03

03

மஹிந்தவுக்கு சந்திரகாந்தன் குழு நிபந்தனையற்ற ஆதரவு

pilleyan_mahinda.jpgஎதிர்வரும் ஜனாதிபதித் தேர்தலில் சந்திரகாந்தன் தலைமையிலான தமிழ் மக்கள் விடுதலைப் புலிகள் கட்சி ஜனாதிபதி மஹிந்த ராஜபக்ஷவுக்கு நிபந்தனையற்ற ஆதரவு வழங்குவது என்ற முடிவை தற்போது மீண்டும் உறுதிபடுத்தியுள்ளனர். நேற்று மாலை ஜனாதிபதி செயலகத்தில் தமிழ் மக்கள் விடுதலைப் புலிகளின் பிரதிநிதிகளுக்கும் ஜனாதிபதியின் சிரேஷ்ட ஆலோசகர் பசில் ராஜபக்ஷ மற்றும் ஐக்கிய மக்கள் சுதந்திர முன்னணியின் பொதுச் செயலாளர் சுசில் பிரேம்ஜயந்த ஆகியோருடன் இடம்பெற்ற சந்திப்பின் போது இதனை அவர்கள் உறுதிப்படுத்தியுள்ளனர்.

தமிழ் மக்கள் விடுதலைப் புலிகளின் சார்பில் அக்கட்சியின் தலைவரும் கிழக்கு மாகாண முதலமைச்சருமான சிவனேசத்துரை சந்திரகாந்தன், பொதுச் செயலாளர் எட்வின் சில்வா கைலேஷ்வரராஜா, மாகாண சபை உறுப்பினர்களான சோமசுந்தரம் புஷ்பராஜா மற்றும் நாகலிங்கம் திரவியம் உட்பட 7 பேர் இந்தச் சந்திப்பில் கலந்துகொண்டனர்.

தமிழர்கள் சரத் பொன்சேகாவுக்கு வாக்களிக்க வேண்டும் : மனோ கணேசன்

manoganesan_sarath.jpgதென்னி லங்கையில் வாழும் தமிழ் மக்கள் ஆட்சிமாற்றத்திற்காக எதிர்க்கட்சிகளின் பொது வேட்பாளரான சரத் பொன்சேகாவுக்கு எதிர்வரும் ஜனாதிபதி தேர்தலில் வாக்களிக்க வேண்டும்.

வடக்கின் ஐந்து தேர்தல் மாவட்டங்களில் வாழும் தமிழ் மக்கள் தொடர்பில் தமிழ்த் தேசிய கூட்டமைப்புடன் நடக்கும் பேச்சுவார்த்தைகளை அடுத்து இறுதி முடிவு தேர்தல் நியமன தினத்திற்கு முன் அறிவிக்கப்படும் என்ற ஜனநாயக மக்கள் முன்னணி அரசியல் குழு எடுத்துள்ள முடிவை கட்சியின் தலைவர் மனோ கணேசன் எம்பி கொழும்பில் இன்று (03.12.2009) காலை கிராண்ட் ஒரியன்டல் விடுதியில் நடத்தப்பட்ட ஊடகவியலாளர் மாநாட்டின் போது தெரிவித்தார்.

இம்மாநாட்டில் மனோ கணேசன் எம்பியுடன், கட்சியின் பொதுச்செயலாளர் கலாநிதி நல்லையா குமரகுருபரன், தேசிய அமைப்பாளர் பிரபா கணேசன், ஜதொகா பொதுச்செயலாளர் எம்.சிவலிங்கம், கொழும்பு மாவட்ட அமைப்பாளர் எஸ்.ராஜேந்திரன், சிரேஷ்ட உபதலைவர் கங்கை வேணியன், கொழும்பு மாநகரசபை உறுப்பினர் மொஹமட் ஷியாம் ஆகியோர் கலந்துகொண்டனர்.

இம்மாநாட்டில் மனோ எம்பி தொடர்ந்து உரையாற்றுகையில் மேலும் தெரிவித்ததாவது :

“ஆட்சி மாற்றத்திற்கான வாக்கு சரத் பொன்சாகாவுக்கு எந்தவித அரசியல் நிபந்தனைகளுமின்றி வாக்களிக்கவேண்டும் என தமிழ் மக்களை நாம் கோரவில்லை. தமிழ் மக்கள் சரத் பொன்சேகாவுக்கு அளிக்கும் ஒவ்வொரு வாக்கும் இன்றைய ஆட்சியை மாற்றும் வாக்காகும்.

யுத்த வெற்றியினை முன்னிலைபடுத்தி தேர்தல்களில் இலகு வெற்றி பெற்றிடலாம் என இந்த அரசாங்கம் மனப்பால் குடித்தது. ஆனால் யுத்த வெற்றிக்கு காரணமானவரையே பொது வேட்பாளராக எதிரணி நிறுத்துவதால் இன்று அரசாங்கம் அதிர்ந்து போயுள்ளது. இந்த ஆட்சியை மாற்றுவதற்கு இதைவிட சிறந்த வழி எதுவும் கிடையாது.

தமிழ்த் தேசியக் கூட்டமைப்புக்கு அழைப்பு

இன்றைய ஆட்சியை மாற்றியமைத்து புதிய தேசிய அரசாங்கத்தை ஏற்படுத்தி, தமிழ் மக்களுக்கு அரசியல் அதிகாரங்களைப் பகிர்ந்தளிக்கும் நமது செயற்திட்டத்திற்கு தமிழ்த் தேசியக் கூட்டமைப்பினர் ஒத்துழைப்பு வழங்கவேண்டும்.

வடக்கு கிழக்கின் யாழ்ப்பாணம், வன்னி, திருகோணமலை, மட்டக்களப்பு, அம்பாறை ஆகிய மாவட்டங்களில் வாழும் தமிழர் தொடர்பில் தமிழ்த் தேசியக் கூட்டமைப்புடன் நடக்கும் பேச்சுவார்த்தைகள் தொடர்ந்தும் நடத்தப்படும்.

இன்றைய அரசாங்கத்தை மாற்றிடவேண்டும் என்ற உணர்வுகள் இன்று வடக்கு கிழக்கிலுள்ள தமிழ் மக்கள் மனங்களில் ஒலிப்பதாக எமக்கு கிடைக்கும் தகவல்கள் தெரிவிக்கின்றன. அந்த உணர்வுகளை எதிரொலித்து ஆட்சிமாற்றம் என்ற ஒரே அடிப்படையில் எதிரணி பொது வேட்பாளர் சரத் பொன்சேகாவை கூட்டமைப்பு ஆதரிக்கவேண்டும் என தோழமையுடன் கேட்டுக்கொள்கின்றேன்.

மலையகக் கட்சிகளுக்கும் அழைப்பு

தென்னிலங்கையின் மத்திய, ஊவா, சப்ரகமுவ மற்றும் மேல்மாகாணத்தில் வாழ்ந்துக்கொண்டிருக்கும் தமிழ் மக்கள் மத்தியிலே இந்த அரசாங்கத்தை மாற்ற வேண்டும் என்ற உணர்வு கொந்தளித்துக்கொண்டிருக்கின்றது. எவர் என்ன சொன்னாலும் இதுதான் யதார்த்தம்.

எனவே நமது மக்களின் எண்ணக்கருத்திற்கு ஏற்ப மலையகக் கட்சிகள் செயற்பட வேண்டும். ஆட்சி மாற்றத்திற்காக மலையக கட்சிகள் எதிரணி பொது வேட்பாளர் சரத் பொன்சேகாவை ஆதரிக்கவேண்டும் என தோழமையுடன் கேட்டுக்கொள்கின்றேன்.

தமிழர் போராட்டம்

இந்நாட்டிலே இனியொரு ஆயுதப் போருக்கு இடம் கிடையாது. போர் முடிந்துவிட்டது. ஆனால் போராட்டம் முடியவில்லை. தமிழ் மக்களின் போராட்டத்தின் வடிவம் மாற வேண்டும். அது ஜனநாயக போராட்டமாக முன்னெடுக்கப்படவேண்டும். அதிகார பகிர்வுக்காகவும், நீதி, சமாதானம் ஆகிய நோக்கங்களுக்காகவும் அரசியல் முதிர்ச்சியுடனான சாணக்கியத்துடன் நாம் காய்நகர்த்த வேண்டும்.

எமது போராட்டத்தைச் சிங்கள அரசியல் அணிகளுடன் இணைந்து முன்னெடுக்கும் சந்தர்ப்பங்களை நாம் ஒருபோதும் தவறவிடக்கூடாது. புலம் பெயர் தமிழர்கள் இலங்கையிலே ஆட்சி மாற்றத்திற்கும், தமிழர்களின் போராட்ட வடிவத்தின் ஜனநாயக மாற்றத்திற்கும் ஆதரவு வழங்க வேண்டும்.

களத்தில் இருந்தபடி நேரடியாக ஜனநாயக போராட்டங்களை முன்னெடுக்கும் தமிழ்த் தலைமைகளை அடையாளங்கண்டு ஒத்துழைப்பு வழங்கவேண்டும்.

இன்றைய அரசாங்கம்

இன்றைய அரசாங்கத்திற்கு வாக்களிப்பதற்கு தமிழ் மக்களுக்கு எந்தவொரு காரணமும் கிடையாது. தேசிய இனப்பிரச்சினை தொடர்பிலும், மனித உரிமைகள் தொடர்பிலும் இந்த அரசாங்கம் தமிழ் மக்களிடம் தோல்வியடைந்துவிட்டது. சொல்லொணா துன்பங்களை விளைவித்த யுத்தத்திற்கு இந்த அரசாங்கம் அரசியல்-இராணுவத் தலைமையைத் தந்தது.

தேசிய இனப்பிரச்சினைக்கு அரசியல் தீர்வு என்று சொல்லி தாமே ஆரம்பித்து வைத்த சர்வக்கட்சி கடையை இந்த அரசாங்கமே இழுத்து மூடிவிட்டது. இன்று இந்த யுத்தத்தையடுத்து தமிழ் மக்களின் மனங்களை வெல்வதற்கு கிடைத்த வரலாற்று முக்கியத்துவம் வாய்ந்த சந்தர்ப்பத்தையும் இந்த அரசாங்கம் தவறவிட்டு விட்டது.

எதிர்க்கட்சி பொது வேட்பாளர் சரத் பொன்சேகாவிற்கு வாக்களிப்பதானது எமது வரலாற்று கடமையல்ல. அது நாம் வாழ்கின்ற காலத்தின் கட்டாயமாகும். சரத் பொன்சேகா நிறைவேற்று அதிகாரம்கொண்ட ஜனாதிபதி முறைமையை ஒழிப்பதாக ஐக்கிய தேசிய முன்னணி, மக்கள் விடுதலை முன்னணி ஆகிய இரண்டு அணியிடமும் உறுதியளித்துள்ளார்.

கடந்தகால ஜனாதிபதிகளின் இத்தகைய உறுதிமொழிகளுக்கும், தற்போதை நடைமுறைக்கும் இடையில் இருக்கின்ற வேறுபாடுகள் சிந்திப்பவர்களுக்கு புரியும்.

13ஆவது திருத்தமும் தேசிய இனப்பிரச்சினையும்

பொது வேட்பாளர் சரத் பொன்சேகா 13ஆவது திருத்தத்திற்கு அப்பால் சென்று இனப்பிரச்சினைக்கு தீர்வுகாண வேண்டும் என பகிரங்கமாக கூறியிருப்பது நல்ல விடயம். இந்த நிலைப்பாடுகூட இதுவரையில் ஆளுங்கட்சியின் வேட்பாளர் கூறவில்லை.

ஜனாதிபதி தேர்தலை அடுத்து ஐதேக, ஸ்ரீலசுக மக்கள் பிரிவு, ஜனநாயக மக்கள் முன்னணி, முஸ்லிம் காங்கிரஸ் உள்ளிட்ட ஐக்கிய தேசிய முன்னணிக்கும், ஜேவிபிக்கும், தமிழ்த் தேசியக் கூட்டமைப்புக்கும் அழைப்பு விடுத்து சர்வ கட்சிகளையும் உள்ளடக்கிய காபந்து அரசாங்கத்தை ஜனாதிபதி நியமிப்பார்.”

இவ்வாறு மனோ கணேசன் தெரிவித்தார்.

வீரகேசரி இணையம் 12/3/2009

புலிகளின் சொத்துக்களை அரசுடைமையாக்க ஏற்பாடு – கெஹெலிய ரம்புக்வெல்ல

k-rambuk.jpgஇலங்கையிலும், வெளிநாடுகளிலும் உள்ள புலிகளின் சொத்துக்களை அரசுடமையாக்குவது தொடர்பாக ஆராய்ந்து வருவதாக தேசிய பாதுகாப்பு விவகாரங்களுக்கான பேச்சாளர், அமைச்சர் கெஹெலிய ரம்புக்வெல்ல தெரிவித்தார்.

புலிகளிடம் 14 கப்பல்கள் இருக்கின்றன. அவற்றில் கே.பி. என்றழைக்கப்படும் குமரன் பத்மநாதனின் பெயரில் மாத்திரம் ஐந்து கப்பல்களும் 600க்கு மேற்பட்ட வங்கிக் கணக்குகளும் உள்ளதாக அவர் மேலும் தெரிவித்தார். கே.பியின் பெயரிலுள்ள ஐந்து கப்பல்களில் மூன்று கப்பல்களை இலங்கைக்கு எடுத்துவருவதற்கான நடவடிக்கை எடுக்கப்பட்டுள்ளதாக தெரிவித்த அமைச்சர் இந்த சொத்துக்களை சுவீகரிப்பது தொடர்பாக சட்டமா அதிபரின் ஆலோசனையை கோரியுள்ளதாகவும் அவர் சுட்டிக்காட்டினார்.

நாட்டின் தற்போதைய நிலைமைகள் தொடர்பாக ஊடகங்களுக்கு விளக்கமளிக்கும் செய்தியாளர் மாநாடு நேற்றுக் காலை நடைபெற்றது.  இதன்போது, ஊடகவியலாளர் எழுப்பிய கேள்விக்கு பதிலளிக்கும் போதே அமைச்சர் மேற்கண்டவாறு தெரிவித்தார்.

அமைச்சர் மேலும் உரையாற்றுகையில், இலங்கையிலும், வெளிநாடுகளிலும் உள்ள குழுக்களிடமும் தனி நபர்களிடமும் தற்போது இருக்கும் புலிகளின் சொத்துக்கள் அனைத்தையும் அரசாங்கம் பொறுப்பேற்பது தொடர்பில் ஆராய்ந்து நடவடிக்கைகளை எடுத்துள்ளது.

உலகம் முழுவதிலும் பல்வேறு இடங்களில் உள்ள புலிகளின் சொத்துக்களை அரசாங்க புலனாய்வுத் துறையினர் அடையாளம் கண்டுள்ளனர். தற்பொழுது தனி நபர்களினதும், குழுக்களினதும் கட்டுப்பாட்டிலுள்ள சொத்துக்களை அரசு சுவீகரிக்கவுள்ளது.

கே.பி.யின் பெயரில் உள்ள சுமார் 600க்கு மேற்பட்ட வங்கிக் கணக்குகள் முடக்கப்பட்டுள்ளன. புலிகளின் நிதி மார்க்கங்கள் தொடர்பாக தொடர்ந்து விசாரணைகளை முன்னெடுப் பதற்காகவே கணக்குகள் முடக்கப்பட்டுள்ளன என்றார். கே.பி.யின் வங்கிக் கணக்குகளின் மொத்த பெறுமதி தொடர்பாக இன்னும் தெரியாது என்றும் அமைச்சர் சுட்டிக்காட்டினார்.

யாழ்.மாவட்டத்தில் 7லட்சத்து 21ஆயிரத்து 359 வாக்காளர்கள்!

எதிர்வரும் ஜனவரி மாதம் 26 ம் திகதி நடைபெறவுள்ள ஜனாதிபதித் தேர்தலில் யாழ்.மாவட்டத்தில் 7 இலட்சத்து 21 ஆயிரத்து 359 பேர் வாக்களிக்கத் தகுதி பெற்றுள்ளனர் எனத் தெரியவருகிறது.

இதன்படி ஊர்காவற்துறை தேர்தல் தொகுதியில் 53111 பேரும் வட்டுக்கோட்டை தேர்தல் தொகுதியில் 63991 பேரும் காங்கேசன்துறை தேர்தல் தொகுதியில் 69082 பேரும் மானிப்பாய் தேர்தல் தொகுதியில் 71114 பேரும் கோப்பாய் தேர்தல் தொகுதியில் 65798  பேரும் உடுப்பிட்டி தேர்தல் தொகுதியில் 56426 பேரும் பருத்தித்துறை தேர்தல் தொகுதியில் 48613 பேரும் சாவகச்சேரி தேர்தல் தொகுதியில் 65141 பேரும் நல்லூர் தேர்தல் தொகுதியில் 72558 பேரும் யாழ்ப்பாணம் தேர்தல் தொகுதியில் 64 714 பேரும் கிளிநொச்சி தேர்தல் தொகுதியில் 90811 பேரும் ஜனாதிபதித் தேர்தலில் வாக்களிக்கத் தகுதி பெற்றுள்ளனர்.

இலங்கை-இந்தியா இடையிலான 3ஆவது டெஸ்ட் – இலங்கை அணி 366/8

3-test.jpgமு‌ம்பை‌யி‌ல் நடைபெற்ற இ‌ந்‌தியாவு‌க்கு எ‌திரான 3ஆவது டெஸ்ட் போட்டி‌யி‌ல், நாணய சுழற்சியில் வெற்றிபெற்ற இல‌ங்கை அ‌ணி முத‌லி‌ல் துடுப்பெடுத்தாட தீர்மானித்தது.

தொட‌க்க ஆ‌ட்ட‌க்கார‌ர்களாக ‌டி‌ல்ஷா‌ன், பரணவிதாரன ஆ‌கியோ‌ர் கள‌ம் இற‌ங்‌கின‌ர். நேற்றைய ஆட்ட முடிவில் இலங்கை அணி 8 விக்கட்டுக்களை இழந்து 366 ஓட்டங்களை எடுத்துள்ளது.

தனது தங்கையின் திருமணத்தையொட்டி நேற்றைய ஆட்டத்தில் கா‌ம்‌பீர் விளையாடவில்லை. அவருக்குப் ப‌தி‌‌ல் த‌மிழக ‌வீர‌‌‌ர் முர‌ளி ‌விஜ‌ய் அ‌ணி‌யி‌ல் சே‌ர்‌க்க‌ப்ப‌ட்டு‌ள்ளா‌ர். ம‌ற்றபடி இ‌ந்‌திய அ‌ணி‌யி‌ல் எ‌ந்த மா‌ற்றமு‌ம் இ‌ல்லை. 3 டெ‌ஸ்‌ட் கொ‌ண்ட தொட‌ரி‌ல் இ‌ந்‌திய அ‌‌ணி 1-0 எ‌ன்ற கண‌க்‌கி‌ல் மு‌ன்‌னிலை‌யி‌ல் உ‌ள்ளது.

Sri Lanka in India Test Series – 3rd Test
Sri Lanka 366/8 (89.0 ov)
Sri Lanka won the toss and elected to bat
Stumps – Day 1
Test no. 1937 | 2009/10 season
Played at Brabourne Stadium, Mumbai
2,3,4,5,6 December 2009 (5-day match)
       
 Sri Lanka 1st innings
 NT Paranavitana  c Dravid b Harbhajan Singh  53 
 TM Dilshan  c Vijay b Harbhajan Singh  109 
 KC Sangakkara*  c †Dhoni b Ojha  18
 DPMD Jayawardene  c Sehwag b Sreesanth  29 
 TT Samaraweera  c Vijay b Harbhajan Singh  1 
 AD Mathews  not out  86  
 HAPW Jayawardene†  c Harbhajan Singh b Ojha  43 
 KMDN Kulasekara  c †Dhoni b Khan  12 
 HMRKB Herath  c Dravid b Harbhajan Singh  1 
 M Muralitharan  not out  0  
 Extras (b 4, lb 4, w 2, nb 4) 14     
      
Total (8 wickets; 89 overs) 366 (4.11 runs per over)
To bat UWMBCA Welegedara 
Fall of wickets1-93 (Paranavitana, 19.5 ov), 2-128 (Sangakkara, 30.5 ov), 3-187 (DPMD Jayawardene, 47.4 ov), 4-188 (Samaraweera, 48.1 ov), 5-262 (Dilshan, 64.6 ov), 6-329 (HAPW Jayawardene, 79.6 ov), 7-359 (Kulasekara, 84.6 ov), 8-362 (Herath, 87.2 ov) 
        
 Bowling O M R W  
 Z Khan 19 2 70 1
 S Sreesanth 14 1 66 1
 Harbhajan Singh 29 2 107 4 
 PP Ojha 23 1 97 2
Yuvraj Singh 4 0 18 0
 
India team    
V Sehwag, M Vijay, R Dravid, SR Tendulkar, Yuvraj Singh, VVS Laxman, MS Dhoni*†, Harbhajan Singh, PP Ojha, Z Khan, S Sreesanth 

விஜேதாஸ ராஜபக்ச, ஐக்கிய தேசிய கட்சியில்..

wijedasa_rajapakse.jpgநாடாளு மன்றத்தில் சுயாதீனமாக செயற்பட்டு வந்த ஆளும் கட்சி நாடாளுமன்ற உறுப்பினர் விஜேதாஸ ராஜபக்ஷ  ஐக்கிய தேசிய கட்சியுடன் இணைந்து கொண்டதாக தெரிவிக்கப்படுகிறது.
 
அவர் (02) எதிர்கட்சித்தலைவர் ரணில் விக்ரமசிங்க முன்னிலையில் ஐக்கிய தேசிய கட்சியில் இணைந்து கொண்டார். இந்தநிலையில் விஜேதாஸ ராஜபக்ச, கட்சியின் செயற்குழு உறுப்பினராகவும் தெரிவானார். அத்துடன் கட்சியின் மஹரகம அமைப்பாளராகவும் அவர் தெரிவு செய்யப்பட்டார். கொழும்பு மாநகரசபையின் முன்னாள் பிரதி முதல்வர் அசாத் சாலியின் இடத்திற்கே விஜேதாஸ ராஜபக்ச, கட்சியின் செயற்குழுக்கு தெரிவானார்.

வாக்காளர் இடாப்புக்களில் 80 ஆயிரம் இரட்டைப் பதிவுகள்

மேல் மாகாணத்தின் வாக்காளர் இடாப்புகளில் கிட்டத்தட்ட 80 ஆயிரம் இரட்டை பதிவுகள் கண்டுபிடிக்கப்பட்டுள்ளதாக தேர்தல் திணைக்களம் தெரிவித்துள்ளது.

கொழும்பு மாவட்டத்தில் 60 ஆயிரம் இரட்டை பதிவுகளும், கம்பஹா மாவட்டத்தில் 12 ஆயிரம் இரட்டை பதிவுகளும் களுத்துறை மாவட்டத்தில் 8000 இரட்டை பதிவுகளும் இவ்வாறு கண்டு பிடிக்கப்பட்டதாக திணைக்களம் மேலும் கூறியது.

A (H1 N1) இன்புளுவன்சா பேரழிவை ஏற்படுத்தும் ஆபத்து – இது வரை 10 பேர் பலி – மருத்துவ நிபுணர் தகவல்

influenza-a.jpgநாட்டின் பல பிரதேசங்களில் பரவியுள்ள புதிய இன்புளுவென்சா ஏ (எச் 1 என் 1) வைரஸ் நோய் காரணமாக நேற்று முன்தினம் வரையும் பத்து பேர் உயிரிழந்திருப்பதாக நோய் பரவுகைத் தடுப்பு பிரிவின் தொற்று நோயியல் மருத்துவ நிபுணர் நவரட்ணசிங்கம் ஜனகன் நேற்றுத் தெரிவித்தார். அதேநேரம், புதிய இன்புளூவன்சா ஏ (எச் 1என் 1) வைரஸ் தனது கட்டமைப்பை காலத்திற்குக் காலம் மாற்றிக் கொள்வதால் இது எதிர்காலத்தில் பேரழிவை ஏற்படுத்தக் கூடியதாக வளர்ச்சி பெறக் கூடிய ஆபத்து நிலவுவதாகவும் அவர் கூறினார்.

இது தொடர்பாக அவர் மேலும் குறிப்பிடுகையில், இது புது வகையான ஒரு வைரஸ். பன்றிகளில் இன்புளுவென்சா காய்ச்சலை ஏற்படுத்துகின்ற வைரஸின் குண இயல்பும், பறவைகளுக்கு இன்புளுவென்சா காய்ச்சலை ஏற்படுத்துகின்ற வைரஸின் பரம்பரை இயல்பும், மனிதனுக்கு சாதாரண சளிச்சுரத்தை ஏற்படுத்துகின்ற வைரஸின் பரம்பரை இயல்பும் இந்த புதிய இன்புளுவென்சா ஏ(எச் 1 என் 1) வைரஸில் காணப்படுகின்றது.

 இது காலத்திற்குக் காலம் தனது கட்டமைப்பை மாற்றிக் கொள்ளக் கூடியதாக விளங்குகின்றது. அதனால் இது இப்போது சாதாரண வைரஸாக இருந்தாலும் எதிர்காலத்தில் பேரழிவை ஏற்படுத்தக் கூடியதாக வளர்ச்சி பெறக் கூடிய அச்சுறுத்தல் நிலவுகின்றது. இந்நாட்டில் இவ் வைரஸ் காரணமாக நேற்று முன்தினம் வரையும் பத்து பேர் உயிரிழந்துள்ளனர்.

அனுராதபுரம், குருநாகல், கண்டி, இரத்தினபுரி, மற்றும் மாத்தறை ஆகிய மாவட்டங்களில் தான் இந்த உயிரிழப்புக்கள் இடம் பெற்றிருக்கின்றன.

இந் நோய்க்கு இற்றைவரையும் 345 பேர் உள்ளாகியுள்ளனர். புதிய இன்புளுவென்சா ஏ (எச் 1 என் 1) நோய் ஒரு தொற்று நோயாகையால் அதனைத் தவிர்ந்து கொள்ளுவதில் பொது மக்கள் கூடிய கவனம் செலுத்துவது அவசியம் என்றார்.

யாழ். குடாவிலிருந்து இடம்பெயர்ந்தோருக்கு வசிக்குமிடத்தில் வாக்களிக்க வசதி

யாழ்ப்பாணத்தில் இருந்து இடம் பெயர்ந்து கொழும்பு உட்பட அதன் சுற்றுப் புறங்களில் வசிக்கும் வாக்காளர்களுக்கு தாம் தற்காலிகமாக வசிக்கும் பகுதிகளில் வாக்களிக்க வசதி அளிக்க தேர்தல் திணைக்களம் தீர்மானித்துள்ளது.

யாழ் தேர்தல் மாவட்ட வாக்காளர்கள் எதிர்வரும் ஜனாதிபதித் தேர்தலில் வாக்களிப்பதற்காக தேர்தல் ஆணையாளருக்கு விண்ணப்பிக்குமாறு தேர்தல் திணைக்களம் கோரியுள்ளது. யாழ். தேர்தல் மாவட்ட வாக்காளர் இடாப்புக்கள் இன்று (3) முதல் வெள்ளவத்தை தபால் நிலையத்தில் பார்வைக்காக வைக்கப்படவுள்ளதாக தேர்தல் திணைக்களம் தெரிவித்தது.

சுற்றுலா பயணிகளைக் காக்க மத்திய மாகாணத்தில் பொலிஸ் நிலையங்கள்!

kandy-city.jpgமத்திய மாகாணத்திற்கு வருகைதரும் சுற்றுலாப் பயணிகளின் பாதுகாப்பு கருதி பொலீஸ் நிலையங்களை அமைப்பதற்கு தீர்மானித்துள்ளதாக மத்திய மாகாணத்திற்குப் பொறுப்பான பிரதிப் பொலீஸ் மாஅதிபர் காமினி நவரெத்ன தெரிவித்துள்ளார்.

இதன்மூலம் மத்திய மாகாணத்திற்கு வருகைதரும் சுற்றுலாப் பயணிகளின் பாதுகாப்பை உறுதிப்படுத்த முடிவதோடு,  சுற்றுலாப் பயணிகளிடமிருந்து கிடைக்கும் முறைப்பாடுகளுக்கு உடனடி நடவடிக்கை எடுக்க முடியுமென்றும் அவர் மேலும் தெரிவித்துள்ளார். இதன்படி இந்தப் பொலீஸ் நிலையங்கள் தம்புள்ள, சீகிரிய மற்றும் கண்டலம ஆகிய பகுதிகளில் அமைக்கப்படவுள்ளன. இதேவேளை நாட்டின் சட்டவிதிகளை மீறும் சுற்றுலாப் பயணிகளுக்கு எதிராக இந்தப் பொலீஸ் நிலையங்களின் ஊடாக சட்டநடவடிக்கை எடுக்கப்படுமென்றும் அவர் தெரிவித்துள்ளார்.