08

08

மீள் குடியேற்றம் – வன்னியில் முதல் பாடசாலை இன்று ஆரம்பம்

north-governor.jpgநிவாரணக் கிராமங்களிலிருந்து மீள் குடியேற்றப்படும் மாணவர்களுக்கான முதல் பாடசாலை இன்று துணுக்காய் கல்வி வலயத்தில் வடமாகாண ஆளுனரினால் உத்தியோகபூர்வமாக ஆரம்பித்து வைக்கப்பட்டது.

துணுக்காய் கல்வி வலயத்தில் ஆளுனரினால் இன்று ஆரம்பித்து வைக்கப்பட்ட பாடசாலை யோகபுரம் ம.வி ஆகும்.  இன்றைய தினம் சுமார் 100 மாணவர்கள் பாடசாலைக்குச் சமுகமளித்திருந்ததாக தேசம் நெற்றுக்கு தகவல் கிடைத்துள்ளது. 

ஏ-9 வீதியூடாக இதுவரை 61,754 பேர் பயணம்: யாழ்.அரச அதிபர்

gaganesh.jpgகடந்த ஜூலை மாதம் 22 ஆம் திகதி தொடக்கம் ஒக்டோபர் 30ஆம் திகதி வரையிலான காலப் பகுதியில் இவர்கள் ஏ-9 வீதியூடாக 1658 பஸ்களில் பிறமாவட்டங்களுக்கு சென்றுள்ளனர். கண்டி- யாழ் ஏ-9 வீதி மீண்டும் மக்கள் பாவனைக்கு திறக்கப்பட்ட பின்னர் 61 ஆயிரத்து 754 பேர் யாழ்ப்பாணத்தில் இருந்து வெளிமாவட்டங்களுக்கு பயணம் செய்துள்ளதாக யாழ் மாவட்ட அரச அதிபர் கே. கணேஷ் தெரிவித்துள்ளார்

அவுஸ்திரேலிய உயர்மட்ட குழு இலங்கை வருகை

14indonesia.jpgஅவுஸ்தி ரேலியாவுக்குள் சட்ட விரோதமாக நுழையும் இலங்கையர் விவகாரம் தொடர்பாக ஆராய்வதற்கென அவுஸ்திரேலிய உயர்மட்டக்குழுவொன்று இலங்கை வந்துள்ளது.

இந்தக் குழு, அரசாங்கத்தின் உயர்மட்ட அதிகாரிகளைச் சந்தித்துப் பேச்சுவார்த்தை நடத்தியுள்ளதோடு இலங்கைக் குடிவரவு- குடியகல்வுத் திணைக்களத்தின் பிரதான கட்டுப்பாட்டாளரையும் சந்தித்துப் பேசவுள்ளது.

குடிவரவு- குடியகல்வு திணைக்களத்தின் பிரதான கட்டுப்பாட்டாளர் பீ. பி. அபேகோன் இதனைத் தெரிவித்தார்.சட்டவிரோதமான முறையில் இலங்கையர் அவுஸ்திரேலியாவுக்குள் நுழைவதாக அந்நாடு பெரும் நெருக்கடியை எதிர்நோக்கியுள்ளது. பயிற்றப்பட்ட தகுதிவாய்ந்த தொழில்சார் இலங்கையர்கள் அவுஸ்திரேலியாவில் தொழில் வாய்ப்பைப்பெற்றுச் சென்றுள்ளனர்.

சட்டவிரோதமாகச் செல்லும்போது பயிற்றப்படாத, அவுஸ்திரேலியாவுக்குள் எதிர்பார்க்கப்படுகின்ற நபர்கள் இல்லாதிருப்பதும் குறையாகக் காணப்படுவதாகவும் இதனை எவ்வாறு தடுக்கலாம் என்பதுபற்றி ஆராய்வதற்கும், அவுஸ்திரேலியாவிலிருந்து விசேட குழுவினர் இலங்கை வந்துள்ளனர்.

அண்மையில் அவுஸ்திரேலியா சென்றிருந்த குடிவரவு- குடியகல்வுத் திணைக்களத்தின் பிரதான கட்டுப் பாட்டாளர் பீ. பி. அபேகோன் அவுஸ்திரேலிய குடிவரவு- குடியகல்வு முக்கியஸ்தர்களையும் சந்தித்து உரையாடியுள்ளார்.

பிரான்ஸ் மனித உரிமை பிரதிநிதி அமைச்சர் றிஷாட்டுடன் சந்திப்பு – மீள் குடியேற்றம் தொடர்பில் திருப்தி தெரிவிப்பு

281009rishad.jpgமனித உரிமைகளுக்கான பிரான்ஸ் நாட்டு பிரதிநிதி பிரான்கொய்ஸ் ஸிமரே மீள்குடியேற்றம் மற்றும் அனர்த்த நிவாரண சேவைகள் அமைச்சர் றிஷாத் பதியுதீனை நேற்று முன்தினம் அமைச்சில் சந்தித்துக் கலந்துரையாடினார்.

இச் சந்திப்பின் போது இடம்பெயர்ந்த நிலையில் வவுனியா நிவாரணக் கிராமங்களில் தங்கியுள்ள மக்கள் குறித்தும் அவர்களின் மீள் குடியேற்ற நடவடிக்கைகள் சம்பந்தமாகவும் விரிவாக கலந்துரையாடப்பட்டது.

இடம்பெயர்ந்த மக்களின் மீள்குடியேற்ற நடவடிக்கைகளை இலங்கை அரசாங்கம் மிகச் சிறப்பாகவும் துரிதமாகவும் முன்னெடுத்து வருவதாகத் தெரிவித்த அமைச்சர், தற்போது இடம்பெயர்ந்த மக்கள் வாழ்ந்த பிரதேசங்களில் மிதிவெடி கண்ணிவெடிகள் காணப்படுவதால் அவற்றை அகற்றுவதில் அரசாங்கம் ஈடுபட்டுள்ளது. மீள்குடியேற்றப்படுபவர்களுக்கு தேவையான உதவிகள் செய்து கொடுக்கப்பட்டுள்ளது. மின்சாரம், சுகாதாரம், கல்வி, பாதை, போக்குவரத்து உட்பட இன்னோரன்ன உட்கட்டமைப்பு வசதிகளையும் அரசாங்கம் அவர்களுக்கு ஏற்படுத்தி கொடுத்து வருவதாகவும் தெரிவித்தார்.

இங்கு கருத்துத் தெரிவித்த பிரான்ஸ் நாட்டு மனித உரிமைக்கான பிரதிநிதி பிரான்கொய்ஸ் ஸிமரே இடம்பெயர்ந்த மக்களை மீள்குடியேற்றுவதில் இலங்கை அரசாங்கம் மேற்கொண்டுவரும் முயற்சியை பாராட்டுவதாகவும் நிவாரணக் கிராமங்களில் தங்கியுள்ள மக்களுக்கும் அம்மக்களின் மீள்குடியேற்ற நடவடிக்கைகளுக்கும் பிரான்ஸ் அரசாங்கம் முழுமையான ஒத்துழைப்பை வழங்குவதற்கு தயாராக இருப்பதாகவும் அவர் அமைச்சர் ரிஷாத் பதியுதீனிடம் தெரிவித்தார்.

மலையக வீடமைப்புத் திட்டத்திற்கு தமிழக அரசு ரூ. 7½ கோடி வழங்க முடிவு

மலையக வீடமைப்புத் திட்டத்திற்கென தமிழ்நாடு மாநில அரசு எழரைக் கோடி ரூபாவை (இலங்கை நாணயம்) வழங்க முடிவு செய்துள்ளது.

இந்த நிதி மூலம் மலையகத்தில் 500 வீடுகளை கட்டுவதற்குத் தீர்மா னிக்கப்பட்டுள்ளதாக இளைஞர் வலுவூட்டல் மற்றும் சமூக பொரு ளாதார அபிவிருத்தி அமைச்சு அறிவித்துள்ளது.

இது தொடர்பாக விடுக்கப்பட்ட அறிக்கையில் கூறப்பட்டுள்ளதாவது,

இளைஞர் வலுவூட்டல் மற்றும் சமூக பொருளாதார அபிவிருத்தி அமைச்சு பெருந்தோட்டத் தொழி லாளர்களுக்கென வீடமைப்புத் திட்டம் ஒன்றை நடைமுறைப்படுத்த முன் வந்துள்ளது. அமைச்சர் ஆறு முகன் தொண்ட மான் தமிழக அரசின் உதவியோடு இத்திட்டத்தை மலை யகத்திற்கு அறிமுகப்படுத்துகின்றார்.

இந்த உத்தேச 500 வீடுகளில் தோட்டப்புறங்களை ஒட்டிய கிராமப் புறங்களுக்கும் 50 வீடுகள் கட்டப்படவுள்ளன.

இதன் மூலம் மலையகத்தில் உள்ள தோட்டப்புற மக்களுக்கும் தோட்டங்களை அண்டியுள்ள கிராமப் புற மக்களுக்கும் இடையே புரிந்துணர்வையும் செளஜன்ய உறவையும் நிலைநாட்ட வழி வகை செய்ய ப்பட்டுள்ளது.

கிளிநொச்சி மீள்குடியேற்றத்தை பூரணப்படுத்தல். அரச நிறுவனங்களை இயங்க வைப்பது குறித்து ஆராய இன்று விசேட கூட்டம்

061109rupawathy.jpgகிளிநொச்சி மாவட்டத்தில் முழுமையாக மக்களை மீளக்குடியமர்த்துவதற்கு ஏதுவாக அங்குள்ள அனைத்து அரச நிறுவனங்களையும் இயங்க வைப்பது மற்றும் அபிவிருத்தி பணி குறித்தும் ஆராயவென இன்று விசேட கூட்டமொன்று கிளிநொச்சியில் நடைபெறுகிறது.

வடமாகாண ஆளுநர் மேஜர் ஜெனரல் ஜீ.ஏ.சந்திரசிறி தலைமையில் நடைபெறும் கூட்டத்தில் கிளிநொச்சி மாவட்ட புதிய அரச அதிபர் திருமதி ரூபவதி கேதீஸ்வரன் உட்பட பல அதிகாரிகளும் கலந்து கொள்ளவுள்ளனர். இடம்பெயர்ந்து சென்றுள்ள மாகாண நிர்வாகத்துக்கு உட்பட்ட அரச உத்தியோகத்தர் களை உடனடியாக கடமைக்கு திரும்புமாறும் ஆளுநர் பணிப்புரை வழங்கியுள்ளார்.

மேல் கிளிநொச்சி, முல்லைத்தீவு மாவட்டங்களிலுள்ள பாடசாலைகளை மீண்டும் இயங்க வைப்பதற்கு ஏதுவாக அந்தந்த பாடசாலைகளிலிருந்து இடம்பெயர்ந்து சென்றுள்ள ஆசிரியர்களை மீண்டும் கடமைக்கு திரும்பச் செய்வதற்கென இடம்பெயர்ந்துள்ள ஆசிரியர்களின் விபரங்கள் சேகரிக்கப்படுவதாகவும் ஆளுநர் தெரிவித்தார்.

கிளிநொச்சி, முல்லைத்தீவு பகுதிகளில் மக்கள் மீளக்குடியமர்த்தப்பட்டதும், குடாநாட்டுடன் அவர்கள் தொடர்ந்தும் தொடர்புகளை வைத்திருப்பதற்கு ஏதுவாக யாழ்- கிளிநொச்சி, முல்லைத்தீவு பஸ் சேவைகளை ஆரம்பிப்பதற்கான அனுமதியையும் ஆளுநர் கோரியுள்ளதாக தெரிவிக்கப்படுகிறது.

உரிமை கோரப்படாத பணத்தை மீளப் பெற்றுக் கொடுக்க நடவடிக்கை – அடகு வைக்கப்பட்ட நகைகளுக்கும் நஷ்டஈடு

யாழ்.  மாவட்ட மக்கள் வங்கிகளில் கணக்கு வைத்திருந்தோரது பணம் பத்து ஆண்டுகளுக்கு மேல் உரிமை கோரப்படாது மத்திய வங்கியின் உடைமையாக்கப்பட்டிருப்பின் அதனை மீளப் பெற்றுக்கொடுக்க நடவடிக்கை எடுக்கப்படுமென மக்கள் வங்கியின் தலைவர் டபிள்யூ. கருணஜீவா தெரிவித்தார்.

இது தொடர்பாக ஜனாதிபதி, மத்திய வங்கி ஆளுநருடன் பேச்சுவார்த்தை நடத்தப்படுமெனவும் அவர் கூறினார். யாழ்ப்பாணம், புலோலியில் மக்கள் வங்கியின் வாடிக்கையாளர் சேவை நிலையத்தைத் திறந்து வைத்த அவர், அங்கு இடம்பெற்ற நிகழ்வில் உரையாற்றிய போதே மேற்கண்டவாறு கூறினார்.

வன்னிப் பிராந்தியத்தில் மக்கள் வங்கிக் கிளைகளில் சேமிப்புக் கணக்கு வைத்திருந்தவர்களின் ஆவணங்கள் தொலைந்திருந்தாலும், இருக்கும் ஆவணங்களுக்கமைய திருப்பி வழங்கப்படுவதுடன் கிளிநொச்சி, முல்லைத்தீவு மாவட்ட மக்கள் வங்கிக் கிளைகளில் அடகு வைத்திருந்த நகை களுக்கு நஷ்டஈடு வழங்கப்படுமெனவும் கூறினார்.

மக்கள் வங்கி யாழ். மாவட்டத்தைச் சேர்ந்த 49 பேருக்கு முகாமைத்துவ உதவியாளர்கள் பதவிகளை வழங்கியுள்ளது. மேலும் இருபத்தைந்து பேருக்கு புதிதாக நியமனம் வழங்க நடவடிக்கை எடுக்கப் பட்டுள்ளதெனவும் தெரிவித்தார்.

சு.க. தேசிய மாநாடு எதிர்வரும் 15ம் திகதி

ஸ்ரீலங்கா சுதந்திரக் கட்சியின் தேசிய மாநாடு எதிர்வரும் 15ம் திகதி கொழும்பு கெத்தாராம விளையாட்டரங்கில் நடைபெ றும். பிற்பகல் மூன்று மணிக்கு ஆரம்ப மாகும் இந்த மாநாட்டிற்கு ஜனாதிபதி மஹிந்த ராஜபக்ஷ தலைமை தாங்குவார்.

இந்த மாநாட்டில் அரசாங்கத்தின் அடுத்த ஆறு ஆண்டுகளுக்கான கொள்கை அறிக்கை வெளியிடப்படுவதோடு, தேர்த ல்கள் தொடர்பான முக்கிய அறிவிப்பும் வெளியிடப்படுமென சு. க வட்டாரங்கள் தெரிவித்தன. நாடு முழுவதிலுமிருந்து சு.க. கிளைகளின் பிரதிநிதிகள் சு.க அமைப்பாளர்கள், ஐ.ம.சு.மு.வில் அங்கம் வகிக்கும் கட்சிகளின் பிரதிநிதிகள், பங்குபற்றுவார்கள்.

சு.க.வின் அழைப்பையேற்று பிரிட்டிஷ் கன்சர்வேட்டிக் கட்சி பிரதிநிதிகள் மாநாட்டில் பங்கு பற்றுவதாக ஏற்கனவே அறிவித்துள்ளார்களெனத் தெரியவருகிறது.

சிறையில் எம்தமிழினம்! : அழகி

IDPs_Cookingஇப்பொழுது புயலுடன் பூகம்பமும் சுனாமியும் சேர்ந்து எமது ஈழத்து மக்களை நிர்க்கதியாக்கி விட்டு சென்று விட்டது. இதிலிருந்து எமது இனத்தை எப்படியும் நாம் காப்பாற்றியாக வேண்டும். முதலில் நல்ல மனிதர்கள், மக்களின் மேல் இரக்கமுடையவர்கள், பண்புடையவர்கள், நன்றியுணர்வுடையவர்கள் முன்வந்து தலைமை ஏற்று இந்த முட்கம்பி வேலிகளுக்குள் அடைபட்டுக்கிடக்கும் எமது சமுதாயத்தை காப்பாற்ற வேண்டும். சிங்கள இராணுவமும் இலங்கையின் இனத்துவேசமிக்க, அரசியல் தலைமைகளாலும் எமது இனம் கொஞ்சம் கொஞ்சமாக கொன்றொழிக்கப்பட்டு கொண்டு திட்மிட்டு உருத்தெரியாமல் அழிக்கப்பட்டுக் கொண்டிருக்கிறது. ஏவ்வகையான துரோகங்களை எமது மக்களுக்கு செய்கிறார்கள் என்பதையிட்டு நாம் கூர்ந்து கவனிக்க வேண்டும்.

மக்களை பசி பட்டினி போட்டு சிந்திக்கும் ஆற்றலை மழுங்கடிக்கிறார்கள். ஒரு இடத்தில் நிம்மதியாக இருக்க விடாமல் செய்கிறார்கள். குடிப்பதற்கு தண்ணீர் ஒழுங்காக கொடுக்கிறார்கள் இல்லை. இளம் குழந்தைகளுக்கு போதிய உணவு வழங்குவதில்லை. பலரை கைது செய்து விசாரணை இல்லாமல் கொன்றொழித்து கொண்டிருக்கிறார்கள். இளம் பெண்களை இரகசியமாக நடு ராத்திரியில் வலுக்கட்டாயமாக கைது செய்து வல்லுறவுக்கு உட்படுத்திக் கொண்டிருக்கிறார்கள். தமக்கு நேரும் கொடுமைகளை பெண்களோ ஏனையவர்களோ வெளிப்படுத்தும் தைரியம் அற்றவர்களாக நாள் தோறும் மனதுள் அடக்கி குமுறிக் கொண்டிருக்கிறார்கள். புலியின் கொடுமைகளுக்குள் முடங்கி வாழ நிர்ப்பந்திக்கப்பட்ட மக்கள் அதற்கு ஈடான அரசின் அடக்குமுறைகளை முகம் கொடுத்து எதிர்க்க தைரியமற்றவர்களாக ஆக்கப்பட்டு விட்டனர். இவர்களைக் காக்க நாம் ஏதேனும் முயற்சிகள் செய்தோமா என்றால் இல்லை என்று தான் சொல்ல வேண்டும்.

பிரபாகரன் என்ற தனிமனிதன் இலங்கை ராணுவத்தின் இரும்பு பிடியில் சிக்கி தனது மரணத்தை எண்ணிக் கொண்டிருந்த வேளையில் குறிப்பாக லண்டனில் உண்ணாவிரதங்கள், ஊர்வலங்கள் என பல மாதங்களாக புலம்பெயர் தமிழர்கள் கொதித்தெழுந்து கொண்டிருந்தார்கள். இதற்கு தமிழ் தொலைக்காட்சிகளும் இருபத்தி நாலு மணிநேரமும் துணை நின்றன. இந்த போராட்டங்களில் புலியை தீவிரமாக எதிர்த்த நபர்களும் பங்கு பற்றினார்கள். சுhதாரண குடும்ப பெண்களும் கலந்து கொண்டார்கள். ஆனால் மூன்று லட்சம் மக்கள் சிங்கள அரசினாலும் அதன் ராணுவத்தாலும் மக்களின் சொந்த நிலத்தில் இருந்து துரத்தி அடிக்கப்பட்டு மிருகங்கள் போல் முட்கம்பி வேலிக்குள் முடக்கப்பட்ட போது இந்த தருணத்தில் எந்தவொரு உண்ணாவிரதமோ ஆர்ப்பாட்டமோ ஐரோப்பாவில் நிகழவில்லை. மக்களுக்காக போராடுகிறோம் மக்களுக்காக கலந்து கொள்கிறோம் என பதிலிறுத்தவர்கள் மௌனமாகினர். ஏன்? தமிழ் மக்களே இப்போதாவது நீங்கள் எல்லாம் புரிந்து கொண்டீர்களா? இந்த ஆர்ப்பாட்டங்கள் எல்லாம் ஏன் செய்தார்கள்? லண்டனில் இரண்டு லட்சம் தமிழர்கள் தாங்கள் பெரிய சாணக்கியர்கள்- நாங்கள் தெருவில் இறங்கினால் நாம் நினைப்பது நடக்கும் தானே என மிகவும் தேர்ந்த அரசியல் உணர்வாளர்களாய் எண்ணிக் கொண்டு தெருக்களில் நின்றார்கள். ஏன் என்பதை இப்பொழுதாவது புரிந்து கொள்ளுங்கள்.

எமது மக்கள் மழை, வெயில், பனி என்று பாராது திறந்த வெளி சிறையினில் அடிப்படை வசதிகள் கூட இன்றி அல்லல்படுகிறார்களே. ஆவற்றை மிகவும் இராஜதந்திர நோக்குடன் மிக நுண்ணியமாக செயற்பட்டு தீர்ப்பதற்கு யார் முன்வந்தார்கள்.? ஏன் நீலிக்கண்ணீர் வடிக்கிறார்கள்.? குரங்கில் இருந்து மனிதன் பரிணாம வளர்ச்சி பெற்று எத்தனையோ யுகங்கள் கடந்து விட்டன. ஏன் இப்போதும் குரங்கின் புத்தியுடன் சுகபோகமாக வாழ்வதற்கு மற்றவர்களின் குருதியை தேடுகிறீர்கள். கூட்டமைப்பு சிறீகாந்தா வன்னியில் யுத்தத்தை நிறுத்த முற்பட்டிருந்தால் அது புலம்பெயந்தவர்களுக்கு அவமானமாகி போயிருக்கும் என பேட்டி கொடுக்கிறார்.

துடிக்கத் துடிக்க மக்கள் கொல்லப்படுவதைக் கண்டு ஒரு கணமேனும் உங்கள் மனங்கள் பதைபதைக்கவில்லை என்றால் யுத்தம் முடிந்து புலியின் பக்கமாகவோ அரசின் பக்கமாகவோ கிடைக்கப் போகிற சொகுசு வாழ்க்கைகாகவா காத்திருந்தீர்கள். கூட்டமைப்பு இதுவரை மக்களின் பெயரால் பெற்ற சம்பளம் எவ்வளவு.? இந்த சம்பளம் அவர்கள் படித்து பட்டம் பெற்று வேலை செய்ததற்காகவா கிடைத்தது? மக்களின் பிரதிநிதிகள் என்ற போர்வையில் தானே சுகபோகம் அனுபவிக்கிறார்கள். இவர்கள் தமது சம்பளத்தின் எத்தனை வீதத்தை இந்த நாதி இழந்த மக்களுக்கு கிள்ளிக் கொடுத்திருக்கிறார்கள். தங்கள் எம்பி பதவியை குறிப்பிட்ட காலங்கள் வரையில் தக்கவைத்து விட்டால் அதன்பிறகு வாழ்நாள் முழுதும் கிடைக்கப் போகின்ற அரச சலுகைகளுக்காகவும் தமது குழந்தை குட்டிகளுக்காகவும் வன்னிமக்களின் குருதியில் நீச்சலடித்த வெட்கங் கெட்ட இந்த கூட்டமைப்பு முதலில் அரசியலை விட்டு இனி வெயியேற வேண்டும். பணம் பதவிக்காக ஏன் தமிழினத்தை விற்கிறீர்கள்.

தமிழ் ஈழ மக்களே! இப்பொழுது மிகவும் நொந்து இருக்கிறீர்கள். உங்களுக்கு அறிவுரை கூற முடியாது. ஆனாலும் எச்சரிக்கையாய் சொல்கிறேன். இன்றைக்கு இருபத்தைந்து வருடங்களின் முன்பு இயக்கங்களின் தலைவர்கள் செய்த படுபாதகமான கொடூரங்களை நாம் பிரசுரமாக 1985 ம் ஆண்டு வெளிக் கொண்டு வந்தோம். அன்று நாம் புலிகளாகிய சுக்கிளா, ரவி போன்ற ஈன இரக்கமில்லா கொலைகாரர்களால் அச்சுறுத்தப்பட்டு நாட்டை விட்டு விரட்டப்பட்டோம். ஊண் உறக்கமின்றி, இரவு பகல், நேரம், காலம் என பார்க்காமல் விடுதலைக்காய்  முழு மூச்சாய் நேர்மையாக உழைத்தவர்கள் அனைவரையும் இந்த கொலை வெறியர்கள் அடியோடு சாய்த்து மண்ணோடு மண்ணாக்கி விட்டார்கள்.  கிழக்கு மாகாணத்தின் விடிவெள்ளியாகி விட்ட கருணா செய்த கொடூரங்கள் கொஞ்ச நஞ்சமல்ல. ஒரு கணமேனும் கள்ளம் கபடமின்றி சிரிக்க முடியாத இந்த கருணாவை பிரபாகரனை எப்படி வெறுத்து ஒதுக்குகிறீர்களோ அப்படியே வெறுத்து ஒதுக்குங்கள். கருணா செய்த கொலைகளையும், கொள்ளைகளையும், பாலியல் வல்லுறவுகளையும் வெளியே விடுங்கள்.

எம்மையெல்லாம் முள்வேலிக் கம்பிகளுக்குள்ளும், அன்னிய தேசங்களிலும், ஆழ்கடலுக்குள்ளும் தள்ளியது போதாது என்று மீண்டும் எம்மை அழித்து இன்னொரு முள்ளிவாய்க்காலுக்கு தயார்படுத்த வேலை தொடங்கியுள்ளார்கள். நாடு கடந்த தமிழ் ஈழம் வட்டுக் கோட்டை தீர்மானம் என வரிந்து கட்டிக் கொண்டு புறப்படடுள்ள இந்த பேரவைகாரர்களிடம் ஒரு கேள்வியை முன்வைக்க விரும்புகிறேன்.

யார் இவர்கள்.? ஏப்படி இந்த தமிழர் பேரவையை உருவாக்கினார்கள்.? ஏவ்வளவு மக்கள் இவர்களை தேர்ந்தெடுத்தார்கள்.? என்ன சேவை செய்ததற்காக தேர்ந்தெடுத்தார்கள்.? இவர்களின் பின்னணி என்ன.? இவர்களை மேலும் கேட்கிறேன்.

1)நீங்கள் ஒவ்வொருவரும் யார் என்பதை மக்களுக்கு தெரியப்படுத்துங்கள்.!

2)உங்களின் சமுதாய பின்னணி கடந்த காலம் முழுவதும் என்ன செய்து கொண்டிருந்தீர்கள் என்பதையும் தெரியப்படுத்துங்கள்!.

3)உங்களது பொருளாதார பலம் என்ன. உங்கள் சொந்த உழைப்பில் எவ்வளவு எம் இனத்திற்காக செலவழித்திருக்கிறீர்கள்.!

4)இளமைக் காலத்தில் உங்களது சமுதாயச் செயற்பாடுகள் என்ன என்பதையும் தெரியப்படுத்துங்கள்.

தமிழ் மக்களே! இப்படியே நாம் தொடர்ந்தும் மௌனமாக இருந்தோமானால் மேலும் பல கொடியவர்கள் எமக்கு தலைவனாக தோன்றி மிச்சம் மீதி இருக்கின்ற எம் இனத்தை கூண்டோடு அழித்து விடுவார்கள். மிகவும் எச்சரிக்கையோடு இருங்கள். மனிதன் எப்போதும் போராடிக் கொண்டுதான் இருக்க வேண்டும். ஆனால் சரியான நல்ல வழிமுறைகளைப் பின்பற்றி எமது சமுதாயத்தை மற்றவர்கள் வெறுக்காதபடி போராட வேண்டும்.

உலக தமிழனமே எமது தேசத்தில் இவ்வளவு கொடூரமான நிகழ்வுகள் நடந்து கொண்டிருக்கையில் 25 கிலோ மீற்றருக்கு அப்பால் இருக்கும் தமிழ்நாட்டு அரசியல்வாதிகளையும் மக்களையும் வேறுபடுத்தி முதலில் நாம் இனம்காண வேண்டும். கோடிக்கணக்கான பணத்தை வைத்துக் கொண்டு, தள்ளாடும் வயதில் இன்னமும் அரசியலில் வெல்வதற்காக எமது மக்களை அடகுவைத்தவர்ளை முதலில் தூக்கி எறியுங்கள்.

எமது போராட்டம் அதற்கான தீர்வுகள் என்பவற்றை நாம்தான் பெற்றுக் கொள்ள வேண்டும். மற்றவர்களை நம்பி மீண்டும் எனது இன மக்களை இன்னொரு தடவை பீரங்கிக் குண்டுகளுக்கும், செல்லடிகளுக்கும் இரை கொடுக்கும் நிலைக்கு உட்படுத்தாதீர்கள். வன்னி மக்களுக்கு உதவ விரும்பினால் ஒவ்வொருவரும் உங்கள் சொந்தங்கள் குடும்ப உறுப்பினர்கள் ஊடாக முயலுங்கள். அதை விடுத்து இங்கு வரும் உண்டியல்காரரிடமும் அரசியலில் நண்பன் யார்? பகைவன் யார்? என்ற அரிச்சுவடியே தெரியாத ஞான சூனியங்களிடமும் ஏமாறாதீர்கள்!

30 வருடங்களின் பின் சுதந்திர சிவில் நிர்வாகம். முல்லைத்தீவு அரசாங்க அதிபர் இமெல்டா கூறுகிறார்

imalda.jpgவன்னியில் முப்பது வருட காலத்திற்குப் பின்னர் முழுமையான சிவில் நிர்வாகத்தை சுதந்திரமாக நடைமுறைப்படுத்தும் சூழல் உருவாகியுள்ளதாக முல்லைத்தீவு மாவட்ட அரசாங்க அதிபர் திருமதி இமெல்டா சுகுமார்  தெரிவித்துள்ளார்

கிளிநொச்சி, முல்லைத்தீவு மாவட்டங்களில் மக்கள் மீள்குடியேற்றம் மேற் கொள்ளப்பட்டுள்ள அதேநேரம் சிவில் நிர்வாகம் எதுவிதமான தலையீடுகளுமின்றி முழுமையாகத் தமது கட்டுப்பாட்டின்கீழ் நடைமுறைப்படுத்தப்படுவதாக அரச அதிபர் தெரிவித்துள்ளார்

இதன் மூலம் மக்கள் எதிர்பார்க்கும் ஆணித்தரமான இயல்பு வாழ்க்கையை ஏற்படுத்த சகல நடவடிக்கைகளையும் எடுத்துள்ளதாக அவர் கூறியுள்ளார்

இதற்கேற்ப இராணுவத்தினருக்குத் தாம் வழிகாட்டல்களை தெரிவித்துள்ளார் வழங்குவதாகக் கூறிய அரச அதிபர் அவர்கள், பாதுகாப்புக் கடமைகளை மாத்திரமே மேற்கொள்வதாகக் கூறியுள்ளார்.

வன்னியில் முன்பு சிவில் நிர்வாகத்தை மேற்கொள்கின்றபோது புலிகள் இடையூறு விளைவித்ததாகக் குறிப்பிட்ட அரச அதிபர் திருமதி இமெல்டா புலிகளின் அனுமதிபெற்றே எதனையும் செயற்படுத்த வேண்டுமென வலியுறுத்துவார்கள் என்றும் அவ்வாறு இல்லாவிட்டால், புலி உறுப்பினர்கள் வந்து வீண் தலையீடுகளைச் செய்வார்களென்றும் தெரிவித்துள்ளார்.

30 வருடகாலமாக அரச நிர்வாகத்தைப் புலிகள் சீர்குலைத்தார்களென்றும் தனது நிர்வாக செயற்பாட்டுக்கு நெருக்குவாரங்களை ஏற்படுத்தினார்களென்றும் கூறிய அவர், புலிகள் என்னை அச்சுறுத்தவில்லை. ஏனெனில் அரசாங்கம் வழங்கிய உணவுப் பொருள்களிலேயே அவர்கள் தங்கியிருந்தார்கள். அதேநேரம், மக்கள் என்னோடு இருந்தார்கள். அதனால் புலிகள் என்னை அச்சுறுத்தவில்லை என்று குறிப்பிட்டார். இதேவேளை, யோகபுரம் தமிழ் மகா வித்தியாலயம் நாளைய தினம் மீண்டும் திறக்கப்படுவதாக அரச அதிபர் கூறினார். மல்லாவி மத்திய கல்லூரியை மீளத் திறக்கவும் நடவடிக்கை எடுக்கப்பட்டுள்ளதாக அவர் கூறியுள்ளார்

முல்லைத்தீவு கிளிநொச்சி மாவட்டங்களில் 19 உதவி அரசாங்க அதிபர் பிரிவுகளில் மக்கள் மீளக்குடியமர்த்தப் பட்டுள்ளனர். நிவாரணக் கிராமங்களிலிருந்து 90% மக்கள் வெளியேறி சொந்த வாழ்விடம் திரும்பியுள்ளனர். அதேபோல் 60% சொந்த இடங்களில் குடியேறியுள்ளதுடன் உறவினர், நண்பர்களின் வீடுகளில் உள்ள மேலும் 40% மக்கள் மீளக் குடியமர உள்ளனர் என்றும் அரச அதிபர் தெரிவித்துள்ளார்

மக்கள் மீள்குடியேறிய பகுதிகளில் சுகாதாரத்துறை, கிராம சேவை அலுவலகம், பிரதேச செயலகம், கல்வித்துறை அலுவலகங்கள் தமது பணிகளை ஆரம்பித்துள்ளன. மக்களின் அன்றாடத் தேவைகளை இலகுவில் நிறைவேற்றிக் கொள்ளும்பொரு ட்டு உள்ளகப் போக்குவரத்துச் சேவைகளை நடத்தவும் நடவடிக்கை எடுத்திருப்பதாகவும் அரச அதிபர் கூறியுள்ளார்

இது தொடர்பான விபரங்களை ஜனாதிபதி செயலகத்துக்குப் பெற்றுக்கொடுப்பதாகவும் அவர் குறிப்பிட்டார். பஸ் சேவைகளை மேற்கொள்வது பற்றி யாழ்ப்பாணம் சாலைக்கு அறிவித்துள்ளதாகவும் அவர் கூறினார். பஸ் சேவைக்கான பாதுகாப்பு அனுமதியைப் பெற்றுக்கொடுக்க வட மாகாண ஆளுநர் ஜீ. ஏ. சந்திரசிறி நடவடிக்கை எடுத்துள்ளமை குறிப்பிடத்தக்கது.

துணுக்காய், மாந்தை கிழக்கு கிளிநொச்சி மாவட்டத்தின் ஒட்டுசுட்டான் பிரதேச செயலர் பிரிவுக்குட்பட்ட ஏ-9 வீதியின் மேற்குப் பகுதி, ஜயபுரம், பூநகரி, முழங்காவில், நாச்சிக்குடா உள்ளிட்ட பகுதிகளில் கடந்த மாதம் 22ஆம் திகதி மீள் குடியேற்றம் ஆரம்பமாகின.