இலங்கைத் தமிழர் மறுவாழ்வுக்காக 18 அம்சத்திட்டம் ஒன்றை பரிந்துரை செய்திருக்கும் தமிழக முன்னாள் முதலமைச்சரும் அனைத்திந்திய அண்ணா திராவிட முன்னேற்றக்கழகத்தின் பொதுச்செயலாளருமான ஜெயலலிதா இத்திட்டத்தை நிறைவேற்றிய பின்னரே உலகத் தமிழ் செம்மொழி மாநாடு நடத்தப்படவேண்டுமென்று கூறியுள்ளார்.
இது தொடர்பாக ஜெயலலிதா வெளியிட்டுள்ள அறிக்கை வருமாறு;
இலங்கையில் போர் முடிந்து ஓராண்டுக்கு மேலாகியும் அங்குள்ள இலட்சக்கணக்கான தமிழர்கள் எந்தவித வசதியும் இல்லாமல் அகதிகளாக அநாதைகளாக அடிமைகளாக முகாம்களில் கட்டாயமாக அடைக்கப்பட்டு அவல நிலையில் வாழ்ந்து கொண்டிருக்கின்றார்கள். கடந்த வருடம் இலங்கையில் போர் முடிந்தவுடன் கனிமொழி உட்பட தி.மு.க. கூட்டணியைச் சேர்ந்த தமிழக பாராளுமன்ற உறுப்பினர்கள் இலங்கைக்குச் சென்று இலங்கை ஜனாதிபதியை சந்தித்து இலங்கைத் தமிழர்களுக்கு மறுவாழ்வு அளிக்கவேண்டுமென்ற கோரிக்கையை முன் வைத்துவிட்டு வந்தனர்.
இலங்கை ஜனாதிபதியும் 2009 ஆம் ஆண்டு இறுதிக்குள் இலங்கைத் தமிழர்கள் முன்பு வாழ்ந்த இடங்களுக்கு அனுப்பப்படுவர்.அவர்களுக்கு மறுவாழ்வு அளிக்கப்படும் என்று அவர்களிடம் உறுதி அளித்தார்.ஆனால், இன்னமும் அதே நிலைமை தான் அங்கு நீடிக்கிறது.அண்மையில் இலங்கை ஜனாதிபதி இந்தியப் பிரதமரை சந்திக்க இந்தியாவிற்கு வருகை புரிந்துவிட்டுச்சென்றார்.இலங்கை ஜனாதிபதி வருகிறார் என்றவுடனேயே இலங்கை முகாம்களில் அடைக்கப்பட்டுள்ள 80,000 இலங்கைத் தமிழர்களை அவர்களது சொந்த இடங்களுக்குத் திருப்பி அனுப்ப இலங்கை ஜனாதிபதியை மத்திய அரசு வலியுறுத்த வேண்டுமென பிரதமருக்கு வழக்கம் போல கடிதம் எழுதினார் கருணாநிதி.உடனே இந்தியப் பிரதமரும் இந்த ஆண்டு இறுதிக்குள் 47,000 தமிழர்கள் குடியமர்த்தப்படுவார்கள் என்று இலங்கை ஜனாதிபதி தன்னிடம் உறுதி அளித்ததாக கருணாநிதிக்கு கடிதம் எழுதியுள்ளதாக பத்திரிகைகளில் செய்தி வந்துள்ளது.
உண்மை நிலையோ தலைகீழாக உள்ளது.வட இலங்கையில் தமிழர்களின் அடையாளங்களை அழிக்கும் நடவடிக்கை இடம்பெறுவதாகவும் தமிழர்களின் பண்பாடு, சமயம் ஆகியவற்றின் மீது தாக்குதல் நடத்தப்படுவதாகவும் தமிழ்ப் பெயரில் இருந்த வீதிகளுக்கு சிங்களப் பெயர்கள் வைக்கப்படுவதாகவும் தமிழ் ஊர்களுக்கு சிங்களப் பெயர்கள் இடப்படுவதாகவும் இதன் மூலம் அங்குள்ள நிலங்கள் எல்லாம் சிங்கள நிலங்கள் என்று திரித்துக்கூற முயற்சி நடப்பதாகவும் போரின்போது சிதைந்துபோன தமிழர்களின் கோயில்கள், தேவாலயங்கள், மசூதிகள் ஆகியவற்றைக் கட்டித்தர நடவடிக்கையெடுக்காமல் புத்த விகாரைகள் புதிது புதிதாகக் கட்டப்படுவதாகவும் தகவல்கள் வருகின்றன. மொத்தத்தில் தமிழ்ப் பகுதிகள் சிங்கள மயமாக்கப்படுகின்றன.
இப்படிப்பட்ட சூழ்நிலையில் இலங்கைத் தமிழர்களை அவர்களின் சொந்த இடங்களுக்குத் திருப்பி அனுப்புவது என்பது எப்படி சாத்தியமாகும் என்று புரியவில்லை. 1,000 கோடி ரூபா மதிப்பில் 50 ஆயிரம் வீடுகள் கட்டித்தர இருப்பதாக மத்திய அரசு அறிவித்திருக்கிறது.
ஏற்கனவே மத்திய அரசின் சார்பில் 500 கோடி ரூபா நிதி அளிக்கப்பட்டதே? அந்த நிதி இலங்கைத் தமிழர்களின் மறுவாழ்விற்காக எந்தளவிற்கு உபயோகப்படுத்தப்பட்டு இருக்கிறது என்பதை மத்திய அரசு கேட்டறிந்ததா?
2009 ஆம் ஆண்டு தமிழகப் பாராளுமன்ற உறுப்பினர்கள் குழு இலங்கைக்குச் சென்று தமிழர்களின் மறுவாழ்வு குறித்துக் கேட்டபோது, அந்த ஆண்டு இறுதியில் நிறைவேற்றப்படுமென்று உறுதியளித்தார் இலங்கை ஜனாதிபதி.
தற்போது, இந்தியப் பிரதமரிடம் இந்த ஆண்டு இறுதிக்குள் 47,000 தமிழர்கள் குடியமர்த்தப்படுவதாக உறுதியளித்திருக்கிறார். இந்த உறுதிமொழி செயற்பாட்டில் இருப்பதாகத் தெரியவில்லை.
அவர் தெரிவித்துள்ள திட்டங்கள்:
1. இலங்கை வடபகுதி முகாம்களில் இன்னும் 1 லட்சம் பேர் ஆதரவற்றவர்களாய் முகாம்களில் உள்ளனர். அவர்களுக்கு மறுவாழ்வு அளிக்கப்பட வேண்டும்.
2. மறு குடியேற்றப்பட்ட மக்களுக்கு நிவாரணம் செய்து தரப்பட வேண்டும்.
3. அழிக்கப்பட்ட விவசாய நிலங்கள் சீரமைக்கப்பட வேண்டும்.
4. அழிக்கப்பட்ட நீர் ஆதாரங்கள் சரிசெய்யப்பட வேண்டும்.
5. மக்களுக்கு கல்வி கொடுக்கப்பட வேண்டும்.
6. கல்வி நிறுவனங்கள் அமைக்கப்பட வேண்டும்.
7. புதிய பள்ளிகள் கட்டப்பட வேண்டும்.
8. பழைய பள்ளிகள் புனர் நிர்மாணம் செய்யப்பட வேண்டும்.
9. போரினால் கணவனை இழந்த விதவைகளுக்கு மறுவாழ்வு அளிக்கப்பட வேண்டும்.
10. போரினால் கற்பழிக்கப்பட்ட சிறுமிகளுக்கும், பெண்களுக்கும் கவுன்சிலிங் தரப்பட வேண்டும்.
11. கோயில்கள், தேவாலயங்கள், மசூதிகள் புனர் நிர்மாணம் செய்து தரப்பட வேண்டும்.
12. கோயில்கள், தேவாலயங்கள், புத்த மடாலயங்களாக ஆக்கப்படுவதை நிறுத்த நடவடிக்கை எடுக்கப்பட வேண்டும்.
13. போரில் ஊனமுற்றவர்களுக்கு சிகிச்சையும், மறுவாழ்வும் தர வேண்டும்.
14. ஆண்கள் குறைந்துவிட்டதால் பெண்களுக்கு ஏற்பட்டுள்ள மன ரீதியான அழுத்தம் போக்கப்பட வேண்டும்.
15. பெண்களே நடத்தும் தொழிற்கூடங்கள் உருவாக்கப்பட வேண்டும்.
16. வருகின்ற அனைத்து நிவாரண உதவிகளும் தமிழ் மக்களுக்கு சரியான முறையில் சென்றடைய வேண்டும்.
17. தன்னார்வத் தொண்டு நிறுவனங்கள் அங்கு பணியாற்ற அனுமதிக்கப்பட வேண்டும்.
18. பத்திரிகையாளர்கள் தமிழர்களை சந்திக்க அனுமதிக்கப்பட வேண்டும்.
இவற்றையெல்லாம் நிறைவேற்றிய பின்னர், தமிழகத்தில் உள்ள அனைத்துக் கட்சிகளையும் அழைத்துப் பேசி மாநாடு நடத்தப்பட வேண்டும் என்று தமிழ் உலகமே எதிர்பார்க்கின்றது. சுருக்கமாகச் சொல்ல வேண்டும் என்றால், தமிழர்கள் எதிர்பார்க்கும் உரிமையும், சுய மரியாதையும் கொண்ட சமூகம் இலங்கையில் அமைக்கப்பட்ட பின்னரே தமிழ்நாட்டில் மாநாடு நடத்தப்பட வேண்டும் என்று ஜெயலலிதா கூறியுள்ளார்.
Dinamani