27

27

கிளிநொச்சியில் மாணவியை பாலியல் வல்லுறவிற்குட்படுத்த முயன்றவர் விளக்கமறியலில்!

கிளிநொச்சி பாடசாலை மாணவி ஒருவரை பாலியல் வல்லுறவிற்குட்படுத்த முயன்றமை தொடர்பான வழக்கு விசாரணை ஒன்று கிளிநொச்சி நீதிமன்றில் நடைபெற்றுள்ளது. இதில் சம்பந்தப்பட்ட நபரை விளக்கமறியலில் வைக்குமாறு நீதவான் உத்தரவிட்டுள்ளார்.

கடந்த வெள்ளிக்கழமை கிளிநொச்சி நகரப்பகுதி பாடசாலை ஒன்றில் கல்வி பயிலும் மாணவி ஒருவர் படசாலை முடிந்து வீடு திரும்பிக்கொண்டிருந்த போது, அவரை வழிமறித்த நபரொருவர் அம்மாணவியை பாலியல் வல்லுறவிற்குட்படுத்த முயன்றுள்ளார். குறித்த மாணவி சத்தமிட முயன்ற போது அவரின் வாயைப் பொத்தியிருக்கின்றார். அவ்வழியாக வந்த சில பொதுமக்கள் மாணவியை காப்பாற்றியதோடு சம்பந்த நபரையும் நையப்புடைத்து, பொலிஸாரிடம் ஒப்படைத்துள்ளனர். பாதிக்கபட்ட மாணவி கிளிநொச்சி வைத்தியசாலையில் அனுமதிக்கப்பட்டார். பொலிஸார் இச்சம்பவம் குறித்து விசாரணைகளை மேற்கொண்டு வருகின்றனர்.

மாணவியை பாலியல்வல்லுறவிற்கு உட்படுத்த முயன்றவர் வியாபார நிறுவனம் ஒன்றில் விற்பனைப் பிரதிநிதியாக பணியாற்றுபவர் என்பது குறிப்பிடத்தக்கது.

வடமாகாணசபை அலுவலகங்கள் கிளிநொச்சிக்கு இடம்மாற்றும் நடவடிக்கை நிதியின்மையால் தாமதம்

uthaya_nanayakara_.jpgவடமாகாண சபை அலுவலகங்கள் விரைவில் கிளிநொச்சியில் இயங்கவுள்ளதாக அறிவிக்கப்பட்டிருந்த போதும், அதற்கான அரசின் நிதி இன்னும் கிடைக்கப் பெறாமையால் இந்நடவடிக்கை தாமதமாகும் எனத் தெரிவிக்கப்படுகிறது.

 வடமாகாண சபை ஆளுநர் மேஜர் ஜெனரல் ஜி ஏ சந்திரசிறி  வடமாகாண சபையின் செயலாளர்களை நேற்று சந்தித்போது, இவ்விடயம் குறித்து தெரிவிக்கப்பட்டுள்ளது. வடமாகாண சபை அமைச்சு அலுவலகங்கள் கிளிநொச்சிக்கு இடம் மாற்றவது தொடர்பாக ஆராயும் சந்திப்பு நேற்று இடம்பெற்ற போது, மாகாணசபை அலுவலகங்களுக்கான கட்டடங்கள் அமைப்பது, கட்டடங்களைப் புனரமைப்பு செய்வது தொடர்பாக ஆராயப்பட்டது. இப்பணிகளுக்கு 200 தொடக்கம் 300 மில்லியன் ரூபா வரை தேவை என மாகாணசபை செயலாளர்கள் ஆளுநரிடம் தெரிவித்தனர்.

 இதனையடுத்து, அரசிடமிருந்த இந்நிதி கிடைக்கும் வரை மாகாணசபை அலுவலகங்களை கிளிநொச்சிக்கு இடம்மாற்றும் பணியை நிறுத்தி வைப்பதாக  ஆளுநர் செயலாளர்களிடம் தெரிவித்துள்ளார்.

மருத்துவமாது தர்சிகாவின் சடலம் நாளை மருத்துவ பரிசோதனைக்காக தோண்டியெடுக்கப்படவுள்ளது!

மருத்துவமாது தர்சிகாவின் சடலம் நாளை 28ம் திகதி தோண்டியெடுக்கப்பட்டு பிரேத பரிசோதனைக்காக கொழும்பு கொண்டு செல்லப்படவுள்ளது. தர்சிகாவின் தாயார் தமது மகள் தற்கொலை செய்து கொள்ளவில்லை. கொலை செய்யப்பட்டுள்ளார் எனவே. அவரது சடலம் மீண்டும் பிரேத பரிசோதனைக்குட்படுத்தப்படவேண்டும் என நீதிமன்றத்தில் மனு ஒன்றை சமர்ப்பித்திருந்தார். இதனை ஏற்றுக்கொண்ட நீதிமன்றம் தர்சிகாவின் சடலத்தை தோண்டியெடுத்து மீண்டும் பிரேதபரிசோதனைக்குட்படுத்துமாறு பொலிஸாருக்கு உத்தரவிட்டிருந்தது. இதனடிப்படையில் நாளை 28ம் திகதி தர்சிகாவின் சடலம் மீண்டும் தோண்டியெடுக்கப்படவுள்ளது.

இதேவேளை, தர்சிகாவின் மரணம் தொடர்பான வழக்கு விசாரணகள் நேற்றும் இன்றும் ஊர்காவற்றுறை நீதிமன்றில் நடைபெற்றது.

கிளிநொச்சிக்கு சீரான மின்சாரம் கிடைக்க இரண்டு வருடங்கள் செல்லும் எனத் தெரிவிக்கப்படுகிறது.

ceb.jpgகிளி நொச்சிக்கு சீரானமுறையில் மின்சாரம் வழங்குவதற்கு இரண்டு வருடங்கள் செல்லும் என இலங்கை மின்சார சபை அதிகாரி ஒருவர் தெரிவித்துள்ளார். கிளிநொச்சியில் உப மின்நிலையம் ஒன்று அமைக்கப்படும் வேலைகள் நடைபெற்று வருவதாகவும், அது நிறைவுபெற இரண்டு வருடங்களில் செல்லும் எனவும், அதன் பின்னரே கிளிநொச்சிப் பகுதிகளுக்கு மின்சாரம் சீரான முறையில் வழங்கப்படும் எனவும் தெரிவிக்கப்பட்டுள்ளது.

தற்போது மின்சாரசபையின் மின்விநியோகம் வவுனியாவிலிருந்து மின்கம்பி மூலம் கிளிநொச்சி, பரந்தன் வரை வழங்கப்படுகின்றது. மின்கம்பிகளில் படரும் மண்துகள்களால் மின் விநியோகத்தில் சில சமயங்களில் தடங்கள் ஏற்படுகின்றது. வடபகுதி காலநிலையும் இதற்கு முக்கிய காரணியாகவுள்ளது. வவுனியாவிலிருந்து கிளிநொச்சிக்கு வழங்கப்படும் ‘லக்சபான’ மின்சாரத்தை கிளிநொச்சி உப மின்நிலையத்தின் ஊடாக வழங்கப்படும் போதே கிளிநொச்சிக்கு சீரான மின்சாரம் வழங்கப்படும் என மின்சாரசபை அதிகாரி ஒருவர் தெரிவித்துள்ளார்.

கிளிநொச்சியில் முன்னர் ‘லக்சபான’ உப மின்சார நிலையம் செயற்பட்டு வந்தது. பின்னர்  எண்பதுகளின் இறுதிக்கட்டத்தில்  போர் நடவடிக்கைகளால் அது செயலிழந்து போனது. அந்த மின்சாரசபை வளாகத்தில் தொண்ணூறுகளின் ஆரம்பத்திலிருந்து விடுதலைப் புலிகளின் நிதிப்பிரிவின் அலுவலகங்கள் அமைக்கப்பட்டிருந்தன. தற்போது அதே இடத்தில் உப மின்நிலையம் அமைக்கும் பணிகள் ஆரம்பமாகியுள்ளமை  இங்கு குறிப்பிடத்தக்கது.

தென்மராட்சியையும் பூனகரிப் பகுதிகளையும் இணைக்கும் சங்குப்பிட்டி-கேரதீவு பாதையின் பாலத்தின் திருத்த வேலைகள் நடைபெறுகின்றன.

பூனகரியுடன் யாழ்.குடாநாட்டை இணைக்கும் சங்குப்பிட்டி – கேரதீவு  பாலம் அமைக்கும் பணிகள் தற்போது நடைபெற்று வருகின்றன. ஆசிய அபிவிருத்தி வங்கியின் நிதியுதவியுடன் வீதி அபிவிரத்தி அதிகார சபையினால் மேற்கொள்ளப்பட்டு இது மேற்கொள்ளப்பட்டு வருகின்றது. இப்பணி டிசெம்பர் மாத்துடன் நிறைவடையும் என வீதி அபிவிருத்தி அதிகார சபையின் அதிகாரி ஒருவர் தெரிவித்தார்.

ஆனையிறவுப்பாதை  எண்பதுகளின் பிற்பகுதியிலம், தொண்ணூறுகளின் ஆரம்பத்திலும் போக்குவரத்திற்கு தடைசெய்யப்பட்டிருந்த வேளையில், வன்னிமக்கள் சங்குப்பிட்டி – கேரதீவு பாதையூடாகவே தங்கள் பயணங்களை மேற்கொண்டிருந்தனர். அப்பாதையூடாகவே யாழ். குடாநாட்டிற்கான உணவுப்பொருட்களும் கொண்டு செல்லப்பட்டன. விடுதலைப்புலிகளின் யாழ். வன்னிக்கான போக்குவரத்துப் பாதையாகவும் இப்பாதை அவர்களால் பயன்படுத்தப்பட்டது. பின்னர், தென்மராட்சி கேரதீவு பகுதிகள் படையினரின் கட்டுப்பாட்டிற்கு வந்ததும். கிளாலி கடல் நீரேரி ஊடாகவும், கொம்படி, ஊரியான் ஊடாகவும் மக்கள் பெரும் சிரமங்களுடன் தங்கள் பயணங்களை மெற்கொண்டனர். தற்போது சங்குப்பிட்டி- கேரதீவு பால திருத்த வேலைகள் நிறைவடையும் பட்சத்தில் பூனகரிப் பிரதேசத்திலிருந்து தென்மராட்சிக்கும் யாழ்ப்பாணத்திற்கும் சுலபமாக மக்கள் பயணிக்கும் நிலை ஏற்படும் என்பது குறிப்பிடத்தக்கது.

ஆயத முனையில் 19 லட்சரூபா கொள்ளை. தென்னிலங்கை மிரிஹான பகுதியில் சம்பவம்!

தென்னிலங்கையின் மிரிஹானப் பகுதியில் ஆயுதமுனையில் 19 இலட்சம் ரூபா  கொள்ளையிடப்பட்டுள்ளது. மிரிஹான எத்துல்கோட்ட சந்தியில் (26-07-2010 முற்பகல் 10.40 மணியளவில் இச்சம்பவம் இடம்பெற்றுள்ளது. எரிபொருள் நிரப்புநிலைய உரிமையாளரால் வங்கிக்கு வைப்பிலிட கொண்டு செல்லப்பட்ட பணமே இவ்வாறு ஆயுதராரிகளால் வழிமறிக்கப்பட்டு கொள்ளையிடப்பட்டுள்ளது.

மோட்டார் சைக்கிள் ஒன்றில் வந்த ஆயததாரிகள் இருவரே இக்கொள்ளையில் ஈடுபட்டதாக பொலிஸ் ஊடகப்பேச்சாளரும், பொலிஸ் அத்தியட்சகருமான பிரசாந்த ஜயக்கொடி தெரிவித்துள்ளார். இச்சம்பவத்துடன் தொடர்புடைய சந்தேக நபர்கள் எவரும் இதுவரை கைதாகவில்லை எனவும் விசாரணைகள் நடைபெற்று வருவதாகவும் அவர் மேலும்  தெரிவித்துள்ளார்.

சட்டப்படி வேலை போராட்டத்தால் தபால் சேவைகள் பாதிப்பு – 5 இலட்சம் கடிதங்கள் தேக்கம்

post-office.jpgதபால் திணைக்கள மத்திய தபால் பரிவர்த்தனை நிலைய ஊழியர்களின் சட்டப்படி வேலைப் போராட்டத்தினால் தபால் சேவைகள் பாதிக்கப்பட்டுள்ளன. சுமார் 5 இலட்சம் கடிதங்கள் வரை விநியோகிக்கப்படாது குவிந்துள்ளதாக அறிவிக்கப்படுகிறது. நான்கு தபால் ஊழியர்கள் வேலை நிறுத்தம் செய்யப்பட்டதை கண்டித்து 4 தொழிற் சங்கங்கள், கடந்த வியாழக்கிழமை முதல் சட்டப்படி வேலையில் ஈடுபட்டுள்ளன.

மோசடியில் ஈடுபட்ட ஊழியர்கள் நால்வரே வேலை நீக்கம் செய்யப் பட்டதாகவும் இந்த வேலை பகிஷ்கரிப்பு முறையற்றது எனவும் தபால் மா அதிபர் எம். கே. பி. திசாநாயக்க கூறினார். சீரான சேவைகளை வழங்குவதற்கு சகல நடவடிக்கைகளும் எடுக்கப்பட்டுள்ளதாகவும் அவர் குறிப்பிட்டார்.

பதிவுத் தபாலில் அனுப்புவதற்காக வழங்கப்பட்ட 6 ஆயிரம் கடிதங்களுக்கு இவர்கள் 50 ரூபா வீதம் குறைவாக அறவிட்டுள்ளதாக தபால் மா அதிபர் கூறினார். இதனால் தபால் திணைக்களத்திற்கு 3 இலட்சத்து 8 ஆயிரம் ரூபா நஷ்டம் ஏற்பட்டுள்ளது. மேற்படி நஷ்டத் தொகையை குறித்த நிறுவனங்கள் மீள வழங்கியுள்ளன.

மேற்படி வேலை பகிஷ்கரிப்பினால் 368 பதிவுத் தபால் பொதிகள் கொழும்பிலும் 406 பொதிகள் கொழும்புக்கு வெளியிலும் விநியோகிக்கப்படாதுள்ளதோடு 23,966 கடிதங்களும் 8834 பதிவுக் கடிதங்கள் கொழும்பிலும் கொழும்புக்கு வெளியிலும் முடங்கிக் கிடப்பதாக தபால் மா அதிபர் கூறினார். மேற்படி மோசடி குறித்து விசாரணை நடத்தப்படுவதாகவும் அவர் கூறினார்.

இதேவேளை முறையற்ற விதத்திலே 4 ஊழியர்களும் வேலை நிறுத்தம் செய்யப்பட்டுள்ளதாக இலங்கை தபால் சேவை சங்கத் தலைவர் ஜயந்த விஜேசிங்க கூறினார். 5 ஆவது நாளாக வேலைப் பகிஷ்கரிப்பு தொடர்வதாகவும் இது குறித்து பேச்சு நடத்த அமைச்சர் முன்வரா விட்டால் அடுத்த கட்டமாக வேலை நிறுத்தப் போராட்டத்தில் குதிக்க உள்ளதாகவும் அவர் கூறினார். கொழும்பு தபால் பரிவர்த்தனை நிலைய ஊழியர்களின் வேலைப் பகிஷ்கரிப்பால் நாட்டின் ஏனைய பகுதிகளிலும் தபால் சேவைகள் பாதிக்கப்பட்டுள்ளதாக அவர் குறிப்பிட்டார். 2 தினங்களுக்குள் தமது கோரிக்கைக்கு தீர்வு காணப்பட வேண்டும் எனவும் அவர் தெரிவித்தார்.

டெங்கு ஒழிப்புக்கு ஒத்துழைப்போருக்கு விஷேட வெகுமதியுடன் கெளரவம்

mos.jpgதிரு கோணமலை மாவட்டத்தில் டெங்கு பரவலுக்கு உடந்தையாக இருப்போர் மீது கடும் நடவடிக்கை எடுக்கப்படும். இதே நேரம், டெங்கு ஒழிப்புக்கு ஒத்துழைப்போருக்கு வெகுமதிகளுடன் கெளரவமும் வழங்கத் தீர்மானித்துள்ளதாக கிழக்கு சுகாதார அமைச்சர் எம். எஸ். சுபைர் தெரிவித்தார்.

திருமலை மாவட்டத்திலிருந்து டெங்கை ஒழிக்கும் செயல்திட்டம் தொடர்பான உயர்மட்ட மாநாடு நேற்று மாகாண சுகாதாரப் பணிப்பாளர் அலுவலகத்தில் நடைபெற்றது. மாவட்டத்தின் அனைத்து துறைசார் உயர் அதிகாரிகளும் இக் கூட்டத்தில் கலந்துகொண்டனர்.

திருமலை நகரம் கிண்ணியா பிரதேசங்களில் டெங்கு தீவிரமடைந்துள்ளது. உடனடியாக இப் பகுதிகளில் டெங்கு ஒழிப்பை தீவிரப்படுத்துமாறு பணிப்புரை வழங்கிய அமைச்சர் சுபைர், இப்பிரதேசங்களில் டெங்கு பரவலுக்கு உடந்தையாக இருப்போர் குறித்து கூடுதலான கவனம் செலுத்துமாறும் பணிப்புரை வழங்கினார்.

யாழ். வீதி விபத்தில் பல்கலைக்கழக மாணவர் இருவர் உயிரிழப்பு

யாழ்ப்பாணம், கந்தர்மடம் பழம் வீதியில் நேற்று முன்தினம் ஞாயிற்றுக்கிழமை இரவு இடம்பெற்ற வீதி விபத்தில் பொறியியல் பீட மாணவன் உட்பட இரு பல்கலைக்கழக மாணவர்கள் உயிரிழந்துள்ளனர். ஞாயிறு இரவு 11.30 மணியளவில் பழம் வீதியில், வீதியோரத்தில் நிறுத்தப்பட்டிருந்த லொறியொன்றுடன் வேகமாக வந்த மோட்டார் சைக்கிள் மோதுண்டபோதே இந்த இரு மாணவர்களும் அவ்விடத்திலேயே உயிரிழந்துள்ளனர்.

திருநெல்வேலியிலிருந்து பழம் வீதியூடாக இவர்கள் மோட்டார் சைக்கிளில் சென்று கொண்டிருந்த போதே இந்தச் சம்பவம் இடம்பெற்றுள்ளது.இதில் பருத்தித்துறை குருநாத சுவாமி கோயிலைச் சேர்ந்த யாழ்.பல்கலைக்கழக கலைப்பீட இறுதியாண்டு மாணவனான சாந்தகுமார் சந்துரு (வயது 24), சுண்டுக்குழி, கொழுப்புத் துறைவீதி பண்டியந்தாழைச் சேர்ந்த கண்டி பேராதனைப் பல்கலைக்கழக பொறியியல் பீட 2 ஆம் வருட மாணவனான அன்ரன் யோகராஜா கலிஷ்ரஸ் கஜேந்திரன் (வயது 24) ஆகிய இருவருமே சம்பவ இடத்தில் உயிரிழந்துள்ளனர்.

ஞாயிற்றுக்கிழமை தான் இச்சம்பவத்தில் பலியான எஸ்.சந்துருவின் பிறந்த தினம் என்பதுடன், கஜேந்திரன் யாழ்.பல்கலைக்கழகத்திற்குப் பயிற்சிக்காக வந்திருந்தார் என்பதும் குறிப்பிடத்தக்கது.யாழ்.போதனா வைத்தியசாலையில் வைக்கப்பட்டிருந்த இருவரது சடலங்களையும் யாழ்.மாவட்ட நீதிபதி ஏ.பிரேம்சங்கர் பிரேத பரிசோதனை செய்ய உத்தரவிட்டதுடன், யாழ்.பொலிஸார் இச்சம்பவம் தொடர்பாக விசாரணைகளை மேற்கொண்டுள்ளனர்.

தொலைபேசி ஊடாக புகார் தெரிவிக்கலாம்

telephone.jpgஉள்ளூராட்சி மன்றங்களால் தீர்க்கப்படாதி ருக்கும் பிரச்சினைகள் குறித்து தொலைபேசி ஊடாக புகார் தெரிவிக்கவென உள்ளூராட்சி மாகாண சபைகள் அமைச்சு விஷேட பிரிவொன்றை அமைத்துள்ளது.

உள்ளூராட்சி, மாகாண சபைகள் அமைச்சர் ஏ. எல். எம். அதாஉல்லாவின் ஆலோசனைக்கு அமைய இப்பிரிவு ஸ்தாபிக்கப்பட்டிருப்பதுடன் இது கடந்த சனியன்று திறந்து வைக்கப்பட்டதாகவும் அமைச்சின் அதிகாரியொருவர் நேற்றுத் தெரிவித்தார். உள்ளூராட்சி மன்றங்களினால் தீர்க்கப் படாதுள்ள பிரச்சினைகள் குறித்து இப்பிரிவில் புகார் செய்ய முடியும்.

அதேநேரம் தீர்க்கப்படாதுள்ள பிரச்சினைகள் குறித்து தேவையான ஆலோசனைகளையும், தகவல்களையும் இப்பிரிவிலிருந்து தொலைபேசி ஊடாக பெற்றுக் கொள்ளவும் ஏற்பாடு செய்யப் பட்டிருப்பதாகவும் அவர் குறிப்பிட்டார்.

இப்பிரிவுக்கான 0112328428, 0112328282 என்ற தொலைபேசி இலக்கங்கள் வழங்கப்பட்டுள்ளன. அப்பிரிவுக்கு தெரிவிக்கப்படும் புகார்கள் குறித்து விஷேட கவனம் செலுத்தவும் ஒழுங்கு செய்யப்பட்டிருப்பதாகவும் அவர் கூறினார்.