11

11

பொன்சேகா கைதானதன் எதிரொலி – பொலிஸார் கண்ணீர் புகை, தடியடி

colombo.jpgகைது செய்யப்பட்ட எதிரணிகளின் ஜனாதிபதி வேட்பாளரான முன்னாள் இராணுவத்தளபதி ஜெனரல் சரத்பொன்சேகாவை உடனடியாக விடுதலை செய்யுமாறு வலியுறுத்தி நாட்டின் பல பகுதிகளிலும் நேற்று புதன்கிழமை ஆர்ப்பாட்டப் பேரணிகள் நடத்தப்பட்டன. இப்பேரணிகளில் ஆயிரக்கணக்கான மக்கள் அணிதிரண்டு தமது எதிர்ப்பை வெளிப்படுத்தியுள்ளனர்.

நேற்று நண்பகல் கொழும்பு புதுக்கடையில் அமைந்துள்ள நீதிமன்றக் கட்டிடத்தொகுதிக்கு முன்பாக எதிரணியினரால் நடத்தப்பட்ட பேரணியில் பெரும் எண்ணிக்கையிலான மக்கள் கலந்து கொண்டனர். நண்பகல் 12 மணிக்கு ஆர்ப்பாட்டத்தை நடத்துவதாக அறிவிக்கப்பட்டிருந்த நிலையிலும் காலை 10 மணியாகும் போதே தொழில் நுட்பக்கல்லூரிப் பகுதி, டாம் வீதி, அப்துல்ஹமீத் வீதி போன்ற பகுதிகளால் மக்கள் ஊர்வலமாக முன்னாள் ஜனாதிபதி ஆர்.பிரேமதாஸ உருவச் சிலைப்பகுதியை நோக்கி வரத் தொடங்கினர்.

மக்கள் கூட்டம் அதிகமாக வருவதைக் கண்ட பொலிஸார் நிலைமையை கட்டுப்படுத்த  உஷார் நிலையில் தயாரானார்கள். இதனிடையே முன்கூட்டியே ஆளும்தரப்பு ஆதரவாளர்கள் எனக்கருதப்பட்ட ஒரு குழு பிரேமதாஸ சிலைக்கு பின்பாக கூடிநின்று கற்களைக் கொண்டு ஆர்ப்பாட்டக்காரர்களை நோக்கி வீசத் தொடங்கினர். இதனால் இருதரப்புக்குமிடையில் மாறி மாறிக் கற்கள் எறியப்பட்டன. இதன் காரணமாக எதிரணிதரப்பில் பலர் காயமடைந்தனர்.

நண்பகல் 12 மணியாகும் போது ஆர்ப்பாட்டத்தில் கலந்து கொண்ட மக்கள் அணிதிரண்டு பொலிஸ் தடைகளையும் உடைத்துக்கொண்டு உள்ளே புகுந்தனர். இந்த வேளையில் கலகத்தடுப்புப் பொலிஸார் கண்ணீர் புகையை பிரயோகித்ததோடு குண்டாந்தடியடி பிரயோகத்தையும் மேற்கொண்டனர். அப்பகுதியில் பாதுகாப்பை உறுதிப்படுத்த பெரும் எண்ணிக்கையிலான பொலிஸார் குவிக்கப்பட்டிருந்த போதிலும் ஆர்ப்பாட்டத்தை தடுக்க முடியாமல் அவர்கள் தடுமாற்றமடைந்து காணப்பட்டனர். மகிந்தவின் அராஜகத்தை முறியடிப்போம், ஜெனரல் பொன்சேகாவை விடுதலை செய், உண்மையான ஜனாதிபதி ஜெனரல் சரத் பொன்சேகாவே, பயங்கரவாதி கருணாவுக்கு இராஜ உபசாரம், நாட்டைக்காத்த ஜெனரலுக்கு சிறையா? என்பன போன்ற பல சுலோகங்களை கோஷித்த வண்ணம் மக்கள் ஊர்வலத்தில் கலந்து கொண்டனர்.

ஆரம்பத்தில் இந்தப் பேரணியை வழிநடத்தும் பொறுப்பு பாராளுமன்ற உறுப்பினர் தயாசிறி ஜயசேகரவினால் மேற்கொள்ளப்பட்டது. தாக்குதல்களால் இடையிடையே சிதறியோடிய மக்கள் மீண்டும் மீண்டும் ஆர்ப்பாட்டம் நடத்த இடத்துக்கு திரும்பி வந்தவண்ணமிருந்தனர்.இதனிடையே ஐக்கிய தேசியக் கட்சி பிரதித் தலைவர் கருஜயசூரிய, ஜே.வி.பி. தலைவர் சோமவன்ஸ அமரசிங்க மற்றும் மங்கள சமரவீர, மனோ கணேசன், ரவூப் ஹக்கீம், டாக்டர் ஜயலத் ஜயவர்த்தன, ரவி கருணாநாயக்க, தலதா அத்துக்கோரள, சந்திராணி பண்டார போன்ற பாராளுமன்ற உறுப்பினர்களும், ஏ.கே.எம். முஸம்மில், முஜிபுர் ரஹ்மான் உட்பட மாகாணசபை உறுப்பினர்கள், மாநகர சபை உறுப்பினர்கள் எனப் பலரும் ஆர்ப்பாட்டத்தில் கலந்து கொண்டனர்.

12 மணிக்கு அங்கு வருகைதந்த ஜெனரல் பொன்சேகாவின் மனைவி அனோமா பொன்சேகா மக்கள் கூட்டத்துக்குள் நுழைந்து தமது நன்றியைத் தெரிவித்தார். அங்கு சிறிது நேரம் நின்ற பின்னர் அவர் உயர் நீதிமன்றத்துக்குச் சென்று தமது கணவரை விடுவிக்கக் கோரும் அடிப்படை உரிமைமீறல் மனுவொன்றைத் தாக்கல் செய்தார்.

ஆர்ப்பாட்டப் பேரணியை தொடர்ந்து பிற்பகல் 12.30 மணிக்கு எதிரணிகளின் தலைவர்களும் கூடிநின்ற ஆயிரக்கணக்கான மக்களும் நீதிமன்றக் கட்டிடத்துக்கு முன்னால் உள்ள பாதையில் அமர்ந்து சத்தியாக்கிரகத்தை மேற்கொண்டனர். சுமார் 30 நிமிடங்கள் வரை சத்தியாக்கிரகமிருந்த பின்னர் ஆர்ப்பாட்டப் பேரணி பிற்பகல் 1.15 மணியளவில் முடிவுற்றது.

இறுதியில் கருத்துத் தெரிவித்த அரசியல் கட்சிகளின் தலைவர்கள், இது ஆரம்பம் மட்டுமே. தொடர்ந்து நாடு முழுவதும் நாளாந்தம் இந்த ஆர்ப்பாட்டப் பேரணிகள் இடம்பெறும். ஜெனரல் சரத் பொன்சேகாவை விடுதலை செய்யும்வரை போராட்டம் நடக்கும். ஆளும் தரப்பின் காடைத்தனத்துக்கோ, பொலிஸாரின் அச்சுறுத்தல்களுக்கோ நாம் அடிபணியப் போவதில்லை எனத் தெரிவித்தனர்.

இதேவேளை, தலைநகரில் இடம்பெற்ற ஆர்ப்பாட்டப் பேரணிக்குச் சமாந்தரமாக நேற்றைய தினம் நுவரெலியாவில் நண்பகல் 12 மணிக்கும் கம்பஹா ரயில் நிலையம் முன்பாக மாலை 5 மணிக்கும் களுத்துறை நகரில் 3.30 மணிக்கும் கண்டி மாநகரில் 4 மணிக்கும் பொலன்நறுவை நகரில் 3.30 மணிக்கும் காலி மாநகரில் 4 மணிக்கும் மாத்தறை நகரில் மாலை 4 மணிக்கும் ஆர்ப்பாட்டப் பேரணிகள் நடத்தப்பட்டன.

பொதுத்தேர்தல் அறிவிப்பு வெளியானதும் வேட்பாளர் தெரிவில் கட்சிகள் மும்முரம்

srilanka_parliament_02.jpgஏப்ரல் மாதம் எட்டாந்திகதி நடைபெறவுள்ள புதிய பாராளுமன்றத் தேர்தலில் போட்டியிடும் வேட்பாளர்களைத் தெரிவு செய்வதற்கான இறுதிக்கட்ட பணிகளில் அரசியல் கட்சிகள் ஈடுபட்டுள்ளன. பாராளுமன்றம் நேற்று முன்தினம் (09) நள்ளிரவிலிருந்து தேர்தல் திகதி அறிவிக்கப்பட்டதும் வேட்பாளர்களைத் தேர்ந்தெடுக்கும் செயற்பாடுகளை அரசியல் கட்சிகள் தீவிரப்படுத்தியுள்ளன.

இம்மாதம் 19ம் திகதி முதல் வேட்பு மனுக்களைத் தாக்கல் செய்ய முடியும் என வர்த்தமானி அறிவித்தலில் பிரகடனப்படுத்தப்பட்டிருக்கும் நிலையில் அதற்கு முன்னதாக வேட்பாளர் பட்டியல்களைப் பூர்த்தி செய்ய அரசியல் கட்சிகள் நடவடிக்கை மேற்கொண்டுள்ளன.

ஐக்கிய மக்கள் சுதந்திர முன்னணி மாகாண மட்டத்தில் வேட்பாளர்களுக்கான நேர்முக நடவடிக்கைகளில் ஈடுபட்டுள்ளது. இன்னும் இரண்டொரு தினங்களில் மாவட்ட மட்டத்தில் வேட்பாளர் பட்டியலை பூர்த்தி செய்யவுள்ளதாக முன்னணியின் பொதுச் செயலாளர் அமைச்சர் சுசில் பிரேம் ஜயந்த் தெரிவித்தார்.

முன்னணியில் அங்கம் வகிக்கும் கட்சி களுக்கு மாவட்ட மட்டத்தில் வேட்பாளர் களைப் பகிர்வது குறித்து, கட்சிகளுடன் பேச்சுவார்த்தை நடத்தப்படுவதாகக் கூறிய அமைச்சர் பிரேம் ஜயந்த், எவ்வாறெனினும் எதிர்வரும் 20ம் திகதிக்குள் வேட்பாளர்கள் நியமனப்பத்திரங்களில் கைச்சாத்திடவுள்ளதாகக் குறிப்பிட்டார். பிரதான எதிர்க்கட்சியான ஐக்கிய தேசிய கட்சியின் தலைமையிலான கூட்டணி இன்னும் தீர்க்கமான முடிவு எதனையும் மேற்கொள்ளவில்லையென அக்கட்சியின் பொதுச் செயலாளர் திஸ்ஸ அத்தநாயக்க தெரிவித்துள்ளார்.

அரசாங்கத்துக்கு சவால் விடுக்கும் அளவில் இந்தத் தேர்தலில் வேட்பாளர்களைக் களமிறக்கத் தீர்மானித்துள்ளதாகவும், இது தொடர்பில் சகல கூட்டணிக் கட்சிகளுடனும் பேசி வருவதாகவும் குறிப்பிட்டுள்ளார். கட்சித் தலைவர்களுடன் கலந்துரையாடி இவ்வாரம் முடிவொன்று எட்டப்படுமென்றும் திஸ்ஸ அத்தநாயக்க கூறியுள்ளார்.

மக்கள் விடுதலை முன்னணி (ஜே.வி.பி) சகல மாவட்டங்களிலும் போட்டியிடத் தீர்மானித்துள்ளதாக அதன் பிரசாரச் செயலாளர் விஜித ஹேரத் தெரிவித்துள்ளார். இன்னும் இரண்டொரு தினங்களில் இது தொடர்பாக இறுதி முடிவு எடுக்கப்படுமென அவர் தெரிவித்துள்ளார்.

தேர்தலில் போட்டியிடுவது தொடர்பாக தமிழ்த் தேசிய கூட்டமைப்பு எவ்வித அறிவிப்பையும் வெளியிடவில்லை. கூட்டமைப்பில் அங்கம் வகிக்கும் கட்சிகளிடையே கடந்த ஜனாதிபதித் தேர்தலில் கருத்து முரண்பாடு எழுந்திருந்தது. இந்நிலையில் கூட்டமைப்பால் போட்டியிடுவது பற்றிய தீர்மானம் எதனையும் கூட்டமைப்பு இன்னும் மேற்கொள்ளவில்லை.

இலங்கை தொழிலாளர் காங்கிரஸ் ஆளுந்தரப்புடன் இணைந்து போட்டியிடுவதென ஏற்கனவே தீர்மானித்துவிட்டது. அந்தக் கட்சியின் சார்பில் 9 பேர் தேர்தலில் களமிறங்கவுள்ளதாகத் தெரிவிக்கப்பட்டுள்ளது. ஈழ மக்கள் ஜனநாயகக் கட்சி, அகில இலங்கை முஸ்லிம் காங்கிரஸ், தமிழர் விடுதலைக் கூட்டணி ஆகிய கட்சிகள் தனித்துப் போட்டியிடுமெனத் தகவல்கள் வெளியாகியுள்ளபோதிலும், இறுதி முடிவுகள் எதுவும் இதுவரை அறிவிக்கப்படவில்லை.

ஆளுந்தரப்பில் உள்ள தமிழ் மக்கள் விடுதலைக் கழகம் (புளொட்), பத்மநாபா ஈழ மக்கள் புரட்சிகர விடுதலை முன்னணி ஆகிய கட்சிகளும் இன்னும் ஆலோசனை நடத்தி வருகின்றன. தமிழ் மக்கள் விடுதலைப் புலிகள் கட்சி தேர்தலில் போட்டியிடுவது பற்றித் தீர்மானிக்க முடியாமல் அதன் உயர்மட்ட கலந்துரையாடலை நிறுத் தியுள்ளது. ஜனாதிபதியுடன் மீண்டும் சந்தித்துப் பேச்சுவார்த்தை நடத்தியதன் பின்பே இறுதி முடிவெடுக்கப்படுமெனத் தெரிவிக்கப்பட்டுள்ளது.

பதின்மூன்றாவது பாராளுமன் த்தின் ஆயுட்காலம் எதிர்வரும் ஏப்ரல் 22ம் திகதியுடன் நிறைவ டைவதால், நேற்று முன்தினம் (09) நள்ளிரவிலிருந்து பாராளுமன்றம் கலைக்கப்பட்டுள்ளது.

ஜனாதிபதி அரசியலமைப்பின் 70 (1) சரத்தின் 11 ம் பிரிவின் கீழ் தமக்கு வழங்கப்பட்டுள்ள அதி காரத்தைப் பயன்படுத்தி பாராளுமன்றத்தை கலைத்துள்ளார்.

இது தொடர்பான விசேட வர்த்தமானி அறிவித்தல் வெளியிடப்பட்டுள்ளது.

இதற்கமைவாக எதிர்வரும் ஏப்ரல் எட்டாந்திகதி தேர்தல் நடைபெறுமென தேர்தல்கள் மேலதிக ஆணையாளர் டபிள்யூ. பீ. சுமணசிறி தெரிவித்தார். வர்த்தமானி அறிவித்தலில் பிரகடனப்படுத்தப்பட்டுள்ளவாறு வேட்பாளர் நியமனப் பத்திரங்கள் எதிர்வரும் 19ம் திகதி முதல் 26ம் திகதி வரை ஏற்றுக் கொள்ளப்படும்.

கடந்த 2004ம் ஆண்டு நடைபெற்ற பொதுத் தேர்தலில் ஐக்கிய மக்கள் சுதந்திர முன்னணி 105 ஆசனங்களைப் பெற்று வெற்றியீட்டியது. ஐக்கிய தேசியக் கட்சி 82 ஆசனங்களையும், தமிழ்த் தேசியயகூட்டமைப்பு 22 ஆசனங்களையும் பெற்றிருந்தன. ஜாதிக ஹெல உறுமய 9 ஆசனங்களைப் பெற்ற அந்தத் தேர்தலில் 75% மக்கள் வாக்களித்திருந்தனர்.

ஐக்கிய மக்கள் சுதந்திர முன்னணி, ஜே.வி.பியுடன் இணைந்து 42 இலட்சத்து 23 ஆயிரத்து 970 வாக்கு களைப் பெற்று (45.60 சதவீத வாக் குகள்), ஐக்கிய தேசிய கட்சி 35 இலட்சத்து 04 ஆயிரத்து 200 வாக்குகளையும் (37.83% சதவீதம்) தமிழ்த் தேசிய கூட்டமைப்பு 6,33,654 வாக்குகளையும், ஜாதிக ஹெல உறுமய 5,54,076 வாக்குகளையும் பெற்றிருந்தன.

அடுத்த பாராளுமன்றத்துக்கான தேர்தல் ஏப்ரல் எட்டாந்திகதி நடைபெறுவதுடன் ஏப்ரல் 22ம் திகதி முதலாவது அமர்வு நடைபெறும். புதிதாக அமையவிருப்பது 14 வது பாராளுமன்றம். என்றாலும் 1978ம் ஆண்டின் அரசியலமைப்பின்படி ஏழாவது பாராளுமன்றம் என்பது குறிப்பிடத்தக்கது.

பாராளுமன்றத்திற்குத் தேர்தல் வாக்கெடுப்பின் மூலம் 196 உறுப்பினர்களும் போனஸ் மூலம் 29 உறுப்பினர்களும் தெரிவுசெய்யப்படவுள்ளனர்.

தேர்தல் முடிவை ஆட்சேபித்து திங்கள் எதிரணி மனுத்தாக்கல்

ஜனாதிபதித் தேர்தல் முடிவை ஆட்சேபித்து அனைத்து எதிர்க்கட்சிகளும் இணைந்து எதிர்வரும் திங்கட்கிழமை ஆட்சேபனை மனுவைத் தாக்கல் செய்யவிருக்கின்றன. இந்த மனு நேற்றுத்தாக்கல் செய்யப்படவிருந்த போதிலும் எதிரணிகளின் பொது வேட்பாளராகப் போட்டியிட்ட ஜெனரல் சரத் பொன்சேகா இராணுவத்தினரால் கைது செய்யப்பட்டதன் காரணமாக உருவான நிலைமைகளால் மேற்படி ஆட்சேபமனு தாக்கலை பிற்போட வேண்டிய நிலை ஏற்பட்டதாக ஐக்கிய தேசியக்கட்சி, ஐக்கிய தேசிய முன்னணி ஆகியவற்றின் செயலாளர் திஸ்ஸ அத்தநாயக்க தெரிவித்தார்.

வாக்களிப்பு தினத்துக்கு முந்திய தேர்தல் பிரசார காலத்தில் இடம்பெற்ற வன்முறைகள், தாக்குதல்கள் தொடர்பில் தேர்தல் ஆணையாளரால் உரிய நடவடிக்கை எடுக்கப்படாமை, வாக்களிப்பின் பின்னர் வாக்குகள் எண்ணப்பட்ட நிலையங்களில் இடம் பெற்ற முறைகேடுகள், இறுதி முடிவுகள் தொடர்பிலான முறைகேடுகள் என பல்வேறு விடயங்கள் ஆதார பூர்வமாக இந்த மனுவில் உள்ளடக்கப்பட்டிருப்பதாகவும் திஸ்ஸ அத்தநாயக்க தெரிவித்தார்.

இதேவேளை தேர்தல் காலப்பகுதியில் சட்ட விவகாரங்களை முறைகேடாகப் பயன்படுத்தும் முயற்சிகளிலீடுபட்ட மூன்று சட்டத்தரணிகளை அப்பதவிகளிலிருந்து நீக்கும் உத்தரவைப் பிறப்பிக்குமாறு கோரி மற்றொரு ஜனாதிபதி வேட்பாளராக போட்டியிட்ட லால்பெரேரா நேற்று புதன்கிழமை மற்றொரு மனுவை உயர் நீதிமன்றில் தாக்கல் செய்திருக்கிறார். ஜனாதிபதி சட்டத்தரணி ராஸிக் சரூக், சட்டத்தரணி சரத் கோங்கஹகே, சட்டத்தரணி காலிங்க நந்தக இந்த திஸ்ஸ ஆகியோருக்கு எதிராகவே இந்த மனு உயர் நீதிமன்றத்தில் தாக்கல் செய்யப்பட்டுள்ளது.

தேசத்திற்கு மகுடம் கண்காட்சி நிறைவு; சுமார் 20 இலட்சம் பேர் கண்டுகளிப்பு

deyatakirula_logo.jpgகண்டி பள்ளேகலயில் கடந்த ஏழு நாட்களாக நடைபெற்ற தேசத்துக்கு மகுடம் கண்காட்சியை நாட்டின் பல பகுதிகளிலும் இருந்து வந்த கிட்டத்தட்ட 20 இலட்சம் பேர் பார்வையிட்டுள்ளதாக நிதி அமைச்சர் ரஞ்சித் சியம்பலாபிட்டிய தெரிவித்துள்ளார்.

மஹிந்த சிந்தனை கொள்கையின் கீழ் அரசாங்கம் மேற்கொண்ட அபிவிருத்தி தொடர்பாக மக்களுக்குத் தெளிவுபடுத்தும் வாய்ப்பை இந்தக் கண்காட்சி வழங்கியிருந்ததாக அவர் மேலும் கூறினார். அடுத்த ‘தேசத்துக்கு மகுடம்’ கண் காட்சியை பதுளை மாவட்டத்தில் நடத் துவதென அரசாங்கம் தீர்மானித்துள்ளதாகவும் அவர் குறிப்பிட்டார்.

அத்துடன் பள்ளேகலயில் நடைபெற்ற கண்காட்சியை வெற்றிகரமாக நடத்தவதற்கு உதவிய அரச மற்றும் தனியார் நிறுவனங்கள் மற்றும் அதிகாரிகளுக்கு அமைச்சர் நன்றி கூறினார்.

ஈ.பி.டி.பி., ரி.எம்.வி.பி.யுடன் அரசாங்கம் பேச்சுவார்த்தை

எதிர்வரும் பாராளுமன்றத் தேர்தலில் வடக்கு கிழக்கு மாகாணங்களில் எவ்வாறு போட்டியிடுவது என்பது குறித்து தமிழ் மக்கள் விடுதலைப் புலிகளுடனும் ஈ. பி. டி. பி.யுடனும் நேற்று (10) முதல் பேச்சுவார்த்தை ஆரம்பித்துள்ளதாக ஐ. ம. சு. முன்னணி செயலாளரும் அமைச்சருமான சுசில் பிரேமஜயந்த தெரிவித்தார்.

ஐ. ம. சு. முன்னணியில் உள்ள சகல கட்சிகளும் இம்முறை வெற்றிலைச் சின்னத்தில் போட்டியிட உள்ளதாகவும் அவர் தெரிவித்தார். பாராளுமன்றத் தேர்தல் தொடர்பாக விளக்கமளிக்கும் ஊடகவியலாளர் மாநாடு நேற்று (10) மகாவலி நிலையத்தில் நடைபெற்றது.

வட பகுதியில் எவ்வாறு போட்டியிடுவது என்பது குறித்து அமைச்சர் டக்ளஸ் தேவானந்தாவுட னும், கிழக்கில் போட்டியிடுவது தொடர்பாக கிழக்கு முதலமைச்சர் சிவனேசத்துரை சந்திரகாந்தனுடனும் பேசவுள்ளோம்.

குடாநாட்டில் உணவுப் பண்டங்களுக்கு விலை நிர்ணயம்

Jaffna_Roadயாழ்ப் பாண மாவட்டத்திலுள்ள உணவுக் கடைகளில் செவ்வாய்க்கிழமை நிர்ணயிக்கப்பட்ட விலைகளில் உணவுப் பண்டங்கள் விற்பனை செய்யப்படுவதற்கு ஏற்பாடுகள் செய்யப்பட்டுள்ளன.நிர்ணயிக்கப்பட்ட விலைகளிலேயே உணவுப் பண்டங்களை விற்பனை செய்ய வேண்டும் எனவும் உணவுப் பண்டங்களின் விலைகளின் பட்டியல் சகல உணவகங்களிலும் பொதுமக்களின் பார்வைக்கு வைக்கப்படவேண்டும் எனவும் யாழ்.மாவட்ட அரசாங்க அதிபர் கே.கணேஷ் அறிவித்துள்ளார். இந்த நடைமுறையைப் பின்பற்றாத உணவகங்களுக்கு எதிராகப் பாவனையாளர் அதிகார சபையின் சட்டத்தின் கீழ் சட்ட நடவடிக்கை எடுக்கப்படும் எனவும் அரசாங்க அதிபர் தெரிவித்துள்ளார்.

அத்துடன் உணவகங்களில் சமையல் செய்யும் இடம், உணவு தயாரிப்போர், பரிமாறுபவர்கள், பரிமாறும் இடம் வாடிக்கையாளர்களைக் கவரக் கூடியவாறு சுத்தமாகவும் அழகாகவும் இருக்க வேண்டியதன் அவசியத்தையும் அரசாங்க அதிபர் வலியுறுத்தியுள்ளார்.

மேலும் குடும்ப அங்கத்தவர்கள் ஒன்றாக வந்து உணவருந்தக் கூடியவாறு உணவகங்களில் வசதிகள் ஏற்படுத்திக் கொடுக்கப்பட வேண்டும்.சகல உணவகங்களிலும் விலைகளை குறைத்து உணவுப் பண்டங்களை விற்பனை செய்ய முன்வந்தமைக்கு பாராட்டும் தெரிவித்துள்ள அரசாங்க அதிபர், தேவையேற்படும் போது இந்த வியாபார செயற்பாடுகள் குறித்து தொலைபேசியூடாகவோ, கடிதம் மூலமாகவோ மாவட்ட செயலகத்துடன் தொடர்புகொள்ள முடியும் எனவும் கூறியுள்ளார்.

உணவுப் பண்டங்களின் தீர்மானிக்கப்பட்ட விற்பனை விலை விபரம் வருமாறு;

சைவ மதிய உணவு (போதுமானளவு) 60 ரூபா,
சைவ மதிய உணவு (அளவானது) 50 ரூபா,
அசைவ மதிய உணவு (போதுமானளவு) 90 ரூபா,
வடை (பெரியது) 20 ரூபா,
வடை (நடுத்தரமானது) 15 ரூபா,
வடை (அளவானது) 10 ரூபா,
றோல்ஸ் (பெரியது) 15 ரூபா,
பற்றீஸ் 10 ரூபா, றொட்டி 10 ரூபா,
தேநீர் 10 ரூபா,
பால் தேநீர் (பால்மா, பசுப்பால்) 20 ரூபா,
இடியப்பம் 4 ரூபா,
பிட்டு (அளவானது) 10 ரூபா,
தோசை 10 ரூபா, அப்பம் (சோடி) 15 ரூபா,
இட்டலி (அளவின் பிரகாரம்) 6 தொடக்கம் 10 ரூபா.

யாழ்.மாவட்டத்தில் உணவுப் பண்டங்களின் விலை அதிகரிப்பு குறித்து யாழ்.செயலகத்தில் கடந்த 5 ஆம் திகதி அரசாங்க அதிபர் தலைமையில் நடைபெற்ற கலந்துரையாடலில் மேலதிக அரச அதிபர், யாழ்ப்பாணம், நல்லூர் பிரதேச செயலாளர்கள் பாவனையாளர்கள் அதிகார சபை அதிகாரிகள், வணிக கழகப் பிரதிநிதிகள், சமாதானத்துக்கும் நல்லெண்ணத்துக்குமான மக்கள் குழு செயலாளர், பாவனையாளர் ஒருங்கிணைப்புக் குழு பிரதிநிதிகள், உணவகங்களின் உரிமையாளர்கள் கலந்துகொண்டனர்.

தற்போது அரிசி, மா, சீனி, பால்மா, மரக்கறிகள் என்பனவற்றின் விலைகள் கணிசமான அளவு குறைந்துள்ளதால் உணவுப் பொருட்களின் விலைகள் குறைக்கப்படாமை குறித்து இங்கு சுட்டிக்காட்டப்பட்டதுடன், இதனால் பாவனையாளர்கள் பெரிதும் பாதிக்கப்படுவதாகவும் தெரிவிக்கப்பட்டது.

யாழ்ப்பாண நகரைப் பொறுத்தமட்டில் உயர்கல்வி மாணவர்கள், தனியார் கல்வி மாணவர்கள் அரச ஊழியர்கள் பல தேவைகளுக்குத் தூர இடங்களில் இருந்து வருபவர்கள், தென்பகுதிகளில் இருந்து வருவோர் இந்த உணவகங்களையே நாடுகின்றனர். எனவே இவர்களின் நன்மை கருதி உணவுப் பண்டங்களின் விலைகள் குறைக்கப்படவேண்டும் என இங்கு கருத்தும் தெரிவிக்கப்பட்டது.

இங்கு உணவகங்களின் பிரதிநிதிகள் கருத்துத் தெரிவிக்கையில் உணவுப் பண்டங்கள், தேனீர் என்பனவற்றைக் கூடுதலான தரத்திலேயே பாவனையாளர்கள் எதிர்பார்க்கின்றனர்.இதனால் தான் கூடிய அரிசி, தேயிலை என்பன பாவிக்கப்படுகிறது. மேலும் தற்போது அரிசி, மா, மரக்கறி என்பனவற்றின் விலைகள் குறைவடைந்தாலும் சீனி, மீன், விறகு போன்றவற்றின் விலைகள் குறைவடையவில்லை எனவும் தெரிவித்திருந்தனர்.இவர்கள் அனைவரதும் கருத்துகளை ஆராய்ந்த பின்னரே உணவுப் பண்டங்களின் விலைகள் குறைக்கப்பட்டுள்ளதாக அரசாங்க அதிபர் தெரிவித்துள்ளார்.

பொன்சேகா மீது தாக்குதல் நடத்தவோ இடையூறு ஏற்படுத்தவோ இல்லை – இராணுவப் பொலிஸார்

sarath.jpgசரத் பொன்சேகாவை கைது செய்யச்சென்ற இராணுவப் பொலிஸார் அவரை தாக்கவோ அல்லது அவருக்கு இடையூறு ஏற்படுத்தவோ இல்லையென்று இராணுவப் பேச்சாளர் மேஜர் ஜெனரல் பிரசாத் சமரசிங்க தெரிவித்தார்.

சரத் பொன்சேகா மீது தாக்குதல் நடத்தப்பட்டதாகவும், அவர் மோசமாக நடத்தப்பட்டதாகவும் சில ஊடகங்களில் வெளியாகியிருந்த செய்திகளை இராணுவப் பொலிஸ் பிரிவு முற்றாக மறுப்பதாக அவர் மேலும் தெரிவித்தார்.

இந்த விடயம் தொடர்பாக இராணுவப் பொலிஸ் பிரிவு வெளியிட்டுள்ள அறிக்கையில் குறிப்பிடப்பட்டுள்ளதாவது:-

சரத் பொன்சேகாவை கைது செய்யச் சென்ற அதிகாரிகள் அது பற்றி அவருக்கு எடுத்துக் கூறினர். ஆனால், அவர் தொடர்ந்து அவர்களுடன் ஒத்துழைக்கப் பிடிவாதமாக மறுத்ததால் அவருடைய மறுப்பையும் ஏனைய கருத்துக்களையும் பொருட்படுத்தாது அவரை அந்த இடத்திலிருந்து அப்புறப்படுத்த வேண்டிய நிர்ப்பந்தம் ஏற்பட்டதாக தெரிவிக்கப் பட்டுள்ளது.

இதேவேளை கடற்படைத் தலைமைய கத்தில் சிரேஷ்ட அதிகாரிகளுக்கான வதிவிடம் ஒன்றில் தடுத்து வைக்கப்பட்டுள்ள பொன்சேகாவை நேற்று முன்தினம் அவரது மனைவி அனோமா பொன்சேகாவும், அவரால் பிரேரிக்கப்பட்ட சட்டத்தரணி விஜேதாச ராஜபக்ஷ ஆகியோர் சென்று பார்வையிட்டனர்.

நேற்று முன்தினம் மாலை 6.30 மணியளவில் பார்வையிடச் சென்ற அவர்கள் சுமார் 3 மணித்தியாலங்கள் சந்திப்பு நடத்தினர். பொன்சேகா கேட்டுக் கொண்டதற்கமைய மருத்துவ வசதிகள் செய்து கொடுக்கப்ப ட்டுள்ளது. இவ்வாறு தடுத்துவைக்கப்படும் ஒருவருக்கு இராணுவத்தால் வழங்கப்படும் உணவை மாத்திரமே சாப்பிட முடியும் என்று தெரிவித்த இராணுவப் பேச்சாளர், சரத் பொன்சேகாவின் சுகாதார நலன்கள் மற்றும் முன்னாள் உயர் அதிகாரி என்ற விடயங்களை கருத்திற்கொண்டு அவர் விரும்பும் உணவை செய்து கொடுக்க நடவடிக்கை எடுக்கப்பட்டுள்ளது என்றும் சுட்டிக்காட்டினார்.

தற்போது இராணுவப் பாதுகாப்பிலுள்ள சரத் பொன்சேகாவுக்கு எதிராக இராணுவச் சட்டத்தின் பிரிவு 57 (1) கீழ் சட்ட நடவடிக்கை எடுக்கப்படும் என்றும் மேஜர் ஜெனரல் குறிப்பிட்டார்.

மட்டக்களப்பில் பெரும்போக நெல் அறுவடை விலை வீழ்ச்சியால் விவசாயிகள் பாதிப்பு

மட்டக்களப்பு மாவட்டத்தில் பெரும்போக அறுவடை இடம்பெற்று வருகையில் நாளுக்கு நாள் நெல்லின் விலை வீழ்ச்சியடைந்துள்ளதால் விவசாயிகள் பாதிக்கப்பட்டுள்ளனர். எனவே, அரசு உத்தரவாத விலையினை வெளியிட்டு நெல்லினைக் கொள்வனவு செய்ய வேண்டும் என விவசாயிகள் வேண்டுகோள் விடுத்துள்ளனர்.

மட்டக்களப்பு மாவட்டத்தில் பெரும்போகச் செய்கை சிறிதுகாலம் மழை இல்லாது பாதிக்கப்பட்டதுடன், பின்னர் அதிக மழை பெய்ததாலும் பாதிக்கப்பட்டது. இறுதி நேரத்தில் கபில நிறத்தத்தி, இலைச்சுருட்டி புழு போன்ற பூச்சித் தாக்கத்தினால் பாரிய பாதிப்பு ஏற்பட்ட நிலையில் கூடுதலாகச் செலவு செய்து கிருமி நாசினிகளைப் பயன்படுத்தினர்.

இரண்டாயிரத்து முந்நூறு ரூபாவிற்குக் கொள்வனவு செய்யப்பட்ட நீட்டு வெள்ளை இன நெல் தற்போது ஆயிரத்து அறுநூறு ரூபாவிற்குக் கொள்வனவு செய்யப்பட்டு வருகின்றது. மட்டக்களப்பு மாவட்டத்தில் நெல்லின் விலையை வியாபாரிகளே தீர்மானிக்கும் நிலை இன்று உள்ளதால் வியாபாரிகள் தங்களது தேவைக்கேற்ப நாளுக்கு நாள் குறைத்துகொண்டு செல்கின்றனர்.  இதனைத் தடுத்து நிறுத்தி விவசாயிகளைப் பாதுகாக்க அரசு தலையிட்டு உத்தரவாத விலையினை வெளியிட வேண்டுமென விவசாயிகள் கோரிக்கை விடுத்துள்ளனர்.

மீள்குடியேற்றப்பட்ட பகுதி பாடசாலைகளுக்கென தளபாடங்கள் சீருடைகள் அனுப்பி வைப்பு

வடக்கில் மக்கள் மீளக்குடியமர்த்தப்படும் பகுதிகளிலுள்ள பாடசாலைகளுக்கென 34 லட்சம் ரூபா பெறுமதியான தளபாடங்கள் அனுப்பி வைக்கப்பட்டதாக கல்வி அமைச்சு தெரிவிக்கிறது.

மீண்டும் ஆரம்பிக்கப்பட்டுள்ள பாடசாலைகளில் கல்வி கற்கும் சுமார் 50,000 மாணவர்களுக்குத் தேவையான 14 மில்லியன் ரூபா பெறுமதியான சீருடைத் துணிகளும் அனுப்பி வைக்கப்பட்டுள்ளன.

1000 வாங்குகளும் 1000 கதிரைகளும் உடனடியாக அனுப்பி வைக்கப்பட்டன. மேலும் 1000 வாங்குகளும் 1000 கதிரைகளும் எதிர்வரும் 15 ஆம் திகதி அனுப்பி வைக் கப்படவுள்ளன. கிளிநொச்சி, முல்லைத்தீவு மாவட்டங்களில் மக்கள் மீளக்குடியமர்த் தப்பட்டுவரும் இவ்வேளையில் பாடசாலைகளும் உடனடியாக இயங்க வைக்க நடவடிக்கை எடுக்க ப்பட்டுள்ளது.

பாடசாலை உடனடியாக இயங்க வைக்க தளபாடப் பற்றாக்குறை பெரும் குறையாக இருப்பதை வட மாகாண ஆளுநர் மேஜர் ஜெனரல் ஜீ. ஏ. சந்திரசிறி கல்வி அமைச்சிடம் சுட்டிக்காட்டியிருந்தார். மேற்படி பாடசாலைகளுக்குரிய தளபாடங்களை உடனடியாக அனு ப்பி வைக்க நடவடிக்கை எடுக்கு மாறும் அவர் கல்வி அமைச்சர் சுசில் பிரேம் ஜயந்தவை கேட்டிருந் தார். இதற்கமைய தளபாடங்கள் சீருடைத் துணிகள் போன்றவற்றை கல்வி அமைச்சு அனுப்பிவைத் துள்ளது.

“ஆய்போவாங்…… யாழ்ப்பாணம் உங்களை வரவேற்கிறது” : ரி கொன்ஸ்ரன்ரைன்

யாழ்கோட்டைக்கு அருகாமையில் ஆழ்ந்த உறக்கத்திலுள்ள இராணுவம்30 வருட ஆயுதப் போராட்டமும் அதனுடன்கூடிய விடுதலைப் புலிகளின் ‘DisneyLand’ கனவும் ஒட்டுமொத்தமாக மண்கௌவிய நிலையில் வடக்கு கிழக்கு மாகாணங்கள் ஏதோ எஞ்சி இருந்தவற்றை சுதாகரித்துக்கொண்டு முன்னேறத் துடிக்கின்றது.

வடக்கு மாகாணத்துக்கு சிங்கள மக்கள் பஸ்வாரியாக படையெடுக்கின்றனர். பண்ணைப் பாலம் முழுவதும் சிங்களப் பகுதிகளில் இருந்துவரும் உல்லாசப் பயணிகளின் பஸ் வண்டிகள் ஆக்கிரமித்து நிக்கின்றன. மக்கள் வெட்டவெளிகளில் தாம் கொண்டுவந்த உணவை நிலத்தில் இருந்து புசிக்கின்றனர். இராணுவ காப்பரண்களில் துப்பாக்கிகளை வைத்துவிட்டு இராணுவத்தினர் நித்திரை கொள்கின்றனர். பாண் பேக்கரி வைத்திருக்கும் சிங்களக் குடும்பத்தைத் தவிர எதுவித சிங்கள குடிசன வாடையே இல்லாத பண்டத்தரிப்பு, சில்லாலை, சண்டிலிப்பாய்ப் பகுதிகளில் இரவில் பலர் சிங்களத்தில் கதைத்துக் கொண்டு திரிகின்றனர்.

ஊர்காவற்துறை, பண்டத்தரிப்பு மதுபானக் கடைகள் சிங்களவர்களால் நடாத்தப்படுகின்றது. வீதி வீதியாக சிங்கள வியாபாரிகள் பிளாஸ்ரிக் கதிரைகளையும் ஏனைய சீனாவிலிருந்து இறக்குமதியாகும் பொருட்களையும் விற்பனை செய்கின்றனர். வீதிகளில் நிற்கும் இராணுவமும் பொலிசாரும் தங்களின்பாடு. ஏறக்குறைய நூற்றுக்கு நூறுவீதமான காவற்படையினர் சிங்கள அல்லது முஸ்லிம் இனத்தவர்.

Advertising_in_Jaffnaமுழத்திற்கு முழம் காவற்படையினரை வைத்துக்கொண்டு நாடு எப்படி முன்னேறப் போகின்றது என்பது ஒருபுறம் இருக்க இந்த “சிங்கள ஆக்கிரமிப்பை” யாழ்ப்பாண மக்கள் பொருட்படுத்துவதாக தெரியவில்லை. 1980களில் நான் கண்ட யாழ்ப்பாணத்தை இன்று துளிகூட காணமுடியவில்லை. ஆயுதப் போராட்டம் என்பது ஒட்டுமொத்தமாக ஒரு தூஷண வார்த்தைபோல் உணரப்படுகின்றது. 1980ம் ஆண்டுகளில் நாங்கள் தொடங்கியதுபோல், மடியில் கைக்குண்டுடன் திரிந்து கிராமங்களில் அரசியல் வகுப்புக்கள் நடாத்தினால் மக்களே எம்மைக் கௌவிப் பிடித்து அடியும் போட்டு இராணுவத்திடம் கையளிப்பார்கள் என்பதில் எனக்கு எதுவித சந்தேகமும் இல்லை. இதுதான் இன்றைய யாழ்ப்பாணத்தின் உண்மை நிலைமை. சுருக்கமாகக் கூறின் “பிச்சை வேண்டாம் நாயைப்பிடி” நிலைமை.

A9 பாதையூடாக யாழ் செல்லும் பஸ் வண்டிகள் பல இடங்களில் இருந்து புறப்படுகின்றன. ஒருவழிக் கட்டணமாக 1000 ரூபாய்கள் தொடக்கம் 2150 ரூபாய்வரை அறவிடப் படுகின்றது. ‘வடக்கின் நாதம்’ என பெயரிடப்பட்ட பஸ் வண்டிகள் அமைச்சர் டக்ளஸ் தேவானந்தாவின் காரியாலயத்திற்கு முன்பாக புறப்படுகின்றது. ’வடக்கின் நாதம்’ பஸ்சேவை அமைச்சர் டக்ளஸ்சின் சகோதரனிற்கு உரித்தானது என பலராலும் பேசப் படுகின்றது. இவ் பஸ்சேவை ‘வடக்கின் நாதம்’ என்பதைத் தவிர்த்து ‘டக்ளஸ்சின் பஸ்’ என மக்களால் பெயர் சூட்டப் பட்டுள்ளது. ‘டக்ளஸ்சின் பஸ்’ஸில் போனால் ”செக்கிங்” குறைவு என்று பரவலான நம்பிக்கை இருக்கின்றது. ஆனால் நிலைமை அப்படியில்லை. நான் 2150 ரூபாய் கட்டி டக்ளஸ்சின் பஸ்சிலும் சென்றேன். மறுதடவை 800 ரூபாயோடு ஒரு சிறிய ‘தட்டி வான்’ ஒன்றிலும் சென்றேன். இராணுவத்தின் கெடுபிடி ஒன்றிலும் இருக்கவில்லை.

விளம்பரங்கள் தெரிவிப்பது போல் இந்த பஸ் வண்டிகள் சொகுசு வாகனங்கள் அல்ல. 30 வருடங்களுக்கு முன் யாழ்-கொழும்பு சேவையில் ஈடுபட்ட K G குணரத்தினத்தின் வாகனங்கள் நூறு மடங்கு உயர்த்தியானது. பஸ் உள்ளே A/C யும் ஒழுங்காக வேலை செய்யவில்லை. வெளிச்சமும் இல்லை. 2000 ரூபாய்க்கு யாழ்ப்பாணம் போகவும் வேண்டும் அதேநேரம் பஸ்சில் குமாரி பத்மினியின் ஆட்டமும் வேண்டும் என்று எதிர்பார்க்க முடியாதுதான். அதை விடுவோம்.

குறிப்பிட்டபடி இரவு 11 மணிக்கு கொழும்பிலிருந்து புறப்பட்ட பஸ் அதிகாலை 1.30 மணியளவில் புத்தளம் வந்தடைகிறது. ஓமந்தையில் சகலரும் பஸ்சிலிருந்து இறக்கப்பட்டு உடல்கள் முழுமையாக சோதிக்கப்படுகிறது. ஆண்களுக்கும் பெண்களுக்குமான தனித்தனியான அறைகளில் ஒவ்வொருவராக தனித்தனியாக உடற் பரிசோதனை செய்யப்படுகிறது. அவயவங்கள்கூட கைகளால் அமத்திப் பார்க்கப் படுகின்றது. இந்த சோதிப்பு எனக்கு மாத்திரம் விஷேடமாக தரப்பட்டது என்றுதான் முதலில் எண்ணி பெருமை கொண்டேன். பஸ்ஸில் ஏறிய போதுதான் அனைவருக்கும் அந்த அனுபவம் கிடைத்ததாக அறிந்தேன். கையில் கொண்டு சென்ற பைகள் மட்டும் சாதாரணமாக சோதனை செய்யப்பட்டது. ஒருவரினதும் உடமைகள் கொட்டியோ கிளறியோ சோதனை செய்யப் படவில்லை. கடமையில் இருந்த இராணுவத்தினர் மிகவும் பொறுப்புடனும் மரியாதையுடனும் தமது கடமையைப் புரிந்தனர்.

பாதுகாப்பு அமைச்சின் அனுமதி (MOD) இல்லாமல் பிறப்பிடம் இலங்கையாக இல்லாதவர் எவரும் வடமாகாணத்திற்குள் அனுமதிக்கப் படுவதில்லை. எனக்குத் தெரிந்த டென்மார்க்கைப் பிறப்பிடமாகக் கொண்ட தமிழ்பெண் ஓமந்தையில் வைத்து (25.01.10) அவரை திருப்பி கொழும்பிற்கு அனுப்பி விட்டார்கள்.

Jaffna_RoadA9 பாதை கடும் பள்ளம் திட்டியான ஒற்றைப் பாதையாக இருந்தது. பெருவாரியான மதகுகள் பாலங்கள் புனரமைக்கப்பட்டுக் கொண்டிருந்தன. சில இடங்களில் இராணுவத்தினர் சுத்திகரிப்பு வேலைகள் செய்து கொண்டிருப்பதை அவதானிக்கக் கூடியதாக இருந்தது. பெருமளவில் இராணுவமும் பொலிசும் கடமையில் ஈடுபட்டிருந்தனர். ஏ9 பாதையில் புத்தர் அனாதரவாக தனிமையில் குந்திக் கொண்டிருந்தார்.

20 வருசத்திற்கு முதல் குடிபெயர்ந்த நாங்களே ஈஸ்ற்ஹாமிலும் ரூற்றிங்கிலும் அரை அம்மணத்துடன் நின்று தேங்காயும் உடைக்கலாம் நடுரோட்டில் நின்று கூத்தும் ஆடலாம் ஆனால் யாழ்ப்பாணத்திற்கு வேலைக்கு வந்த சிங்களவர்கள் ஒரு கல்லை வைத்து அதை புத்தர் என்றால் அது உங்களுக்கு ஒரு பிரச்சினையோ?

முன்னர்போல் முறிகண்டி கோவிலடியில் பலர் தரிசித்துக் கொண்டிருந்தார்கள்.

காலை 7.15 மணிக்கு பஸ் கிளிநொச்சியை அடைகிறது. சந்தி பொந்தெல்லாம் ராஜபக்ச சிரித்த முகத்துடன் வரவேற்றார். ஜெனரல் பொன்சேகாவின் போஸ்டர் ஒன்றுகூட எனக்குத் தென்படவில்லை. கிளிநொச்சிச் சந்தியில் பெரிய புத்த விகாரை ஒன்றிருந்தது. அருகே பல கோயில்களும் இருந்தது. ஆனையிறவு வாசலில் ‘ஆய்போவாங் யாழ்ப்பாணம் உங்களை வரவேற்கிறது’ என்ற பெரிய வாசகம் வரவேற்றது. முகமாலை பளை பகுதிகளில் மக்களைவிட இராணுவமே அதிகமாக வீதிகளில் நடமாடினர். சாவகச்சேரிப் பகுதியை அண்மித்ததும் மகிந்த ராஜபச்சேயின் போஸ்டர்களுடன் டக்ளஸ் தேவானந்தாவின் போஸ்டர்களும் தென்பட்டன. பொன்சேகாவின் போஸ்டர்கள் ஒன்றுகூட இருக்கவில்லை.

Jaffna_Clock_Towerஇரவு 11மணிக்கு கொழும்பிலிருந்து புறப்பட்ட பஸ் வண்டிகள் காலை 9.30 மணியளவில் யாழ்ப்பாணம் மணிக்கூட்டுக் கோபுர வீதியை சென்றடைந்தது. வீதிகள் மிக மோசமான நிலையில் இருப்பதால் வாகனங்கள் 20-30- MPH வேகத்திலேயே பிரயாணம் செய்கின்றது. பல இடங்களில் வீதிகள் திருத்தப்படுவதை அவதானிக்கக் கூடியதாக இருந்தது. யாழ்ப்பாணம் ஒரே பாழடைந்த கட்டிடங்களுடன் காணப்படுகின்றது. 1980களுடன் ஒப்பிடும்போது சன நெருக்கடி கால்வாசிக்குக் குறைவாகவே உள்ளது.

யாழ் மாவட்டத்தில் கள்வரின் நடவடிக்கை அறவே இல்லை எனத் தெரிவிக்கப்பட்டது. முன்னைய காலங்களில் குறிப்பாக விடுதலைப் புலிகளின் உதவியாளர்களே பெருமளவில் களவில் ஈடுபட்டதாகத் தெரிவிக்கப்படுகிறது. வீட்டிற்கு முன்னால் வைக்கப்படும் பூச்சாடிகள் உட்பட அனைத்தும் களவாடப்படுவது வழமையாக இருந்தது. ஆயுதக் குழுக்கள் அதிலும் குறிப்பாக விடுதலைப் புலிகளின் வெளியேற்றத்தின் பின் யாழ் மாவட்டத்தில் களவுகள் இல்லாமல் போய்விட்டதாக பலராலும் தெரிவிக்கப்பட்டது. – களவு, கப்பம், வரி – புலிகளின் இந்த சமூகவிரோத செயல்களினால் மக்கள் விடுதலைப் போராட்டத்தை அறவே வெறுத்து நிற்கின்றனர். முச்சக்கர வண்டி ஓட்டுனர் தொடக்கம் விவசாயி, வியாபாரி உட்பட சகலரினதும் பொதுவான அபிப்பிராயம் இதுவாகத்தான் இருந்தது.

குடாநாட்டில் விடுதலைப் புலிகளும் சக ஆயுத குழுக்களும் காலத்திற்குக் காலம் செய்த அடாவடித்தனங்களால் பெருவாரியான மக்கள் தமிழ் ஆயுதக் குழுக்களையும் அதனையே அடிப்படையாக வைத்து ஆரம்பிக்கப்பட்ட அரசியற் கட்சிகளையும் வெறுத்தே நிற்கின்றனர். 1977ல் தமிழர் விடுதலைக் கூட்டணிக்கு இருந்ததைப் போல் “ஆகா..ஓகோ..” என்ற வரவேற்பு எந்த தமிழ் கட்சிகளுக்கும் இல்லை

ஊர்காவற்துறையில் ஒரு மீனவக் குடும்பத்துடன் 2 மணித்தியாலங்கள் உணர்ந்த அரசியலை பேப்பர் மற்றும் கீபோட் மார்க்ஸிஸ்ட்டுக்கள் மற்றும் TIC லண்டனில் 10 வருடங்களாக நடாத்தும் அரசியற் கூட்டங்களில் அறிந்ததைவிட செழுமையாக இருந்தது. யதார்த்தமாக இருந்தது. ஊர்காவற்துறை ஏன் டக்ளஸின் EPDP மையப்படுத்தியது. தாங்கள் என்ன காரணத்திற்காக ஈபிடிபியிற்கு வாக்களித்தோம் என்பதை மிகவும் யதார்த்தமாக மீனவ குடும்பத்தினர் விளக்கினர். ஒட்டுமொத்தமாகப் பார்த்தால் ஈபிடிபி யை ஆதரித்தால் தாங்கள் கொஞ்சம் பாதுகாப்பாக இருக்கலாம், றோட்டு போடுவார்கள் என்ற கருத்தே கேட்கக் கூடியதாக இருந்ததே தவிர ஈபிடிபிதான் மக்களின் சுபீட்சம் டக்ளஸ்தான் எமது தலைவர் என யாரும் தமது நெஞ்சை அடித்துச் சொல்லவில்லை.

Kayts_Boysமக்கள் மிகவும் நொந்துபோய் அடியுண்டு இருக்கிறார்கள். தமிழ் குழுக்களை ஒரு கட்டுப்பாட்டில் வைத்திருப்பது என்றால் சிங்கள இராணுவத்தின் பிரசன்னம் அவசியம் என்ற கருத்துத் தொனிக்கப் பெரும்பான்மையானவர்கள் பேசுகிறார்கள். “சிங்கள இராணுவம் இல்லாட்டி புலி வந்திடும், பிறகு ஈபிடிபியுடன் அடிபடும். அப்ப ஈபிடிபியுடன் ஆமிக்காரன் இருந்தால்த் தான் எமக்கு பாதுகாப்பு” என்ற கருத்து மேலோங்கி இருக்கின்றதே தவிர ஈபிடிபி கட்டாயம் இருக்க வேண்டும் என்று ஒருவர்கூட அடித்துச் சொல்லவில்லை.

வட மாகாணத்தில் அடிமட்டத்திலிருந்து சமூகரீதியாக வளர்ந்த அரசியல் தலைமை இல்லாத காரணத்தினாலும் மற்றும் சகல அரசியற் கட்சிகளும் முன்னைநாள் ஆயுதக் குழுக்களாக இருந்த காரணத்தினாலும் மக்கள் TNA பக்கம் சார்பதற்கு ஒரு காரணமாக இருக்கின்றது. TNA கட்சியை பிரேமச்சந்திரன் போன்ற முன்னைநாள் ஆயுதக் குழுக்களின் முக்கிய புள்ளிகள் தலைமை வகித்திருந்தால் அதுவும் அடிபட்டுப் போயிருக்கும்.

மீண்டும் இடித்துக்கட்டப்படும் மானிப்பாய் மருதடிப் பிள்ளையார்புலம்பெயர் பக்தர்களின் “நன்கொடையால்” வீதிக்கு வந்துள்ள மருதடிப் பிள்ளையார்.பல கிராமங்களில் ஆலயங்கள் மீள மீள புணரமைக்கப்பட்டு பெருப்பிக்கப படுகிறது. உதாரணமாக மருதடிப் பிள்ளையார் கோவில் அல்லப்பிட்டி முருகன் ஆலயம் இதுகள் ஏன்?? ஆலயம் இல்லாத ஊரில் குடியிருக்க வேண்டாம் என எமது மூதாதையோர் கூறினார்களே தவிர ஆளில்லா ஊரில் ஆலயம் கட்டுங்கள் என்று கூறவில்லையே!!

ஊர்காவற்துறை புனித அந்தோனியார் கல்லூரி1980 ஆண்டுடன் ஒப்பிடும்போது வடமாகாண மற்றும் தீவுப்பகுதிப் பாடசாலைகள் மிகவும் தரமாக இயங்குகின்றன. கணிசமான நேரத்தை மாதகல் புனித ஜோசப் மகாவித்தியாலயம் மானிப்பாய் இந்துக் கல்லூரி சண்டிலிப்பாய் இந்துக்கல்லூரி மற்றும் ஊர்காவற்துறை புனித அந்தோனியார் கல்லூரிகளில் செலவிடும் சந்தர்ப்பம் கிடைத்தது. அனைத்துப் பாடசாலைகளிலும் வன்னியில் இருந்து புலம்பெயர்ந்த குடும்பங்களின் பாதிப்பு பெருமளவில் தாக்கி இருக்கின்றது.

மாதகல் புனித ஜோசப் மகாவித்தியாலயத்தில் 2009ம் ஆண்டுத் தொடக்கத்தில் 397 ஆக இருந்த மாணாக்கரின் எண்ணிக்கை இவ்வருட தொடக்கத்தில் 500ஜ எட்டியுள்ளது. 25வீதம் அதிகரிப்பு. இதனால் பாடசாலைக்கு பெரும் சங்கடம் ஏற்பட்டுள்ளது. அண்மையில் வன்னியில் இருந்து புலம் பெயர்ந்த பிள்ளைகள் 38. இவர்களுக்கு அடிப்படை வசதிகள் ஒன்றும் இல்லை.

IDP நிலையங்களில் உள்ளவர்களைவிட IDP நிலையங்களில் இருந்து வெளியேறி யாழ் மற்றும் வவுனியாப் பகுதிகளில் இருப்பவர்கள் மிகவும் கஷ்டப்படுவதைப் போலுள்ளது. இவ்வாறு புலம்பெயர்ந்த மக்கள் பலர் மாதகல் தோமையர் வீதி -மாதகலில் சிறு குடிசை போட்டு வாழ்கிறார்கள். இவர்களின் நிலை மிகவும் பரிதாபத்திற்குரியது.

தாய் தந்தை சகோதரங்களை இழந்து தவிக்கும் மதுசாஇங்கு மதுசா சிவராசா என்ற 9 வயதுச் சிறுமி இருக்கிறாள். தகப்பன் இருக்குமிடம் தெரியாது. சகோதரர்களை காணவில்லை. 25.09.2009 அன்று புதுமாத்தளன் பகுதியிலிருந்து கடலினூடாகப் புறப்பட்டு சாலைப் பகுதியில் கடற்படையினரால் மீட்கப்பட்டு கைதடி அகதிமுகாமில் கொண்டுபோய் விடப்பட்டுள்ளாள். மதுசா தற்போது தன்னுடைய தகப்பனின் தகப்பனோடு ஒரு குடிசையில் வாழ்கிறாள். மாதகல் புனித ஜோசப் கல்லூரியில் 5ம் வகுப்புப் படிக்கிறாள். அதேபோல 8 வயதுடைய இன்னொரு சிறுமி இருக்கிறாள். குடும்பத்தில் இவளைத் தவிர அனைவரும் இறந்துவிட்டனர். தற்போது இதே கல்லூரிக்குச் சொந்தமான மடத்தில் வைத்து பராமரிக்கப் படுகிறாள். வன்னியில் நடந்த மனித அவலம் நூறுக்கு அதிகமான மைல்களுக்கு அபபபாலுள்ள மாதகல் கிராமத்தை இவ்வளவு தூரம் தாக்கியுள்ளது.

12 பிள்ளைகளுக்கு உடனடியாக சைக்கிள் உதவி தேவைப்படுகிறது. ஒரு சைக்கிளின் விலை 11 000 ரூபாய் (60 பவுண்கள்). சைக்கிள் இருந்தால் பிள்ளைகளுக்கு மிகவும் உதவியாக இருப்பதுடன் பெற்றோர் வெளிக் கிராமத்திற்குச் சென்று வேலை வாய்ப்பு பெற உதவியாக இருக்கும்.

இவ்வாறு தேவைப்படும் உதவிகளோ எண்ணற்றது. இந்த மக்களை இன்று கைவிட்டுவிட்டு மக்கள் பற்றி காகித அரசியல் பேசுவது யதார்த்தமாகாது. புரட்சிகரக் கனவுகள் மட்டும் மக்களுக்கு சோறுபோடாது.

சீருடையுடன் மானிப்பாய் இந்துக் கல்லூரி மாணவர்கள்.Computer_Room_MHCமானிப்பாய் இந்துக் கல்லூரி, ஊர்காவற்துறை புனித அந்தோனியார் போன்ற கல்லூரிகளை எடுத்துக்கொண்டால் அவர்களின் நிலை வேறு கட்டத்தில் இருக்கின்றது. வெளிநாடுகளில் உள்ள பழைய மாணவ சங்கங்களின் உதவிகளினால் இக்கல்லூரிகள் தாக்குப் பிடித்துள்ளன. இங்குள்ள பழைய மாணவ சங்கங்கள் கணணி பயிற்சி /ITயில் உதவிகள் செய்ய வேண்டும்.

உதாரணமாக 1015 மாணவர்கள் படிக்கும் மானிப்பாய் இந்துக் கல்லூரியில் ஒரு ஆசிரியர் பயிற்றுகிறார். இவர் IT மட்டுமல்ல கல்லூரியின் நூலகத்திற்கும் பொறுப்பாக இருக்கிறார். ஆக மொத்தத்தில் இவர் ITயும் படிப்பித்த பாடில்லை நூலகமும் ஒழுங்காக நடத்தவில்லை.

மானிப்பாய் இந்துக் கல்லூரி2005ம் ஆண்டு 430 ஆக இருந்த மானிப்பாய் இந்துக்கல்லூரியின் மாணவர்களின் தொகை இவ்வருடம் 1015ஜ எட்டியுள்ளது. வன்னியிலிருந்து இடம்பெயர்ந்த 82 மாணவர்களுக்கு மானிப்பாய் இந்துக் கல்லூரியில் இடம் ஒதுக்கப்பட்டுள்ளது. 2004 சமாதானக் காலங்களில் வெளிநாடுகளில் தடல்புடலாக இயங்கிய பழைய மாணவர் சங்கங்கள் தற்போது படுத்து விட்டன. உதவிகள் தொடர்ச்சியாக கிடைப்பதில்லை உதவிகள் தொடர்ச்சியாக கிடைக்காத காரணத்தினால் இந்த பழைய மாணவ சங்கங்களை நம்பி ஆரம்பிக்கப்பட்ட வேலைத்திட்டங்கள் மந்தகதியில் இயங்குகின்றன.

இனி தமிழர்கள் ஏதாவது ஒரு அழுத்தத்தை பெரும்பான்மை இனத்திற்கு கொண்டுவர வேண்டுமாக இருந்தால் அதை பொருளாதார ரீதியாகத்தான் கொண்டுவர முடியும். தமிழ் இனம் பிரபாகரனை நம்பி தமது பாரம்பரிய மண்ணையும் அதன் அரைவாசி மக்களையும் நாட்டைவிட்டு துரத்தியதுடன் பலரை மாழ வைத்தது. பின்னர் சம்பந்தனின் கிழட்டு தீர்க்கதரிசனம் பொன்சேகா என்ற நொண்டிக் குதிரைக்குப் பின்னால் ஓட வைத்து சிங்கள பெரும்பான்மையினத்தின் கோபத்துக்கு தமிழினத்தை மேலும் உள்ளாக்கியது. இப்போது புலம் பெயர் வெங்காயங்களின் சிறீலங்காவை புறக்கணிப்போம் கோஷசத்தினால் எமது இனத்திற்கு இருக்கும் கடைசி சந்தர்ப்பத்தையும் பாழாக்க நினைக்கின்றது.