26

26

1.54 மில்லியன் அமெரிக்க டொலர் மருந்துப் பொருட்கள் லிற்றில் எய்ட் மூலம் தமிழ் பகுதிகளுக்கு வழங்கப்பட்டது! : த ஜெயபாலன்

MWB_in_Vavuniya_Hospitalமே 18 2009ல் பிரித்தானியாவில் பொது அமைப்புகளின் ஆணைக்குழுவின் கீழ் பதிவு செய்யப்பட்ட லிற்றில் எய்ட் தனது முதலாவது ஆண்டைப் பூர்த்தி செய்யும் நிலையில் கடந்த நான்கு மாதங்களில் 1.54 மில்லியன் அமெரிக்க டொலர் பெறுமதியான மருந்துப் பொருட்களை வவுனியா, மன்னார், யாழ்ப்பாணம், நாவலப்பிட்டியா மாவட்டங்களில் உள்ள வைத்தியசாலைகளுக்கு விநியோகித்து உள்ளது. www.littleaid.org.uk இலங்கையில் இவ்வளவு தொகையான மருந்துப் பொருட்களைப் பொறுப்பேற்று முற்றிலும் இலவசமாக விநியோகித்துள்ள குறிப்பிடத்தக்க நடவடிக்கையாக இது அமைந்துள்ளது. டென்மார்க்கில் உள்ள மருத்துவ பொது அமைப்பான எல்லைகளற்ற மருத்துவர்கள் – Medicine Without Borders (Denmark) அமைப்பினரால் வழங்கப்பட்ட மருந்து வகைகளை இலங்கையில் பெறுப்பேற்று அதன் விநியோகத்தை லிற்றில் எய்ட் மேற்கொண்டிருந்தது.

1.54 மில்லியன் அமெரிக்க டொலர் பெறுமதியான மருந்துகளின் இறுதித் தொகுதி இவ்வாண்டு ஜனவரி முதல் நாள் முதல் லிற்றில் எய்ட் பொறுப்பேற்றுக் கொண்டது. கடந்த நான்கு மாதங்களாக மேற்குறிப்பிடப்பட்ட உள்ளுர் வைத்தியசாலைகளின் தேவையையொட்டி அவை அனுப்பி வைக்கப்பட்டு இருந்தது. இலங்கையில் இம்மருந்துப் பொருட்களின் சேமிப்பு மற்றும் விநியோகத்தைப் பார்வையிட டென்மார்க் எல்லைகளற்ற மருத்துவப் அமைப்பில் இருந்து இருவர் உட்பட நால்வர் இலங்கை வந்திருந்தனர். இவர்களில் இருவர் டென்மார்க் தேசிய நாளிதலான பொலிரிக்கன் பத்திரிகையில் இருந்து வந்திருந்தமை குறிப்பிடத்தக்கது. ஊடகம் ஒன்றுக்கு வழங்கிய செவ்வியில் டென்மார்க் குழுவிற்கு தலைமை தாங்கி வந்த Hans Frederik Dydensborg லிற்றில் எய்ட் இன் நடவடிக்கைகளை நேரில் பார்வையிட்டதில் தங்களுக்கு  எதிர்காலத்தில் லிற்றில் எய்ட் உடன் இணைந்து பணியாற்ற விருப்பம் தெரிவித்துள்ளனர்.

இவர்களின் ஆலோசனைக்கு அமைய நீர்கொழும்பில் குளிரூட்டப்பட்ட சேமிப்பு இடம் ஒன்னை லிற்றில் எய்ட் 10000 ரூபாய் மாத வாடகைக்குப் பெற்றுள்ளது. எதிர்காலத்தில் லிற்றில் எய்ட் மருந்து மற்றும் பொருட்களை தனியார் சேமிப்பு இடங்களில் வைக்காமல் தங்களது கட்டிடத்திலேயே விநியோகிக்கப்படும் வரை பாதுகாக்க முடியும். இலங்கைக்கு விஜயம் செய்த டென்மார்க் குழு வவுனியா அரசாங்க அதிபர் திருமதி சார்ள்சை சந்தித்து உரையாடி இருந்தனர். இக்குழு அருணாச்சலாம் இடப்பெயர்வு முகாமுக்குச் சென்றும் நிலைமைகளை நேரடியாகப் பார்வையிட்டு இருந்தனர்.

இம்மருத்துவ உதவிக்கு முன்னதாக 1140 கிகி (1.12 தொன்) எடையுள்ள மருந்தப் பொருட்கள் எல்லைகளற்ற மருத்துவர்கள்  – டென்மார்க் அமைப்பினரால் அன்பளிப்புச் செய்யப்பட்டு இருந்தது. இம்மருந்துகளின் காலாவதிக் காலம் யூலை 2011. வவுனியா மருத்துவமனைக்கு அனுப்பி வைக்கப்பட்டுள்ள இம்மருந்துப் பொருட்கள் பரவலாக உள்ள நோய்களுக்கான 7 வகையான மருந்துகளை உள்ளடக்கி இருந்தது. வலி நிவாரணம், மன அழுத்தம் மன உளைச்சல், இதய எரிவு, வயிற்று அல்சர், உயர் கொலஸ்திரோல் ஆகியவற்றிற்கான மருந்துகள் இந்த மருந்துத்தொகுதியில் உள்ளடங்கி இருந்தது. இம்மருந்துப் பொருட்களின் மதிப்பீடு 16,000 பவுண்கள் (30 லட்சம் ரூபாய்.)

இந்த மருத்துவத் திட்டம் வெற்றிகரமாக முடிக்கப்பட்டதைத் தொடர்ந்தே 1.54 மில்லியன் அமெரிக்க டொலர் பெறுமதியான மருந்துகள் லிற்றில் எய்ட் இன் பொறுப்பில் கையளிக்கப்பட்டது.

இந்த ஓராண்டில் குறிப்பாக வன்னி முகாம்களுக்கு மக்கள் மிகுந்த நெருக்கடியை எதிர்நோக்கி இருந்த ஆரம்பக்கட்டத்தில் மரக்கறிகள், குழந்தைகளுக்கான பால்மா, துணிவகைகள் ஆகியவற்றை தம்புல்லவில் இருந்து செட்டிகுளம் முகாம்களுக்கு அனுப்பி வைத்தது. மேலும் அம்பேபுச முகாமில் உள்ள முன்னாள் போராளிகளின் புனர்வாழ்வில் அவர்களுக்கு இசைப் பயிற்சி வகுப்புகளை லிற்றில் எய்ட் மேற்கொண்டிருந்தது. இத்திட்டம் சட்ட மற்றும் மறுசீரமைப்பு அமைச்சின் ஒத்துழைப்புடன் லிற்றில் எய்ட் இனால் மட்டுமே மேற்கொள்ளப்படுகின்றது. 5ம் தர புலமைப் பரிசில் பரீட்சைக்க்கு தோற்றிய மாணவர்களுக்கு தேசம்நெற் மேற்கொண்ட நூவிநியோகத் திட்டத்திற்கும் லிற்றில் எய்ட் நிதிப் பங்களிப்புச் செய்திருந்தது. மேலும் மன்னாரில் டிலா பிரதர்ஸின் ஒத்துழைப்புடன் அகிலன் பவுண்டேசன் செஞ்சோலைச் சிறார்களை பராமரிப்பதற்கான ஏற்பாடுகளை லிற்றில் எய்ட் மேற்கொண்டிருந்தது.

லிற்றில் எய்ட் உதவி வழங்குவதை மட்டுமல்ல உதவி வழங்கும் நிறுவனங்களை தாயகத்தில் உதவி தேவைப்படும் மக்களுடன் தொடர்புபடுத்தி விடுவதிலும் கவனம் எடுத்து வருகின்றது. லிற்றில் எய்ட் நேரடியாக நிதி உதவிகளைப் பெற்று மேற்கொண்ட உதவிகள் 10 000 புவண்களுக்குள் அமைய, சர்வதேச மற்றும் அமைப்புகளுடன் தொடர்புகளை ஏற்படுத்தி பெற்றுக் கொடுத்து வரும் உதவிகள் சில மில்லியன் அமெரிக்க டொலர்களாக மதிப்பிடப்படுகின்றது.

லிற்றில் எய்ட் தங்கள் அனைத்து நடவடிக்கைகளையும் நிதிப் பரிமாற்றங்களையும் அனைவரும் பார்வையிடக் கூடிய வகையில் இணையத்தில் வெளியிட்டு வருகின்றது. தமிழ் பொது அமைப்புகள் மத்தியில் உள்ள பொறுப்பற்ற ஒளிவு மறைவான கணக்கியல் நடைமுறைக்கு மாறாக லிற்றில் எய்ட் திறந்த புத்தகமாக உள்ளமை அதன் நம்பகத்தன்மையின் வெளிப்பாடாக உள்ளது.

லிற்றில் எய்ட் பற்றிய மேலதிக விபரங்களுக்கு : www.littleaid.org.uk

16வது சார்க் உச்சி மாநாடு புதனன்று பூட்டானில் ஆரம்பம் – ஜனாதிபதி மஹிந்த தலைமையிலான குழு இன்று பயணம்

saarc-logo.jpg16 வது சார்க் உச்சி மாநாடு நாளை மறுதினம் பூட்டான் தலைநகரான திம்புவில் ஆரம்பமாகிறது. இம்மாநாட்டில் கலந்து கொள்ள ஜனாதிபதி மஹிந்த ராஜபக்ஷ தலைமையிலான இலங்கை தூதுக்குழு இன்று பூட்டான் புறப்பட்டுச் செல்கிறது.

சார்க் அமைப்பின் வெள்ளி விழா ஆண்டு இதுவாகும். அமைப்பின் முதலாவது உச்சிமாநாடு பங்களாதேஷ் தலைநகரான டாக்காவில் 1985 டிசம்பரில் நடைபெற்றது. 16 வது உச்சி மாநாடு நாளை மறுநாள் பூட்டானில் ஆரம்பமாகிறது. பூட்டான் உச்சிமாநாட்டை பொறுப்பேற்று நடத்துவது இது முதல் முறையாகும். சார்க் அமைப்பின் தலைமைப் பதவியை தற்போது ஜனாதிபதி மஹிந்த ராஜபக்ஷ வகித்து வருகின்றார்.

16 வது உச்சி மாநாட்டை தலைமை வகித்து நடத்தும் ஜனாதிபதி மஹிந்த ராஜபக்ஷ மாநாட்டு நிகழ்ச்சிகளுக்கு புறம்பாக இந்தியப் பிரதமர் மன்மோகன் சிங்குடன் தனிப்பட்ட ரீதியில் பேச்சுவார்த்தை நடத்துவார் என்று தெரிவிக்கப்படுகிறது. உச்சி மாநாட்டு நிகழ்வுகளில் வெளிநாட்டமைச்சர்களின் பேச்சுவார்த்தை மற்றும் ஏனைய செயற்பாடுகளில் இலங்கையின் புதிய வெளிவிவகார அமைச்சர் ஜீ.எல். பீரிஸ் பங்குபற்றுவார். வெளிநாட்டமைச்சர் பதவிக்கு நியமிக்கப்பட்ட பின் அமைச்சர் ஜீ.எல். பீரிஸ் பங்குபற்றும் முதலாவது நிகழ்வு இதுவாகும். தனது பூட்டான் விஜயத்துக்கு முன்பதாக ஊடகவியலாளர்களை அமைச்சர் பீரிஸ் நேற்று சந்தித்தார்.

பயங்கரவாதத்தை ஒழிப்பதற்கு கட்டுப்படுத்தப்பட்ட வளங்களுடன் இலங்கை மேற்கொண்ட செயற்பாட்டு அணுகுமுறையை இதே போன்ற பிரச்சினையை எதிர்நோக்கும் ஏனைய பிராந்திய நாடுகள் பாடமாக எடுத்துகொள்ளலாம். இலங்கையின் அணுகுமுறை ஏனைய பல நாடுகளுக்கு நல்லதொரு படிப்பினையாக அமையும் என்று ஊடகவியலாளர்களிடம் அமைச்சர் பீரிஸ் கூறினார்.

அங்கு அவர் மேலும் கூறியதாவது,

சார்க் அமைப்பு உண்மையிலேயே மக்கள் மையப்படுத்தப்பட்ட அமைப்பாக உருவாக வேண்டிய காலம் வந்து விட்டது. இந்நிலையில் கடந்த 25 வருடங்களுக்கு பின்னரான தற்போதைய நிலையை பற்றி ஆராய சார்க் அமைப்புக்கு இது நல்லவொரு சந்தர்ப்பமாக அமைகிறது.

எதிர்கால சவால்கள், மாற்றப்பட வேண்டிய விடயங்கள், பிராந்திய சேவைக்காக முன்னுரிமை வழங்கப்பட வேண்டிய விடயங்கள் ஆகியவை பற்றி தற்போது ஆராயலாம். தமது நலன் பேணுவதற்கு சார்க் அமைப்பு நேரடியாக தொடர்புள்ளது என்று பிராந்திய மக்கள் நினைக்கும் அளவுக்கு அமைப்பின் செயற்பாடுகள் அமைய வேண்டும். பொருளாதார நடவடிக்கை மூலம் கிடைத்த லாபங்களை அனைத்து தரப்பினரிடையிலும் சமமாக பகிர்ந்தளிப்பதில் பிராந்திய நாடுகள் அதிக அக்கறை காட்டவேண்டும்.

அத்துடன் பிராந்திய நாடுகளுக்கு தேவையேற்படும் நேரத்தில் பயன்படுத்திக் கொள்ளும் வகையில் வளங்களை சேமித்தல் மற்றும் சூழல் விவகாரங்கள் பற்றி தீர்க்கமாகப் பேசப்படவேண்டும். இந்த வகையில் இலங்கை அண்மையில் அரசியல் மற்றும் இராணுவ ரீதியில் பெற்றுக்கொண்ட வெற்றிகள் தொடர்பான அனுபவங்களை பகிர்ந்துகொள்ள உச்சி மாநாட்டை ஒரு மேடையாக பயன்படுத்துவதற்கு எதிர்பார்த்திருப்பதாக அமைச்சர் ஜீ. எல். பீரிஸ் குறிப்பிட்டார்.

ரயில் சேவைகள் வழமைக்கு திரும்பின

train.jpgரயில்வே தொழில் நுட்ப உத்தியோகஸ்தர்களின் வேலை நிறுத்தம் கைவிடப்பட்டுள்ள தையடுத்து ரயில் சேவைகள் வழமைக்கு திரும்பி வருவதாக ரயில்வே வர்த்தக அத்தியட்சகர் விஜய சமரசிங்க நேற்று கூறினார்.

சம்பள உயர்வு வழங்குமாறு கோரி ரயில்வே தொழில் நுட்ப உத்தியோகத்தர்கள் கடந்த வாரம் முதல் வேலை நிறுத்தத்தில் ஈடுபட்டனர். இதன் காரணமாக 4 ரயில் சேவைகள் ரத்துச் செய்யப்பட்டதோடு ரயில் சேவையில் தாமதமும் ஏற்பட்டது.

ஆனால் தொழில் நுட்ப உத்தியோகத்தர்கள் நேற்று முன்தினம் (24) வேலை நிறுத்தத்தை கைவிட்டுள்ளதாக விஜய சமரசிங்க கூறினார். இவர்களின் பிரச்சினையை தீர்க்க உரிய நடவடிக்கை எடுக்கப் பட்டுள்ளதாவும் அவர் தெரிவித்தார். இதேவேளை நேற்றும் (25) சில ரயில் சேவைகள் தாமதமடைந்ததாக அறிவிக்கப்படுகிறது. இன்று முதல் வழமை போல ரயில் சேவைகள் இடம்பெறும் என வர்த்தக அத்தியட்சகர் கூறினார்.

புதுக்குடியிருப்பில் விரைவில் மீள்குடியேற்றம் – உடையார்கட்டில் நிலக்கண்ணிவெடி முழுமையாக அகற்றல்

முல்லைத்தீவு மாவட்டம் புதுக்குடியிருப்பு பிரதேசத்தில் விரைவில் மீள்குடியேற்றம் ஆரம்பிக்கப்படவிருப்பதாக மாவட்ட அரசாங்க அதிபர் திருமதி இமெல்டா சுகுமார் தெரிவித்தார். விஸ்வமடு உடை யார் கட்டு பிரதேசத்தினூடாக புதுக் குடியிருப்புக்கான மீள்குடியேற்றத்தை ஆரம்பிக்க தீர்மானித்திருப்பதாகவும் அவர் கூறினார்.

உடையார்கட்டு பிரதேசம் நிலக்கண்ணி வெடிகள் முழுவதும் அகற்றப்பட்டு மீள் குடியேற்றத் துக்கு தயார் படுத்தப்பட்ட நிலையிலுள்ளது.  அதற்கான நடவடிக்கைகளை மாவ ட்ட அரசாங்க அதிபர் அலுவலகம் முன்னெடுத்து வருவதாகவும் இன் னும் இரண்டு மூன்று வாரங் களுக்குள் புதுக்குடியிருப்புக்கான மீள்குடியேற்றப் பணிகளை ஆரம்பிப்பதற்கான சாத்தியக் கூறுகள் இருப்பதாகவும் திருமதி இமெல்டா கூறினார்.

முல்லைத்தீவு மாவட்டத்தில் நிலக் கண்ணி வெடிகள் அகற்றும் பணிகள் துரிதப்படுத்தப்பட்டுள்ளன. கண்ணி வெடிகள் அகற்றப்படும் ஒழுங்கி ற்கேற்ப மீள்குடியேற்றத்தை முன் னெடுக்க நடவடிக்கை எடுத்து வருவதாகவும் அவர் சுட்டிக் காட்டினார். மாவட்டத்தின் நகர பிரதேச சபைக்குள் மாத்திரம் இது வரையில் 1500 குடும்பங்களைச் சேர்ந்த 4 ஆயிரம் பேர் மீளக் குடியேறியுள்ளார்கள்.

இதேவேளை முள்ளியவளை, கள்ளப்பாடு, வண்ணான்குளம் ஆகிய பகுதிகளிலும் தற்போது மீள் குடியேற்றம் நடத்தப்பட்டு வருவதாக மாவட்ட அராசங்க அதிபர் குறிப்பிட்டார்.

பொலிஸ் அகடமி இன்று திறப்பு

police.jpgநீர் கொழும்பு கட்டான பிரதேசத்தில் புதிதாக நிர்மாணிக்கப் பட்டுள்ள பொலிஸ் அகடமி இன்று 26ம் திகதி காலை உத்தியோக பூர்வமாக திறந்து வைக்கப்படவு ள்ளது.

பொலிஸ் மா அதிபர் மஹிந்த பாலசூரியவின் தலைமையில் நடை பெறவுள்ள இந்நிகழ்வில் பாதுகாப்புச் செயலாளர் கோத்தாபய ராஜபக்ஷ பிரதம அதிதியாக கலந்து கொண்டு திறந்து வைக்கவுள்ளார்.

கட்டானயிலுள்ள பொலிஸ் பயிற்சி கல்லூரிக்குச் சொந்தமான 39 ஏக்கர் நிலப்பரப்பில் இந்த பொலிஸ் அகடமி புதிதாக நிர்மாணிக்கப் பட்டுள்ளதாக பொலிஸ் ஊடகப் பேச்சாளர் பொலிஸ் அத்தியட்சகர் பிரிஷாந்த ஜயகொடி தெரிவித்தார்.

புலனாய்வு துறை தொடர்பான பாட நெறிக்கு தேர்ந்தெடுக்கப்பட்ட 200 பொலிஸார் இன்று உத்தியோகபூர்வமாக தமது கற்கை நெறியை ஆரம்பிக்கவுள்ளனர்.

ஐ.பி.எல். – சென்னை அணி சாம்பியன்

chenai_super.jpgஐ.பி.எல்.  20 ஓவர் கிரிக்கெட் போட்டியின் இறுதி ஆட்டத்தில் சென்னை சூப்பர் கிங்ஸ்- மும்பை இந்தியன்ஸ் அணிகள் மோதின.  இந்த போட்டியில் நாணயசுழற்சியில் வென்று முதலில் துடுப்பாடிய சென்னை அணி 20 ஓவர்களில் 5 விக்கெட் இழப்புக்கு 168 ஓட்டங்கள் எடுத்தது. சுரேஷ் ரெய்னா அதிரடியாக விளையாடி 35 பந்துகளில் 3 பவுண்டரி, 3 சிக்சர்களுடன் 57 ஓட்டங்கள்  எடுத்தார்.

அடுத்து களம் இறங்கிய மும்பை அணி 20 ஓவர்களில் 9 விக்கெட் இழப்புக்கு 146 ஓட்டங்கள் எடுத்தது. இதையடுத்து சென்னை அணி 22 ஓட்டங்கள் வித்தியாசத்தில் வெற்றி பெற்று சாம்பியன் பட்டத்தை தட்டி சென்றது.  அதிகபட்சமாக சச்சின் தெண்டுல்கர் 45 பந்துகளில் 7 பவுண்டரிகளுடன் 48 ஓட்டங்கள்  எடுத்தார். நாயர் 26 பந்துகளில் 27 ஓட்டங்களும் ராயுடு 14 பந்துகளில் 21 ஓட்டங்களும் எடுத்தனர். கடைசி கட்டத்தில் பொல்லார்டு அதிரடியாக விளையாடி 10 பந்துகளில் 3 பவுண்டரிஇ 2 சிக்சர்களுடன் 27 ஓட்டங்கள் எடுத்தார்.

கட்டுகஸ்தோட்டை உப்புவெளியில் ஆயுதங்கள் மீட்பு

கட்டுகஸ்தோட்டை மற்றும் உப்புவெளி ஆகிய பகுதிகளில் மறைத்து வைக்கப் பட்டிருந்த ஆயுதங்களை பொலிஸார் மீட்டிருப்பதாக பொலிஸ் ஊடகப் பேச்சாளர் சிரேஷ்ட பொலிஸ் அத்தியட்சகர் பிரிசாந்த ஜயக்கொடி தெரிவித்தார்.

எஸ். எஸ். ஜி. 87 ரக 05 கைகுண்டுகள் அடங்கப் பெற்ற இரும்புப் பெட்டியொன்றை கட்டுகஸ்தோட்டை பொலிஸார் யடிகலபல மஹதென்ன எனும் காட்டுப் பகுதியிலுள்ள கால்வாய் ஒன்றிலிருந்து சனிக்கிழமை கண்டெடுத்துள்ளனர்.

இதேவேளை, உப்புவெளி பிரதேசத்திலுள்ள காடொன்றுக்குள்ளிலிருந்து பொலிஸார் ரி-56 ரக துப்பாக்கி எல். எம். ஜி. கிரனேற் கைக்குண்டு உள்ளிட்ட சில வகை ஆயுதங்களை கைப்பற்றியுள்ளனர்

நாவலப்பிட்டி வாக்கு மோசடி: ஒழுக்காற்று விசாரணைக் குழு சுதந்திரக் கட்சியால் நியமிப்பு

election_ballot.jpgபொதுத் தேர்தல் வாக்களிப்பு தினத்தில் நாவலப்பிட்டி தொகுதியிலுள்ள 37 வாக்குச் சாவடிகளில் இடம்பெற்ற மோசடிகள் குறித்து விசாரிக்கவென ஸ்ரீ லங்கா சுதந்திரக் கட்சி ஒழுக்காற்று விசாரணைக் குழுவொன்றை நியமித்துள்ளது. ஜனாதிபதி மஹிந்த ராஜபக்ஷவின் ஆலோசனைக்கமைய கட்சியின் செயலாளரும், அமைச்சருமான மைத்திரிபால சிறிசேன இந்த குழுவை நியமித்திருக்கின்றார்.

ஐந்து பேரை உள்ளடக்கியுள்ள இந்த ஒழுக்காற்று விசாரணைக்குழுவுக்கு சட்டத்தரணி டப்ளியு. ஜி. கருணாஜீவ தலைவராக நியமிக்கப்பட்டுள்ளார். இக்குழுவில் சட்டத்தரணிகள் சாலிய மெத்திவ், சந்ரா பெர்னாண்டோ, பேராசிரியர் ரோஹண லக்ஷ்மன் ஆகியோர் உறுப்பினர்களாக இடம்பெற்றுள்ளனர். இக்குழுவின் செயலாளராக சட்டத்தரணி சம்பாணிபத்மசேகர நியமிக்கப்பட்டுள்ளார்.

இதேவேளை புதிய அமைச்சுப் பதவியைப் பெற்றுள்ள அமைச்சர் சுசில் பிரேமஜயந்த மல்வத்தை மற்றும் அஸ்கிரிய பீடாதிபதிகளை நேற்று நேரில் சந்தித்து ஆசிகளைப் பெற்றுக்கொண்டார். இதனைத் தொடர்ந்து ஊடகவி யலாளர்களைச் சந்தித்த அமைச்சர் சுசில் பிரேம ஜயந்த் கட்சியின் கொள்கைகளையும் ஒழுங்குகளையும் சரியான முறையில் முன்னெடுத்துச் செல்ல தவறியதினாலேயே கண்டி மாவட்டத்திலிருந்து தெரிவான பாராளுமன்ற உறுப்பினர்களுக்கு இதுவரையும் அமைச்சுப் பதவிகள் வழங்கப்படவில்லையென தெரிவித்தார்.

IPL : சிறந்த ‌வீரராக டெண்டுல்கர் தெரிவு

sachin.jpgஐபிஎல் இன் சிறந்த சிறந்த துடுப்பாட்ட வீரராக சச்சின் டெண்டுல்கார் விருது வழங்கி கௌரவிக்கப்பட்டார் அறிமுக வீரராக கிரோன் போலர்ட் தெரிவு செய்யப்பட்டார். சிறந்த பந்து வீச்சாளராக பிரான் ஓயா , சிறந்த வீரராக ஹர்பஜன் சிங்கும், உறுதியான வீரராக ஜக் கலிசும் விருது பெற்றுள்ளனர்.

2008ஆம் ஆண்டு ஐபிஎல் இன் சிறந்த வீரராக பிரண்டன் மக்லம் தெரிவு செய்யப்பட்டதுடன், 2009ம் சிறந்த வீரராக அனில் கும்ளே விருது பெற்றார். சிறந்த களத்தடுப்பாளர் விருதினை ஏ.பி.டி வில்லியர்ஸ் பெற்றதுடன், சிறந்த மைதானத்திற்கான விருது பெங்களுர் சின்னசுவாமி மைதானத்திற்கும், அனுபவம் வாய்ந்த மைதானத்திற்கான விருதினை மும்பை டிவை பற்றீல் மைதானத்திற்கும் வழங்கப்பட்டது.

சிரேஷ்ட ஊடகவியலாளர் செல்லையா காலமானார்

பிரபல சிரேஷ்ட ஊடகவியலாளர் தெரணியகலை விஸ்வநாதன் செல்லையா தமது 81 ஆவது வயதில் நேற்று ஞாயிற்றுக்கிழமை காலமானார். வீரகேசரி, டெய்லிமிரர், ஐலண்ட், டெய்லி நியூஸ் ஆகிய பத்திரிகைகளின் செய்தியாளராக நீண்டகாலம் பணிபுரிந்தார்.
முன்னாள் அமைச்சர் வீ.குமாரசாமியின் பிரத்தியேக செயலாளராகவும் சிலகாலம் கடமை புரிந்துள்ளார். தினக்குரல் தெரணியகலை செய்தியாளர் நித்தியானந்தனின் தந்தையான இவரின் இறுதிச் சடங்குகள் நாளை செவ்வாய்க்கிழமை மாலை தெஹியோவிட்ட பொதுமயானத்தில் நடைபெறவுள்ளது.