புதிய திசைகள் அமைப்பினரின் ‘இலங்கையின் இன்றைய அரசியல் நிலைகள்’ என்ற தலைப்பிலான சந்திப்பு லண்டன் லூசியம் சிவன்கோயில் மண்டபத்தில் பெப்ரவரி 6ல் இடம்பெற்றது. மே 18க்குப் பின் உருவான பல்வேறு அரசியல் அமைப்புகளின் தோற்றத்தில் புதிய திசைகள் லண்டனில் உருவான ஒரு அமைப்பு. முன்னர் தமிழீழ மக்கள் கட்சி என்று அறியப்பட்ட அமைப்பின் ஒரு பிரிவினர் இவ்வமைப்பை மே 18க்குப் பின்னதாக உருவாக்கி உள்ளனர். இலங்கையில் தமிழ்பேசும் மக்கள் தாமே தமது உரிமைகள் பற்றிய நிலைப்பாட்டை தேர்ந்து எடுக்க வேண்டும் என்றும் அதற்கான பின்புல ஆதரவை லண்டனிலிருந்து வழங்குவது என்ற கோட்பாட்டுடனேயே இந்த அமைப்பு செயற்ப்பட ஆரம்பித்துள்ளதாக இதன் ஸ்தாபகர்களில் ஒருவரான மாசில் பாலன் தெரிவித்தார்.
கூட்டம் ஈழப்போராட்டத்தில் அர்ப்பணிப்பு செய்த போராளிகள் பொதுமக்கள் எல்லோருக்குமான ஒரு நிமிட மெளன அஞ்சலியுடன் ஆரம்பமானது.
கூட்டத்தில் பல்வேறு அரசியல் கருத்துக்களும் முட்டி மோதியது. நாம் புலம்பெயர்ந்த நாடுகளில் இருந்து கொண்டு போராட்டங்களை செய்ய முடியாது என்றும் நாட்டிலுள்ள மக்களே தமது அரசியல் போராட்டங்களை தீவிரப்படுத்தி செயற்பட வேண்டும் என ஒரு கருத்து முன்வைக்கப்பட்டது. அதற்கு பதில் அளித்தவர்கள் நாம்தான் அவர்களுக்கான ஆதாரதளம் என்றும் எம்மிடையே தான் அதற்கான பல பொறுப்புக்கள் உள்ளது என்றும் எமது ஆதரவின்றி அவர்களால் செயற்ப்பட முடியாது என்றும் தெரிவித்தனர். இதனிடையே நாங்கள் தான் கடந்த காலங்களில் போராட்டங்களை இங்கிருந்து செயற்ப்பட்டு மக்களை முள்ளிவாய்க்காலில் அழித்தவர்கள் என்றும் ஆகவே இங்கிருந்து செயற்ப்படுவது என்பது மிகவும் ஆபத்தானது, இங்குள்ளவர்கள் அங்குள்ள மக்களின் அரசியல் நலன்களிலும் பார்க்க தங்கள் அரசியல் அடையாளத்தையே முன்னிறுத்திச் செயற்படுவதாகவும் குற்றம் சாட்டப்பட்டது. இதனிடையே பதிலளித்த புதிய திசைகள் கூட்ட ஏற்பாட்டாளர் புவி நாம் இங்கிருந்து தலைமை தாங்குவது என்பதில் யாருக்கும் உடன்பாடு இல்லை என்பதில் மிகத்தெளிவாக இருக்க விரும்புகிறோம் என்றும் புதிய திசைகள் தமிழ் மக்களின் போராட்டத்திற்கான ஆதரவு அமைப்பாகவே இப்போதைக்கு இருக்கும் எனவும் தெரிவித்தார்.
புலிகளின் கடந்தகாலத் தோல்விகளையும் முள்ளிவாய்க்கால் நடவடிக்கைககளையும் பேச முற்ப்படும்போது கூட்டத்தில் இருந்த சிலர் பலமான விசனங்களை எழுப்பினர். புலிகளின் கடந்தகால நடவடிக்கைகள் சிலவற்றை வாதத்திற்கு எடுத்துச் சென்ற போது விவாதம் உணர்ச்சிகரமானதாக மாறியது. குறிப்பாக விடுதலை அமைப்புகளை அழித்தமை இறுதி யுத்தத்தில் தமிழ் பொது மக்கள் மீது தாமே தாக்குதலை நடாத்தி அரசியல் செய்ய முற்பட்டமை, மே 18 வரை இருந்த புலிகளின் சொத்துக்கள் மாயமாக மறைந்தமை, வன்னி மக்கள் முகாம்களில் வாட பல்லாயிரம் பவுண்கள் செலவில் மாவீரர் தினத்தை நடாத்தி பணத்தை விரயமாக்கியமை போன்ற விடயங்கள் பெரும்பாலான நேரத்தை எடுத்துக்கொண்டது.
இதில் முக்கியமாக புலிகளினால் நடாத்தப்பட்ட மாவீரர் தினம் பற்றியும் அதன் செலவுகள் பற்றியும் குறிப்பிடும்போது மாவீரர் தினம் ஒன்று தான் தமிழ் மக்களை ஒன்றிணைக்கும் தினமாக இருக்கும் என்றும் அது தமிழ் மக்களுக்காக போராடிய அத்தனை பேருக்குமானது என்றும் சிலர் கருத்துக்களை முன்வைத்தனர். இதனை இடைமறித்து அந்த மாவீரர்தின விழாவில் சிறீசபாரத்தினம், உமா மகேஸ்வரன் மற்றும் போராளிகளது படங்கள் இல்லை என்றும் அவையும் இருந்திருந்தால் இது பொதுவான தமிழ்ப் போராளிகளுக்கான தினமாகலாம் என்றும் கருத்து வைக்கப்பட்டது. அங்கிருந்த யாரும் மாவீரர்களை குறைத்து மதிப்பிடவோ கொச்சைப்படுத்தவோ இல்லை. ஆனால் மாவீரர் தினத்தை பணத்தைக் கொட்டி விரயமாக்கும் களியாட்ட நிகழ்வாக அல்லாமல் ஆக்கபூர்வமான நிகழ்வாக கொண்டாடப்பட வேண்டும் என்ற கருத்து வலுவாக வெளிப்பட்டது.
இதனை தொடரந்து மாற்றுக் கருத்தாளர்களின் கடந்த காலங்கள் பற்றியும் குறிப்பாக மாற்றுக் கருத்தாளர்களில் பலர் புலிகளை தேசிய சக்தியாக ஏற்றுக்கொண்டு செயற்பட முனைந்தபோதும் புலிகளால் அந்த அமைப்பாளர்கள் சுட்டுக்கொல்லப்பட்டது பற்றியும் இதில் தீப்பொறி என்எல்எப்ரி போன்ற அமைப்புக்களுக்கு நடந்தவை பற்றியும் சில கருத்துக்கள் வெளிப்பட்டது. புலிகளின் தந்திரோபாயமே இணைவது போன்று இணைவதும் பின்னர் அவர்களை அழிப்பதும் அதிலும் தாம் மட்டுமே தமிழர்களின் ஏகபோக பிரதிநிதிகள் என்பதை உறுதிப்படுத்துவது பற்றியதுமான கருத்துக்கள் பல எழுந்தன. இதனிடையே புலிகளை எதிர்ப்பவர்கள் அரசுடன் இணைந்து தமிழர்களுக்கு எதிராக செயற்ப்பட்டனரே அன்றி தமிழர்க்கு ஆதரவான போராட்டங்களை செய்யவில்லை என்று குற்றம்சாட்டப்பட்டது. இதனை நிராகரித்து கருத்து வெளியிட்ட சிலர் புலிகளை எதிர்த்தவர்கள் எல்லாம் அரச ஆதரவாளர்கள் என்று குற்றம் சாட்டப்படுவதை முட்டாள்தனமானது என்றனர். அரசுக்கு எதிராகவும் புலிகளுக்கு எதிராகவும் செயற்பட்டவர்கள் புலிகளால் துரோகிகள் என்று பட்டம் சூட்டப்பட்டதை சிலர் அங்கு சுட்டிக்காட்டினர்.
புலிகளின் முள்ளிவாய்க்கால் சம்பவங்கள் பற்றி கருத்துக்கள் எழும்போதெல்லாம் நெருப்பின் மேல்நின்ற சிலர் இன்னும் புலிகளின் போராட்ட தவறுகள் பற்றியோ புலிகளின் எதிர்ப்புரட்சி நடவடிக்கைகள் பற்றியோ விளங்கிக்கொண்டதாக இல்லை என்பதை அவதானிக்க முடிந்தது.
கூட்டத்தில் புலிகளின் சவுத்ஈஸ்ட் கூட்ட பாதுகாப்பு பிரிவின் பொறுப்பாளர் உட்பட மற்றும் சில புலிகளின் ஆதரவாளர்களும் பிரிஎப் ஆதரவாளர்களும் கலந்து கொண்டிருந்தனர்.
சிறுபான்மை மக்களுக்காகப் போராடிய புலிகள் அந்த சிறுபான்மையினரை தமது இறுதி யுத்ததில் தமது ஆயுதங்களால் கொலைசெய்தும் அந்த இறப்பில் ஆதாயம் தேட முற்ப்பட்டதையும் தமிழரின் இயக்கங்கள் கடந்த காலங்களில் மக்களுக்காக செய்த போராட்டங்கள் என்பதைவிட பயங்கரவாத்தினையே செய்திருந்தனர் என்பதையும் இந்த இயக்கங்களில் பலர் இன்னும் போராட்டம் பற்றி தவறான அடிப்படைகளையே கொண்டுள்ளனர் என்றும் கருத்துக்கள் முன்வைக்கப்பட்டது. புலிகள் இறுதிக்காலப் போராட்டத்திலும் கடந்த 30 வருட போராட்டங்களிலும் பாரிய தவறுகளையும் தவறுக்கான பொறுப்புக்களையும் கொண்டவர்கள் என்பது போல மற்றைய இயக்கத்தவர்களுக்கும் இந்த தவறுகளுக்கும் பொறுப்புண்டு என்ற குற்றச்சாட்டும் வைக்கப்பட்டது.
கூட்டத்தின் இறுதிக் கட்டத்தில் இனிமேல் என்ன செய்யலாம் எப்படி செய்யலாம் என்ற கேள்ளிகட்கு விடைதேட முயன்றபோதும் அதனை நோக்கி கலந்துரையாடல் நகரவில்லை. தாங்கள் என்ஜிஓ அமைப்பல்ல மக்களின் அன்றாட தேவைகள் பற்றி புதியதிசைகள் சந்திப்பை ஏற்பாடு செய்யவில்லை என்று அவ்வமைப்பின் மற்றுமொரு உறுப்பினர் சபாநாவலன் தெரிவித்தார். தாங்கள் அரசியல் முன்னெடுப்புகளை மேற்கொள்ள இருப்பதாகவும் அவர் கூறினார். என்ன செய்யலாம் எப்படிச் செய்யலாம் என்பது பற்றி புதியதிசைகளின் நிலைப்பாடு பற்றி கேட்கப்பட்ட போதும் அவர்கள் தாங்கள் எவ்வித நிலைப்பாட்டைக் கொண்டுள்ளனர் என்பது பற்றியோ அதை நோக்கி கலந்துரையாடலை நகர்த்தவோ தவறிவிட்டனர்.
வட்டுக்கோட்டை தீர்மானம் கொண்டு வருபவர்களுடன் மற்றும் புலம்பெயர் நாட்டில் தமிழீழம் அமைப்பவர்கள் போன்றவர்களுடன் சேர்ந்து இயங்க வேண்டும் என்றும் ஏதோ ஒரு வழியில் அவர்களும் பாதையினை கொண்டுள்னர் என்றும் பலரும் பல திசைகளில் சென்று விடாமல் இவர்களுடன் இணைந்து செயற்ப்பட வேண்டும் என்றும் சில கருத்துக்கள் முன்வைக்கப்பட்டது. இவை பற்றிய நிலைப்பாடுகளை இனிமேல் வரும் கூட்டங்களில் இவற்றை விவாதிக்கலாம் கலந்துரையாடலாம் என்றும் தெரிவிக்கப்பட்டது.
இந்த புதிய திசைகள் போன்று பல அமைப்புக்கள குறிப்பாக தமிழர் தகவல் நடுவம் போன்றோர் சில கூட்டத் தொடர்களை நடாத்தி வந்துள்ளதையும் இவர்களையும் அழைத்து ஒருகிணைத்து செயற்ப்பட வேண்டும் என்றும் முரண்பாடு கொண்டவர்களும் மாற்றுக் கருத்து கொண்டவர்களும் ஒரு பொதுவான வேலைத்திட்டங்களில் இணைந்து செயற்பட வேண்டிய அவசியமும் சமூகத்தில் இப்படியான யதார்த்த நிலைப்பாட்டுடனேயே செயற்பட முடியும் என்ற கருத்துக்களும் வெளிப்பட்டது.
எங்கிருந்து தொடங்குவது என்ற கருத்து பகிர்வின்போது புலிகள் விட்ட இடத்திலிருந்து தொடங்குவது என்ற பதத்திற்கு ஒரு அர்த்தம் இல்லாது உள்ளமை சுட்டிக்காட்டப்பட்டது. புலிகளில் புலம்பெயர்நாட்டு தலைவர்கள் நிதிப்பொறுப்பாளர்கள் அரசியல் பொறுப்பாளர்கள் எனப் பலர் உள்ளபோதிலும் இன்று வரையில் புலிகளின் தலைவர் உயிருடன் உள்ளாரா? புலிகள் இயக்கத்திற்கு என்ன நடந்தது? அல்லது தம்மிடையே உள்ள பணத்தின் நிலை என்ன? மக்கள் இவ்வளவு கஸ்டப்படம் போதும் அந்த நிதி வளங்கள் அந்த மக்களுக்கு உதவி செய்யபோக முடியாமல் போனதின் காரணம் என்ன? புலிகளின் வெளிநாட்டில் முதலீடு செய்யப்பட்ட நிதிகளுக்கு என்ன நடந்தது? போன்ற விபரங்களை இன்று வரையில் வெளியிடாதது புலிகளின் கடந்த 30 வருட மக்களுக்கான போராட்டம் என்ற பதத்தையே கேவலப்படுத்துகிற செயலாகவே உள்ளது என்றும் அங்கு குற்றம்சாட்டப்பட்டது.
இவ்வாறு பல்வேறுபட்ட கருத்துக்கள் முட்டி மோதி இவ்வாறான கருத்துப் பகிர்வுகள் தொடர வேண்டும் என்றளவில் இச்சந்திப்பு நிறைவுபெற்றது.