18

18

வட மாகாணத்திலிருந்து 4763 முறைப்பாடுகள்

இலங்கை மனித உரிமைகள் ஆணைக்குழுவுக்கு கடந்த 2009 மே மாதத்திலிருந்து இதுவரை வட மாகாணத்திலிருந்து 4,763 முறைப்பாடுகள் கிடைத்துள்ளதாக ஆணைக்குழு அதிகாரி ஒருவர் தெரிவித்தார். வவுனியா, மன்னார், யாழ்ப்பாணத்திலுள்ள மனித உரிமைகள் ஆணைக்குழுவின் அலுவலகங்களிலேயே இந்த முறைப்பாடுகள் செய்யப்பட்டுள்ளன. இவற்றில் மூவாயிரத்திற்கும் மேற்பட்ட முறைப்பாடுகள் காணாமல்போனமை பற்றியதாகும் என்று தெரிவிக்கப்பட்டுள்ளது.அத்துடன் சட்டவிரோதமாக தடுத்து வைக்கப்பட்டிருத்தல், கைதுகள் தொடர்பாகவும் ஆணைக்குழுவுக்கு பல முறைப்பாடுகள் கிடைத்துள்ளன.

வீடமைப்பு அதிகார சபைக்கு சொந்தமான காணிகளை கண்டறிய விசேட நடவடிக்கை

வடக்கு, கிழக்கு உட்பட நாடு முழுவதிலும் வீடமைப்புத் திட்டங்களை நிர்மாணிப்பதற்காக தேசிய வீடமைப்பு அபிவிருத்தி அதிகார சபைக்குச் சொந்தமான சகல காணிகளையும் கண்டறியும் நடவடிக்கையை அதிகார சபை இம்மாதம் முதல் ஆரம்பித்துள்ளது.

அமைச்சர் விமல் வீரவங்சவின் அறிவுறுத்தலுக்கமைய நடைமுறைப்படுத்த ப்படவுள்ள இத்திட்டத்தின் நோக்கம் வீடமைப்பு அபிவிருத்தி அதிகார சபைக்குச் சொந்தமான சகல காணிகளையும் உரிய முறையில் இனங்கண்டு கொள்வதும், இனங்காணப்பட்ட காணிகளை மிகவும் குறுகிய காலத்திற்குள் ஒழுங்கான முறையில் வீடமைப்பு மற்றும் குடியிருப்பு அபிவிருத்தி நடவடிக்கைகளுக்காகப் பயன்படுத்திக் கொள்வதுமாகும்.

இதன்போது தேசிய வீடமைப்பு அபிவிருத்தி அதிகார சபைக்கு முறையாக ஒப்படைக்கப்பட்டுள்ள, ஒப்படைக்க நடவடிக்கை எடுக்க வேண்டிய, அத்துமீறிய குடியிருப்புக்களைக் கொண்டுள்ள மற்றும் ஏற்கனவே முறையாக விபரங்களை ஒன்று சேர்த்து வைக்காத காணிகளின் பட்டியலொன்றை மிகவும் குறுகிய காலத்திற்குள் சரியான முறையில் தயாரித்துக்கொள்ள காணி நடவடிக்கைக் குழு ஒழுங்குகளை மேற்கொள்ளும்

காணிகளின் சகல விபரங்களும் இம் மாத முடிவுக்குள் பூர்த்தி செய்யப்பட உள்ளது. இந் நடவடிக்கையானது கொழும்பு, களுத்துறை, இரத்தினபுரி, கம்பஹா, கண்டி ஆகிய மாவட்டங்கள் சம்பந்தமாக விசேட கவனம் செலுத்தி மேற்கொள்ளப்படுவதுடன், அம் மாவட்டங்களின் குறைந்தது 500 ஏக்கர் அளவு காணி விபரங்கள் திரட்டப்பட்டு அக் காணியில் வீடில்லாத குடும்பங்களுக்கு வீடுகளை நிர்மாணிப்பதற்கு திட்டம் வகுக்கப்பட உள்ளதாக வீடமைப்பு அபிவிருத்தி அதிகார சபையின் பொது முகாமையாளர் தெரிவித்தார்.

பொன்சேகா மீதான தீர்ப்பு சபையில் பெரும் அமளிதுமளி

glp.jpgசரத் பொன்சேகாவுக்கு முதலாவது இராணுவ நீதிமன்றம் வழங்கிய தீர்ப்புத் தொடர்பாக பாராளுமன்றத்தில் ஆளும் தரப்பும் எதிரணியும் கடுமையாகத் தர்க்கித்ததால் பெரும் அமளி துமளி ஏற்பட்டதையடுத்து சபை அலுவல்கள் 5 நிமிடங்கள் இடைநிறுத்தப்பட்டன.

பாராளுமன்றம் நேற்றுக்காலை செவ்வாய்க்கிழமை நண்பகல் ஒரு மணிக்கு சபாநாயகர் சமல் ராஜபக்ஷ தலைமையில் கூடியது. வாய்மூல விடைக்கான வினாக்கள் இடம்பெற்று அதன்பின்னர் குடியியல் திருத்தச் சட்டமூலம் தொடர்பான விவாதம் ஆரம்பமானது. நீதியமைச்சர் அதாவுடசெனவிரட்ன விவாதத்தை ஆரம்பித்து வைத்து உரையாற்றினார். அதையடுத்து எதிர்க்கட்சித் தலைவர் ரணில் விக்கிரமசிங்க உரை நிகழ்த்தினார்.

ரணில் விக்கிரமசிங்க தனதுரையில், சரத்பொன்சேகாவுக்கு இராணுவ நீதிமன்றத்தால் வழங்கப்பட்ட தீர்ப்புத் தொடர்பாக தனது கருத்துகளையும விளக்கங்களையும் கண்டனங்களையும் தெரிவித்தார்.

ரணில் விக்கிரமசிங்க உரையாற்றி முடித்தவுடன் ஜனநாயகத் தேசியக் கூட்டணி எம்.பி.அநுரகுமார திசாநாயக்க ஒழுங்குப் பிரச்சினையொன்றை எழுப்பினார். இதற்கு அப்போது சபைக்குத் தலைமைதாங்கிய பாராளுமன்றக் குழுக்களின் பிரதித் தலைவர் முருகேசு சந்திரகுமார் அனுமதி வழங்கினார். இதையடுத்து அநுரகுமார திசாநாயக்க தனது பிரச்சினையை முன்வைத்தபோது அது ஒழுங்குப் பிரச்சினையல்லவெனக் கூறிய பாராளுமன்றக் குழுக்களின் பிரதித் தலைவர் அமைச்சர் பீரிஸை உரையாற்ற அழைத்தார். ஆனால் பீரிஸைப் பேச விடாது எதிர்க்கட்சியினர் கூச்சலிட்டனர்.

அப்போது எழுந்த அரச தரப்பு பிரதம கொறடா தினேஷ் குணவர்தன சபாநாயகரின் தீர்ப்பு சரியோ பிழையோ அதனை விமர்சனத்துக்குள்ளாக்க முடியாது என்று கூறினார். இதையடுத்து பீரிஸ் தனது பேச்சைத் தொடர்ந்தார்.அரசியல் யாப்புக்கும், பாராளுமன்ற நிலையியற் கட்டளைகளுக்கும் முரணான வகையில் இராணுவ நீதிமன்ற தீர்ப்பை எதிரணியினர் சபையில் விமர்சித்தனர் இராணுவ நீதிமன்றம் மற்றும் நீதிபதிகள் தொடர்பாக பாராளுமன்றத்தில் விமர்சிப்பதற்கு தனியான பிரேரணை சபைக்குக் கொண்டுவரப்படுவது அவசியம் எனவும் அமைச்சர் குறிப்பிட்டார்.
அமைச்சர் பேராசிரியர் ஜீ.எல்.பீரிஸ் தொடர்ந்தும் உரையாற்றுகையில், இராணுவ நீதிமன்றம் மற்றும் அதன் நீதிபதிகள், தொடர்பாக சபையில் எதிரணியினரால் விமர்சிக்கப்பட்டுள்ளது. இது அரசியல் யாப்புக்கும் பாராளுமன்ற நிலையியற் கட்டளைகளுக்கும் முரணானது. இராணுவ நீதிமன்ற ஏற்பாடும் எமது அரசியல் யாப்பில் உள்ளதே. இராணுவ, கடற்படை கட்டமைப்புக்களின் சட்ட ஏற்பாடுகள் இன்று, நேற்று உருவாக்கப் பட்டவை அல்ல மாறாக அவை 1948ல் ஏற்படுத்தப்பட்டவை.

நாம் ஆளும் தரப்பில் இருந்தாலும், எதிர்தரப்பில் இருந்தாலும் அரசியல் யாப்புக்கும் பாராளுமன்ற நிலையியற் கட்டளைகளுக்கும் ஏற்ப செயற்பட வேண்டியவர்களாக உள்ளோம்.  நீதிபதிகளை விமர்சிக்க முடியாது என்று நான் கூறவில்லை. அதற்கும் ஒழுங்கு உள்ளது அந்த ஒழுங்கு இங்கு மீறப்பட்டுள்ளது.

பாராளுமன்ற நிலையியற் கட்டளைகளின் 78வது பிரிவு தனியே நீதிபதிகள் குறித்து பேசவில்லை, மாறாக நீதித்துறையோடு சம்பந்தப்பட்ட விடயங்களை உள்ளடக்கிய விரிவான விடயம் நீதிமன்றங்கள், தொழில் மன்றுகள் என்பன இலங்கை சட்டத்திற்குள் உட்பட்டவையே. அதனுள் இராணுவ நீதிமன்றமும் அடங்கும்.

இராணுவ நீதி மன்றத்திற்கு ஆயுள் தண்டனை, மரண தண்டனை போன்ற தீர்ப்புக்களை கூட வழங்க அதிகார முள்ளது. அதனால் அரசியல் யாப்புக்கும், பாராளுமன்ற நிலையியற் கட்டளைகளுக்கும் முரணான எதிரணியினரின் உரைகள் பாராளுமன்ற ஹன்சார்ட்டிலிருந்து நீக்கப்படுவது அவசியம்.

கூட்டமைப்பு எம். பிக்கள் மூவருக்கு மட்டு. நீதிமன்றம் அழைப்பாணை

மட்டக்களப்பு மாவட்ட நாடாளுமன்ற உறுப்பினர்களான பொன். செல்வராசா, பா. அரியநேந்திரன், எஸ். யோகேஸ்வரன், கிழக்கு மாகாண சபை உறுப்பினர் இரா. துரைரட்ணம் மற்றும் கிழக்கு மாகாண வேலையற்ற பட்டதாரிகள் சங்கத் தின் தலைவர் கே. ஜெயராஜா ஆகியோரை எதிர்வரும் 7ஆம் திகதி நீதிமன்றில் ஆஜராகுமாறு மட்டக்களப்பு நீதவான் நீதிமன்றம் உத்தரவு பிறப்பித்துள்ளது.

மட்டக்களப்பில் கடந்த புதன் கிழமைகிழக்கு மாகாண வேலையற்ற பட்டதாரிகள் சங்கத்தினால் ஏற்பாடு செய்யப்பட்ட ஆர்ப்பாட்ட ஊர்வலம் தொடர்பாக பொலிஸார் நீதிமன்றத்தில் சமர்ப்பித்த அறிக்கையின் பிரகாரம் இந்த உத்தரவு பிறப்பிக்கப்பட்டுள்ளது.

இலங்கை ஜனநாயகக் குடியரசு அரசுக்கு எதிராக வேலைவாய்ப்பு வழங்கக்கோரி பதாகைகளை ஏந்திய வாறு பொலிஸ் அனுமதி பெறாமல் வீதியில் ஊர்வலம் சென்றதாகவும் ஊர்வலத்தைக் கலைப்பதற்கு நீதி மன்ற உத்தரவைப் பெற நேரம் போதவில்லை என்றும் காத்தான்குடி பொலிஸார் நீதிமன்றத்தில் சமர்ப்பித்த அறிக்கையில் குறிப்பிடப் பட்டுள்ளது.