19

19

‘அருள்’ சகோதரர்களுக்கு ஒரு சிறப்புமுகாம் அகதியின் கடிதம்.

SpecialCamp_Detainee இக்கடிதம் தேசம்நெற் இணையத்தின் கருத்தக்களம் பகுதியில் பதிவிடப்பட்டு உள்ளது. அகதி என்ற பெயரில் இக்கடிதத்தைப் பதிவிட்டுள்ள கருத்தாளர் தான் தமிழ்நாட்டில் செங்கல்பட்டு சிறப்பு முகாமில் வாழ்வதாகவும் குறிப்பிட்டு உள்ளார். இக்கருத்தாளர் பற்றிய எவ்வித விபரமும் தேசம்நெற் ஆசிரியர் குழுவினருக்குத் தெரியாது. ஆனாலும் அவர் வெளிக்கொண்டுவர விரும்பும் சிறப்புமுகாம் – சிறைமுகாம் அவலம் கருதி இக்கடிதத்தை தேசம்நெற் பிரசுரிக்கிறது.

தமிழகத்தின் சிறப்புமுகாம்கள் பற்றி அம்முகாம்களில் தடுத்து வைக்கப்பட்டு இருந்த எஸ் பாலச்சந்திரன் தேசம் சஞ்சிகையின் 16வது இதழில் – 2004 ஜனவரியில் ‘சிறப்புமுகாம் மிகப்பெரும் மனித உரிமைமீறல்’ என்ற தலைப்பில்ஒரு சிறப்புக் கட்டுரையை எழுதி இருந்தார்.

SpecialCamp_TN_S__Balachandran_Documentமேலும் துறையூர் சிறப்புமுகாமில் இருந்த தமிழீழ விடுதலைப் புலிகளின் உறுப்பினர் சிவா 1994 ஒக்ரோபர் 10ல் வழங்கிய சாட்சியம் தேசம் சஞ்சிகையின் இதழ் 18ல் 2004 மேயில் ‘நாம் புதைக்கப்படுபவர்கள் அல்ல விதைக்கப்படுபவர்கள் : கூண்டிலிருந்து ஒரு குரல்’ என்ற தலைப்பில் வெளியாகி இருந்தது.

இவற்றினை இன்னும் சில தினங்களில் மீள்பிரசுரம் செய்கிறோம்.

தேசம்நெற்.
._._._._._.

தமிழ்நாட்டில் செங்கல்பட்டு சிறப்பு முகாமில் பல வருடங்களாக அடைத்து வைக்கப்பட்டிருக்கும் ஒரு அப்பாவி அகதியின் இக் கடிதத்தை யாராவது இந்த “அருள” சகோதரர்களுக்கு அனுப்பி வைப்பார்களா?

சிறப்பு முகாம்
செங்கல்பட்டு
19.09.2010

மதிப்புக்குரிய அருள் சகோதரர்களே!

சதா நேரமும் ஈழத் தமிழனுக்காக மூச்சு விட்டுக்கொண்டிருக்கும் உங்கள் மகிமை பற்றி தெரியாமல் “தமிழரங்கம்” ரயாகரனும் “தேசம்நெற்” ஜெயபாலனும் நீங்கள் யாரோ தமிழனைக் கடத்தி காசு சம்பாதிப்பதாக எழுதியதை அறிந்து கண்ணீர் வடித்தேன். உங்கள் மொழியில் சொல்வதானால் அவர்கள் “மனநோயாளிகள்”;. உங்கள் நண்பர் நாவலன் மொழியில் சொல்வதானால் அவர்கள் “மகிந்தவின் கைக்கூலிகள்”. எனவே அவர்கள் தவறுகளை மன்னித்து தொடர்ந்தும் எங்களுக்காக குரல் கொடுங்கள். எங்களுக்கு விமோசனம் கிடைக்கிறதோ இல்லையோ ஆனால் உங்களுக்கு நல்ல வருமானம் கிடைக்கும் அல்லவா! பாவம் ஈழத்தமிழன். அவன் இளிச்சவாயனாக இருக்கும்வரை உங்கள் போராட்டம்(!) தொடரட்டும்.

நீங்கள் ஆயிரக்கணக்கில் சம்பளம் பெறுவதையும் லட்சக்கணக்கில் வியாபாரம் செய்வதையும் பொறுக்கமுடியாத ரயாகரனும் ஜெயபாலனும் நீங்கள் செய்த கடத்தலைக் கொச்சைப் படுத்துகின்றனர். நீங்கள் குறிப்பிட்டது போன்று உண்மையில் அவர்கள் மனநோயாளிகள்தான். ஏனெனில் நீங்கள் செய்த கடத்தல் பணி எந்தளவு பெரிய “புரட்சிப்பணி” என்பதை அவர்களால் புரிந்து கொள்ள முடியவில்லை. அதுமட்டுமா? ஒரு புறத்தில் அரச கைக்கூலியான குகநாதனுடன் வியாபாரம். மறுபுறத்தில் புலிகளின் தலைவர் பாலசிங்கத்துடன் பேட்டி. அதற்கும் மேலாக முள்ளிவாயக்காலில் பல்லாயிரக்கணக்கான அப்பாவி தமிழ்மக்களை கொன்று குவித்த இந்திய அரசை எதிர்த்து பக்கம் பக்கமாக கட்டுரை. அதே மறுபுறத்தில் இந்த கொலைகளுக்கு உதவி புரிந்த கருனாநிதி அரசின் உதவியுடன் குகநாதனை கடத்தி பணம் பறிப்பு. உங்களின் இந்த பலே கில்லாடித்தனங்களை புரிந்துகொண்டு நாவலன் போல் மாக்சியத்தின் பேரால் இதை நியாயப்படுத்தாமல் இதனை தமிழ்மக்கள் முன்னிலையில் அம்பலப்படுத்திய ரயாகரனும் ஜெயபாலனும் உண்மையிலே உங்கள் மொழியில் மனநோயாளிகள்தான்.

தமிழ்மக்கள் தொடர்ந்து போராடினால்தான் உங்கள் கல்லா நன்றாக நிரம்பும் என்ற சின்ன “லாஜிக்” கூட புரிந்து கொள்ள முடியாமல் “தமிழ்மக்கள் தொடர்ந்தும் தமிழீழத்திற்காக போராட வேண்டும்” என்று நீங்கள் (பணம் பெற்றுக் கொண்டு) எழுதிய கட்டுரையை சிலர் சீரியஸாக எடுத்துக்கொண்டு “இதை சொல்ல உங்களுக்கு என்ன தகுதி?” என்று கேட்கின்றனர். பாவம் சின்னப் பயல்கள். உங்கள் மகத்தான பங்களிப்புகள் தெரியாமல் புலம்புகின்றனர். அவர்களையும் மன்னித்துவிடுங்கள்.

முள்ளிவாயக்காலில் பிரபாகரனுக்கு பக்கத்தில் இருந்து முழங்கிய பீரங்கியில் இருந்தது நீங்கள் என்பது அவர்களுக்கு தெரிந்திருக்காது.(இன்னும் பத்துவருடம் கழித்து நீங்கள் எழுதப்போகும் கதையில் உள்ள இந்த விடயம் எனக்கு எப்படி தெரிந்தது என்று அச்சரியப்பட வேண்டாம். எல்லாம் “இனியொரு”வில் வெளியான உங்களின் சில கட்டுரைகளைப் படித்த கோளாறுதான் இது.)

அதைவிட ஈழத்தமிழனுக்காக தன்னுயிரை எரித்த முத்துக்குமரனுக்கு மண்ணெண்ணையும் தீப்பெட்டியும் வாங்கிக் கொடுத்த உங்கள் மகத்தான பங்களிப்பு இவர்களுக்கு தெரிய வாயப்பில்லை. (அது சரி தமிழனுக்காக உயிரைவிட நீங்கள் என்ன முத்துக்குமார் போன்று முட்டாள் அல்லவே. நீங்கள் தமிழனை வைத்துப் பிழைக்கும் புத்திசாலிக் கூட்டம் அல்லவா.)

நீங்களும் தானும் நூற்றுக்கணக்கான கட்டுரைகளை எழுதிவிட்டதாக உங்கள் நண்பர் நாவலன் கூறுகிறார். அது உண்மையாயின் அதில் எத்தனை கட்டுரை தமிழ்நாட்டில் உள்ள அகதிமுகாம் கொடுமைகள் குறித்து எழுதப்பட்டன என்பதை கொஞ்சம் தெரிவியுங்கள். ஏனெனில் நீங்கள் மகிந்த கொடுமைகள் குறித்து மட்டும்தான் எழுதுவீர்கள். இந்திய அரசுக்கும் அதன் உளவுப்படைகளுக்கும் பிடிக்காத விடயங்களை எழுதமாட்டீர்கள் என இங்கு சிலர் கூறுகின்றனர். அது உண்மையா சகோதரர்களே?

யுத்தம் முடிந்து இரண்டு வருடம் ஆகிறது. ஆனால் புலி எனக் குறறம்சாட்டி கைது செய்து எந்தவித விசாரணையும் இன்றி பல வருடங்களாக இந்த சிறப்பு முகாமில் பூட்டிவைத்து சித்திரவதை செய்கிறது இந்திய மத்திய மாநில அரசுகள். வன்னியில் அடைத்து வைத்திருக்கும் அகதிகளை மகிந்த அரசு விடுதலை செய்ய வேண்டும் என எழுதியும் போராடியும் வரும் நீங்கள் தமிழ்நாட்டில் சிறப்பு முகாம் என்னும் பெயரில் அப்பாவி தமிழ் அகதிகளை அடைத்துவைத்து சித்திரவதை செய்யும் கருனாநிதி அரசுக்கு எதிராக ஏன் எழுதவும் போராடவும் தயங்குகிறீர்கள்?

நீங்கள் எழுதிய நூற்றுக்கணக்கான கட்டுரைகளில் ஒரு கட்டுரை கூட இந்த சிறப்புமுகாம் அகதிகள் பற்றி இல்லையே. அது ஏன்?

குகநாதனுக்கு எதிராக உயர்நீதிமன்றில் ரிட் மனு தாக்கல் செய்த நீங்கள் அதே உயர்நீதிமன்றில் இந்த சிறப்புமுகாம் கொடுமைகளுக்காக ஒரு மனு தாக்கல் செய்திருக்கலாமே. ஏன் செய்யவில்லை?

குகநாதனுக்கு எதிராக பல வழக்கறிஞர்கள் பொலிஸ்கமிசனர் அலுவலகம் வந்து போராடியதாக அறிகிறேன். அது உண்மையாயின் இந்த வழக்கறிஞர் கூட்டத்தை பயன்படுத்தி இந்த சிறப்புமுகாம் அகதிகளுக்காக ஒரு முறை பொலிஸ்கமிசனர் அலுவலகம் செல்வீர்களா?

இவ்வாறு எல்லாம் கேள்வி கேட்டு உங்களை தர்மசங்கடப் படுத்துவது என் நோக்கம் அல்ல. மாறாக நீங்கள் உண்மையிலே ஈழத்தமிழனுக்காக குரல் கொடுக்க விரும்பினால் முதலில் உங்கள் நாட்டில் உங்க மத்திய மாநில அரசுகள் அகதிகளுக்கு செய்யும் கொடுமைகளுக்கு எதிராக குரல் கொடுங்கள். சிறப்பு முகாம் என்னும் பெயரில் நடத்தும் சித்திரவதை முகாமை மூட வழி செய்யுங்கள். அதன்பின் மகிந்த அரசின் கொடுமைகளை தாராளமாக கண்டியுங்கள். அப்பதான் உங்களைத் தமிழ்மக்கள் நம்புவார்கள். இல்லையேல் தமிழ்மக்களின் துயரத்தில் காசு சம்பாதிக்கும் ஈனப்பிறவிகள் என்று வரலாறு உங்களைக் கூறும்.

இப்படிக்கு

உங்களின் மகத்தான போராட்டத்தால் ஈழம் கிடைக்குதோ இல்லையோ குறைந்தது சிறப்புமுகாமாவது மூடப்பட வழிபிறக்கும் என அப்பாவியாக நம்பிக்கொண்டிருக்கும் ஒரு அகதி.
சிறப்பு முகாம் – செங்கல்பட்டு.

கிளிநொச்சி செல்வநகரில் தம் முயற்சியில் வாழ்வதற்கு உதவிக்கரம் கொடுத்தது : நேசக்கரம்

Selvanagar_Nesakkaram_14Sep10கிளி நொச்சி செல்வாநகர் குடியிருப்பில் வாழ்கின்ற 10 குடும்பங்களுக்கான உதவிகள் 14.09.10 அன்று வழங்கப்பட்டுள்ளது. இயற்கை அனர்த்தங்களாலும் போரினாலும் பாதிக்கப்பட்ட மேற்படி குடும்பங்களுக்கான சுயதொழில் ஊக்குவிப்புக்கான உதவிகளும் பிள்ளைகளின் கல்விக்கான உதவிகளும் வழங்கப்பட்டது.

Selvanagar_Nesakkaram_14Sep10இக்குடும்பங்களைச் சேர்ந்த அனைவரும் அங்கவீனர்களாகவும் போரில் பிள்ளைகளை கணவர்களை இழந்தவர்களாகவும் மற்றும் தடுப்பு முகாமிலிருந்து வெளிவந்தவர்களாகவும் இருக்கின்றனர். இன்னும் தங்கள் உடல்களில் சன்னங்கள் எறிகணைத்துண்டுகளையும் சுமந்து கொண்டிருக்கும் இவர்களை நம்பிக்கை கொடுத்துப் புதுப்பிக்கும் உதவியாக இவ்வுதவிகள் வழங்கப்பட்டுள்ளது.

Selvanagar_Nesakkaram_14Sep10கூரைகள் அற்ற வீடுகளில் தறப்பாள்களோடு வாழ்கின்ற இம்மக்கள் தங்களுக்கான தொழில் வாய்ப்பினைக் கோரியிருந்த போது அவர்களது தரவுகளை அவர்களது நிலமைகளைக் கேட்டு இந்தத் தொழில் வாய்ப்புக்கான உதவிகளை வழங்கிய யேர்மனி டோட்மூண்டிலிருந்து பவானி , யேர்மனி ஸ்ருட்காட்டிலிருந்து மனோகாந்தன், டென்மார்க்கிலிருந்து திரு.திருமதி குணரட்ணம் யோகமலர் மற்றும் டென்மார்க்கிலிருந்து சுஜாதா சண்முகநாதன் அவர்களும் முன்வந்து உதவிகளை வழங்கியிருந்தனர்.

இலங்கை ரூபா ஒருலட்சத்து ஐம்பதாயிரம் ரூபாவிற்கான உதவிகள் வழங்கப்பட்டுள்ளது. தையல் மெசின்கள், தச்சுத் தொழிலுக்கான உபகரணங்கள், சிறுமளிகைக்கடை, சைக்கிள் திருத்தும் கடை, கோழிவளர்ப்பு மற்றும் ஆடுவளர்ப்பு போன்றவற்றுக்கான ஆதாரமாக வழங்கப்பட்டுள்ளது.

ஐ.நா. சபையில் ஜனாதிபதி 23 இல் உரை; அரச தலைவர்கள் பட்டியலில் முதலிடம்

mahinda-rajapaksa.jpgஐக்கிய நாடுகள் சபையின் 65ஆவது உச்சி மாநாட்டில் கலந்துகொள்வதற்காக நியூயோர்க் சென்றுள்ள ஜனாதிபதி மஹிந்த ராஜபக்ஷ எதிர்வரும் 23ம் திகதி வியாழக்கிழமை இலங்கை நேரப்படி காலை 11 மணிக்கு ஐக்கிய நாடுகள் சபையில் உரையாற்றுகிறார்.

ஐக்கிய நாடுகள் அமைப்பில் அங்கம் வகிக்கும் 192 நாடுகளின் தலைவர்கள் மற்றும் விசேட பிரதிநிதிகள் பங்குபற்றும் இந்த உச்சி மாநாட்டு நிகழ்ச்சி நிரலின்படி, இலங்கை ஜனாதிபதி மஹிந்த ராஜபக்ஷவின் உரையானது அரச தலைவர்களின் உரைகளின் பட்டியலில் முதலாவது உரையாக இடம்பெறவுள்ளது.

இந்த உச்சி மாநாடு இடம்பெறுவதற்கு முதல்நாளன்று அதாவது எதிர்வரும் 22 ஆம் திகதி இடம்பெறும் புத்தாக்க அபிவிருத்தி இலக்கை நிறைவேற்றுவது தொடர்பான உயர் மட்ட பிரதிநிதிகளின் உச்சி மாநாட்டிலும் ஜனாதிபதி மஹிந்த ராஜபக்ஷ உரையாற்றவுள்ளார்.

அமெரிக்க ஜனாதிபதி பரக் ஒபாமா வழங்கும் அரச தலைவர்களுக்கான விருந்து, முன்னாள் ஜனாதிபதி பில் கிளின்டன் நிதியத்தின் விசேட கலந்துரையாடல், அமெரிக்காவில் உள்ள இலங்கை தூதரக அலுவலகம் நியூயோர்க்கில் ஏற்பாடு செய்யும் வர்த்தக பிரமுகர்களுக்கான கலந்துரையாடல், நியூயோர்க் பெளத்த விஹாரையின் வைபவ நிகழ்வு ஆகியவற்றிலும் ஜனாதிபதி மஹிந்த ராஜபக்ஷ கலந்துகொள்வார்

ஆயித்தியமலையில் பொலிஸ் நிலையம்

batti222.jpgகரடியனாறு பொலிஸ் நிலையக் கட்டிடம் சிதைவடைந்திருப்பதால், கரடியனாறு பொலிஸ் பிரிவு நடவடிக்கைகளை தற்காலிகமாக ஆயித்தியமலை பொலிஸ் நிலையத்திலிருந்து மேற்கொள்ளுவதற்கு சம்பவ இடத்திற்கு நேரில் சென்ற பொலிஸ் மா அதிபர் தேவையான அறிவுறுத்தல்களை வழங்கியுள்ளார். அதேநேரம் கரடியனாறு பொலிஸ் நிலையத்தைத் துரித கதியில் பொருத்தமான இடத்தில் நிர்மாணிப்பதற்கு தேவையான ஆலோசனைகளையும் அவர் வழங்கியுள்ளார்

சி.ஐ.டி யினரை அழைத்துப் பேச ஆணைக்குழு தலைவர் முடிவு

கற்றுக்கொண்ட பாடங்கள் மற்றும் நல்லிணக்க ஆணைக்குழுவின் பகிரங்க அமர்வு நேற்று கிளிநொச்சியில் நடைபெற்றது. கிளிநொச்சி, கரச்சி பிரதேச செயலக அலுவலகத்தில் நேற்றுக்காலை அதன் தலைவர் சீ.ஆர்.டி. சில்வா தலைமையில் ஆரம்பமான அமர்வில் பெருமளவிலான பொதுமக்கள் நேரடியாகச் சாட்சியமளித்தனர்.

மேற்படி பிரதேச மக்கள் சுதந்திரமாக சாட்சியமளிக்கும் வகையில் ஏற்பாடுகள் செய்யப்பட்டிருந்தன. இதற்கென விசேட மொழிபெயர்ப்பு வசதிகளும் செய்து கொடுக்கப்பட்டன. இங்கு சாட்சியமளித்த பெரும்பாலானவர்கள் காணாமல் போனோர் தொடர்பாகவும், சிறைகளில் தடுத்து வைக்கப்பட்டோர் தொடர்பாகவும் மிகவும் உணர்வுபூர்வமாக கருத்துக்களைத் தெரிவித்தனர்.

ஆணைக்குழு உறுப்பினர்கள் இதனை மிகவும் அவதானத்துடன் செவிமடுத்ததோடு சாட்சியமளித்தவர்களிடம் அவ்வப்போது குறுக்கு விசாரணைகளையும் நடத்தினர். அதேநேரம் சாட்சியமளித்த அனைவருமே காணாமல் போனோர், தடுத்து வைக்கப் பட்டுள்ளோர் தொடர்பாக கருத்துத் தெரிவிப்பதைச் செவிமடுத்த ஆணைக்குழுத் தலைவர், அவைகளை எழுத்து மூலமாகத் தரும்படி கேட்டுக்கொண்டதோடு, அவர்களுக்கு வெள்ளைத் தாள்களை வழங்குமாறு அதிகாரிகளுக்குப் பணித்தார்.

இது தொடர்பாகக் கருத்துத் தெரிவித்த ஆணைக்குழுத் தலைவர் சீ.ஆர்.டி.சில்வா, “காணாமல் போனோர், தடுத்து வைக்கப்பட்டுள்ளோர் தொடர்பாக சி.ஐ.டி.யினரை அழைத்துப் பேசவுள்ளேன்” என்றார். இதற்காக ஆணைக்குழுவின் ஒருநாள் அமர்வுக்கு சி.ஐ.டி.யினர் அழைக்கப்படுவர் என்று கூறினார். இது தொடர்பாக சி.ஐ.டி.யினரிடம் ஆராய்ந்து உண்மை நிலையை அறிவிப்பேன் என்றும் ஆணைக்குழுவின் தலைவர் கூறினார்.

காணி, தண்ணீர்ப் பிரச்சினைகள் தொடர்பாகவும் பெரும்பாலானோர் எடுத்துக் கூறினர். அந்த இடத்தில் அரசாங்க அதிபர், மற்றும் அதிகாரிகளை அழைத்த ஆணைக்குழு வின் தலைவர், பிரச்சினைக்கு விரைவில் தீர்வைப் பெற்றுக்கொடுக்குமாறு தெரிவித்தார்.

ஆணைக்குழு உறுப்பினர்கள், இரணமடுக் குளம், புலிகளின் விமானப்படைத்தளம் அமைந்திருந்த இடங்களை நேற்று நேரில் சென்று பார்வையிட்டனர். இன்று ஞாயிற்றுக்கிழமை கண்டாவளை, பூநகரி ஆகிய இடங்களில் அமர்வு நடைபெறும். நாளை திங்கட்கிழமை முல்லைத்தீவு மாவட்டத்திலுள்ள மாங்குளம், நந்திக்கடல் பிரதேசத்தில் அமர்வு இடம்பெறவுள்ளது.