18

18

மருத்துவ சிகிச்சைக்காக சென்னை சென்ற பிரபாகரனின் தாயாருக்கு அனுமதி மறுப்பு

parwathy.jpgசிகிச்சை பெறுவதற்காக மலேசியாவிலிருந்து விமானம் மூலம் வெள்ளிக்கிழமை இரவு சென்னை சென்ற விடுதலைப் புலிகள் அமைப்பின் தலைவர் பிரபாகரனின் தாயார் பார்வதி அம்மாளுக்கு அனுமதி மறுக்கப்பட்டுள்ளது. அதனால் அவர் மீண்டும் மலேசியாவுக்கே திருப்பி அனுப்பப்பட்டார்.

சிகிச்சைக்காக பிரபாகரனின் தாயார் வெள்ளிக்கிழமை இரவு 10.45 மணிக்கு மலேசியாவிலிருந்து விமானம் மூலம் சென்னை விமான நிலையம் சென்றடைந்தார். அவருடன் உதவிக்கு ஒரு பெண்ணும் சென்றுள்ளார். எனினும் அவர்கள் இருவரையும் தமிழகத்துக்குள் அனுமதிக்க மாநில பொலிஸார் மறுத்துவிட்டனர். அவர்கள் இருவரும் உடனடியாக மீண்டும் மலேசியாவுக்கே திருப்பி அனுப்பப்பட்டுள்ளனர்.

இதற்கிடையே விமான நிலையத்திலி ருந்து பார்வதி அம்மாளை அழைத்துச் செல்வதற்காக ம.தி.மு.க பொதுச் செயலாளர் வைகோ, இலங்கைத் தமிழர் பாதுகாப்பு இயக்க ஒருங்கிணைப் பாளர் பழ. நெடுமாறன் ஆகியோர் விமான நிலையம் சென்றனர்.

எனினும் விமான நிலைய நுழைவாயிலிலேயே வைகோவும், பழ. நெடுமாறனும் பொலிஸாரால் தடுத்து நிறுத்தப்பட்டுள்ளனர். பின்னர் கடுமையான வாக்குவாதத்துக்குப் பின் அவர்கள் விமான நிலையத்துக்குள் செல்ல அனுமதிக்கப்பட்டனர்.

ஐரோப்பிய நாடுகளில் விமான நிலையங்கள் பூட்டு; இலட்சக்கணக்கான பயணிகள் பாதிப்பு

iceland.jpgஐஸ்லாந்து நாட்டில் எரிமலை வெடித்து குமுறி வருவதால் ஐரோப்பிய நாடுகளில் சாம்பல் துகள்களும் புகையும் வளிமண்டலம் முழுவதும் பரவி வருவதால் விமானப் பயணங்களில் பெரும் தாக்கத்தை ஏற்படுத்தியுள்ளது. இதனால், ஐரோப்பிய நாடுகளில் விமானப் போக்குவரத்துகள் கடுமையாகப் பாதிக்கப்பட்டிருக்கின்றன. இலட்சக்கணக்கான பயணிகள் பாதிக்கப்பட்டிருப்பதாக அறிவிக்கப்பட்டுள்ளது.

ஐஸ்லாந்தின் பனிமலையிலேயே இந்த எரிமலைக் குமுறல் ஏற்பட்டிருக்கிறது. தரையிலிருந்து சுமார் 8 கி. மீ- 10 கி. மீ. உயரத்திற்கு சாம்பலும் புகையும் பரவியுள்ளதாக ஐரோப்பிய விமானக் கட்டுப்பாட்டு நிலையம் அறிவித்துள்ளது.

இவைகள் கிழக்கு மற்றும் தென்கிழக்காக நகர்ந்து வருவதால் மேலும் பல நாடுகளிலும் விமானப் போக்குவரத்துக்கள் பாதிப்பை ஏற்படுத்தலாமெனவும் அந்த நிலையம் மேலும் எச்சரிக்கை விடுத்துள்ளது.

ஐரோப்பிய நாடுகளில், மிகப்பெரிய விமான நிலையங்களான லண்டன் ஹீத்ரு விமான நிலையம், பாரிஸ் சார்ள்ஸ் டி கெளலே விமான நிலையம், பிராங்பேர்ட் விமான நிலையம் ஆகியன முழுமையாக மூடப்பட்டுள்ளன.

விமானப் பயணிகளால் மேற்படி விமான நிலையங்கள் நிரம்பி வழிகின்றன. ஐரோப்பிய நாடுகளை மையமாக வைத்து சுமார் 28 ஆயிரம் விமானங்கள் சேவையில் ஈடுபட்டு வருகின்றன. இவற்றில் 6 ஆயிரம் விமானங்களின் சேவைகள் முற்றாக நிறுத்தப்பட்டுள்ளதாக கட்டுப்பாட்டு நிலையம் அறிவித்தது.

பெல்ஜியம், ஆஸ்திரியா, செக்குடியரசு, டென்மார்க், ஜேர்மனி ஹங்கேரி, லத்துவியா, நெதர்லாந்து, போலந்து, ரோமானியா, ஸ்லோவேக்கியா, ஸ்பெயின், சுவீடன், சுவிற்சர்லாந்து ஆகிய நாடுகள் விமான நிலையங்களை மூடியுள்ளன. விமான நிலையங்கள் மூடப்பட்டதனாலும், விமான சேவைகள் ரத்துச் செய்யப்பட்டதனாலும் நாளொன்றுக்கு 200 மில்லியன் டொலர்கள் இழப்பு ஏற்பட்டுள்ளதாக விமான நிறுவனங்களை ஆதாரங்காட்டி செய்தி வெளியிடப்பட்டுள்ளது.

இந்தியாவிலிருந்து லண்டன் செல்லும் எல்லா விமானங்களும் ரத்துச் செய்யப்பட்டு விட்டன. லண்டன் ஹீத்ரு விமான நிலையத்திலிருந்து புறப்படும் 150 விமானங்கள் ரத்துச் செய்யப்பட்டன. அதுபோல் காட் விக் நகரிலிருந்து புறப்படும் 138 விமானங்கள் ரத்து செய்யப்பட்டன. மான்செஸ்டர், பர்மிங்ஹாம் அதுபோல் வட அயர்லாந்து பகுதியிலிருந்து புறப்படும் விமானங்களும் ரத்துச் செய்யப் பட்டன.

ஐரோப்பிய கண்டத்தின் பெரும்பாலான நாடுகளில் விமானங்கள் ரத்து செய்யப்பட்டுள்ளன. இதனால் பயணிகள் கடும் அவதிக்குள்ளாகி உள்ளனர். புகை மண்டலத்துக்குள் விமானத்தைச் செலுத்தினால் பாதை சரியாகத் தெரியாமல் விபத்து நேரிட வாய்ப்புள்ளது.

மேலும் புகை துகல்கள் விமானத்தின் என்ஜின் பகுதிக்குள் புகுந்துவிட்டால் பழுது ஏற் பட வாய்ப்புள்ளது. என்று பிரிட்டன் மற்றும் அமெரிக்காவில் உள்ள விமான தரைக்கட்டுப் பாட்டு அதிகாரிகள் எச்சரித்துள்ளனர்.

1989ம் ஆண்டு இதுபோன்று எரிமலை வெடித்த போது அவ்வழியாகச் சென்ற விமானம் விபத்தில் சிக்கி அதிர்ஷ்டவசமாக தப்பியது.

சுருள் சுருளாய் திரண்டு வரும் புகை மண்டலம் பகலை இருளாக்குவது போன்று காட்சியளிக்கிறது. பிரிட்டன் மட்டுமின்றி நோர்வே பின்லாந்து ஆகிய நாடுகளின் வான் பகுதிகளிலும் புகை மண்டலமாக காட்சியளிக்கிறது.

வெடித்துச் சிதறும் எரிமலையின் பெயர் இஜப்ஜாலாஜோகுல். இது பனிக்கட்டி மலையில் உள்ளது. எரிமலை வெடித்து நெருப்பை கக்குவதால் ஐஸ்லாந்தில் வெள்ளப்பெருக்கு ஏற்பட்டுள்ளது.  இதனால் மக்கள் அலறி அடித்து ஓடி வருகின்றனர். கடந்த ஒரு மாதத்தில் இந்த எரிமலை வெடிப்பது இது இரண்டாவது முறையாகும்.

இந்த எரிமலையை சுற்றி 3 இலட்சத்து 20 பேர் வசித்து வருகின்றனர். எரிமலை வெடித்ததை அடுத்து வேறு இடங்களுக்கு குடிபெயர்ந்து வருகின்றனர்.

கண்டியில் தமிழ் பாராளுமன்ற பிரதிநிதித்துவத்தை பெறுவதற்கான இறுதிச் சந்தர்ப்பம் 20 ஆம் திகதி – மனோகணேசன்

mano-ganesan.jpgபாராளு மன்றத்தில் தற்போதைய விகிதாசார தேர்தல் முறைமை மாற்றப்படலாம். கண்டி மாவட்டத்தில் இன்றைய தேர்தல் முறையின் கீழ் தமிழ் பாராளுமன்றப் பிரதிநிதித்துவத்தை பெறக்கூடிய இறுதிச் சந்தர்ப்பம் இதுவாகவே இருக்கலாம். எனவே இதை மனதில் கொண்டு நாவலப்பிட்டி தொகுதியில் மறுவாக்களிப்பு நடைபெறும் 34 வாக்களிப்பு நிலையங்களில் வாழும் வாக்காளர்கள் வாக்களிக்கவேண்டும் என ஜனநாயக மக்கள் முன்னணித் தலைவரும் ஐக்கிய தேசிய முன்னணியின் கண்டி மாவட்ட வேட்பாளருமான மனோ கணேசன் எம்.பி.தெரிவித்துள்ளார்.

இது தொடர்பாக மனோகணேசன் மேலும் தெரிவித்துள்ளதாவது;கொழும்பு மாவட்டத்திலே 2000 ஆம் ஆண்டு நடைபெற்ற பாராளுமன்ற தேர்தலின்போது சுமார் 96 வாக்குகள் குறைந்த காரணத்தினால் அன்று போட்டியிட்ட நான் வெற்றி பெறவில்லை. இதற்குக் காரணம் அன்று கொழும்பில் இருந்த சுமார் ஒரு இலட்சம் தமிழ் வாக்காளர்களில் 60 விகிதமானவர்கள் வாக்களிப்பில் கலந்துகொள்ளாமல் அசட்டையாக இருந்ததாகும்.

தேர்தல் முடிவுகள் வெளியான பிறகு 96 வாக்குகளால் கொழும்பு மாவட்டத் தமிழ் பிரதிநிதித்துவம் கை நழுவிப் போய்விட்டதே என தமிழ் மக்கள் வருந்தினார்கள். வாக்களிப்பில் கலந்துகொள்ளாத தமிழ் வாக்காளர்கள் குற்ற உணர்வினால் கவலையடைந்தார்கள். எனினும் அச்சமயம் பாராளுமன்றம் கலைக்கப்பட்ட காரணத்தினால் அதிர்ஷ்டவசமாக அடுத்த ஒரு வருடத்திற்குள் நடைபெற்ற பாராளுமன்ற தேர்தலில் சுமார் 16,000 அதிகப்படியான வாக்குகளை பெற்று கொழும்பு மாவட்ட பாராளுமன்ற உறுப்பினராக நான் தெரிவு செய்யப்பட்டேன்.

கண்டி மாவட்டத்தில் கடந்த 10 ஆண்டுகளாக தமிழ்ப் பாராளுமன்ற உறுப்பினர்கள் தெரிவு செய்யப்பட்டவில்லை. 2000 ஆம் ஆண்டு முதல் நடைபெற்ற மூன்று பாராளுமன்றத் தேர்தல்களிலும் போட்டியிட்ட தமிழ் வேட்பாளர்கள் தோல்வியடைந்துவிட்டார்கள். இதற்கு இரண்டு பிரதான காரணங்கள் இருக்கின்றன. ஒன்று நாவலப்பிட்டி,கம்பளை தொகுதிகளில் தமிழ் வாக்காளர்களுக்கும் தமிழ் வேட்பாளர்களுக்கும் எதிராக தொடர்ந்து நிகழ்த்தப்பட்டு வந்த வன்முறைகளாகும். அடுத்தது கண்டி மாவட்டத்திலே பதிவு செய்யப்பட்ட தமிழ் வாக்காளர்கள் தேர்தல்களின்போது பெருந்தொகையில் முன்வந்து வாக்களிப்பில் கலந்துகொள்ளாததாகும். இது கண்டி மாவட்டத்தின் வரலாறு. இதை யாரும் மறுக்க முடியாது.

இந்தத் தேர்தலின் போது சுமார் 10 வன்முறைச் சம்பவங்களுக்கு நானும் எனது ஆதரவாளர்களும் முகங்கொடுத்திருக்கின்றோம். எனினும் இவற்றை எம்மால் தேசிய ரீதியாக அம்பலப்படுத்த முடிந்துள்ளது.

நாவலப்பிட்டி வன்முறையாளர்களைப் பற்றி அரசாங்கத்தின் அமைச்சர்கள் உட்பட பலரும் கண்டிக்கும் நிலைமை ஏற்பட்டுள்ளது. இது வரவேற்கத்தக்கதாகும். இந்த வன்முறையாளர்களுக்கு ஆதரவளித்துக்கொண்டு தமிழ்ப் பாராளுமன்ற பிரதிநிதித்துவத்திற்கெதிராகவே கோடரிக்காம்புகளாக செயற்படும் தமிழின துரோகிகளும் இருக்கின்றார்கள்.

அதேவேளையில், அரசியல் யதார்த்தம் புரியாமல் வெறும் காழ்ப்புணர்ச்சியுடன் கருத்து தெரிவிக்கும் அரசியல் கோமாளிகளும் இருக்கின்றார்கள். இத்தகைய நபர்கள்தான் கண்டிமாவட்டத் தமிழ் பாராளுமன்ற பிரதிநிதித்துவத்தை வரவிடக்கூடாதென முனைப்புடன் செயற்படும் பேரினவாதிகளுக்கு நேரடியாகவும் மறைமுகமாகவும் துணைபோகின்றார்கள்.

இந்நிலையில் தமிழ் மக்களின் நியாயமான எதிர்பார்ப்பையும் எனக்கு எதிராக இழைக்கப்படுகின்ற அநீதிகளையும் கண்டு எனக்கு ஆதரவாக செயற்படுவதற்கு முன்வந்துள்ள ஒரு தொகை நாவலப்பிட்டி வாழ் தமிழ் பேசும் இஸ்லாமிய சகோதரர்கள் எனக்கு உற்சாகத்தைத் தந்துள்ளார்கள். எனினும் பாரிய பொறுப்பு தமிழ் மக்களுக்கே இருக்கின்றது.

தமிழ்ப் பாராளுமன்ற பிரதிநிதித்துவத்தை உறுதிப்படுத்தும் விதத்தில் வாக்களிப்பதிலிருந்து தவறிவிட்டு பின்னர் வருந்தும் நிலைக்கு தமிழ் மக்கள் தம்மை உள்ளாக்கிக்கொள்ளக்கூடாது.

தோல்வியடைந்த நாடாளுமன்ற உறுப்பினர்களின் இராஜதந்திர கடவுச் சீட்டுக்கள் ரத்து

நடைபெற்று முடிந்த நாடாளுமன்றத் தேர்தலில் தோல்வியைத் தழுவிய முன்னாள் நாடாளுமன்ற உறுப்பினர்களின் இராஜதந்திர கடவுச் சீட்டுக்கள் ரத்து செய்யப்படவுள்ளன. தேர்தலில் போட்டியிட்டு தோல்வியைத் தழுவிய அமைச்சர்கள் மற்றும் நாடாளுமன்ற உறுப்பினர்களுக்கு வழங்கப்பட்டிருந்த ராஜதந்திர கடவுச் சீட்டு ரத்து செய்யப்பட்டு சாதாரண கடவுச் சீட்டுக்கள் வழங்கப்படவுள்ளன.

குறித்த அமைச்சர்கள் மற்றும் நாடாளுமன்ற உறுப்பினர்களின் இராஜதந்திர கடவுச் சீட்டுக்களை உடனடியாக அமுலுக்கு வரும வகையில் ரத்து செய்வதாக குடிவரவு குடியகழ்வுத் திணைக்கள கட்டுப்பாட்டாளர் அபேகோன் பண்டா தெரிவித்துள்ளார்.

இது தொடர்பில் நாடாளுமன்ற ஆணையாளருக்கு ஏற்கனவே அறிவிக்கப்பட்டுள்ளதாக அவர் குறிப்பிட்டுள்ளார். தமிழ்த் தேசியக் கூட்டமைப்பைச் சேர்ந்த 15 நாடாளுமன்ற உறுப்பினர்களுக்கு இவ்வாறு ராஜதந்திர கடவுச் சீட்டுக்கள் ரத்து செய்யப்பட உள்ளதாகத் தெரிவிக்கப்படுகிறது.

வடக்கு, கிழக்கில் தமிழ்மக்களால் தெரிவு செய்யப்பட்ட பிரதிநிதிகளைக் காத்திருக்கும் தலையாய உடனடிப் பணி

parliament.jpgஇலங்கையின் 7 ஆவது பாராளுமன்ற அவைக்கான மக்கள் பிரதிநிதிகளைத் தெரிவு செய்யும் பொதுத் தேர்தல் முடிவுகளும் வெளியாகிவிட்டன. இத்தேர்தலில் பல்வேறுபட்ட மாற்றுக் கருத்துகளையும் கொள்கைகளையும் கொண்ட பல கட்சிகளும் பல சுயேச்சைக் குழுக்களும் தேர்தல் களத்தில் நின்றிருந்தன.

முன்னைய தேர்தல்களில் மக்கள் அபிப்பிராயம், ஊகம் ஆகியவற்றிற்கமைய தேர்தல் முடிவுகள் அமைவதற்கு மாறாக தற்பொழுது நடந்து முடிந்த இலங்கையின் வடக்கு, கிழக்கு மாகாணங்களுக்கான தேர்தல் முடிவு அமைந்திருப்பதை யாவரும் மறுப்பதற்கில்லை. நடந்து முடிந்த பொதுத் தேர்தலின் போது ஒருபுறம் தமிழ்த் தேசியம் என்ற கொள்கைக்கும் மறுபுறம் அபிவிருத்தி என்ற கொள்கைக்கும் மக்கள் ஆணையைப் பெறும்வகையில் வடக்கு, கிழக்கு மாகாணங்களில் பல கட்சிகளது கொள்கைகள் முன்வைக்கப்பட்ட பொழுதிலும் சில கட்சிகள் இவ்விரு கொள்கைகளுக்கும் இடைப்பட்ட நிலையிலான நெகிழும் தன்மைப் போக்குடைய கொள்கையை முன்வைத்துப் போட்டியிட்டதை யாவரும் அறிவர். கடந்த காலங்களில் வழங்கியது போல தற்பொழுது நடந்து முடிந்த தேர்தல் முடிவும் அமையாது மாறுபாடாகவே வாக்களிப்பில் பங்குகொண்ட 18% மான மக்களில் பெரும்பான்மையினரது விருப்பு வெளிவந்துள்ளமையை உணர முடிகின்றது. நாட்டை ஆளும் அரசியல் கட்சியும் பிரதான எதிர்க்கட்சியும் அபிவிருத்தியை முன்னிலைப்படுத்தியும் அதேவேளை, தமிழ்த் தேசியம் என்ற கடும்போக்கை அகில இலங்கைத் தமிழ் காங்கிரஸ் கட்சி வலியுறுத்தியும் இவ்விரு கொள்கைக்கும் இடைப்பட்டதும் தற்போதைய சூழ்நிலையில் தமிழ் பேசும் மக்களுக்கு உடனடித் தேவையாகவும் நடைமுறைச் சாத்தியமான நெகிழ்ச்சிப் போக்குக் கொள்கையான அபிவிருத்தியும் தேசியமும் கலந்த கொள்கையை முன்வைத்து இலங்கைத் தமிழரசுக் கட்சியும் தமிழர் விடுதலைக் கூட்டணியுமாகிய பிரதான அமைப்புகள் தேர்தல் களத்தில் போட்டி போட்டிருந்தன.

எனினும், தேர்தல் முடிவானது காலத்தின் தேவைக்கேற்ப அபிவிருத்தியும் தேசியமும் கலந்த நெகிழ்ச்சிப் போக்குக் கொள்கையும் அபிவிருத்தியும் தேவையென்பதை வெளிக்காட்டுவதாக அமைகின்றது. தமிழீழ விடுதலைப் புலிகள் இயக்கம் கூடக் கடந்த காலங்களில் வடக்கு, கிழக்கு மாகாணங்களில் ஏற்பட்ட இயற்கை , செயற்கை அனர்த்தங்களால் இடம்பெயர்ந்து அவல வாழ்க்கை வாழும் தமிழ்மக்கள் நிலையை சூழ்நிலையை யதார்த்த நிலையைக் கருத்தில்கொண்டு தமிழ்மக்களது இயல்பு வாழ்க்கைக்கு முன்னுரிமை வழங்கி அதனை அரசு முன்னெடுக்க வேண்டுமெனவும் அதற்கான பூரண ஒத்துழைப்பை நல்கவும் தாம் சித்தமாக இருக்கும் பாணியில் கடந்த காலங்களில் பல சந்தர்ப்பங்களில் பத்திரிகையில் கருத்துகள் வெளிவந்ததையும் அண்மையில் தமிழ்த் தேசியக் கூட்டமைப்புப் பாராளுமன்ற உறுப்பினர்களான இரா.சம்பந்தன், மாவை.சேனாதிராசா, சுரேஷ் பிரேமச்சந்திரன் போன்றோர் அடிக்கடி பத்திரிகை அறிக்கைகள் மூலம் தமிழ் மக்களது இயல்பு வாழ்க்கை உட்பட மீள் குடியேற்றம், கடற்றொழில் வசதி போன்ற பல்வேறுபட்ட அபிவிருத்தியில் அக்கறை எடுப்பது பற்றி வலியுறுத்தியும் வந்துள்ளதுடன், குறிப்பாக தமிழரசுக் கட்சியில் தற்போது நடைபெற்ற பொதுத் தேர்தலில் வெற்றி பெற்ற முன்னணி பிரதிநிதிகளும் பத்திரிகை அறிக்கைகள் மூலம் அபிவிருத்தியும் தேசியமும் கலந்த நெகிழ்ச்சிப் போக்குடைய கொள்கையினை வெளிப்படுத்தியும் இருந்ததை யாவரும் அறிவர்.

இந்நிலையில், பொதுத் தேர்தல் பெறுபேறு காலத்தின் தேவை, யதார்த்த நிலை என்பவற்றைக் கருத்தில் கொண்டே பொதுமக்கள் வாக்களித்துள்ளனர் என்பதைக் காட்டி நிற்கின்றது.

வாக்களிப்பில் கலந்துகொண்ட 18% மான மக்கள் வடக்கிலும் கிழக்கிலும் அபிவிருத்தி மட்டும் தான் தேவையெனக் கருதியிருப்பின் ஆளும் கட்சியும் பிரதான எதிர்க்கட்சியும் வடக்கு, கிழக்கு மாகாணங்களில் முழு ஆசனங்களையும் தனதாக்கியிருக்க வேண்டும். ஆனால், வடக்கு, கிழக்கு மாகாணங்களுக்கான உறுப்பினர் தொகையில் கணிசமான உறுப்பாண்மையை மட்டும் அபிவிருத்தியை முதன்மைக் கொள்கையாகக் கொண்ட தென் இலங்கைக் கட்சிகள் வென்றெடுத்துள்ளனர். அதேவேளை, தமிழ்த் தேசியம் என்ற கடும்போக்கைக் கொள்கையை வலியுறுத்தி நின்ற அகில இலங்கைத் தமிழ் காங்கிரஸ் கட்சிக்கு ஒரு ஸ்தானம் கூடக் கிடைக்கவில்லை. வடக்கு, கிழக்கு மாகாணங்களில் வாழும் தமிழர்களது இன்றைய உடனடித் தேவை , யதார்த்த நிலை ஆகியவற்றையும் நீண்ட கால தூர நோக்கைக் கொண்ட தேசிய கொள்கையையும் தன்னகத்தே கொண்டு களத்தில் நின்ற இலங்கைத் தமிழரசுக் கட்சி வடக்கு மற்றும் கிழக்கு மாகாணங்களில் பெரும்பாலான உறுப்பாண்மையை வென்றெடுத்ததன் மூலம் தமிழ் மக்களது உடனடித் தேவையான இயல்பு வாழ்க்கை உட்பட மீள்குடியேற்றம், கடற்றொழில் அடங்கலான ஏனைய அபிவிருத்திகளைப் பெற்றுத்தருவதற்கு நடந்து முடிந்த தேர்தலில் மக்கள் தமிழரசுக் கட்சிக்கு ஆணையினை வழங்கியுள்ளதாகவே குறித்த வெற்றியை பொருள் கொள்ளவேண்டும்.

தேசியத்திற்கான கொள்கைப் போராட்டம் என்பது ஒரு தனியான நீரோட்டம். அதேபோல, தமிழர்களின் இயல்பு வாழ்க்கை. அபிவிருத்தி என்பது வேறு தனித்துவமான ஒரு நீரோட்டம். இவ்விரு நதிகளும் ஒன்றையொன்று மேவாது சமாந்தரமாக தனித்துவமாக ஓடிக்கொண்டிருப்பதே சிறந்ததாகும். எப்போதாவது ஒருநாள் இவ்விரு நதிகளும் ஒரு இடத்தில் சங்கமமாகி சமுத்திரமாக தனது தனித்துவத்தை உள்ளடக்கிய விழுமியங்களுடன் பரிணாம வளர்ச்சியடைந்த சமூகமாக உருவெடுக்கவும் கூடும். அதைப் பொறுத்திருந்துதான் பார்க்க வேண்டும்.

மக்கள் நன்மை கருதி காலத்திற்கும் சூழ்நிலைக்கும் ஏற்பட கடந்த காலங்களில் தேசியத்திற்காகப் போராடிய தமிழீழ விடுதலைப் புலிகளும் தென்னாபிரிக்காவின் கறுப்பினத்தின் தலைவர் நெல்சன் மண்டேலாவும் எவ்வாறு அவ்வப்பொழுது மக்கள் தேவையைக் கருத்தில் கொண்டு விட்டுக் கொடுப்புடன் கூடிய புரிந்துணர்வு நல்லிணக்கக் கொள்கைப் பிரகடனங்கள் செய்து அதன்படி செயற்பட்டார்களோ அதேவழியில் மக்கள் ஆணையைப் பெற்ற தமிழரசுக் கட்சி செயற்படுவதில் தவறேதும் இருக்கமுடியாது. எனவே, அரசினால் அபிவிருத்தி தொடர்பில் முன்னெடுக்கப்படும் செயற்பாடுகள் தமிழருக்கும் வட, கிழக்கு மண்ணுக்கும் பாதிப்பில்லாத வகையில் அதையும் உள்வாங்கி அமையுமாயின் அதற்குப் பூரண ஆதரவை நல்குவதே காலத்தின் தேவையாகும். இதற்காகத் தமிழரசுக் கட்சி தனது தனித்துவத்தை இழக்காது அரசுடன் சேர்ந்து தமிழ்மக்களுக்கான நற்பணிகளை செய்வதன்மூலம் வடக்கிலும் கிழக்கிலும் அபிவிருத்தி மூலம் தமிழருக்கு இயல்பு வாழ்க்கையைப் பெற்றுக்கொடுப்பதுடன் , வட, கிழக்குப் பிரதேசத்தில் தனித்துவம், தேசியம், தமிழ் மண் சிறிது சிறிதாக உட்கிடையாக பறிபோவதை சிதைக்கப்படுவதை தடுத்து நிறுத்த சிங்கள முற்போக்காளரின் புரிந்துணர்வு, நட்பு நம்பிக்கையைப் பெறவும் சந்தேகங்களைப் போக்கவும் கூடியதாக அமையும். கடந்த காலங்களில் ஐக்கிய தேசியக் கட்சியின் ஆட்சியின் போது அகில இலங்கை தமிழ் காங்கிரஸ் ஆட்சியில் நேரடியாகப் பங்குகொண்டு அமைச்சர் பதவி பெற்று பல அபிவிருத்திகளை வடக்கிலும் கிழக்கிலும் ஆற்றியிருந்தனர். தேசியம் விட்டுக்கொடுக்கப்படவில்லை. இதனால், தனது தனித்துவம் இழக்கப்படவில்லை. அதேபோல, இலங்கைத் தமிழரசுக் கட்சியும் ஐக்கிய தேசியக் கட்சி ஆட்சிக் காலத்தில் அபிவிருத்திக்காக இணைந்து அமைச்சரவையில் உள்ளூராட்சி அமைச்சர் பதவியைப் பெற்று உள்ளூராட்சி அமைப்புத் தொடர்பில் பல அபிவிருத்திகளை ஆற்றியிருந்தும் தனது தனித்துவத்தை இழக்கவில்லை. பேணிப்பாதுகாத்த வண்ணம் செயற்பட்டனர்.

தமிழீழ விடுதலைப் புலிகள் கூட ஐக்கிய தேசியக் கட்சியுடன் ஒப்பந்தத்தை ஏற்படுத்தி தமிழர்களின் இயல்பு வாழ்வுக்கும் அபிவிருத்திக்கும் முன்னுரிமை வழங்கியிருந்தனர்.

தமிழர் தேசியத்தை இறுக்கமாக வலியுறுத்தியமையே தமிழ் காங்கிரஸ் கட்சியின் தோல்விக்குக் காரணம் என பலராலும் பத்திரிகை மூலம் அறியவருகிறது.அக்கருத்து முழுமையாக ஏற்கக்கூடிய ஒன்றல்ல. காரணம் தனித்தேசியம் தற்போதைய நிலையில் நடைமுறைச் சாத்தியமற்றது. தற்போதைய நிலையில் யதார்த்தமாகத் தமிழ்த்தேசியம் நடைபெறக்கூடிய ஒன்றல்ல எனக் கூறிவரும் ஈ.பி.டி.பி. தமிழர் விடுதலை கூட்டணிக் கட்சிகளுக்கே மக்கள் முழுமையாக வாக்களித்திருக்க வேண்டும். அவ்வாறு வாக்களிப்பு அமையவில்லை. இதன் மூலம் இக்கருத்து நிராகரிக்க வேண்டியதாகும். தமிழ் காங்கிரஸ், தமிழர் விடுதலைக் கூட்டணி ஆகியவற்றின் தோல்விக்குக் காரணங்கள் பல இருப்பினும் 18% மானவரது கருத்துப்படி தமிழ்க்கட்சிகள் ஒற்றுமையாகச் சேர்ந்து நின்று போட்டியிடவில்லை என்பதையே வெளிப்படுத்தியுள்ளது என்பதே எனது கருத்தாகும். அத்துடன்,இலங்கைத் தமிழரசுக்கட்சி மட்டுமே அனைத்து தமிழ்பேசும் மக்களையும் ஒருமித்து பிரதிநிதித்துவம் செய்யக்கூடிய வகையில் வட, கிழக்கிலுள்ள சகல மாவட்டங்களிலும் போட்டியிட்டதையும் அரசியல் முதிர்ச்சியும் மதிநுட்பமும் கொண்ட தமிழ் பேசும் மக்கள் மனதில் பதிவு செய்ததன் எதிரொலியே வரலாற்றின் திருப்புமுனையில் நிற்கும் தனித்துவ மக்கள் கூட்டத்தின் விவேகமான வாக்குப்பதிவு நிகழ்வாகும்.

ஆயினும் இலங்கை அரசியல் வரலாற்றில் 1965 ஆம் ஆண்டில் டட்லி சேனநாயக்கா தலைமையில் ஐக்கிய தேசியக்கட்சியுடன் தமிழரசுக்கட்சி இணைந்து ஆட்சி புரிந்தும் தமிழர்களின் நியாயமான கோரிக்கைகளை அமுல்படுத்த முடியாது தோல்வி கண்டதும் ஜனாதிபதி சந்திரிகா குமாரதுங்க கலாநிதி நீலன் திருச்செல்வத்தின் பங்களிப்புடன் வரைந்த அரசியலமைப்பு நகல் திட்டம் பின்னர் பாராளுமன்றத்தில் கிழித்தெறியப்பட்டு புறந்தள்ளப்பட்டதும் சரித்திரம். இவ்விரு முயற்சிகளையும் முன்னெடுத்த டட்லி,சந்திரிகா ஆகியோருக்குப் பாராளுமன்ற பலமோ மக்கள் ஆதரவுப் பின் புலமோ இல்லாமையே காரணம் என்பது யதார்த்த பூர்வமான உண்மையாகும். இந்த பின்புலத்தில் இன்றைய சூழ்நிலையைப் பரிசீலிப்பது இன்றியமையாததாகும்.

இலங்கையில் ஜனாதிபதியாகவும் தொடர்ந்து நடைபெற்ற பாராளுமன்றத் தேர்தலில் நாட்டு மக்களின் குறிப்பாக சிங்கள மக்களின் நம்பிக்கைக்குரிய இரட்சகராக மகிந்த ராஜபக்ஷ விஸ்வரூபம் எடுத்துள்ளார் என்பதில் எள்ளளவேனும் சந்தேகம் இல்லை. அத்துடன், தென்னிலங்கையில் பேரினவாத நச்சுக் கொள்கைகளை வலியுறுத்தி கட்சிகளை பாராளுமன்ற தேர்தலில் பூண்டோடு ஒழித்து பலம் மிக்க பாராளுமன்றத்தை தன்வசம் ஆக்கியுள்ளார் என்பதும் ஏற்றுக்கொள்ளப்படவேண்டிய பகிரங்க இரகசியமாகும். தேர்தல் பிரசாரத்தின் போது தமிழ் மக்கள் தெரிவு செய்யும் பிரதிநிதிகளுடன் பேசி இனப்பிரச்சினைக்கு முற்றுப்புள்ளி வைப்பதில் உறுதியாக இருப்பதாகவும் யாழ்நகரில் வந்து தமிழ் மக்களைத் தான் நம்புவதாகவும் தமிழ் மக்களும் தன்னை நம்ப வேண்டுமென்றும் பகிரங்க வேண்டுகோள் விடுத்தார். இச்சந்தர்ப்பத்தில் தமிழ் மக்கள் தெரிவு செய்து அனுப்பிய பிரதிநிதிகளுடன் பேசி உருவாகும் உணர்வுபூர்வமான அரசியலமைப்பு உறுப்புரைகளை நிறைவேற்றும் மன வைராக்கியம், துணிவு, ஆளுமை, ஜனாதிபதி ராஜபக்ஷவுக்கு உண்டா என்பதை ஆராயும் போது எதுவித சந்தேகமும் இன்றி கடந்த ஆண்டு எமது நாட்டில் நடந்த சம்பவம் விஸ்வரூபம் எடுத்து எம்முன் நிழலாடுகிறது.

எனவே, இவ்வாறான அதிதீவிர துணிவும் மனவைராக்கியமும் நிறைந்துள்ள மகிந்த ராஜபக்ஷ தமிழ்ப் பிரதிநிதிகளுடன் பேசித் தீர்க்க முயலும் போது உருவாகும் எதிர்ப்புகளுக்கு அடிபணியாது எதிர்ப்பலைகளை துவம்சம் செய்து தீர்வை அர்ப்பணிப்புடன் அமுல்படுத்தி இலங்கைத் தீவில் நியாயமான அதிகாரப்பகிர்வு அனைத்து தேசிய இனங்களுக்கும் இடையில் பரஸ்பர புரிந்துணர்வு, நல்லிணக்கம் ஆகியவற்றை ஏற்படுத்தி மகிந்த ராஜபக்ஷ வரலாற்று நாயகனாக முடியாதா என்ற கேள்வி எழுகின்றதல்லவா?

ஆகவே,தமிழ் மக்களால் தெரிவு செய்யப்படும் பிரதிநிதிகளுடன் பேசி பிரச்சினைகளைத் தீர்ப்பேன் என்ற மகிந்த ராஜபக்ஷவின் எண்ணக்கரு வளர்ச்சியடைந்து செயல்வடிவம் பெற களம் அமைக்க வேண்டியது பெரும்பான்மையாக தமிழ் மக்களால் தெரிவு செய்யப்பட்ட பிரதிநிதிகளை உள்ளடக்கிய தமிழரசுக்கட்சியின் காலத்தால் புறம் தள்ளமுடியாத கடப்பாடாகிறது. இவ்வாறு களம் அமைக்கப்படும் பட்சத்தில் பாரத நாட்டின் பின்புலத்துடன் கூடிய சர்வதேச சமூகத்தின் பூரண சம்மதமும் ஒத்துழைப்பும் சங்கமிக்கும் நிலை உருவாகும்.

எதுஎவ்வாறாயினும் தனித்துவத்தை தாரைவார்க்காது வெளிப்படைத் தன்மையுடன் கூடிய நேர்மையான மதிநுட்பத்துடன் கறைபடியாத கரமாக தமிழரசுக்கட்சி ஆளுமையும் மனவுறுதியும் மக்கள் ஆதரவும் கொண்ட “பேசித் தீர்ப்பேன்’எனக்கூறிய மகிந்த ராஜபக்ஷவின் கரத்தைப் புரிந்துணர்வுடைய நல்லிணக்கத்துடன் பற்றிப்பிடித்து அர்ப்பணிப்புடன் செயற்படின் ஆசியாவின் ஆச்சரியமான அபிவிருத்தியடைந்த நாடாக மிளிர தமிழ் மக்களும் பங்காளியானார்கள் என சரித்திரம் கூறும்.ஒரு சமயம் வெளிப்படையான புரிந்துணர்வுடன் நல்லிணக்கம் உருவாகாவிடின் தமிழ் மக்களின் உள்ளார்ந்த ஆதங்கத்தை நிஜமாக்க பாரத நாட்டின் பின்புலத்துடன் கூடிய சர்வதேச சமூகத்தின் செயற்பாடு யதார்த்தமாகும் காலம் உதயமாகும் என்பதில் இரு கருத்துகளுக்கு இடமில்லை.

நன்றி-தினக்குரல்