July

July

ஐ.தே.க. தலைமையகம் முன்பாக தீ மூட்டிக்கொண்டவர் மரணம்

fire.jpgஐ.தே.க. தலைமையகத்தின் முன்பாக தனக்குத்தானே தீ மூட்டிக்கொண்ட ஐ.தே.க. ஆதரவாளர் நேற்றுக் காலை உயிரிழந்தார். இவர் வெலிகமயைச் சேர்ந்த இரு பிள்ளைகளின் தந்தையான ரியன்ஸி அல்கம (60) என பொலிஸார் தெரிவித்தனர்.

இறப்பதற்கு முன் இவர் மிரிஹானை பொலிஸில் வாக்குமூலம் வழங்கியுள்ளதாக பொலிஸ் தலைமையகம் கூறியது.

கொழும்பு செல்வதாக வீட்டில் கூறிவிட்டே இவர் நேற்று முன்தினம் கொழும்புக்கு வந்துள்ளார். பிட்டகோட்டை பகுதிக்கு வந்துள்ள இவர் எரிபொருள் நிரப்பு நிலையமொன்றில் பெற்றோல் வாங்கிக்கொண்டு கட்சித் தலைமையகத்திற்கு வந்துள்ளதாக தெரிய வந்துள்ளது. களுபோவில ஆஸ்பத்திரியில் அனுமதிக்கப்பட்ட இவர், பின்னர் மேலதிக சிகிச்சைக்காக கொழும்பு பெரியாஸ்பத்திரிக்கு மாற்றப்பட்டார்.

இவரின் பிரேத பரிசோதனை நேற்று கொழும்பு பெரியாஸ்பத்திரியில் நடைபெற்றது. அவரின் மனைவியும் இரு பிள்ளைகளும் சாட்சியமளித்துள்ளனர். இறந்தவரின் சடலம் நேற்று மாலை வெலிகமவில் உள்ள அவரின் வீட்டுக்கு எடுத்துச் செல்லப்பட ஏற்பாடாகியிருந்தது.

இந்திய பிரதிநிதிகளின் வருகைக்கு இலங்கை அரசாங்கம் வரவேற்பு

வடக்கில் மக்களின் மீள் குடியேற்ற நிலவரங்களைக் கண்டறிந்துகொள்வதற்காக இந்தியப் பிரதிநிதிகள் இலங்கை வருவதை அரசாங்கம் வரவேற்றுள்ளது.

இந்தியப் பிரதமர் கலாநிதி மன்மோகன் சிங் பிரதிநிதியொருவரை அனுப்பி வைத்தால், அது நல்லதொரு விடயமாகுமென்று பாதுகாப்பு விவகாரங்கள் மற்றும் அமைச்சரவை பேச்சாளரான தகவல், ஊடகத்துறை அமைச்சர் கெஹலிய ரம்புக்வெல்ல தெரிவித்தார்.

‘‘இலங்கை விடயத்தில் இந்தியா நிதானமாகவே செயற்படும். பருப்பை போடுவதைப்போல் பலவந்தமாக செயற்படாது. இரு நாடுகளுக்குமான உறவு அந்தளவுக்குச் சிறப்பாக உள்ளது” என்றும் தேசிய பாதுகாப்புக்கான ஊடக மத்திய நிலையத்தில் நேற்று (27) காலை நடைபெற்ற செய்தியாளர் மாநாட்டில் அமைச்சர் கூறினார்.

இந்திய மத்திய அமைச்சின் அதிகாரி யொருவரை இலங்கைக்கு அனுப்பி வைப்பதாகத் தமிழக முதல்வருக்குப் பிரதமர் மன்மோகன் அறிவித்திருக் கிறாரென்றும், தமிழ்த் தேசிய கூட்டமைப்பினர் முதல்வர் கலைஞர் மு. கருணாநிதியைச் சந்தித்துள்ளமை பற்றியும் அரசின் கருத்து யாதென செய்தியாளர் ஒருவர் கேள்வி எழுப்பினார்.

இதற்குப் பதில் அளித்த அமைச்சர் ரம்புக்வெல்ல, “ஜனாதிபதி மஹிந்த ராஜபக்ஷ அண்மையில் இந்தியா சென்றிருந்தபோது அந்தக் குழுவில் நானும் இடம்பெற்றிருந்தேன். ஆளுங்கட்சி, எதிர்க் கட்சி உறுப்பினர்களையும் சந்தித்தோம். அப்போது தமிழ் நாட்டைச் சேர்ந்த பாராளுமன்ற உறுப்பினர்கள் 21 பேரையும் சந்தித்தோம். அவர்களை, இலங்கைக்கு வந்து நிலைமைகளை நேரில் கண்டறியுமாறு ஜனாதிபதி பகிரங்க அழைப்பு விடுத்தார். அதில் அரசியல் நோக்கம் கிடையாது. ஆனால், தமிழ்த் தேசிய கூட்டமைப்பினர் விடுத்த அழைப்பு அரசியல் நோக்கம் கொண்டது” என்றார்.

2ஆவது ரெஸ்ட் போட்டி – இலங்கை அணி 642 ஓட்டங்களுக்கு 4 விக்கெட்

cri.jpgகொழும்பு எஸ்.எஸ்.சி மைதானத்தில் நடைபெற்றுவரும் இலங்கை இந்திய அணிகளுக்கு இடையிலான 2ஆவது ரெஸ்ட் போட்டியின் இரண்டாம் நாள் ஆட்டநேர முடிவின்போது இந்திய அணி எதுவித விக்கெட் இழப்பும் இன்றி 95 ஓட்ட்ங்களை பெற்றுள்ளது.

நேற்றய தினம் இலங்கை அணி 642 ஓட்டங்களை பெற்றிருந்த நிலையில் தனது முதல் இனிங்ஸை இடைநிறுத்திக்கொண்டது.  இலங்கை அணி சார்பில் அதி கூடிய ஓட்டமாக 219 ஓட்டங்களை குமார் சங்ககார பெற்றுக்கொண்டதுடன் மஹேல மற்றும் பரனவிதான சதம் அடித்தனர். பரணவித்தாரன 100 ஓட்டங்களையும் சங்கக்கார 219 ஓட்டங்களையும் மஹேல ஜெயவர்தன 174 ஓட்டங்களையும் பெற்றமை குறிப்பிடத்தக்கது.

அரசியலமைப்பு மாற்றம் தொடர்பில் பிரதான எதிர்க்கட்சியுடன் ஆலோசிப்பது மட்டும் போதாது – ஐ.தே.க

அரசியலமைப்பு மாற்றம் தொடர்பில் அரசும் பிரதான எதிர்க்கட்சியும் மாத்திரம் இறுதிமுடிவை எட்ட முடியாதெனத் தெரிவித்த ஐக்கிய தேசியக்கட்சி, அரசியலமைப்புத் திருத்தம் குறித்த யோசனைகளை அரசு முன்வைத்து சகல அரசியல் கட்சிகள், மகாசங்கம் உட்பட அனைத்து சமயத் தலைவர்கள், சிவில் அமைப்புகளுடனும் பேசவேண்டியதன் அவசியத்தையும் வலியுறுத்தியுள்ளது. நிறைவேற்று அதிகார ஜனாதிபதிமுறை ஒழிக்கப்பட்டு அதிகாரம் பாராளுமன்றத்துக்கு வழங்கப்படவேண்டுமென்பதே ஐ.தே.க.வின் நிலைப்பாடெனவும் நிறைவேற்று அதிகாரம் பிரதமருக்கு வழங்க வேண்டுமென்ற எந்த உடன்பாட்டுக்கும் கட்சி முன்வரவில்லை எனவும் சுட்டிக்காட்டப்பட்டுள்ளது.

எதிர்க்கட்சித்தலைவர் அலுவலகத்தில் திங்கட்கிழமை நடைபெற்ற செய்தியாளர் மாநாட்டில் ஐக்கிய தேசியக்கட்சியின் ஊடகப் பேச்சாளர் கயந்த கருணாதிலக்க மேற்கண்டவாறு விளக்கமளித்தார். இது தொடர்பில் ஊடகவியலாளர்கள் எழுப்பிய கேள்விகளுக்குப் பதிலளித்த கயந்த கருணாதிலக்க மேலும் விளக்கமளிக்கையில் கூறியதாவது;

அரசியலமைப்புத்திருத்தம், தேர்தல் முறை மாற்றங்கள் தொடர்பில் ஆராயும் பொருட்டு ஜனாதிபதி மகிந்த ராஜபக்ஷ எதிர்க்கட்சித் தலைவர் ரணில் விக்கிரமசிங்கவுடன் பேச்சு நடத்தினார். இன்றைய காலகட்டத்தின் அவசியத்தைக் கருத்தில் கொண்டு அதற்கு இணக்கம் தெரிவிக்கப்பட்டு நிகழ்ச்சி நிரலைத்தயாரிப்பதற்காக குழு அமைக்கப்பட்டது.

நிறைவேற்று அதிகார ஜனாதிபதிமுறை ஒழிப்பது, நிறைவேற்றதிகாரம் பாராளுமன்றத்துக்கே வழங்கப்படுவது போன்றவற்றுடன் இணைந்ததாக அரசியலமைப்பு முழுமையாக திருத்தப்பட வேண்டுமென்ற ஆரம்ப நிலைப்பாட்டிலேயே ஐக்கிய தேசியக் கட்சி இருக்கின்றது. இதில் எந்த விதமான மாற்றமும் கிடையாது.

அதேசமயம் அரச தரப்பும், ஐக்கிய தேசியக் கட்சியும் மாத்திரம் பேசி இதில் தீர்வை எட்ட முடியாது. அரசிலுள்ள பல கட்சிகள் கூட இது விடயத்தில் முரண்பாடான நிலைப்பாட்டிலேயே காணப்படுகின்றன. ஜே.வி.பி.தரப்பு தெரிவித்திருக்கும் கருத்து மறுக்கப்பட முடியாது. அதனுடன் நாமும் உடன்படவே செய்கின்றோம். அரசுடன் கூடி தனித்துத்தீர்மானமெடுக்க ஐக்கிய தேசியக் கட்சி முற்படவில்லை. பேச்சுக்கான அடித்தளத்தை இடுவதற்கான நிகழ்ச்சி நிரலைத் தயாரிக்கவே நாம் முன் வந்துள்ளோம். எனவும் கயந்த கருணாதிலக்க தெரிவித்தார்.

பீனிக்ஸ் நிறுவனத்திற்கு தங்க விருது

adfest.jpgஇலங்கை விளம்பர நிறுவனங்களில் ஒன்றான பீனிக்ஸ் ஒகில்வி நிறுவனம் Adfest 2010 விருதுகளில் தங்க விருது ஒன்றை பெற்றுள்ளது. விளம்பரத்துறைக்காக சர்வதேச அளவில் விருதுகள் பல வழங்கப்பட்டாலும் இலங்கையைச் சேர்ந்த நிறுவனமொன்று முதற்தடவையாக இவ்வாறானதொரு விருதை பெற்றுள்ளமை குறிப்பிடத்தக்கது

மீள்குடியேறியோருக்கு 81 ஆயிரம் தென்னங் கன்றுகள்

வடக்கில் மீள் குடியேற்றப்பட்ட குடும்பங்களுக்கு வீட்டுத் தோட்ட திடடத்தின்கீழ் இந்த வருடத்தில் 81 ஆயிரம் தென்னங்கன்றுகள் வழங்க நடவடிக்கை எடுத்துள்ளதாக தெங்கு அபிவிருத்தி சபை கூறியது. 5 வருட காலத்தினுள் ஒரு வீட்டுக்கு 3 தென்னங்கன்று வீதம் வட பகுதிக்கு ஒரு இலட்சம் தென்னங்கன்றுகள் வழங்கப்பட உள்ளன.

யுத்தத்திற்கு முன்னர் வடக்கில் 50 ஆயிரம் ஏக்கரில் தெங்கு பயிறிடப்பட்டிருந்தது. ஆனால் தற்பொழுது 37 ஆயிரம் ஏக்கரில் மட்டுமே தென்னை மரங்கள் எஞ்சியுள்ளன. எனவே வடக்கில் துரிதமாக தெங்குச் செய்கையை மேம்படுத்துவதற்காக 9 ஆயிரம் தென்னங்கன்றுகள் அங்கு அனுப்பப்பட்டுள்ளன.

கிளிநொச்சியில் மாணவியை பாலியல் வல்லுறவிற்குட்படுத்த முயன்றவர் விளக்கமறியலில்!

கிளிநொச்சி பாடசாலை மாணவி ஒருவரை பாலியல் வல்லுறவிற்குட்படுத்த முயன்றமை தொடர்பான வழக்கு விசாரணை ஒன்று கிளிநொச்சி நீதிமன்றில் நடைபெற்றுள்ளது. இதில் சம்பந்தப்பட்ட நபரை விளக்கமறியலில் வைக்குமாறு நீதவான் உத்தரவிட்டுள்ளார்.

கடந்த வெள்ளிக்கழமை கிளிநொச்சி நகரப்பகுதி பாடசாலை ஒன்றில் கல்வி பயிலும் மாணவி ஒருவர் படசாலை முடிந்து வீடு திரும்பிக்கொண்டிருந்த போது, அவரை வழிமறித்த நபரொருவர் அம்மாணவியை பாலியல் வல்லுறவிற்குட்படுத்த முயன்றுள்ளார். குறித்த மாணவி சத்தமிட முயன்ற போது அவரின் வாயைப் பொத்தியிருக்கின்றார். அவ்வழியாக வந்த சில பொதுமக்கள் மாணவியை காப்பாற்றியதோடு சம்பந்த நபரையும் நையப்புடைத்து, பொலிஸாரிடம் ஒப்படைத்துள்ளனர். பாதிக்கபட்ட மாணவி கிளிநொச்சி வைத்தியசாலையில் அனுமதிக்கப்பட்டார். பொலிஸார் இச்சம்பவம் குறித்து விசாரணைகளை மேற்கொண்டு வருகின்றனர்.

மாணவியை பாலியல்வல்லுறவிற்கு உட்படுத்த முயன்றவர் வியாபார நிறுவனம் ஒன்றில் விற்பனைப் பிரதிநிதியாக பணியாற்றுபவர் என்பது குறிப்பிடத்தக்கது.

வடமாகாணசபை அலுவலகங்கள் கிளிநொச்சிக்கு இடம்மாற்றும் நடவடிக்கை நிதியின்மையால் தாமதம்

uthaya_nanayakara_.jpgவடமாகாண சபை அலுவலகங்கள் விரைவில் கிளிநொச்சியில் இயங்கவுள்ளதாக அறிவிக்கப்பட்டிருந்த போதும், அதற்கான அரசின் நிதி இன்னும் கிடைக்கப் பெறாமையால் இந்நடவடிக்கை தாமதமாகும் எனத் தெரிவிக்கப்படுகிறது.

 வடமாகாண சபை ஆளுநர் மேஜர் ஜெனரல் ஜி ஏ சந்திரசிறி  வடமாகாண சபையின் செயலாளர்களை நேற்று சந்தித்போது, இவ்விடயம் குறித்து தெரிவிக்கப்பட்டுள்ளது. வடமாகாண சபை அமைச்சு அலுவலகங்கள் கிளிநொச்சிக்கு இடம் மாற்றவது தொடர்பாக ஆராயும் சந்திப்பு நேற்று இடம்பெற்ற போது, மாகாணசபை அலுவலகங்களுக்கான கட்டடங்கள் அமைப்பது, கட்டடங்களைப் புனரமைப்பு செய்வது தொடர்பாக ஆராயப்பட்டது. இப்பணிகளுக்கு 200 தொடக்கம் 300 மில்லியன் ரூபா வரை தேவை என மாகாணசபை செயலாளர்கள் ஆளுநரிடம் தெரிவித்தனர்.

 இதனையடுத்து, அரசிடமிருந்த இந்நிதி கிடைக்கும் வரை மாகாணசபை அலுவலகங்களை கிளிநொச்சிக்கு இடம்மாற்றும் பணியை நிறுத்தி வைப்பதாக  ஆளுநர் செயலாளர்களிடம் தெரிவித்துள்ளார்.

மருத்துவமாது தர்சிகாவின் சடலம் நாளை மருத்துவ பரிசோதனைக்காக தோண்டியெடுக்கப்படவுள்ளது!

மருத்துவமாது தர்சிகாவின் சடலம் நாளை 28ம் திகதி தோண்டியெடுக்கப்பட்டு பிரேத பரிசோதனைக்காக கொழும்பு கொண்டு செல்லப்படவுள்ளது. தர்சிகாவின் தாயார் தமது மகள் தற்கொலை செய்து கொள்ளவில்லை. கொலை செய்யப்பட்டுள்ளார் எனவே. அவரது சடலம் மீண்டும் பிரேத பரிசோதனைக்குட்படுத்தப்படவேண்டும் என நீதிமன்றத்தில் மனு ஒன்றை சமர்ப்பித்திருந்தார். இதனை ஏற்றுக்கொண்ட நீதிமன்றம் தர்சிகாவின் சடலத்தை தோண்டியெடுத்து மீண்டும் பிரேதபரிசோதனைக்குட்படுத்துமாறு பொலிஸாருக்கு உத்தரவிட்டிருந்தது. இதனடிப்படையில் நாளை 28ம் திகதி தர்சிகாவின் சடலம் மீண்டும் தோண்டியெடுக்கப்படவுள்ளது.

இதேவேளை, தர்சிகாவின் மரணம் தொடர்பான வழக்கு விசாரணகள் நேற்றும் இன்றும் ஊர்காவற்றுறை நீதிமன்றில் நடைபெற்றது.

கிளிநொச்சிக்கு சீரான மின்சாரம் கிடைக்க இரண்டு வருடங்கள் செல்லும் எனத் தெரிவிக்கப்படுகிறது.

ceb.jpgகிளி நொச்சிக்கு சீரானமுறையில் மின்சாரம் வழங்குவதற்கு இரண்டு வருடங்கள் செல்லும் என இலங்கை மின்சார சபை அதிகாரி ஒருவர் தெரிவித்துள்ளார். கிளிநொச்சியில் உப மின்நிலையம் ஒன்று அமைக்கப்படும் வேலைகள் நடைபெற்று வருவதாகவும், அது நிறைவுபெற இரண்டு வருடங்களில் செல்லும் எனவும், அதன் பின்னரே கிளிநொச்சிப் பகுதிகளுக்கு மின்சாரம் சீரான முறையில் வழங்கப்படும் எனவும் தெரிவிக்கப்பட்டுள்ளது.

தற்போது மின்சாரசபையின் மின்விநியோகம் வவுனியாவிலிருந்து மின்கம்பி மூலம் கிளிநொச்சி, பரந்தன் வரை வழங்கப்படுகின்றது. மின்கம்பிகளில் படரும் மண்துகள்களால் மின் விநியோகத்தில் சில சமயங்களில் தடங்கள் ஏற்படுகின்றது. வடபகுதி காலநிலையும் இதற்கு முக்கிய காரணியாகவுள்ளது. வவுனியாவிலிருந்து கிளிநொச்சிக்கு வழங்கப்படும் ‘லக்சபான’ மின்சாரத்தை கிளிநொச்சி உப மின்நிலையத்தின் ஊடாக வழங்கப்படும் போதே கிளிநொச்சிக்கு சீரான மின்சாரம் வழங்கப்படும் என மின்சாரசபை அதிகாரி ஒருவர் தெரிவித்துள்ளார்.

கிளிநொச்சியில் முன்னர் ‘லக்சபான’ உப மின்சார நிலையம் செயற்பட்டு வந்தது. பின்னர்  எண்பதுகளின் இறுதிக்கட்டத்தில்  போர் நடவடிக்கைகளால் அது செயலிழந்து போனது. அந்த மின்சாரசபை வளாகத்தில் தொண்ணூறுகளின் ஆரம்பத்திலிருந்து விடுதலைப் புலிகளின் நிதிப்பிரிவின் அலுவலகங்கள் அமைக்கப்பட்டிருந்தன. தற்போது அதே இடத்தில் உப மின்நிலையம் அமைக்கும் பணிகள் ஆரம்பமாகியுள்ளமை  இங்கு குறிப்பிடத்தக்கது.