19

19

தமிழர் விடுதலைக் கூட்டணி தமிழ் மக்களுக்காக தந்தை செல்வாவினால் விட்டுச் செல்லப்பட்ட அரும்செல்வம்.

imagescarsy7hn.jpgவடக்கிலும் கிழக்கிலும் மட்டுமன்றி மேற்கிலும் தெற்கிலும், மத்தியிலும் வாழ்கின்ற தமிழ் மக்களும், ஏனைய தமிழ் பேசும் மக்களும் ஒன்றிணைந்து செயற்பட வேண்டிய அவசியம் இன்று காலத்தின் கட்டாயமாகும்.அரசுடன் முரண்படுவதற்காக அன்றி, ஏனைய இன மக்களை பாதிக்காத வகையில் அனைத்து தமிழ் மக்களும் ஏற்றுக்கொள்ளக்கூடிய ஒரு தீர்வை காண்பதற்காகவே. இதில் மாறுப்பட்ட கருத்துக்கு இடமில்லை. என்னையும், தமிழர் விடுதலைக் கூட்டணியையும் பொறுத்தவரையில் சமாதானத்தையும் சமத்துவத்தையும் அனைவருக்கும் பெற்றுக் கொடுப்பதற்காக ஒரு பொது திட்டத்திற்கமைய அனைவருடனும் இணைந்து செயற்பட தயாராகவுள்ளோம்.

இலங்கை தொழிலாளர் காங்கிரஸின் மறைந்த தலைவர் கௌரவ சௌமியமூர்த்தி தொண்டமான், அகில இலங்கை தமிழ் காங்கிரஸின் மறைந்த தலைவர் கௌரவ.ஜி.ஜி.பொன்னம்பலம் கியூ.சி ஆகியோரின் ஆசீர்வாதத்தோடும், ஆதரவோடும் ‘ஈழத்து காந்தி’ என அனைவராலும் வாஞ்சையோடு அழைக்கப்பட்ட கௌரவ எஸ்.ஜே.வி செல்வநாயகம் கியூ.சி அவர்களால் உருவாக்கப்பட்ட தமிழர் விடுதலைக் கூட்டணியுடன் இணைந்து செயற்படுவதை எதிர்ப்பதற்கு ஒரு நியாயமான காரணம் எதுவும் இருக்க முடியாது. தமிழ் காங்கிரசும், கௌரவ எஸ்.ஜே.வி. செல்வநாயகம் அவர்களால் உருவாக்கப்பட்ட தமிழரசு கட்சியும் இணைந்து உருவாக்கப்பட்டதே தமிழர் விடுதலைக் கூட்டணியாகும். இந்த இரு கட்சிகளின் அனைத்து தலைவர்களும் தொண்டர்களும் தேர்தல் ஆணையாளரால் அங்கீகரிக்கப்பட்ட உதயசூரியன் சின்னத்தைக் கொண்ட தமிழர் விடுதலைக் கூட்டணியில் இணைந்து கொண்டனர்.

தமிழர் விடுதலைக் கூட்டணி ஆரம்பித்த காலம் தொடக்கம் திருவாளர் கௌரவ மு.திருச்செல்வம் கியூ.சி, கௌரவ எஸ்.ஜே.வி.செல்வநாயகம் கியூ.சி, கௌரவ ஜி.ஜி.பொன்னம்பலம் கியூ.சி, த.வி.கூ யின் செயலாளர் நாயகமும் அன்றைய எதிர்கட்சி தலைவருமான கௌரவ அ.அமிர்தலிங்கம், முன்னாள் பாராளுமன்ற உறுப்பினர்களான கௌரவ. வெ.யோகேஸ்வரன், கௌரவ மு.சிவசிதம்பரம், கௌரவ தா.திருநாவுக்கரசு, கௌரவ. அ.தங்கதுரை, கௌரவ.க.துரைரெட்ணம் பா.உ, கௌரவ. கே.இராசலிங்கம் பா.உ, கௌரவ. வீ.என். நவரட்ணம் பா.உ, கௌரவ. எஸ்.கதிர்வேற்பிள்ளை பா.உ, கௌரவ. மு. ஆலாலசுந்தரம் பா.உ, கௌரவ. வீ.தர்மலிங்கம் பா.உ மற்றும் முன்னாள் யாழ் மேயர்களான திருமதி சரோஜினி யோகேஸ்வரன், திரு பொன்.சிவபாலன் இன்னும் பலர் உள்ளுரிலும், வெளிநாட்டிலும் ஈமக் கிரிகைகளுக்காக எடுத்துச் சென்ற வேளையில் புனிதமானதும், அனைத்து தமிழ் மக்களாலும் மதிக்கப்பட்டதுமான உதயசூரியன் கொடியினால் போர்த்தப்பட்டு எடுத்துச் செல்லப்பட்டனர்.

உதயசூரியன் சின்னத்தை கொண்ட தமிழர் விடுதலைக் கூட்டணிக்கு பதிலாக வீட்டுச் சின்னத்தை கொண்ட தமிழரசு கட்சியை மீள இயங்க வைக்க எவருக்கும் அவசியமும், தேவையும் இருக்கவில்லை. தமிழரசு கட்சியின் ஸ்தாபகர் தமிழரசு கட்சியை செயலிழக்க செய்து வேறு அரசியல் கட்சித் தலைவர்களுடன் இணைந்து உருவாக்கிய தமிழர் விடுதலைக் கூட்டணியை வளர்த்தெடுத்தார். 1977ம் ஆண்டு நடைபெற்ற பாராளுமன்ற பொதுத் தேர்தலில் தமிழர் விடுதலைக் கூட்டணி வடக்கிலும் கிழக்கிலும் தமிழர்கள் கூடுதலாக உள்ள தொகுதிகளில் 500 வாக்குகளால் தோல்வியடைந்த ஒரு தொகுதியைத் தவிர ஏனைய 19 தொகுதிகளிலும் வெற்றியீட்டியது.

மறைந்த தலைவர்கள் ஆரம்பகால உறுப்பினர்கள் மற்றும் நலன் விரும்பிகள் தமிழர் விடுதலைக் கூட்டணியை சமாதானத்தையும், அகிம்சையையும் பேணிகாக்க தொடர்ந்து வரும் பல தலைமுறைகளுக்கு பரம்பரை சொத்தாக விட்டுச் சென்றுள்ளனர். தமிழரசு கட்சியின் ஸ்தாபகர் தந்தை செல்வா அவர்கள் தான் உருவாக்கி செயலிழக்க வைத்த தமிழரசு கட்சி என்றாவது ஒருநாள் தான் தமிழ் மக்களின் உரிமைகளை சாத்வீக முறையில் வென்றெடுக்கவென வேறு அரசியல் கட்சிகளுடன் இணைந்து உருவாக்கிய தமிழர் விடுதலைக் கூட்டணியை அழிப்பதற்கு யாரும் உபயோகிப்பார்கள் என்று கனவில் கூட ஒருபோதும் நினைத்திருக்கமாட்டார்.

என்னைப் பொறுத்தவரையில் நாட்டுக்கும் எனது மக்களுக்கும் கட்சியின் நலனுக்காக தம் உயிரை அர்ப்பணித்த பல்வேறு தலைவர்களுக்கும் எனது கடமையை செய்து விட்டேன். அகிம்சைக்கு கட்டுப்பட்ட அனைவரையும் மீண்டும் கட்சியில் இணைய தமிழர் விடுதலைக் கூட்டணியின் கதவுகள் என்றும் பூட்டப்பட்டு இருக்காது. அதற்கு முரணாக இக் கட்சியை காப்பாற்றி தலைவர்களின் அபிலாசைகளை நிறைவேற்ற பல்வேறு கஷ்டங்கள், இடையூறுகளை எதிர்நோக்க வேண்டியிருந்தது.

கட்சியில் நான் தொடர்ந்து செயல்படுவது எவருக்கேனும் இடைஞ்சலாக இருக்குமேயானால் இக் கட்சியை பொறுப்புள்ளவர்களிடம் கையளித்துவிட்டு ஒதுங்க தயாராக இருக்கின்றேன். தமிழர் விடுதலைக் கூட்டணியின் இலட்சியத்துக்காக உழைக்கக்கூடிய இளைஞர்களை ஆயிரக்கணக்கில் கட்சியுடன் இணைந்து பேராசையும், பேராவலும் கொண்ட அரசியல்வாதிகளிடமிருந்து தமிழ் மக்களை காப்பாற்ற பகிரங்கமாக அழைக்கின்றேன். கட்சியின் கொள்கைகளுக்கு விசுவாசமாக உழைக்கும் அனைவரும் எம்முடன் இணையலாம் என்றும் கூறிவைக்க விரும்புகின்றேன்.

வீ. ஆனந்தசங்கரி
தலைவர்-த.வி.கூ
16-02-2010

இலங்கையில் தேர்தலும் தமிழ் மக்களது அரசியல் எதிர்காலமும் : கலந்துரையாடல்

Viyoogamஇலங்கையில் தேர்தலும் தமிழ் மக்களது அரசியல் எதிர்காலமும் என்ற தலைப்பிலான கலந்துரையாடல் ஒன்றை மே 18 இயக்கம் ஏற்பாடு செய்துள்ளது. ‘விடுதலைப் புலிகள் முற்றாக அழிக்கப்பட்டாயிற்று!, தற்போது ஜனாதிபதி தேர்தலும் நடந்து முடிந்து விட்டது!, பாராளுமன்ற தேர்தலுக்கு நாள் குறித்தாயிற்று!’ ஆயினும் ‘யுத்தம் முடிந்த பின்பு அரசியல் தீர்வு என்றார்கள்!’ ஆனாலும் தமிழ் மக்களின் துயரங்கள் தொடர்கின்றன …’ என மே 18 இயக்கம் வெளியிட்டுள்ள அறிவிப்பில் தெரிவித்துள்ளனர்.

‘தமிழ் மக்களின் அரசியல் எதிர்காலம் என்ன ?’ என்ற கேள்வியுடன் தங்கள் கலந்தரையாடலை மேற்கொள்ள அவர்கள் அனைவரையும் அழைத்துள்ளனர்.

தமிழீழ விடுதலைப் புலிகளின் தோல்விக்குப் பின் மழைக்கு முளைக்கின்ற காளான்கள் போன்று என்ஜிஓ க்களிலும் வேகமாக பல்வேறு அமைப்புகள் ‘புரட்சிகர’ கோசத்துடன் ஆரம்பித்து உள்ளன. ஏற்கனவே உறக்க நிலையில் இருந்த அமைப்புகளும் அறிக்கைகளை வெளியிட்டு தங்கள் இருப்பை வெளியிட்டுக் கொண்டன. இவற்றினிடையே மே 18 இயக்கம் தன்னுடைய கோட்பாட்டு இதழ் ஒன்றையும் வெளியிட்டு தொடர்ச்சியாக ரொறன்ரோ, லண்டன், பாரிஸ் ஆகிய நகரங்களில் சந்திப்புக்களையும் ஏற்பாடு செய்து வருகின்றமை குறிப்பிடத்தக்கது. இவற்றின் தொடர்ச்சியாகவே ஸ்காபுரோவில் தற்போதைய அரசியல் நிகழ்வு பற்றிய பொதுக் கூட்டத்தையும் கலந்துரையாடலையும் மே 18 இயக்கம் ஏற்பாடு செய்துள்ளது.

கடந்த ஜனாதிபதித் தேர்தலிலும் பல்வேறு அமைப்புகளும் அரிசியல் ரீதியில் நழுவல் போக்கைக் கடைப்பிடித்து தங்கள் அரசியல் நிலைப்பாட்டை உறுதிப்படுத்தாமல் இருக்கையில் மே 18 இயக்கம் இடதுசாரித் தலைவரான விக்கிரமபாகு கருணரட்னாவில் விமர்சனங்கள் இருந்த போதும் இன்றைய சுழலில் இலங்கை மக்கள் குறிப்பாக இலங்கைத் தமிழ் மக்கள் விக்கிரமபாகு கருணாரட்னவுக்கு வாக்களிக்க வேண்டும் என்று கேட்டுக்கொண்டது.

இக்கலந்துரையாடலிலும் மே 18 இயக்கம் பாராளுமன்றத் தேர்தல் தொடர்பாகவும் தனது அறிவிப்பை தெரிவிக்கும் என எதிர்பார்க்கலாம். குறிப்பாக தமிழ் மக்கள் தங்கள் வாக்குகளை எவ்வாறு செலுத்த வேண்டும் என அவர்கள் தெரிவிக்கலாம்.

பொதுக்கூட்டமும் கலந்துரையாடலும்: மே 18 இயக்கம்
முடிவல்ல… புதிய தொடக்கம்!

இடம்: Scarborough Civic Center (Room 1 & 2)
காலம்: 20-02-2010 (Saturday)
நேரம்: 2:30 pm – 6:00 pm

தொடர்புகளுக்கு: viyooham@gmail.com

மே 18 இயக்கம் தொடர்பான முன்னைய பதிவுகளுக்கு:

இடதுசாரி முன்னணித் தோழர் விக்கிரமபாகுவை ஆதரிப்பதாக ‘மே 18 இயக்கம்’ முடிவு!

 ‘ஜனநாயகப் பண்போடு நடந்துகொண்டால் மட்டுமே சரியான வழியில் நிற்பவருடன் மற்றவர் இணைந்துகொள்ள முடியும்’ ரகுமான் ஜான் – வியூகம் வெளியீடு தொகுப்பு : த ஜெயபாலன்

‘விவாதக் களத்திற்கான தளத்தின் ஆரம்பமே வியூகம்’ ரொறன்ரோ வியூகம் வெளியீட்டு நிகழ்வில் ரகுமான் யான்

இரயாகரன் சார்! எனக்கொரு உண்மை தெரிந்தாக வேணும் : த ஜெயபாலன்

மே 18 இயக்கமும் வியூகம் வெளியீடும் : த ஜெயபாலன்

தமிழர் அரசியல்ரீதியாக தம்மை ஒழுங்கமைத்துக் கொள்வதை நோக்கி… : ரகுமான் ஜான்

இதுவும் கடந்து போம்: புலியெதிர்ப்பின் அரசியல்: தேசபக்தன்
 
நடந்து முடிந்ததும்! நடக்க வேண்டியதும்!!! : தேசபக்தன்

ஒபாமா, தலாய் லாமா சந்தித்துப் பேச்சுவார்த்தை! சீனாவுக்கு அதிருப்தி

obama__dalailama.jpgசீனாவின் கடும் அதிருப்திக்கு மத்தியில் அமெரிக்க ஜனாதிபதி ஒபாமா,  திபெத்தின் பௌத்த தலைவர் தலாய் லாமாவை சந்தித்துப் பேசினார். அஹிம்சை முறையில் பிரச்னைக்கு தீர்வு காண முயன்று வருவது பாராட்டத்தக்கது என்று தலாய் லாமாவுக்கு ஒபாமா புகழாரம் சுட்டியுள்ளர்.

அமெரிக்கா சென்றுள்ள தலாய் லாமாவை,  அந்நாட்டு அதிபர் பராக் ஒபாமா வாஷிங்டனில் சந்தித்துப் பேசியதுடன் திபெத்தை சீனா ஆக்கிரமித்துள்ளது உள்பட பல்வேறு விடயங்கள் குறித்து கலந்துரையாடப்பட்டதாக தெரியவருகிறது. இந்த சந்திப்பின் போது பத்திரிகை புகைப்படக்காரர்கள் எவரும் அனுமதிக்கப்படவில்லை. வெள்ளை மாளிகை அதிகாரிகள் பின்னர் புகைப்படத்தை பத்திரிகைகளுக்கு அளித்தனர். சந்திப்பு குறித்து வெள்ளை மாளிகை வெளியிட்டுள்ள அறிக்கை விவரம்:

சீனாவுக்கும்,  திபெத்துக்கும் உள்ள பிரச்னையைத் தீர்க்க தலாய் லாமா அஹிம்சை முறையில் போராடி வருவது பாராட்டத்தக்கது. அந்த இரு நாடுகளும் தங்களுக்கிடையிலான பிரச்னைகளை நேரடியாகப் பேசித் தீர்த்துக் கொள்ள வேண்டும் என்று ஒபாமா கூறியுள்ளதாக அந்த அறிக்கையில் தெரிவிக்கப்பட்டுள்ளது.

முன்னதாக தலாய் லாமாவை சந்தித்துப் பேசக் கூடாது என்று அமெரிக்காவை சீனா வலியுறுத்தியது. சீனாவின் எதிர்ப்பை நிராகரித்து தலை லாமாவை ஒபாமா சந்தித்துப் பேசியதை தங்களுக்கு கிடைத்த வெற்றியாக திபெத் மக்கள் கருதுகின்றனர். அமெரிக்க வெளியுறவுத் துறை அமைச்சர் ஹிலாரி கிளிண்டனையும் தலாய் லாமா சந்தித்துப் பேசவுள்ளார்.

மறைந்த லசந்தவுக்கு சர்வதேச பத்திரிகை அமைப்பின் ‘நாயகன்’ விருது

lasantha.gifசண்டே லீடர் பத்திரிகையின் ஆசிரியர் மறைந்த லசந்த விக்ரமதுங்கவுக்கு சர்வதேச பத்திரிகை அமைப்பு, ‘உலக பத்திரிகை சுதந்திரத்தின் நாயகன்’ விருது வழங்கி கௌரவித்துள்ளது. இந்த அறிவிப்பு 17 மாலை வெளியிடப்பட்டது.

தேர்தல் களத்தில் முரளி கண்டியில், சுசந்திகா கேகாலையில்…

muralidharan.jpgவிளையாட் டுத்துறை பிரபலங்கள் பலரும் எதிர்வரும் பொதுத் தேர்தலில் போட்டியிடவுள்ளதாக தகவல்கள் தெரிவிக்கின்றன.

நட்சத்திர துடுப்பாட்ட வீரரான சனத் ஜயசுரிய ஆளும் கட்சியில் சார்பில் மாத்தறை மாவட்டத்தில் போட்டியிடவுள்ளதாக முன்னர் அறியக் கிடைத்தது. அதனைத் தொடர்ந்து மேலும் பல விளையாட்டுதுறை முக்கியஸ்தர்களும் தேர்தல் களத்தில் குதித்துள்ளதாக தெரியவருகின்றது.

அதன்படி இலங்கை கிரிக்கட் அணியின் நட்சத்திர சுழற்பந்து வீச்சாளர் முத்தையா முரளிதரன் ஐக்கிய மக்கள் சுதந்திரக் கூட்டமைப்பின் கண்டி மாவட்ட வேட்பாளர் பட்டியலில் உபதலைவராக போட்டியிடவுள்ளார்.

டெஸ்ட் மற்றும் ஒருநாள் கிரிக்கெட் போட்டிகளில் அதிக விக்கட்டுகளை வீழ்த்தி முத்தையா முரளிதரன் உலக சாதனைப் படைத்துள்ளார். முத்தையா முரளிதரனை ஐக்கிய மக்கள் சுதந்திரக் கூட்டமைப்பின் வேட்பாளர் பட்டியலில் இணைப்பதன் மூலம் தமிழ் சிங்கள இளைஞர்களின் வாக்குகள் குவியும் என ஐக்கிய மக்கள் சுதந்திரக் கூட்டமைப்பின் தேர்தல் தெரிவுக் குழுவினர் தெரிவித்துள்ளனர்.

இதேவேளை இலங்கையின் நட்சத்திர குறுந்தூர ஓட்ட வீராங்கனை சுசந்திகா ஜெயசிங்க ஐக்கிய மக்கள் சுதந்திரக் கூட்டமைப்பின் சார்பில் கேகாலை மாவட்டத்தில் போட்டியிட உள்ளதாக இன்றையதினம் தேர்தல் தெரிவுக் குழுவினர் அறிவித்துள்ளனர்.

யாழ் போதனா வைத்தியசாலை புனரமைப்பு

jaffna.jpgவடக்கின் வசந்தம் திட்டத்தின் கீழ் யாழ்ப்பாணம் போதனா வைத்தியசாலையை புனரமைப்பதற்கு அமைச்சவை அங்கீகாரம் வழங்கியுள்ளது. நிதி அமைச்சர் என்ற வகையில் ஜனாதிபதி மஹிந்த ராஜபக்ஷ இதற்கான அமைச்சரவைப் பத்திரத்தை சமாப்;பித்திருந்தார்.

ஜப்பான் அரசாங்கம் இத்திட்டத்துக்கு 2298 மில்லியன் யென் நிதியை உதவியாக வழங்குகிறது. சத்திரசிகிச்சைக் கூடத்திற்கான புதிய கட்டடம் மற்றும் அவசர சிகிச்சைப்பிரிவு நரம்பியல் மற்றும் இருதய சிகிச்சைப் பிரிவு உட்பட பல பிரிவுகள் இத்திட்டத்தின் கீழ் புனரமைக்கப்படவுள்ளன.

‘மணி’க்கு குட்பாய் சொல்லும் ஜே.வி.பி!

jvp.jpgஇதுவரை காலமும் மணி சின்னத்தில் போட்டியிட்டுவந்த ஜே.வி.பி. என்ற மக்கள் விடுதலை முன்னணி எதிர்வரும் பொதுத் தேர்தலில் கிண்ணம் சின்னத்தில் போட்டியிடத் தீர்மானித்துள்ளதாக தகவல்கள் தெரிவிக்கின்றன.

ஜெனரல் சரத் பொன்சேகாவை முதன்மைப்படுத்தியதாக புதிய கூட்டமைப்பபொன்று ஸ்தாபிக்கப்பட்டுள்ளதாகவும் இந்த கூட்டமைப்புக்கு, ஸ்ரீலங்கா சுதந்திர கட்சியின் முன்னாள் நாடாளுமன்ற உறுப்பினர் அர்ஜுன ரணதுங்க மற்றும் சுதந்திர கட்சியின் மக்கள் பிரிவு பொது செயலாளர் டிரான் அலஸ் ஆகியோர் ஆதரவு தெரிவித்துள்ள தாகவும் கட்சி வட்டாரங்கள் தெரிவிக்கின்றன.

தேர்தல் காலத்தின் போது புதிய அரசியல் கட்சி ஒன்று பதிவு செய்ய முடியாது என்பதினால், ஏற்கனவே உள்ள கட்சி ஒன்றின் பெயரே புதுப்பிக்கப்பட்டுள்ளது.

ஜனாதிபதி தேர்தல் நிறைவடைந்து பொதுத்தேர்தல் அறிவிக்கப்பட்டதன் பின்னர், ஜே வி பி அன்னச் சின்னத்தில் அனைத்து எதிர்கட்சிகளையும் ஒன்றிணைத்து போட்டியிட விரும்பியது.  எனினும் இதனை ஐக்கிய தேசிய கட்சி ஏற்க மறுத்து, யானைச் சின்னத்திலேயே போட்டியிட தீர்மானித்தது.

அதற்கு ஆரம்பத்தில் எதிர்ப்புகள் ஏற்படினும், பின்னர் ஜனநாயக மக்கள் முன்னிணியின் மனோ கணேசன் மற்றும் சிறிலங்கா முஸ்லிம் காங்கிரஸின் தலைவர் ரவூப் ஹக்கீம், ஸ்ரீலங்கா சுதந்திரக்கட்சியின் மக்கள் பிரிவின் தலைவர் மங்கள சமரவீர ஆகியோர் இணங்கியுள்ளதாகவும் இதனை அடுத்தே, ஜே வி பி இந்த புதிய தீர்மானத்தை மேற்கொண்டுள்ளதாகயும் தகவல்கள் தெரிவிக்கின்றன.

‘யாழ்தேவி’ ஊடாக வடக்கும் தெற்கும் உறவை புதுப்பிப்பதை காண்பதே நோக்கம் – ஜனாதிபதி

he_the_president.jpgவட மற்றும் தென் பகுதி மக்கள் தமக்கிடையிலான பழைய தொடர்புகளை யாழ்தேவி ஊடாக மீண்டும் புதுப்பித்துக் கொள்வதை காண்பதே தமது நோக்கமென ஜனாதிபதி மஹிந்த ராஜபக்ஷ கூறினார்.

‘தெற்கின் தோழன்’ நிதியத்துக்காக அரச மற்றும் தனியார் அமைப்புகள் மற்றும் சங்கங்கள் ஜனாதிபதியிடம் நிதி அன்பளிப்புகளை கையளித்த நிகழ்வு நேற்று (18) அலரி மாளிகையில் இடம் பெற்றது.

இந்த நிகழ்வில் உரையாற்றிய ஜனாதிபதி மேலும் கூறியதாவது:- ‘தெற்கின் தோழன்’ நிதியம் பெளதீக வளங்களை கட்டியெழுப்புவதற்கு மட்டும் ஆரம்பிக்கப்படவில்லை வடக்கு கிழக்கு மக்களின் மனங்களை வெல்வதற்குமாகும். ‘தெற்கின் தோழன்’ நிதியத்துக்காக தனிப்பட்ட மட்டத்தில் கொடுக்கப்படும் நிதி அன்பளிப்புகளை விட பொதுமக்கள் மற்றும் தொழிற்சங்க மட்டத்தில் வழங்கப்படும் நிதி அன்பளிப்புகளையே அரசாங்கம் எதிர்பார்க்கிறது என்று கூறினார்.

சிங்கர் ஸ்ரீலங்கா நிறுவனம், நோலிமிட் நிறுவனம், மக்கள் தோட்ட அபிவிருத்தி சபையின் தொழிற் சங்கம், இலங்கை பால் உற்பத்தியாளர்கள் கூட்டுறவு தாய் சங்கம், தொலைத்தொடர்பு அதிகாரிகள் சங்கம், இலங்கை ஏற்றுமதி கடன் காப்புறுதி ஊழியர்கள், இலங்கை ரூபவாஹினி கூட்டுத்தாபனம், நவலோக கன்ஸ்ட்ரக்ஸன் தனியார் நிறுவனம் ஆகிய நிறுவனங்கள் மற்றும் சங்கங்கள் நேற்று ஜனாதிபதியிடம் நிதி அன்பளிப்புகளை கையளித்தன.

வேட்புமனுத் தாக்கல் இன்று ஆரம்பம்

srilanka_parliament_02.jpgபாராளு மன்றத் தேர்தலுக்கான வேட்புமனுத்தாக்கல் செய்யும் நடவடிக்கைகள் இன்று (19) ஆரம்பமாகிறது. 22 மாவட்ட செயலகங்களில் தெரிவத்தாட்சி அதிகாரிகளின் முன்னிலையில் இந்த நடவடிக்கை இடம்பெறவுள்ளது.

கட்சிச் செயலாளர்களும், கட்சிகளால் பிரேரிக்கப்பட்டவர்களும் வேட்புமனுத் தாக்கல் செய்பவர்களும் தவிர வேறு எவரும் மாவட்ட செயலகங்களுக்குள் அனுமதிக்கப் படமாட்டார்களென தேர்தல் செயலகம் தெரிவித்தது. கட்சி ஆதரவாளர்கள் கச்சேரிகளுக்கு அருகில் கூடுவதற்கும் இடமளிக்கப்படமாட்டாது எனவும் அறிவிக்கப்படுகிறது.

வேட்பு மனுக்கள் இன்று முதல் (19) – 26 ஆம் திகதி நண்பகல் 12.00 மணி வரை ஏற்கப்படவுள்ளன. பிரதான கட்சிகள் இறுதி நேரத்தில் வேட்பு மனுத்தாக்கல் செய்ய உள்ளதாக கட்சி வட்டாரங்கள் கூறின.

சுயேச்சைக்குழுக்கள் கட்டுப்பணம் செலுத்த 26 ஆம் திகதி வரை அவகாசம் வழங்கப்பட்டுள்ளது.

தேர்தலுக்கு இரு தினங்களுக்கு முன்னரே பெருந்தொகைப் பணம் பெட்டகத்தில் வைப்பு

gl.jpgதேர்தல் நடைபெறுவதற்கு இரு தினங்களுக்கு முன்னரே சரத் பொன்சேகா பெருந்தொகைப் பணத்தை வங்கியின் பெட்டகத்தில் வைத்துள்ளமை தெரியவந்துள்ளதாக அமைச்சரவைப் பேச்சாளர் அமைச்சர் பேராசிரியர் ஜீ. எல். பீரிஸ் தெரிவித்தார்.

சரத் பொன்சேகாவின் புதல்வி அப்சரா பொன்சேகா கூறியதற்கிணங்க, பொன்சேகாவின் அலுவலகத்திலிருந்தே அந்தப் பணத்தைக் கொண்டு பெட்டகத்தில் வைத்ததாக ஜெனரல் பொன்சேகாவின் மருமகனின் தாயாரான அசோகா திலகரட்ன கூறியுள்ளார். அவை தன்னுடைய பணம் அல்லவென்றும் அவர் கூறியுள்ளதாகக் கூறிய அமைச்சர் பீரிஸ், ஒரு பொறுப்பு வாய்ந்த அரசாங்கம் இது தொடர்பில் நடவடிக்கை எடுக்காதிருக்க முடியுமா என்றும் கேள்வி எழுப்பினார்.

அமைச்சரவை முடிவுகளை அறிவிக்கு முகமாக அரசாங்க தகவல் திணைக்களத்தில் நேற்று (18) முற்பகல் நடைபெற்ற செய்தியாளர் மாநாட்டிலேயே பேராசிரியர் பீரிஸ் இதனைத் தெரிவித்தார். இந்தச் செய்தியாளர் மாநாட்டில் அமைச்சரவையின் மற்றொரு பேச்சாளரான அமைச்சர் டலஸ் அழகப்பெருமவும், அரசாங்க தகவல் திணைக்களப் பணிப்பாளர் நாயகம் அனுஷ பெல்பிட்டவும் கலந்து கொண்டனர்.

“சம்பத் வங்கியில் பெரிய பெட்டகமொன்றைக் கேட்டிருக்கிறார்கள். அங்கு பெரியவை இல்லாததால், திருமதி அசோகா திலகரட்னவின் பெயரில் இரண்டு பெட்டகங்களையும், மற்றையவர்களின் பெயரில் மேலும் இரண்டு பெட்டகங்களையும் பெற்றுக்கொண்டுள்ளனர். இதன் அனைத்துத் திறப்புகளையும் அசோக்கா திலகரட்னவே வைத்திருந்தார்.

வேறு பெயர்களில் இருந்தாலும் பெட்டகங்களை அவர்தான் திறக்கமுடியும். நகைகள் வைக்கப்படும் பெட்டகத்தில் கற்றை, கற்றையாகப் பண நோட்டுக்களை வைத்திருக்கிறார்கள். வெளிநாட்டு நாணயத்தாள்களை இலங்கை ரூபாய்க்கு மாற்றவும் இல்லை.

வங்கியில் நடைமுறைக் கணக்கோ, சேமிப்புக் கணக்கோ ஆரம்பிக்காமல் மூடைகளில் பெட்டகத்தில் ஏன் வைத்தார்களென்று தெரியவில்லை. இலங்கையின் சட்டத்தின்படி வெளிநாடுகளிலிருந்து வரும் ஒருவர் பிரகடனப்படுத்தாமல் 15 ஆயிரம் டொலர் வரை கொண்டு வரமுடியும்.

அதற்கு மேலதிகம் என்றால் மத்திய வங்கியின் சட்டதிட்டத்தின்படி அனுமதி பெறவேண்டும். பின்னர் இலங்கை ரூபாய்க்கு மாற்றிவிடவேண்டும். நாம் சுமாராக இரண்டாயிரம் டொலர்களை மாத்திரமே தம்முடன் வைத்திருக்க முடியும். ஆனால், அசோகா திலகரட்ன பெற்றிருந்த நான்கு பெட்டகங்களில் 527,000 அமெரிக்க டொலர் நாணயத்தாள்கள் இருக்கின்றன.

அனைத்தும் புத்தம் புது நோட்டுக்கள். வரிசைக் கிரமப்படி இலக்கங்களைக் கொண்ட அவை முன்பு பயன்படுத்தப்படாத பணத்தாள்கள். இவை எங்கிருந்து, எவ்வாறு, ஏன் கிடைத்தன என்பதைப்பற்றிய விபரங்களை அறியவேண்டாமா? இது முற்றிலும் சட்டத்துக்குப் புறம்பான செயல். நீதிமன்றத்தின் அனுமதியின்படி குற்றப்புலனாய்வுத்துறையினர், வங்கி அதிகாரிகள் மற்றும் அசோகா திலகரட்ன முன்னிலையில்தான் பெட்டகங்கள் திறக்கப்பட்டன.

நூறு ஸ்ரேலிங் பவுண்கள், ஒன்றரை இலட்சம் இலங்கை நாணயத்தாள் என மூன்று நாடுகளின் பண நோட்டுகளை வைத்திருக்கிறார்கள். ஆகவே இது தொடர்பாக சட்ட நடவடிக்கை எடுக்காமல் எந்தவொரு அரசாலும் இருக்க முடியாது” என்று தெரிவித்த அமைச்சர் பேராசிரியர் பீரிஸ், சரத் பென்சேகாவின் மருமகன் மீது பாரிய மோசடி குற்றச்சாட்டு சுமத்தப்பட்டுள்ளது.

அது தொடர்பில் விரைவில் வழக்குத் தாக்கல் செய்யப்படும் என்று சுட்டிக்காட்டியதுடன், சரத் பொன்சேகா மீதான இராணுவ நீதிமன்ற விசாரணையானது மேன்முறையீட்டு நீதிமன்றத்தின் நேரடிக் கண்காணிப்பின் கீழேயே மேற்கொள்ளப்படுமென்றும், அதற்கு மேலதிகமாக உச்சநீதிமன்றத்திற்கே செல்ல வேண்டுமென்றும் குறிப்பிட்டார்.

“சட்டம் அனைவருக்கும் பொதுவானது. குற்றமிழைத்தவர் ஆர்ப்பாட்டம் செய்விப்பதற்குத் தகுதியுடையவரென்றால், அவருக்கு விலக்களிப்பது சட்டத்துக்கு முரணான செயற்பாடாகும்” என்றும் பேராசிரியர் மேலும் தெரிவித்தார்.