05

05

பொது தேர்தல் – 6 மே 2010 UK: முஹம்மத் எஸ்.ஆர். நிஸ்த்தார்

election.jpgநான்காம் முறையாக தொங்கு பாராளுமன்றம் (hung Parliament) ஒன்றை அமைப்பதுக்கான தேர்தலாகவே இத்தேர்தல் பலராலும் பார்க்கப்படுகின்றது. இதை சரியாக விளங்கிக் கொண்ட, எதிர்கட்சி தலைவர் டேவிட் கமமொரன் (David Cameron) இத்தகைய ஒரு சூழ்நிலையை ஏற்படுத்தி விடவேண்டாம் என வாக்காளர்களை கெஞ்சாக் குறையாக கேட்கிறார். இவரை பொறுத்தவரை தொங்கு பாராளுமன்றம் அல்ல பிரச்சினை. யாருடன் கூட்டு சேர்வதென்பதே இவரை அரித்துக் கொண்டிருக்கும் விடயம். அறுதி பெரும்பான்மை இல்லாத நிலையில், அதாவது 326 ஆசனங்கள் கிடைக்காவிட்டால், ஆகக்கூடிய பெரும்பான்மையில் ஆட்சி செய்வதென்பது சர்க்கஸ்காரர்கள் (circus) கயிற்றில் நடக்குமாப் போல் சாதாரண மனிதன் செய்யும் முயற்சி போன்றது. விழுவது நிச்சயம். எனவே பழமைவாத கட்சி(Conservertive) கேட்பது அறுதி பெரும்பான்மை. ஆனால் கிடைக்கத்தான் வாய்ப்பில்லை.

ஆளும் தொழிற்கட்சியோ (Labour) மீண்டும் ஒரு சந்தர்ப்பம் கொடுத்தால் இன்றைய முக்கிய பிரச்சினையான பொருளாதார பிரச்சினையை சீர்செய்து விடுவோம் என்கின்றனர். கோர்டன் பிறவுன் (Gordon Brown) மிகவும் பணிவாக எமக்கு இப்படி சொல்கின்றார், ’13 வருடங்கள் தன் கட்சியால் செய்ய முடியாது போனதை (அல்லது தான் செய்ய எத்தனிக்காத விடயத்தை) அடுத்த ஐந்து வருடத்தில் செய்து முடிப்பாராம்’. மந்திரத்தால் மாங்காய் பழுக்க வைப்பதை அனேகமாக மக்கள் விரும்புவதில்லை. இது அவருக்குப் புரியவில்லை போலும்.

பந்தயத்தில் நம்பிக்கையோடு ஓடும் அடுத்த குதிரை தாராளவாத ஜனநாயக (Liberal Democratic) கட்சி. அதன் தலைவர் நிக் க்லெக்( Nick Clgge ) ஒரு விடயத்தை தெளிவாக சொல்கிறார் (தேசம்நெற்காரர் புலி ஆதரவாளர்களிடம் சொல்வது போல்) ஒளிவு மறைவு வேண்டாம், பொருளாதார பிரச்சினை பொதுபிரச்சினை ஒன்றாக இருந்து பேசுவோம். குடிவரவு பிரச்சினை ஏற்கனவே புரையோடிப்போன பிரச்சினை அதை ஏற்றுக் கொண்டு பரிகாரம் தேடுவோம். அத்தோடு இந்த இரண்டு பெரிய கட்சிகளும் நாட்டை குட்டிச் சுவராக்கிவிட்டனர். நாட்டை என்னிடம் தாருங்கள், பரிகாரம் என்னிடம் உண்டு என்கிறார். மக்கள் குழம்பி போய்விட்டார்கள்.

13 வருடம் உண்மைதான், பிறவுன் என்ன செய்வார் பாவம். இந்த பிளயார் (Blair) அடித்துவிட்டு ஓடி (hit and run) விட்டார். ஆகவே படைகளை ஈராக்கில் இருந்தும், ஆப்கானிஸ்தானிலிருந்தும் இலகுவில் விலக்கிக்கொள்ள முடியாது. அதாவது ராணுவ செலவை கட்டுப்படுத்துவது என்பது யோசிக்கவே முடியாத விடயம். பிறவுனின் கெட்ட காலமோ என்னவோ உலக பொருளாதார சரிவு (economic downturn) வேறு. சின்ன, சின்ன நாடுகளை தூக்கி விடவேண்டாமா என்ன? உலக தலைமைத்துவ நாடுகளில் ஒன்றல்லவா யூ.கே. ஓபாமா கூட தனது எதிரி சீனாவிடம் கடன் வாங்கி அமெரிக்க பொருளாதாரத்தை சீர் செய்தார்தானே என்று மனுசன் கஸ்டப்பட்டு பல நாடுகளிடம் கடன்வாங்கி மற்ற நாடுகளையும் தூக்கிவிட்டு, தன் நாட்டின் பொருளாதாரத்தையும் சீர்செய்து வருகிறார். அப்புறம் ஏன் அவருக்கு மீண்டும் ஒரு சந்தர்ப்பம் வழங்கக்கூடாது என்று மக்கள் யோசிக்கும் போதுதானே இந்த பத்திரிகைகள், குறிப்பாக கார்டியன் (Guardian), தி ஒப்சேவர் (The Observe ) என்பன நிக் க்லெக்குக்கு ஆதரவு கொடி காட்டிவிட்டார்கள்.

லிபரல் டெமொக்ரடிக் கட்சி மெது மெதுவாக வளர்ந்து வரும் கட்சி. இவர்களின் வளர்ச்சி பெடி அஸ்ட்ரோன் (Peddy Astron), சார்ல்ஸ் கெனடி ( Charles Kennedy ) ஆகியோரின் தலைமையில் மிகவும் உறுதியாக மேல் நோக்கிச் சென்றது. இப்போது அறுவடை காலம். நிக் க்லெக்கின் ராசிபலன் இலக்கம் 10ல் கண் வைத்துவிட்டார். இருந்தும் இலக்கம் 10 நிக் க்லெக்கு சற்று பெரியது.

அரசர் 2ம் சார்ல்ஸ்சின் (King Charles II) பரம்பரையில் வந்த நான் பிரதமர் பதவியை கை நழுவவிடுவதா? ஆண்ட பரம்பரை மீண்டும் ஆள நினைப்பதில் (TULF போல) என்ன தவறு என்று நேரடியாக கேட்காவிட்டாலும் நாடு குட்டிச் சுவராகிவிட்டது. தொழிற்கட்சியே அதற்கு காரணம். ஐரோப்பிய ஒன்றியம் (European Union) எம்மை சகல வழிகளிலும் கட்டுப்படுத்துகிறது. நாம் என்ன யாருக்கும் கட்டுப்பட்டு நடக்க வேண்டியவர்களா? நாட்டில் அதிகரித்துள்ள குற்றச் செயல்களை குறைக்க வேண்டாமா? என்று கேள்விகளை அடுக்கிக்கொண்டே செல்கிறார் டேவிட் கமரொன். கடைசி 24 மணித்தியாலத்திலும் தூக்கமின்றி பிரச்சார வேலைகளில் ஈடுபட்டுள்ளார். இருந்தும் இலக்கம் 10 கை நழுவியே செல்கிறது.

யார் யார் எது செய்தாலும் முடிவு பின்வருமாறு அமையுமென்றே எதிர்பார்க்கப்படுகின்றது. பழைமைவாத கட்சி முதலாவது இடத்துக்கும், இரண்டாம் மூன்றாம் இடங்களுக்கு முறையே லிப்.டெம், தொழிற்கட்சி தள்ளப்படும் அல்லது தொழிற்கட்சி இரண்டாம் இடதுக்கும், லிப்.டெம் மூன்றாம் இடத்துக்கும் இடம் மாறலாம். அல்லது இந்த ஒழுங்கு கூட மாற்றமடைந்தாலும் தாராளவாத ஜனநாயக கட்சியின் இணைவு இல்லாமல் யாரும் இம்முறை ஆட்சி அமைக்க முடியாது என்பதனால் இத் தேர்தலில் லிப். டெம் மிக முக்கியம் இடம் பெறுகிறது.

எந்த கட்சி ஆட்சி அமைத்தாலும் பொது சேவைகளுக்கான செலவினங்கள் மிகவும் குறைக்கப்படும் என்பதாலும், வரிகள் அதிகரிக்கப்படும் சாத்தியம் மிக அதிகமாகக் காணப்படுவதாலும், நாடு இன்னுமொறு 4, 5 ஆண்டுகளுக்கு மந்த கதியிலேயே பொருளாதாரத்தில் மேல்நோக்கிச் செல்லும் என்பதாலும் இந்த இரண்டு பெரிய கட்சிகளின் கொள்கை விளக்கங்களுக்கு சற்று மாற்றமாக பேசும் லிப்.டெம் எதிவரும் அரசாங்கத்தை தீர்மானிக்கும் அளவுக்கு போதியளவு வாக்குகள் பெறும் என்பதில் எந்த சந்தேகமும் இல்லை.

அரச செலவீனங்கள் தொடர்பான நிக் க்லெக்கின் வாதம், ஆப்கானிஸ்தனில் இருக்கும் ஜக்கிய இராட்சிய படைகளை மீளப் பெறுவதின் மூலமும், ட்ரெய்டன் (Trident missile) அணு ஏவுகணை திட்டத்தை கைவிடுவதின் மூலமும் பெருந்தொகை பணத்தை மீதப்படுத்தலாம் என்பதாகும். அந்த பணத்தை தேசிய சுகாதார சேவைக்கும் (NHS ), கல்வி அபிவிருத்திக்கும் பயன்படுத்தலாம் என்பதும் க்லெக்கின் திடமான வாதாட்டம். அதேபோல் கறுப்பு பொருளாதாரத்திற்கு (black economy)காரணமாக இருக்கும் சட்டபூர்வமற்ற குடிவரவு (illegal immigrants) காரர்களை வெளியே கொண்டு வருவதன் மூலம் அவர்களை நாட்டின் பொருளாதாரத்திற்கு பங்களிப்பு செய்ய ஏற்பாடு செய்வதும், இனிமேல் இந்த சட்ட விரோத குடியேற்றகாரர்களை கட்டுப்படுத்த சரியான திட்டமிடலை செய்ய இது பெரிதும் வழிவகுக்கும் என்பதுமாகும். இந்த வாதம் அனேகமாக வாக்காளர் மத்தியில் பல கேள்விகளை ஏற்படுத்தியுள்ளதை நாம் அலட்சியம் செய்து விட முடியாது. மனிதன் வெளிப்படையாக பேசுகிறார். ஆனால் “வெளிப்படையாக பேசல்” என்ற தன் கொள்கையில் விடாப்பிடியாக இருப்பாரா?, பேசுவதுடன் மாத்திரம் நின்று விடுவாரா? அல்லது செயல்வீரனாக திகழ்வாரா? என்பதுதான் அந்த கேள்விகள்.

நான் எந்த பேயுடனும் சேர்ந்து பணியாற்ற தயங்கமாட்டேன் என்று நிக் க்லெக் கூறினாலும், கொள்கை ரீதியில் பழைமைவாதிகளுடன் சேர்ந்து ஆட்சி அமைக்க முன்வரமாட்டார். பொதுவாக மாணவர்களின் அபிமானத்தைப் பெற்றுள்ள நிக் க்லெக் தொழிற்கட்சியுடன் கூட்டு சேர்ந்து ஆட்சி அமைக்க தயார் நிலையில் உள்ளார். தொழிற்கட்சியும் வேறு தேர்வு இல்லாமல் அல்லது கொள்கை ரீதீயில் சற்று ஒத்துபோக கூடியவர்கள் என்ற ரீதியில் லிப்.டெம் உடன் சேர்ந்து ஆட்சி அமைக்க தீர்மானித்து விட்டனர்.

இருந்தும் இங்கே ஒரு அரசியல் விளையாட்டு நடைபெறவுள்ளதை யாரும் கண்டுகொள்ளாமல் இருக்கமுடியாது. அதாவது; தொழில் கட்சி மூன்றாம் இடத்தை பெற்று லிப்.டெம் முடன் சேர்ந்து அரசாங்கம் அமைக்க நேரிடும் பட்சத்தில், நிக் க்லெக்கின் முக்கிய மூன்று கோரிக்கைகள் 1. பிரதமர் பதவி, 2. நிதி மந்திரி பதவி (Chancellor of Exchequer), 3. வெளிநாட்டு அமைச்சு பதவி என்பன லிப்.டெம் முக்கு தரப்பட வேண்டும் என்பதாகும். தொழிற்கட்சி இரண்டாம் இடத்தை பெறும் போது நிக் க்லெக்கின் இரண்டு கோரிக்கைகள் 1. நிதி மந்திரி, 2. வெளி நாட்டலுவல்கள் அமைச்சு பதவிகள். இந்த கோரிக்கைகள்தான் தொழிற்கட்சிக்குள் பிரச்சினையை தோற்றுவிக்கப் போகிறது.

தொழிற்கட்சி மூன்றாமிடத்தை பெறும்போது, நிக் க்லெக்கின் கோரிக்கையை ஏற்று ஆட்சியில் தொடர்ந்தும் இருக்க கோர்டன் பிறவுனை வெளியேற்றவும் பலர் தயாராகவுள்ளனர். அவர்களில் மண்டெல்சன் பிரபு ( Lord Mandelson), உதவி பிரதமர் ஹரியட் ஹார்மன் (Harriet Harman ), நீதி அமைச்சர் ஜக் ஸ்ட்ரோ (Jack Strow ), வெளி நாட்டமைச்சர் டேவிட் மிலபண்ட் (David Milaband ) ஆகியோர் முக்கியமானவராவர். ஒரு வேளை க்லெக்கின் கோரிக்கை நிறைவேறலாம். அது அவர் கட்சி பெறும் ஆசனங்களைப் பொறுத்தது. அப்படியானால் கோர்டன் பிறவுனின் நிலை? அம்போ.

ஆனால் தொழிற்கட்சி முதலாம் அல்லது இரண்டாம் இடத்திற்கு வரும் போது, லிப்.டெம் முக்கு நிதிஅமைச்சு பதவி கொடுத்தாவது அக்கட்சியை தம்பக்கம் வைத்திருக்க வேண்டிய தேவை தொழிற்கட்சிக்குண்டு. அதைவிட அதிகம் எதிர்பார்ப்பது க்லெக்குக் ஆபத்தாக முடியாவிட்டாலும் லிப்.டெம் மின் நிலைமையை கஸ்டத்துக்குள்ளாக்கும் அபாயம் உள்ளது. இருந்தும் ஆளும்கட்சி ஆசனமா அல்லது எதிர்கட்சி ஆசனமா என்ற கேள்விக்கு முகம்கொடுக்க நேரிடும்போது தொழிற்கட்சி கோபத்துடனும், சலிப்புடனும் லிப்.டெம் மை அரவணைத்தே செல்லும். நிக் க்லெக் இந்த சந்தர்ப்பத்தை தவற விடமாட்டார் என்றே தெரிகிறது. எனவே பழைமைவாத கட்சி ஆட்சிக்கு வருவதை தவிர்க்கும் வகையில் தொழிற்கட்சி, லிப்.டெம் கூட்டணி தவிர்க்கப்படலாகாது. ஏற்பாடுகளும் அதை நோக்கியே போகின்றன.

ஆக தொழிற்கட்சிக்கு எப்படியாவது ஆட்சியை தக்கவைக்க வேண்டும், பழைமைவாத கட்சியை பொறுத்தவரை 13 வருடங்களுக்குப் பின்னும் ஆட்சியை கைப்பற்றவில்லை என்றால் அந்த கட்சியின் மீதான நம்பிக்கையீனம் அதிகரிக்கும், கமெரோனின் மாணவபருவ கனவு சுக்கு நூறாகிவிடும். ஆனால் க்லெக்குக்கோ தனது கோரிக்கைகளை எந்த அளவுக்கு அதிகமாக அடையலாம் என்பதை தவிர வேறு பிரச்சினைகள் இருப்பதாக தெரியவில்லை. ஏனெனில் அவர்தான் அடுத்த அரசாங்கத்தை தீர்மானிப்பவர் (king maker) .

யார் ஆட்சிக்கு வரினும் எதிர்வரும் ஐந்து ஆண்டுகள் கடினமானவை. ஆட்சியாளர்களுக்கு மாத்திரமல்ல, பொது மக்களுக்குமே. சமூகநல உதவியில் வாழ்வோர் இப்போதே தொழில் தேட ஆரம்பிக்க வேண்டும். பிரஜா உரிமை பெற விரும்புவோர் நல்ல பிள்ளைகளாய் இருக்கப் பழக வேண்டும். ஆங்கிலம் தெரியாதோர் பிரஜாவுரிமை பற்றி யோசிக்கத் தேவையே இல்லை. கிட்டடியில் ஓய்வூதியம் பெற யோசித்தோர் உடனடியாக யோசினையை மாற்றி 70 வயது வரையினும் மாரடிக்க வேண்டும். வரி செலுத்துவோர் வயிற்றை சற்று இறுக்கமாக கட்டிக்கொள்ள வேண்டும். மொத்தத்தில் எல்லோரும் சற்று அனுரிசத்து செல்லவேண்டும்.

ஐஸ்லாந்து, கிரீஸ் நிலைமைக்கு நாட்டை இட்டுச் செல்லாது ஏனைய ஐரோப்பிய நாடுகளுக் சமமாக யூ.கே யை கட்டி எழுப்பவேண்டியது அடுத்த கூட்டரசாங்கத்தின் பொறுப்பு மிக்க பணி. செய்வார்கள் என நம்புவோம்.

முஹம்மத் எஸ்.ஆர். நிஸ்த்தார்.

‘தமிழீழம் பெற்றுத் தருவேன் என்றெல்லாம் ஏமாற்றாமல் பிரதேசப் பிரச்சினைகளை முன்வைத்து வாக்குக் கேட்கிறேன்’ சுயேட்சை வேட்பாளர் க வரதீஸ்வரன்

Varatheeswaran_K‘நான் இலங்கையில் பத்து வயதாக இருக்கம் போது தமிழ் மக்களுக்கு எதிராக இலங்கையில் அவசரகாலச்சட்டம் கொண்டுவரப்பட்டது. இன்று எனக்கு 40 வயதாக உள்ள போதும் இன்றும் இலங்கையில் இந்த அவசரகாலச் சட்டம் தமிழ் மக்களுக்கு எதிராக நடைமுறையில் உள்ளது. நான் இம்முறை முதற்தடவையாக உள்ளுராட்ச்சித் தேர்தலில் போட்டியிடுகின்றேன்.’ எனத் தெரிவித்தார் நியூஹாம் கவுன்சிலின் வோல் என்ட் பிரிவில் போட்டியிடுகின்ற வரதீஸ்வரன் கனகசுந்தரம். இவர் மே 6ல் நடைபெறவுள்ள உள்ளுராட்சித் தேர்தலில் சுயேட்சையாகப் போட்டியிடுகின்றார்.
 
தான் வாழும் வாட்டில் 7 ஆயிரம் வாக்காளர்கள் இருப்பதாகவும் அதில் 45 சதவிகிதத்தினரே வாக்களிப்பில் கலந்து கொள்வது வழக்கமானது என்றும் அதாவது அண்ணளவாக 3500 வாக்காளர்களே வாக்களிப்பர் என்றும் இந்த வாக்காளர்களில் 2 ஆயிரம் வாக்களர்கள் மட்டில் தமிழ் வாக்காளர்கள் என்றும் இந்த தமிழ் வாக்காளர்களில் ஆயிரம் வாக்காளர்கள் தனக்கு வாக்களித்தால் தான் உள்ளுராட்சி சபையில் ஒரு அங்கத்தவராகிவிடலாம் என்றும் வரதீஸ்வரன் கனகசுந்தரம் கணக்குப் பண்ணி உள்ளார்.

அவர் தேசம்நெற்க்கு வழங்கிய நேர்காணலின் தொகுப்பு இங்கு பதிவிடப்படுகின்றது.

தேசம்நெற்: நீங்கள் வசிக்கும் கவுன்சிலில் 60 அங்கத்தவர்களில் 54 பேர் லேபர் கட்சியின் அங்கத்தவர்கள் உள்ளனர். அப்படியான லேபர் பகுதியில் நீங்கள் எப்படி சுயாதீன வேட்பாளராக தேர்தலில் நிற்கிறீர்கள்?
 
வரன்: லேபர் பெரும்பான்மையாக உள்ளபோதும் எனது வாட்டில் லேபர் கட்சியினர் கடந்த 13 வருடங்களாக எந்த முன்னேற்றமான காரியங்களையும் செய்யவில்லை. எமது வாட்டில் மேம்பாலம் (Overhead Bridge) ஒன்றுள்ளது. இந்த பாதையே மக்கள் சுலபமாக ரெயில்வே நிலையத்திற்கு போய்வரக் கூடிய பாதை. இந்த மேம்பாலம் அருகே பற்பல சமூகவிரோத செயல்களும் இளைஞர்களின் வழிப்பறிமுதல்களும் குறிப்பாக  பெண்களிடம் கைப்பைகளை பறிப்பதுமாக பல சட்டவிரோத செயல்கள் நடைபெறுகின்றன. இரவில் இந்த மேம்பாலம் ஆபத்து நிறைந்த இடம் இந்த பாலத்திற்கு ஒரு சிசிரிவி பொருத்தும்படி ஆயிரத்திற்கு மெற்ப்பட்ட மக்கள் கையெழுத்துப்போட்டு மனுக்கொடுத்தும் இந்த லேபர் கட்சியின் உறுப்பினர்கள் செவிசாய்க்கவில்லை இந்தப்பிரச்சினை இந்தப்பகுதி மக்களின் முக்கிய விடயமாக உள்ளது. இதைவிட இந்த பிரதேசத்தில் வாகன தரிப்பிட வசதிகளை மேம்படுத்தும்படி லேபர் உறுப்பினர்களிடம் கேட்டும் அவர்கள் இதில் அக்கறை காட்டவில்லை.
 
நான் உள்ளுராட்சி உறுப்பினராக தெரிவு செய்யப்பட்டால் எமது முக்கிய தெருவான Buregers Road இல் உள்ள பெருநிலத்தில் பூங்கா ஒன்றை உருவாக்குவேன், ஒரு கிறமர் பாடசாலையை உருவாக்குவேன், இந்தப் பகுதியில் வசிப்பவர்களுக்கு குறைந்த கட்டண அரச வீடுகளை பெற்றுக் கொடுப்பேன், முக்கியமாக இந்த வாட்டின் பாதுகாப்பினை மேம்படுத்துவேன் என்றும் உறுதியளிக்கிறேன்.
 
தேசம்நெற்:  ஒரு சுயேட்சையாக இவ்வளவு திட்டத்தை நடைமுறைப்படுத்துவது இயலுமான விடயமல்ல. இதற்கான நிதி ஒதுக்கீட்டை செய்வதற்கு பலமான ஆதரவு இருக்க வேண்டும். நீங்கள் ஒரு கட்சி சார்பில் போட்டியிட்டு வெற்றியடையும் பட்சத்தில் அது சாத்தியமாக இருந்திருக்கும்..
 
வரன்: எந்தக் கட்சியில் சேர்ந்தாலும் எனது ஆதரவுப்பலம் தான் முக்கியம். அந்த ஆதரவுப்பலம் எப்படி என்பதை நிரூபித்தால் தான் எந்தக் கட்சியினரும் எனக்கு தமது கட்சியில் இடம் தருவார்கள். நான் கூடிய அளவு லிபரல் கட்சியுடனேயே இணைந்து வேலை செய்ய விரும்புபவன். காரணம் லிபரல் கட்சிதான் தற்போதுள்ள கட்சிகளின் கொள்கைகளில் பரந்துபட்ட மக்களுக்கானதும் குடியேறியவர்களுக்கான அகதிகளுக்கானதுமான கொள்கைகளைக் கொண்டுள்ளது. எனது வட்டாரத்தில் 95 சதவிகிதத்துக்கும் அதிகமானவர்கள் வெளிநாட்டவர்கள், குடியேறியவர்கள். நான் தமிழர்க்கு ஆதரவான கட்சியுன்தான் இணைவேன்.

தேசம்நெற்: உங்கள் கடந்தகால அரசியற் பின்னணிகள் என்ன? 

வரன்: நான் இலங்கையில் 10 வயதாக இருக்கும் போது தமிழ் மாணவ அமைப்பில் இருந்தேன். பின்னர் ஈரோஸ் இன் மாணவ அமைப்பான  மாணவ இளைஞர் அமைப்பிலும் (GUYS) பின்னர் ஈரோஸ் அமைப்பு புலிகளால் 1990ல் தடை செய்யப்படும் வரையில் ஈரோஸ் அமைப்பிலும் இணைந்து வேலை செய்திருந்தேன். பின்னர் கொழும்பில் இலங்கை பொலீசாரால் கைது செய்யப்பட்டு வெலிக்கடை சிறையில் இருந்து பின்னர் விடுதலையாகி இப்போது இங்கே வாழ்கிறேன்.

ஆனால் இங்கிருந்து கொண்டு அங்குள்ள மக்களுக்காக புலம்பெயர்ந்த தமிழீழம் பெற்றுத்தருவேன் என்று ஏமாற்றாமல் உண்மையை சொல்லி அங்குள்ள மக்களின் பிரச்சனையை அங்குள்ள மக்களும் அவர்களின் பிரதிநிதிகளுமே செய்ய வேண்டும். நாம் ஆதரவு அளிக்கலாமேயன்றி அந்த மக்களை நாடு கடந்த தமிழீழம் என்று சொல்லி ஏமாற்றுபவர்கள் போல நடக்கக் கூடாது. இங்கே எமது வாழ்க்கை பிரச்சினைகள் வளர்ந்து விட்டது அதை நாம் முகம் கொடுப்பதும் அவசியமானது.

ஆனால் என்னை கொன்சர்வேற்றிவ் தமிழ் வேட்பாளர் நான் ஒரு இலங்கை அரசின் கைக்கூலி என்றும் தனக்குத்தான் வாக்களிக்க வேண்டும் என்று என்னைப் பற்றி தேவையில்லாத விசமத்தனமான பிரச்சாரத்ததை மேற்கொள்கிறார். இந்த வட்டாரத்தில் உள்ள மக்களுக்கு என்னைப் பற்றி நன்கு தெரியும். அம்மக்களின் தீர்ப்பை ஏற்றுக் கொள்வோம்.
 
தேசம்நெற்: உங்கள் பிரசார வேலைகள் எப்படி நடைபெறுகிறது? மக்கள் ஆதரவு அளிக்கிறார்களா?
 
வரன்: எனது பிரச்சாரத்திற்கு 500 பவுண்ஸ் மட்டிலேயே செலவு செய்தேன். இது எனது சொந்தப் பணத்தில் தான் செய்தேன். அத்துடன் அதுல்யா என்ற தொலைபேசி அட்டை கம்பனியினர் எனக்கு வேண்டிய உதவிகளையும் செய்து தருகிறார்கள், ஜிரிவியில் விளம்பரம் போட்டுள்ளேன்.
 
மக்களிடம் வீடு வீடாக போய் ஆதரவு கேட்டுள்ளேன். மக்கள் ஆதரவு தருவதாக சொல்லியுள்ளார்கள். மக்களின் ஆதரவு நிலையை பார்க்கும்போது குறிப்பாக தமிழ் மக்கள் நல்ல ஆதரவு தருகிறார்கள் போல் தெரிகிறது. காரணம் மற்றய எல்லா தேர்தல் வேட்பாளர்களும் எமது வாட்டில் வசிப்பவர்கள் அல்ல. சிலர் வேறு பிரதேசங்களில் வசிப்பவர்கள். அவர்களுக்கு எமது வட்டாரத்தில் உள்ள பிரச்சினைகளைத் தெரியாது. இவ்வளவு காலமும் எமது தமிழர்களுக்கு பிரதிநிதியாக இருந்தவர்களில் மலையாளியும் வெள்ளை இனத்தவருமே கூட. தமிழர்கள் என்னை தெரிவு செய்வார்கள் என திடமாக நம்புகிறேன்.
 
புலம்பெயர்ந்த நாட்டில் எமக்கு கிடைத்துள்ள ஜனநாயக சுதந்திரத்தை பாராட்டுகிறேன் இப்படியான ஜனநாயக சுதந்திரம் எமது தமிழ் மக்களுக்கு இலங்கையின் வட – கிழக்கு பிரதேசங்களில் முழுமையாக கிடைக்க வழிவகைகளும் செய்யப்பட வேண்டும்.

”நாம் இரு சுதந்திரமான தேசிய இனங்களாக ஒரு நாட்டின் மக்களாக ஒன்றினைந்து நம் தேசத்தைக் கட்டியெழுப்புவோம்!” : சிவஞானம் சிறிதரன் பா உ (ரிஎன்ஏ)

Sritharan_SivagnamTNA_MP(ரிஎன் பா உ சிவஞானம் சிறிதரன் இலங்கைப் பாராளுமன்றத்தில் வழங்கிய கன்னி உரையின் முழுமை இங்கு பதிவிடப்பட்டு உள்ளது. கிளி / கிளிநொச்சி மகா வித்தியாலயம் (கனிஸ்ரா) அதிபரான இவர் கிளிநொச்சி வட்டக்கச்சியைச் சேர்ந்தவர். ‘சிறி வாத்தி’ என தனது பிரதேச மக்களால் அன்புடன் அழைக்கப்படும் இவர் கடந்த தேர்தலிலேயே இலங்கைத் தமிழரசுக் கட்சி சார்பில் போட்டியிட்டு முதற் தடவையாக பாராளுமன்றம் சென்றுள்ளார். இலங்கை செஞ்சிலுவைச் சங்க கிளிநொச்சி மாவட்டக் கிளையின் செயலாளராகவும் பலநோக்குக் கூட்டுறவுச் சங்கம் மனிதநேய அமைப்புகளின் இயக்குநர் சபை உறுபிப்பினராகவும் உள்ளார்.)

கெளரவ சபாநாயகர் அவர்களே மதிப்பிற்குரிய சக உறுப்பினர்களே என்னை தங்கள் பிரதிநிதியாக உங்கள் முன் அனுப்பி இருக்கும் எமது மக்களின் சார்பிலும் எனது சார்பிலும் எனது வணக்கத்தையும் வாழ்த்துக்களையும் முதலில் உங்களுக்குத் தெரிவித்துக்கொள்கின்றேன்.

இறந்துபோன உறவுகளின் எலும்புத்துண்டங்கள் என் பாதங்களை முத்தமிட அழிந்துபோன எம் தேசத்தின் சாம்பல் மேட்டிலிருந்து எனது மக்களின் நிரந்தர பூர்வீக வாழ்வியல் உரிமைக்கான அங்கீகாரம் மக்களின்  அங்கீகாரத்தோடு கிடைக்கும் என்ற நம்பிக்கையோடு தமது கெளரவமிக்க உயிரினும் மேலான உரிமைக்காக காலமெல்லாம் போராடி தவமிருக்கும் தமிழ்பேசும் மக்களிடமிருந்து வருகின்றேன்.

இரண்டாவது உலக யுத்தம் முடிவடையும் தறுவாயில் முற்றுமுழுதாக தோற்கடிக்கப்பட்டு சரணடையும் நிலையிலிருந்த போதிலும் அணுகுண்டு வீச்சுக்குட்படுத்தப்பட்டு இரு பெரும் நகரங்களையும் இரண்டு லட்சம் மக்களையும் இழந்து இன்றுவரை கதிர்வீச்சு தாக்கத்தில் இருந்து முழுமையாக விடுபடாத போதிலும் மீண்டுமொரு பொருளாதார வல்லரசாக இடிச்சு பெருப்பித்திருக்கும் இரசாயண தேசத்தின் அன்பளிப்பான இக்கட்டிடத்தொகுதியில் இருந்து என் கன்னி உரையை எதிர்காலம் பற்றிய உயர்வான நம்பிகையுடன் ஆரம்பிப்பதில் பெருமையடைகின்றேன்.

தோற்கடிக்கப்பட்டவர்கள் எல்லோரும் தோற்றுப்போனவர்கள் அல்லர், அழிக்கப்பட்டவர்கள் எல்லோரும் அழிந்துபோனவர்களும் அல்லர் என்பதற்கு உலக வரலாற்றில் ஏராளமான உதாரணங்கள் உண்டு.

துருக்கிய பேரரசாலும்  ஏனைய ஐரோப்பிய நாடுகளாலும் காலத்திற்கு காலம் அழிக்கப்பட்டு வெறும் கற்குவியலாக்கப்பட்ட உரோமானிய தேசம். அந்தக் கற்களையே தம் மூலதனமாக்கி சீமெந்து உற்பத்தியில் பெரும் சாதனையீட்டி இன்று தலை நிமிர்ந்து நிற்கின்றது. அந்தக் கற்களில் எழுதப்பட்ட சோக காவியங்கள் இன்று வசந்த கீதங்களாக மாற்றப்பட்டுவிட்டன.

ஒரு தேசமோ ஒரு இனமோ இராணுவ ரீதியாக தோற்கடிக்கப்பட்டு பேரழிவுகளுக்கு முகங்கொடுக்கும்போது மீளெழுவதற்கு இன்னுமொரு பாதை உண்டு என்பதை ஜப்பானியர்களும் உரோமானியர்கள் இன்று முழு உலகத்திற்கும் நிரூபித்துவிட்டனர். நாம் பயங்கரவாதிகளாக பட்டம் சூட்டப்பட்டோம்.

உலக வல்லரசுகளும் பிராந்திய வல்லரசும் எமது இராணுவ பலத்தையும் எமது சந்ததியையும் அழிப்பதற்கு உரிய நியாயப்பாட்டை எம்மை பயங்கரவாத பட்டியலில் சேர்த்துக்கொண்டதன் மூலம் ஏற்படுத்திக்கொண்டன. விடுதலைப்புலிகளுக்கு எதிரான போர் என்ற பெயரில் தமிழ்மக்களுக்கெதிராக ஒரு பெரும் யுத்தம் கட்டவிழ்த்து விடப்பட்டது.

பல்லாயிரம் தமிழ்மக்கள் கொல்லப்பட்டனர். இன்னும் பலர் ஆயிரமவர் ஊனமாக்கப்பட்டனர், காணாமல் போனோரின் தொகை இன்னமும் கணக்கிடப்படவில்லை, பலகோடி பெறுமதியான சொத்துக்கள் அழிக்கப்பட்டன. சூறையாடப்பட்டுள்ளன. எல்லாவற்றையும் இழந்து அகதிகளாக வெறுங்கைகளுடன் முட்கம்பி வேலிகளுக்குள் முடக்கப்பட்டோர் தொகை லட்சங்களாக உயர்ந்தது.

இப்பேரழிவின் பின்னால், இலங்கை அரசுக்கு உலக வல்லரசுகளும்  பிராந்திய வல்லரசும் மறைமுகமாகவும் நேரடியாகவும் பெரும்பங்களிப்பை வழங்கின. இன்று இப்போரின் எம்மீது போர்க்குற்றங்கள் இழைக்கப்பட்டதாகவும், மனித உரிமை மீறல்கள் இடம்பெற்றதாகவும் குற்றம் சுமத்தி சிங்கள தேசத்தின் கழுத்தை நெரிக்க, வல்லரசுகள் தங்கள் கரங்களை நீட்டுகின்றன. அதாவது எங்களை அழிக்க உங்களுக்கு தோள்கொடுத்தவர்கள் இன்று உங்களை அடிமைப்படுத்த எங்களைப் பாவிக்கின்றனர்.

மதிப்பிற்குரிய எங்கள் சகோதர்களே எங்களுக்கெதிராக உங்களையும் உங்களுக்கெதிராக எங்களையும் பாவித்து எங்கள் எல்லோரையும் அடிமைகொள்ள முயலும் இவர்களின் வழியில் நாம் தொடர்ந்து விழத்தான் வேண்டுமா?

நாம் ஒரு தேசத்தின் இரு தேசிய இனங்களாக அங்கீகரிக்கப்பட்டதுண்டு. நாங்கள் எங்களையும், எங்கள் தேசத்தையும் தற்காத்துக்கொள்ள வேண்டாமா? இரு இனங்களுக்குமிடையேயான புரிந்துணர்வும் நல்லடக்கமும் வேறு இப்போது அவசியம் என்பதை நீங்கள் புரிந்துகொள்ள வேண்டும். நமது இராணுவ வலிமை அழிக்கப்பட்ட பின்பு, எமது உரிமைகளுக்கான போராட்டம் தோற்கடிக்கப்பட்ட பின்பு, எங்கள் பலவீனமான நிலைமையை மீறி மேலாதிக்கம் செலுத்துவதன் மூலம் ஒரு ஐக்கியத்தை உருவாக்கிவிட முடியும் என்ற ஒரு தவறான பார்வை உங்கள் மீது திணிக்கப்பட்டிருக்கலாம்.

இத்தகையதோர் பார்வையும் அதன் வேர்களில் இருந்து எழுந்த சிந்தனைப்போக்குமே நமது அறுபது வருட போராட்டத்திற்கும் முப்பது வருட ஆயுதப்போராட்டத்திற்கும் அடிப்படை என்ற உண்மையை நீங்கள் உணர்ந்துகொள்ள வேண்டிய காலமிது. மீண்டும் குருதி சிந்தும் நாட்களை உருவாக்கும் காரணிகளை தயவுசெய்து உங்கள் எண்ணங்களிலிருந்து தூக்கி தூர வீசிவிடுங்கள். அடக்குபவர்களுக்கும் அடக்கப்படுபவர்களுக்கும் இடையே ஐக்கியம் நிலவியதாக வரலாறு இல்லை. நிம்மதி கிடைத்ததாக உதாரணங்கள் இல்லை. நாங்கள் நாங்களாகவும் நீங்கள் நீங்களாகவும் கரங்கோத்து நின்று எங்கள் தேசத்தைக் கட்டியெழுப்புவோம்.

எங்கள் கழுத்தை உங்கள் கரங்கள் நெரிக்க வேண்டாம். உங்கள் கரங்களை எங்கள் பற்கள் காயப்படுத்த வேண்டாம். உங்களுக்கென ஒரு பாரம்பரிய வாழ் நிலம், மொழி, பொருளாதாரம், தனித்துவமான கலாச்சாரம் உண்டு. எமக்கும் இவை அனைத்தும் உண்டு என்பதை ஏற்றுக்கொள்ளுங்கள்.

அன்புக்குரியவர்களே இலங்கை மக்களாகிய நாங்களும் நீங்களும் பேரழிவுகளைச் சந்தித்த அதேவேளையில் அந்நிய ஆயுத வியாபாரிகளும் தரகர்களும் கோடிகோடியாக இலாபம் வைத்து எம்மைக் கொள்ளையடித்தார்கள். இதுமட்டுமா போரின்போதும் அதன்பின்பும் எமக்குப் பலவித நெருக்கடிகளைக் கொடுத்து எமது மூலவளங்களையும் மனித உழைப்பையும் கொள்ளையிடுகின்றார்கள்.

புல்மோட்டையில் இல்மனைட் வளமும் கொள்ளையடிக்கப்படுகின்றது. வடக்கின் சுண்ணக்கல் வளமும் எண்ணெய் வளமும் இந்தியாவால் அபகரிக்கப்பட திட்டம் தீட்டப்பட்டுவிட்டன. இன்னொருபுறம் எண்ணெய் வளத்தைக் கொள்ளையிட ரஷ்யா ஒப்பந்தம் எழுதிவிட்டது. சேது சமுத்திர திட்ட மூலம் எமது கடல்வாழ் உயிரினங்களின் வளம் அழிக்கப்படுகின்றது. அமெரிக்காவின் கரங்களுக்கு போய்விட்டது. சுதந்திர வர்த்தக வலயம் அந்நிய முதலீடுகளைக் கவர்தல் என்ற பெயரில் எமது மக்களின் மனித உழைப்பு மலிவான விலையில் கொள்ளையிடப்படுகின்றது.

இலங்கை “பெண்களின் சொர்க்கம்” என்ற விளம்பரம் செய்யப்படும் அளவிற்கு உல்லாசப் பயணத்துறை என்ற பெயரில் கலாச்சார பாரம்பரியமூட்டல்களால் பெண்கள் கேவலப்படுத்தப்படுகின்றனர். பதினான்காயிரத்திற்கு மேற்பட்ட சிறுவர் சிறுமியர் வெளிநாட்டவரின் பாலிய வக்கிரத்திற்கு பலியாகி எதிர்காலத்தை இழக்கின்றார்கள்.

ஆம், எங்கள் மூலவளங்களும் மனித உழைப்பும் கொள்ளையிடப்பட்டு எமது தேசம் ஒட்டாண்டி நிலைக்கு தள்ளப்படுகின்றது. இப்பேராபத்தில் இருந்து எம்மை நாம் மீட்க நாம் உரிமை கொண்டு ஐக்கியப்பட்டு எழுச்சிபெற வேண்டும். இந்நாட்டில் பெரும்பான்மை சிறுபான்மை என எதுவுமில்லை என்பது வெறும் வெற்றுக்கோசமாக இருந்துவிடக்கூடாது. இனியும் அடக்குபவர்களோ அடக்கபடுபவர்களோ இல்லை என மிளிருபடவேண்டும் என்பதே நமது அவாவாகும்.

நிற்க, இப்படியான ஒரு புறச்சூழலில் இப்போரின் கொடுமைகளையும் அதன் பின்னரான காலத்தில் கொடுமைகளையும் அனுபவித்துக்கொண்டிருக்கும் கிளிநொச்சி முல்லத்தீவு மாவட்ட மக்களின் இடர்களை கவனித்து களைவதில் முக்கிய பணி எனக்கு அதிகமாக உள்ளதாகவே நான் உணர்கின்றேன். நாம் போருக்கு நேரடியாகவே முகங்கொடுத்தவர்கள். இந்த போர் எங்கள் மீது விமானங்கள் குண்டுகளை வீசியது, எறிகணைகள் எங்கள் உடல்களை துளைத்தன. துப்பாக்கி வேட்டுக்கள் எங்களை துளை போட்டன. மரணம் எங்களை விரட்ட விரட்ட இடம்பெயர்ந்து இடம்பெயர்ந்து ஓடினோம், போகுமிடம் தெரியாமலேயே வெட்டவெளிகளில் வீதியோரங்களிலும் கூடார வாழ்க்கையை ஏற்றோம். மீண்டும் மீண்டும் போர் எங்களை துரத்திய போதும் ஓடினோம். இருப்பினும் மரணங்களைத் தவிர்க்க முடியவில்லை. உடலுறுப்புக்கள் இழப்பதை தவிர்க்க முடியவில்லை. இறந்த உடல்களை எடுத்து புதைக்கவும் வழியின்றி ஓடினோம். உணவில்லை குடிக்க நீரில்லை இயற்கை கடன்களை கழிக்க இடமில்லை, அடுத்த நிமிட உயிர்வாழ்வு பற்றிய நம்பிக்கைக்கு இடமில்லை, முள்ளிவாய்க்காலுக்குள் மூன்றரை லட்சத்திற்கு மேற்பட்டோர் முடக்கப்பட்டோம்.

உலகின் நற்பண்புகளுக்கும் மனிதாபிமானமாக காட்டப்பட்ட நடவடிக்கைகள் எங்களை மரணக்குழிகளுக்குள் தள்ளின. இறந்தவர் போக எஞ்சியோர் நந்திக்கடல் தாண்டினோம். வவுனியாவில் அகதிமுகாமுக்குள் எங்கள் வாழ்வு முடக்கப்பட்டது. உணவுக்களஞ்சியமான வன்னிமண்ணில் உற்பத்தியைப் பெருக்கி மற்றவருக்கு உண்டி கொடுத்த நாம் ஒருபிடி சோற்றுக்கு கையேந்தி வரிசையில் நின்றோம். இன்று எம்மில் ஒரு பகுதியினர், ஆறு தகரங்களுடனும் ஆறுமாத நிவாரண பொருட்களுடனும் மீள்குடியேற்றம் செய்யப்பட்டோம். ஏனையோர் இன்னும் முகாம்களில். போர் முடிந்து ஓர் வருடம் ஓடிப்போய்விட்டது. எம் துயரங்கள் முடிய இன்னும் எத்தனை வருடங்கள் போகும் என்பது எமக்குள்ள கேள்வி. போராளிகள் என்ற பெயரில் இன்னமும் பல ஆயிரமவர் தடுப்புமுகாம் அவலங்களுக்குள் தவிக்கின்றனர். பெற்றோர்கள் தம் பிள்ளைகளைப் பார்த்துவிட மணிக்கணக்காக மழையிலும் வெயிலிலும் காத்துநிற்கின்றனர். இன்னும் எத்தனையோ பெண்களும் பிள்ளைகளும் எங்கையென்று அறியமுடியாது உறவினர் அலைந்து திரிகின்றனர் . ஒவ்வொரு நாளும் காயப்பட்டு சிகிச்சைக்காக உலங்குவானூர்தியில் ஏற்றப்பட்ட எத்தனையோ பேரை தேடி விளம்பரங்கள் வெளிவந்து கொண்டிருக்கின்றன.

இச்சபையில் பெருமைக்குரிய உறுப்பினர்களே ஒரு ஜனநாயக தேசத்தில் இதுதான் எங்கள் வாழ்வு. இதிலிருந்து நாம் மீளெழ வேண்டும். அந்நிய தேசங்கள் நமது நாட்டின் மூலவளங்களையும் மனித வளங்களையும் கொள்ளையடிப்பதுடன் எமது இறைமையை நிறைவேற்றுவதுடன் பாதுகாக்கவும் நாம் உங்களுடன் ஒன்றிணைய காத்திருக்கின்றோம். ஆனால் நாம் மனிதர்களாக வாழும்போது மட்டும்தான் அது சாத்தியப்படும் என்பதை நீங்கள் புரிந்துகொள்ள வேண்டும். நாம் எல்லோரும் இந்நாட்டு மக்களென மாண்புமிகு ஜனாதிபதி அவர்களின் வார்த்தைகளை நேசிக்க முயலுங்கள். உரிமை பறிக்கப்பட்டவர்களும் உரிமை பறிப்பவர்களும் ஒரே சகோதரர்களாக எப்படி வாழமுடியும்? எங்கள் சகோதர்களே மக்கள் சார்பில் மீண்டும் நான் உங்களைக் கேட்பது, மீண்டும் எங்கள் வாழ்வை ஆரம்பிக்க எமக்கு வழிவிடுங்கள். உருளும் உலகப்பந்தின் இந்த அழகிய மாங்கனித் தீவிலே கிறிஸ்துவுக்கு முற்பட்ட கால வரலாற்று சிந்தனையை கைவிட்டு, இருபத்தோராம் நூற்றாண்டுக்குரிய நவீன சிந்த்னையின்படி இனப்பிரச்சினையை அணுகவேண்டும். சிங்கள மக்களும் தமிழ்பேசும் மக்களும் இலங்கைத் தீவின் இணை உரிமையாளர்களும் இணைப் பங்காளர்களும் என்ற மனபாங்குடன் ஒரு புதிய அரசியலை அணுக அரசாங்கம் தயாராக வேண்டும்.

தற்போது சிங்கள மக்களிடம் தமிழரை வெற்றிகொண்ட மனப்பாங்கும், தமிழரிடம் வேதனையும் வெறுப்பும் நிறைந்த நிலையும் காணப்படுகின்றது. ஒரே நாடு ஒரே மக்கள் என்று சொல்லிக்கொண்டே பூநகரி வெற்றி விழாவையும், கிளிநொச்சி வெற்றி விழாவையும், முள்ளிவாய்க்கால் வெற்றி விழாவையும் கொண்டாடிய தினமும்இ  இனிவரும் நாட்களில் மே மாதம் 12ம் திகதி முதல் 18ம் திகதிவரை கொண்டாடப்படவுள்ள இராணுவ வெற்றிவிழாவும், தமிழர்களின் மனங்களை எப்படி உடைத்து சிதறிடிக்கப்போகின்றது என்பதை சிந்தியுங்கள். இராணுவத்தால் தீவு நிரம்பி வழிந்து ஒன்றுபட்டது போல் காணப்பட்டாலும், மனத்தால் தீவு இரண்டுபட்டே இருக்கின்றது. புத்தபகவான் பரிநிர்வாணம் அடைவதற்காக தவமிருந்தார் என்ற மகிமை சிங்கள மக்களுக்கு தெரியும்.

சுதந்திர இலங்கையில் இதுவரை இரண்டரை லட்சத்திற்கும் மேலான உயிர்களை இழந்து தமிழ்மக்கள் தமது உரிமைக்காக தவமிருக்கின்றார்கள் என்ற உண்மையை சிங்கள சகோதரர்களும் இந்த உலகமும் புரியும் நாள் வந்திருக்கின்றது. தன் சொந்த சகோதர இனத்துடன் அதிகாரங்களைப் பங்கிட்டுக் கொள்ள தயாரில்லாமல், அந்நிய நாடுகளிடம் கையேந்தி தனது சொந்த தமிழ் மக்களுக்கெதிரான அரசியலை வலைவீசி வரும் அரசாங்கங்கள் நடத்தியதன் விளைவாய் இலங்கைத் தீவை அந்நிய அரசுகளின் காலடிக்குள் சிக்குண்டிருப்பதையும் ஆட்சியாளர்கள் உணர இன்னும் எவ்வளவு காலம் எடுக்குமோ தெரியாது.

ஒரு இனத்தை எந்த இனம் ஒடுக்குகின்றதோ அந்த இனமும் அமைதியாக இருக்க முடியாது அந்த நாடும் சுபீட்சம் அடைய முடியாது. அத்துடன் எம் ஓரினத்தை ஒடுக்க எடுத்த நடிவடிக்கைகளின் விளைவால் அந்நிய தேசங்களிடம் அடிமைப்பட்டு போகவும் நேரும். சுதந்திரமும் சுபீட்சமும் நிறைந்த இலங்கையை கட்டியெழுப்ப வேண்டுமென்றால், அது ஏனைய இனங்களின் தனித்துவ உரிமைகளை அங்கீகரிப்பதிலும் அவர்களுடன் அதிகாரங்களை பங்கிட்டுக்கொள்வதிலுமே அதனை ஆரம்பிக்க வேண்டும். அதற்கான துணிச்சலையும், தூரப்பார்வையையும், இன்றைய அரசாங்கம் முன்னெடுக்குமா என்பதே இன்றைய கேள்வியாகும்.

முதிர்ந்த அரசியல் அனுபவமிக்க சம்பந்தர் ஐயா தலைமையில் இதற்கான வாய்ப்பை அளிக்க எமது கட்சி தயாராக உள்ளது. இத்தகைய அரிய வரலாற்று வாய்ப்பை பயன்படுத்தி தமிழ்மக்கள் ஏற்றுக்கொள்ளக்கூடிய நல்ல தீர்வை ஏற்படுத்தி, புதிய இலங்கையை கட்டியெழுப்ப அரசாங்கம் தயாராக வேண்டும். இதனை தவறவிட்டால், வரலாறு தான் விரும்பும் இன்னொரு திசைக்கு தீர்வை இட்டுச் செல்லும் என்பது திண்ணம்.

சுனாமியாலும் யுத்தத்தாலும் அழிந்து சின்னாபின்னப்பட்டிருக்கும் தமிழ்பேசும் மக்களின் மனங்களைப் புரிந்து அவர்களின் துன்பங்களைப் பகிர்ந்து அவர்களின் தனித்துவமான உரிமைகளை புரிந்து அதற்கேற்ப நியாய பூர்வமானதும் நீதியானதுமான தீர்வை காணவேண்டிய பொறுப்பு அரசாங்கத்திற்கு உண்டு. நாம் இரு சுதந்திரமான தேசிய இனங்களாக ஒரு நாட்டின் மக்களாக ஒன்றினைந்து நம் தேசத்தைக் கட்டியெழுப்புவோம் என்ற பிரகடனத்தை மனமுவந்து நாம் அனைவரும் நினைப்போம் என்று கூறி என் கன்னி உரையை நிறைவு செய்கின்றேன்.

ஜனாதிபதியின் சிரேஷ்ட ஆலோசகராக கலாநிதி சரத் அமுனுகம

sarath.jpgஜனாதிபதி மஹிந்த ராஜபக்ஷவின் சிரேஷ்ட ஆலோசகராக கலாநிதி சரத் அமுனுகம நியமிக்கப்பட்டுள்ளார் என ஜனாதிபதி செயலகம் அறிவித்துள்ளது. 

பொருளாதார அபிவிருத்தி அமைச்சராக நியமிக்கப்பட்டுள்ள பசில் ராஜபக்ஷவின் வெற்றிடத்துக்கே இவர் நியமிக்கப்பட்டுள்ளார்.

கண்டி திருத்துவக் கல்லூரியில் கல்வி பயின்ற இவர்  பல்கலைக்கழக பட்டதாரியாவார். 1962 ஆம் ஆண்ட அரசாங்க சேவையில் இணைந்த இவர்  பின்னர்  அரசிலில் இணைந்து பல முக்கிய அமைச்சுப் பதவிகளை வகித்துள்ளார்.

காதர் ஹாஜி தனித்துச் செயற்பட முடிவு

cadar.jpgகண்டி மாவட்ட ஐ.தே.க. பாராளுமன்ற உறுப்பினர் காதர்ஹாஜியார் பாராளுமன்றத்தில் தனித்துச் செயற்பட முடிவுசெய்துள்ளதாக நம்பகமாகத் தெரியவருகின்றது. கட்சித் தலைமையுடன் ஏற்பட்டுள்ள கருத்து மோதல்கள் காரணமாகவே அவர் இந்த முடிவுக்கு வந்துள்ளதாகவும் கூறப்படுகின்றது. கட்சியில் அவர் வகித்த தேசிய முஸ்லிம் அமைப்பாளர் பதவி உட்பட ஏனைய பதவிகளை அவர் ஏற்கனவே இராஜினாமாச் செய்துள்ளமை இங்கு நினைவூட்டத்தக்கது.

அவசர காலச் சட்டம் 118 மேலதிக வாக்குகளால் நிறைவேற்றம்!

parliament2.jpgஅவசர காலச் சட்டத்தை மேலும் ஒரு மாதத்துக்கு நீடிக்கும் பிரேரணை இன்று பாராளுமன்றத்தில் 118 மேலதிக வாக்குகளால் நிறைவேற்றப்பட்டுள்ளது. பிரதமர்  டி.எம். ஜயரத்னவால் முன்வைக்கப்பட்ட இப்பிரேரணை இரண்டு தினங்கள் விவாதிக்கப்பட்ட பின்னர் இன்று வாக்கெடுப்புக்கு விடப்பட்டது.

இதற்கு ஆதரவாக 132 வாக்குகளும் எதிராக 14 வாக்குகளும் அளிக்கப்பட்டன.

தமிழ்த் தேசியக் கூட்டமைப்பும் ஐ.தே.கவும் எதிர்த்து வாக்களித்தன. ஐ.தே.க. பாராளுமன்ற உறுப்பினர் அப்துல் காதர் பிரேரணைக்கு ஆதரவாக வாக்களித்தார் என்பது குறிப்பிடத்தக்கது 

புதிதாக 4 அமைச்சர்கள் 6 பிரதி அமைச்சர்கள் ஜனாதிபதி முன் பதவிப் பிரமாணம்

arumugam.jpgபுதிதாக அமைச்சரவை அந்தஸ்துள்ள 4 நான்கு அமைச்சர்களும் 6 பிரதி அமைச்சர்களும் ஜனாதிபதி இல்லத்தில் இன்று ஜனாதிபதி மஹிந்த ராஜபக்ஷ முன்னிலையில் பதவிப்பிரமாணம் செய்துகொண்டனா;.

அமைச்சர்கள்

ஆறுமுகன் தொண்டமான் – கால்நடைவளர்ப்பு கிராமிய சமூக அபிவிருத்தி
பேராசிரியர் திஸ்ஸவிதாரண – தொழில்நுட்ப ஆராய்ச்சி
கெஹலிய ரம்புக்வல – ஊடகம் மற்றும் தகவல்துறை
எஸ். பி. திஸாநாயக்க – உயர் கல்வி

பிரதி அமைச்சர்கள்
சரத் அமுனுகம – நிதி மற்றும் திட்டமிடல்
மேர்வின் சில்வா – நெடுஞ்சாலைகள்
மகிந்தானந்த அளுத்கமகே – இளைஞர் விவகாரம்
பைஸர் முஸ்தபா – சுற்றாடல்
எம்.கே.ஏ.டி.எஸ். குணவர்தன – புத்தசாஸன மற்றும் சமய விவகாரம்
ஜகத் பாலசூரிய – தொழில் மற்றும் தொழில் பயிற்சி

அவசரகால சட்டத்தில் அதிகம் பாதிக்கப்பட்டது இளைஞர், யுவதிகளே – நாமல்

chamal.jpgநாட்டிற்காக, நாட்டின் ஒருமைப்பாட்டிற்காக குரல் கொடுக்கக் கூடிய இளைஞர் சமுதாயம் ஒன்றை உருவாக்க வேண்டும். எதிர்கால சந்ததியினருக்கு அவசரகாலச் சட்டம் அற்ற நாட்டை உருவாக்குவோம் என அம்பாந்தோட்டை மாவட்ட பாராளுமன்ற உறுப்பினர் நாமல் ராஜபக்ஷ தனது கன்னி உரையில் தெரிவித்தார்.

அவசர காலச் சட்டத்தை மேலும் ஒரு மாத காலத்திற்கு நீடிப்பது தொடர்பான விவாதத்தில் கலந்துகொண்டு உரையாற்றும்போதே நாமல் ராஜபக்ஷ மேற்கண்டவாறு தெரிவித்தார். சபாநாயகர் சமல் ராஜபக்ஷ தலைமையில் நேற்று பாராளுமன்றம் கூடியது. பிரதமர் டி. எம். ஜயரட்ன அவசரகாலச் சட்டத்தை நீடிப்பதற்கான பிரேரணையை சபையில் சமர்ப்பித்துப் பேசினார். இதனைத் தொடர்ந்து நாமல் ராஜபக்ஷ எம். பி. உரையாற்றினார்.

அவர் தொடர்ந்தும் உரையாற்றுகையில் :- அவசரகாலச் சட்டம் முழுமையாக நீக்கப்பட வேண்டும் என்பதை ஏற்றுக்கொள்கிறேன். எனினும் பயங்கரவாதம் முழுமையாக அணைந்துவிடவில்லை. இன்னும் நீறுபூத்த நெருப்பாக எரிந்துகொண்டு தான் உள்ளது. எனவே அவசரகாலச் சட்டம் படிப்படியாக அகற்றப்பட வேண்டும்.

அவசரகாலச் சட்டம் இறுதியாக 2005ஆம் ஆண்டுகளில் அமைச்சர் லஷ்மன் கதிர்காமரின் படுகொலையுடன் தான் அமுலுக்கு வந்தது. என்னுடைய வயதையும் விட கூடுதல் வயது இந்த அவசரகாலச் சட்டத்துக்கு உள்ளது. வடக்கு, கிழக்கு, மலையகம் உட்பட நாடு முழுவதுமுள்ள என்னைப் போன்ற சகோதர, சகோதரிகள் அனைவரும் அவசரகாலச் சட்டத்தினுள்தான் வாழ்ந்தார்கள். இளைஞர், யுவதிகள் தான் இதனால் பெரிதும் பாதிக்கப்பட்டார்கள். இந்த அவசரகாலச் சட்டத்தை நீக்க வேண்டியதன் நேரம் நெருங்கியுள்ளது- எனினும் உடனடியாக செய்ய முடியாது.

பயங்கரவாதம் தோன்றியதற்கான அடிப்படை என்ன என்பது பற்றி பார்ப்போமானால் முன்னேற்றமடையாத கஷ்டப் பிரதேசம் தான் பயங்கரவாதிகளின் பிறப்பிடமாக இருந்துள்ளது.

குறிப்பாக சேகுவேராவும் இவ்வாறான கருத்தைத்தான் கூறியிருந்தார். பின்தங்கிய, கஷ்டப் பிரதேசத்திலிருந்து தான் புரட்சிகள் ஆரம்பமாகியுள்ளன. இதனையே பிரபாகரனும் தெரிவித்திருந்தார். பின்தங்கிய கஷ்டப் பிரதேசத்திலிருந்து வரும் இளைஞர்கள், யுவதிகளே தனது அமைப்பில் தங்கி இருப்பவர்கள் என்றும், வசதியாக நகர்ப்புறத்தில் வாழ்பவர்கள் தங்குவதில்லை என்றும் தெரிவித்திருக்கிறார்.

கஷ்டப் பிரதேசம், என்ற சொல்லுக்கு இடமில்லாமல் கிராம மட்டத்தில் அபிவிருத்தி முன்னெடுக்கப்படல் வேண்டும். எமக்கு கிடைத்த சுதந்திரத்தை சரியான முறையில் பயன்படுத்துவதுடன் இந்நாட்டின் இளம் சமுதாயத்திற்கு சந்தர்ப்பம் வழங்க வேண்டும்.

கிராம மட்டத்தில் அபிவிருத்தியை முன்னெடுக்காவிடின் மீண்டும் ஒரு புரட்சி, அல்லது கெரில்லா அமைப்பு உருவாவதை தடுத்துவிட முடியாது என்றும் நாமல் ராஜபக்ஷ தெரிவித்தார். 1948ம் ஆண்டு லக்ஷ்மன் ராஜபக்ஷவையும், 1970 ஜனாதிபதி மஹிந்த ராஜபக்ஷவையும், 2010 ஆம் ஆண்டு தன்னையும் மிகவும் குறைந்த இளம் வயதில் பாராளுமன்றத்துக்கு அனுப்புவதற்காக வாக்களித்த அம்பாந்தோட்டை மக்களுக்கு நன்றிகளை தெரிவித்துக்கொள்வதாக நாமல் ராஜபக்ஷ தனது கன்னிப் பேச்சை ஆரம்பிக்கும் போதே தெரிவித்தார்.

அம்பாந்தோட்டையில் உட்கட்டமைப்பு வசதிகள் ஒழுங்காக இல்லை. வீதிகள் அனைத்தும் குண்டும் குழியுமாக இருக்கிறது என 1954 ஆம் ஆண்டு டி. ஏ. ராஜபக்ஷ இந்த சபையில் தெரிவித்திருந்தார்.

1970 ஆம் ஆண்டு ஜனாதிபதி மஹிந்த ராஜபக்ஷவும் இவ்வாறான கூற்றை இந்தச் சபையில் தெரிவித்திருந்தார். கிராம அபிவிருத்தி, உட் கட்டமைப்பு வசதிகளை மேம்படு த்த வேண்டும் என்ற தேவை அன்றே உணரப்பட்டது என்றும் நாமல் ராஜபக்ஷ எம்.பி. தெரிவித்தார்.

3 மாத செலவீனத்துக்கு 44,014 கோடி ரூபாவை ஒதுக்கீடு செய்வதாக ஜனாதிபதி சபைக்கு அறிவிப்பு. அரசியலமைப்பை மீறும் செயல்; ஐ.தே.க.எதிர்ப்பு

parliament.jpgஅரசின் 3 மாத செலவினங்களுக்கென திரட்டு நிதியிலிருந்து 44,014.7 கோடி ரூபாவை ஒதுக்கீடு செய்ய அனுமதி வழங்குவதாக ஜனாதிபதி மகிந்த ராஜபக்ஷ பாராளுமன்றத்துக்கு நேற்று செவ்வாய்க்கிழமை அறிவித்துள்ள அதேநேரம், கணக்கு வாக்கெடுப்புப் பிரேரணையோ அல்லது வரவுசெலவுத்திட்டமோ பாராளுமன்றத்துக்குச் சமர்ப்பிக்காமல் அரச செலவினங்களுக்கென திரட்டு நிதியிலிருந்து ஜனாதிபதி நிதி ஒதுக்கீடு செய்வது அரசியலமைப்பை மீறும் செயலென பிரதான எதிர்க்கட்சியான ஐக்கிய தேசியக் கட்சி எதிர்ப்பு தெரிவித்துள்ளது.

பாராளுமன்றம் நேற்றுக் காலை 9.30 மணிக்கு சபாநாயகர் சமல் ராஜபக்ஷ தலைமையில் கூடியது.

அச்சமயம் ஜனாதிபதியின் அறிவிப்புகளை வாசித்த சபாநாயகர், அரசியலமைப்பின் 150 (3) ஆம் பிரிவில் ஜனாதிபதிக்கு வழங்கப்பட்டிருக்கும் அதிகாரத்தின் பிரகாரம் ஏப்ரல் மாதம் 22 ஆம் திகதி முதல் ஜூலை மாதம் 22 ஆம் திகதி வரையான காலப்பகுதிக்கான அரச செலவினங்களுக்கென திரட்டு நிதியத்திலிருந்து 44,014.7 கோடி ரூபாவை ஒதுக்க அனுமதியளிப்பதாக ஜனாதிபதி மகிந்த ராஜபக்ஷ பாராளுமன்றத்துக்கு அறிவித்திருப்பதாக கூறினார்.

இதன் பின்னர் சபையில் ஏற்பட்ட சர்ச்சையொன்றின் போது ஐ.தே.க.வின் குருநாகல் மாவட்ட எம்.பி.யான தயாசிறி ஜயசேகர முதலில் இது குறித்த பிரச்சினையை கிளப்பினார். “பாராளுமன்றத்தின் அதிகாரம் அவமதிக்கப்பட்டுள்ளது. நிதி அதிகாரம் பாராளுமன்றத்துக்கே இருக்கிறது.

அரசியலமைப்பின் 150 (3) சரத்தின் பிரகாரம் நிதி ஒதுக்கீடு செய்யும் அதிகாரம் ஜனாதிபதிக்கு கிடையாது  என்று அவர் இதன்போது கூறினார்.

இதேநேரம், ஒழுங்குப் பிரச்சினையொன்றை கிளப்பி இவ் விவகாரத்தை அரசியலமைப்பை மேற்கோள்காட்டி விளக்கிய ஐ.தே.க.வின் கொழும்பு மாவட்ட எம்.பி.யான விஜேதாச ராஜபக்ஷ “அரசியலமைப்பின் 150 (3) ஆவது சரத்தின் பிரகாரம் கூறப்படுவது என்னவென்றால், நிதி ஒதுக்கீட்டு சட்டமூலம் சமர்ப்பிக்கப்பட்டு சட்டமாக நிறைவேற்றப்படாத நிலையில் பாராளுமன்றம் கலைக்கப்பட்டால் ஜனாதிபதியால் திரட்டு நிதியத்திலிருந்து 3 மாத செலவினங்களுக்கு நிதி ஒதுக்க முடியும் அல்லது நிதி ஒதுக்கீடு சட்டமூலம் சமர்ப்பிக்கப்பட்டிருக்காத நிலையில் தேர்தலொன்றுக்காக திரட்டு நிதியத்திலிருந்து நிதி ஒதுக்க முடியும். ஆனால், தற்போதைய நிலையில் அவ்வாறான எந்த சந்தர்ப்பமும் இல்லாததால் ஜனாதிபதியால் திரட்டு நிதியத்திலிருந்து நிதி ஒதுக்க முடியாது. இது அரசியலமைப்புக்கு முரணானது என்றார். எனினும் விஜேதாச ராஜபக்ஷவின் விளக்கத்தை ஏற்றுக் கொள்ளாத சபை முதல்வரும் அமைச்சருமான நிமால் சிறிபால டி சில்வா;

“அரசியலமைப்பின் 150 (3) சரத்துக்கு உட்பட்டே ஜனாதிபதி தனது அறிவிப்பை சபாநாயகர் மூலம் விடுத்திருக்கிறார். சட்டமா அதிபரின் பூரண ஆலோசனையின் பிரகாரமே இது செய்யப்பட்டிருக்கிறது. எனவே, விஜேதாச ராஜபக்ஷவின் ஆலோசனை ஜனாதிபதிக்குத் தேவைப்படாது. சட்டமா அதிபரின் ஆலோசனையை ஏற்றுக்கொள்ள முடியாதென்றால் உயர்நீதிமன்றம் செல்ல முடியும். சட்டமா அதிபரின் ஆலோசனைகளுக்கு நீங்கள், நாங்கள் கட்டுப்பட்டுள்ளோம். ஜனாதிபதி அனுப்பிய அறிவித்தலை விவாதத்துக்கு உட்படுத்த முடியாது  என்றும் தெரிவித்தார்.

எனினும் இது உயர்நீதிமன்றத்தில் தீர்க்கப்பட வேண்டிய பிரச்சினையில்லை என்றும் இதற்கான அதிகாரம் பாராளுமன்றத்துக்கே இருக்கிறது என்றும் இதில் சபாநாயகரே முடிவு சொல்ல வேண்டும் என்றும் விஜேதாச ராஜபக்ஷ கூறினார்.

இதேநேரம், அரசியலமைப்பின் 150 (3), 150 (4) சரத்துகளின் பிரகாரம் திரட்டு நிதியத்திலிருந்து நிதி ஒதுக்கும் அதிகாரம் ஜனாதிபதிக்கு இருப்பதாக ஆளுந்தரப்பு எம்.பி.யான லலித் திசாநாயக்க தெரிவித்தார். ரணில்இதனைத் தொடர்ந்து பேசிய எதிர்க்கட்சித் தலைவர் ரணில் விக்கிரமசிங்க;

“ஜனாதிபதி அனுப்பிய உத்தரவின் பிரதியொன்றை எமக்குத் தாருங்கள். 2000 ஆம் ஆண்டில் அப்போதைய சபாநாயகர் அநுர பண்டாரநாயக்க சட்டமா அதிபரின் அதிகாரம் தொடர்பில் நிலைப்பாடொன்றுக்கு வந்தார். பாராளுமன்றத்துக்கு சட்டமூலமொன்று சமர்ப்பிக்கப்படும் போது அது தொடர்பாக மூன்றில் இரண்டு பெரும்பான்மையைக் கோருவதற்கு மட்டுமே சட்டமா அதிபரின் ஆலோசனை அவசியமென்பதே அவரது நிலைப்பாடாக இருந்தது. எனவே, பாராளுமன்ற அங்கீகாரம் இன்றி அநுர பண்டாரநாயக்கவின் தீர்ப்பை மாற்ற முடியாது.எனவே, இவ்விடயத்தில் பாராளுமன்றத்தின் அதிகாரத்தை உயர் நீதிமன்றத்துக்கு வழங்கப் பார்க்கிறீர்கள். இதை நாமே தீர்க்க முடியும். பாராளுமன்றத்துக்கே நிதி அதிகாரம் இருக்கிறது. பாராளுமன்ற அதிகாரத்தைப் பாதுகாக்கும் பொறுப்பு சபாநாயகருக்குள்ளது.

இந்த விடயம் பற்றி ஆராய்ந்து உரிய உத்தரவைப் பிறப்பிப்பதாகவும் இதை விவாதமாக்கிக் கொள்ளத் தேவையில்லை என்றும் கூறி சபாநாயகர் சமல் ராஜபக்ஷ இந்த பிரச்சினையை முடிவுக்கு கொண்டு வந்தார்

11 ஆயிரம் தமிழ் இளைஞர்களுக்கு நீதி இன்னமும் வழங்கப்படவில்லை ஜெனரல் சரத் பொன்சேகா

sarath_.jpg“சரண டைந்த நிலையில் தடுத்து வைக்கப்பட்டுள்ள 11 ஆயிரம் தமிழ் இளைஞர்களுக்கும் இதுவரையில் நீதி வழங்கப்படவில்லை. அவர்கள் மீதான விசாரணைகளைத் துரிதப்படுத்தி அந்த இளைஞர்களை விடுதலை செய்ய அல்லது வழக்குத் தாக்கல் செய்ய அரசு நடவடிக்கை எடுக்க வேண்டுமென வலியுறுத்திய ஜனநாயக தேசியக் கூட்டணி எம்.பி.ஜெனரல் சரத் பொன்சேகா “பயங்கரவாதத் தடைச்சட்டம் அமுலிலுள்ள ஒரு நாட்டில் அவசரகாலச்சட்டம் தேவையில்லை என்றும் கூறினார்.

பாராளுமன்றத்தில் நேற்று செவ்வாய்க்கிழமை இடம்பெற்ற அவசரகாலச் சட்ட நீடிப்பு விவாதத்தில் உரையாற்றியபோது இவ்வாறு கூறிய ஜெனரல் பொன்சேகா மேலும் கூறியதாவது;

“நான் 2 ஆவது லெப்டினன்டாக இருந்த போது முதன் முதலில் பழைய பாராளுமன்றத்துக்குச் சென்றுள்ளேன். இராணுவ வெற்றியின் பின்னர் ஓர் இராணுவத் தளபதியாக இந்தப் பாராளுமன்றத்துக்கு வந்தேன். அப்போது ஜனாதிபதி எனது பெயரைக் குறிப்பிட்டு இந்தப் பாராளுமன்றத்தில் வைத்து வெகுவாகப் பாராட்டினார்.

ஆனால், இன்று மீண்டும் இந்தப் பாராளுமன்றத்துக்கு அரசியல்வாதியாக ஒரு தடுத்துவைக்கப்பட்டிருக்கும் அரசியல் கைதியாக வந்துள்ளேன். எனது அரசியல்வாழ்க்கையைக் கட்டியெழுப்ப எனக்கு வலுவூட்டிய ஐக்கிய தேசியக் கட்சி, தமிழ்த் தேசியக் கூட்டமைப்பு, ஜே.வி.பி.ஆகியோருக்கு நன்றி கூறக் கடமைப்பட்டுள்ளேன். என்மீது சேறு பூசிய , என்மீது பழிகளைச் சுமத்தியவர்களுக்கும் நான் நன்றி கூறக் கடமைப்பட்டுள்ளதுடன், யுத்த காலத்தில் எனக்கு ஆதரவளித்த விடுதலைப் புலிகளுக்கும் நன்றியைத் தெரிவித்துக்கொள்கின்றேன்.

இந்த நாட்டில் அவசரகாலச் சட்டத்தின் கீழ் வாழாதவர்கள் மிகக் குறைவானவர்களேயுள்ளனர். ஒரு ஜனநாயக நாட்டில் சாதாரண சட்டங்களின் கீழேயே மக்கள் வாழ வேண்டும். ஆனால், ஒரு ஜனநாயக நாடு இருந்ததாக எவருக்கும் நினைவில்லை. ஒரு நாட்டில் சாதாரண சட்டங்களின் கீழ் ஆட்சி செய்ய முடியாது விட்டால் ஆட்சியாளர்கள் தான் வெட்கப்பட வேண்டும். தற்போது இந்த நாட்டிற்கு அவசரகாலச் சட்டம் என்பது தேவையற்றதொரு விடயம்.

தற்போது மக்களின் சுதந்திரத்தைப் பறிக்கும் வகையிலும் துன்புறுத்தும் வகையிலும் அச்சுறுத்தும் வகையிலுமேயே அவசரகாலச் சட்டம் பயன்படுத்தப்படுகின்றது. இது அதிகாரங்களைத் தவறாகப் பயன்படுத்துவதால் ஏற்படும் நிலை. தவறானவர்களிடம் அதிகாரங்களைக் கொடுப்பது குரங்கின் கையில் கூர்மையான கத்தியொன்றைக் கொடுப்பதற்கு சமனானது. குறுகிய நோக்கங்களுடன் செயற்படுபவர்கள் பாடங்களை கற்றுக்கொள்ளும் நிலைமை ஏற்படும்.

இந்த நாட்டில் முன்னர் சிறந்த பாதுகாப்பு அமைச்சு செயலர்கள் இருந்தார்கள். அவர்கள் சட்டங்களை சிறப்பாகப் பயன்படுத்தினார்கள். அவர்களால் நாட்டுக்கு அபகீர்த்தி ஏற்படவில்லை. தற்போது நாட்டில் அமைதி, சமாதானம் ஏற்பட்டுள்ள நிலையில் மக்களை அடக்கி வைக்கும் அவசரகாலச்சட்டம் பயன்படுத்தப்படுகின்றது. இந்த நாட்டில் நியாயம் நிலை நிறுத்தப்படுவதற்கு அவசரகாலச் சட்டம் நீக்கப்பட வேண்டும்.

அமெரிக்காவுக்கு அல்ஹைடா மிகப்பெரும் அச்சுறுத்தலாக இருக்கின்றபோதும் அந்நாட்டில் அவசரகாலச் சட்டம் நடைமுறைப்படுத்தப்படவில்லை. இங்கு மியன்மார் போன்ற இராணுவ ஆட்சி நடந்தால் அதனை ஏற்க முடியாது. அனைவரும் சமமான உரிமைகளுடன் வாழும் நாடு என்பதை உணர்ந்து மக்களின் பிரதிநிதிகள் என்ற வகையில் செயற்பட அரசியல்வாதிகள் முன்வரவேண்டும்.

தற்போது இந்த நாட்டில் யுத்தம் இல்லை. கடந்த ஒரு வருட காலமாக எந்தப் பயங்கரவாத நடவடிக்கையும் இடம்பெறவில்லை. மக்களுக்கு ஆபத்து ஏற்படவில்லை. பாதுகாப்புக்கு அச்சுறுத்தல் இல்லை. நாட்டுக்கு ஆபத்தில்லை. எனவே, இந்த நாட்டுக்கு அவசரகாலச் சட்டம் இனித் தேவையில்லை.பயங்கரவாதத் தடைச்சட்டம் அமுலில் இருக்கும்போது அவசரகாலச் சட்டம் அமுல்படுத்தப்படுவது வையற்றதொரு விடயம்.

யுத்த காலத்தின் போது சரணடைந்த 11 ஆயிரம் தமிழ் இளைஞர்கள் நீதிக்காக ஏங்கிக் கொண்டிருக்கின்றனர். அவர்களுக்கு இன்றுவரை நீதி கிடைக்கவில்லை. எனவே அவர்கள் மீதான விசாரணைகளைத் துரிதப்படுத்தி அவர்களை விடுதலை செய்ய வேண்டும். அல்லது வழக்குத் தாக்கல் செய்யப்பட வேண்டும். நாம் யுத்தத்தில் வெற்றி பெற்றுள்ள போதும் இன ஐக்கியத்தை புரிந்துணர்வை ஏற்படுத்தி நியாயத்தை நிலைநாட்டத் தவறிவிட்டோம். ஆனால், இவற்றையே மக்கள் அரசிடம் எதிர்பார்க்கின்றனர். நீதிமன்றங்கள் நீதியாகச் செயற்பட வேண்டும். சிறைப்படுத்துவதன் மூலமோ நீதிமன்றங்களுக்கு அழைத்துச் செல்வதன் மூலமோ தீர்வுகளைப் பெற்றுக்கொடுக்க முடியாது. 100 சிறைகளில் அடைத்தாலும் மீண்டும் மீண்டும் வருவோம்.

தம்மை மக்கள் ஏற்றுக்கொள்வார்கள் என்ற நம்பிக்கை நாட்டுத் தலைமைக்கு இருக்குமாக இருந்தால் அவசரகாலச் சட்டம் தேவையில்லை. தாம் யாருக்கு வாக்களித்தோம் என்று கூட வெளியில் கூற முடியாத நிலையில் இன்று மக்கள் உள்ளனர். அப்படிக் கூறுவோர் நாட்டை விட்டே ஓட வேண்டிய நிலை. இந்த நாட்டில் மக்கள் சுதந்திரத்தை அனுபவிக்கவில்லை என்பதே எனது ஆணித்தரமான கருத்து. கருத்துகளை வெளியிட மக்கள் அச்சமடைகின்றனர். இந் நாட்டில் தொடர்ந்து சுதந்திரமாக வாழ முடியாத நிலை. பலர் நாட்டை விட்டே வெளியேறுகின்றனர். ஊடகங்களின் வாய்கள் மூடப்படுகின்றன. மக்களை அமைதியாக வைத்திருக்கவே இந்தச் சட்டம் பயன்படுத்தப்படுகிறது.

உண்மை பேசுவோர் மீது குற்றச்சாட்டுகள் சுமத்தப்பட்டு சிறைக்குள் தள்ளப்படுகின்றனர். ஆனாலும், சட்டம் தன் பணியைச் செய்யும். உண்மை ஒருநாள் வெளிப்படும். நீதி நிலைநாட்டப்படும். இந்த நாட்டின் ஆட்சியை எதிர்த்த மக்களுக்கும் எனது கட்சிக்கு வாக்களித்த 4 இலட்சத்துக்கும் மேற்பட்ட மக்களுக்கும் எனக்கு வாக்களித்த 98 ஆயிரத்துக்கும் மேற்பட்ட கொழும்பு மாவட்ட மக்களுக்கும் நான் நன்றி கூறக் கடமைப்பட்டுள்ளேன்”