08

08

கிளிநொச்சியில் இரு பெண்கள்மீது பாலியல் துஸ்பிரயோகம் ஆறு இராணுவத்தினர் கைது!

யூன் 6ல் கிளிநொச்சி ரெட்பானா பகுதியில் இரு குடும்பப் பெண்கள் மீது பாலியல் துஸ்பிரயோகத்தில் ஈடுபட்ட குற்றச்சாட்டில் ஆறு இராணுவத்தினர் கைது செய்யப்பட்டு உள்ளனர். பாதிக்கப்பட்ட பெண்கள் அருகில் உள்ள இராணுவ முகாமில் மேற்கொண்ட முறையீட்டை அடுத்தே யூன் 7ல் ஆறு இராணுவத்தினர் சந்தேகத்தின் பேரில் கைது செய்யப்பட்டு உள்ளனர்.

சந்தேகத்தின் பெயரில் கைது செய்யப்பட்டவர்கள் கிளிநொச்சி நீதவான் முன்னிலையில் யூன் 8ல் ஆஜர்படுத்தப்பட்டனர். இவர்களை விளக்கமறியலில் வைத்து விசாரணை செய்ய நீதிமன்றம் உத்தரவிட்டு உள்ளது. மேலும் யூன் 14ல் அடையாள அணிவகுப்பிற்கும் நீதிமன்றம் உத்தரவு பிறப்பித்து உள்ளது.

பாதிக்கப்பட்ட பெண்கள் மருத்துவ பரிசோதணைக்காக வவுனியா மருத்துவமனைக்கு அழைத்துச் செல்லப்பட்டு உள்ளனர்.

தனங்கிளப்பில் குண்டு வெடித்ததில் இருவர் கொல்லப்பட்டனர்! மூவர் படுகாயம்!

தென்மராட்சி தனங்கிளப்பு சுண்டிக்குளம் பிள்ளையார் கோவில் வீதியில் நேற்று (June 7 2010) மாலை 5:15 மணியளவில் இடம்பெற்ற குண்டுவெடிப்பில் தனங்கிளப்பைச் சேர்ந்தவரும், பண்டத்தரிப்பில் வசித்தவருமான கனகசபை பிரகாஸ் (வயது 29) சாவகச்சேரியில் வசித்தவரும் மந்திகை வைத்தியசாலை ஊழியருமான சுப்பிரமணியம் பொன்சேகர் (வயது38) ஆகிய இருவரும் உயிரிழந்துள்ளனர்.

தனங்கிளப்பு பகுதியில்  மக்கள் மீளக்குடியமர்ந்த பகுதியில் மக்களின் நலன் தொடர்பாக ஆராயும் கூட்டமொன்று இன்று காலை சுண்டிக்களம் பிள்ளையார் கோவிலடியில் நடைபெற ஏற்பாடு செய்யப்பட்டிருந்தது. இதற்காக அப்பகுதி மக்கள் துப்புரவு பணியில் ஈடுபட்டு வந்தனர். குப்பைகளை ஓரிடத்தில் குவித்து எரித்தபோது திடீரென குண்டு வெடித்தது. இதன்போது கனகசபை பிரகாஸ் என்பவர் அவ்விடத்திலேயே உயிரிழந்தார். மற்றவர் வைத்தியசாலைக்கு கொண்டு செல்லும் வழியில் உயிரிழந்தார். இச்சம்பவத்தில் மூவர் படுகாயமடைந்துள்ளனர்.

தலைமைகளின் தவறுகளுக்காக தமிழ் மக்களின் பிரச்சினைக்குத் தீர்வகாணும் விடயத்தை பின் தள்ளிவிட வேண்டாம்! : ஈபிடிபி

Douglas_D_and_Rajaparksa_MJune 7 2010 தமிழ்தேசியக்கூட்டமைப்பினர் ஜனாதிபதியைச் சந்தித்ததன் பின்னர் அமைச்சர் டக்ளஸ் தேவானந்தா தலைமையிலான ஈ.பி.டி.பி கட்சியின் சிறப்புப் பிரதிநிதிகள் ஜனாதிபதியை சந்தித்து கலந்துரையாடியுள்ளனர். மாலை 6 மணியளவில் இச்சந்திப்பு நடைபெற்றது. இலங்கை இந்திய ஒப்பந்தத்தின் அடிப்படையில் 13வது அரசியல் திருத்தச் சட்டத்தை முழுமையாக நடைமுறைப்படுத்துவதோடு, அதிலிருந்து தொடங்கி அதை மேலும் செழுமைப் படுத்தி ஐக்கிய இலங்கைக்குள் சமாதான சகவாழ்வும், சமவுரிமையும் உள்ள அரசியல் ஏற்பாட்டை நோக்கி செல்வதன் ஊடாகவே அரசயிலுரிமைப் பிரச்சினைக்கு சரியான தீர்வு காணப்படுவது சாத்தியமாகும் என ஈ.பி.டி.பி பிரதிநிதிகள் வலியுறுத்தினர்.

இதுவரை காலமும்  கிடைத்த சந்தர்ப்பங்களை தமிழ் தலைமைகள் சரியான முறையில் பயன்படுத்தவில்லை. இத்தலைமைகளின் தவறான வழிநடத்தல்களுக்காக தமிழ் மக்களின் அரசியல் உரிமை பிரச்சினைக்குத் தீர்வகாணும் விடயத்தை ஒரு போதும் பின் தள்ளிவிட வேண்டாம் எனவும். சகல தரப்பினராலும் ஏற்கக் கூடிய தீர்வுத்திட்ட யோசனையையே தாம் முன்வைத்து வருவதாகவும், தமிழ் மக்களின் உரிமைப் பிரச்சனைக்கு தீர்வு காண்பதற்காகவே அரசாங்கத்துடன் ஈ.பி.டி.பி உறவுக்கரம் கொடுத்து வருவதாகவும் ஜனாதிபதியிடம் இப்பிரதிநிதிகள் தெரிவித்துள்ளனர்.

மேலும் இச்சந்திப்பின்போது கருத்து தெரிவித்திருந்த ஈ..பி.டி.பி யின் விஷேட பிரதிகள் தமிழ் மக்களின் அரசிலுரிமை பிரச்சினை குறித்து எமது நட்பு நாடாகிய இந்தியா உட்பட சர்வதேச சமூகம் மற்றும் தென்னிலங்கை அரசியல் கட்சிகளும் ஏற்றுக்கொண்டிருக்கும் யோசனைகளையே தாம் வலியுறுத்தி வருவதாகவும் அரசியல் தீர்வை நடை முறைப்படுத்துகின்ற சமகாலத்தில் தமிழ் மக்களின் உடனடி அவசியப் பிரச்சினைகளுக்கும் அரசாங்கம் உடனடியாக தீர்வு காண வேண்டும் என்றும் ஜனாதிபதி அவர்களிடம் தமது கருத்துக்களை முன்வைத்திருந்தனர்.

இச்சந்திப்பின்போது ஜனாதிபதி மகிந்த ராஐபக்ச அவர்கள் தலைமையில் அமைச்சர்களான நிமல் சிறிபால டி சில்வா பசில் ராஜபக்ஷ ஜீ.எல்.பீரிஸ் மைத்திரிபால சிறிசேன பௌசி ஆகியோரும் செயலாளர் நாயகம் அமைச்சர் டக்ளஸ் தேவானந்தா அவர்களது தலைமையில் பாராளுமன்றக் குழுக்களின் பிரதித் தலைவர் முருகேசு சந்திரகுமார். பாராளுமன்ற உறுப்பினர் சில்வேஸ்த்திரி அலென்ரின் உதயன் அமைச்சரின் பிரத்தியேகச் செயலாளர் தயானந்தா ஈ.பி.டி.பி.யின் சர்வதேச அமைப்பாளர் மித்திரன் நிர்வாகச் செயலாளர் புரட்சிமணி அமைச்சரின் இணைப்பதிகாரி ராஜ்குமார். யாழ் மாநகர முதல்வர் யோகேஸ்வரி பற்குணராஜா ஆகியோரும் ஈ.பி.டி.பி யின் விஷேட பிரதிநிதிகளாக கலந்து கொண்டிருந்தனர்.

ஜனாதிபதி – கூட்டமைப்பு சந்திப்பு தோல்வியில் முடிவடைந்தது!!!

TNA_Government_08June10தமிழ் தேசியக்கூட்டமைப்பு – ஜனாதிபதி சந்திப்பு தோல்வியில் முடிவடைந்துள்ளது! : விஸ்வா

நேற்று தமிழ் தேசியக்கூட்டமைப்பினருக்கும் ஜனாதிபதி மகிந்த ராஜபக்சவிற்குமிடையிலான பேச்சுவார்த்தைகள் எவ்வித இணக்கப்பாடும் இன்றி தோல்வியில் முடிவடைந்துள்ளது. நேற்று (07-06-2010) மாலை அலரி மாளிகையில் இச்சந்திப்பு நடைபெற்றது. போரினால் பாதிக்கப்பட்ட மக்களின் பிரச்சினைகள், மீள்குடியேற்றம், அரசியல் கைதிகளின் விடுதலை, அதியுயர் பாதுகாப்பு வலயங்களில் மக்களை மீள்குடியமர்த்தல் ஆகியவிடயங்களுடன், இனப்பிரச்சினைக்கான நிரந்தர திர்வு, அரசியல் அமைப்பு சீர்திருத்தம் போன்ற விடயங்கள் கலந்துரையாடலின் போது கூட்டமைப்பினரால் முன்வைக்கப்பட்டன.  இவற்றிற்கு சாதகமான பதில்கள் எவற்றையும் ஜனாதிபதி தெரிவிக்கவில்லை.

போர் காரணமாக நிர்மூலமாக்கப்பட்டுள்ள பொது மக்களின் ஒரு இலட்சத்து அறுபதினாயிரம் வீடுகளைக் கட்டிக்கொடுத்தல் தொடர்பாக கேட்டபோது, இவற்றைக் கட்டிக்கொடுக்க அரசாங்கத்திடம் பணமில்லை எனவும், இரண்டு நெல் அறுவடைகளின் பின்னர் மக்களே தங்கள் வீடுகளைக் கட்டிக்கொள்வர் எனவும், விவசாயத்திற்கான உதவிகளை அரசாங்கம் வழங்கும் எனவும் அரசாங்கத்தரப்பில் தெரிவிக்கப்பட்டது.

அரசியல் கைதிகளுக்கு பொதுமன்னிப்பு வழங்கப்படுவது பற்றிப் பேசப்பட்ட போது, ஏற்கனவே இருவருக்கு பொதுமன்னிப்பு வழங்கப்பட்ட போதும் அவர்களில் ஒருவர் மாத்தறைப் பகுதியில் உளவு வேலைகளில் ஈடுபட்டு வந்தார் என ஜனாதிபதி குறிப்பிட்டார்.

லண்டனில் உள்ள அமைப்புகள் சில தற்போது ஆட்சேர்ப்புப் பணியில் ஈடுபட்டு வருவதாகவும். இந்நிலையில் பொது மன்னிப்பு வழங்கி அரசியல் கைதிகளை விடுதலை செய்தால் அவர்களும் குறிப்பிட்ட அமைப்புக்களில் இணைந்து நாட்டுக்கு எதிராக  செயற்படும் நிலை எற்படும் எனவும் அவர் தெரிவித்தார். 

அதியுயர் பாதுகாப்பு வலயங்களில் மக்களை மீளக்குடியமர்த்தல் உள்ளிட்ட ஏனைய விடயங்களுக்கும் ஜனாதிபதி சாதகமான பதில்களை கூறவில்லை. இனப்பிரச்சினை தொடர்பான அரசியல் விடயங்கள் பேசப்பட்ட போது, விடுதலைப்புலிகள் கேட்டவற்றை கேட்கக்கூடாது என ஜனாதிபதி குறிப்பிட்டார்.

இவை தொடர்பான விபரங்களை பேச்சுவார்த்தையில் கலந்து கொண்ட கூட்டமைப்பு நாடாளுமன்ற உறுப்பினர்களான திரு.சுரேஸ் பிரேமச்சந்திரன் உட்பட்ட ஏனைய உறுப்பினர்களும் ஊடகங்களுக்கு வெளிப்படுத்தியுள்ளனர்.

இதே வேளை, இப்பேச்சுவார்த்தைகள் ஆரோக்கியமானதாக அமைந்ததாகவும், ஜனாதிபதியின் இந்தியப் பயணத்தின் பின்னர் மீண்டும் கூட்டமைப்பினருடன் பேச்சுவார்தை நடத்த விரும்பவதாக தம்மிடம் கூறியதாகவும் கூட்டமைப்பின் நாடாளுமன்ற உறுப்பினர் மாவை சேனாதிராஜா தெரிவித்துள்ளார்.

பெயர் குறிப்பிட விரும்பாத கூட்டமைப்பின் இன்னொரு நாடாளுமன்ற உறுப்பினர் தெரிவிக்கையில், இடம்பெயர்ந்த மக்களின் அடிப்படை பிரச்சினைகள் பற்றி முதலில் ஜனாதிபதிடம் பேசியதாகவும், அதன் பின்பே அரசியல் விடயங்கள் பேசப்பட்டன என்றும், தாங்கள் கலந்துரையாடிய விடயங்களுக்கு எந்தவொரு இணக்கப்பாடான பதிலையும் ஜனாதிபதி வழங்கவில்லை எனவும், பேச்சக்கள் தோல்வியிலேயே முடிவடைந்தன எனவும் குறிப்பிட்டுள்ளார்.

TNA_Government_08June10கூட்டமைப்பும் ஜனாதிபதியும் உடன்பட்ட விடயங்கள் : வி அருட்செல்வன்

வடக்கு மக்களின் பிரச்சினைகளில் பலவற்றுக்கு இந்த ஆண்டு டிசம்பர் மாதமளவில் தீர்வைப் பெற்றுத் தர முடியுமென்று ஜனாதிபதி மஹிந்த ராஜபக்ஷ தெரிவித்துள்ளார். தமிழ்த் தேசிய கூட்டமைப்பின் பிரதிநிதிகள் நேற்று மாலை ஜனாதிபதியைச் சந்தித்துப் பேசினர். ஜனாதிபதி அலுவலகத்தில் இந்தச் சந்திப்பு இடம்பெற்றது. நீண்ட நேரம் மிகவும் சுமுகமாக நடந்த இந்தச் சந்திப்பின் போதே ஜனாதிபதி இந்தத் தகவலைத் தெரிவித்துள்ளார்.

வட பகுதி மக்களின் அன்றாட பிரச்சினைகளை தீர்ப்பதற்காக நடமாடும் கச்சேரி முறையொன்றை ஆரம்பிப்பது தொடர்பாக அரசாங்கம் அவதானம் செலுத்தியுள்ளது. இதன்மூலம் திருமண, பிறப்பு மற்றும் இறப்பு சான்றிதழ்களை விரைவில் பெற்றுக் கொள்ள முடியும். அத்துடன், தற்போது தடுப்புக் காவலில் உள்ளவர்களில் நீதிமன்ற செயற்பாடுகளின் மூலம் குற்றச்சாட்டுகளுக்கு உள்ளானவர்கள் என உறுதிப்படுத்தப்பட்டவர்களை சமூக வாழ்வில் ஈடுபடுத்தும் திட்டமொன்றை விரைவில் நடைமுறைப்படுத்தவும், அரசாங்கம் நடவடிக்கை எடுத்துள்ளது.

கடந்த பயங்கரவாத சம்பவ காலத்தில் சாதாரண மக்களால் கைவிட்டுச் செல்லப் பட்ட துவிச்சக்கர வண்டிகள் மற்றும் மோட்டார் சைக்கிள்கள் உரிமையை உறுதிசெய்து அவற்றின் உரிமையாளர்களுக்கு பெற்றுக்கொடுக்கும் திட்டமும் நடைமுறைப் படுத்தப்படவுள்ளது.

இடம்பெயர்ந்த மக்களின் மீள் குடியேற்ற நடவடிக்கைகளை விரைவுபடுத்துமாறு இந்த சந்திப்பின் போது தமிழ்த் தேசியக் கூட்டமைப்பின் தலைவர் ஆர். சம்பந்தன் ஜனாதிபதியிடம் கேட்டுக்கொண்டார். மீள்குடியேற்ற நடவடிக்கை முறையாகவும் திட்டமிடப்பட்ட வகையிலும், கண்ணி வெடிகள் அகற்றப்பட்ட பின்னர் பாதுகாப் பான முறையில் மேற்கொள்ளப்பட வேண்டும், இதனால் வட பகுதி மக்களின் நிலை தொடர்பாக கண்டறி வதற்காக பாராளுமன்றத்துக்கு தெரிவான புதிய உறுப்பினர்கள் குழுவொன்றை அங்கு அனுப்பிவைத்ததாகவும், இந்த குழுவின் அறிக்கை தனக்கு கிடைத்திருப்பதாகவும் ஜனாதிபதி கூட்டமைப்புப் பிரதிநிதிகளுக்குப் பதிலளித்தார்.

அத்துடன் வட பகுதி மக்களை விவசாய நடவடிக்கைகளில் ஈடுபடுத்தி அறுவடை பெற்றுக் கொள்ளும் வரை அந்த மக்களின் உணவுத் தேவைகளை நிறைவேற்ற அரசாங்கம் நடவடிக்கை எடுக்குமென்றும் ஜனாதிபதி குறிப்பிட்டார். அத்துடன் எந்தவொரு சந்தர்ப்பத்திலும் பயங்கரவாதிகளின் தேவை நிறைவேறுவதற்கு இடமளிக்கப் போவதில்லை என்றும் மீண்டும் யுத்தத்தை ஏற்படுத்த எவருக்கும் இடம் கிடைக்காது என்றும், ஜனநாயகத்துக்கு மதிப்பளிக்கும் சமாதான நாட்டை உருவாக்கவும், மீண்டும் வடக் கில் மக்கள் அழிவுக்கு உள்ளாகும் யுகத்துக்கு இட்டுச் செல்லப் போவதில்லையென ஜனாதிபதி தெரிவித்தார்.

தமிழ் மக்களின் பிரதிநிதிகளின் ஒத்துழைப்பு அதற்கு தேவைப்படுவதாகவும், அனைத்துத் தீர்வுகளும் அனைத்து மக்களுடனும் சம்பந்தப்பட்டதாக இருக்கவேண்டும் என்றும், அவசரமாக தீர்வை பெற்றுத் தருவது பிரச்சினைகளை தோற்றுவிக்கும். இதனால், கிரமமாக திட்டமிடப்பட்ட வகையில் செயலாற்றுவதன் அவசியம் பற்றியும் ஜனாதிபதி இங்கு சுட்டிக்காட்டியதாக ஜனாதிபதி அலுவலகம் விடுத்துள்ள அறிக்கையில் தெரிவிக்கப்பட்டுள்ளது.

இதேவேளை இங்கு பேசிய அமைச்சர் பசில் ராஜபக்ஷ, மீள்குடியமர்த்தப்பட்ட மக்களின் பிரதேசங்களில் சுகாதாரம், கல்வி, விவசாயம், மீன்பிடி, மத தலங்க ளின் அபிவிருத்தி ஆகியவை பற்றி அவ தானம் செலுத்தப்படுமென குறிப்பிட்டார். இதன்படி 75 ஆயிரம் துவிச்சக்கர வண்டிகளை வழங்கும் நடவடிக்கை ஏற்கனவே ஆரம்பிக்கப்பட்டுள்ளது. அப்பிரதேசங்களில் விவசாய நடவடிக்கைக ளுக்கு விவசாய திணைக்களம் மாகாண சபைகளுக்கு 100 உழவு இயந்திரங்களை வழங்கியுள்ளது. அத்துடன் மேலும் 500 இரண்டு சக்கர உழவு இயந்திரங்கள் வழங்க நடவடிக்கை எடுக்கப்படுகிறது என்றும் அவர் மேலும் கூறினார்.

எமது முழுமையான ஒத்துழைப்பை தங்களுக்கு வழங்குவோம். தாங்கள் சர்வகட்சி கூட்டமொன்றை கூட்டி தமிழ் மக்களின் பிரச்சினைகளை தீர்ப்பதற்கு பல்வேறு செயற்பாடுகள் மூலம் நடவடிக்கை எடுத்திருக்கிaர்கள். தமிழ் மக்களுக்கு சமமாக வாழும் உரிமையை பெற்றுத் தரவும், சுபீட்சமான நாட்டை கட்டியெழுப்ப வேண்டும் என்பதே எமது பிரார்த்தனையாகும். தங்களுடன் சேர்ந்து பணியாற்றுவது எமது விருப்பமாகும் என்று தமிழ்த் தேசிய கூட்டமைப்பின் தலைவரும், தமிழரசுக் கட்சி பாராளுமன்றக் குழுத் தலைவருமான ஆர். சம்பந்தன் இந்த சந்திப்பின் போது குறிப்பிட்டார்.

TNA_Government_08June10தமிழ் மக்களின் மீள் குடியேற்றம் மற்றும் இனப்பிரச்சினை தீர்வு தொடர்பில் அரசாங்கம் தமிழ்த் தேசியக் கூட்டமைப்புடன் இணைந்து செயற்பட உள்ளதாக ஜனாதிபதியுடனான இன்றைய பேச்சுவார்த்தையில் உறுதியளிக்கப்பட்டதாக நாடாளுமன்ற உறுப்பினர் சுரேஷ் பிரேமசந்திரன் தெரிவித்தார்.இப்பேச்சுவார்த்தையில் தமிழ் மக்களின் மீள் குடியேற்றம் , அகதி முகாம்களில் வசித்து வரும் மக்களின் சுகாதரம் மற்றும் கல்வி, மீளகுடியமர்த்தப்படும் மக்களுக்கு தேவையான அடிப்படை வசதிகளை ஏற்படுத்தி கொடுத்தல் சம்பந்தமாக கலந்துரையாடப்பட்டதாகவும் அவர் குறிப்பிட்டார்.

இந்த சந்திப்பில் தமிழர் விடுதலை கூட்டமைப்பின் சார்பில் ஆர். சம்பந்தன், மாவை சேனாதிராசா, சுரேஷ் பிரேமச்சந்திரன், ஏ. விநாயகமூர்த்தி, செல்வம் அடைக்கலநாதன், என். சிவசக்தி ஆனந்தன், பொன். செல்வராஜ், பி. அரியனேந்திரன், யோகேஷ்வரன், பி. பியசேன, சரவணபவன், எஸ். ஸ்ரீதரன், எம். ஏ. சுமந்திரன் ஆகியோரும் அரசாங்கத்தின் சார்பில் அமைச்சர்கள் மைத்திரிபால சிரிசேன, பசில் ராஜபக்ஷ, ஜீ. எல். பீரிஸ், நிமல் சிரிபால டி சில்வா, டலஸ் அலஹப்பெரும, மற்றும் பேராசிரியர் ரஜீவ விஜேசிங்க, சரத் வாஸ் குணவர்தன, ஜனாதிபதியின் செயலாளர் காமினி செனரத் ஆகியோர் கலந்துகொண்டனர்.

படங்கள்: ஏசியன் ரிபியூன் – நன்றி

தற்போதைய தருணத்தில் இலங்கைக்கு வெளிமட்டத் தலையீடு அவசியமில்லை – ஆசிய பாதுகாப்பு மாநாட்டில் பீரிஸ்

gl.jpgஇலங் கையில் இடம்பெற்று வரும் நல்லிணக்க நடவடிக்கைகளில் வெளிநாட்டுத் தலையீட்டுக்கு எதிரான கருத்தை வெளிவிவகார அமைச்சர் ஜி.எல்.பீரிஸ் முன்வைத்திருக்கிறார்.”இந்தக் கட்டத்தில் இறைமையுள்ள அரசாங்கத்துக்கு தீய நோக்கத்துடனான எந்த சுமைகளையும் ஏற்றக்கூடாது” என்று அவர் கூறியுள்ளார்.

லண்டனை தளமாக கொண்ட கேந்திரோபாயக் கற்கைகளுக்கான சர்வதேச நிறுவனத்தால் சிங்கப்பூரில் ஏற்பாடு செய்யப்பட்டிருந்த 9 ஆவது ஆசிய பாதுகாப்பு மாநாட்டின் அமர்வின் போதே பீரிஸ் இதனை கூறியுள்ளார்.”கிளர்ச்சி எதிர்ப்பும் ஆட்சியை வலுப்படுத்துவதும்” என்ற கருப்பொருளில் அமைச்சர் பீரிஸ் உரையாற்றிய பின்னர் கேள்விக்கணைகள் சரமாரியாக தொடுக்கப்பட்டதாக இந்துப் பத்திரிகை குறிப்பிட்டது.

“இந்தக் கட்டத்தில் வெளிமட்ட தலையீட்டுக்கான எந்தவொரு தேவையும் இருப்பதாக நாங்கள் நினைக்கவில்லை”  என்று அவர் குறிப்பிட்டார்.”நாங்கள் நடவடிக்கைகளை முன்னெடுக்கும் போது குறைபாடுகள் தேவைகள் ஏற்பட்டால் நிச்சயமாக எமக்குத் தேவைப்படும் ஆதரவு குறித்து ஐ.நா. முறைமையிலிருந்து பெற்றுக்கொள்வது தொடர்பாக பேசாமல் இருக்க மாட்டோம்” என்று கூறியுள்ளார்.

நீதியான தீர்வை அமுல்படுத்துவது தொடர்பாக சிங்கள மக்களின் மனநிலை முழுமையாக உள்வாங்கிக்கொள்ளக்கூடிய நிலைமையில் இருப்பதாக மேலும் குறிப்பிட்ட அமைச்சர் பீரிஸ், 25 வருடங்களில் முதல் தடவையாக முயற்சிகளை மேற்கொள்ளக்கூடியதாக இருப்பதாகவும் தெரிவித்துள்ளார்.அரசியலமைப்பில் மாற்றத்தை ஏற்படுத்துவதற்கான சட்டரீதியான ஆற்றலையும் அரசாங்கம் கொண்டிருப்பதாகவும் அவர் கூறியிருக்கிறார்.

மோதலுக்குப் பின்னரான தற்போதைய கட்டத்தில் தமிழ் அரசியல் கட்சிகள், அரசியல் மறுசீரமைப்புக்கான நடவடிக்கைகளுக்கு வலுவான பங்களிப்பை மேற்கொள்ள வேண்டும் என்றும் பீரிஸ் வலியுறுத்தியுள்ளார்.கடந்த கால யோசனைகளுக்கு அப்பால் மேலும் விடயங்களை சேர்த்துக் கொள்ள நாங்கள் விரும்பவில்லை. மேற்குலகிலும் ஏனைய இடங்களிலுமுள்ள புலம்பெயர்ந்தவர்களுக்கு நாங்கள் விடுக்கும் செய்தியானது அவர்களும் பங்களிப்பை வழங்க வேண்டும் என்பதாகும். இலங்கையின் வட,கிழக்கில் தற்போது மேற்கொள்ளப்படும் உள்சார் கட்டமைப்பு திட்டங்களில் அவர்களையும் பங்கேற்குமாறு நாங்கள் அவர்களுக்கு கூறுகின்றோம்.

அரசியல் தீர்வு மற்றும் பொருளாதார மறுமலர்ச்சி தொடர்பாக உள்நாட்டு மட்டத்திலான பொறிமுறையே இப்போது மேற்கொள்ளப்படுகிறது. எந்தவொரு வெளிமட்ட அழுத்தமும் இல்லாமல் இது இடம்பெறுகிறது. “அவசரகால ஒழுங்குவிதிகளில் 70 சதவீதமானவற்றை நாம் நீக்கியுள்ளோம்” என்றும் பீரிஸ் தெரிவித்திருக்கிறார்.

முன்னாள் போராளிகளை சமூகத்துடன் மீள ஒருங்கிணைப்பது தொடர்பான யோசனையை அரசாங்கம் கொண்டிருந்தது.அவர்களின் எண்ணிக்கை 12 ஆயிரமாகும். 9 ஆயிரம் பேர் உடனடியாக விடுதலை செய்யப்படக்கூடியவர்களாகும். இவர்களுக்கு எதிராக நடவடிக்கைகளை முன்னெடுக்க வேண்டிய தேவை இல்லை என்பது அரசாங்கத்தின் தீர்மானமாகும்.மீதிப் பேரைப் பொறுத்தவரை அவர்களை மீண்டும் சமூகத்துடன் ஒருங்கிணைப்பது தொடர்பாக மிகவும் கவனமாக தயாரிக்கப்பட்ட நிகழ்ச்சித் திட்டத்தை கொண்டுள்ளோம் என்றும் பீரிஸ் தெரிவித்திருக்கிறார்.

பல்கலைக்கழகங்களுக்கு ஒரே நாளில் மாணவர்களை அனுமதிக்க தீர்மானம் – அமைச்சர் எஸ். பி. திஸாநாயக்க

பல்கலைக்கழக தெரிவுக்கான ‘இஸட் ஸ்கோர்’ வெட்டுப் புள்ளிகள் நேற்று பல்கலைக்கழக மானிய ஆணைக் குழுவினால் வெளியிடப்பட்டன. இதன்படி 22 ஆயிரத்துக்கும் அதிகமான மாணவர்கள் சகல பல்கலைக்கழகங்களுக்கும் தெரிவு செய்யப்பட்டுள்ளனர்.

இம்முறை சகல பல்கலைக்கழகங்களுக்கும் ஆகஸ்ட் மாதத்தில் ஒரே நாளில் மாணவர்களை அனுமதிக்க முடிவு செய்துள்ளதாகவும் ஆங்கிலப் பாடநெறியில் சித்திபெறும் மாணவர்களே பாடநெறிகளுக்கு சேர்க்கப்படுவர் எனவும் உயர் கல்வி அமைச்சர் எஸ். பி. திஸாநாயக்க கூறினார்.

பல்கலைக்கழக வெட்டுப்புள்ளிகளை வெளியிடுவது தொடர்பான ஊடகவியலாளர் மாநாடு நேற்று (7) பல்கலைக்கழக மானிய ஆணைக்குழுவில் நடைபெற்றது. இங்கு கருத்துத் தெரிவித்த அமைச்சர் மேலும் கூறியதாவது :-யுத்தம் முடிவடைந்துள்ளதால் நாடு பூராவும் உள்ள சகல பல்கலைக்கழகங்களுக்கும் இம்முறை மாணவர்கள் தெரிவு செய்யப்பட உள்ளனர்.

பல்கலைக்கழகங்களுக்கு தெரிவாகும் மாணவர்களுக்கு 6 மாத கால ஆங்கில பயிற்சி வழங்கப்படும். ஆங்கில பரீட்சையில் தோற்று பவர்களே பல்கலைக்கழக பாட நெறிகளுக்கு அனுமதிக்கப்படுவர். பல்கலைக்கழகங்களில் இருந்து பகிடிவதையை முற்றாக ஒழிக்க சகல நடவடிக்கைகளும் எடுக்கப்படும். இதற்கு சகல தரப்பினரும் தமது ஒத்துழைப்பை வழங்க வேண்டும்.

பல்கலைக்கழகங்களின் வசதிகளை மேம்படுத்துவதற்கு தேவையான நிதியை வழங்குவதற்கு முன்னுரிமை வழங்குமாறு ஜனாதிபதி திறை சேரிக்கு ஆலோசனை வழங்கியுள்ளார்.

பல்கலைக்கழகங்களில் காணப் படும் பாடநெறிகளையும் மாற்ற உள்ளோம். மாணவர்களின் வருகை கட்டாயம் 80 வீதமாக இருக்க வேண்டும். இது குறித்து கவனம் செலுத்தப்படும். ஒழுங்காக பரீட்சை எழுதாதவர்கள் சித்தியடைய தவறியவர்களாகவே கருதப்படுவர்.

இம்முறை மருத்துவ பீடத்துக்கு 1147 பேரும் பொறியியல் பீடத்துக்கு 1223 பேரும் முகாமைத்துவ பீடத்துக்கு 3270 பேரும் கலைப் பிரிவுக்கு 3802 பேரும் தெரிவு செய்யப்படுவர். யாழ் பல்கலைக்கழகத்துக்கு 100 மருத்துவ மாணவர்கள் தெற்கிலிருந்து அனுப் பப்படுவர் என்றார்.

IIFA சர்வதேச இந்திய திரைப்பட விழா வெற்றிகரமாக நடந்து முடிந்தது. எதிர்க்கட்சியின் குற்றச்சாட்டுக்கு அரசு மறுப்பு

iifa-awards-logo.jpgபொலிவுட் சினிமாவின் விமரிசையானதும் பாரியதுமான விருது வழங்கல் விழா என கருதப்படும் ஐஃபா எனப்படும் சர்வதேச இந்திய திரைப்பட விருது வழங்கல் விழா இலங்கையில் வெற்றிகர மாக நடந்து முடிந்துள்ளது.

இலங்கையில் இந்த விழா சிறப்பாக நடப்பதை தடுக்கும் நோக்கில் இந்தியாவிலிருந்து பிரபல சினிமா நட்சத்திரங்கள் இங்கு வருவதை தடுப்பதற்கு முயற்சித்த பயங்கர வாத நிகழ்வாக இருந்து வந்த பிரிவினை வாத சக்திகளுக்கு இது மோசமான தோல்வியை ஏற்படுத்தியுள்ளது. அதேவேளை இந்த விழா தொடர்பாக இலங்கையின் பிரதான எதிர்க்கட்சி கூறிய மோசமான குற்றச்சாட்டுகளை அரசாங்கம் வன்மையாக நிராகரிக்கிறது என்று அரசாங்க தகவல் திணைக்களத்தின் ஊடக அறிக்கையொன்று கூறுகிறது.

அந்த அறிக்கையில் மேலும் கூறப்பட் டுள்ளதாவது,

ஐஃபா விருது வழங்கும் நிகழ்வினை இலங்கையில் நடத்துவதற்கு அந்த விழா ஏற்பாட்டாளர்கள் கடந்த மார்ச் 23ஆம் திகதியே தீர்மானித்தனர். அச்சமயம் இவ் விழாவை தமது நாட்டில் நடத்துமாறு தென் ஆபிரிக்கா, சிங்கப்பூர் மற்றும் தென் கொரியா உள்ளிட்ட பல நாடுகள் விண்ணப்பித்தமை குறிப்பிடத்தக்கது.

விழாவை நடத்த மிகவும் சிறந்த நாடு இலங்கை என விழா ஏற்பாட்டுக் குழு தீர்மானித்ததும் 2 மாத கால குறுகிய காலத்தில் விழாவுக்கான அனைத்து ஏற்பாடுகளையும் இலங்கை செய்து முடித்தது. இதன் மூலம் இலங்கையின் பொருளாதார, சுற்றுலா, வர்த்தக துறைகளுடன் உள்ளூர் சினிமாத் துறையும் பல நன்மைகளை பெற முடிந்தது. ஐஃபா விழா போன்ற சர்வதேச மட்ட விழாவை நடத்துவதற்காக சுகததாச உள்ளக விளையாட்டரங்கு நவீனமயப்படுத்தப்பட்டது.

இந்த விழா நடைபெற்றபோது ஒவ்வொரு இரண்டு நிமிடங்களுக்கும் ஒரு முறை இலங்கையைப் பற்றிய செய்தியொன்று பிரசாரம் செய்யப்பட்டது. இந்த செய்தியினால் இலங்கையின் அபிமானமும் தற்போதைய சமாதான சூழலையும் அடங்கிய விழாவின் முழுமையான ஒளிப்பதிவு எதிர்வரும் 11ஆம் திகதி தொலைக்காட்சியில் ஒளிபரப்பாகவுள்ளது. இந்தியாவில் உள்ள 600 மில்லியன் பேர் உட்பட. உலகளாவிய ரீதியில் 130 நாடுகளில் உள்ள மக்கள் இந்த ஒளிபரப்பினை பார்த்து ரசிப்பார்கள்.

மூன்று தசாப்த கால யுத்தத்துக்கு பின்னர் சமாதான சூழலில் இலங்கையில் சுற்றுலாப் பயணம் மேற்கொள்ள உகந்த இடம் என்பதை முன்னணி நாடுகள் பல கூறிவந்துள்ளன. இந்நிலையில் இலங்கை தொடர்பான இந்த செய்தி 120 நாடுகளில் இலவசமாக பிரசாரம் செய்ய முடிந்தமை இலங்கைக்கு கிடைத்த அரிய சந்தர்ப்பமாகும்.

சுற்றுலா செயற்பாடுகள் தொடர்பாக இலங்கையினால் இவ்வாறான பிரசாரம் ஒன்றை மேற்கொள்வதானால் குறைந்த பட்சம் 4500 கோடி ரூபாவை விட அதிகமாக செலவிட வேண்டியிருந்திருக்கும்.

அத்துடன் ஐஃபா விழா நடைபெற்ற அதேவேளை ஜனாதிபதி மஹிந்த ராஜ பக்ஷ தலைமையில் கொழும்பில் இடம் பெற்ற வர்த்தக சந்திப்பு மிகவும் வெற்றிகரமாக அமைந்துள்ளது. இது இலங்கையின் முதலீடு மற்றும் வர்த்தக வாய்ப்புகளை விஸ்தரித்துள்ளதுடன் பல தொழில் வாய்ப்புகளையும் உருவாக்கியுள்ளது.

உலகில் இன்று பல நாடுகள் சர்வதேச விளையாட்டு மற்றும் விழா நிகழ்வுகளை அல்லது மாநாடுகளை தமது நாடுகளில் நடத்துவதற்கு முன்வருவது அதன் மூலம் தமது நாட்டின் பொருளாதாரத்தை அபிவிருத்தி செய்து கொள்ளும் நோக்கத்தினாலாகும். குறிப்பாக சொல்வதானால் 1976ஆம் ஆண்டு அணிசேரா நாடுகளின் உச்சிமாநாட்டை இலங்கையில் நடத்தியதால்தான் சர்வதேச மாநாட்டு மண்டபம் எமக்கு கிடைத்தது.

அதேபோன்று பொதுநலவாய அமைப்பு நாடுகளின் உச்சிமாநாட்டை 2013 இல் இலங்கையில் நடத்துவதற்கு தீர்மானிக்கப்பட்டமை இலங்கையில் அமைதியான சூழல் ஏற்பட்டுள்ளதன் காரணமாகவேயாகும். 11ஆவது ஐஃபா விருது வழங்கும் விழா இலங்கையில் வெற்றிகரமாக நடந்து முடிந்துள்ளதையடுத்து அடுத்த விழாவை கனடாவில் நடத்த ஏற்பாட்டாளர்கள் இப்போதே தீர்மானித்துள்ளதாக அரச தகவல் திணைக்களத்தின் ஊடக அறிக்கையில் கூறப்பட்டுள்ளது.

யாழ்ப்பாணத்தில் அகில இலங்கை தமிழ் மொழித் தினப் போட்டி

2009ம் ஆண்டிற்கான அகில இலங்கை தமிழ் மொழித் தின தேசிய மட்டப் போட்டிகள் இம்முறை யாழ்ப்பாணத்தில் நடைபெறவுள்ளன.

இப்போட்டிகள் எதிர்வரும் ஜூன் மாதம் 19ம், 20ம் திகதிகளில் யாழ்ப்பாணம் மத்திய கல்லூரி மற்றும் யாழ்ப்பாணம் வேம்படி மகளிர் கல்லூரி ஆகிய இரு பாடசாலைகளில் நடாத்துவதற்கான சகல ஏற்பாடுகளும் மேற்கொள்ளப்பட் டுள்ளன. இப்போட்டிகள் தொடர்பான அறிவுறுத்தல்கள் போட்டியாளர்களுக்கும் குறித்த பாடசாலை அதிபர்களுக்கும் அறிவிக்கப்பட்டுள்ளன.