06

06

தமிழகத்தில் தஞ்சமடைந்துள்ள இலங்கையர்களுக்கு இந்திய குடியுரிமை அவசியமில்லை – அமைச்சர் விநாயகமூர்த்தி

140909karuna.jpgதமிழகத்தில் தஞ்சமடைந்துள்ள இலங்கை மக்களுக்கு இந்திய குடியுரிமை வழங்கப்பட வேண்டிய அவசியமில்லை என தேச நிர்மாண அமைச்சர் விநாயகமூர்த்தி முரளீதரன் தெரிவித்துள்ளார்.
 
தமிழ்நாடு அகதிமுகாம்களில் சுமார் 200,000 இலங்கைத் தமிழ்அகதிகள் தஞ்சமடைந்துள்ளதாகத் தெரிவிக்கப்படுகிறது. இலங்கையில் தற்போது நிலைமைகள் சுமூகமான சுழ்நிலை காணப்படுவதாகவும்,  இதனால் இந்திய மத்திய அரசு இலங்கை அகதிகளுக்கு குடியுரிமை வழங்க வேண்டிய அவசியமில்லை என எனவும் அவர் தெரிவித்துள்ளார்.

இந்தியாவில் தஞ்சமடைந்துள்ள மக்களை இலங்கைக்கு மீள அழைத்துக்கொள்ள இதுவே சிறந்த தருணம் எனவும் அவர் குறிப்பிட்டுள்ளார்.

தமிழ்நாட்டில் தங்கி இருக்கக்கூடிய இலங்கை தமிழ் அகதிகளுக்கு இந்தியக் குடியுரிமை வழங்கப்பட வேண்டும் என்று தமிழ்நாட்டின் ஆளும் கட்சியான திராவிட முன்னேற்றக் கழகம் அண்மையில் தீர்மானம் நிறைவேற்றியது. அந்தத் தீர்மானம் மத்திய அரசுக்கு அனுப்பி வைக்கப்பட்டதுடன், அது தொடர்பாக தி.மு.க. நாடாளுமன்ற உறுப்பினர் டி.ஆர்.பாலு பிரதமர் மன்மோகன் சிங் மற்றும் காங்கிரஸ் தலைவி சோனியா காந்தி ஆகியோரை நேரில் சந்தித்து எடுத்துக் கூறி இருந்தார் என்பது குறிப்பிடத்தக்கது.

2009-ம் ஆண்டுக்கான மருத்துவத்துக்கான நோபல் பரிசு

மருத்துவத் துறையில் சாதனை புரிந்துள்ள மூன்று அமெரிக்க விஞ்ஞாணிகள் நோபல் பரிசு வழங்கி கௌரவிக்கப்பட உள்ளனர். அமெரிக்காவைச் சேர்ந்த எலிசபெத் பிளாக்பர்ன், கரோல் கிரெய்டர்,  ஜேக் சோஸ்டாக் ஆகியோர் 2009-ம் ஆண்டுக்கான மருத்துவத்துக்கான நோபல் பரிசுக்கு தெரிவாகியுள்ளதாக அறிவிக்கப்பட்டுள்ளது.

எலிசபெத் பிளாக்பர்ன்

அவுஸ்திரேலியாவில் 1948-ல் பிறந்தவர். தற்போது அமெரிக்காவில் வசித்து வருகிறார். பிரிட்டனின் கேம்பிரிட்ஜ் பல்கலைக்கழகத்தில் 1975-ல் டாக்டர் பட்டம் பெற்றவர்.

கரோல் கிரெய்டர்

அமெரிக்கரான கரோல் கிரெய்டர் 1961-ல் பிறந்தார். 1987-ல் கலிஃபோர்னியா பல்கலைக்கழகத்தில் டாக்டர் பட்டம் பெற்றார்.

ஜேக் சோஸ்டாக்

லண்டனில் 1952-ல் பிறந்தார். அமெரிக்கக் குடியுரிமை பெற்றுள்ள இவர் நியூயார்க்கின் கார்னெல் பல்கலைக்கழகத்தில் 1977-ல் டாக்டர் பட்டம் பெற்றார். 1979 முதல் ஹார்வர்டு மருத்துவப் பல்கலைக்கழகத்தில் பணியாற்றி வருகிறார்.

வயோதிகம் தொடர்பான முக்கியக் கண்டுபிடிப்புக்காக இவர்களுக்கு நோபல் பரிசு வழங்கப்படுகிறது. இவர்களது கண்டுபிடிப்பு புற்றுநோய் தொடர்பான ஆராய்ச்சிக்கு பெரிதும் உதவும். வயோதிகத்துக்கு காரணமான செல் மற்றும் செல் பிரிதலின் போது குரோமோசோம்கள் எவ்வாறு பிரதி எடுக்கின்றன என்பதை இவர்கள் கண்டறிந்துள்ளனர்.

எதிர்வரும் டிசம்பர் 10-ம் தேதி ஸ்டாக்ஹோம் மற்றும் ஒஸ்லோவில் நடைபெறும் விழாவில் இவர்களுக்கு நோபல் பரிசு  வழங்கப்படவுள்ளது. நோபல் பரிசில் தங்கப் பதக்கம்,  பட்டயம் மற்றும் ரொக்கப் பரிசு  ஆகியவை அடங்கும். பரிசு தொகை மூவருக்கும் பகிர்ந்தளிக்கப்படும். டைனமைட்டை கண்டுபிடித்த அல்பிரட் நோபலின் நினைவாக 1901-ம் ஆண்டில் இருந்து பல்வேறு துறைகளில் சாதனை புரிபவர்களுக்கு நோபல் பரிசு வழங்கப்பட்டு வருகிறது.

பருவப்பெயர்ச்சி மழையின் பாதிப்பை நிவாரண கிராமங்களில் தவிர்க்க திட்டம் – மஹிந்த சமரசிங்க

mahinda-samarasinha.jpgவவுனியா நிவாரணக் கிராமங்களில் உள்ளவர்கள் பருவப் பெயர்ச்சி மழையால் பாதிக்கப்படாவண்ணம் முன்னெடுக்கப்பட்டு வரும் சுகாதார மற்றும் உட்கட்டமைப்பு வேலைத் திட்டங்கள் 80 சதவீதம் பூர்த்தியடைந்திருப்பதாக இடர் முகாமைத்துவ மனித உரிமைகள் அமைச்சர் மஹிந்த சமரசிங்க தெரிவித்தார்.

நிவாரணக் கிராமங்கள் அமைக்கப்பட்டிருக்கும் வவுனியாவில் அனைத்து வலயங்களிலும் பாதுகாப்பான முறையில் வடிகாலமைக்கும் வேலைத் திட்டங்கள் துரிதகதியில் முன்னெடுக்கப்பட்டு வருவதாகவும் எதிர்வரும் 10 நாட்களுக்குள் இத்திட்டத்தின் பணிகள் முழுமையாக பூரணப்படுத்தப்படுமெனவும் அமைச்சர் மேலும் கூறினார்.

வன்னியில் இடம்பெற்ற மனிதாபிமான நடவடிக்கைகளின்போது இடம்பெயர்ந்து வவுனியா நிவாரணக் கிராமங்களில் தங்க வைக்கப்பட்டிருந்தோரில், மீளக்குடியமர்த்தப்பட்டோர் மற்றும் உறவினர்களுடன் அனுப்பி வைக்கப்பட்டோர் தவிர்ந்த தற்போது தற்காலிகமாக தங்க வைக்கப்பட்டிருக்கும் 2 இலட்சத்து 88 ஆயிரத்து 679 பேரினதும் சுகாதாரத்தைக் கருத்திற்கொண்டு அரசாங்கம் இச் செயற்திட்டத்தில் கூடுதல் கவனம் செலுத்தி வருவதாகவும் அமைச்சர் சமரசிங்க சுட்டிக்காட்டினார்.

ஜனாதிபதி செயலகத்தில் நேற்று மாலை நடைபெற்ற செய்தியாளர் மாநாட்டிலேயே அமைச்சர் மேற்கண்டவாறு தெரிவித்தார். இம்மாதம் இறுதி முதல் எதிர்வரும் டிசம்பர் வரையான காலப் பகுதியில் வவுனியாவில் பருவப் பெயர்ச்சி மழை எதிர்பார்க்கப்படுவது வழமை.

இம்மழைக்கு முகம் கொடுக்க கூடிய வகையில் வேலைத் திட்டங்கள் துரித கதியில் முன்னெடுக்கப்பட்டு வருகின்றன. இலங்கை அரசாங்கத்தின் இந்த வேலைத் திட்டங்கள் ஐ.நா. அமைப்புக்களின் அனுசரணையுடன் நடைபெற்று வருகின்றன.

வட மாகாண அபிவிருத்திக்கான ஜனாதிபதி செயலணியின் தலைவரும் ஜனாதிபதியின் சிரேஷ்ட ஆலோசகருமான பசில் ராஜபக்ஷ தலைமையில் மீள்குடியேற்றம் அனர்த்த நிவாரண சேவைகள் அமைச்சர் இதற்கான வேலைத் திட்டங்களை முன்னெடுத்து வருகின்றார்.

மழைகாலத்தின்போது நிவாரணக் கிராமங்களில் உள்ளவர்கள் பாரிய அசெளகரியங்களுக்கு முகம் கொடுத்து வருவதாக ஊடகங்களில் செய்திகள் வெளியாகி வருகின்றன. அவ்வாறானதொரு சூழ்நிலையை தவிர்க்கும் முகமாகவே அரசாங்கம் செயற்பட்டு வருகின்றது.

மழையினால் ஏற்படக் கூடிய அசாதாரண சூழ்நிலைகளை தவிர்க்கும் முகமாக அநேகமான வேலைத் திட்டங்கள் செயல்படுத்தப்பட்டுள்ளன.

வவுனியா வலையம் 01 இல் 95 சதவீதமான வேலைத் திட்டம் பூர்த்தியாகியிருப்பதாகவும் வலையம் 02 இல் 100 சதவீதமும் வலையம் 03 இல் 80 சதவீதமும் வலையம் 04 இல் 80 சதவீதமும் வலையம் 05 இல் 90 சதவீதமும் வலையம் 06 ‘எ’ யில் 40 சதவீதமும் வலையம் 06 ‘பி’ யில் 50 சதவீதமும், வலையம் 08 இல் சுமார் 70 சதவீதமான வேலையும் பூர்த்தியடைந்திருப்பதாக அமைச்சர் குறிப்பிட்டார். வலையம் ‘0’ மற்றும் வலையில் 07 இல் வேலைகளை ஆரம்பிப்பதற்கான ஏற்பாடுகள் மேற்கொள்ளப்பட்டு வருவதாகவும் அவர் மேலும் குறிப்பிட்டார்.

எமது படைவீரர்கள் குறித்து தெரிவித்த கூற்றை வாபஸ் பெற்றுக் கொண்டுள்ளது – உண்மையை கூறியமைக்கு ஜனாதிபதி நன்றி தெரிவிப்பு

அமெரிக்க ராஜாங்க செயலாளர் திணைக்களம் எமது படை வீரர்களுக்கு எதிராக தெரிவித்த கூற்றுக்களில் உண்மையில்லையென்பதை அத்திணைக்களமே ஏற்றுக்கொண்டுள்ளது. தவறை சரி செய்து உண்மை நிலையை வெளிப்படுத்தியுள்ளமைக்கு தாம் நன்றி தெரிவிப்பதாக ஜனாதிபதி மஹிந்த ராஜபக்ஷ தெரிவித்தார்.

அமெரிக்க ராஜாங்க செயலாளர் திணைக்களம் நேற்று வெளியிட்டுள்ள குறிப்பில் தமது தவறை நிவர்த்தி செய்துள்ளதுடன் எமது படை வீரர்கள் பாலியல் துஷ்பிரயோகத்தில் ஈடுபட்டுள்ளமைக்கான பின்னணி அல்லது நிலைமைகள் தொடர்பாகத் தம்மிடம் எவ்வித தகவல்களும் இல்லையென்பதையும் தெளிவாகக் குறிப்பிட்டுள்ளதாக ஜனாதிபதி தெரிவித்தார். அக்குற்றச்சாட்டை வாபஸ் பெறுவதாகவும் மேற்படி திணைக்களம் குறிப்பிட்டுள்ளதாகத் தெரிவித்த ஜனாதிபதி, தம்மால் இடம்பெற்றுள்ள தவறை ஏற்றுக்கொண்டமைக்கு நன்றி தெரிவிப்பதாகவும் குறிப்பிட்டார்.

ஐசிசி விருதுகள் 2009

051009icc.jpgகிரிக்கெட் ஆஸ்கார் எனப்படும் ஐசிசி விருதுகள் தென் ஆப்ரிக்காவின் ஜோகன்னஸ்பர்க்கில் நடந்த கோலாகல விழாவில் வழங்கப்பட்டது.

விருதுக்கான வீரர்கள் பட்டியலை கிளைவ் லாய்ட் தலைமையிலான 5 பேர் குழு தேர்வு செய்தது. அதில் அனில் கும்ளே, பாப் டெய்லர், முடாசர் நாஸர், ஸ்டீபன் பிளமிங் ஆகியோர் இடம்பெற்றிருந்தனர். 2008 ஆகஸ்ட் 13ம் திகதி முதல் இந்த ஆண்டு ஆகஸ்ட் 24ம் திகதி வரை நடந்த போட்டிகள் கணக்கில் எடுத்து கொள்ளப்பட்டது. இதில் இந்த ஆண்டுக்கான சிறந்த கிரிக்கெட் டோணி தொடர்ந்து இரண்டாவது முறையாக பெற்றுக்கொண்டார். அதேபோல் இந்த ஆண்டுக்கான ஐசிசி டெஸ்ட் மற்றும் ஒரு நாள் அணிகளின் கேப்டனாக டோனி தேர்வு செய்யப்பட்டுள்ளார். மேலும் இரண்டு பட்டியல்களிலும் தலா மூன்று இந்தியர்கள் , கம்பீரும், ஒரு நாள் அணியில் ஷேவாக், யுவராஜூம் இடம்பிடித்துள்ளனர்.

சிறந்த டுவென்டி-20 விருது இலங்கையின் திலகரத்னே தில்ஷனுக்கு வழங்கப்பட்டது. சிறந்த அம்பயராக பாகிஸ்தானின் அலீம்தார் அறிவிக்கப்பட்டார். சிறந்த வீராங்கனைக்கான விருதை இங்கிலாந்தின் கிளைர் டெய்லர் பெற்று கொண்டார்.

051009icc.jpg

ஒரு சமூகத்தை உருவாக்குபவர்கள் ஆசிரியர்களே! – ‘அனைத்துலக ஆசிரியர் தினம்” – புன்னியாமீன்

061009happy-teachers-day.jpg”குறிக்கோள் இல்லாத வாழ்க்கை முகவரியில்லாத கடிதத்திற்குச் சமம்” என்பர்.  இது போல் தான் மாணவ சமூகமும் குறிக்கோள்,  இலட்சியம் இல்லாமல் இருந்தால் எதிர்காலம் ஓர் இருண்ட பாதை என்பதை ஆரம்ப காலத்தில் இருந்தே மாணவ மனதில் நன்கு பதிய வைத்து மாணவர்களை சீரிய வழியில் வழிநடத்துவதில் ஆசிரியர்களின் பங்கு விசாலமானவை. தனது வழிகாட்டலின் மூலம் கிடைக்கும் வெற்றியை பார்க்கும் ஆசிரியர்களின் மனதில் தோன்றும் மகிழ்ச்சியை அளவிட முடியாது.  தன்னிடம் ஒப்படைக்கப்படும் மாணவனை நல்ல மாணவனாக ஆக்குவதோடு, நல்ல மனிதனாக மாற்றும் பொறுப்பும் ஆசிரியர்களுக்கு இருக்கிறது. அதே போல் ஆசிரியர்கள் என்பவர்கள் மாணவ சமூகத்தை உருவாக்குபவர்கள் அல்ல, மாறாக உயிரூட்டுபவர்கள் என்றாலும் மிகையாகாது.

tea-day.jpgஇன்று அக்டோபர் மாதம் 6ஆந் திகதி – அனைத்துலக ஆசிரியர் தினத்தை உலகில் பெரும்பாலான நாடுகள் கொண்டாடுகின்றன. ஆசிரியர் தினம் சில நாடுகளில் விடுமுறை நாளாகவும், சில நாடுகளில் பணி நாளாகவும் உள்ளது.

1994ஆம் ஆண்டு முதல் இன்றைய தினத்தை ‘உலக ஆசிரியர்கள் தினமா’க கொண்டாடி வருகின்றனர். ஆசிரியர்களின் மேன்மையை வருங்கால சந்ததியினரும் உணரும் விதமாகவும்,  அவர்களுக்கு நன்றி தெரிவிக்கும் விதமாகவும் இது நடைமுறைப்படுத்தப்பட்டு வருகின்றது. அதேநேரம், சில மேற்கத்தைய நாடுகள் அக்டோபர் 5ஆந் திகதியை ஆசிரியர் நாளாக கொண்டாடுகின்றன. இந்தியா செப்டம்பர் 5ஆந் திகதியை இந்தியாவின் முன்னாள் குடியரசுத் தலைவரும் முனைவருமான சர்வபள்ளி இராதாகிருஷ்ணனின் பிறந்த நாளான செப்டம்பர் 5-ம் திகதியை ஆசிரியர் நாளாகக் கொண்டாடுகின்றது. பொதுவாக ஆசிரியர் தினம் வெவ்வேறு நாடுகளில் வெவ்வேறு நாட்களில் கொண்டாடப்பட்டாலும்கூட,  இத்தினத்தின் நோக்கம், குறிக்கோள் பொதுவானதே. இலங்கையில் அக்டோபர் 6ஆந் திகதி ஆசிரியர் தினம் கொண்டாடப்படுகின்றது.

ஆசிரியர் தினம் என்பது பயிற்றுவிக்கும் ஆசான்களுக்கு நன்றி செலுத்தும் வகையில் கொண்டாடப்படும் ஒரு நாளாகும்.  மாணவனுக்கு ஞானத்தின் சுடரை ஏற்றுகிற பணி ஆசிரியருடையது. அவர்களை நன்றியுடன் நினைவு கூரவும், அவர்களின் பணி தொடர வாழ்த்துவதுமே ஆசிரியர் தினம் கொண்டாட்டங்களின் பிரதான எதிர்பார்க்கையாகும்.

மனிதனை மனிதனாக, உருவாக்கும் சிற்பிகள் என்று ஆசிரியர்கள் மற்றும் ஆசிரியைகளைச் சொல்வதுண்டு. மனிதனை முதன்மைப் படுத்த உரமாக இருப்பவர்கள் ஆசிரியர்கள் என்றால் அது மிகையாகாது. தன்னிடம் ஒப்படைக்கப்படும் மாணவர்களை வாழ்க்கை என்றால் என்ன?  இதில் மாணவ, மாணவி சமூகத்தின் பங்கு எப்படி இருக்க வேண்டும் என்று ஒரு தெளிவை ஆசிரியர்கள் தான் கற்றுக் கொடுக்கின்றனர்.

ஆசிரியர்களின் பணியைக் கொண்டாட ஒரு தினத்தை மட்டும் ஒதுக்குவது முறையல்ல என்றும் சிலர் வாதிடுவர். ஏனெனில், இவர்களின் பணி நாள்தோறும் பல்வேறுபட்ட கோணங்களில் பல்வேறுபட்ட பரிணாமங்களை தோற்றுவித்துக் கொண்டே இருக்கின்றன. எனவே, இந்நிமிடம் வரை உலகில் நிகழும், நிகழ்த்தப்படும் மாற்றங்கள், வியப்புக்கள் அத்தனையும் நிகழ்த்தப்படுவது எங்கோ ஒரு மூலையில் தன்னலம் கருதாமல் ஓர் ஆசானால் உருவாக்கிய அந்த மாணவச் சமூகத்தினால் தான் என்பதை வைத்தே அதனை ஒரு தினத்துக்கு மாத்திரம் மட்டுப்படுத்தக்கூடாது என்பது இவர்களின் வாதமாகும். உலகில் வாழ்ந்த, வாழும், வாழப்போகும் ஒவ்வொரு ஜீவனுக்கும் பின்னால் ஓர் ஆசான் இருந்தான்,  இருக்கிறார்,  இருப்பார் என்பதே யதார்த்தமாகும்.

ஒரு சிறந்த ஆசிரியர்களின் பண்புகள், குணங்களை பார்க்கும் மாணவ, மாணவிகளின் மனதில் அப்படியே பதியும். அதனால் ஆசிரியர்கள் தங்களை மாணவர்களின் காலக் கண்ணாடி என்ற எண்ணத்தில் தான் பணியாற்றி வருகின்றனர். அப்படி பணியாற்றுவதன் மூலம் கடினமாக உழைத்து வாழ்வில் ஒளிரும் மாணவ சமூகத்திற்கு ஆசிரியர்கள் உரிமையாளர்களாக மாறுகின்றனர். குரு, ஆசான், ஆசிரியர், வாத்தியார், இப்படி பல அவதரங்கள் கொண்ட மொத்த உருவம் ஆசிரியர். உலகில் உள்ள அனைத்து மொழிகளிலும் வார்த்தைக்கு வார்த்தை எதிர்ப்பதம் உண்டு. ஆனால் ஆசான் என்ற ஒரு வார்த்தைக்கு இலக்கண வித்தகர்கள் எதிர்மறை வார்த்தை தரவில்லை.

ஒரு சமூகம், அதி உன்னத நிலை அடைந்து இருந்தால், நிச்சயமாக அதன் பின்னால் ஆசிரியர் சமூகம் இருப்பதாக அர்த்தம். ஒரு சமூகம் தாழ்ந்து போனால், ஆசிரியர் சமூகம், தனக்கான பணியை சரிவர செய்திடவில்லை என அர்த்தம். வேறு எந்த துறையை விடவும் அதிக பொறுப்புகளும், அதிக முக்கியத்துவமும் நிறைந்தது அவர்கள் பயணம். மாணவர்களுக்கு அதிகம் தேவைப்படுவது, என்றென்றுமான ஊக்கமும், தன்னம்பிக்கையும், நன்னெறிகளும்….  இதை சரியாக வழங்கி விட்டால் அங்கே ஆசிரியர் வேலை அதன் முழு நிறைவை எட்டியதாக அர்த்தம். ஒரு மாணவன் ஆசிரியரை சேரும் தருணத்தில், வெறும் மண் கலவையாய் மட்டுமே உள்ளான். அவனை தேவையான வடிவில் வார்ப்பது ஆசிரியனின் பணியாக உள்ளது.

தெளிவான, சிறப்பான மாணவ சமூகத்தை உருவாக்குவதில் ஆசிரியர்களின் பங்கு முதன்மையானது என்பதை இங்கு யாரும் மறுக்கமுடியாது. அதிலும் ஆரம்பப் பள்ளி ஆசிரியர்களின் உழைப்பினை தான் நாம் அதிகம் பாராட்ட வேண்டும். சிறு குழந்தைகளுக்குச் பாடங்களை அடித்தோ, அல்லது மிரட்டியோ கற்றுக் கொடுக்க முடியாது. அப்படிச் சொல்லிக் கொடுத்தாலும் அவர்களுக்கு ஏறாது. குழந்தைகளுக்கு பாடம் சொல்லிக் கொடுக்கும் பொழுது அசிரியர்கள் குழந்தைகளாகவே மாறிவிட வேண்டும். அப்பொழுது தான் அவர்கள் தங்களின் முழுக்கவனத்தையும் ஆசிரியர்கள் மீது விழும். அப்படி குழந்தைகளுக்கு பாடம் சொல்லிக் கொடுக்கும் பொழுது அவர்களின் மழலை பேச்சும், மழலைச் சிரிப்பையும் காணும் பொழுது புதிய உலகிற்குச் சென்ற ஓர்; உன்னத உணர்வு மனதில் ஏற்படும். அதே போல் கிராமத்தில் இருக்கும் பள்ளிகளில் பணியாற்றுவதில் கிடைக்கும் மகிழ்ச்சி சற்று வித்தியாசமானது. அங்கு ஆரம்பப் கல்வி படிக்கும் மாணவன் பின் வாழ்வின் எத்தகைய உயர்ந்த நிலைக்குச் சென்றாலும் அப்பள்ளியையும் ஆசிரியர்களையும் மறப்பது இல்லை.

ஒரு நாட்டின் எதிர்கால தலைவிதி ஒவ்வொரு வகுப்பறைகளிலும் உருவாக்கப்படுகிறது என்பதை ஆசிரியர்கள் தெரிந்து கொள்ள வேண்டும். சிறந்த ஆசிரியர்கள் என்பவர்கள் செயலுக்கும் சொல்லுக்கும் இடையிலான இடைவெளியை குறைப்பவர்களாக இருக்க வேண்டும். அப்படி இருந்தால் தான் ஆசிரியர் பணி சிறப்பாக போற்றப்படும். அதே போல் மாணவர்களை சிறந்த பண்போடு உருவாக்க நினைக்கும் ஆசிரியர்கள் முதலில் ஒழுக்கமாக இருக்க வேண்டியது அவசியம். ஒரு ஆசிரியர் தவறு செய்தால் எட்டின அளவிற்கு எதிர்கால சந்ததிகள் பாதிக்கப்படுவர் என்று ஒரு கருத்து இருக்கிறது இதனை உணாந்து செயல்பட்டால் ஆசிரியர் பணி சிறக்கும், அதனால் நாடு, சிறக்கும்.

பிற பணிகளில் இல்லாதது ஆசிரியர் பணியில் இருக்கிறது. மாதா பிதா குரு தெய்வம் என்று தான் சொல்கிறோம். தமிழ் சிறப்பாயிரம் பாடலில் சொன்னது போல் அன்னையும் தந்தையும் ஒரு குழந்தையை உலகிற்கு தருகின்றனர். ஆனால் ஒரு ஆசிரியன் உலகத்தையே குழந்தைகளுக்கு தருகிறான். இந்த உண்மைகள் நிலைத்து நிற்க வேண்டும். ஆசிரியர் சமூகம் மேன்மேலும் வளர வேண்டும் என்று அனைவருமே நினைக்கின்றனர். மொத்தத்தில் இறந்த பிறகும் மண்ணில் வாழ்ந்து கொண்டிருப்பவர்கள் வரிசையில் ஆசிரியர்களுக்கு முதல் இடம் உண்டு என்பது ஓர் யாதார்த்த உண்மை.

ஒரு சமயம் அரிஸ்டாட்டில் தம் மாணவருடன் ஆற்றின் கரைக்கு வந்தார். மாணவர்களை கரையில் நிற்க வைத்தவர், நான் ஆற்றின் அக்கறை வரையில் சென்று ஆற்றில் ஏதாவது சுழல்கள் உள்ளதா என பார்த்து வருகிறேன் என்றார். அவர் ஆயத்தம் கொண்ட சமயம், அவரின் ஒரு மாணவர் தண்ணீரில் நீந்தி செல்வதை கண்டார். மறு கரை வரை சென்று திரும்பிய மாணவர், குருவே, சுழல்கள் இல்லை, நாம் தைரியமாய் ஆற்றை கடக்கலாம் என்றார். அந்த நிலையில், அரிஸ்ட்டாட்டில், உன்னை சுழல்கள் எடுத்து சென்றிருந்தால் என்னவாகி இருக்கும் என்றார். அதற்கு அந்த மாணவன், இந்த இந்த அலக்சாண்டர் போனால், ஆயிரம் அலேக்சாண்டர்களை உருவாக்கும் வல்லமை உள்ளவர் நீங்கள். ஆனால் ஒரு அரிதான குருவை இழந்தால் நாங்கள் பரிதவித்து போவோம் என்றான். அப்படி ஆசிரியர் மாணவர் உறவு அமைவது நல்ல சமூகத்துக்கு புது சுவாசத்தை கொணரும்.

ஆசிரியர் பணி எவ்வளவு தூய்மையாகக் காணப்பட்டாலும்கூட, அண்மைக் காலங்களில் ஆசிரியர்களைப் பற்றி தரக்குறைவான சில சம்பவங்களும் ஊடகங்களில் வெளிவருவதை நாம் காண்கின்றோம். விசேடமாக சில பாடசாலை ஆசிரியர்கள், அதிபர்கள் தமது மாணவிகளை பாலியல் துஸ்பிரயோகத்திற்குட்படுத்தும் செய்திகளை சில மேற்கத்தைய நாடுகளில் சில ஆசிரியைகள் மாணவர்களை பாலியல் வல்லுறவுக்குட்படுத்தும் செய்திகளையும் காண்கின்றோம். அதேபோல மாணவர்களை தவறான வழிக்கு இட்டுச் செல்லும் பல்வேறு சம்பவங்களையும் காண்கின்றோம். உண்மையிலேயே இது வேதனைப்படக் கூடிய ஒரு விடயமே. இத்தகைய சம்பவங்கள் மிக மிக சொற்பமாக இடம்பெற்றாலும்கூட, ஆசிரியர் சமூகத்தை இழிவுபடுத்தும் இவர்களை துஸ்பிரயோகம் செய்துவிட முடியாது. ஒரு குடம் பாலுக்கு ஒரு துளி விசம் என்பர். எனவே, இத்தகைய ஆசிரியர்களை இனங்கண்டு சட்டரீதியாக கடுமையாக தண்டனைகளை வழங்கி ஆசிரிய தொழிலின் மாண்பினைப் பேண வேண்டியது சட்டத்துறையினரதும், நீதித்துறையினரதும் கடமையாகும்.

ஆசிரியர்கள் ஒவ்வொருவரும் தம்மை, தாம் முதலில் உணர வேண்டும். ஆசிரியசேவை மனதால் உணரப்பட வேண்டியது. ஏதோ விடுமுறைகள் நிறைந்த இலகுவான தொழில் என்று எண்ணாமல் தியாக உணர்வுடன் செய்யப்பட வேண்டிய சேவை என்பதை புரிந்து கொள்வது இன்றியமையாதது. ஆசிரியர்களான நாம் எப்போதும் எம்மை திருத்திக் கொள்ளும் மனப்பாங்கை வளர்க்க வேண்டும். மாற்றமே ஆசிரியரின் செயற்பாட்டு ரீதியான அடிப்படை வளர்ச்சியாகும். நாம் எதை செயற்படுத்த விரும்புகிறோமோ அதை முதலில் நாம் மாணவர்களுக்கு முன்மாதிரியாக செய்துகாட்ட வேண்டும்.

ஆசிரியர்களின் வார்த்தைகளையும், வர்ணிப்புகளையும் மாணவர்கள் கவனிப்பதை விட அவர்களின் நடத்தை, முக பாவம் என்பவற்றையே மாணவர்கள் முழுமையாக கிரகிக்கிறார்கள்.

ஆசிரியரின் நடத்தை தான் மாணவர்களின் நடத்தை ரீதியான மாற்றத்திற்கு முன்மாதிரியாக அமைகிறது. வாழ்க்கைக் கற்றலில் மாணவர்கள் 80% ஆசிரியர்களின் நடத்தை, செயற்பாட்டில் கற்றுக் கொள்கின்றனர். புத்தகக் கல்வி மட்டுமல்ல கல்வி சிறந்த பண்பாட்டு விழுமியங்கள், ஒழுக்கம், இணைப்பாடவிதானச் செயற்பாடுகள், சமூக தொடர்புகள் போன்ற அத்தனை துறைகளிலும் மாணவர்களை வழிகாட்ட வேண்டும். இங்கே ஆசான் பல்துறை வல்லுவனாக இருத்தல் அவசியம். அப்போது தான் மாணவர்களுக்கு எம் மீது மதிப்பும் மரியாதையும் ஏற்படும்.

வெற்றிகரமான ஆசிரியர் எனப்படுபவர், சகல வசதிகளையும் கொண்ட வகுப்பறையில் சிறந்த குடும்பப் பின்னணியையும் சிறந்த உள நிலையையும் கொண்ட மாணவனுக்கு கற்பித்து அம் மாணவனை முன்னேற்றுவதல்ல. மாறாக தான் கற்பிக்கும் ஒவ்வொரு மாணவனையும் பற்றி சகல விடயங்களையும் அறிந்து, பொருத்தமற்ற சுழலில், கல்வியறிவு குறைந்த பின்னணியில் இருந்து வரும் மாணவனை வளப்படுத்துவதே வினைத்திறன் மிகு ஆசிரியருக்கு வேண்டியது. இதுவே ஓர் ஆசானின் வெற்றியும், பெருமையுமாகும்.

நவீன காலத்தில் ஆசிரியர் தொழில் பணத்துடன் பின்னிப் பிணைக்கப்பட்டிருப்பது மிகவும் வேதனைக்குரிய விடயமாகும். குறிப்பாக இக்கால கட்டத்தில் பணத்தை மையமாகக் கொண்டு கல்வி விலைபேசப்படுகின்றது. இந்நிலை எதிர்காலத்தில் பெரும் சாபக்கேட்டை உருவாக்கலாம். பணத்தை சேகரிப் பதற்கான கல்வியை மட்டும் வழங்காது நல்ல பண்பாட்டு ரீதியான, ஒழுக்க விழுமியங்களை நிலை நாட்டும் நிறை கல்வியை ஆசிரியர்கள் வழங்குவது காலத்தின் தேவையாகும்.

ஆசிரியர் தொழில் புனிதத்துவம் மிக்கவை. தெய்வீகமானவை. எனவே, இத்தொழில் மகத்மீகத்தை உணர்ந்து ஒவ்வொரு ஆசிரியர்களும் செயற்பட வேண்டியது மிகவும் இன்றியமையாததாகும். ஏற்னகவே குறிப்பிட்டதைப்போல் “ஒரு குடத்துப் பாலுக்கு ஒரு துளி விசமாக” ஆசிரியர்கள் மாறுவதும் தவிர்க்கப்பட வேண்டும். இத்தினத்தில் இது குறித்து திடசங்கற்பம் பூணுவோமாக!

காலி பகுதிக்கு 450 மில்லியன் ரூபா செலவில் நவீன விளையாட்டரங்கு!

061009gall_ground.pngகாலி தடல்ல பகுதியில் சகல வசதிகளையும் கொண்ட நவீன விளையாட்டரங்குக் கட்டிடத் தொகுதி ஒன்று அமைக்கப்பட்டு வருகிறது. நீண்ட நாட்களாக இந்தப் பகுதிக்கு ஒரு குறைபாடாக நிலவி வந்த இந்தக் கட்டடத் தொகுதி 16 ஏக்கர் நிலப்பரப்பில் நிர்மானிக்கப்பட்டு வருகிறது.

நகர அபிவிருத்தி அதிகார சபை இத்திட்டத்தை மேற்கொண்டு வருகிறது. இத்திட்டத்தின் கீழ் அமைக்கப்படும் பிரதான விளையாட்டரங்கு 400 மீட்டர் ஓட்டப் பாதையைக் கொண்டதாகும். மேலும்  இந்தக் கட்டிடத் தொகுதி உள்ளக விளையாட்டரங்கு, டெனிஸ், வலைபந்து, கூடைப்பந்து, கைப்பந்து போன்ற போட்டிகளுக்கான விளையாட்டுத் திடல்கள், வாகன தரிப்பிடம், தங்குமிட வசதி, நிருவாகப் பணிமனை  போன்றவற்றையும் உள்ளடக்கியுள்ளது.

இதன் நிர்மானப்பணிகளை மூன்று வருட காலத்திற்குள் பூர்த்தி செய்யத் திட்டமிடப்பட்டுள்ளது.

வாக்குச் சாவடிகளுக்குள் கமரா, தொலைபேசி எடுத்துச் செல்லத் தடை

srilanka-voting.jpgவாக்குச் சாவடிகளுக்குள் வீடியோ கமரா, புகைப்பட கமரா மற்றும் கையடக்கத் தொலைபேசி என்பனவற்றை எடுத்துச் செல்வதும் பாவிப்பதும் முற்றாகத் தடை செய்யப்பட்டுள்ளது. அதேநேரம் வாக்குச் சாவடிகளுக்குள் வீடியோ கமரா மற்றும் புகைப்படக் கமரா என்பனவற்றைப் பயன்படுத்தி படம் எடுப்பதற்கும் எவருக்கும் அனுமதி வழங்கப்படமாட்டாது.

இது தொடர்பான சட்ட ஏற்பாடுகளை கடுமையாக நடைமுறைப்படுத்துமாறு தேர்தல் ஆணையாளர் தயானந்த திசாநாயக்கா தேர்தல் அதிகாரிகளுக்கு அறிவுறுத்தல் வழங்கியுள்ளார். அதேநேரம் ஆயுதங்களுடன் எவரும் வாக்கு சாவடிகளுக்குள் பிரவேசிக்க இடமளிக்கக் கூடாது என்றும் அவர் கூறியுள்ளார்.

தென் மாகாண சபைக்கான தேர்தல் எதிர்வரும் 10ம் திகதி நடைபெறவிருக்கின்றது. இத்தேர்தலையொட்டியே தேர்தல் ஆணையாளர் இந்த அறிவுறுத்தல்களை வழங்கி இருக்கின்றார். இதேநேரம் வாக்காளர்கள், அரசியல் கட்சிகளின் செயலாளர்கள், சுயேச்சைக் குழுக்களின் தலைவர்கள், அபேட்சகர்கள், கட்சிகளின் வாக்குச் சாவடி முகவர்கள் பெப்ரல் மற்றும் சி. எம். ஈ. வி. அமைப்புக்களின் தேர்தல் கண்காணிப்பாளர்கள், பொலிஸார், தெரிவத்தாட்சி அதிகாரிகளிடம் அனுமதி பெற்றிருப்போர் போன்றோரைத் தவிர வேறு எவரும் வாக்குச் சாவடிகளுக்குள் பிரவேசிக்க அனுமதிக்கப்படக் கூடாது என்றும் அவர் கூறியுள்ளார்.

ஈரான் அணுகுண்டு தயாரிப்பில் போதிய திறன் பெற்றுவிட்டது – ஐ.நா. தகவல்

iranflagss.jpgஅணு குண்டு வடிவமைப்பு மற்றும் தயாரிப்பில் ஈரான் போதியத் திறன் பெற்றுவிட்டதாக ஐக்கிய நாடுகள் சபையின் அணுகுண்டு கண்காணிப்புப் பிரிவு நிபுணர்கள் தெரிவித்துள்ளனர். ஈரான் அணுகுண்டு தயாரிப்பதில் பாகிஸ்தான் அணு விஞ்ஞானி ஏ கியூ கான் உதவி செய்திருப்பதாகவும் அவர்கள் தெரிவித்துள்ளனர்.

அணுகுண்டு தொழில்நுட்பத்தை ஈரான் அதன் நட்பு நாடுகளிடமிருந்து பெற்றுக்கொண்டு, தற்போது தனது தேவைக்கு ஏற்ப அத்தொழில்நுட்பத்தைப் பயன்படுத்தி வருவதாக சர்வதேச அணுசக்தி முகமை தகவல்களை மேற்கோள்காட்டி நியூயார்க் டைம்ஸ் செய்தி வெளியிட்டுள்ளது.

பதவி நீக்கம் செய்யப்பட்ட பாகிஸ்தானின் அணு விஞ்ஞானி ஏ கியூ கான் மூலம் அணுகுண்டு வடிவமைப்பு தொழில்நுட்பங்களை ஈரான் பெற்றுக் கொண்டுள்ளது. மேலும் யுரேனியத்தைச் செறிவூட்டுவதற்கான இயந்திரங்களையும் அவர் ஈரானுக்கு விற்பனை செய்துள்ளதாகப் பல்வேறு உளவுத்துறை நிறுவனங்களும் தெரிவித்துள்ளன.
மேற்கண்ட தகவல்களை ஈரான் சென்றுவந்த ரஷிய அணு ஆயுத விஞ்ஞானியும் உறுதிப்படுத்தியுள்ளார்.

இதற்கிடையே அணுகுண்டு தயாரிப்புத் தொடர்பாக ஈரான் போதுமான திறனைப் பெற்றுவிட்டதாகவும், தாற்காலிகமாக ராணுவ தேவைக்கு மட்டும் தயாரிப்புப் பணியில் ஈடுபட்டுள்ளதாகவும்,  அணுகுண்டு தயாரிப்புப் பணியில் முழுமையாக ஈடுபடவில்லை எனவும் அங்கிருந்து கிடைத்த உளவுத்துறை தகவல்கள் தெரிவிக்கின்றன.

ஈரான் 2003-ம் ஆண்டிலேயே அணு ஆயுதங்கள் தயாரிக்கும் திறமையைப் பெற்றுவிட்டதாக இரண்டு ஆண்டுகளுக்கு முன்னரே, அமெரிக்க உளவு அமைப்புகளை மேற்கோள்காட்டி செய்திகள் வெளியாயின.

ஆனால் கடந்த சில மாதங்களாக அமெரிக்கா,  பிரிட்டன்,,பிரான்ஸ்,  ஜெர்மனி மற்றும் இஸ்ரேல் ஆகிய நாடுகளும் ஈரான் அணுகுண்டு தயாரிக்கும் பணியில் ஈடுபட்டு வருவதாகக் குற்றம்சாட்டிவருகின்றன. 

தேசியப் பாடசாலை ஆசிரியர்களின் சம்பள நிலுவையை வழங்க நிதி

தேசியப் பாடசாலைகளில் கடமையாற்றும் ஆசிரியர்களின் சம்பள நிலுவையை வழங்கவென 170 மில்லியன் ரூபாவை கல்வி அமைச்சு ஒதுக்கியுள்ளது.

இந்நிதி மாகாண கல்வி திணைக்களங்களுக்கு கடந்த செப்டம்பர் மாத நடுப்பகுதியில் அனுப்பி வைக்கப்பட்டிருப்பதாக அமைச்சு விடுத்துள்ள செய்திக் குறிப்பில் குறிப்பிடப்பட்டுள்ளது.

அதேநேரம் மாகாண பாடசாலைகளில் கடமை புரியும் ஆசிரியர்களுக்கும் சம்பள நிலுவையை வழங்குவதற்கு தேவையான பணம் வெகுவிரைவில் பெற்றுக் கொடுக்கப்படும் என்றும் அக்குறிப்பில் சுட்டிக்காட்டப்பட்டுள்ளது.

இதற்குத் தேவையான நிதியை வழங்குமாறு நிதி ஆணைக் குழுவிடம் கல்வி அமைச்சு கேட்டுள்ளது. அந்நிதி கிடைக்கப் பெற்றதும் மாகாண பாடசாலைகளில் கடமையாற்றும் ஆசிரியர்களின் சம்பள நிலுவையை மாகாண சபைகள் ஊடாக வழங்கவும் கல்வி அமைச்சு நடவடிக்கை எடுக்கவிருக்கின்றது.