ஆந்திர மாநிலத்தைப் பிரித்து புதிய மாநிலம் ஒன்றை ஏற்படுத்தப்போவதாக இந்திய அரசாங்கம் அறிவித்துள்ளது. பல நாட்கள் தொடர்ந்த வன்செயல் மிகுந்த போராட்டங்களை அடுத்து தெலுங்கானா என்ற புதிய மாநிலத்தை உருவாக்கும் பணிகள் ஆரம்பிக்கப்பட்டுள்ளதாக இந்திய உள்துறை அமைச்சர் ப. சிதம்பரம் தெரிவித்துள்ளார்.
ஆந்திரபிரதேசத்தின் 10 வடமாவட்டங்களை உள்ளடக்கி உருவாக்கப்படவுள்ள இந்த மாநிலத்தில் மூன்றரைக் கோடி மக்கள் இருப்பார்கள். இந்த முடிவு அறிவிக்கப்பட்டதை அடுத்து அதற்கு ஆதரவானவர்கள் பட்டாசுக்களை வெடித்து, தலைநகர் ஹைதராபாத்தில் நடனமாடிக் கொண்டாடினார்கள். அதேவேளை, புதிய மாநிலம் ஏற்படுத்தப்படுவதை கண்டித்து ஆந்திர மாநிலத்தின் பல சட்டமன்ற உறுப்பினர்கள் தமது பதவிகளை இராஜினாமாச் செய்துள்ளனர்.