18

18

நிரந்தர நண்பர்களோ பகைவர்களோ அரசியலில் இல்லை! அலரி மாளிகையில் ஜனாதிபதி

he_the_president.jpgஅரசியலில் நிரந்தர நண்பர்களும் இல்லை. நிரந்தர பகைவர்களும் இல்லை. காலத்தின் தேவையை அடையாளம் கண்டு அதற்காகச் செயற்படுவதே பொறுப்புணர்வுள்ள ஒரு நல்ல அரசியல்வாதியின் முக்கிய கடமையாகுமென ஜனாதிபதி மஹிந்த ராஜபக்ஷ கூறினார்.

நுஆ கட்சியின் தலைவியும், அமைச்சருமான பேரியல் அஷ்ரப் ஸ்ரீலங்கா சுதந்திரக்கட்சியில்இணைந்துகொண்ட வைபவம் இன்று முற்பகல் அலரி மாளிகையில் நடைபெற்றது. இங்கு உரையாற்றும்போதே ஜனாதிபதி இவ்வாறு கூறினார். இங்கு அவர் தொடர்;ந்தும் உரையாற்றுகையில்

தமது விழுமியங்களைப் பாதுகாத்துக்கொண்டு ஏனைய சமூகத்தவருக்கும் மதிப்பளித்து நல்லிணக்கத்தோடு வாழ இலங்கை மக்கள் இப்போது ஆர்வம் காட்டுகின்றனர். இவ்வாறானதொரு சந்தர்ப்பத்தில் ஸ்ரீலங்கா சுதந்திரக் கட்சியில் இணைந்துகொள்ள நுஆ எடுத்த தீhமானம் நாட்டின் தேசிய ஒற்றுமைக்கு மேலும் வலுவூட்டுவதாக அமைந்துள்ளது என்றும் கூறினார்.

அமைச்சர் பேரியல் அஷ்ரப் இங்கு உரை நிகழ்த்துகையில்,

உலகத்திலேயே மிகவும் பலம்கொண்டிருந்த பயங்கரவாதிகளைத் தோற்கடித்து நாட்டுக்கு உண்மையான சுதந்திரத்தைப் பெற்றுக்கொடுக்க தலைமை தாங்கிய  ஜனாதிபதி மஹிந்த ராஜபக்ஷவுக்கு எமது முழு ஆதரவையும் வழங்கும் முகமாகவே இந்த முடிவுக்கு நாம் வந்தோம்.

நாட்டை மேலும் அபிவிருத்திப்பணிகளை முன்னெடுப்பதற்கு சந்தர்ப்பம் அளிக்கும் வகையில் அவர் தலைமை வகிக்கும்  ஸ்ரீலங்கா சுதந்திரக் கட்சியைப் பலப்படுத்தவேண்டியது நாட்டை நேசிக்கும் ஒவ்வொரு குடிமகனினதும் கடமையாகும் என்றும் கூறினார்.

அமைச்சர்; பேரியல் அஷ்ரபும் அவரது கட்சி உறுப்பினர்களும் ஜனாதிபதி மஹிந்த ராஜபக்ஷவிடமிருந்து கட்சி அங்கத்துவ உரிமை அட்டை பெற்றுக்கொண்டனர்.

ஸ்ரீலங்கா சுதந்திரக் கட்சி பொதுச் செயலாளர் அமைச்சர் மைத்திரிபால சிறிசேனவும் இவ்வைபவத்தில் கலந்துகொண்டார். 

ஜீ.எஸ்.பி. குறித்து வீண் அச்சம் கொள்ளாதீர்! முழுப் பொறுப்பை அரசு ஏற்கும்!

gl_pereis.jpgஆடை உற்பத்தித்துறைக்கு ஐரோப்பிய யூனியன் வழங்கும் வரிச்சலுகை நிறுத்தப்படுவதனால் அத்துறையில் கடமை புரியும் ஊழியர்களுக்கும் முதலீட்டார்களுக்கும் பாரிய பாதிப்புக்கள் ஏற்படும் என எவரும் வீண் அச்சம் கொள்ளத் தேவையில்லை என்றும்  அதற்கான முழுப் பொறுப்பை அரசாங்கம் ஏற்கும் எனவும் ஏற்றுமதி அபிவிருத்தி மற்றும் சர்வதேச வர்த்தகத்துறை அமைச்சர் ஜீ.எல். பீரிஸ் தெரிவித்தார்.

அமைச்சரவை முடிவுகளை அறிவிக்கும் வாராந்த ஊடகவியலாளர் சந்திப்பு அரசாங்க தகவல் திணைக்களத்தில் இன்று காலை நடைபெற்றபோது அங்கு கருத்துத் தெரிவிக்கையிலேயே அவர் இவ்வாறு கூறினார். இங்கு அமைச்சர் தொடர்ந்தும் கருத்துத் தெரிவிக்கையில், ஜீ.எஸ்.பி. பிளஸ் வரிச் சலுகையை தற்காலிகமாக நிறுத்தப் போவதாக ஐரோப்பிய யூனியன் அறிவித்துள்ளதையடுத்து அதனை ஒரு பெரும் பிரச்சினையாக உருவாக்க எதிhக்கட்சிகள் முயன்று வருகின்றன. அவர்கள் அச்சுறுத்துவது போல் அதில் இலங்கைக்கு எவ்வித பாதிப்புக்களும் இல்லை. முதலீட்டாளர்களும் இதனால் பாதிக்கப்படமாட்டார்கள். இந்தப்பிரச்சினையைத் தீர்த்து வைக்கும் முயற்சியாக ஐரோப்பிய யூனியனுடன் அரசாங்கம் தொடர்ந்தும் பேச்சுவர்த்தை நடத்தி வருகின்றது. அந்த வரிச் சலுகையை நாம் மீண்டும் பெற்றுக்கொள்வோம் என்றும் அமைச்சர் நம்பிக்கை தெரிவித்தார்.

பேரியல் அஷ்ரப் ஸ்ரீலங்கா சுதந்திரக்கட்சியில் இணைவு

ferail_asrof.jpgநுஆ கட்சியின் தலைவியும், அமைச்சருமான பேரியல் அஷ்ரப் ஸ்ரீலங்கா சுதந்திரக்கட்சியில் இன்று இணைந்துகொண்டார். இன்று முற்பகல் அலரி மாளிகையில் நடைபெற்ற வைபமொன்றில் பேரியல் அஷ்ரபும் அவரது கட்சி உறுப்பினர்களும் ஸ்ரீலங்கா சுதந்திரக்கட்சியில் இணைந்து ஜனாதிபதி மஹிந்த ராஜபக்ஷவிடமிருந்து அங்கத்துவ உரிமை பெற்றுக்கொண்டனர்.

ஸ்ரீலங்கா சுதந்திரக் கட்சி பொதுச் செயலாளர் அமைச்சர் மைத்திரிபால சிறிசேனவும் இவ்வைபவத்தில் கலந்துகொண்டார். 

வாழ்வின் கொடுமையும்! கனவுகளின் வறுமையும்!! – சிறுவர் இல்லங்களில் சில மணிநேரங்கள் : த ஜெயபாலன்

மட்டக்களப்பில் அகிலன் இல்லத் திறப்பு விழா.இலங்கையின் 30 ஆண்டு கால உள்நாட்டு யுத்தமும் அது மிகக் கோரமாக முடிவடைந்ததும் வடக்கு கிழக்கு தமிழ் மக்களின் வாழ்நிலையை மிகமோசமான பின்னடைவுக்குத் தள்ளியுள்ளது. இந்த யுத்தத்தால் தங்கள் உழைப்பையும் சேமிப்புக்களையும் இழந்து பல்லாயிரம் பேர் நிர்க்கதியாகி உள்ளனர். பல்லாயிரக் கணக்கானோரின் வாழ்வை இந்த யுத்தம் சின்னா பின்னப்படுத்தியும் இன்னும் ஆயிரக்கணக்கானவர்களின் வாழ்நிலையை அழித்தும் உள்ளது. இந்த அழிவுகளை மிகக் கணிசமான அளவுக்கு குறைத்து மக்களின் இழப்பைத் தடுத்திருக்க முடியும். ஆனால் அதனை யுத்தத்தில் இருந்த இரு தரப்புகளுமே செய்யவில்லை. அதனால் யுத்தம் ஏற்படுத்திய சுமைகளை மக்களே சுமக்க நிர்ப்பந்திக்கப்பட்டு உள்ளனர்.

அகிலன் இல்லத் திறப்புவிழா நிகழ்வு.தமிழீழ விடுதலைப் புலிகளால் பராமரிக்கப்பட்ட காந்தரூபன் அறிவுச்சோலை, செஞ்சோலை சிறார்கள் நடந்து முடிந்த யுத்தத்தின் போது இலங்கை இராணுவத்தால் மீட்கப்பட்டனர். படையணிகளில் ஈடுபடுத்தப்பட்ட சிறார்கள் இலங்கை இராணுவத்திடம் சரணடைந்தனர். தற்போது சரணடைந்து எட்டு மாதங்கள் வரை ஆகின்றது. ஜனாதிபதித் தேர்தலில் இவர்களது விடுதலையும் விவாதப் பொருளாகி சில நூறு போராளிகள் விடுவிக்கப்பட்டு உள்ளனர். ஆனால் பல்லாயிரக்கணக்கானவர்களது எதிர்காலம் இன்னமும் கேள்விக்குறியாகவே உள்ளது. இப்போராளிகள் வன்முறைக்குப் பழக்கப்பட்டவர்கள். இவர்களுக்கு புனர்வாழ்வு அளிக்கப்படுவது அவசியமானது. ஆனால் அரசு அதனை எவ்வாறு கையாள்கின்றது என்பது தொடர்ந்தும் சர்ச்சைக்குரியதாகவே இருந்து வருகின்றது. அரசு இதுவரை யார் யாரை இவ்வாறு தடுத்து வைத்திருக்கின்றோம் என்ற பெயர் விபரத்தைக் கூட வெளியிடவில்லை. சரணடைந்த அல்லது யுத்தத்தின் போது பிடிக்கப்பட்ட இவர்கள் அதற்கான சர்வதேச விதிகளின் கீழ்நடத்தப்பட வேண்டும் போன்ற அடிப்படை அம்சங்களைக் கூட அரசு திருப்திப்படுத்தவில்லை.

டி லா சாலே பிரதேர்ஸின் நிர்வாகத்தில் உள்ள சென் சேவியர் பாடசாலை.இந்நிலையில் சில நூறு சரணடைந்த குழந்தைப் போராளிகள் செஞ்சோலை மற்றும் காந்த ரூபன் அறிவுச்சோலை சிறார்கள் கொழும்பு பம்பலப்பிட்டி இந்துக்கல்லூரில், மன்னார் சென் சேவியர் பாடசாலையில் வைத்துப் பராமரிக்கப்படுகின்றனர். இவர்களில் மன்னார் டி லா சலே பிரதேர்ஸ் இனால் சென் சேவியர் பாடசாலையில் 50 மாணவர்கள் பராமரிக்கப்படுகின்றனர். சிறுவயதிலேயே படையணிகளில் சேர்க்கப்பட்ட இம்மாணவர்கள் பெரும்பாலும் தங்கள் பெற்றோரை இழந்தவர்கள். உறவுகளை இழந்தவர்கள். தமிழீழ விடுதலைப் புலிகளால் வளர்க்கப்பட்டு இருந்த இச்சிறார்கள் தங்களையொத்த சக குழந்தைகளில் இருந்து மிகவும் மாறுபட்ட இயல்புகளைக் கொண்டிருந்ததாக இவர்களைப் பொறுப்பேற்றுப் பராமரிக்கின்ற டி லா சலே பிரதேர்ஸ் தெரிவிக்கின்றனர். இச்சிறார்கள் தொடர்ச்சியாக விசேட உளவியல் சிகிச்சைகளையும் பெற்று தற்போது இயல்பு மாணவர் வாழ்க்கைக்குத் திரும்பிக் கொண்டுள்ளனர்.

அகிலன் இல்லம் பொறுப்பெற்ற குழந்தைப் போராளிகளில் ஒரு பகுதியினர்.டி லா சலே பிரதேர்ஸ் இச்சிறார்களைத் தவிரவும் மேலும் நூறு வரையான சிறார்களைப் பராமரிக்கின்றனர். ஆனால் இந்த இரு தொகுதி சிறார்களையும் இணைத்துப் பராமரிப்பதில் அவர்கள் சில நடைமுறைச் சிக்கல்களை எதிர்கொள்கின்றனர். அதனால் இவ்விரு தொகுதி சிறார்களையும் தனித்தனியாக பராமரிக்க வேண்டிய அவசியம் ஏற்பட்டுள்ளது. இந்நிலையில் தமிழீழ விடுதலைப் புலிகளால் வளர்க்கப்பட்ட படையணிகளில் பயிற்றப்பட்ட இச்சிறார்கள் ஏனைய சிறார்களைக் காட்டிலும் விசேட தேவைகளைக் கொண்டிருப்பதும் புரிந்து கொள்ளத்தக்கதே.

இதே நிலையே பம்பலப்பிட்டி இந்துக்கல்லூரியில் உள்ள சிறார்கள் மத்தியிலும் காணப்பட்டது. இச்சிறார்களைப் பொறுப்பெடுப்பதில் புலம்பெயர்ந்த அமைப்புகள் பல பின்னடித்திருந்தன. இச்சிறார்களால் பின்னாட்களில் சிக்கல்கள் எழலாம் என்ற அச்சம் பொறுப்பெடுக்க முன்வருபவர்கள் மத்தியில் காணப்பட்டது. வவுனியா அகிலாண்டேஸ்வரி இல்லத்திடம் செஞ்சோலைச் சிறார்கள் மற்றும் குழந்தைப் போராளிப் பெண்கள் உட்பட 160 பேர் வரை ஒப்படைக்க அரசு முன் வந்தது. ஆனால் 10 வயதுக்கு மேற்பட்ட சிறுமிகளைப் பொறுப்பேற்க அவ்வில்லத்தினர் மறுத்துவிட்டதாக அறியவருகின்றது. இச்சிறுமிகளை கட்டுப்படுத்துவது பராமரிப்பது போன்ற விடயங்களில் தங்களுக்கு சிக்கல்கள் ஏற்படலாம் என அவ்வில்லத்தினர் அச்சம் தெரிவிக்கின்றனர். அதனால் தமிழீழ விடுதலைப் புலிகளால் வளர்க்கப்பட்ட முன்னால் போராளிகளான இச்சிறார்கள் பெரும்பாலும் கைவிடப்பட்ட மறக்கப்பட்ட நிலையே காணப்பட்டது.

டி லா சாலே பிரதேர்ஸின் பொறுப்பில் இருந்த சிறுவர்களை லண்டன் அகிலன் பவுண்டேசன் பொறுப்பேற்றது.இச்சுழலிலேயே லிற்றில் எய்ட் அம்பேபுச பின்னர் அங்கிருந்து பம்பலப்பிட்டிக்கு அனுப்பப்பட்ட சிறார்கள் தொடர்பில் முன்னின்று சில உதவித் திட்டங்களை மேற்கொண்டது. அதன் தொடர்ச்சியாக மன்னார் டி லா பிரதேர்ஸின் பராமரிப்பில் உள்ள சிறார்களைப் பொறுப்பெற்கும்படியான வேண்டுகோள் லிற்றில் எய்ட்க்கு விடுக்கப்பட்டது. ஆனால் லிற்றில் எய்ட் அவர்களைப் பொறுப்பெற்று பராமரிக்கும் நிதி நிலையைக் கொண்டிருக்காத நிலையில் அச்சிறார்களைப் பராமரிப்பதற்கான நிதிப் பொறுப்பினை லண்டன் அகிலன் பவுண்டெசன் பொறுப்பேற்கவும் முன்வந்து.

மன்னாரில் சிறுவர் இல்லம் அமைப்பதற்கான இடம்பார்க்கப்படுகின்றது.ஜனவரி 21 அன்று சென் சேவியர் கல்லூரியில் உத்தியோகபூர்வமாக அச்சிறார்களை பொறுப்பேற்கும் நிகழ்வு இடம்பெற்றது. இந்நிகழ்வில் லண்டன் அகிலன் பவுண்டேசன் நிறுவனர் எம் கோபாலகிருஸ்ணன், லிற்றில் எய்ட் தலைவர் ரி கொன்ஸ்ரன்ரைன், இவ்விரு அமைப்புகளின் சார்பிலும் த ஜெயபாலன், டி லா சாலே பிரதேர்ஸ் இன்னும் சிலரும் கலந்து கொண்டனர். இச்சிறு நிகழ்வின் பின்னர் சென் சேவியர் கல்லூரியிலும் அதற்கு அருகாமையிலும் தங்க வைக்கப்ட்டுள்ள இச்சிறார்களை தங்க வைப்பதற்கான புதிய கட்டிடம் ஒன்றின் அவசியம் பற்றிப் பேசப்பட்டது. லண்டன் திரும்பிய பின்னர் டி லா சாலே பிரதேர்ஸ் க்குச் சொந்தமான நிலத்தில் இச்சிறார்களைத் தங்க வைப்பதற்கான கட்டிடம் ஒன்றைக் கட்டிக் கொடுப்பதற்கும் லண்டன் அகிலன் பவுண்டேசன் முன்வந்துள்ளது.

குழந்தைப் போராளிகளுடன் எம் கோபாலகிருஸ்ணன்.மன்னார் சென் சேவியர் கல்லூரியில் தங்க வைக்கப்பட்ட இச்சிறார்களுடன் ஒரு குறுகிய உரையாடலை நடத்த முடிந்தது. நாம் சந்தித்த சிறார்கள் பெரும்பாலும் பெற்றோரை தம் குழந்தைப் பருவத்திலேயே இழந்தவர்கள். தமிழ் மக்களின் விடுதலைக்காக ஆயுதங்கள் திணிக்கப்பட்டவர்கள். இவர்களது உடல்கள் யுத்தத்தினால் பல் வகைப்பட்ட காயங்களுக்கும் உள்ளாகி இருந்தது. கடந்த காலத்தில் இருந்து மீள முடியாமல் எதிர்காலத்தை எதிர்கொள்கின்ற இவர்கள் பயணிக்க வேண்டிய பாதை மிகக் கரடுமுரடானதாக உள்ளது. தற்போது இவர்கள் சென் சேவியர் பாடசாலையில் காபொத உயர்தர வகுப்பில் படிக்கின்றனர். இன்னும் சிலர் 5ம் 6ம் வகுப்புகளில் படிக்கின்றனர். இவர்களிடையே படிக்க வேண்டிய ஆர்வத்தில் எவ்வித குறையும் இல்லை. ஆனால் அதற்கான வாய்ப்பும் சுழலும் தான் அவர்கள் எதிர்கொள்கின்ற பிரச்சினையாக உள்ளது.

சென் சேவியர் இல்லத்தில் சிறார்கள் தங்கவைக்கப்பட்டுள்ள அறை.மாணவப் பருவம் என்பது வாழ்வில் மிக இனிமையான பருவம். சுமைகளற்று கவலைகளற்று சுகமான சுமைகளைத் தாங்கிக் கனவுகாண்கின்ற பருவம். ஆனால் இந்த மாணவர்களுக்கு அது அவ்வாறில்லை. ஒரு அறையிலேயே 20 பேர்வரை படுத்து உறங்குவதற்கு மட்டும் உள்ள இடைவெளியில் அவர்களால் என்ன செய்துகொள்ள முடியும். அவர்கள் தினம் தினம் பொழுதைக் கழிப்பதற்கே பெரும் அவஸ்த்தைப்படுவதை பார்க்கக் கூடியதாக இருந்தது.  அவர்கள் கடந்து வந்த பாதை மிகக் கடுமையானதும் கொடுமையானதும். ஆனால் அவர்களது இன்றைய வாழ்வும் கனமானதாகவே உள்ளது. அவர்களுக்கு எதிர்காலக் கனவுகளும் நம்பிக்கையும் வழங்கப்படுவதற்கு வழிவகைகள் செய்யப்பட வேண்டும்.

London_Sivan_Kovil_illam_Toilet_Not_in_useஉணவு உடை உறைவிடம் கல்வி என்ற அடிப்படைத் தேவைகள் மட்டும் ஒரு மாணவனுக்கு போதுமானதாக அமையாது. அவர்களது பொழுது போக்கிற்கும் சிந்தனையை விருத்தி செய்வதற்குமான சுழல் அமைய வேண்டும்.

இந்தச் சுழல் மன்னாரில் மட்டும் அல்ல நான் சென்று பார்த்த ஏனைய இல்லங்களிலும் காணப்படவில்லை அடிப்படைத் தேவைகளை வழங்கப்படுகின்றது என்ற விடயத்தில் ஆறுதல் அடையக் கூடியதாக இருந்தது. மாணவர்களும் அதற்கு தங்கள் நன்றியைத் தெரிவிக்கத் தவறவில்லை. அவர்கள் மேலதிகமாக எதையும் எதிர்பார்க்கவும் இல்லை. ஏனெனில் அவர்கள் தங்கள் நிலையை உணர்ந்து தங்கள் எதிர்பார்ப்புகளுக்கு கட்டுப்பாடுகளை விதித்து உள்ளதை என்னால் உணர முடிந்தது. அவர்களது தேவைகளை உணரந்து அவர்களது எதிர்கால விருத்திக்குத் தேவையான உதவிகளை வழங்குவது புலம்பெயர்ந்து வாழ்கின்ற எமது கடமையாகும்.

அகிலன் இல்லத் திறப்புவிழா நிகழ்வு.மட்டக்களப்பில் லண்டன் அகிலன் பவுண்டேசன் உறவுகளை இழந்த உறவுகளால் பராமரிக்க முடியாத நிலையில் ஒப்படைக்கப்பட்ட சிறுவர்களுக்கான இல்லம் ஒன்றை ஜனவரி 23ல் திறந்து வைத்தது. இந்நிகழ்வில் லண்டனில் இருந்து சென்றவர்களும் சமூக அந்தஸ்துடையவர்களும் விளக்கேற்றியது முக்கியமல்ல. அங்கு தங்கி வாழப் போகின்ற சிறுமி ஒருத்தியும் விளக்கேற்றி நிகழ்வைச் சிறப்பித்தார். இவ்வாறான நிகழ்வுகளில் அச்சிறுவர்கள் கெளரவிக்கப்படுவது மிக அவசியம்.

எம் கோபாலகிருஸ்ணன் தனது மகனின் நினைவாக மேற்கொள்ளும் பல்வேறு சமூகப்பணிகளில் இச்சிறார்களைப் பராமரிப்பதும் ஒன்று. மன்னாரில் டி லா சாலே பிரதேர்ஸின் பொறுப்பில் உள்ள 50 சிறார்கள், மட்டக்களப்பில் திறக்கப்பட்ட அகிலன் இல்லத்தில் 40 சிறார்கள் இவர்களைவிடவும் ஏனைய சிறுவர் இல்லங்களுக்கு பகுதியாக 35 சிறார்களுக்குமான நிதிப் பொறுப்பினை லண்டன் அகிலன் இல்லம் பொறுப்பேற்று நடாத்துகின்றது. இவற்றைவிட 15 முதியோர்களையும் லண்டன் அகிலன் இல்லம் பராமரிக்கின்றது.

திலகவதியார் இல்லச் சிறுமிகளுடன் த ஜெளபாலன்.மட்டக்களப்பில் திறந்து வைக்கப்பட்ட அகிலன் இல்லம் அங்கு லண்டன் ஸ்ரீ கனகதுர்க்கை அம்மன் ஆலயத்தால் பராமரிக்கப்படுகின்ற திலகவதியார் சிறுமிகள் இல்லத்திற்கு அருகில் உள்ளது. இவர்களுக்கும் கல்வி உட்பட அடிப்படைத் தேவைகள் நிறைவு செய்யப்பட்டு இருந்தது. அச்சிறுமிகளுடன் உரையாடியதில் அவர்கள் தங்கள் நிறைவை வெளிப்படுத்திக் கொண்டனர். ஆனால் அவர்களும் தங்கள் எதிர்பார்ப்புகளை மட்டுப்படுத்தியே வைத்திருந்தனர். அச்சிறுமிகள் உட்பட இவ்வாறான சிறுவர்களது கனவுகள் பரந்து விரிந்ததாக இருக்கவில்லை. படித்து கிளாக் ஆசிரியை ஆக வரவேண்டும் என்றளவில் தான் அவர்கள் தங்கள் கல்விக் கனவை மட்டுப்படுத்தி இருந்தனர்.

அகிலன் இல்லத் திறப்புவிழா நிகழ்வு.இராணுவக் கெடுபிடிகளோ மற்றும் தொல்லைகளோ தங்களுக்கு இதுவரை இருக்கவில்லை என்றும் அவர்கள் தெரிவிக்கின்றனர். இதே கருத்தை அங்குள்ள ஏனைய இல்லங்களும் தெரிவித்தன. இராணுவத்தினரிடம் இல்லங்கள் பற்றிய விபரங்கள் உண்டு. அவர்களுடன் இல்ல நிர்வாகம் நல்லிணக்கமான உறவைப் பேணி வருகின்றது.

மட்டக்களப்பில் அகிலன் இல்லத்தின் திறப்பு விழாவிற்கு அப்பகுதி இராணுவப் பொறுப்பதிகாரியும் அழைக்கப்பட்டு இருந்தார். அது சற்று சங்கடத்தையும் ஏற்படுத்தியது. ஏற்பாட்டாளர்களிடம் அது பற்றி விசாரித்த போது ஒரு இராணுவ அதிகாரியை அழைப்பதால் தங்களுக்கு எவ்வித பாதிப்பும் இல்லை என்றும் நாளை ஒரு பிரச்சினை என்று வந்தால் தேவையற்ற கெடுபிடிகளைத் தவிர்க்கலாம் என்றும் தெரிவித்தனர். மேலும் இந்த இல்லங்கள் தொடர்பான நடவடிக்கைகள் எதற்கும் இடைஞ்சல்கள் ஏற்படுவதும் தவிர்க்கப்படும் எனத் தெரிவித்தனர். அங்கு மக்கள் தங்கள் நாளாந்த வாழ்வை நகர்த்த சமயோசிதமாக நடந்து கொண்டு முரண்பாடுகளைத் தவிர்த்து தங்கள் வாழ்வை நகர்த்துகின்றனர்.

லண்டண் கனகதுர்க்கை அம்மன் ஆலய ரஸ்டி தேவசகாயமும் அவருடைய துணைவியாரும்.மேலும் லண்டன் ஸ்ரீ கனகதுர்க்கை அம்மன் ஆலயமும் பெருமளவிலான பணிகளை மேற்கொண்டு வருகின்றது. ஒரு குறுகிய காலம் ஆலயத்தில் ஏற்பட்ட நிர்வாக மாற்றத்தால் இப்பணிகளில் தடையேற்பட்டு இலங்கைக்கு உதவி வழங்குவதற்கு எதிராக சில ஆலய ரஸ்டிகள் செயற்பட்டனர். இது பற்றிய விரிவான கட்டுரைகள் செய்திகள் லண்டன் குரலில் வெளிவந்திருந்தது. ஆனால் மீண்டும் நிர்வாகத் தலைவராகத் தெரிவு செய்யப்பட்ட எஸ் கருணைலிங்கம் பாதிக்கப்பட்ட மக்களுக்கான உதவிகளை மீள ஆரம்பித்து வைத்ததை ஸ்ரீ கனகதுர்க்கை அம்மன் ஆலய ரஸ்டிகளில் ஒருவரான தேவசகாயம் கிழக்கு இலங்கைப் பல்கலைக் கழகத்தில் நடந்த வைபவம் ஒன்றில் சுட்டிக்காட்டினார்.

வன்னி யுத்தத்தால் பாதிக்கப்பட்ட மாணவர்களுக்கு எம் கோபாலகிருஸ்ணன் உதவித்தொகை வழங்குகின்றார்.ஜனவரி 23ல் வன்னி யுத்தத்தினால் பாதிக்கப்பட்ட 25 மாணவர்களுக்கு தலா 25000 ரூபாய் படி உதவித் தொகை வழங்குகின்ற திட்டத்தை லண்டன் அகிலன் பவுண்டேசன் மேற்கொண்டது. அன்றைய நிகழ்வில் முதற்கட்டமாக பாதிக்கப்பட்ட ஒவ்வொரு மாணவருக்கும் 5000 ரூபாய் வழங்கப்பட்டது. கிழக்கு லண்டன் பல்கலைக் கழகத்தில் இடம்பெற்ற இந்நிகழ்வில் பல்கலைக் கழகத்தின் மாணவர் தலைவர்கள் மற்றும் விரிவுரையாளர்கள் சிலரும் கலந்துகொண்டனர்.

செட்டிபாளையம் விபுலானந்தர் இல்லத்தில் மாணவர்கள் உணவு உண்பதற்கும் கல்வி கற்பதற்குமான மண்டபம் ஒன்று – அகிலன் மணிமண்டபம் – கட்டப்பட்டு இந்த விஜயத்தின் போது திறந்து வைக்கப்பட்டது.

லண்டன் சிவன் கோவில் இல்லச் சிறுமிகளுடன்.மட்டக்களப்பில் லண்டன் சிவன் கோவில் இல்லம் ஒன்றும் உள்ளது. இந்த இல்லத்தில் 20 சிறுமிகள் வரையுள்ளனர். இவர்களது உணர்வுகளும் தேவைகளும் மற்றைய இல்லங்களில் உள்ளவர்களில் இருந்து வேறுபட்டதல்ல. இவர்களது கனவுகளும் கூட ஆசிரியைகளாக வர விரும்புவதாகவே இருந்தது. இந்தச் சிறார்கள் யாரும் எதிலும் குறைகூற விரும்பவில்லை. தங்களுக்கு கிடைத்ததை எண்ணி திருப்தியடைந்துள்ளனர். ஆனால் அவர்களை இந்நிலைக்கு அப்பால் எடுத்துச் சென்று அவர்களை தங்கள் சொந்தக் காலில் நிலைக்கச் செய்கின்ற பொறுப்பு புலம்பெயர்ந்த தமிழ் சமூகத்திற்கு உண்டு.

மட்டக்களப்பில் உள்ள லண்டன் சிவன் கோவில் இல்லம் - படுக்கை மண்டபம்.தற்போது லண்டனில் இருந்து அகிலன் பவுண்டேஸன் ஸ்ரீ கனகதுர்க்கை அம்மன் ஆலயம் என்பனவே பெரிய அளவிலான உதவிப் பணிகளை முன்னெடுக்கின்றன. ஏனைய நாடுகளில் இருந்தும் சில சில உதவிப் பணிகள் மேற்கொள்ளப்படுகின்றது. புலம்பெயர்ந்துள்ள நாடுகளில் உள்ள ஒவ்வொரு ஆலயமும் தமது வருமானத்திற்கு ஏற்ப பாதிக்கப்பட்ட மக்களுக்கு உறவுகளை இழந்த குழந்தைகளுக்கு தனிப் பெற்றோருக்கு (தாயை அல்லது தந்தையை இழந்தவர்களுக்கு) உதவ முன்வந்தால் வடக்கு கிழக்கில் உள்ள மக்களின் எதிர்கால வாழ்வில் நம்பிக்கையை ஏற்படுத்த முடியும்.

மன்னாரில் புதிய தங்;குமிடத்திற்குக் கட்டப்பட்டுக் கொண்டுள்ள குளியல்பகுதி.தமிழ் மக்களை இன்றைய நிலையிலிருந்து மீட்பது அரசின் கடமையென்றும் அவ்வாறு அப்பொறுப்புக்களை ஏற்பது இனவாத அரசின் இனவாத நடவடிக்கைகளுக்கு உதவும் என்றும் கூறி இப்பொறுப்புக்களை தட்டிக்கழிக்கும் தத்துவ அரசியல் மட்டும் பாதிக்கப்பட்ட மக்களுக்கு எவ்வித பயனையும் ஏற்படுத்தப் போவதில்லை. பாதிக்கப்பட்ட மக்களை நெருங்காமல் பல்லாயிரம் மைல்களுக்கு அப்பால் இருந்து டயரெக் டெபிற்றில் நடாத்திய அரசியலற்ற வன்முறையின் விளைவுகள் தாம் இன்று அந்த மக்கள் அனுபவிக்கும் இந்த துயரங்களுக்கு அடிப்படை. அதே போல் ஆனால் டயரெக்டெபிற்றும் செலுத்தாமல் வெறும் வாய்ச்சொல் புரட்சியாளர்களை நம்பும் நிலையில் இலங்கைத் தமிழ் சமூகம் இன்றில்லை. அவரவர் தங்கள் அரசியல் அடையாளங்களை பில்ட் அப் செய்ய வாய்ச்சொல் புரட்சிகளும் தத்துவங்களும் உதவுமேயன்றி தங்களை அர்ப்பணிக்கத் தயாரற்ற இந்த வாய்ச்சொல் வீரர்கள் கூவித்தான் பொழுது விடிய வேண்டும் என்ற அவசியம் அங்கில்லை.

யுத்தம் ஏற்படுத்திய இந்தச் சுமைகளை சுமப்பது ஒன்றும் இலகுவானதல்ல. அதிலும் யுத்தத்தில் தங்கள் தாய் தந்தையரையும் உறவுகளையும் இழந்த சிறார்களின் மீது இச்சுமைகளை சுமத்திவிட முடியாது. இந்தச் சிறார்கள் விடயத்திலும் பாதிக்கப்பட்ட மக்கள் விடயத்திலும் தமிழ் சமூகத்திற்கு மிகப்பெரும் பொறுப்பு உண்டு. ஆனால் இலங்கையில் உள்ள தமிழ் சமூகத்தினால் இந்தப் பொறுப்புக்களை தாங்கும் வலுவில்லை. அப்பொறுப்புக்களை ஏற்கின்ற கடமைப்பாடு மேற்கு நாடுகளில் புலம்பெயர்ந்து வாழ்கின்ற பொங்கு தமிழ் கொண்டாடிய மற்றும் கொண்டாடாத தமிழ் மக்களுக்கு உண்டு.

சட்டம் எவரின் தராதரத்தையும் அந்தஸ்தையும் கருத்திற்கொண்டு செயற்படுவதில்லை

rohitha.jpgஇலங்கை யில் நடைமுறையிலுள்ள சட்டம் அனைவருக்கும் பொதுவானது. அது எவருடைய தராதரத்தையும், அந்தஸ்தையும் கருத்திற்கொண்டு செயற்படுவதில்லை. அத்துடன் அரசாங்கம் எவரையும் அரசியல் பழிவாங்கும் எண்ணத்தில் செயற்படவும் இல்லை என வெளிவிவகார அமைச்சர் ரோஹித போகொல்லாகம தெரிவித்தார். சுயாதீனமாக இயங்கும் சிவில் நீதிமன்ற நடைமுறையும் இராணுவ நீதிமன்ற நடைமுறையும் எமது சட்டவாக்கத்துள் இருக்கிறது என்றும் அமைச்சர் ரோஹித போகொல்லாகம தெரிவித்தார்.

தனிப்பட்ட விஜயம் ஒன்றை மேற்கொண்டு இலங்கை வந்துள்ள கொன்சர்வேட்டிவ் கட்சியைச் சேர்ந்த பிரிட்டனின் நிழல் பாதுகாப்பு அமைச்சரான லியாம் பொக்ஸ் வெளிவிவகார அமைச்சரை நேற்று மாலை அமைச்சு அலுவலகத்தில் சந்தித்துப் பேசினார்.

இதனைத் தொடர்ந்து நடைபெற்ற ஊடகவியலாளர் சந்திப்பின் போது பேசிய லியாம் பொக்ஸ் கைது செய்யப் பட்டுள்ள ஜெனரல் சரத்பொன்சேகா சிவில் நீதிமன்றம் ஊடாகவே விசாரிக்கப்பட வேண்டும் என்றும், அவரது விசாரணை வெளிப்படையாக இருக்க வேண்டும் என்றும் தெரிவித்தார். இதற்குப் பதிலளிக்கும் போதே அமைச்சர் போகொல்லாகம மேற்கண்டவாறு தெரிவித்தார்.

பிரிட்டனுக்கும் இலங்கைக்கும் இடையே உறவுகள் குறித்தும் பேசிய இருவரும், இரண்டாவது முறையாகவும் 58 வீத வாக்குகளைப் பெற்று ஜனாதிபதியாக தெரிவு செய்யப்பட்டுள்ள ஜனாதிபதி மஹிந்த ராஜபக்ஷவுக்கு பிரிட்டன் சார்பிலும், கொன்சர்வேடிவ் கட்சியின் தலைவர் சார்பிலும் வாழ்த்துக்களைத் தெரிவிப்பதாகவும் தெரிவித்தார்.

வேட்புமனுத் தாக்கல் நாளை ஆரம்பம்

srilanka_parliament_02.jpgவேட்பாளர் நியமனப்பத்திரங்களைத் தயாரிக்கும் பரபரப்புக்கு மத்தியிலும், தேர்தலில் போட்டியிடும் சின்னத்தைத் தெரிவு செய்வதில் சிறு அரசியல் கட்சிகள் இன்னமும் முடிவெடுக்க முடியாத நிலையில் இறுதி நேர பிரயத்தனத்தில் ஈடுபட்டுள்ளன.

பெரிய அரசியல் கட்சிகள் வேட்பாளர் நியமனப் பத்திரங்களைத் தயாரிக்கும் இறுதிக்கட்டப் பணிகளில் ஈடுபட்டுள்ளன. அதேநேரம் சிறிய கட்சிகளுக்கு ஆசனங்களை ஒதுக்கிக் கொடுப்பதில் முனைப்புக் காட்டியுள்ளன.

இந்த நிலையில் பெரிய கட்சிகளுடன் கூட்டுச் சேர்ந்திருக்கும் சில அரசியல் கட்சிகள் எதிர்வரும் பொதுத் தேர்தலில் தனித்துப் போட்டியிடுவதா அல்லது இணைந்தே போட்டியிடுவதா என்பதில் இன்னமும் தெளிவான முடிவை எடுக்க முடியாத நிலையில் உள்ளன.

யாழ்ப்பாணத்தில் தனித்துப் போட்டியிடுவதெனவும் அதேநேரம் ஆளும் ஐக்கிய மக்கள் சுதந்திர முன்னணியுடன் நட்புறவுடன் செயற்படுவதெனவும் ஈழமக்கள் ஜனநாயகக் கட்சி (ஈ.பி.டி.பி) தீர்மானித்திருக்கிறது. எனினும், அரச தரப்புடன் நேற்றைய தினமும் பேச்சுவார்த்தை நடத்தப்பட்டதாகக் கட்சியின் பேச்சாளரொருவர் தினகரனுக்குத் தெரிவித்தார்.

அரசாங்க ஆதரவு கட்சியாகத் தேர்தலில் களமிறங்குவதுடன், ஐக்கிய மக்கள் சுதந்திர முன்னணியில் இணைந்து போட்டியிடுவதனை விடவும், தனித்து வீணைச் சின்னத்தில் போட்டியிடுவது சாதகமானது என ஈ.பி.டி.பி. நம்புகிறது.

இதேபோன்று ஆளுந்தரப்பில் உள்ள மலையக மக்கள் முன்னணி நுவரெலியா, பதுளை மாவட்டங்களில் தனித்து கட்சியின் மண்வெட்டிச் சின்னத்தில் போட்டியிடத் தீர்மானித்துள்ளதாகத் தகவல்கள் தெரிவித்தன. அமரர் பெ. சந்திரசேகரனின் பாரியார் சாந்தினி சந்திரசேகரனின் தலைமையில் நுவரெலியா மாவட்டத்திலும், மாகாண சபை உறுப்பினர் எஸ். அரவிந்த்குமார் தலைமையில் பதுளை மாவட்டத்திலும் மலையக மக்கள் முன்னணி களமிறங்கும் எனத் தெரிவிக்கப்பட்டுள்ளது. ஆனால் இறுதிக் கட்டத்திலும் அரச தரப்புடன் பேச்சுவார்த்தை நடத்தப்படுவதாக கட்சி வட்டாரங்கள் தெரிவித்தன.

இதேவேளை, தேர்தலில் போட்டியிடுவது தொடர்பாக தமிழ்த் தேசிய கூட்டமைப்பு நேற்றும் கூடி ஆராய்ந்துள்ளது. இம்முறை கூட்டமைப்பின் முன்னாள் உறுப்பினர்கள் பலருக்குப் போட்டியிட வாய்ப்பளிக்காதிருக்க முடிவு செய்யப்பட்டுள்ளது. குறிப்பாக எம்.கே. சிவாஜிலிங்கம், என்.ஸ்ரீகாந்தா ஆகியோருக்கு வாய்ப்பளிக்கக் கூடாதெனக் கூட்டமைப்பின் பெரும்பாலானோர் கூறியுள்ளனர்.

இந்நிலையில், சிவாஜிலிங்கமும், ஸ்ரீகாந்தாவும் கலாநிதி விக்கிரமபாகு கருணாரட்ன தலைமையிலான புதிய இடதுசாரி விடுதலை முன்னணி கட்சியில் போட்டியிடுவதாகத் தெரிவிக்கப்பட்டது.

தேர்தல் முடிவுக்கு எதிரான உச்சமன்ற மனு: கணனி மூலம் திரிபு படுத்தப்பட்டதாக கூறப்பட்ட குற்றச்சாட்டை மனுவில் சேர்க்காதது ஏன்?

laxman.jpgஜனாதிபதித் தேர்தல் முடிவுகள் கணனி மூலம் திரிபுபடுத்தப்பட்டுள்ளதாகக் குற்றஞ்சாட்டும் எதிர்க்கட்சிகள், உச்ச நீதிமன்றத்திற்கு தாக்கல்செய்துள்ள தேர்தல் முடிவுகளுக்கு எதிரான மனுவில் அதனைக் குறிப்பிடாததேன் என ஊடகத் துறை அமைச்சர் லக்ஷ்மன் யாப்பா அபேவர்தன கேள்வியெழுப்பினார்.

கொழும்பில் நேற்று நடைபெற்ற செய்தியாளர் மாநாடொன்றில் இது குறித்து தெரிவித்த அமைச்சர், நாட்டு மக்களும் சர்வதேசமும் நீதியானதென ஏற்றுக் கொண்ட தேர்தலை மோசடி என்று கூறுபவர்கள் பொதுத் தேர்தலில் இதைவிட மோசமான படுதோல்வியைச் சந்திப்பது நிச்சயமெனவும் குறிப்பிட்டார்.  தகவல் ஊடகத்துறை அமைச்சில் நேற்று நடைபெற்ற செய்தியாளர் மாநாட்டில் அமைச்சர் மேலும் தெரிவிக்கையில்,

நடந்து முடிந்த தேர்தல் நீதியானதென ஐரோப்பிய ஆணைக் குழு உறுதிப்படுத்தியுள்ளது. அதற்கான சான்றிதழையும் வழங்கியுள்ளது. தேர்தல் வாக்களிப்பு முடிவடைந்த அன்றைய தினம் 4.00 மணிக்கு அத்தேர்தல் நீதியானதும் அமைதியுமானதுமெனக் கூறிய எதிர்க்கட்சித் தலைவர் ரணில் விக்கிரமசிங்க அது தொடர்பில் சம்பந்தப்பட்ட அனைவருக்கும் தமது நன்றிகளையும் தெரிவித்துக் கொண்டார்.

எனினும், தேர்தல் முடிவுகள் அறிவிக்கப்பட்ட பின்னர் அவருடன் இணைந்திருந்த ஜே.வி.பி. தலைவர் சோமவன்ச அமரசிங்க கணனி மோசடியொன்று இடம்பெற்றதாகக் குறிப்பிட்டார். நீதிமன்றத்துக்கு சமர்ப்பிக்கப்பட்டுள்ள மனுவில் அரச வளங்கள் உபயோகப்படுத்தப்பட்டதாகவும் மேலும் சில குற்றச்சாட்டுக்களையும் குறிப்பிட்டுள்ளவர்கள் ஏன் கணனி மோசடி என் பதைக் குறிப்பிடவில்லை. இதன் மூலம் இவர்கள் அடுத்துவரும் தேர்தலுக்கான சூழ்ச்சிகளை இப்போதிருந்தே ஆரம்பித்துள்ளமையே தெளிவாகிறது.

வீண் பிரசாரங்களை விட்டுவிட்டு நியாயமான அத்தேர்தல் முடிவுகளை ஏற்றுக் கொள்ளுமாறு நாம் கேட்டுக் கொள்கிறோம்.

பொதுநலவாய அமைப்பின் கூற்று தேர்தல் ஜனநாயக ரீதியில் நடைபெறவில்லை எனத் தெரிவிக்கின்றதே என செய்தியாளர் ஒருவர் எழுப்பிய கேள்விக்குப் பதிலளித்த அமைச்சர், ஐரோப்பிய ஆணைக் குழு போன்ற பிரசித்திபெற்ற அமைப்புக்கள் நியாயமான தேர்தல் என குறிப்பிடும் போது சில அமைப்புக்கள் சில சக்திகளுக்கு சார்பாக அதற்கெதிரான கூற்றுக்களைத் தெரிவிப்பதை நாம் பெரிதுபடுத்த முடியாது எனவும் அமைச்சர் தெரிவித்தார்.

எதிர்வரும் பொதுத் தேர்தலில் 150 ஆசனங்களைப் பெற்று அரசியலமைப்பில் மாற்றம் கொண்டு வந்து நல்லாட்சி யொன்றை அமைக்க முற்படும் அரசாங் கத்துக்கு மக்கள் பூரண ஒத்துழைப்பினை வழங்க வேண்டுமெனவும் அமைச்சர் மேலும் தெரிவித்தார்

10 இலட்சம் கையெழுத்துக்கள் திரட்டும் நடவடிக்கை நேற்று ஆரம்பம்

ranil.jpgஇராணுவப் பொலிஸாரினால் கைது செய்யப்பட்டு தடுத்து வைக்கப்பட்டுள்ள ஜெனரல் சரத் பொன்சேகாவை விடுதலை செய்யக்கோரி நாடு முழுவதிலும் 10 இலட்சம் கையெழுத்துக்களைத் திரட்டும் நடவடிக்கை நேற்று ஆரம்பமானது.

ஐக்கிய தேசியக் கட்சியின் தலைவர் ரணில் விக்கிரமசிங்வின் தலைமையில் இந்நிகழ்வு கேம்பிட்ஜ் ரெரஸில் உள்ள எதிர்க்கட்சித் தலைவர் அலுவலகத்தில் இடம்பெற்றது.

ஐக்கிய தேசியக் கட்சி, ஜே.வி.பி. , ஸ்ரீ லங்க முஸ்லிம் காங்கிரஸ், ஜனநாயக மக்கள் முன்னணி, ஸ்ரீ லங்கா சுதந்திரக் கட்சி மக்கள் பிரிவு, இடதுசாரி முன்னணி, ஐக்கிய சோஷலிசக் கட்சி, புதிய சிஹல உறுமய, மற்றும் பெருந்தோட்டத் துறையை பிரதிநிதித்துவப்படுத்துகிற தொழிற்சங்கங்கள், புத்திஜீவிகள் அமைப்பு, ஜனநாயகக் குழுக்கள் ஆகிய அமைப்புகள் ஊடாக இந்த கையெழுத்து திரட்டும் நடவடிக்கைகள் முன்னெடுக்கப்படவுள்ளன. 

இஸ்ரேல் மீது சர்வதேச செஞ்சிலுவைச் சங்கம் குற்றச்சாட்டு

ஆக்கிரமிக்கப்பட்ட மேற்குக்கரையில் பாலத்தீனர்களின் வாழ்க்கையை மிகவும் மோசமாக்கும் நடவடிக்கைகளில் இஸ்ரேல் தொடர்ச்சியாக ஈடுபடுவதாக சர்வதேச செஞ்சிலுவைச் சங்கம் கூறியுள்ளது.

இஸ்ரேலிய கொள்கையை மிகவும் கடுமையாக விமர்சிக்கும் செஞ்சிலுவைச் சங்கத்தின் ஒரு அறிக்கை, சுமூகமான வாழ்க்கையை வாழ்வது என்பது பல பாலத்தீனர்களுக்கு அங்கு முடியாத காரியமாகிவிட்டிருக்கிறது என்று கூறுகிறது.

டொயோட்டா மேலும் சில கார்களை திரும்பப் பெற ஆலோசனை

toyota-corolla.jpgஜப்பானிய டொயோட்டா கார் உற்பத்தி நிறுவனம் தமது கார்களில் சிலவற்றை மீளப்பெறும் மற்றுமொரு நடவடிக்கை குறித்து தாம் கவனம் செலுத்துவதாக கூறுகிறது.

இந்தத்தடவை தமது பிரபலமான டொயோட்டா கொரலா கார்களில் பவர் ஸ்டியரிங்குகளில் ஏற்பட்ட பிரச்சினைகளாலேயே கார்கள் திரும்பப்பெறப்படவுள்ளன.

என்ன தவறு நேர்ந்திருக்கிறது என்ற விபரம் இன்னமும் தெளிவாகவில்லை என்று கூறியுள்ள ஒரு மூத்த டொயோட்டா அதிகாரி, அவை குறித்து நூற்றுக்கும் குறைவான முறைப்பாடுகளே வந்துள்ளதாகவும் கூறுகிறார்.