13

13

உகண்டா குண்டுவெடிப்பில் 74 பேர் பலி : இலங்கையர் ஒருவர்

உகண்டாவில் நேற்றுமுன்தினம் இடம்பெற்ற இரு குண்டுவெடிப்புச் சம்பவங்களில் இலங்கையர் ஒருவர் உட்பட 74 பேர் பலியாகியுள்ளனர்.

உகண்டா தலைநகர் கம்பாலாவில் இடம்பெற்ற இக்குண்டுத்தாக்குதலுக்கு அல் குவைதாவுடன் தொடர்புடைய அல் சஹபாப் எனும் சோமாலிய தீவிரவாத இயக்கம்  உரிமை கோரியுள்ளது.
இலங்கையர் ஒருவர் இத்தாக்குலில் பலியாகியிருப்பதாக வெளிவிவகார அமைச்சு அதிகாரியொருவர் தெரிவித்துள்ளார்.

தங்க காலணி விருது – ஜேர்மனியின் இளம் வீரரான தோமஸ் முல்லருக்கு

ftfa.jpgஉலகக் கோப்பை உதைபந்து போட்டி யின் தங்க காலணி விருது ஜேர்மனியின் இளம் வீரரான தோமஸ் முல்லருக்கு வழங்கப்பட்டிருக்கிறது. இந்தப் போட்டியில் ஸ்பெயினின் டேவிட் வில்லா, நெதர்லாந்தின் ஸ்னைடர், உருகுவேயின் ஃபோர்லன் ஆகியோர் 5 கோல் அடித்திருந்தனர்.

உருகுவே – ஜேர்மனி இடையிலான ஆட்டத்தில் அடித்த கோல் மூலமாக முல்லரும் இவர்களுடன் இணைந்து கொண்டார். இந்த நிலையில், இறுதிப் போட்டியில் வில்லாவும், ஸ்னைடரும் கோல் அடிக்கத் தவறிவிட்டனர். இதனால் மேற்கூறிய 4 பேருமே 5 கோல் அடித்து சமநிலையில் இருந்தனர். இதனால், அதிக கோலடிக்க உதவியவர் யார் என்பது கணக்கில் எடுத்துக்கொள்ளப்பட்டது. அதன்படி தனது அணி வீரர்கள் 3 கோல் அடிப்பதற்கு முல்லர் உதவியிருந்தார்.

மற்றவர்கள் தலா ஒரு முறை மட்டுமே பிறர் கோலடிக்க உதவியிருந்தனர். இதையடுத்து கோல்டன்ஷ¥ விருது முல்லருக்குக் கிடைத்தது. இதுதவிர, போட்டியின் சிறந்த இளம் வீரர் விருதும் முல்லருக்குக் கிடைத்திருக்கிறது.

2006ம் ஆண்டு போட்டியில் ஜேர்மனியின் குளோஸ¤க்கு தங்க காலணி விருது கிடைத்தது குறிப்பிடத்தக்கது.

நன்கு சிந்தித்தே அரசியலமைப்புத் திருத்தம் செய்ய வேண்டும் – ஐக்கிய தேசியக் கட்சியுடனான பேச்சுவார்த்தையில் ஜனாதிபதி சுட்டிக்காட்டு

pr-ranil.jpgதனிப்பட்ட தேவைகளுக்காக அரசியலமைப்புத் திருத்தங்களை மேற்கொள்ளக் கூடாது. நாட்டைப் பற்றி நன்றாக சிந்தித்துத் தெளிவான நோக்கத்தின் பேரிலேயே அதனை ஏற்படுத்துவதே அவசியமானது என்று ஜனாதிபதி மஹிந்த ராஜபக்ஷ சுட்டிக்காட்டியுள்ளார். பொதுஜன ஐக்கிய முன்னணியின் பிரதிநிதிகள் மற்றும் ரணில் விக்கிரமசிங்க தலைமையிலான ஐக்கிய தேசியக் கட்சி பிரநிதிகளுக்கும் இடையே நேற்று (12) மாலை அலரி மாளிகையில் இடம்பெற்ற சந்திப்பின் போதே ஜனாதிபதி இவ்வாறு குறிப்பிட்டார்.

ஜனாதிபதி அலுவலகம் வெளியிட்டுள்ள ஊடக அறிக்கையிலேயே மேற்கூறியவாறு குறிப்பிடப்பட்டுள்ளது. ஜனாதிபதி அச்சந்திப்பில் மேலும் கூறியதாவது:- தற்போது உள்ள நிறைவேற்று அதிகாரம் கொண்ட ஜனாதிபதி முறையை விட நாட்டுத் தலைவர் பதவி பாராளுமன்றத்துக்கு பொறுப்புக் கூறும், பாராளுமன்றத்துடன் ஒத்துழைப்புடன் செயற்படும், பாராளுமன்றத்துடன் சேர்ந்து இயங்கக் கூடிய பதவியாக மாற்றப்பட வேண்டும் என்பதே 40 வருடங்காலம் பாராளுமன்ற உறுப்பினராக இருந்து பெற்ற அனுபவத்தின் மூலம் தனது நம்பிக்கையாக உள்ளது என்று ஜனாதிபதி இங்கு மேலும் கூறினார்.

சர்வகட்சிக் குழுவுக்கு ஸ்ரீலங்கா சுதந் திரக் கட்சி முன்வைத்த ஆலோசனையான பாராளுமன்றத்துக்கு பொறுப்புக் கூறும் நிறைவேற்று அதிகாரம் கொண்ட பிரதமர் பதவியை ஏற்படுத்துவது தொடர்பாக இங்கு விரிவாக ஆராயப்பட்டது. அத்துடன் எதிர்காலத்தில் ஏற்படுத்தப்படும் அரசிலமைப்பு திருத்தங்கள் மூலம் பாராளுமன்றத்துக்குப் பொறுப்புக் கூறும் நிறைவேற்று அதிகாரம் கொண்ட பிரதமர் பதவியை ஏற்படுத்துவதற்கு பொதுஜன ஐக்கிய முன்னணி மற்றும் ஐக்கிய தேசிய கட்சியினர் இங்கு இணக்கம் தெரிவித்தனர்.

நடைபெறவுள்ள உள்ளூராட்சி மன்றத் தேர்தல் முறை தொடர்பாக விளக்கம் அளிக்குமாறு ஐக்கிய தேசியக் கட்சி பிரதிநிதிகள் இங்கு கேட்டுக்கொண்ட நிலையில் அவர்களுக்கு அமைச்சர்களான தினேஷ் குணவர்தன, பசில் ராஜபக்ஷ அகியோர் விளக்கமளித்தனர்.  அத்துடன் 17ஆவது திருத்த சட்டத்தின் கீழ் ஏற்படுத்தப்படும் நிறுவனங்களை வலுப்படுத்துவது தொடர்பாக இரு தரப்பினரினதும் அவதானம் செலுத்தப் பட்டது.

அவ்வாறு வலுப்படுத்தவும் அந்த நிறுவனங்களுக்கு நியமிக்கப்படும் அதிகாரிகள் அமைச்சரவைக்கு பொறுப்புக் கூற வேண்டுமென்றும் இங்கு இணங்கப்பட்டது. அத்துடன் எந்த அரசாங்கத்தின் கீழும் நிலையான ஆட்சி இடம்பெற வேண்டும் என இரு தரப்பினரும் இங்கு கொள்கை யளவில் இணக்கப்பாட்டுக்கு வந்ததுடன் எதிர்காலத்தில் இடம்பெறும் அரசியல மைப்பு திருத்தத்தின் மூலம் அதனை உறுதிப்படுத்த வேண்டுமென்றும் இரு தரப்பினரும் இணக்கம் தெரிவித்தனர். இரண்டு தரப்பினரின் பிரதிநிதிகளால் உருவாக்கப்படும் குழுவின் மூலம் இணங்கப்பட்ட மேற்படி விடயங்களை செயற்படுத்துவதென்றும் முடிவு செய்யப்பட்டது.

ஐக்கிய தேசியக் கட்சி அதன் தலைவர் ரணில் விக்கிரமசிங்க தலைமையில் பாராளுமன்ற உறுப்பினர்கள் கரு ஜயசூரிய, காமினி ஜயவிக்கிரம பெரேரா, திஸ்ஸ அத்தநாயக்க, ஜோஸப் மைக்கல் பெரேரா ஆகியோரும் பொதுஜன ஐக்கிய முன்னணி அமைச்சர்கள் மைத்திரிபால சிறிசேன, நிமல் சிறிபால டி சில்வா, சுசில் பிரேமஜயந்த், ஜீ. எல். பீரிஸ், தினேஷ் குணவர்த்தன, பசில் ராஜபக்ஷ, டலஸ் அலகப்பெரும ஆகியோரும் இச்சந்திப்பில் கலந்துகொண்டனர்.

pr-ranil.jpg

சீமான் கைது

வன்முறையையும், பிரிவினையையும் தூண்டும் விதத்தில் உரையாற்றிய குற்றச்சாட்டின் பேரில் தென்னிந்திய திரைப்பட இயக்குனரும், நாம் தமிழர் இயக்கத் தலைவருமான சீமான் நேற்று கைது செய்யப்பட்டுள்ளார்.

தமிழ் நாடு சென்னை ஆட்சியர் அலுவலகத்திற்கு முன்பாக நேற்று முன்தினம் இடம்பெற்ற ஆர்ப் பாட்டத்தில் கலந்து கொண்டு உரையாற்றிய சீமான் வன்முறையையும், பிரிவினையையும் தூண்டும் விதத்தில் உரையாற்றினார் என பொலிஸார் வழக்குத் தாக்கல் செய்தனர்.

இவ்வழக்கின் அடிப்படையில் நாம் தமிழர் இயக்கத் தலைவர் நேற்று கைது செய்யப்பட்டார்.