10

10

சரத் பொன்சேகா கைது விவகாரம்; சர்வதேச நாடுகள் தலையிட முடியாது

rohitha.jpgசரத் போன்சேகாவின் கைது விவகாரம் தொடர்பாக சர்வதேச நாடுகள் தலையிட முடியாதென வெளிவிவகார அமைச்சர் ரோஹித்த போகொல்லாகம தெரிவித்தார். உள்நாட்டு சட்ட விதிமுறைகளுக்கு அமையவே இக்கைது இடம்பெற்றிருப்பதனால் சர்வதேச சக்திகள் இது குறித்து அழுத்தம் கொடுக்க முடியாதெனவும் அமைச்சர் போகொல்லாகம சுட்டிக் காட்டினார்.

ஜனாதிபதி மஹிந்த ராஜபக்ஷவுடன் ரஷ்யாவுக்கு உத்தியோகபூர்வ விஜயத்தை முடித்துக் கொண்டு நாடு திரும்பியுள்ள அமைச்சர் அமைச்சில் நடத்திய செய்தியாளர் மாநாட்டிலேயே மேற்கண்டவாறு தெரிவித்தார். எமது நாட்டைப் பொறுத்தவரை அனைவரும் சமமானவர்கள்.

ஒருவர் பிழை செய்தால் நாட்டின் சட்ட விதிமுறைகளுக்கமைய அவரை விசாரிப்பதற்கு முறையுண்டு. அந்தவகையில் சரத் பொன்சேகாவை கைது செய்திருப்பதற்கான காரணத்தை இராணுவத்தினர் தெளிவாக கூறியுள்ளனர். தான் கைது செய்யப்பட்டிருப்பதற்கான காரணத்தை சரத் பொன்சேகாவே நன்கு புரிந்து வைத்துள்ளார். இதுவரை எந்தவொரு நாட்டிடமிருந்தும் பொன்சேகாவின் கைது குறித்து ஒரு தொலைபேசி அழைப்பு கூட வரவில்லை.

சரத் பொன்சேகா என்பதற்காக இல்லை; நாட்டில் எவரும் சட்ட விதி முறைகளை மீறி நடந்தாலும் அவருக்கெதிராக சட்ட நடவடிக்கை எடுக்கப்படுவது வழமையானதாகும். அதன்படியே, இக்கைது இடம்பெற்றிருப்பதாக அமைச்சர் போகொல்லாகம சுட்டிக்காட்டினார்.

எண்ணெய் எரிவாயு அகழ்வுக்கு ரஷ்யா ஒத்துழைப்பு

இலங்கையின் எதிர்கால நடவடிக்கைகளுக்கு பூரண ஒத்துழைப்பினை வழங்குவதாக ரஷ்ய ஜனாதிபதி திமித்ரி மெத்வதேவ் ஜனாதிபதி மஹிந்த ராஜபக்ஷவிடம் உறுதியளித்துள்ளார்.

ஜனாதிபதியின் ரஷ்ய விஜயம் இலங்கைக்கு பல சாதகமான பிரதிபலன்களைப் பெற்றுத்தந்துள்ளதுடன் இரு நாடுகளுக்கிடையிலான நல்லுறவையும் பலப்படுத்தியுள்ளது. ரஷ்ய ஜனாதிபதி திமித்ரி மெத்வதேவின் விசேட அழைப்பினை ஏற்று மூன்றுநாள் உத்தியோகபூர்வ விஜயத்தினை மேற்கொண்டு ரஷ்யா சென்ற ஜனாதிபதி மஹிந்த ராஜபக்ஷ நேற்று நாடு திரும்பினார்.

ஜனாதிபதித் தேர்தல் வெற்றியின் பின்னர் ஜனாதிபதி மஹிந்த ராஜபக்ஷ மேற்கொண்ட முதலாவது உத்தியோகபூர்வ வெளிநாட்டு விஜயம் இதுவாகும். பயங்கரவாதம் தோற்கடிக்கப்பட்டதையடுத்து வேகமாக கட்டியெழுப்பப்பட்டு வரும் இலங்கையின் எதிர்கால அபிவிருத்திக்கு 300 மில்லியன் டொலர் நிதியை இவ்விஜயத்தின் போது ரஷ்யா கடனுதவியாக வழங்க இணங்கியுள்ளது.

அத்துடன் இலங்கையில் எண்ணெய் மற்றும் எரிவாயு அகழ்வாராய்ச்சிக்கு ரஷ்யா ஒத்துழைப்பு வழங்க முன்வந்துள்ள மையும் இவ்விஜயத்தின் பாரிய வெற்றியாகும். இவ்வகழ்வாராய்ச்சி நடவடிக்கைகளுக்கு ஒத்துழைப்பு வழங்கு வதற்கு உலகின் பிரசித்திபெற்ற ரஷ்ய எரிவாயு நிறுவனமான ரஷ்ய கேஸ் ப்ரோம் நிறுவனம் முன்வந்துள்ளது.

இரண்டு நாடுகளுக்குமிடையில் ஊடகத்துறை சார் நவீன தொழில்நுட்பங்க ளைப் பரிமாறிக்கொள்வது தொடர்பில் விசேட ஒப்பந்தமொன்றை மேற்கொள்ள முடிந்துள்ளமையும் ஜனாதிபதியின் இவ் விஜயத்தின் போது பெற்றுக்கொள்ளப்பட்ட பிரதிபலனாகும்.

இலங்கையின் நற்பெயரை சர்வதேச மெங்கும் தெரிவிக்கும் மற்றுமொரு நிகழ்வும் இவ்விஜயத்தின்போது இடம்பெற்றுள்ளது. ரஷ்ய நட்புறவுப் பல்கலைக்கழகம் ஜனாதிபதி மஹிந்த ராஜபக்ஷவுக்கு கலாநிதிப் பட்டம் வழங்கி கெளரவித்தமையே அந்நிகழ்வாகும்.

உலக சமாதானத்திற்காக மேற்கொண்ட சேவைகள், பயங்கரவாதத்தை ஒழித்து கல்வி, கலாசாரம் உட்பட பல்வேறு துறைகளின் மேம்பாட்டிற்காக முன்னெடுத்த பாரிய சேவைகளுக்காக ஜனாதிபதி மஹிந்த ராஜபக்ஷவுக்கு ரஷ்ய பல்கலைக்கழகம் மேற்படி கெளரவ பட்டத்தை வழங்கியுள்ளது. இப்பட்டத்தைச் சுவீகரித்துக்கொண்ட உலகின் ஆறாவது அரச தலைவர் ஜனாதிபதி மஹிந்த ராஜபக்ஷ என்பது குறிப்பிடத்தக்கது. இது இலங்கை வாழ் மக்கள் அனைவருக்கும் கிடைத்த கெளரவமாகும்.

அதேவேளை, உலகிற்கு சமாதானத்தைப் பெற்றுக்கொடுத்த ரஷ்ய அரச பரம்பரையை நினைவுகூரும் வகையில் அதன் ஞாபகார்த்தமாக தங்கத்தினாலான மாணிக்கக் கற்கள் பதிக்கப்பட்ட கிரீடமொன்றை ரஷ்ய நட்புறவுப் பல்கலைக்கழகம் வழங்கியமையும் குறிப்பிடத்தக்கதாகும்.

ரஷ்ய – இலங்கை நாடுகளுக்கிடையிலான நட்புறவை மேலும் வலுப்படுத்தும் நிகழ்வாக இருநாட்டுத் தலைவர்களினதும் சந்திப்பைக் குறிப்பிட முடியும். இச்சந்திப்பின் போது இலங்கை ஜனாதிபதிக்குத் தம் மனப்பூர்வமான வாழ்த்துக்களைத் தெரிவித்த ரஷ்ய ஜனாதிபதி; இலங்கையின் எதிர்கால நடவடிக்கைகளுக்குப் பூரண ஒத்துழைப்பினை வழங்குவதாக உறுதியளித்துள்ளார்.

இதன்போது கருத்துத் தெரிவித்த ஜனாதிபதி மஹிந்த ராஜபக்ஷ ரஷ்யாவுடனான நல்லுறவை மேலும் பலப்படுத்துவதே தமது எதிர்பார்ப்பாகுமெனவும் குறிப்பிட்டுள்ளார்.

இவ்விஜயத்தின் போது ரஷ்யாவின் வரலாற்று முக்கியத்துவமிக்க பல இடங்களை ஜனாதிபதி தலைமையிலான தூதுக் குழுவினர் பார்வையிட்டதுடன் ரஷ்யாவின் தேசபிதா லெனினின் சமாதிக்குச் சென்று அஞ்சலி செலுத்தியமையும் குறிப்பிடத்தக்கதாகும்.

இராணுவ அதிகாரியொருவர் ஓய்வுபெற்ற ஆறு மாத காலத்துக்குள் நடவடிக்கை எடுக்க இராணுவ சட்டத்தில் இடம் – கெஹெலிய

sarath.jpgசரத் பொன்சேகாவை இராணுவ நீதிமன்றத்தில் விசாரிப்பதா அல்லது சாதாரண நீதிமன்றத்தில் விசாரிப்பதா என்பது குறித்து இராணுவ சட்டப் பிரிவு சட்ட மா அதிபரின் ஆலோசனையை பெற்ற பின்னரே தீர்மானம் எடுக்கும் என்று இராணுவப் பேச்சாளர் மேஜர் ஜெனரல் பிரசாத் சமரசிங்க தெரிவித்தார்.

பொன்சேகாவிடமிருந்து பெறப்படும் வாக்குமூலத்தை இராணுவ சட்டப் பிரிவினர் பரிசீலித்து அதனை சட்ட மா அதிபரின் ஆலோசனைக்கு அனுப்பி அது பெறப்பட்ட பின்னரே அடுத்த கட்ட நடவடிக்கை எடுக்கப்படும் என்று அவர் மேலும் தெரிவித்தார்.

இராணுவத்தின் சட்ட விதிமுறைகளுக்கு அமையவே சரத் பொன்சேகா இராணுவப் பொலிஸாரால் நேற்று முன்தினம் இரவு 9.30 மணியளவில் கைது செய்யப்பட்டார் என்று தேசிய பாதுகாப்பு விவகாரங்களுக்கான பேச்சாளர், அமைச்சர் கெஹெலிய ரம்புக்வெல்ல தெரிவித்தார். எந்த ஒரு இராணுவ அதிகாரியோ அல்லது வீரரோ சேவையின் போது இராணுவ சட்டங்களை மீறினால் அவர் ஓய்வு பெற்று ஆறு மாத காலத்திற்குள் அவர் மீது இராணுவம் சட்ட நடவடிக்கைகளை மேற்கொள்ள முடியும்.

இராணுவ சட்டத்தின் 57 பிரிவு தெளிவாக கூறுவதாக தெரிவித்த அமைச்சர், அந்த சட்டவிதி விதிமுறைகளுக்கு அமைவாகவே பொன்சேகா இராணுவ பொலிஸாரால் கைது செய்யப்பட்டதாக சுட்டிக்காட்டினார்.

சரத் பொன்சேகா கைது செய்யப்பட்டமை மற்றும் எதிர்காலத்தில் முன்னெடுக்கப்படும் நடவடிக்கைகள் தொடர்பாக ஊடகங்களுக்கு விளக்கமளிக்கும் விசேட செய்தியாளர் மாநாடு நேற்று பிற்பகல் நடைபெற்றது.

கொழும்பிலுள்ள தேசிய பாதுகாப்புக்கான ஊடக மத்திய நிலையத்தில் தேசிய பாதுகாப்பு விவகாரங்களுக்கான பேச்சாளர், அமைச்சர் கெஹெலிய ரம்புக்வெல்லவின் தலைமையில் நடைபெற்ற இந்த செய்தியாளர் மாநாட்டில் அமைச்சர் மேலும் குறிப்பிடுகையில் :-

பாதுகாப்பு படைகளின் பிரதம அதிகாரியாக இருந்தபோது இராணுவ விதிகளை மீறிய குற்றச்சாட்டின் பேரிலேயே பொன்சேகா கைதுசெய்யப்பட்டார். பாதுகாப்பு சபையானது ஒரு நாட்டின் பாதுகாப்பு தொடர்பான தீர்மானங்களை மேற்கொள்வதில் உச்சமட்ட சபையாகும். முப்படைகளின் தளபதியான ஜனாதிபதி தலைமை வகிக்கும் இந்த பாதுகாப்பு சபையில் இராணுவ தளபதியாக இருந்தபோது பொன்சேகா பாதுகாப்பு சபையின் முன்னணி அங்கத்தவராக இருந்தவர். பாதுகாப்பு சபையின் உறுப்பினராக இருந்தபோது அரசுக்கு எதிரான அரசியல் கட்சிகளுடனும் அவர் தொடர்பு வைத்ததுடன் முக்கிய இரகசிய விடயங்களை பரிமாறிக்கொண்டிருந்திருக்கலாம்.

பாதுகாப்பு சபை உறுப்பினர் என்ற ரீதியில் இது அவர் செய்யக் கூடாத ஒன்றாகும் என்றும் அமைச்சர் சுட்டிக்காட்டினார். சரத் பொன்சேகாவுக்கு வெளிநாட்டு சக்திகளுடன் தொடர்புகள் உள்ளனவா என ஊடகவியலாளர்கள் எழுப்பிய கேள்விக்கு அமைச்சர் பதிலளிக்கையில் :-சரத் பொன்சேகா சேவையில் இருந்தபோது அரசியல் கட்சிகளுடன் தொடர்பு வைத்துள்ளமை தொடர்பில் முழுமையான விசாரணைகள் மேற்கொள்ளப்பட்டு வருகின்றது. இதுதவிர மேலும் பல குற்றச்சாட்டுகள் முன்வைக்கப்பட்டுள்ளன. அவை தொடர்பிலும் விசாரணைகள் நடத்தப்பட்டு வருகின்றது. அந்த விசாரணைகள் முடிவுற்ற பின்னர் அது தொடர்பிலும் உரிய நடவடிக்கை எடுக்கப்படும் என்றார்.

வெளிநாடுகளுடனான தொடர்புகள் தொடர்பில் விசாரணைகளுக்குப் பின்னரே எதுவும் கூறமுடியும் என்றும் குறிப்பிட்டார். சரத் பொன்சேகாவுடன் மேலும் பல இராணுவ மற்றும் சிவிலியன்கள் கைது செய்யப்பட்டுள்ளனர். இன்னும் சிலர் கைது செய்யப்படவுள்ளனர். இரகசிய பொலிஸார் இது தொடர்பான விசாரணைகளில் ஈடுபட்டு வருகின்றனர்.

பொதுத் தேர்தல் ஏப்ரல் 8ஆம் திகதி

parliament.jpgபாராளு மன்றம் நேற்று நள்ளிரவு முதல் கலைக்கப்பட்டுள்ளது.

பாராளுமன்றத்தை கலைப்பதற்கான வர்த்தமானி அறிவித்தல் நேற்று வெளியிடப்பட்டது.

இந்த வர்த்தமானி அறிவித்தலின்படி எதிர்வரும் ஏப்ரல் 8ஆம் திகதி பொதுத் தேர்தல் நடைபெறும். வேட்புமனு தாக்கல் இம்மாதம் 19ம் திகதி முதல் 26 ஆம் திகதி வரை இடம்பெறும்.

அடுத்த பாராளுமன்றம் எதிர்வரும் ஏப்ரல் 22ம் திகதி கூடுகிறது.

ஒட்டிசுட்டான் பிரதேச செயலகம் இன்று முதல் பழைய இடத்தில்

ஒட்டிசுட்டான், பிரதேச செயலகம் இன்று முதல் பழைய இடத்தில் இயங்குமென முல்லைத்தீவு மாவட்ட அரச அதிபர் திருமதி இமல்டா சுகுமார் தெரிவித்தார்.

இதுவரைகாலமும் திருமுருகண்டியில் இந்த அலுவலகம் இயங்கி வந்தது.  ஒட்டிசுட்டான் பிரதேசத்தில் இடம் பெயர்ந்த மக்கள் மீள்குடியேற்றம் நடைபெற்று வருகின்றது. அந்த வகையில் பிரதேச செயலகத்தை பழைய இடத்தில் திறக்க அனைத்து நடவடிக்கைகளும் எடுக்கப்பட்டுள்ளது எனவும் அவர் தெரிவித்தார்.

96 தமிழ் கைதிகள் விடுதலை

புலிகள் இயக்கத்துடன் தொடர்பு வைத்திருந்ததாக சந்தேகத்தின் பேரில் நீண்டகாலம் தடுத்து வைக்கப்பட்டிருந்த மேலும் 96 தமிழ் கைதிகள் விடுதலை செய்யப்பட்டுள்ளதோடு 115 பேர் புனர்வாழ்வு அளிப்பதற்காக அனுப்பப்பட்டுள்ளதாக பிரதி நீதி அமைச்சர் வீ. புத்திரசிகாமணி தெரிவித்தார்.

அவசரகாலச் சட்டத்தின் கீழ் கைதாகி தடுத்து வைக்கப்பட்டிருந்த பல தமிழ் கைதிகள் சட்டமா அதிபரின் ஆலோசனையின் பிரகாரம் விடுதலை செய்யப்பட்டு வருகின்றனர்.

இதுவரை 431 தமிழ் கைதிகள் விடுதலை செய்யப்பட்டுள்ளதாக தெரிவித்த பிரதி அமைச்சர் சுமார் 200 கைதிகளே எஞ்சியிருப்பதாகத் தெரிவித்தார்.

‘தேசத்திற்கு மகுடம்’ இன்று நள்ளிரவுடன் முடிவு

deyatakirula_logo.jpgகண்டி பள்ளேகலவில் 04 ஆம் திகதி முதல் நடைபெற்றுவந்த ‘தெயடகிருள’ தேசத்திற்கு மகுடம் கண்காட்சி இன்று நள்ளிரவுடன் முடிவடைகின்றது.

கொழும்பு நகருக்கு மட்டும் மட்டுப்படுத்தப்பட்டிருந்த தேசத்திற்கு மகுடம் கண்காட்சி 60 ஏக்கர் காணிப் பரப்பில் அரச மற்றும் தனியார் துறையைச் சேர்ந்த 1000 கண்காட்சிக் கூடங்களை கொண்டுள்ளது.

இ.தொ.கா சார்பில் 9 வேட்பாளர்கள்

பொதுத்தேர்தலில் இலங்கை தொழிலாளர் காங்கிரஸின் சார்பில் ஒன்பது வேட்பாளர்கள் களமிறங்கவுள்ளதாக காங்கிரஸின் தலைவர் பிரதியமைச்சர் முத்து சிவலிங்கம் தெரிவித்தார்.

ஆளும் ஐக்கிய மக்கள் சுதந்திர முன்னணியின் பட்டியலில் காங்கிரஸ் போட்டியிடவுள்ள நிலையில் ஒன்பது இடங்கள் தமக்காக ஒதுக்கப்பட்டிருப்பதாக பிரதியமைச்சர் கூறினார். இதன்படி நுவரெலியா மாவட்டத்தில் அமைச்சர் ஆறுமுகன் தொண்டமான், பிரதியமைச்சர்கள் முத்து சிவலிங்கம், எஸ். ஜெகதீஸ்வரன் ஆகியோர் போட்டி யிடுகின்றனர்.

இதன்படி காங்கிரஸ¤க்கு நுவரெலியா மாவட்டத்தில் மூன்று இடங்களும் பதுளையில் இரண்டு இடங்களும் மாத்தளை, இரத்தினபுரி, கண்டி, கொழும்பு ஆகிய மாவட்டங்களில் தலா ஓர் இடமும் ஒதுக்கப்பட்டுள்ளதாக பிரதியமைச்சர் சிவலிங்கம் கூறினார்.

புலிகளால் நியமிக்கப்பட்ட உறுப்பினர்களுக்கு ரிஎன்ஏ இல் ஆசனம் இல்லை! லண்டனில் ஆர் சம்பந்தன் : த ஜெயபாலன்

Sambandan R TNA MPதமிழ் தேசியக் கூட்டமைப்பில் தமிழீழ விடுதலைப் புலிகளால் நியமிக்கப்பட்டு பாராளுமன்ற உறுப்பினர்கள் ஆனவர்களுக்கு இம்முறை ஆசனம் வழங்குவதில்லை என லண்டனில் இடம்பெற்ற சந்திப்பில் அக்கட்சியின் தலைவர் ஆர் சம்பந்தன் தெரிவித்ததாக தேசம்நெற்க்கு தெரியவருகின்றது. உறவினர் ஒருவரின் இறுதி நிகழ்வில் கலந்துகொள்வதற்காக லண்டன் வந்திருந்த ஆர் சம்பந்தனை தமிழர் விடுதலைக் கூட்டணியின் லண்டன் கிளையினர் பெப்ரவரி 8ல் சந்தித்து உரையாடி உள்ளனர். தமிழ் தேசியக் கூட்டமைப்பிற்கும் தமிழர் விடுதலைக் கூட்டணிக்கும் இடையே உடன்பாடு ஒன்றை ஏற்படுத்த மேற்கொள்ளப்பட்ட இம்முயற்சியிலேயே சில செய்திகளை ஆர் சம்பந்தன் கசியவிட்டுள்ளார். தமிழ் தேசியக் கூட்டமைப்பிற்கும் தமிழர் விடுதலைக் கூட்டணிக்கும் இடையே உடன்பாடு எட்டப்பட முடியாத இடைவெளி இருப்பதை உணர்ந்த நிலையில் சந்திப்பு நிறைவுபெற்றது.

தமிழ் தேசியக் கூட்டமைப்பை தமிழர் விடுதலைக் கூட்டணியுடன் இணைத்து உதய சூரியன் சின்னத்தில் போட்டியிட வைக்க தமிழர் விடுதலைக் கூட்டணியின் லண்டன் கிளையில் இருந்த சிலர் விரும்பியிருந்தனர். அதையொட்டியே இந்தச் சந்திப்பு ஏற்பாடு செய்யப்பட்டு இருந்தது. இச்சந்திப்பில் தமிழர் விடுதலைக் கூட்டணியின் லண்டன் கிளையின் தலைவர் நிக்லஸ்பிள்ளை, தமிழர் விடுதலைக் கூட்டணியின் காலம்சென்ற தளபதி அ அமிர்தலிங்கத்தின் துணைவியார் மங்கையற்கரசி அமிர்தலிங்கம், தமிழர் விடுதலைக் கூட்டணியின் மத்திய குழு உறுப்பினர் எஸ் அரவிந்தன் உட்பட இன்னும் சிலரும் இந்நிகழ்வில் கலந்து கொண்டனர். தமிழ் தேசியக் கூட்டமைப்பு தமிழரசுக் கட்சியிலேயே போட்டியிடும் என்றும் உதய சூரியன் சின்னத்தில் போட்டியிடுவது பற்றி பேசுவதிலே அர்த்தமில்லை என ஆர் சம்பந்தன் இச்சந்திப்பில் தெரிவித்துள்ளார்.

தமிழர் விடுதலைக் கூட்டணியின் தலைவர் வி ஆனந்தசங்கரி சிங்கள மக்களால் ஏற்றுக்கொள்ளப்பட்ட ஒரு மிதவாதத் தலைவர் என்று குறிப்பிட்ட ஆர் சம்பந்தன் ஆனந்தசங்கரிக்கு தமிழ் தேசியக் கூட்டமைப்பில் ஒரு ஆசனத்தை வழங்கத் தயாராக இருப்பதாகவும் தெரிவித்துள்ளார். தாங்கள் வி ஆனந்தசங்கரியுடன் உடன்பட்டு செயற்படுவதற்கு முன்நிபந்தனையாக வி ஆனந்தசங்கரி தமிழ் தேசியக் கூட்டமைப்பு மீதான கடுமையான விமர்சனங்களை தவிர்த்துக்கொள்ள வேண்டும் என்று தெரிவித்துள்ளார். குறிப்பாக தமிழ் தேசியக் கூட்டமைப்பு ஜெனரல் சரத் பொன்சேகாவை ஆதரித்தது தொடர்பாக தேர்தல் முடிவுவரை மௌனமாக இருந்த வி ஆனந்தசங்கரி தேர்தல் முடிவுக்குப் பின் கடுமையான விமர்சனத்தை முன்வைத்ததை ஆர் சம்பந்தன் சுட்டிக்காட்டி இருந்தார்.

இச்சந்திப்பின் போது அடுத்த பாராளுமன்றத் தேர்தலில் தமிழ் தேசியக் கூட்டமைப்பில் போட்டியிட யாருக்கு ஆசனங்கள் வழங்குவது என்பது பற்றியும் சில அபிப்பிராயங்களை ஆர் சம்பந்தன் தெரிவித்துள்ளார். குறிப்பாக ஜனாதிபதித் தேர்தலில் தமிழ் தேசியக் கூட்டமைப்பின் முடிவுக்கு எதிராக சுயேட்சையாகப் போட்டியிட்ட எம் கெ சிவாஜிலிங்கம், அவருக்கு ஆதரவாக நின்ற என் சிறிகாந்தா ஆகியோருக்கு ரிஎன்ஏ இல் ஆசனம் இல்லை என்றும் அவர்கள் தமிழ் தேசியக் கூட்டமைப்பு உறுப்பினர்கள் இல்லை என்றும் ஆர் சம்பந்தன் அங்கு கேட்கப்பட்ட கேள்வி ஒன்றுக்குப் பதிலளித்துள்ளார்.

மற்றுமொரு கேள்விக்குப் பதிலளித்த ஆர் சம்பந்தன் தமிழீழ விடுதலைப் புலிகளால் ரிஎன்ஏ இல் தேர்தலில் நிறுத்தப்பட்டவர்களுக்கு இம்முறை ஆசனங்கள் வழங்க முடியாது என்ற வகையில் கருத்துத் தெரிவித்து இருந்தார். ரிஎன்ஏ ஆசனங்களுக்கு தகுதி அடிப்படையைக் கொண்டு வருவதன் மூலம் தமிழீழ விடுதலைப் புலிகளால் நியமிக்கப்பட்டவர்களை ஓரம்கட்டலாம் என்ற வகையிலும் அவருடைய கருத்துக்கள் அமைந்திருந்தது. குறிப்பாக சட்டத்தரணிகள், பொறுப்பான தொழில் தகுதியைக் கொண்டவர்கள், ஊர் மக்கள் மத்தியில் செல்வாக்கானவர்கள் என்ற அடிப்படையில் ஆசனங்கள் வழங்கப்பட்டு தமிழீழ விடுதலைப் புலிகளால் நியமிக்கப்பட்டவர்கள் ஓரம்கட்டப்படுவர் என்ற வகையிலேயே ஆர் சம்பந்தனின் கருத்துக்கள் இருந்தது என தேசம்நெற் க்கு கிடைக்கும் தகவல்கள் தெரிவிக்கின்றது.

தமிழ் தேசியக் கூட்டமைபின் பாராளுமன்ற உறுப்பினர்களின் விபரங்கள்:
தமிழர் விடுதலைக் கூட்டணி: இரா சம்பந்தன், (திருகோணமலை) மாவை சேனாதிராஜா (யாழ்ப்பாணம்)
ஈபிஆர்எல்எப்(சுரேஸ் அணி): சுரேஸ் பிரேமச்சந்திரன் (யாழ்ப்பாணம்), ஆனந்தன் நடேசு சிவசக்தி (வன்னி)
ரெலோ: செல்வம் அடைக்கலநாதன் (மன்னார்), நோகராதரலிங்கம் சுப்பிரமணியம் (வன்னி), எம் கெ சிவாஜிலிங்கம் (யாழ்ப்பாணம்), நல்லதம்பி சிறிகாந்தா (யாழ்ப்பாணம்)
தமிழ் கொங்கிரஸ்: கஜேந்திரகுமார் பொன்னம்பலம் (யாழ்ப்பாணம்)
இவர்கள் ஒன்பது பேரையும் தவிர ஏனைய 13 பாராளுமன்ற உறுப்பினர்களும் தமிழீழ விடுதலைப் புலிகளால் தெரிவு செய்யப்பட்டு பாராளுமன்றம் சென்றவர்கள்: சந்திரகாந்தன் சந்திரநேரு (தேசியப்பட்டியல்), ரி கனகசபை (மட்டக்களப்பு), சேனாதிராஜா ஜெயானந்தமூர்த்தி (மட்டக்களப்பு), தங்கேஸ்வரி கதிர்காமன் (மட்டக்களப்பு), பாக்கியசெல்வம் அரியேந்திரன் (மட்டக்களப்பு), சதாசிவம் கனகரட்ணம் (வன்னி), சிவநாதன் கிசோர் (வன்னி), சதாசிவம் கனகரத்தினம் (வன்னி), கெ துரைரத்தினசிங்கம் (திருகோணமலை), வில்லியம் தோமஸ் (திகாமடுல்ல), கஜேந்திரன் செல்வராஜ் (யாழ்ப்பாணம்), பத்மினி சிதம்பரநாதன் (யாழ்ப்பாணம்), சொலமன் சிறில் (யாழ்ப்பாணம்), ரசீன் மொகமட் இமாம் (தேசியப் பட்டியல்)

தமிழ் தேசியக் கூட்டமைப்பில் உள்ள தமிழர் விடுதலைக் கூட்டணி (சம்பந்தர் அணி), ஈபிஆர்எல்எல் (சுரேஸ்அணி) ஆகியோரின் ஆசனங்களுக்கு பிரச்சினை இராது. ஆனால் தற்போது நான்கு பாராளுமன்ற உறுப்பினர்களைக் கொண்ட ரெலொவில் செல்வம் அடைக்கலநாதனுக்கு மட்டுமே ஆசனம் வழங்கப்பட வாய்ப்புகள் உள்ளது. தமிழ் கொங்கிரஸ் கஜேந்திரகுமார் பொன்னம்பலம் மற்றும் தமிழீழ விடுதலைப் புலிகளால் தெரிவு செய்யப்பட்ட 9 பாராளுமன்ற உறுப்பினர்களின் அரசியல் எதிர்காலம் ஆர் சம்பந்தன் – மாவை சேனாதிராஜா – சுரேஸ் பிரேமச்சந்திரன் ஆகியோரின் கைகளிலேயே உள்ளது.

இவர்களில் பெரும்பாலானவர்கள் தாங்கள் தெரிவு செய்யப்பட்ட தொகுதிகளில் வாழ்ந்த காலத்திலும் பார்க்க அதற்கு வெளியே குறிப்பாக புலம்பெயர் நாடுகளிலேயே கூடுதலாக வாழ்ந்துள்ளனர். அந்நாடுகளிலேயே பெரும்பாலும் இவர்கள் அறியப்பட்டு உள்ளனர். இவர்களுக்கு என்று ஒரு அரசியல் அடையாளம் இருந்திருக்கவில்லை. அதனால் இவர்களில் பெரும்பாலானவர்களை ஓரம்கட்டுவதில் ஆர் சம்பந்தனுக்கு பெரும் சவால்கள் இருக்கப் போவதில்லை. ஆனால் எம் கெ சிவாஜிலிங்கம், என் சிறிகாந்தா போன்றவர்கள் ஆர் சம்பந்தனுக்கு தலையிடியாகலாம். தங்கள் தொகுதிகளில் சுயேட்சையாகப் போட்டியிடவும் வாய்ப்புகள் உள்ளது. ரிஎன்ஏ தங்களைக் கட்சியில் இருந்து நீக்க முடியாது என எம் கெ சிவாஜிலிங்கம் தனிப்பட்ட முறையில் தெரிவித்து வருகின்றார். தங்களுக்கும் ரிஎன்ஏ க்கும் இடையே எழுத்து மூலமான உடன்பாடுகள் எதுவும் இல்லாத நிலையில் எந்த அடிப்படையில் தங்களை ரிஎன்ஏ யில் இருந்து நீக்க முடியும் என அவர் கேள்வி எழுப்பி வருகின்றார். இவ்வாறான சர்ச்சைகள் ரிஎன்ஏ யை நீதிமன்றத்திற்கு அலைக்கழித்தாலும் ஆச்சரியப்படுவதற்கில்லை.

தமிழீழ விடுதலைப் புலிகளால் தெரிவு செய்யப்பட்டவர்களுக்கு ஆசனங்களை வழங்காது வீட்டுக்கு அனுப்பி வைக்கப்பட்ட பின் புதிய நபர்கள் அவ்விடங்களை நிரப்புவார்கள் என எதிர்பார்க்கப்படுகிறது. புலத்தில் உள்ள சிலர் அது தொடர்பாக பேசி வருவதாகவும் தெரியவருகின்றது. ரிஎன்ஏ இல் மட்டுமல்ல ஏனைய தமிழ் கட்சிகளிலும் புலம்பெயர் இறக்குமதிகள் சில போட்டியிடுவதற்கான வேலைகளை ஏற்கனவே ஆரம்பித்துள்ளனர்.

மேலும் வருகின்ற பாராளுமன்றத் தேர்தலில் எவ்வாறு வியூகம் அமைக்கலாம் எவ்வாறு ஆசனங்களைத் தக்க வைப்பது என்று கணக்குப் போடுவதில் கட்சிகள் படுபிசியாகி உள்ளன. தமிழ் தேசியக் கூட்டமைப்பு ஏற்கனவே ஸ்ரீலங்கா முஸ்லீம் காங்கிரஸ் உடன் உடன்பாட்டுக்கு வந்துள்ளது. அரச ஆதரவான கட்சிகளான ஈபிடிபி, புளொட், ஈபிஆர்எல்எப் ஆகியனவும் ஒரு உடன்பாட்டை எட்ட முயற்சிக்கின்றன. வவுனியா நகரசபையை புளொட் கோட்டைவிட்டு ஒரு பாடத்தைக் கற்றுள்ளது. முன்னர் புளொட், ஈபிஆர்எல்எப் கூட்டணியில் இருந்த வி ஆனந்தசங்கரி தற்போது தனிமைப்பட்டுள்ளார். தமிழீழ மக்கள் விடுதலைப் புலிகளும் தனித்துப் போட்டியிட உள்ளது.

இவர்களைவிடவும் தேசியக் கட்சிகளும் உள்ளுர் பிரமுகர்களை தேர்தல் களத்தில் இறக்க உள்ளன. உள்ளுர் வர்த்தகப் புள்ளிகள் சிலரும் தேசியக் கட்சிகளில் போட்டியிட உள்ளனர். இந்த ஆரவாரங்களுடன் வடக்கு கிழக்கு தேர்தலுக்கு தயாராக உள்ளது. வடக்கு கிழக்கில் உள்ள 23 தமிழ் ஆசனங்களுக்கான போட்டியில் தமிழ் தேசியக் கூட்டமைப்புக்கு இருந்த ஏகபோகம் இல்லாமல் போய்விடும். ஆனால் வடக்கு கிழக்கில் பெரும்பான்மை ஆசனங்களைக் கொண்ட கட்சியாக தமிழ் தேசியக் கூட்டமைப்பு தன்னை தக்க வைத்துக் கொள்வதற்கான வாய்ப்புகளே அதிகம் உள்ளது. தமிழ் மக்கள் தமிழ் தேசியக் கூட்டமைப்பை தங்கள் பிரதிநிதிகளாக ஏற்றுக்கொள்கிறார்களோ இல்லையோ அரச மற்றும் அரச சார்புக் குழுக்களின் அரசியல் அராஜகங்களுக்கு எதிரான எதிர்ப்பு வாக்குகள் தமிழ் தேசியக் கூட்டமைப்பிற்கு செல்வதற்கே வாய்ப்புகள் அதிகம் உள்ளது. இது ஒரு எண்ணிக்கை விளையாட்டு மட்டுமே.