புலிகளுடன் தொடர்பு வைத்திருந்தார் என்ற சந்தேகத்தின்பேரில் பால்ராஜ் நாயுடு அமெரிக்கா, பிரித்தானிய பொலிஸாரால் தேடப்பட்டு வருகின்றார் என்பதும் குறிப்பிடத்தக்கது.

இதற்கிடையே கைது செய்யப்பட்ட பால்ராஜ நாயுடுவை தம்மிடம் கையளிக்குமாறு அமெரிக்கா சிங்கப்பூரை கோரியுள்ளதாகவும் தெரியவருகின்றது

ஜீ.எஸ்.பி.வரிச்சலுகை பெற கெஞ்சப்போவதில்லை – அமைச்சர் ஜீ.எல்.பீரிஸ் தெரிவிப்பு

240909gl.jpgநாட்டின் இறைமைக்கும் ஒருமைப்பாட்டுக்கும் கௌரவத்திற்கும் பாதிப்பு ஏற்படாத வகையிலேயே ஜீ.எஸ்.பி.வரிச்சலுகையை நீடிப்பதற்கான முயற்சிகள் மேற்கொள்ளப்படும் என ஏற்றுமதி அபிவிருத்தி மற்றும் சர்வதேச வர்த்தக அமைச்சர் பேராசிரியர் ஜீ.எல்.பீரிஸ் தெரிவித்தார்.

அரசாங்க தகவல் திணைக்களத்தில் இன்று காலை நடைபெற்ற அமைச்சரவை முடிவுகளை அறிவிக்கும் வாராந்த ஊடகவியலாளர் சந்திப்பில் பிரத்தியேகமாகக் கலந்துகொண்டு உரை நிகழ்த்திய  போதே அமைச்சர் இவ்வாறு கூறினார்;. அவர் தொடர்ந்து கூறுகையில்.

ஜீ.எஸ்.பி. வரிச்சலுகை இல்லாமல் ஒன்றுமே செய்ய முடியாது. எனவே அதற்காக வேண்டி எது வேண்டுமானாலும் செய்யலாம் என்ற நிலைப்பாட்டில் அரசாங்கம் ஒருபோதும் இல்லை என்றும் இதற்காக கெஞ்சப்போவதில்லை என்றும் திட்டவட்டமாகக் கூறிக்கொள்கறேன். ஜீ.எஸ்.பி. வரிச்சலுகைக்கான காலத்தை மேலும் நீடிக்கச் செய்வதற்கான நடவடிக்கைகளை மேற்கொள்வதற்காக ஜனாதிபதி மஹிந்த ராஜபக்ஷவினால் அமைச்சரவை அமைச்சர்கள் நான்கு பேரைக் கொண்ட குழு ஒன்று நியமிக்கப்பட்டுள்ளது. இநதக்குழு ஐரோப்பிய ஒன்றியத்துடன் தொடாந்து பேச்சுவார்த்தைகளை நடத்தி வருகின்றது.

இலங்கை தொடர்பான வெளிநாடுகளின் விமர்சனங்களை அரசாங்கம் ஒரு போதும் ஏற்றுக்கொள்வதில்லை. விமர்சனங்களுக்கு ஏற்ற விளக்கங்களை ஐரோப்பிய ஒன்றியத்துக்கு நாம் வழங்கி வருகின்றோம்.

ஊதாரணத்துக்கு ஒரு விடயத்தைக் கூறுகின்றேன். நாட்டில் நீதி நிலைநாட்டப்படவில்லை என்றும் சட்டத்தில் சுயாதீனம் இல்லை என்றும் தெரிவிக்கப்பட்ட விமர்சனத்துக்கு தெளிவான விளக்கம் அளிக்கப்பட்டது. பயங்கரவாத அச்சுறுத்தல் காரணமாக வீதி சோதனைச் சாவடிகள் போடப்பட்டன. இவ்விடயத்தில் தலையிட்ட உயர் நீதிமன்றம் அவற்றை நீக்குமாறு உத்தரவிட்டது. அதன்படி அரசாங்கம் உடனடியாக அவற்றை நீக்கிவிட்டன. அதன் மூலம் சட்டத்தை அரசாங்கம் கடைபிடிப்பதும் நீதிமன்றங்கள் சுயாதீனமாக இயங்குவதும் சுட்டிக்காட்டப்பட்டது. இவ்வாறு பல விடயங்களுக்கு தெளிவான விளக்கங்கள் அளிக்கப்பட்டுள்ளன. மேலும் மூன்று வருட காலத்துக்கு இந்தச் சலுகையைக் கேட்டுள்ளோம் அது தொடர்பான விளக்கத்துக்கான தகவல்களை பிரஸல்ஸ்  நகரிலுள்ள இலங்கைக்கான தூதுவர் ஊடாக வழங்கி வருகின்றோம்.

வெளிநாடுகள் எதிர்பாராத வகையில் ஜனாதிபதி பயங்கரவாதத்தை முடிவுக்குக் கொண்டுவந்து நாட்டில் அமைதியை நிலவச்செய்துள்ளதுடன் பாரிய அபிவிருத்திக்கான வாய்ப்புக்கள் அதிகரித்துள்ளதையும் சுட்டிக்காட்டி உள்ளோம். இதனை ஊக்குவிக்கும் வகையில் வரிச்சலுகையை வழங்குமாறு ஐரோப்பிய ஒன்றியத்தைக் கேட்டுள்ளோம்.

இந்த வரிச்சலுகையால் ஆடை தயாரிக்கும் தொழிற்சாலைகளுக்கு நன்மை கிட்டுகிறது. கிராமப் புறங்களிலேயே இத்தொழிற்சாலைகள் உள்ளன. கிராமப் பெண்களே இதனால் கூடுதல் பயனடைந்து வருகின்றார்கள். அவர்களின் நன்மை கருதி ஜீ.எஸ்.பி. வரிச் சலுகை வழங்கப்பட வேண்டும் என அமைச்சர் மேலும் தெரிவித்தார்.

இந்தோனேஷிய பூகம்பத்தில் 1000க்கும் மேலானோர் பலி

01-indonesia.jpgஇந்தோ னேஷியாவில் நேற்று ஏற்பட்ட பயங்கர பூகம்பத்துக்கு சுமார் 1000க்கும் மேற்பட்ட மக்கள் பலியாகி இருப்பார்கள் என அந்நாட்டு சுகாதாரத் துறை அமைச்சகம் தெரிவித்துள்ளது.  இந்தோனேஷிய நேரப்படி நேற்று மாலை 5.16 மணியளவில் இந்த பயங்கர நிலநடுக்கம் உணரப்பட்டது. ரிக்டர் அளவுகோளில் இது 7.6 புள்ளிகளாகப் பதிவாகியுள்ளது.

இதன் தாக்கம் சிங்கப்பூரிலும் மலேசிய தலைநகர் கோலாலம்பூரிலும் உணரப்பட்டது. இதில் சுமத்ரா தீவின் பாடங் பகுதியில் பல கட்டிடங்கள் இடிந்து நொறுங்கின. இடிபாடுகளுக்குள் சிக்கி பலர் உயிரிழந்தனர். சுமார் 100 முதல் 200 பேர் வரை பலியாகி இருக்கலாம் என முதலில் கூறப்பட்டது. ஆனால், மேலும் பல கட்டிடங்களில் மக்கள் ஆயிரக்க்கணக்கில் சிக்கியிருப்பது தற்போது தெரிய வந்துள்ளது. அவர்களும் பலியாகி இருக்கலாம் என அஞ்சப்படுகிறது.

இந்நிலையில் அந்நாட்டு சுகாதார துறையின் கீழ் வரும் இயற்கை சீரழிவு மேலாண்மை துறை தலைவர் ரஸ்தம் பகாயா, இறந்தோரின் எண்ணிக்கை ஆயிரத்துக்கு மேல் இருக்கும் எனத் தெரிவித்துள்ளார்.

மலையகத்தில் கடும் மழை : கொட்டகலையில் மினி சூறாவளி

0000rain.jpgமலைய கத்தில் தொடர்ந்து பெய்ந்து வருகின்ற அடைமழையினால் மக்களின் இயல்பு வாழ்க்கை பெரிதும் பாதிப்படைந்துள்ளது.

மலையகத்தில் நுவரெலியா, கண்டி உட்பட பல மாவட்டங்களில் கடந்த ஒரு சில நாட்களாக தொடர்ச்சியாக அடைமழை பெய்து வருகின்றது.  காற்றுடன் கூடிய அடைமழையினால் மரங்கள், மின்கம்பங்கள் முறிந்து விழுந்துள்ளன. அடிக்கடி மின்சாரத் தடையும் ஏற்படுகின்றது.

கொட்டகலை ஸ்டொனிக்கிளிப் ஹரிங்டன் தோட்டப்பகுதியில் இன்று காலை 10.30 மணியளவில் ஏற்பட்ட மினி சூறாவளியினால் மரங்கள் முறிந்து விழுந்ததில் சிறுவர் பாராமரிப்பு நிலையம் ஒன்று சேதத்துக்குள்ளாகியது. தெய்வாதீனமாக சிறுவர்களுக்கு எவ்வித பாதிப்பும் ஏற்படவில்லை.

அமைச்சர் ஜோன் செனவிரத்தன தலைமையிலான குழு தன்சானியா பயணம்!

பொதுநலவாய நாடுகளின் 55 ஆவது பாராளமன்ற மாநாட்டில் பங்கேற்பதற்காக மின்சக்தி எரிசக்தி அமைச்சர் டபிள்யூ.டி.ஜே. செனவிரத்தன தலைமையிலான அமைச்சர்கள் குழு தன்சானியாவுக்கு பயணமானது.

‘எதிர்கால உலக சவால்கள்’ என்ற தொனிப் பொருளில்  நடைபெறவுள்ள   இந்த மாநாட்டில் இலங்கை சார்பாக பிரதி சபாநாயகர் பிரியங்க ஜெயரத்ன,  வீடமைப்பு அமைச்சர் பேரியல் அஷ்ரப்,  பாராளுமன்ற உறுப்பினர்களான நாமல் கருணாரத்ன, சமன்சிறி ஹேரத், எட்வட் குணசேகர அடங்கலான குழுவினர் பங்கேற்கவுள்ளனர்.
இந்த மாநாட்டில் அமைச்சர் டபிள்யூ.டி.ஜே. செனவிரத்தன விசேட உரையாற்றவுள்ளார். 

கட்சிகளின் செயலர்களுடன் தேர்தல்கள் ஆணையர் சந்திப்பு

srilanka-voting.jpgதென் மாகாண சபைத் தேர்தல் தொடர்பாக தேர்தல் ஆணையாளர் தயானந்த திசாநாயக்க நாளை (2) தேர்தலில் போட்டியிடும் கட்சிக ளின் செயலாளர்களை சந்தித்து பேச்சு நடத்த உள்ளதாக மேலதிக தேர்தல் ஆணையாளர் டபிள்யு. பி. சுமணசிறி தெரிவித்தார்.

தென் மாகாண சபைத் தேர்தல் எதிர்வரும் 10 ஆம் திகதி நடைபெற உள்ளதோடு தேர்தல் ஏற்பாடுகள், தேர்தல் வன்முறைகளை தடுத்தல், பாதுகாப்பு ஏற்பாடுகள், அடையாள அட்டை தொடர்பில் முகம் கொடுக்கும் பிரச்சினை என்பன குறித்து இங்கு ஆராயப்பட உள்ளதாக அறிவிக்கப்படுகிறது.

இலங்கை பட்டினி ஒழிப்புத் திட்டம் மறுசீரமைப்பு

sirisena.jpgஇலங்கை பட்டினி ஒழிப்புத் திட்டத்தை மறுசீரமைக்கும் வகையில் அதனை தேசிய உணவு அபிவிருத்திச் சபை என மாற்றியமைக்க அமைச்சரவை அனுமதி வழங்கியுள்ளது. விவசாய அபிவிருத்தி மற்றும் கமநல சேவைகள் அமைச்சர் மைத்திரிபால சிறிசேன இதற்கான அமைச்சரவைப் பத்திரத்தை சமர்ப்பித்திருந்தார்.

பிரித்தானியா செல்லும் மாணவர்களுக்கான விசா வழங்கும் நடைமுறையில் மாற்றம்

பிரித்தானியாவுக்கு கல்வி கற்கச் செல்லும் மாணவர்களுக்கு விசா வழங்கும் நடை முறையில் இன்று முதல் மாற்றம் கொண்டு வரப்படுகின்றது என்று கொழும்பிலுள்ள பிரித்தானிய தூதரகம் அறிவித்துள்ளது.  குறிப்பாக பிரிட்டனுக்குக் கல்வி கற்கச் செல்லும் மாணவர்கள் வங்கிக் கணக்கில் காட்டவேண்டிய பணத்தொகை சம்பந்தமான விடயங்களில் இம் மாற்றங்கள் ஏற்படுத்தப்பட்டுள்ளன என்று தெரிவிக்கப்பட்டிருக்கிறது.

அதாவது இம்மாணவர்கள் விசாவுக்கு விண்ணப்பிப்பதற்கு குறைந்தது 28 நாள்களுக்கு முன்பாக தமது வங்கிக் கணக்கில் அல்லது பெற்றோர் / பாதுகாவலர் வங்கிக் கணக்கில் குறித்த பணத் தொகையைக் கட்டாயம் வைப்பிலிட்டிருக்க வேண்டும் என இம்மாற்றத்தின் மூலம் தெரிவிக்கப்பட்டுள்ளது.

இந்த நிபந்தனைகளுக்கு அமைவாக வங்கியில் பணம் வைப்புச் செய்திருக்கும் விண்ணப்பதாரி மாணவர்கள் வங்கி அறிக்கைகள் மூலமாகவோ அல்லது வேறு ஏற்றுக் கொள்ளக்கூடிய ஆவணங்கள் மூலமாகவோ அதனை நிரூபிக்க வேண்டும் என்று குறிப்பிடப்பட்டுள்ளது.

இராணுவக் கண்காட்சிக்கான ஏற்பாடுகள் மும்முரம்

011009army_exhibition1.jpgஇலங்கை இராணுவத்தின் பவள விழாவை முன்னிட்டு கொழும்பு,  பண்டாரநாயக்க ஞாபகார்த்த சர்வதேச மாநாட்டு மண்டப வளாகத்தில் நடைபெறவுள்ள இராணுவக் கண்காட்சிக்கான ஏற்பாடுகள் மும்முரமாக இடம்பெற்று வருகின்றன. கண்காட்சி ஏற்பாடுகளை பாதுகாப்புப் படைகளின் பிரதம அதிகாரி சரத் பொன்சேகா நேற்று நேரில் சென்று பார்வையிட்டார்.

இக்கண்காட்சியில் புலிகளுடனான யுத்தத்தின் முக்கிய காட்சிகள் மற்றும் புலிகளுக்கெதிராக வெற்றிகரமாக மேற்கொள்ளப்பட்ட தாக்குதல்கள் போன்றவற்றின் வீடியோக் காட்சிகள் காண்பிக்கப்படவுள்ளன.

இராணுவத்தின் வளர்ச்சி,  முன்னேற்றம் பற்றிய தகவல்கள், புலிகளிடமிருந்து கைப்பற்றப்பட்ட ஆயுதங்கள் உட்பட போர்த் தளபாடங்கள் மற்றும் இராணுவத்திடமுள்ள யுத்த உபகரணங்கள் போன்றனவும் இக்கண்காட்சியில் பார்வைக்கு வைக்கப்படவுள்ளன.

இக்கண்காட்சி எதிர்வரும் ஒக்டோபர் மாதம் 03ஆம் திகதி ஆரம்பமாகி 07ஆம் திகதி முடிவடையவுள்ளது.  இக்கண்காட்சிக்கு 50 ரூபா கட்டணமாக அறவிடப்படவுள்ளதோடு கண்காட்சி நடைபெறும் தினங்களில் காலை 10.00 மணி முதல் இரவு 10.00 மணி வரை பொதுமக்கள் இதனைப் பார்வையிட முடியும் என்றும் அறிவிக்கப்பட்டுள்ளது.

காமினி பொன்சேகாவின் உருவச்சிலை திரை நீக்கம்

0110009gamini.jpgகாலஞ் சென்று பிரபல சிங்கள திரைப்பட நடிகர் காமினி பொன்சோகாவின் ஐந்தாவது நினைவு தினத்தை முன்னிட்டு அவரது உருவச்சிலையொன்றை ஜனாதிபதி மஹிந்த ராஜபக்ஷ இன்று கொழும்பு மருதானை எல்பின்ஸ்டன் திரையரங்கின் முன்பாக திரை நீக்கம் செய்து வைத்தார் அமைச்சர்களான மேவின் சில்வா,  ஜீவன் குமாரதுங்க,  மற்றும் மேல் மாகாண ஆளுநர் எஸ். அலவி மௌலானா உட்பட பல அரசியல் வாதிகள் இதில் கலந்து கொண்டனர்.

ரவீந்திர ரன்தெனிய,  மாலனி பொன்சேகா,  உட்பட பிரபல சினிமாக் கலைஞர்கள் இந்த நிகழ்வில் பங்குபற்றினர்

காமினி பொன்சேகா மன்றம் இதற்கான ஏற்பாடுகளை மேற்கொண்டுள்ளது. தொழில் அமைச்சர் மேர்வின் சில்வா,  கொழும்பு மாநகர சபை உறுப்பினர் சமன் அபே குணவர்தன, மற்றும் சிங்கள சினிமா கலைஞர்கள் இதற்கு ஒத்துழைப்பு வழங்கியுள்ளனர்.