27

27

போராளிகளைத் துரோகிகளாக்கி சுயஇருப்புக்கான பணச்சடங்காக்கிய தினம் : த ஜெயபாலன்

London_Maaveerarnaalதமிழீழ விடுதலைப் புலிகளின் தலைமையை ஏற்றுள்ள தளபதி ராமின் மாவீரர் தின உரை (தளபதி ராமின் மாவீரர் நாள் (2009 கார்த்திகை 27) உரை)புலம்பெயர் புலி ஆதரவாளர்களாலும் அவர்கள் சார்ந்த ஊடகங்களாலும் இருட்டடிப்புச் செய்யப்பட்டுள்ளது. தளபதி ராமின் மாவீரர் தின உரை என்று கூறி சில ஊடகங்களில் பிரசுரிக்கப்பட்ட உரை தளபதி ராமினது உரையல்ல. அவ்வுரை தமிழீழ விடுதலைப் புலிகளின் சர்வதேசப் பிரிவால் அவர்கள் சார்ந்த ஊடகங்களால் மாற்றத்திற்கு உள்ளாக்கப்பட்டு இருந்தது. அவ்வுரை தவறுதலாக தேசம்நெற் இலும் சில நிமிடங்கள் பிரசுரமாகி இருந்தது. அத்தவறிற்காக வருந்துகிறோம். தற்போது தளபதி ராமின் முழுமையான உரையை இங்கு பிரசுரிக்கின்றோம்.

வே பிரபாகரனது மாவீரர் தின உரையும் தளபதி ராமினால் வழங்கப்பட்ட மாவீரர் தின உரையும் ஒரே நபரினால் தயாரிக்கப்பட்டு உள்ளதைப் போன்ற தோற்றத்தையே வழங்குகின்றது. அல்லாவிட்டால் பிரபாகரனின் மாவீரர் தின உரைகளை ஆராய்ந்து அதே பாணியிலேயே இந்த மாவீரர் தின உரையும் தயாரிக்கப்பட்டு உள்ளது. ஆனால் வே பிரபாகரனது மாவீரர் தின உரைக்கு மாறாக இந்த மாவீரர் தின உரை யதார்தத்தை வெளிப்படுத்தும் வகையில் உள்ளது.

தளபதி ராமின் மாவீரர் தின உரையின் முக்கியமான அம்சங்கள்:

1. கடந்தமுப்பது ஆண்டுகளாக எமது மக்களின் தேசிய விடுதலைப் போராட்டத்தை தலைமையேற்று வழிநடத்தி வந்த எமது அன்பிற்கும், மதிப்பிற்கும்,கௌரவத்திற்குமுரிய மேதகு தேசியத்தலைவர் வேலுப்பிள்ளை பிரபாகரன் அவர்களையும் இந்த விடுதலைக்காக மடிந்த மாவீரர்களின் வரிசையில் இணைத்து நினைவுகூரும் ஒரு தேசிய எழிச்சி நாளாகவும் இன்நாளை நான் பிரகடனப்படுத்துகின்றேன்.

2. எமது தலைவர் எமது மக்களினுடைய இலட்சியத்தை எந்த சந்தர்ப்பத்திலும், எந்தச் சூழ்நிலையிலும். விட்டுக்கொடுக்காமல் தன்நம்பிக்கையோடு களத்தில் நின்றார். இதன் விளைவு ஒரு பாரதூரமான பின்னடைவை ஏற்ப்படுத்தியுள்ளது என்பது மறுக்கமுடியாத உண்மையாகும். இந்த விளைவின் தாக்கங்கள் முற்கம்பி வேலிகளுக்குள்… பல ஆயிரக்கனக்கான மக்கள் உயிர்களை இழந்து…. பல நூற்றுக்கணக்கானோர் தங்களின் உடல் உறுப்புக்களை இழந்து…… இதனை விட தாயை இழந்த குழந்தையும், குழந்தையை இழந்த தாயும்.. கனவனை இழந்த மனைவியுமாக….

3. இந்த சமூகத்தின் அரசியல் அபிலாசைகளை பெற்றுத்தருவதர்க்கு சர்வதேச நாடுகள் முன்வரவேண்டும். இதறக்காக நாம் எந்த விட்டுக்கொடுப்புக்களையும் செய்வதற்கு தயாராக உள்ளோம். அத்துடன் ஆயுத வன்முறைகளையும் முற்றாக கைவிட தயாராக உள்ளோம்.

4. எமது விடுதலை இயக்கமும், மக்களும் புதுமாத்தளன், வெள்ளான் முள்ளிவாய்க்கால் பகுதிக்குள் இராணுவ முற்றுகைக்குள் உள்ளாக்கப்பட்ட வேளையில் முப்பது வருடகால போராட்டத்தை இந்த மாபெரும் முற்றுகைக்குள் இருந்து மீள்வதற்காக தேசியத் தலைவர் அவர்கள் தீர்க்கமான முடிவை எடுத்திருந்தார். அந்த முடிவானது மூன்றாம் தரப்பினூடாக ஆயுதங்களை ஓப்படைத்துவிட்டு உலகமயமாக்கல் புதிய கொள்கைக்கு அமைவாக  ஜனநாயக வழியில் எமது விடுதலைப் பயணத்தை தொடர முடிவெடுத்ததுடன் இச்செய்தியை சர்வதேசத்திற்கும் தெரிவித்து இருந்தார். சர்வதேசம் இச்செய்தியை பரிசீலித்து முடிவுக்கு வருவதற்கு முன்னரே களநிலமைகள் மிகவும் மோசமான நிலையை அடைந்துவிட்டது.

5. வெள்ளான் முள்ளிவாய்க்கால் பகுதியில் 400 சதுர மீற்றர் பகுதிக்குள் எமது தலைமை முடக்கப்பட்டது. இந்த முற்றுகைக்குள் இருந்து தேசியத் தலைவர் அவர்கள் 17-05-2009 அன்று பிற்பகல் இறுதியாக எனக்கு ஒரு செய்தியை கூறினார். இச்சூழலில் இருந்து நாம் மீளமுடியாத நிலையில் உள்ளதனால் இறுதிக்கணம் வரை போராடி எம்மை அழித்துக் கொள்ள முடிவெடுத்துள்ளேன். எனவே இந்த முப்பது வருடகால போராட்டத்தின் தொடர்ச்சியையும், எமது மாவீரர் விட்டுச்சென்ற பணியையும் தொடர்ந்து முன்எடுத்துச் செல்லுமாறு எனக்குப் பணித்தார். இத்தொடர்ச்சியை எவ்வாறு கொண்டு செல்ல வேண்டும் என்ற திட்டத்தையும் என்னிடம் கூறியிருந்தார். அதற்கு அமைவாகவே நான் தற்போது எனது பணியை தாயகத்தில் இருந்து தொடர்கின்றேன்.

இவ்விடயங்களே தளபதி ராமின் உரையில் இருந்த முக்கிய அம்சங்கள். இதில் தமிழீழ விடுதலைப் புலிகள் பற்றிய பல்வேறு விமர்சனங்களுக்கும் அதில் பதில் இல்லாவிட்டாலும் தற்போதைய நிலையில் மக்களுக்குத் தெரியப்படுத்த வேண்டிய அவசரமான அவசியமான செய்திகளை தளபதி ராமின் மாவீரர் தின உரை கொண்டிருந்தது.

London_Maaveerarnaalஆனால் தளபதி ராமின் உரையில் இருந்த முக்கிய விடயங்கள் புலம்பெயர்ந்த நாடுகளில் வாழும் தமிழர்களிடம் இருந்து பொருளாதார நன்மைகளைப் பெற்று வந்த தமிழீழ விடுதலைப் புலிகளின் சர்வதேசத் தலைமைக்கு பெரும் எரிச்சலாக அமையும் என்பதில் எவ்வித ஆச்சரியமும் இல்லை. குறிப்பாக ‘தமிழீழ விடுதலைப் புலிகளின் தலைவர் வே பிரபாகரன் வீரமரணம் அடைந்துவிட்டார்’, ‘தலைவர் லட்சியத்தில் உறுதியாக நின்றது பாரிய பின்னடைவை ஏற்படுத்தி விட்டது’, ‘ஆயுத வன்முறையை முற்றாகக் கைவிடத் தயாராக உள்ளோம்’, ‘முற்றுகைக்குள் இருந்து மீள தேசியத் தலைவர் ஆயுதங்களை மூன்றாம் தரப்பினூடாக ஒப்படைக்க முடிவெடுத்தார்’, ‘எமது மாவீரர் விட்டுச்சென்ற பணியையும் தொடர்ந்து முன்எடுத்துச் செல்லுமாறு எனக்குப் பணித்தார்’ போன்ற விடயங்கள் தமிழீழ விடுதலைப் புலிகளின் சர்வதேசத் தலைமையின் நிதி வசூலுக்கு எவ்விதத்திலும் உதவப் போவதில்லை. இதுவரை தாயகத்தில் உள்ள போராளிகளை வீரசாகசங்களுக்கு உள்ளாக்கி வசூல் ராஜக்கள் ஆன இத்தலைமைகள் தற்போது அங்குள்ள போராளிகளது கோரிக்கைகளுக்கு செவிசாய்க்க மறுப்பதுடன் அவர்களுக்கு துரோகிப்பட்டமும் சூட்டி உள்ளன.

தளபதி ராமின் தலைமையை ஏற்காத புலம்பெயர்ந்து வாழும் கஸ்ரோ அணியைச் சேர்ந்த தமிழீழ விடுதலைப் புலிகளின் சர்வதேசத் தலைமை ராம் இலங்கை இராணுவத்துடன் இணைந்து பணியாற்றுவதாக செய்திகைளக் கசிய விட்டனர்.

தளபதி ராமுடன் இணைந்து பணியாற்ற விரும்பிய கேணல் கிட்டுவின் நெருங்கிய சகாவான ‘ஜக்’ என்பவரை துரோகி எனக் குற்றம்சாட்டி எக்சல் மண்டபத்திலிருந்து வெளியேற்றி உள்ளனர். ‘கமல்’ ‘தனம்’ என்றழைக்கப்படும் நபர்கள் மண்டப காவலாளிகள் பலரை வரவழைத்து ‘ஜக்’ என்ற முன்னால் போராளியை வெளியேற்றினர். இச்சம்பவம் மாவீர்ர தினத்திற்கு முதல்நாள் நவம்பர் 26ல் ஏற்பாட்டு ஒழுங்குகளின் போது இடம்பெற்றது.

இவ்வாண்டு தமிழீழ விடுதலைப் புலிகள் பெரும்பாலும் அழிக்கப்பட்டுள்ள நிலையில் அதன் தலைவர் வே பிரபாகரன் சரணடைந்த நிலையில் கொல்லப்பட்டார் என்ற செய்திகள் உறுதிப்படுத்தப்பட்டிருந்த போதும் அதனை ஏற்றுக்கொள்ளாத நிலையிலேயே தமிழீழ விடுதலைப் புலிகளும் அதன் புலன்பெயர்ந்த ஆதரவுத்தளமும் உள்ளது. நம்பர் 27ல் தலைவர் உரையாற்றுவார் பொட்டம்மான் உரையாற்றுவார் போன்ற கதைகளை தமிழீழ விடுதலைப் புலிகளின் சர்வதேசப் பிரிவு திட்மிட்டுப் பரப்பி வந்தது. அதனால் இவ்வாண்டு மாவீரர் தினத்தில் பங்கேற்க தலைவரின் அல்லது பொட்டம்மானின் உரையைக் கேட்க பல்லாயிரக் கணக்கான தமிழர்கள் எக்சல் மண்டபத்தில் கூடி ஏமாற்றத்தைச் சந்தித்தனர்.

இதற்கிடையே மண்டபத்தில் இலங்கையில் இருந்து தனது மாவீரர் தின உரையை வழங்கிய தளபதி ராமின் உரையை ஒலிபரப்பும்படி சில கோரிக்கைகள் ஏற்பாட்டாளர்களுக்கு விடுக்கப்பட்டது. ஆனால் இலங்கையில் உள்ள தளபதிகளின் உரையை ஒலிபரப்புவது பயங்கரவாதமாகக் கருதப்படும் என்பதால் அவ்வுரையை ஒலிபரப்ப முடியாது என ஏற்பாட்டாளர்களில் ஒருவரான ‘தனம்’ கோரிக்கை விட்டவர்களுக்குத் தெரிவித்ததாக எக்சல் மண்டபத்தில் இருந்து தேசம்நெற்க்கு தொலைபேசியில் தெரிவித்தனர்.

தாயகத்தில் பல்லாயிரக் கணக்கான போராளிகளும் போராளிக் குடும்பங்களும் தங்கள் அன்புக்குரியவர்களையும் அங்கங்களையும் இழந்து தங்கள் அடிப்படைப் பொருளாதார வருவாய்களையும் இழந்து அல்லல் உறுகையில் அவர்களுக்கு உதவ தமிழீழ விடுதலைப் புலிகளின் சர்வதேசத் தலைமையும் அதன் ஆதரவு சக்திகளும் முன்வரவில்லை. அவர்களின் பொறுப்பில் இருந்த 300 மில்லியன் ஆண்டு வருமானத்தைப் பெற்றுக்கொடுக்கும் ஒன்று தொடக்கம் ஐந்து பில்லியன் டொலர் அசையும் அசையாச் சொத்துக்களுக்கும் என்ன நடந்தது என்பதும் மர்மமாகவே உள்ளது. ஆனால் உயிருடன் உள்ள போராளிகளை, போராளிக் குடும்பங்களை விதியின் கையில் விளையாட விட்டுவிட்டு உயிர்நீத்த போராளிகளுக்கு விழா எடுத்து தங்கள் பாவத்தை கழுவ நாடகமாடுகிறது தமிழீழ விடுதலைப் புலிகளின் சர்வதேசத் தலைமையும் அதன் ஆதரவு சக்திகளும்.

‘அண்ணை இருக்கும் மட்டும் விழுந்து விழுந்த செய்தாங்கள். இப்ப ஏன் நாயே என்றும் கேக்கிறான்கள் இல்லை. அப்பாவை இழந்த குடும்பத்தைப் போல் ஆகிவிட்டது எங்களுடைய நிலைமை’ என மனவருத்தத்துடன் தேசம்நெற்றுக்குத் தெரிவித்தார் தாயகத்தில் உள்ள போராளி ஒருவர். இவ்வாறான சோகமான பல சொந்தக் கதைகள் பல முன்னாள் போராளிகளிடம் உள்ளது. புலம்பெயர்ந்த முன்னாள் போராளிகள் அப்போராளிகளுக்கும் பாதிக்கப்பட்ட போராளிக்கு குடும்பங்களுக்கும் உதவ முன்வருவார்களா?

இன்று நவம்பர் 27ல் லண்டன் எக்சல் மண்டபத்தில் மிகப்பெரும் செலவில் மாவீரர் தின நிகழ்வுகள் ஏற்பாடு செய்யப்பட்டுள்ளது. ஒரு மணித்தியாலத்திற்கு 4300 பவுண்கள் கட்டணம் செலுத்த வேண்டிய மண்டபத்தை 36 மணி நேரங்களுக்கு வாடகைக்குப் பெற்று இந்த நிகழ்வை ஏற்பாடு செய்துள்ளனர். மண்டபத்தை விட ஒலி, ஒளி, பாதுகாப்பாளர்கள் என அதற்கெனத் தனியான கட்டணங்கள். இவை மட்டுமே 200 000 பவுண்களைத் தொட்டுவிடும். இதற்கு அப்பால் இன்னும் எத்தினை செலவுகள். எத்தனை நாடுகளில் இவ்வளவு நிதிச் செலவில் மாவீரர் தினம் கொண்டாடப்பட்டு இருக்கும். இவர்கள் ஒருநாள் மாவீரர் தினத்திற்கு செலவிடும் இத்தொகை இறுதியாக நடத்த யுத்தத்தில் உயிரிழந்தவர்களின் ஒவ்வொரு குடும்பத்திற்கும் (போராளிகள் பொது மக்கள் உட்பட 20 000 பேர்) வழங்கப்பட்டு இருந்தால் பாதிக்கப்பட்ட ஒவ்வொரு குடும்பத்திற்கும் 50 000 ரூபா முதல் ஒரு இலட்சம் ரூபாவரை வழங்கியிருக்க முடியும். இது உயிரிழந்த அன்புக்குரியவர்கைள அவர்களுக்கு மீட்டுக் கொடுக்காவிட்டாலும் அவர்களது எதிர்காலத்திற்கு ஒரு காத்திரமான பங்களிப்பைச் செய்திருக்கும். அதனையே உயிரிழந்த ஒவ்வொரு போராளியும் விரும்பி இருப்பான்.

மாவீரர்கள் மதிக்கப்பட வேண்டியவர்கள். நினைவு கூரப்பட வேண்டியவர்கள். அதற்கு இவ்வளவு நிதிச் செலவில் விழா எடுக்க வேண்டியது தேவையல்ல. மாவீரர்களை நினைவு கூரும் ஒவ்வொருவரும் ஒரு மாவீரர்களது படத்தைத் தாங்கி மெழுகு வர்த்தியுடன் அமைதியாக அவரவர் வாழும் தலைநகர் வீதிகளுக்கு வந்து சில மணிநேரம் தங்கள் மெழுகுதிரிக்கு ஒளியேற்றி இருந்தால் அச்செய்தி சர்வதேசத்திற்கே சென்றிருக்கும்.

ஆனால் மூடிய மண்டபத்திற்குள் பணத்தை வாரி இறைத்துச் செய்யும் சம்பிரதாயச் சடங்குகள் மூலம் பணம் மட்டுமே பண்ண முடியும். அதனையே தமிழீழ விடுதலைப் புலிகளின் சர்வதேசத் தலைமைகள் செய்கின்றன. அவர்களது நோக்கத்திற்குத் தடையாக இருக்கும் எதனையும் அவர்கள் ஏற்றுக்கொள்ளப் போவதில்லை. இவர்கள் தாயக மக்களது பெயரில் தங்களை வளர்த்துக்கொள்ளத் தயங்கப் போவதுமில்லை.

._._._._._.

தமிழீழ விடுதலைப் புலிகளின் தாயகத்தில் இருந்து இயங்கும் தலைமைச் செயலகம் வெளியிட்டுள்ள மாவீரர் தின உரை: தளபதி ராமின் மாவீரர் நாள் (2009 கார்த்திகை 27) உரை

தளபதி ராமின் மாவீரர் நாள் (2009 கார்த்திகை 27) உரை

LTTE LOGOதமிழீழ விடுதலைப் புலிகள்
தமிழீழம்
27. 11. 2009

எனது அன்பிற்கும் மதிப்பிற்கும் உரிய தமிழீழ மக்களே !

இன்று 2009 ஆம் ஆண்டு கார்த்திகை 27 ஆம் நாள். இந்த மண்ணின் விடிவிற்காகவும், சுதந்திர வாழ்விற்காகவும் இரும்பையொத்த இலட்சிய உறுதியோடு களத்தில் நின்று போராடி மடிந்த புனிதர்களை நெஞ்சினில் நிறுத்தி நினைவுகூரும் நன்நாளாகும்.

கடந்த முப்பது ஆண்டுகளாக எமது மக்களின் தேசிய விடுதலைப் போராட்டத்தை தலைமையேற்று வழிநடத்தி வந்த எமது அன்பிற்கும், மதிப்பிற்கும், கௌரவத்திற்குமுரிய மேதகு தேசியத்தலைவர் வேலுப்பிள்ளை- பிரபாகரன் அவர்களையும் இந்த விடுதலைக்காக மடிந்த மாவீரர்களின் வரிசையில் இணைத்து நினைவுகூரும் ஒரு தேசிய எழிச்சி நாளாகவும் இந்நாளை நான் பிரகடனப்படுத்துகின்றேன்.

எமது இந்த விடுதலைப் போராட்டத்தை வழிநடத்தி வழிகாட்டியாக இருந்த எமது தலைவரினுடைய எண்ணங்களுக்கு செயல்வடிவம் கொடுப்பேன் என இந்நாளில் எமது மக்களுக்கு உறுதியாக கூறுகின்றோம். இதுவரை எமது விடுதலைப் போராட்டத்தில் முப்பத்தியிரண்டாயிரத்திற்கும் அதிகமான மாவீரர்கள் தங்களின் இன்னுயிர்களை எமது தேசத்தின் உயர்ந்த இலட்சியத்திற்காக அர்ப்பணித்துள்ளதுடன் இப்போரட்ட காலத்தில் இவர்களுடன் தோளோடு தோள்நின்ற நாட்டுப்பற்றாளர்கள், ஆதரவாளர்கள், அப்பாவிபொதுமக்கள் ஆகியோரையும் இந்நாளில் நினைவுகூருகின்றேன்.

இந்த மாவீரர்களை ஈன்றெடுத்த பெற்றோர்களே!

உங்களின் குழந்தைகள் சாகவில்லை, அவர்கள் ஓர் உன்னத இலட்சியத்திற்காக தங்களின் இன்னுயிர்களை உகந்தளித்து அவர்கள் என்றென்றும் எங்களின் உள்ளங்களில் உயிர் வாழ்கின்றார்கள். இந்த உயர்ந்த இலட்சியத்திற்காக நீங்கள் உங்களின் குழந்தைகளை உகந்தளித்தீர்கள் இதற்காக உங்களை நாம் பெருமைக்குரியவர்களாக கௌரவிக்கின்றேன். இந்த விடுதலை வீரர்கள் எமது விடுதலைப் போராட்ட வரலாற்றிலே தரையிலும் கடலிலும், வானிலும் எதிரியை நிலைகுலையவைத்து பற்பல சாதனைகளைப் படைத்தார்கள். என்றென்றும் இவர்களே எமது வழிகாட்டிகளாக உள்ளனர்.

ஒவ்வொரு வீரனதும் சாவு ஒவ்வொரு சரித்திரம் படைத்து நிற்கிறது. எந்த இலட்சியத்திற்காக இந்த வீரர்கள் தங்களின் இன்னுயிர்களை ஆகுதியாக்கிக் கொண்டார்களோ அந்த இலட்சியம் நிறைவேறும்வரை அவர்கள் விட்டுச்சென்ற பாதையில் தொடர்ந்து பயணிப்போம் என இவர்களின் கல்லறைகள் மீது உறுதியெடுத்துக் கொள்வோமாக.

அன்பிற்கினிய மக்களே!

இலங்கைத்தீவு பிரிட்டிஸ் காலனித்துவ ஆதிக்கத்தில் இருந்து 1948 ஆம் ஆண்டு விடுதலை பெற்ற பின்னர் இலங்கைத்தீவின் பெருன்பான்மை இனம். சிறுபான்மை இனமான எமது தமிழ்த் தேசிய இனத்தை அடக்கி ஆளும் கொள்கையை கடைப்பிடித்து வந்தது. இந்த கொள்கையை எதிர்த்து எமது முன்னைய தழிழ்த்தலைவர்கள் பல அகிம்சை போராட்டங்களை நடாத்தினார்கள். இந்த அகிம்சை போராட்டங்கள் அனைத்தையும் ஆயுத வன்முறை கலாச்சாரத்தின் மூலமாக அடக்குவதையே சிங்கள பேரினவாத அரசு தனது கொள்கையாக கடைப்பிடித்து வந்தது. அதேவேளையில் தமிழர்கள் எழிச்சிகொள்ளும் போது ஒப்பந்தங்கள் செய்வதும், எழிச்சிகள் தனிந்தபின் ஒப்பந்தங்களை கிழித்து எறிவதும் தழிழர்களின் வரலாற்றில் ஒரு நிகழ்வாக மாறியது.

இந்த நிகழ்வுகளினால் பல்லாயிரக்கணக்கான உயிர்களையும் இழக்க நேரிட்டது. அத்துடன் பல பெறுமதி மிக்க சொத்துக்களையும் இழக்கநேரிட்டது. அத்தோடு நின்றுவிடாது தமிழர்களின் பாரம்பரிய வாழ்விடங்களையே இழந்து அரசியல் அனாதைகள் ஆக்கப்பட்டனர். இந்த துன்பியல் நிகழ்வுகளின் பின்பே எமது இனம் தங்களின் உயிர் வாழ்விற்காக ஓரு புரட்சிகர ஆயுதப் போராட்டபாதையை தெரிவு செய்தனர். இந்தகால கட்டத்தில் தான் எமது ஆயுதப்போராட்டம் வடிவம் பெற்றது.ஓரு கைத்துப்பாக்கியோடு ஆரம்பிக்கப்பட்ட எமது விடுதலைப்போராட்டம் முப்படைகளையும் கொண்டு பரினாமவளர்ச்சி கண்டு நின்றது.

இந்த காலகட்டத்தில் எமக்கென ஒரு நிலப்பரப்பும் எமது பூரண கட்டுப்பாட்டில் இருந்ததோடு மட்டுமின்றி ஒரு தனியரசிற்கு இருக்கவேண்டிய அனைத்து கட்டுமானங்களும் உருவாக்கப்பட்டிருந்தது என்பது உலகம் அறிந்த உன்மையாகும். இந்த காலகட்டத்திற்குள் நடந்து முடிந்தவற்றை நான் மீண்டும் விபரிக்க வேண்டியதேவை இல்லையென்று நினைக்கின்றேன்.

இரண்டு தசாப்த காலமாக எமது விடுதலைப் போராட்டம் உலகமயமாக்கல் கொள்கைகளுக்கு அமைவாகவே செயல்பட்டு வந்தது அந்த வரலாற்றுக் காலங்களில் உலகில் உள்ளபல நாடுகளில் அடக்குமுறைக்கு உள்ளாக்கப்பட்ட சிறுபான்மை இனங்கள் நடத்திய புரட்சிகர ஆயுதப்போராட்டங்களை உலகநாடுகள் ஏற்றுக்கொண்டன இதன்விளைவாக பல சிறுபான்மை இனங்கள் விடுதலைபெற்றன. ஆனால் மூன்றாவது தசாப்தகாலத்தினுள் எமது விடுதலை இயக்கம் காலடிஎடுத்து வைத்த வேளையில் உலகநாடுகளினுடைய கொள்கைகளும் மாற்றம் பெற்றன இதன் விளைவாக உலகில் விடுதலைக்காக போராடிய பல விடுதலை இயக்கங்கள் பயங்கரவாத இயக்கமென சித்தரிக்கப்பட்டனர். இந்த வரலாற்று சூழலிலே எமது விடுதலைப் போராட்டமும் சிக்கிக்கொண்டது.

ஒரு இனத்தின் விடுதலைக்காக போராடிய எமது இயக்கமும் விதிவிலக்கல்ல என்றரீதியில் எமது இயக்கத்திற்கும் பயங்கரவாதம் எனும் முத்திரை குத்தப்பட்டது. இருந்தபோதும் எமது தேசியத்தலைவர் அவர்கள் எங்களினுடைய விடுதலைப் போரட்டத்தின் உன்மைத்தன்மையை உலகிற்கு பலவடிவங்களிலும், பல கோணங்களிலுமாக எடுத்துரைத்தார். தன்னாதிக்கம் பிடித்தஉலகம் எங்களின் உண்மைநிலையை விளங்கிக் கொள்ளவில்லை. இதன் விளைவே எமது விடுதலை இயக்கமும் பயங்கரவாத பட்டியலில் இணைக்கப்பட்டது. இந்த பூதாகரமான சவாலை எதிர்கொள்ள எமது தேசியத்தலைவரும் தயாரானார். எமது தலைவர் எமது மக்களினுடைய இலட்சியத்தை எந்த சந்தர்ப்பத்திலும், எந்தச் சூழ்நிலையிலும். விட்டுக்கொடுக்காமல் தன்நம்பிக்கையோடு களத்தில் நின்றார். இதன் விளைவு ஒரு பாரதூரமான பின்னடைவை ஏற்ப்படுத்தியுள்ளது என்பது மறுக்கமுடியாத உண்மையாகும்.

இந்த விளைவின் தாக்கங்கள் இன்று பல்லாயிரக்கணக்கான மக்கள் அதி தொழிநுட்ப வளர்ச்சி பல்கி பெருகியுள்ள இந்த உலகில் முற்கம்பி வேலிகளுக்குள் மனித வாழ்க்கையில் அடிப்படை தேவைகளையே பூர்த்தி செய்ய முடியாத நிலையில் வாழ்கின்றனர். அத்தோடு பல ஆயிரக்கனக்கான மக்கள் உயிர்களை இழந்துள்ளனர். பல நூற்றுக்கணக்கானோர் தங்களின் உடல் உறுப்புக்களை இழந்து அங்கவீனர்களாக்கப் பட்டுள்ளனர். இதனை விட தாயை இழந்த குழந்தையும், குழந்தையை இழந்த தாயும், கனவனை இழந்த மனைவியுமாக பலர் அனாதைகள் ஆக்கப்பட்டுள்ளனர். பல நூற்றுக்கணக்கானோருக்கு என்ன நடந்தது என்று தெரியாத புதிராகஉ ள்ளது. இதனைவிட எமது மக்கள் பொருளாதார ரீதியாக சகல உடைமைகளையும் இழந்து உடுத்த உடைமையுடன் மட்டுமே உள்ளாக்கப்பட்டனர் இவைதான் இன்றைய நிலையாகும்.

இன்றைய உலக ஒழுங்கு விதிகளுக்கு அமைவாக நாம் ஓர் தேசிய இனம் என்றரீதியில் ஒரு உருக்கமான வேண்டுகோளை முன் வைக்கின்றோம். உலகில் அடக்கு முறைகளுக்கு உள்ளாகும் சிறுபான்மை இனங்கள் எல்லாம் ஜனநாயக ரீதியாக தங்களின் உரிமைகளை பெற்றுக்கொள்ள வேண்டும் என்பதே இன்றய உலக ஒழுங்காகும். எனவே உலகிலேயே அடக்குமுறையால் மிகவும் மோசமாக பாதிக்கப்பட்ட இனம் என்றால் அது இலங்கைத்தீவில் உள்ள தமிழ் பேசும் சமூகமாகும்.

இந்த சமூகத்தின் அரசியல் அபிலாசைகளை பெற்றுத்தருவதர்க்கு சர்வதேச நாடுகள் முன்வரவேண்டும். இதற்காக நாம் எந்த விட்டுக் கொடுப்புக்களையும் செய்வதற்கு தயாராக உள்ளோம். அத்துடன் ஆயுத வன்முறைகளையும் முற்றாக கைவிட தயாராக உள்ளோம். இந்த யதார்த்த நிலையை உலகில் ஜனநாயகம் நிலைக்க வேண்டும் என நினைக்கும் நாடுகள் எல்லாம் காலம் தாழ்த்தாது எமது இந்த விடையத்தில் கவனம் செலுத்தி பல தசாப்தகாலமாக இலங்கைத் தீவில் நிலவிவரும் மனித அவலத்திற்கு முற்றுப்புள்ளி வைப்பதற்கு முன்வருமாறு மிகவும் அன்புரிமையுடன் வேண்டி நிற்கின்றேன்.

புதிய உலக ஒழுங்குகளுக்கு அமைய இலங்கைத்தீவில் ஆயுதப்போராட்டம் அழிக்கப்படுவதை விரும்பிய உலக நாடுகள் எல்லாம் இலங்கை அரசிற்கு துணைபுரிந்தமையால் இலங்கை அரசு அதில் வெற்றிபெற்றது. இதே உலகத்திடம் நாம் எதிர்பார்ப்பது எமது மக்களினுடைய அரசியல் அபிலாசைகளை பூர்த்தி செய்யக்கூடிய உரிமையை பெற்றுத் தருவதற்கும், இந்த ஆயுதப்போராட்டம் அழிக்கப்பட வேண்டும் என கங்கனம் கட்டிநின்று ஒத்துழைப்பு வழங்கிய எல்லா நாடுகளும் அதே வேகத்தோடு எமது மக்களின் ஜனநாயக உரிமைகளை பெற்றுத்தருவதற்கும் விரைந்து செயலாற்றுமாறு வேண்டி நிற்கின்றேன்.

இலங்கைத்தீவில் சிறுபான்மை இனத்தை பிரதிநிதுத்துவப்படுத்தும் அரசியல் கட்சிகளுக்கு இதனோடு இணைத்த ஒரு செய்தியை கூறுகின்றேன். மேற்கூறப்பட்ட விடயங்களை கவனத்தில் கொண்டு அதிகாரப் போட்டிகளை கைவிட்டு எமது இனத்தின் விடிவிற்காக விவேகமாகவும், விரைவாகவும் ,துணிச்சலோடும் பணியாற்ற வேண்டிய வரலாற்றுக் கடமை உங்களுக்கு உள்ளதென்பதனை தெரிவித்துக் கொள்ள விரும்புகின்றேன். இன்றைய வரலாற்றுக் காலகட்டத்தில் சிறிலங்கா அரசாங்கமும் யதார்த்தத்தை புரிந்துகொண்டு எமது தாயகத்தில் எமது மக்களின் கௌரவமான, சுதந்திரமான, பாதுகாப்பான வாழ்விற்கு ஒரு உறுதியான நிரந்தரத்தீர்வை முன்வைக்கவேண்டும் எனக் கேட்டுக் கொள்கின்றேன்.

அன்பிற்கினிய புலம்பெயர் வாழ் தழிழ்பேசும் மக்களே!

எமது விடுதலைப் போராட்ட வரலாற்றிலே புலம்பெயர் வாழ் மக்களினுடைய தார்மீக ஆதரவு எமது விடுதலைப் போராட்ட வளர்ச்சிக்கு பேருதவியாக அமைந்தது இன்று வித்தியாசமான சூழலுக்கு எமது இயக்கமும், எமது மக்களும் தள்ளப்பட்டுள்ளனர். உதாரணமாக தந்தையை இழந்த குடும்பம் போன்று எம்மை வழிநடத்தி, வழிகாட்டிய தேசியத் தலைவரை இழந்து நிற்கின்றோம். இந்த நெருக்கடியான சூழ்நிலையில் தலைவர் அவர்களினுடைய கனவை நினைவாக்குவதற்க்கு நம்பிக்கையோடும் உறுதியோடும் எமது தாய்மண்ணிலே நானும் எஞ்சியுள்ள ஏனைய தளபதிகளும், வீரம்மிக்க போராளிகளும் கால் பதித்து நிற்கின்றோம். உலகவரலாற்றில் இலட்சியவாதிகள் அழியலாம் அவர்களினால் உருவாக்கப்பட்ட இலட்சியங்கள் அழிந்ததாக வரலாற்றில் இல்லை. எனவை உங்கள் கடமைகளை நம்பிக்கையோடு தொடர்ந்தும் செய்யுங்கள் நாம் மீண்டெழுவோம் வெற்றி பெறுவோம். இது உறுதி.

கடந்த காலங்ளில் பல்வேறு வழிகளிலும் நிதிஉதவி வழங்கிய அன்புள்ளங்களுக்கும், தார்மீக உதவிகள் வழங்கிய அன்புள்ளங்களுக்கும், தொடர்ந்தும் அந்த உதவியை வழங்குமாறு கூறிக்கொள்ளும் அதேவேளையில் எனது சார்பிலும், எனது தளபதிகள் சார்பிலும், போராளிகள் சார்பிலும் மனமார்ந்த நன்றியை தெரிவித்துக் கொள்கின்றேன். இன்றைய சூழ்நிலையில் உலகில் எந்தநாட்டிலும் இல்லாதவாறு எமது மக்கள் பொறுளாதார ரீதியாக மிகவும் மோசமாக பாதிக்கப்பட்டு செய்வது அறியாமல் தங்களின் எதிர்காலத்தை நினைத்து பரிதவிக்கும் நிலை காணப்படுகின்றது. இம்மக்களின் பொருளாதாரத்தை மீளக்கட்டியெழுப்புவதற்கான பொறுப்பும் உங்களது கைகளிலும் தங்கியுள்ளது. புலம்பெயர் வாழ்நாடுகளில் வாழ்கின்ற புத்தியீவிகள் இன்றைய காலகட்டத்தில் நீங்கள் வாழ்கின்ற நாடுகளில் உள்ள அரசுகளுக்கு எமது மக்களின் உரிமைகள் பற்றி தெளிவுபடுத்தும் கடமைகள் உங்களைச் சார்ந்து நிற்கின்றது. இந்த தேசத்திற்காக உழைத்த பத்தாயிரத்திற்கும் மேற்பட்ட போராளிகள் சிறையில் வாடிக்கொண்டிருக்கின்றார்கள் இவர்களின் மறுவாழ்விற்காகவும் உரத்தகுரல் கொடுக்குமாறும் வேண்டி நிற்கின்றேன்.

இந்திய தமிழ் உறவுகளுக்கு!

கடந்தமுப்பது ஆண்டுகளாக எமது மக்களின் விடுதலைக்காக பல வகையிலும் குரல் கொடுத்த நீங்கள் எமது போராட்டம் மிகவும் நெருக்கடியைச் சந்தித்த வேளையிலும் தீவிரமாக குரல் கொடுத்து துணைநின்றதோடு எமது விடுதலைக்காக உங்கள் நாட்டிலேயே பல தழிழ்உறவுகள் தங்களின் உயிர்களையும் தியாகம் செய்தனர் என்பதையும் நாம் அறிவோம். தொடர்ந்தும் தங்களின் தார்மீக ஆதரவை எதிர்பார்த்து நிற்கின்றேன்.

தழிழக அரசியல் தலைவர்களில் சிலர் எமது விடுதலைக்காக தங்களை அர்ப்பணித்து செயல்படுகின்றார்கள்.சில அரசியல் தலைவர்கள் எமது விடுதலைப் பயணத்தில் தடைகளை ஏற்படுத்தி தங்களின் சுயநல அரசியல் லாபத்திற்காக செயல்படுகின்றனர். புதுமாத்தளன் வெள்ளான் முள்ளிவாய்க்கால் பகுதியில் எமது மக்களும், விடுதலை இயக்கமும் பெரும்சவாலை எதிர்கொண்டு நின்ற வேளையில் குறிப்பாக தமிழ்நாட்டுத் தலைவர்கள் சிலர் உணவு தவிர்ப்பு போராட்டம் என்றும் ஈழத்தில் போர் ஓய்வு ஏற்பட்டுள்ளது என்று தங்களின் ஊடகங்கள் ஊடாக செய்திகளை பரப்பி மாபெரும் வரலாற்றுத்தவறை இழைத்து மக்களை அழிவுப்பாதைக்கு இட்டுச்சென்றதில் அவர்களுக்கும் பங்கு உண்டு. எமது விடுதலைப் போராட்ட வரலாற்றில் இவ்வாறன வேதனைக்குரிய சம்பவங்களை நினைத்து நாமும் எமது மக்களும் வேதனை அடைகின்றோம்.

எனது அன்பிற்கினிய மக்களே!

எமது விடுதலை இயக்கமும், மக்களும் புதுமாத்தளன், வெள்ளான் முள்ளிவாய்க்கால் பகுதிக்குள் இராணுவ முற்றுகைக்குள் உள்ளாக்கப்பட்ட வேளையில் முப்பது வருடகால போராட்டத்தை இந்த மாபெரும் முற்றுகைக்குள் இருந்து மீழ்வதற்காக தேசியத்தலைவர் அவர்கள் தீர்க்கமான முடிவை எடுத்திருந்தார். அந்த முடிவானது மூன்றாம் தரப்பினூடாக ஆயுதங்களை ஓப்படைத்துவிட்டு உலகமயமாக்கல் புதிய கொள்கைக்கு அமைவாக ஜனநாயக வழியில் எமது விடுதலைப் பயணத்தை தொடர முடிவெடுத்ததுடன் இச்செய்தியை சர்வதேசத்திற்கும் தெரிவித்து இருந்தார். சர்வதேசம் இச்செய்தியை பரிசீலித்து முடிவுக்கு வருவதற்கு முன்னரே களநிலமைகள் மிகவும் மோசமான நிலையை அடைந்துவிட்டது. வெள்ளான் முள்ளிவாய்க்கால் பகுதியில் 400 சதுர மீற்றர் பகுதிக்குள் எமது தலைமை முடக்கப்பட்டது. இந்த முற்றுகைக்குள் இருந்து தேசியத்தலைவர் அவர்கள் 17-05-2009 அன்று பிற்பகல் இறுதியாக எனக்கு ஒரு செய்தியை கூறினார்.

இச்சூழலில் இருந்து நாம் மீழமுடியாத நிலையில் உள்ளதனால் இறுதிக்கணம் வரை போராடி எம்மை அழித்துக்கொள்ள முடிவெடுத்துள்ளேன். எனவே இந்த முப்பது வருடகால போராட்டத்தின் தொடர்ச்சியையும், எமது மாவீரர் விட்டுச்சென்ற பணியையும் தொடர்ந்து முன்எடுத்துச் செல்லுமாறு எனக்குப்பணித்தார். இத்தொடர்ச்சியை எவ்வாறு கொண்டு செல்ல வேண்டும் என்ற திட்டத்தையும் என்னிடம் கூறியிருந்தார். அதற்கு அமைவாகவே நான் தற்போது எனது பணியை தாயகத்தில் இருந்து தொடர்கின்றேன்.

தேசியத்தலைவர் அவர்களின் எண்ணங்களுக்கு செயல்வடிவம் கொடுப்தோடு இந்த மாவீரர்களின் கனவை நினைவாக்குவோம் என இந்நாளில் உறுதியெடுத்துக் கொள்கின்றேன்.

– நன்றி-

“ புலிகளின் தாகம் தமிழீழத் தாயகம் ”

இப்படிக்கு

ஏ.ராம்
தளபதி
தமிழீழ விடுதலைப் புலிகள்
தமிழிழம்

கனடாவில் சீமான் கைது?

seeman.jpgகனடாவில் இலங்கைத் தமிழர்கள் நடத்திய மாவீரர் தினத்தில் கலந்து கொண்டு பேசிய இயக்குனர் சீமான் கைது செய்யப்பட்டுள்ளதாக இணையதளங்களில் செய்தி வெளியாகியுள்ளது.

கனடாவின் சட்டத்தை மீறும் வகையில் பேசியதாக அவர் மீது குற்றம் சாட்டப்பட்டுள்ளதாகத் தெரிகிறது. எனினும் சட்டத்துக்குப் புறம்பான அவரது பேச்சு என்னவென்பது வெளியிடப்படவில்லை.

தினமணி

ஜனாதிபதித் தேர்தல் ஜனவரி 26 ஆம் திகதி – தேர்தல்கள் ஆணையாளர் இன்று அறிவிப்பு

dayananda_disanayake.jpgஇலங் கையின் 6ஆவது ஜனாதிபதி தேர்தல் எதிர்வரும் ஜனவரி 26 ஆம் திகதி நடைபெறவுள்ளதாக தேர்தல்கள் ஆணையாளர் தயானந்த திசாநாயக்க இன்று உத்தியோகபூர்வமாக அறிவித்தார்

வேட்பு மனுக்கள் டிசம்பர் 17 ஆம் திகதி ஏற்றுக்கொள்ளப்படும் என்றும் அவர் கூறினார். தற்போது பதவியில் உள்ள ஜனாதிபதி மஹிந்த ராஜபக்ஷவின் பதவிக்காலம் முடிய இன்னமும் இரண்டு ஆண்டுகள் இருக்கின்ற நிலையில், இந்த தேர்தல் நடத்தப்படவுள்ளமை குறிப்பிடத்தக்கது.

இலங்கையை இன்னிங்ஸ்-144 ஓட்ட வித்தியாசத்தில் வீழ்த்திய இந்தியா

india.jpgகான்பூரில் நடந்த 2வது டெஸ்ட் போட்டியில் இலங்கையை ஒரு இன்னிங்ஸ், 144 ஓட்ட வித்தியாசத்தில் இந்தியா படு தோல்வி அடையச் செய்தது.

கான்பூரில் நடந்த 2வது டெஸ்ட் போட்டியில் முதல் இன்னிங்ஸில் இந்தியா 642 ஓட்டங்களைக் குவித்து இலங்கைக்கு நெருக்கடியை ஏற்படுத்தியது. இதையடுத்து இலங்கையின் ஆட்டம் தொடங்கியது – தடுமாற்றத்துடன். ஸ்ரீசாந்த்தின் அபாரப் பந்து வீச்சால் இலங்கை அணி தனது முதல் இன்னிங்ஸை 229 ஓட்டங்களுக்கு இழந்தது. இதையடுத்து பாலோ ஆன் வாங்கி இரண்டாவது இன்னிங்ஸை ஆடியது இலங்கை. இந்த முறை ஹர்பஜன் சிங்கும், ஓஜாவும் பந்து வீச்சில் இலங்கையை கட்டுப்படுத்தினர்.

சமரவீராவைத் தவிர மற்ற வீரர்கள் அனைவரும் சொற்ப ஓட்டங்களில் வீழ்ந்து வெளியேறினர். சமரவீர கடுமையாகப் போராடி 78 ஓட்டங்களை எடுத்து கடைசி வரை ஆட்டமிழக்காமல் இருந்தார். இறுதியில் 269 ஓட்டங்களில் வீழ்ந்து இலங்கை. ஒரு இன்னிங்ஸ் 144 ஓட்டவித்தியாசத்தில் இந்தியாவிடம் தோல்வியைத் தழுவியது முதல் இன்னிங்ஸில் இலங்கையை நிலை குலைய வைத்த ஸ்ரீசாந்த் ஆட்ட நாயகனாக தேர்ந்தெடுக்கப்பட்டார். இந்த வெற்றியின் மூலம் 3 போட்டிகள் கொண்ட டெஸ்ட் தொடரில் இந்தியா 1- 0 என்ற கணக்கில் முன்னிலை பெற்றுள்ளது.

 India 642
Sri Lanka 229 & 269 (65.3 ov)
India won by an innings and 144 runs

Sri Lanka 2nd innings (following on)
 NT Paranavitana  lbw b Sehwag  20 
 TM Dilshan  c †Dhoni b Sreesanth  11
 KC Sangakkara*  b Harbhajan Singh  11
 DPMD Jayawardene  run out (Yuvraj Singh/†Dhoni)  10 
 TT Samaraweera  not out  78 
 AD Mathews  c Dravid b Khan  15
 HAPW Jayawardene†  b Harbhajan Singh  29 
 HMRKB Herath  lbw b Harbhajan Singh  13 
 M Muralitharan  b Ojha  29 
 BAW Mendis  lbw b Yuvraj Singh  27 
 UWMBCA Welegedara  c & b Ojha  4 
 Extras (b 7, lb 1, nb 14) 22     
      
 Total (all out; 65.3 overs; 294 mins) 269 (4.10 runs per over)
Fall of wickets1-13 (Dilshan, 3.3 ov), 2-37 (Paranavitana, 10.5 ov), 3-54 (DPMD Jayawardene, 18.3 ov), 4-54 (Sangakkara, 19.1 ov), 5-79 (Mathews, 24.4 ov), 6-140 (HAPW Jayawardene, 37.5 ov), 7-154 (Herath, 41.2 ov), 8-191 (Muralitharan, 44.5 ov), 9-264 (Mendis, 64.2 ov), 10-269 (Welegedara, 65.3 ov) 
        
 Bowling O M R W Econ  
 Z Khan 11 0 63 1
 S Sreesanth 11 4 47 1
 Harbhajan Singh 22 2 98 3
 V Sehwag 3 0 4 1
 PP Ojha 15.3 4 36
 SR Tendulkar 1 0 6 0  
 Yuvraj Singh 2 0 7 1

 

எதிர்க் கட்சிகளிடம் எதிர்காலத் திட்டமில்லை – விமல் வீரவன்ச

vimal-veeravansa.jpgஎதிர்காலத் திட்டமெதுவும் இல்லாத நிலையில் ஜனாதிபதி மஹிந்த ராஜபக்ஷவைத் தோற்கடிக்கும் ஒரே நோக்கில்தான எதிர்க்கட்சிகள் கூட்டாக இணைந்துள்ளன என தேசிய சுதந்திர முன்னணியின் தலைவர் விமல் வீரவன்ச தெரிவித்தார். ஒரே கொள்கையில் ஒன்றுபட முடியாத இவர்கள் எப்படி நாட்டை ஆளப்போகிறார்கள் என்றும் அவர் கேள்வியெழுப்பினார்.

கொழும்பு மகாவலி கேந்திர நிலையத்தில் இன்று காலை நடைபெற்ற ஐக்கிய மக்கள் சுதந்திர முன்னணியின் ஊடகவியலாளர் சந்திப்பில் உரையாற்றியபோதே அவர் இவ்வாறு கூறினார். விமல் வீரவன்ச அங்கு மேலும் கூறியதாவது இந்த நாட்டில் சர்வாதிகாரம் நடைபெறுவதாகக் கூறும் எதிhக்கட்சிகள் அதற்கான ஆதாரங்ளை முன்வைக்க வேண்டும். தேவையானளவு அதிகாரம் இன்றி எந்தக் கட்சியையும் கட்டியெழுப்ப முடியாது. குடும்ப அரசியலால் இந்த நாட்டுக்குப் பாதகம் இல்லை. அவர்களின் செயற்பாடுகளால் நாடு நன்மையடைந்தால் அதுவே பெரும் சேவையாகும் என்றும் அவர் மேலும் கூறினார்.

புத்தளவை அண்மித்த பகுதியில் எம்.ஐ.-24 உலங்கு வானூர்தி விபத்து

இலங்கை விமானப்படையின் எம்.ஐ.24 தாக்குதல் ரக உலங்கு வானூர்தி ஒன்று புத்தள காட்டுப் பகுதியில் இன்று பிற்பகல் 1.30 அளவில் வீழ்ந்துள்ளது. 5 வான் படையினருடன் பயிற்சி ஒன்றில் ஈடுபட்டிருந்த போதே இந்த விபத்து ஏற்பட்டதாக விமானப்படைத்தரப்பு அறிவித்துள்ளது.

தொழில்நுட்ப பிரச்சினையே இந்த விபத்துக்கான காரணம் என உடனடியாக அரசாங்கம் அறிவித்த போதும் விசாரணைகள் தொடர்வதாகத் தெரிவிக்கப்பட்டுள்ளது. குறித்த உலங்கு வானூர்தி, தற்போது எரிந்து கொண்டிருப்பதாகவும் உலங்கு வானூர்த்தியில் சென்ற 5 பேர் குறித்து மேலதிக தகவல்கள் வெளியாகவில்லை எனவும் கூறப்பட்டுள்ளது.

நிறைவேற்று அதிகாரம் ஒழிப்பு, பாராளுமன்ற முறை மாற்றம்; சமகாலத்தில் மேற்கொள்ளப்படவேண்டும் – அநுர பிரியதர்ஷன யாப்பா

anura.jpgநிறைவேற்று அதிகாரம் கொண்ட ஜனாதிபதி முறையை இல்லாமற் செய்வதும், பாராளுமன்ற முறையை மாற்றி அமைப்பதும் சமகாலத்தில் மேற்கொள்ளப்படவேண்டுமென அமைச்சரவைப் பேச்சாளரான தகவல், ஊடகத்துறை அமைச்சர் அநுர பிரியதர்ஷன யாப்பா தெரிவித்தார்.

பாராளுமன்ற முறையை மாற்றாமல் நிறைவேற்று அதிகாரம்கொண்ட ஜனாதிபதி முறையை நீக்கினால், ஸ்திரமற்ற நிலை உருவாகும். அவ்வாறு பாராளுமன்றத்தைப் பலவீனப்படுத்தி தமது நோக்கத்தை நிறைவேற்றவே எதிர்க் கட்சிகள் முயற்சிக்கின்றன.

இதற்கு இடமளிக்கப்பட மாட்டாது என்று தெரிவித்த அமைச்சர், இந்த இரண்டு விடயங்களையும் சமகாலத்தில் மேற்கொள்ள எதிர்க் கட்சிகள் முன்வருமானால் அரசாங்கமும் அதற்கு தயாராகவே உள்ளது என்றும் கூறினார்.

அரசாங்க தகவல் திணைக்களத்தில் நேற்று (26) நடைபெற்ற அமைச்சரவை முடிவுகளை அறிவிக்கும் செய்தியாளர் மாநாட்டிலேயே அமைச்சர் யாப்பா இதனைத் தெரிவித்தார்.

“ஜனாதிபதி முறையை இல்லாது செய்வதற்கு பாராளுமன்றத்தில் மூன்றில் இரண்டு பெரும்பான்மை ஆதரவு அவசியம், அத்துடன் சர்வஜன வாக்கெடுப்பும் நடத்தப்படவேண்டும். ஜனாதிபதியால் மாத்திரம் தனித்து இதனைச் செய்ய முடியாது.  எதிர்க் கட்சி கூறுவதைப்போல் செய்வதானால் செவ்வாய்க் கிரகத்தில் உள்ள பாராளுமன்றத்தில் தான் இதனைச் செய்யவேண்டும். நாட்டில் ஸ்திரத்தன்மை இல்லாமல் எதனையும் நடத்த முடியாது.

எனவே மீண்டும் ஜனாதிபதி தலைமையில் பலமான ஓர் அரசாங்கத்தை உருவாக்கவேண்டும் என்று தெரிவித்த அமைச்சர் யாப்பா, பாராளுமன்றம் பலவீனமான நிலையில் ஜனாதிபதி முறையை இல்லாமற் செய்தால், மக்களின் பிரச்சினைகளைத் தீர்க்க முடியாது. சிறுபான்மையினரின் உரிமைகள் தொடர்பில் சந்தேகம் ஏற்படும் நிலை உருவாகும் என்றும் குறிப்பிட்டார்.

நெருக்கடிகளுக்குப் பின்னரான செயற்பாடுகளில் இப்போது நாடு உள்ளது. உலக அரசியல் மாற்றமடைந்து முன்னேற்றம் கண்டு வருகிறது. அதற்கு ஏற்ற வகையில் நாமும் செயற்படவேண்டும். இராணுவ மூலோபாயத்தினால் மாத்திரம் யுத்தத்தை வெல்ல முடியாது. அவ்வாறெனில் எப்போதோ வென்றிருக்கலாம்.

ஆகவே, அரசியல் மூலோபாயமும் அவசியம். அந்த இரண்டையும் ஜனாதிபதி மஹிந்த ராஜபக்ஷ தமது தலைமையில் மேற்கொண்டதனால் தான் எம்மால் யுத்தத்தை வெல்ல முடிந்தது. அந்த வகையில் ஈடினையற்ற ஒரு பொது ஜனாதிபதி வேட்பாளராக ஜனாதிபதி மஹிந்த ராஜபக்ஷவே உள்ளார். அவருக்குச் சவாலாக எவருமே இல்லை என்றும் அமைச்சர் குறிப்பிட்டார்.

3 ரிச்டர் அளவில் நேற்று தென் பகுதியில் நில அதிர்வு

தென் பகுதியின் சில பிரதேசங்களில் நேற்றுக்காலை சிறிய அளவிலான நில அதிர்வு ஏற்பட்டதாக பூகற்பவியல் அகல்வாராய்ச்சித் திணைக்களம் தெரிவித்தது. இந்த நில அதிர்வு திஸ்ஸ மகாராம, லுணுகம் வெஹர, ஹம்பாந்தோட்டை, மொனராகலை, பதுளை, அம்பலந்தொட்ட பகுதிகளில் உணரப்பட்டதாக திணைக்கள பணிப்பாளர் டொக்டர் ஒ. கே. திசாநாயக்க கூறினார்.

இந்த நில அதிர்வினால் எதுவித பாதிப்பும் ஏற்படவில்லை எனவும், நில அதிர்வு தொடர்பாக பல்லேகலேயில் உள்ள பூமியதிர்வு உபகரணங்களில் பதிவாகியுள்ளதாகவும் அவர் குறிப்பிட்டார். 3 ரிச்டர் அளவை விட குறைந்தளவு நில அதிர்வே ஏற்பட்டுள்ளதாகவும், இந்த நில அதிர்வு குறித்து திணைக்களம் ஆய்வு செய்து வருவதாகவும் அவர் கூறினார்.

பல்லேகலே சுனாமி நிலையத்தில் இருந்து சுமார் 100 கிலோ மீட்டர் தூரத்திலேயே இந்த நில அதிர்வு இடம்பெற்றுள்ளது. கண்ணாடிகள், ஜன்னல்கள் என்பன ஒரு சில செக்கன்கள் அதிர்ந்ததாக மக்கள் தெரிவித்துள்ளனர்.

மும்பைத் தாக்குதல் தினமான நேற்று தமிழக கரையோரப் பாதுகாப்பு தீவிரம்

mumbai-terror-attack.jpgமும்பையில் தீவிரவாதிகள் தாக்குதல் நடத்திய தினமான (நவம்பர் 26 ஆம் திகதி) நேற்று தமிழகத்தின் தென்கிழக்கு கடலோரப் பகுதியில் பாதுகாப்புப் பலப்படுத்தப்பட்டிருந்தது. மும்பையில் மீண்டும் தாக்குதலை நடத்த தீவிரவாதிகள் திட்டமிட்டு இருப்பதாக உளவுத்துறையினர் சமீபத்தில் விடுத்த எச்சரிக்கையைத் தொடர்ந்து தென்கிழக்கு கடலோரப் பகுதிகளில் இந்திய கடற்படையும் கடலோர காவல்படையினரும் தீவிர ரோந்துப் பணியில் ஈடுபட்டனர்.

இந்திய கடல் எல்லைக்குட்பட்ட பாக்கு நீரினை சந்தியில் இந்திய கடற்படையினரும் கடலோர காவல்படையினரும் தீவிர கண்காணிப்பில் ஈடுபட்டு வருகின்றனர். உச்சிபுலியில் உள்ள விமான கண்காணிப்பு நிலையம் உஷார்படுத்தப்பட்டுள்ளதுடன், பாக்ஜலசந்தி,மன்னார் வளைகுடா பகுதியிலும் கண்காணிப்பு தீவிரப்படுத்தப்பட்டுள்ளது.

மீனவர்கள் சர்வதேச எல்லையைத் தாண்டக்கூடாது என்றும் தங்களுடைய அடையாள அட்டைகளை வைத்துக்கொள்ள வேண்டும் என்றும் அறிவுறுத்தப்பட்டுள்ளதாக சிரேஷ்ட அதிகாரி ஒருவர் தெரிவித்துள்ளார்.