19

19

வட.- கிழக்கில் இராணுவ மயமாக்கலை நீக்கினால் தேர்தலில் போட்டியிடாது விலகிக் கொள்வேன் : சிவாஜிலிங்கம்

sivajilingam.jpgவடக்கு கிழக்கு இராணுவ மயமாக்கல் நீக்கப்பட வேண்டும். உயர் பாதுகாப்பு வலயம் என தடை செய்யப்பட்டு மக்கள் குடியேற்றத்திற்குத் தடையாக இருப்பதை நீக்க வேண்டும்.

வடக்கு கிழக்கில் கைது செய்யப்பட்டு தடுத்து வைக்கப்பட்டுள்ள இரண்டாயிரம் அரசியல் கைதிகள் விடுதலை செய்யப்படுவதுடன் தமிழீழ விடுதலைப் புலிகள் என தடுப்பு முகாம்களில் கைது செய்து தடுத்து வைக்கப்பட்டிருக்கும் இளைஞர், யுவதிகளும் விடுதலை செய்யப்பட வேண்டும்.

இதற்கு ஜனாதிபதித் தேர்தலில் போட்டியிடும் பிரதம வேட்பாளர்கள் இருவரும் பகிரங்கமாக வாக்குறுதி தந்தால் நான் இந்த ஜனாதிபதித் தேர்தலில் போட்டிடுவதில் இருந்து விலகிக் கொள்கின்றேன்” என ஜனாதிபதி வேட்பாளரும் யாழ். மாவட்ட நாடாளுமன்ற உறுப்பினரும் தமிழீழ விடுதலை இயக்கத்தின் முக்கியஸ்தருமான சிவாஜிலிங்கம் குறிப்பிட்டார்.

ஜனாதிபதித் தேர்தலில் போட்டியிடும் சிவாஜிலிங்கம், தாம் போட்டியிடுவதற்கான காரணத்தை விளக்கும் பொருட்டு, ஊடகவியலாளர் மாநாடு ஒன்றை யாழ்ப்பாணம் பஸ்தியான் விடுதியில் இன்று காலை 9.45 மணியளவில் நடத்தினார்.

மாநாட்டில் அவர் ஊடகவியலாளர்களின் கேள்விகளுக்கும் பதிலளித்தார். அவர் அங்கு கூறியதாவது :

“தமிழ் மக்களின் வரலாற்றில் மிகவும் மோசமான பின்னடைவுகள், பாதிப்புக்கள் ஏற்பட்டுள்ள முக்கியமான காலகட்டத்தில் தான் ஜனாதிபதித் தேர்தல் எம் முன் வைக்கப்பட்டுள்ளது. தமிழ் மக்கள் எவ்வாறு நடந்து கொள்ள வேண்டும் என்பது கேள்விக்குரியாகவே உள்ளது.

விக்கிரம்பாகுவுடன்….

இதனையிட்டு பெரும் கருத்துக் கணிப்புகள் வெளிநாடுகளில் இடம்பெற்றுக் கொண்டிருக்கின்றன. நான் ஜனாதிபதித் தேர்தலில் போட்டியிடும் கலாநிதி விக்கிரமபாகு கருணாரட்னவுடன் கலந்துரையாடிய போது, அவர் என்னிடம் தனக்கு ஜனாதிபதித் தேர்தலில் தமிழ்த் தேசியக் கூட்டமைப்பு ஆதரவு தர வேண்டுமென என்னிடம் கேட்டிருந்தார். நான் ஏனையோருடனும் இது குறித்துக் கலந்துரையாட ஏற்பாடு செய்வதாகத் தெரிவித்திருந்தேன்.

இச்சமயத்தில், தமிழ்த் தேசியக் கூட்டமைப்பு ஜனாதிபதித் தேர்தலில் ஒரு வேட்பாளரை நிறுத்த வேண்டும் எனவும் அதற்கு சம்பந்தரை நிறுத்த நடவடிக்கை எடுப்பதெனவும் ஓர் அபிப்பராயம் காணப்பட்டது.

தமிழ்த் தேசியக் கூட்டமைப்பில் உள்ள கட்சிகளின் தலைவர்கள் கூடி கலந்துரையாடிய போது, தமிழீழ விடுதலை இயக்கத்தின் சார்பில் ஒருவரை வேட்பாளராக நிறுத்த வேண்டும் எனக் கேட்டிருந்தோம்.

இந்தியாவில் ஊடகவியலாளர் மாநாடு

இந்நிலையில் நான் இந்தியா சென்ற வேளையில் செல்வம் அடைக்கலநாதனுடன் தொடர்பு கொண்ட போது, தமிழ்த் தேசியக் கூட்டமைப்பு வேட்பாளர் எவரையும் நிறுத்தப் போவதில்லை என்று தெரிவித்திருந்தது. இவ்வேளை நான் இந்தியாவில் ஊடகவியலாளர் மாநாட்டை நடத்தி, ஜனாதிபதித் தேர்தலில் போட்டியிடவுள்ளதாகத் தெரிவித்தேன்.

ததேகூ நாடாளுமன்ற உறுப்பினர்கள் கூடியபோது சம்பந்தர், சரத் பொன்சேகாவுடனோ மகிந்தவுடனோ கதைப்பதில் பயன் இல்லையெனக் குறிப்பிட்டார். நெதர்லாந்து எமக்கும் அரசுக்கும் இடையில் தூதுவராக செயற்படுவதாகவும் அவர் குறிப்பிட்டார். நான் இதனை அந்தக் கூட்டத்தில் எதிர்த்தேன்.

கடந்த அறுபது வருடங்களாக நாம் பலராலும் ஏமாற்றப்பட்டுள்ளோம் இந்நிலைமை இனிமேலும் தொடரக் கூடாது எனவும் வலியுறுத்தினேன. எதிர்வரும் ஜனவரி 26ஆம் திகதியுடன் தமிழ் மக்களுடைய பிரச்சினைகள் மழுங்கடிக்கப்படும் எனவும் தெரிவித்தேன்.

தமிழ்க் கூட்டமைப்பை உடைக்க முயன்று வருகின்றோம் என யாராவது கருதினால் அது பிழையான கருத்தாகும்.” இவ்வாறு அவர் கூறினார்.
 
வீரகேசரி இணையம் 12/19/2009

தமிழர் பிரச்சினை குறித்து வாய் திறக்காத ஜெனரல் சரத் பொன்சேகாவின் கொள்கை பிரகடனம்

sarath-fonseka-election-poll.jpg2010 ஆம் ஆண்டு ஜனாதிபதி தேர்தலுக்கான எதிர்க்கட்சிகளின் பொது வேட்பாளர் ஜெனரல் சரத் பொன்சேகா நேற்று காலை 11.30 மணிக்கு கண்டி ஸ்ரீ புஷ்பாதான கேட்போர் கூடத்தில் நடைபெற்ற கூட்டத்தில் தனது கொள்கை பிரகடனத்தை மக்கள் முன் வாசித்து உறுதி மொழி எடுத்துக்கொண்டார். தமிழர் பிரச்சினைக்கு எத்தகைய தீர்வு என்பது பற்றியோ எந்த உறுதிமொழியும் வழங்கப்படவில்லை எனத் தெரியவருகிறது.

கொள்கைப் பிரகடனத்தின் சுருக்கம் வருமாறு

*இன்றைய நிறைவேற்று அதிகாரம் கொண்ட ஜனாதிபதி முறையில் ஜனநாயகம் சரியாக பேணப்படாத நிலையே காணப்படுகின்றது. எனவேஇ முதலாவதாக நாடாளுமன்ற ஜனநாயகத்தை வலுவடையச் செய்வதற்கு 17ஆவது திருத்த சட்டமூலத்துக்கு அங்கீகாரம் பெற்று, 
* சுயாதீன தேர்தல் ஆணைக்குழு 
* சுயாதீன பொலிஸ் ஆணைக்குழு 
* சுயாதீன நீதிமன்ற ஆணைக்குழு 
* சுயாதீன அரச சேவைகள் ஆணைக்குழு ஆகியவற்றை உருவாக்குவேன்.

*நாடாளுமன்றம் களைக்கப்பட்டதன் பின்னர், அங்கம் வகிக்கும் அனைத்து அரசியல் கட்சிகளும் உள்ளடக்கியதாக, கட்சி சாராத அரசாங்கம் ஒன்றை உருவாக்கிப் பொதுத் தேர்தலை ஜனநாயக ரீதியாகவும் நீதியாகவும் சுதந்திரமாகவும் நடத்துவதற்கு நடவடிக்கைகளை மேற்கொள்வேன்.

*ஜனாதிபதியாக பதவியேற்று ஒருமாத காலத்துக்குள் நிறைவேற்று அதிகார ஜனாதிபதி முறைமையை இல்லாமல் செய்வேன். அமைச்சரவையின் அனுமதியைப் பெற்று 6 மாத காலத்துக்குள் நாடாளுமன்ற சட்டமூலத்தினூடாக அதனை நீக்கி மக்கள் எதிர்பார்ப்பினை உறுதிப்படுத்துவேன்.

*நிறைவேற்று அதிகாரம் கொண்ட ஜனாதிபதி முறைமையை இல்லாமல் செய்த பின்னர், மக்களுக்குப் பொறுப்புடன் கடமையாற்றக் கூடிய ஜனாதிபதியாக நாடாளுமன்றத்தோடு இணைந்து செயற்படுவேன். எனது தாய்நாட்டுக்கும் மக்களுக்கும் என்னால் நிறைவேற்றக்கூடிய சேவைகளை முழுமையான அர்ப்பணிப்புடன் ஆற்றுவேன்.

*யுத்தம் காரணமாக இடம்பெயர்ந்து, சகோதர தமிழ் மக்கள் தற்போது முகாம்களில் சிறைப்படுத்தப்பட்டு வாழ்ந்து கொண்டிருக்கிறார்கள். அவர்களுக்கு அனைத்து வசதிகளையும் பெற்றுக் கொடுத்து, மீள்குடியேற்றம் செய்து, தொடர்ந்தும் அவர்கள் நிம்மதியாக வாழ்வதற்கான சகல வழிகளையும் முன்னுரிமையுடன் செயற்படுத்துவேன். அதேபோன்று பயங்கரவாத சந்தேக நபர்களாகக் கருதப்பட்டு, கைது செய்யப்பட்ட அனைவருக்கும் எதிராக முன்வைக்கப்பட்டுள்ள குற்றச்சாட்டுக்கள் தொடர்பில் விசாரணை நடத்தி, அவர்களுக்குப் புனர்வாழ்வு அளிப்பதற்கும் குற்றவாளிகள் அல்லாதோரை விடுவிப்பதற்கும் நடவடிக்கை எடுப்பேன்.

*முப்பது வருட யுத்த முடிவில் இடம்பெயர்ந்து அல்லது தாங்களாகவே தமது வதிவிடங்களைக் கைவிட்டுச் செல்ல வேண்டிய சூழல் ஏற்பட்டவர்கள் தொடர்பில் ஆராய்ந்து அவர்களின் விருப்பத்திற்கிணங்க, அவர்களைக் குடியமர்த்த நடவடிக்கை எடுப்பேன்.

*ஜனநாயக நாடொன்றில் அவசியமாகவுள்ள தகவல் மற்றும் கருத்து சுதந்திர உரிமையை உறுதிப்படுத்துவதற்குத் தேவையான நடைமுறைகளை உருவாக்குவேன். பத்திரிகைப் பேரவை சட்டமூலத்தை ஒழித்து, நாட்டில் சுதந்திரமானதும் நீதியானதுமான ஊடக கலாசாரத்தைக் கட்டியெழுப்பப் பாடுபடுவேன்.

* ஜனாதிபதியாகத் தெரிவு செய்யப்பட்டதன் பின்னர், நீதியானதும் நியாயமானதுமான தேர்தலைக் கூடிய விரைவில் நடத்துவதற்கு ஆவன செய்வேன். தேர்தல் காலத்தில் அரச மற்றும் தனியார் ஊடகங்கள் சுயாதீனமாக இயங்குவதற்கு அத்தியாவசியமான நடவடிக்கைகளை எடுப்பேன்.

* நாட்டு மக்கள் அனைவரும் தமது உரிமையைப் பெற்றுக் கொள்வதற்காக எடுக்கும் ஜனநாயக செயற்பாடுகளுக்குத் தடையாகவுள்ளவற்றை நீக்குவதற்கு நடவடிக்கை எடுப்பேன்.

*கடந்த காலங்களிலிருந்து ஊழல், லஞ்சம் போன்றவை நாட்டை ஆக்கிரமித்துக் கொண்டிருக்கின்றன. எமது நாட்டின் பொருளாதார அபிவிருத்திக்கு தடையாகவுள்ள பிரதான காரணிகள் இவை என்ற வகையில், அவற்றை முற்றுமுழுதாக ஒழிக்கவும் சமூகத்தில் விழிப்புணர்வு ஏற்படுத்தவும் நடவடிக்கை எடுப்பேன்.

இங்கே குறிப்பிட்டுள்ள அனைத்தையும் நிறைவேற்றுவது எனது பிரதான கடமையாகும் என கூட்டத்தில் தனது கொள்கை பிரகடனத்தை மக்கள் முன் வாசித்து உறுதி மொழி எடுத்துக்கொண்டார். இந்நிகழ்வில் மக்கள் விடுதலை முன்னணியின் தலைவர் சோமவன்ச அமரசிங்க, ஜனநாயக மக்கள் முன்னணியின் தலைவர் மனோ கணேசன், ஐக்கிய தேசியக் கட்சியில் உப தலைவர் கரு ஜெயசூரிய, நாடாளுமன்ற உறுப்பினர் லக்ஷ்மன் கிரியெல்ல, ஸ்ரீ லங்கா சுதந்திரக் கட்சியின் நாடாளுமன்ற உறுப்பினர் அர்ஜுண ரணதுங்க, மக்கள் விடுதலை முன்னணியின் நாடாளுமன்ற உறுப்பினர் அநுர குமார திஸாநாயக்க, ஸ்ரீ லங்கா சுதந்திர கட்சி மக்கள் பிரிவின் தலைவர் மங்கள சமரவீர ஆகியோர் கலந்துகொண்டனர்.

​நீதி, நேர்மையான தேர்தல் நடத்த பொலிஸ் விசேட திட்டம் – வாக்குச்சாவடிகளுக்கு தலா 2 பொலிஸ்

vote.jpgஜனாதிபதித் தேர்தலின் போது வாக்குச்சாவடிகளில் முறைகேடுகள், குழப்பங்கள் நடைபெறாதவாறு பலத்த பாதுகாப்பு ஏற்பாடுகளை செய்வதற்கு பொலிஸ் திணைக்களம் திட்டமிட்டுள்ளதாக பொலிஸ் திணைக்களத்தின் சிரேஷ்ட ஊடக பேச்சாளர் (சிரேஷ்ட பிரதி பொலிஸ் மா அதிபர்) நிமல் மெதிவக்க தெரிவித்தார்.

நீதியும், நேர்மையுமான ஒரு தேர்தலை நடத்துவதற்கும் அமைதி யான முறையில் மக்கள் வாக்களிப்பு நிலையங்களுக்கு செல்வதற்கும் ஏதுவாக வாக்குச் சாவடிகள் அனைத்திலும் பலத்த பாதுகாப்பு ஏற்பாடுகள் செய்யப்பட உள்ளதாகவும் இதற்கான திட்டமொன்று தயாரிக்கப்பட்டு வருவதாகவும் அவர் தெரிவித்தார்.

ஒவ்வொரு வாக்குச் சாவடிக்கும் தலா இரண்டு பொலிஸ் உத்தியோகத்தர்கள் வீதம் கடமையில் ஈடுபடுத்தப்படுவார்கள். 5 வாக்குச் சாவடிகளை உள்ளடக்கியதாக நடமாடும் பொலிஸ் ரோந்து சேவையும் ஏற்பாடு செய்யப்படவுள்ளது.

இலங்கையிலுள்ள 432 பொலிஸ் நிலையங்களுக்கும் தலா ஒரு குழு வீதம் கலகம் அடக்கும் பொலிஸ் குழுக்கள் நியமிக்கப்படவும் உள்ளதென பிரதி பொலிஸ் மா அதிபர் நிமல் மெதிவக்க தெரிவித்தார்.

அத்துடன் தேர்தல் சட்டங்களுக்கு அமைவாக பொலிஸாரின் பாதுகாப்புடன் கட்டவுட்டுகள், பேனர்கள், போஸ்டர்கள் அகற்றும் வேலைகள் உடனடியாக ஆரம்பிக்கப்பட்டு விட்டதாகவும் அவர் தெரிவித்தார்.

குவான்டனாமோ கைதிகளை அடைக்க சிறைக்கூடத்தை விலைக்கு வாங்கியது ஒபாமா அரசு

கியூபாவின் குவான்டனாமோ சிறையில் இருந்து அமெரிக்கா கொண்டு வரப்பட்ட கைதிகளை அடைக்க இல்லினாய்ஸ் மாகாணத்தில் புதிய சிறைக்கூடம் ஒன்றை ஒபாமா அரசு விலைக்கு வாங்குகிறது.

இது குறித்து இன்று செய்தியாளர்களிடம் பேசிய வெள்ளை மாளிகை செய்தித் தொடர்பாளர் ரொபர்ட்உட்ஸ், ‘இல்லினாய்ஸில் உள்ள தாம்ஸன் சிறைக் கூடத்தை விலைக்கு வாங்குவதற்கான நடவடிக்கைகளை அமெரிக்க சிறைக் கழகம் மேற்கொள்ள வேண்டும் என அதிபர் ஒபாமா உத்தரவிட்டுள்ளார் என்றார்.

குவான்டனாமோ சிறையில் இருக்கும் எத்தனை கைதிகள் இல்லினாய்ஸ் சிறையில் அடைக்கப்படுவார்கள் என்ற விவரத்தை வெள்ளை மாளிகை வெளியிடவில்லை என்ற போதிலும் புதிய சிறைக் கூடத்தில் 100 கைதிகள் இருப்பார்கள் என இல்லினாய்ஸ் நாடாளுமன்ற உறுப்பினர் ரிச்சர்ட்டர்பின் கூறியதாக தகவல்கள் தெரிவிக்கின்றன.

குவான்டனாமோ சிறையை நிர்வகித்த அதிகாரிகளே, இல்லினாய்ஸ் சிறைக்கூடத்தையும் நிர்வகிப்பார்கள் எனவும் கூறப்பட்டுள்ளது.

க. பொ. த. (உ/த): தகவல் தொழில்நுட்ப பரீட்சை 20ம் திகதி

stu.jpgக. பொ. த. உயர்தர முதலாம் ஆண்டு மாணவர் களுக்காக நடத்தப்படும் பொது தகவல் தொழில்நுட்ப பரீட்சை நாளை 20 ஆம் திகதி நடைபெறும் என பரீட்சை திணைக்களம் அறிவிக்கிறது. முன்னர் அறிவிக்கப்பட்டதன்படியே குறிப்பிட்ட தினத்தில் பரீட்சைகள் நடைபெறுவதுடன் நாடு முழுவதுமுள்ள 843 பரீட்சை நிலையங்களில் நடைபெற ஏற்பாடாகியுள்ளது.

இப்பரீட்சைக்குத் தோற்றவுள்ள ஒரு லட்சத்து 20 ஆயிரம் மாணவர்களுக்கும் உரிய அனுமதி அட்டைகள் அந்தந்தப் பாடசாலை அதிபர்களுக்கு அனுப்பி வைக்கப்பட்டுள்ளன. அதிபர்களிடமிருந்து அனுமதி அட்டைகளை பெற்றுக்கொள்ளுமாறு பரீட்சை ஆணையாளர் மாணவர்களை கேட்டுக்கொண்டுள்ளார்.

உலகிலேயே சிறந்த சுகாதார சேவை வழங்கும் நாடு இலங்கை

அரசாங்கம் சுகாதார சேவையை மேம்படுத்தவென பாரியளவு நிதியை வருடாவருடம் முதலீடு செய்து வருவதாக மருத்துவத் துறை புத்திஜீவிகள் நேற்றுத் தெரிவித்தனர். இதன் பயனாக தென்னாசிரியாவில் மாத்திரமல்லாமல் உலகிலேயே சிறந்த சுகாதார சேவை வழங்கும் நாடு என்ற நற்பெயரை எம்மால் பெற்றுக்கொள்ள முடிந்திருப்பதாகவும் அவர்கள் குறிப்பிட்டனர்.

2002ம் ஆண்டில் நாட்டில் யுத்தமற்ற சூழல் நிலவிய போதிலும் அக்காலப் பகுதியில் சுகாதாரத் துறை உட்பட எந்தத் துறைக்கும் ஆட்சேர்ப்பு மேற்கொள்ளப்படவுமில்லை உட்கட்டமைப்பு அபிவிருத்தி செய்யப்படவுமில்லை எனவும் அவர்கள் கூறினர். தகவல் ஊடகத்துறை அமைச்சின் கேட்போர் கூடத்தில் ஒலி, ஒளி நிபுணத்துவக் கலந்துரையாடல் என்ற தொனிப் பொருளில் இடம்பெற்ற செய்தியாளர் மாநட்டின் போதே அவர்கள் மேற்கண்டவாறு குறிப்பிட்டனர். இச் செய்தியாளர் மாநாட்டில் கொழும்பு தேசிய வைத்தியசாலைப் பணிப்பாளர் டாக்டர் ஹெக்டர் வீரசிங்க,  சுகாதாரப் பராமரிப்பு, போஷாக்குத் துறை அமைச்சின் பொது சுகாதார சேவைகள் பிரதிப் பணிப்பாளர் நாயகம் டாக்டர் பாலித மஹீபால, ஸ்ரீ ஜயவர்த்தனபுர பல்கலைக்கழக மருத்துவ பீடாதிபதி பேராசிரியர் தயாசிறி பெர்னாண்டோ, கொழும்பு தேசிய வைத்தியசாலையின் நரம்பியல் சத்திர சிகிச்சை நிபுணர் ரன்ஜனி கமகே ஆகியோர் கலந்துகொண் டார்கள்.

ச்செய்தியாளர் மாநாட்டில் பணிப்பாளர் டாக்டர் ஹெக்டர் வீரசிங்க குறிப்பிடுகையில், அரசாங்கம் சுகாதார சேவையை மேம்படுத்தவென மொத்த தேசிய உற்பத்தியில் 2 சத வீதத்திற்கும் மேல் வருடா வருடம் செலவிட்டு வருகின்றது. யுத்தம் நடைபெற்ற போதிலும் அரசாங்கம் சுகாதார சேவை மேம்பாட்டுக்கான நிதியொதுக்கீடுகளைக் குறைக்கவில்லை. கடந்த சில வருடங்களாக மத்திய அரசின் கீழுள்ள ஆஸ்பத்திரிகள் மட்டுமல்லாமல் மாகாண சபைகளின் கீழுள்ள ஆஸ்பத்திரிகளும் பாரிய அபிவிருத்தி கண்டுள்ளன. உட்கட்டமைப்பு துறையும், மருத்துவ உபகரண வசதியும் மேம்படுத் தப்பட்டுள்ளன. இதற்கென மில்லியன் கணக்கான ரூபாவை அரசாங்கம் செலவிட்டிருக்கின்றது.

கொழும்பு தேசிய வைத்தியசாலையில் மூளையில் ஏற்படுகின்ற பாதிப்புக்களுக்குச் சிகிச்சை அளிக்கவென 2137 மில்லியன் ரூபா செலவில் தனியான சிகிச்சை பிரிவு அமைக்கப்பட்டுள்ளது. குருநாகல் போதனா ஆஸ்பத்திரியில் 110 மில்லியன் ரூபா செலவில் புற்றுநோய் சிகிச்சை பிரிவு அமைக்கப்பட்டுள்ளது. இதேபோல் கொழும்பு வடக்கு (ராகம), கொழும்பு தெற்கு (களு போவில), காசல் வீதி, லேடி ரிட் ஜ்வே ஆஸ்பத்திரிகள் உட்பட சகல ஆஸ்பத்திரிகளிலும் உட்கட்டமைப்பு வசதிகள் மேம்படுத்தப்பட்டுள்ளன.

அதேநேரம் சுகாதாரத்துறையின் மனித வள மேம்பாட்டிலும் அரசாங்கம் அதிக கவனம் செலுத்தியுள்ளது. மஹிந்த சிந்தனையின் கீழ் 15000 தாதியர் பயிற்சிக்குச் சேர்த்துக் கொள்ளப்பட்டுள்ளனர். அரசாங்க ஆஸ்பத்திரிகளுக்கு வருடா வருடம் டாக்டர்கள் சேர்த்துக் கொள்ளப்பட்டுள்ளனர். இதேபோல், ஏனைய துறைகளுக்கும் ஆட்சேர்ப்பு மேற்கொள்ளப்பட்டுள்ளன என்றார்.

தெலங்கானா விவகாரம் மக்களவையில் மீண்டும் புயலைக் கிளப்பியதால் அவை மறுதேதி குறிப்பிடப்படாமல் ஒத்திவைக்கப்பட்டது.

susmaa.jpgதெலங்கானா மக்களவை வெள்ளிக்கிழமை தொடங்கி நடந்து கொண்டிருந்தது. அமைச்சர்களுக்கு ஊதியம் மற்றும் படியை உயர்த்தும் மசோதா, உயர் நீதிமன்றங்களில் வர்த்தக வழக்குகளை கையாள தனிப்பிரிவு தொடங்குவது தொடர்பான மசோதா உள்பட 5 மசோதாக்கள் அவசர அவசரமாக தாக்கல் செய்யப்பட்டு நிறைவேற்றப்பட்டன.

கேள்வி நேரம் தொடங்கியதும் தனி தெலங்கானா மாநிலத்தை ஆதரித்தும், எதிர்த்தும் பலத்த குரல் எழும்பியது. தெலுங்கு தேச கட்சியை சேர்ந்த 5 எம்.பி.க்கள் தெலங்கானாவை எதிர்த்து வாசகங்கள் அடங்கிய அட்டையை பிடித்தவாறும் கோஷம் எழுப்பியவாறும் அவைத் தலைவர் மீரா குமார் இருக்கையை சூழ்ந்து கொண்டனர்.

தனி தெலங்கானா மாநிலம் அமைக்கப்படும் என்று மத்திய அரசு டிசம்பர் 9-ம் தேதி அறிவித்தது. அந்த தினத்தை நாங்கள் கருப்பு தினமாக கருதுகிறோம்.  இதனால் அந்த அறிவிப்பை உள்துறை அமைச்சர் ப.சிதம்பரம் திரும்பப்பெற வேண்டும் என்று அவர்கள் வலியுறுத்தினர்.

இவர்களை பின்தொடர்ந்து தெலங்கானா ஆதரவு காங்கிரஸ் எம்.பி.க்கள் தங்கள் இருக்கைகளைவிட்டு எழுந்து அட்டையை கையில் ஏந்தியவாறு அவையின் மையப்பகுதிக்கு வந்து சூழ்ந்து கொண்டனர்.  இவர்களுடன் சேர்ந்து கொண்டு தனி தெலங்கானாவை ஆதரித்து தெலுங்கு தேச எம்.பி. சுரேஷும் குரல் கொடுத்தார்.

அதைப்போல, போடோலாந்து தனி மாநிலம் உருவாக்க வலியுறுத்தி போடோலாந்து மக்கள் முன்னணி கட்சி உறுப்பினர் எஸ்.கே.பிவிஸ் முத்தையாரியும் குரல் கொடுத்தார்.  அவரும் தனது இருக்கையை விட்டு எழுந்து அவையின் மையப் பகுதிக்கு வந்து கோஷம் எழுப்பினார். இதனால் அவையில் கூச்சல் குழப்பம் ஏற்பட்டது.

ஜனாதிபதி மஹிந்த ராஜபக்ஷவுக்கு தேசிய காங்கிரஸ் நிபந்தனையற்ற ஆதரவு

ஜனாதிபதி மஹிந்த ராஜபக்ஷவுக்கு நிபந்தனையற்ற ஆதரவுகளை வழங்க தேசிய காங்கிரஸ் தீர்மானித்துள்ளதாக அதன் தலைவரும், நீர் வழங்கல் வடிகாலமைப்பு அமைச்சருமான ஏ. எல். எம். அதாஉல்லா தெரிவித்தார். பயங்கரவாதம் ஒழிக்கப்பட்டு, வடக்கு, கிழக்கில் சகல இன மக்களும் ஒற்றுமையுடன் வாழவேண்டும் என்ற சிறுபான்மையினரின் அபிலாஷைகளை ஏற்கனவே நிறைவேற்றித் தந்த ஜனாதிபதிக்கு நன்றி தெரிவுக்கும் முகமாகவே இந்த தீர்மானத்தை எடுத்ததாக அவர் மேலும் தெரிவித்தார்.

நிறைவேற்று அதிகாரம் கொண்ட ஜனாதிபதி முறையே இந்த நாட்டு சிறுபான்மை மக்களுக்கு மிகவும் பாதுகாப்பானது என்று திட்டவட்டமாக கூறுவதாகவும் அமைச்சர் சுட்டிக்காட்டினார். தேர்தலின் போது ஜனாதிபதி மஹிந்த ராஜபக்ஷவுக்கு தேசிய காங்கிரஸ் வழங்கவுள்ள ஆதரவு தொடர்பாக ஊடகங்களுக்கு விளக்கமளிக்கும் விசேட செய்தியாளர் மாநாடு கொழும்பு கலதாரி ஹோட்டலில் நடைபெற்றது. இந்த செய்தியாளர் மாநாட்டில் அமைச்சர் மேலும் உரையாற்றுகையில்,

சகல இன மக்களும் சந்தோஷமாக வாழ வேண்டும், மீண்டும் சமாதானத்தை பெற்றுக்கொடுக்க வேண்டும் என்ற பிரதான நோக்குடனே தேசிய காங்கிரஸ் ஆரம்பித்து வைக்கப்பட்டது. வடக்கிலிருந்து கிழக்கை பிரித்து தரும்படியும் சிங்கள, தமிழ், முஸ்லிம் மக்கள் ஒற்றுமையுடனும், சமாதானத்துடனும் வாழக்கூடிய சூழலை ஏற்படுத்தித்தர வேண்டும் என்று ஜனாதிபதி மஹிந்த ராஜபக்ஷ பிரதமராக இருந்த போது கோரிக்கை விடுத்தோம். அது இன்று நிறைவேற்றப்பட்டுள்ளது.

30 வருடங்களுக்கு பிறகு ஜனாதிபதியின் தலைமையில் சுதந்திரக் காற்றை சுவாசிக்க நல்லதொரு சந்தர்ப்பம் கிடைத்துள்ளது. எமக்கு கிடைத்துள்ள சுதந்திரத்தை நாங்கள் மீண்டும் இழக்க தயாராக இல்லை. வடக்கு, கிழக்கில் மீண்டும் குழப்பத்தை ஏற்படுத்த சில அரசியல் கட்சிகள் முயற்சிக்கின்றன. இதற்கு ஒரு போதும் இடமளிக்கப் போவதில்லை.

ஐ.தே.க., முஸ்லிம் காங்கிரஸ் போன்ற கட்சி தேர்தலுக்காக அரசியல் நடத்துபவர்கள். தேர்தல் காலங்களில் மாத்திரம் வடக்கு, கிழக்கு பிரதேசத்திற்கு வந்து மக்களை குழப்புபவர்களை இன்று மக்களே விரட்டி அடித்துள்ளனர். ஜனாதிபதி நாட்டின் மீதும், மக்களின் மீதும் அன்பு வைத்துள்ள ஒரே ஒரு தலைவர். எனவே சிலரது பொய்யான வாக்குறுதிகளை நம்பி முஸ்லிம் மக்கள் மீண்டும் ஒரு போதும் தவறிழைக்கப் போவதில்லை.

சமாதான ஒப்பந்தம் என்ற போர்வையில் அன்றைய தலைமைத்துவம் தோட்டாக்களை எடுத்துக் கொண்டு துப்பாக்கிகளை கொடுத்தது. அதனால் பயங்கரவாதத்தை தோற்கடிக்க முடியாமல் போனது. தற்பொழுது தோட்டாக்களுடன் துப்பாக்கியை கொடுத்ததன் மூலமே பயங்கரவாதத்தை முற்றாக இல்லாதொழிக்க முடிந்தது. இதற்கு சரியான சந்தர்ப்பத்தில் உரிய தீர்மான த்தை எடுக்கும் அரசியல் தலைமைத்துவம் அவசியம். பயங்கரவாதத்தை இல்லாதொழி த்து நாட்டில் சமாதானத்தை ஏற்படுத்தியமை க்காக தமிழ், முஸ்லிம் மக்கள் ஜனாதிபதி மஹிந்த ராஜபக்ஷவை நாங்கள் வெற்றிபெறச் செய்ய முன்வந்துள்ளதால் சிங்கள மக்களும் முன்வர வேண்டும் என்றும் அமைச்சர் வேண்டுகோள் விடுத்தார்.

பொன்சேகா பக்கம் யாவரும் அணிதிரள்வது காலத்தின் தேவை ஆளும் தரப்பிலிருந்து வெளியேறிய அர்ஜுன

arjuna-ranatunga.jpgநாட்டில் புரையோடிப்போயுள்ள ஊழல், மோசடிகளை ஒழித்துக்கட்டி நல்லாட்சியை மலரச் செய்யும் பொருட்டு ஜெனரல் சரத் பொன்சேகாவின் பக்கம் எல்லோரும் அணிதிரளவேண்டியது காலத்தின் தேவையாகியுள்ளதாக ஐக்கிய மக்கள் சுதந்திர முன்னணியின் பாராளுமன்ற உறுப்பினரும் இலங்கை கிரிக்கெட் அணியின் முன்னாள் தலைவருமான அர்ஜுன ரணதுங்க தெரிவித்துள்ளார்.

தான் இந்த முடிவை எடுக்காது விட்டால் அது ஸ்ரீ லங்கா சுதந்திரக் கட்சிக்குச் செய்யும் துரோகமாகவே இருக்கும் எனவும் அவர் சுட்டிக்காட்டியுள்ளார். அரசாங்கத்தரப்பிலிருந்து விலகி ஜனாதிபதித் தேர்தலில் பொதுவேட்பாளராகப் போட்டியிடும் ஜெனரல் சரத் பொன்சேகாவுக்கு ஆதரவளிக்க முன்வந்துள்ள அர்ஜுன ரணதுங்க வியாழக்கிழமை ஜெனரல் பொன்சேகாவின் கொழும்பிலுள்ள தேர்தல் அலுவலகத்தில் நடத்திய விசேட ஊடகவியலாளர் மாநாட்டில் இந்த அறிவிப்பை விடுத்துள்ளார்.

ஜெனரல் சரத் பொன்சேகாவுடன் செய்தியாளர் மாநாட்டில் கலந்துகொண்ட அர்ஜுன ரணதுங்க மேலும் கருத்துத் தெரிவிக்கையில் கூறியதாவதுநான் இந்த முடிவை அவசரப்பட்டு எடுக்கவில்லை. மிக நிதானமாக ஆராய்ந்த பின்னர் நாட்டின் நலன் கருதியே இந்த நிலைப்பாட்டை எடுத்தேன். ஸ்ரீ லங்கா சுதந்திரக் கட்சி உறுப்பினர் என்ற வகையில் நான் இந்த முடிவை எடுக்காது விட்டால் அது அக்கட்சிக்குச் செய்யும் துரோகமாகும்.”கடந்த கால நிலைமைகள் பற்றி நன்கு யோசித்த நான் இந்த தீர்மானத்தை எடுத்தேன். இது எவரது அழுத்தத்தினாலும் எடுக்கப்பட்ட முடிவல்ல. நான் எப்போதும் எனது தேவைகளை விட தேவைகளுக்கே முன்னுரிமை வழங்கி செயற்பட்டிருக்கிறேன். நாட்டின் தேவைக்காக எனது தராதரங்களைக் கைவிட்டு கூட செயற்பட்டிருக்கிறேன்.

கடந்த காலங்களில் அரசில் இடம்பெற்ற விடயங்கள் பற்றி எனக்குத் தெரியும். யுத்த வெற்றிக்கு வழி நடத்தி செயற்பட்ட ஜெனரல் பொன்சேகா ஜனாதிபதித் தேர்தலில் போட்டிக்கு இறங்கியதும் எவ்வளவு கீழ்த்தரமாகத் தூற்றினார்கள் என்பதை நான் அறிவேன். இதேபோல் நான் எனது தலைமையில் 1996 ஆம் ஆண்டு இலங்கை அணி கிரிக்கெட் உலகக் கிண்ணத்தைக் கைப்பற்றிய போது பாராட்டினார்கள். ஆனால், 1999 ஆம் ஆண்டு தோற்றதும் தூற்றினார்கள். அந்த நிலைமை தான் இன்று ஜெனரல் பொன்சேகாவுக்கும். இவ்வாறான விடயங்களுக்கு இடமளிக்க முடியாது.

இன்று கிரிக்கெட்டில் மட்டுமல்லாது அனைத்து விளையாட்டுகளிலும் மோசடி நிலவுகிறது. அவற்றை கண்டுபிடித்து குற்றவாளிகளுக்கு தண்டனை வழங்க எந்தவித நடவடிக்கையும் எடுக்கப்படவில்லை. ஏன் விசாரணை கூட நடத்தப்படவில்லை. அரசுக்கு பல தடவைகள் எடுத்துக் கூறியும் அவை அரசின் காதுகளில் நுழையவில்லை.நான் இன்று எடுத்துள்ள முடிவு தொடர்பில் ஜெனரல் பொன்சேகா மீது சேறு பூசுவது போல் நாளை என்மீது சேறு பூசுவர், நாட்டைக் காட்டிக்கொடுத்தவர், தேசத் துரோகி என்றெல்லாம் துற்றுவர்.

நான் இன்னமும் ஸ்ரீ லங்கா சுதந்திரக் கட்சி உறுப்பினராகவே இருக்கின்றேன். ஆனால், நாளை என்ன நடக்கும் என்பதை என்னால் எதுவும் கூற முடியாது. நாட்டின் நலனுக்காகவே இந்த முடிவை எடுத்தேன் எனக் கூறினார். செய்தியாளர் ஒருவர் உங்கள் சகோதரர் மேல் மாகாண முதலமைச்சர் பிரசன்ன ரணதுங்கவின் ஆதரவு உங்களுக்குக் கிட்டுமா எனக் கேட்டபோது பதிலளித்த அர்ஜுன ரணதுங்க கூறியதாவது அவர் எனது உடன் பிறந்த சகோதரர். அது குடும்ப உறவு அதனைப் பிரிக்க முடியாது, இதில் அரசியலை கலக்க விரும்பவில்லை. எனது அரசியல் நிலைப்பாட்டில் அவர் இருக்க வேண்டுமென்று நான் கட்டுப்படுத்தமாட்டேன். எனக்குச் சரியெனப்பட்டதை நான் செய்திருக்கின்றேன்.

நாட்டை சரிசெய்வதற்கு இது தான் இறுதிச் சந்தர்ப்பம். ஊழல் மோசடிகளை ஒழிப்பதற்காகவே நாம் ஒன்றுபட்டுள்ளோம். வேறெந்த குரோதங்களும் எமக்குக் கிடையாது. ஊழல் மோசடியில்லாத நாடாக இலங்கை மலர வேண்டும் எனவும் அவர் கூறினார். சந்திரிகா பண்டாரநாயக்க குமாரதுங்கவின் ஆதரவு உங்களுக்குக்கிட்டுமா என செய்தியாளர் கேள்வி எழுப்பியபோது குறுக்கிட்டு அதற்குப் பதிலளித்த ஜெனரல் சரத் பொன்சேகா அர்ஜுனவினதும் சந்திரிகாவினதும் உண்மையான சுதந்திரக் கட்சி ஆதரவாளர்களும் எனக்கு ஆதரவளிப்பர் என்று தெரிவித்தார்.