06

06

சமூகச் சீரழிவுகளில் மௌனம் காக்கும் தமிழ் ஊடகங்கள்: ரி சோதிலிங்கம்

Social_Censorship தமிழ் சமூகம் குறிப்பாக யாழ் சமூகம் ஒரு இறுக்கமான சமூகம். இச்சமூகத்தின் சகல பிரச்சினைகளுக்கும் வெளியார் மீது பழிபோடுகின்ற போக்கு காலம்காலமாக இடம்பெறுகின்றது. இந்த நிலையைப் பேணுவதில் தமிழ் ஊடகங்கள் முக்கிய பங்கு வகிக்கின்றன. இது எந்த வகையிலும் சமூகத்தின் முன்னேற்றத்திற்கும் வளர்ச்சிக்கும் உதவவில்லை. மாறாக கூடுதலான சீரழிவிற்கே வழிவகுத்தது.

பொதுவாக யாழ் சமூகத்தில் சமூகப் பிரச்சினைகள் சாதிப் பிரச்சினைகள் என்று வரும்போது எமது தமிழ் ஊடகங்கள் பிரச்சினைகளை மூடிமறைத்து விடும். அதற்கான காரணமாக எப்போதும் சொல்லப்படுவது இப்படியான சாதி சமூகப் பிரச்சிகைளை அம்பலப்படுத்துவதால் அவற்றுக்கு விளம்பரம் கொடுத்து அதை எல்லோருக்கும் தெரியப்படுத்தி பிரச்சினைகளை பெரிசு படுத்தக்கூடாது என்பதேயாகும். இப்படியான கருத்தை யாழ் சமூகம் பல சகாப்தங்களாக, இன்றும் தொடர்ந்தும் செய்து கொண்டிருக்கிறது.

யாழ் பத்திரிகைகளும் மற்றைய பிரதேச ஊடகங்களும் இப்படியான கருத்தை கொண்டவர்களின் கைகளால்தான் நடாத்தப்படுகின்றது. இதுவரை யுத்தம் தமிழ் மக்களின் முக்கிய பிரச்சினைக்குரிய அம்சமாக இருந்ததால் அனைத்து கவனங்களும் யுத்தம் சார்ந்ததாகவே இருந்தது. தற்போது யுத்தம் முடிவுக்கு வந்த நிலையில் சமூகத்தின் ஏனைய பிரச்சினைகள் முன்னிலைக்கு வந்துள்ளது. அண்மைக்காலமாக யாழ்ப்பாணத்தில் பேசப்படும் சமூகச் சீரழிவுகள் சாதிப் பிரச்சினைகள், ஊர்ப் பிரச்சினைகள் என்பன பத்திரிகைகளிலும் பொது ஊடகங்களிலும் பொதுவாக வெளிவரத் தயங்குகின்றன. இது பத்திரிகைகளை நடாத்தும் நிறுவனத்தினரின் பொறுப்புணர்விலேயே தங்கியிருப்பதால் சமூகச் சீரழிவுகள் பற்றிய செய்திகளை மக்களும் தெரிந்து கொள்ள வாய்ப்பில்லாது போய்விடுகின்றது.

ஒரு காலத்தில் யாழ் இயக்கங்களினால் சிறு களவுகளுக்கும் கூட மரண தண்டனைகள் வழங்கப்பட்டது. அதன் பின்னரான இயக்க மோதலின் போராளிகள் கொல்லப்பட்டனர். இவை எதனையும் யாழ் பத்திரிகைகள் கண்டனம் செய்யாமலும் இப்படியாக செய்யப்பட்ட கொலைகள் ஈறாக பத்திரிகைகளில் பிரசுரிக்காமலும் போயிருந்தன. அதேவேளை கொன்றுவிட்டு வந்த கிட்டு உட்பட புலிகளுக்கு கொலை செய்த களைப்புக்கு கோலா கொடுத்த செய்தி மட்டும் பெரிதாக வெளிவந்திருந்தது. இதனை புலிகளுக்கு பத்திரிகைகள் பயந்து இருந்தனர் என்றுமட்டும் சொல்லிவிட முடியாதுள்ளது. புலிகளை தமது சுயநலத்திற்கு ஆதரவளித்த தமிழ் பத்திரிகைகள் புலிகளின் தவறில் உள்ள ஆபத்துக்களை சுட்டிக்காட்டாமல் போனது பத்திரிகைகளின் தவறும் தமிழ் மக்களுக்காக போராடிய இளைஞர்களை தவறாக வழிநடாத்திய குற்றமும் இந்த பத்திரிகைகளுக்கு உண்டு. புலம்பெயர்ந்த நாடுகளில் தமிழர்களால் நடாத்தப்பட்ட பத்திரிகைகளும் இதற்கு விதிவலக்கல்ல.

அதேபோல இயக்கங்களின் பிரதேசங்களின் ஜக்கியம் பற்றியும் இந்த பத்திரிகைகள் மெளனம் காத்திருந்ததும் இன்று விமர்சனத்திற்கு உள்ளாகிறது. அதேகாலங்களில் இலங்கை அரசினால் நடாத்தப்பட்ட இராணுவ நடவடிக்கைகளை முழுமையான எந்தவித விமர்சனங்களும் இன்றி கண்டனம் செய்திருந்ததும் இங்கே குறிப்பிட்டாக வேண்டும்.

தமிழ் ஊடகங்கள் தமக்குரிய ஊடக கடமைகளை சரியாக செய்யத்தவறிவிட்டன ஜனநாயகம் மனித உரிமைகள் பற்றிய விடயங்களில் காட்ட வேண்டிய அக்கறைகளிலும் தவறியுள்ளன. புலிகளின் ஆட்சிக்காலத்தில் புலிகளினால் நடாத்தப்பட வேண்டிய ஜனநாயக நடைமுறைகளின் அவசியத்தை வலியுறுத்த மறந்து போயிருந்தன. அல்லது தவிர்த்தன.

தற்போது யாழ் சமூகத்தில் எழுந்துள்ள சமூகச் சீரழிவுகள் யாழ் சமூகத்தில் மட்டும் பாதிப்பை ஏற்படுத்துபவைகள் அல்ல. இப்படியான பல பிரச்சினைகள் முழு இலங்கையிலுமே எல்லா இனங்களிடையேயும் எல்லா சமயத்தவர்களிடையேயும் உருவாகியுள்ள சமூகச் சீரழிவேயாகும். போரினால் ஏற்பட்ட பாதிப்புக்களினால் அனாதரவாக்கப்பட குழந்தைகள் புலிகளின் சிறுவர்கள் சேர்ப்பிற்க்கு பயந்து திருமணம் செய்து வைக்கப்பட்ட இளம்வயதினரும் அவர்களின் குடும்ப பிரச்சினைகளும் கணவனை இழந்து விதவையானவர்களை சமூகத்தில் ஒதுக்கி வைத்துக் கொள்வதும் மனைவியை இழந்து குடும்பம் இழந்தவர்களும் என்பவற்றுடன் இளம்வயதுப் பெண்களை பாலியல் வல்லுறவுக்கு உட்படுத்தலும் பாடசாலை மாணவர்களையும் பல்கலைக்கழக மாணவர்களை பாலியல் துன்பத்திற்கு உள்ளாக்கும் கயமைத்தனங்களும் சமூகத்தில் பல துன்பியல்களை நடாத்திக் கொண்டிருக்கின்றன.

இவற்றுடன் தமிழ் சிங்கள முஸ்லீம் சமூகங்களிடையே போதைவஸ்து பாவனை விபச்சாரம் என்பவற்றின் அதிகரிப்பும் சமூகச் சீரழிவை மேலும் பல மடங்கு மோசமான நிலைக்கு இட்டுச்சென்றுள்ளன. கடந்த 30 வருடங்களாக இலங்கையில் நடைபெற்ற யுத்தம் இந்த சமூகச்சீரழிவின் தாக்கத்தை, சமூகச் சீரழிவின் கயவர்களை யுத்தத்திற்குள் ஒளிந்துகொள்ள உதவியுள்ளது. ஜனநாயக நடைமுறையற்று இருந்த சமூகத்தில் இவர்கள் தமது கயமைத்னங்களுக்கு இலகுவாக இடம் தேடிக்கொண்டனர். இந்த சமூகச் சீரழிவின் நாயகர்களில் பலர் தமது அயோக்கியத்தனங்களுக்கு தேடிக்கொண்ட இடம் புலி இயக்கமும் அதன் ஆதரவாளன் என்ற பெயருமேயாகும்.

இன்று புலிகளின் அழிவின் பின்னர் இந்த கயமைத்தனங்களின் இருப்பிடமாக யாழ் பல்கலைக்கழகமும் யாழ் பாடசாலை சமூகமும் இருந்துள்ளது வெளிப்படையாகின்றது. இந்த சீரழிவின் வெளிப்பாடுகளே இன்று யாழ் சமூகத்தில் யாழ் அரச அதிபர் யாழ் முற்போக்காளர்கள் இந்த சீரழிவிற்கு எதிராக குரல் கொடுக்க ஆரம்பித்துள்னர். பல வருடங்களாக நடைபெற்று வந்த யாழ் பல்கலைக்கழகத்தில் நடைபெற்ற சீரழிவுகளை யாழ்ப்பாணத்திலுள்ள பத்திரிகைகள் ஊடகங்கள் நிச்சயமாக தெரிந்தே வைத்திருந்திருக்கும். ஆனால் இப்படியான சீரழிவுகளை வெளிப்படுத்துவதன் மூலம் யாழ் கல்விச்சேவைகள் யாழ் சமூகத்தின் பெயர் என்ற தமது வரட்டு கெளரவத்தை பாதுகாக்கவே இவற்றை மூடிமறைத்து வெளிப்படுத்தாமல் விட்டுள்ளனர் என்றே பலரும் அபிப்பிராயப்படுகின்றனர்.

அண்மையில் யாழ் அரச அதிபர் இமெல்டா சுகுமார் யாழ் பல்கலைக்கழக மாணவர்களின் பாசாலை மாணவர்களின் சீரழிவுகள் பற்றி வெளிப்படையாக கருத்து வைத்திருந்தது பாராட்டப்பட வேண்டியதாகும். சமூகத்தில் உள்ள சீரழிவுகளை வெளிப்படையாக பேச ஆரம்பிக்கும்போதுதான் அந்த சீரழிவிலிருந்து அந்த சமூகத்தை பாதுகாக்க முடியும்.

இமெல்லடா சுகுமார் போன்ற தமிழ் சமூகம்பற்றி விழிப்புணர்வு கொண்ட அக்கறை கொண்ட போர்க்கால அனுபவம் கொண்ட தமிழ் குலப் பெண்ணின் கருத்துக்கு நாம் ஒத்துழைப்பும் ஆதரவும் வழங்கி சமூகத்தில் உள்ள சீரழிவுகளில் இருந்து மீள பின்புலம் கொடுத்து உதவ வேண்டும். கடந்த 40 வருட கால அரச அதிபர்கள் வரிசையில் இப்போது தான் சமூக விழிப்புணர்வு கொண்ட துணிவு மிக்க அரசஅதிபர் ஒருவரை யாழ் தமிழ் சமூகம் பெற்றுள்ளது.

இந்த அரச அதிபருக்கு ஆதரவும் ஒத்தாசையும் வழங்கும் பொறுப்பு வட கிழக்கு மக்களுக்கும் புலம்பெயர் மக்களுக்கும் உள்ளது. போராட்டம் புரட்சி என்று கடந்த 30 வருடங்களாக பேசிய பொறுப்பு வாய்ந்தவர்களினதும்இ பொறுப்புள்ள புலம்பெயர் தமிழ் சமூகத்தினதும் ஆதரவு தமிழ் மக்களின் பொருளாதார அபிவிருத்தி மற்றும் அரசியல் உரிமைகளுக்கு அடுத்து தமிழ் பிரதேசங்களில் எழுந்து கொண்டிருக்கும் சமூகச் சீரழிவுகளுக்கு எதிராகவும் குரல் கொடுப்பதும் இச்சீரழிவுக்கு எதிராக குரல் கொடுக்கும் இமெல்டா சுகமார் போன்றோருக்கு முடிந்த அளவு ஆதரவினை வழங்குவதும் தேவையாக உள்ளது.

தமிழ் சமூகத்தில் புதிய மாற்றங்களை உருவாக்க வேண்டுமாயின் இந்த மேற்கூறும் சமூகச் சீரழிவுகள் சாதியப் பிரச்சினைகளிலும் அக்கறை செலுத்த வேண்டும். இந்த சீரழிவுகளுக்கு ஆதரவும் பின்புலமுமாக இருப்பவர்களில் சிலரின் கைகளில்இ சமூகத்தில் சில விடயங்களை முன்னெடுத்துக் கொள்ளக் கூடிய அல்லது செயற்படுத்தும் வல்லமையும் அதிகாரமும் கொண்டவர்களாக உள்ளதையும் கவனம் எடுத்துக்கொள்ள வேண்டும். இப்படியானவர்கள் அரச சார் நிறுவனங்களிலும் கல்வி சார் நிறுவனங்களிலும் பொதுமக்களின் சமத்துவத்தை பேண வேண்டிய அரச அலுவலகங்களிலும் கடைமையாற்றுகின்றனர் என்பதே உண்மையாகும். இப்படியான பொறுப்பு வாய்ந்த பதவிகளில் உள்ளவர்களில் பலர் இன்றும் சாதிய வெறியர்களாகவும் சாதி என்ற ஒருகாரணத்திற்காக சில குறிப்பிட்டவர்களின் சலுகைகளை உதவிகளை அவர்களுக்கு கிடைக்காமல் செய்வதமாக செயறபடுவதாக பல யாழ் மக்கள் கருத்துக் கொண்டுள்ளனர். இப்பேர்ப்பட்ட பேர்வழிகளை உடனடியாக ஊடகங்கள் அம்பலப்படுத்தி இந்த அயோக்கியத்தனங்களை களைய முன்வர வேண்டும்.

வெறுமனே இப்படியான சமூக சீர்கேடுகளை தட்டிக்கேட்பது மட்டும் போதாது. தொடர்சியாக எழும் சீர்கேடுகளையும் ஜனநாயக மீறல்களையும் சாதிவெறி அகங்காரங்களையும் கையாளப்பட்டு சமூகத்தில் இவற்றிக்கான அடிப்படைக் காரணங்களின் மாற்றத்தை உண்டு பண்ணக்கூடிய கல்வி முறைமையும் புதிய சட்டவரையறைகளும் சமூகத்தில் இணைக்கப்படல் வேண்டும்.

இதைவிட கடந்த 30 வருட பயங்கரவாதப் போரில் ஜனநாகத்தின் பெறுமதி புரியாமல் வளர்ந்து விட்ட ஒரு சந்ததியினரின் அறியாமையும் இந்த சீர்கேடுகளுக்கு உதவி புரிவதாகவே உள்ளது. இது முக்கியமாக எந்த பிரச்சினைகளை கையாளுவதிலும் அதற்கான நடுநிலைமையை பேணாது புலிகளின் ஆட்கள் என்றால் அது என்னவாக இருந்தாலும் சரி என்றதும் புலிகளின் தேவைக்கு என்றால் அது எப்படியாகிலும் கொடுத்துவிட வேண்டும் என்றதும் சிறு வயதினரை கட்டாய ஆட்சேர்ப்புககு உட்படுத்தியதின் விளைவுகளால் சிறுபராயத்திலே திருமணங்கள் பல நடைபெற்றதும் புலிகளின் ஆதரவாளர்களால் அரச படைகளால் வன்முறைக்குட்பட்ட குழந்தைகளில் மனநிலைகளால் பாதிக்கப்பட்டதுமாக ஒரு வன்முறை சக்கரம் தமிழ் சமூகத்தில் இன்று வரையும் சுழன்று கொண்டிருப்பதை அவதானிக்கலாம். இவை சில வேளைகளில் வன்முறையாகவும் பாலியல் வக்கிரங்களாகவும் வெளிவருகின்றது.

கடந்த 30 வருட தமிழர் போராட்டத்தினிடையே வளர்ந்த தமிழ் ஊடகங்கள் இன்று வரையிலும் தமது கடைமைகளில் சமூகத்தின் தேவைகளை ஒரு குறிப்பிட்ட சாதி அல்லது பிரிவினர் சம்பந்தமாகவே சார்பாகவே இயங்கியுள்ளனர். இந்த ஊடகங்கள் தமிழ் சமூகத்தின் ஒட்டு மொத்த சமூகத்தின் பிரதிபலிப்பாக இருக்கவில்லை என்பதை கடந்த தேர்தலின்போது யாழ் ஊடகங்களின் நடத்தைகளிலிருந்து அவதானிக்க முடிந்தது.

யாழ் சமூகத்தில் நடைபெறும் சமூகச் சீர்கேடுகள் பற்றி கூறிய கருத்தை பல பத்திரிகைகள் பிரதிபலிக்க தவறியுள்ளமையும் இங்கு குறிப்பிடத்தக்கது.

இதேபோன்று வவுனியாவில் நடைபெற்ற நகரசுத்தி தொழிலாளர்களின் போராட்டத்திற்கு முக்கியத்துவம் கொடுக்கவும் தவறியும் அம்மக்களுக்கு நீதிபெறும் வழிவகைகள் இன்று வரையில் அடையாளம் காணப்படவில்லை. தமிழ் ஊடகங்கள் ஊடகவியலை தமது ஊதியம் பெறும் தொழில் என்று மட்டும் பாராமல் இது சமூகத்தின் பாரிய கடமை என்ற உணர்வை உள்வாங்கியும் தற்போது உலக பொருளாதார சந்தைக்கு ஏற்ற சமூகத்தை எதிர்காலத்தில் எதிர்நோக்கியும் செயற்பட தயாராகிக்கொள்ள வேண்டும்.

தமிழ் மக்கள் தங்கள் பிரச்சினைகளையும் சமூகப் பலவீனங்களையும் சரியாக இனம்கண்டு அவற்றுக்கான தீர்வுகள் பற்றி ஆராயவேண்டும். அதைவிட்டுவிட்டு தமிழர்கள் கல்தோண்றி மண்தோண்றாக்காலத்தில் தேண்றிய மூத்த குடிகள் உயர்ந்த கலாச்சார பண்பாட்டு விழுமியங்கள் கொண்டவர்கள் என்று மூச்சுவிடாமல் முழங்குவது தமிழ் சமூகம் எதிர்நோக்கும் பிரச்சினைகளுக்குத் தீர்வு ஆகாது. சமூகப் பிரச்சினைகளைப் பொதுத் தளத்தறிகுக் கொண்டு வந்து விவாதிப்பதன் மூலமாக மட்டுமே ஒட்டுமொத்த சமூகத்தையும் சமூக மாற்றத்தை நோக்கி நகர்த்த முடியும். இவ்விடயத்தில் பத்திரிகைகள் காத்திரமான ஊடகங்கள் முக்கிய பங்கு வகிக்க வேண்டும்.

பராக் ஒபாமா இந்தியா வருகை

obama.jpgஅமெரிக்க அதிபர் பராக் ஒபாமா நான்கு நாள் பயணமாக இன்று மும்பை வந்தார். முதல் முறையாக இந்தியா வரும் ஒபாமாவுக்கு, மும்பை நகர் வரலாற்றில் இதுவரை இல்லாத அளவிற்கு மிக பலத்த பாதுகாப்பு ஏற்பாடுகள் செய்யப்பட்டுள்ளன. அவர் தங்கும் மும்பை தாஜ் ஹோட்டல் மற்றும் அருகே உள்ள கேட் வே ஆப் இந்தியா பகுதியில் ஆயிரக்கணக்கான போலீசார் குவிக்கப்பட்டுள்ளனர்.

நேற்றிரவு, வாஷிங்டன் ஆன்ட்ரூஸ் விமானப்படை தளத்திலிருந்து ஏர்போர்ஸ் ஒன் விமானத்தில் தனது மனைவி மிஷெல், இரு மகள்கள், மூத்த அமைச்சர்கள், அதிகாரிகள், தேசிய பாதுகாப்பு ஆலோசகர் ஆகியோருடன் ஒபாமா. இந்தியா புறப்பட்டார் வழியில் ஜெர்மனியில் அவரது விமானம், எரிபொருள் நிரப்புவதற்காக தரையிறங்கியது.

இன்று பகல் 1 மணிக்கு மும்பை விமான நிலையம் வந்தடைந்த ஒபாமாவுக்கு மிகச் சிறப்பான வரவேற்பு அளிக்கப்பட்டது. அவரது வருகையையொட்டி மும்பையில் மிக பலத்த பாதுகாப்பு ஏற்பாடுகள் செய்யப்பட்டுள்ளன.

இந்தப் பயணத்தின்போது இந்தியா-அமெரிக்கா இடையே பாதுகாப்புத்துறையிலும், அணு சக்தி்த் துறையிலும் மிக முக்கிய ஒப்பந்தங்கள் கையெழுத்தாக உள்ளன. 12 பில்லியன் டாலர் அளவுக்கான இந்த ஒப்பந்தங்கள் மூலம் அந்த நாட்டிடமிருந்து இந்தியா போர் விமானங்கள் உள்ளிட்ட ஏராளமான ஆயுதங்களை வாங்கவுள்ளது. மேலும் அந் நாட்டின் எரிசக்தித் துறை நிறுவனங்கள் இந்தியாவில் அணு உலைகளை அமைக்கவுள்ளன. இதனால் அமெரிக்காவில் புதிதாக 60,000 வேலைவாய்ப்புகள் உருவாகும் என்று தெரிகிறது.

ஒபாமாவுடன் உயர்மட்ட பிரதிநிதிகள், வெள்ளை மாளிகை அதிகாரிகள், தொழிலதிபர்கள், பத்திரிகையாளர்கள் என சுமார் 3,000 பேர் பல விமானங்களில் வந்துள்ளனர்.

வன்னிப் பாடசாலைகளில் வளப்பற்றாக் குறைகள்.

வன்னியில் மக்கள் மீள்குடியமர்த்தப்பட்டு வரும் பிரதேசங்களிலுள்ள பாடசாலைகளில் வளப்பற்றாக்குறைகள் காணப்படுவதோடு பாடங்களைக் கற்பிக்கும் ஆசிரியர்களும் பற்றாக்குறையாகவுள்ளனர்.

இதனால், போரினால் பாதிக்கப்பட்ட மாணவர்கள் தங்களின் கல்வியை மேம்படுத்துவதில் பிரச்சினைகளை எதிர்கொண்டு வருகின்றனர்.

கிளிநொச்சியில் அமைந்துள்ள முக்கிய பாடசாலைகளில் கூட ஆங்கிலம், கணிதம் ஆகிய பாடங்களைக் கற்பிக்க ஆசிரியர்கள் தட்டுப்பாடாகவுள்ளதாக தெரிவிக்கப்படுகின்றது. போரின்பின் மக்கள் மீள்குடியேற்றப்பட்டு வரும் நிலையில் வன்னிப்பகுதி பாடசாலைகளில் கற்பிக்கும் பல ஆசிரியர்கள் தினமும் யாழப்பாணத்திலிருந்தே வன்னிப்பகுதிக்கு கடமைக்கு பஸ்ஸில் வந்து செல்வதாகவும் இதனால் இவர்களின் கற்பித்தல் பங்களிப்பு குறைவாகவுள்ளதாகவும் தெரிவிக்கப்படுகின்றது.

தென்மராட்சிப் பகுதிகளில் மக்களை மீள்குடியேற்றுமாறு அம்மக்கள் கோரிக்கை!

தென்மராட்சியின் எழுதுமட்டுவாழ் தெற்கு, வடக்கு. கரம்பகம், தனங்கிளப்பு, ஆகிய கிராம அலுவலர் பிரிவுகளிலிருந்து இடம்பெயர்ந்த மக்கள் இன்னமும் மீள் குடியேற்றப்படாமலுள்ளதால் தங்களை விரைவில் தங்களின் சொந்த இடங்களில் மீள்குடியேற்றுமாறு கோரிக்கை விடுத்துள்ளனர்.

குறிப்பிட்ட பகுதிகளில் புதைக்கப்பட்டுள்ள மிதி வெடிகளை அகற்றி மக்களை மீள்குடியேற்ற நடவடிக்கை எடுக்குமாறு இப்பகுதியிலிருந்து இடம்பெயர்ந்த மக்கள் கோரிக்கை விடுத்துள்ளனர். குறிப்பிட்ட இப்பகுதிகளில் மக்கள் மீள்குடியேற பாதுகாப்புத்தரப்பினர் இன்னமும் அனுமதி வழங்கப்படவில்லை என்பது குறிப்பிடத்தக்கது.

வன்னியில் மீன்குடியேற்றப்பட்ட மக்களில் ஊனமுற்றவர்களின் விபரங்கள் சமூகசேவைகள் திணைக்களத்தினால் திரட்டப்பட்டு வருகின்றன.

பிரதேசச் செயலர் பிரிவுகள் தோறும் மக்களின் பிறப்பு, விபத்து, வன்செயல், நோய் போன்றவற்றினால் பாதிப்படைந்த ஊனமுற்றோர்களின் விபரங்கள் தற்போது திரட்டபட்டு வருகின்றன. நான்கு பக்க படிவங்கள் நிரப்பப்பட்டு ஊனமுற்றவர்களிடம் கையொப்பம் பெறப்பட்டு வருகின்றதோடு, ஊனத்தின் தன்மைக்கேற்ப ஆறு வகை அடையாள அட்டைகள் தயாரிக்கப்பட்டு எதிர்காலத்தில் அவர்களுக்கு வழங்கப்படும் எனவும் இதன்மூலம் ஊனமுற்றோர் பல நன்மைகளை அடைவர் எனவும் தெரிவிக்கப்பட்டுள்ளது.

சரணடைந்த விடுதலைப்புலிப் போராளிகளிகளுக்காக 40 இலட்சம் ரூபா செலவு.

போரின் போது சரணடைந்த முன்னாள் விடுதலைப்புலிப் பேராளிகளிகளின் புனர்வாழ்வுக்கென ஐ.நா. அபிவிருத்தித்திட்டம் 40 இலட்சம் அமெரிக்க டொலர்களை செலவிடுவதாக தெரிவிக்கப்பட்டுள்ளது. இந்தப்புனர்வாழ்வுத் திட்டத்தை நடைமுறைப்படுத்துவதற்கு அமைச்சரவை அங்கீகாரம் வழங்கியுள்ளதாகவும் என ஊடக அமைச்சர் கெஹலிய ரம்புக்வெல தெரிவித்துள்ளார்.

கல்வி, தகவல் தொழில்நுட்பம், போன்ற பல்வேறு துறைகளில் விடுதலைப் புலிகளின் முன்னாள் போராளிகள் பயிற்சியளிக்கப் பட்டுள்ளதாகவும் அவர் தெரிவித்தார்.

வன்னியில் தீபாவளிக் கொண்டாட்டங்கள் சோபையிழந்து காணப்பட்டன.

வடக்கில் இம்முறை தீபாவளிக் கொண்டாட்டங்கள் மிக அமைதியாக நடைபெற்றுள்ளது. குறிப்பாக வன்னிப்பகுதிகளில் மீள்குடியேற்றபட்ட மக்கள் அமைதியான முறையில் தீபாவளிப் பண்டிகையைக் கொண்டாடினர்.

போர் நடவடிக்கைகளின் போது தங்கள் உறவுகளை இழந்தவர்கள் இம்முறை தீபாவளிக் கொண்டாட்டங்களை மேற்கொள்ளவில்லை. வன்னியிலுள்ள புடவைக் கடைகளில் தீபாவளி வியாபாரம் இம்முறை களைகட்டவில்லை என வியாபாரிகள் தெரிவிக்கின்றனர்.

158 முன்னாள் புலிகள் நேற்று விடுதலை.

இறுதிக்கட்டப் போரின் போது படையினரிடம் சரணடைந்த முன்னாள் விடுதலைப்புலி உறுப்பினர்கள் 158 பேர் நேற்று வெள்ளிக்கிழமை தீபாவளியன்று விடுதலை செய்யப்பட்டுள்ளனர்.

படையினரிடம் சரணடைந்த பின்னர் புனர்வாழ்வளிக்கப்பட்ட முன்னாள் புலி உறுப்பினர்களே இவ்வாறு விடுதலை செய்யப்பட்டுள்ளனர்.

வவுனியா பம்பைமடு, பூந்தோட்டம், நெளுக்குளம், ஆகிய இடங்களிலுள்ள புனர்வாழ்வு முகாம்களில் வைக்கபட்டிருந்தவர்கள் அந்தந்த முகாம்களிலிருந்து விடுவிக்கப்பட்டு அவர்களின் பெற்றோர் உறவினர்களிடம் ஒப்படைக்கப்பட்டுள்ளனர்.

அவுஸ்திரேலிய மண்ணில் இலங்கை அணிக்கு முதல் தொடர் வெற்றி

upul.jpgஅவுஸ் திரேலியாவுடனான இரண்டாவது ஒருநாள் போட்டியிலும் இலங்கை அணி டக்வத் லுவிஸ் முறைப்படி 29 ஓட்டங்களால் வெற்றியீட்டியது. இதன் மூலம் இலங்கை அணி ஒருநாள் வரலாற்றில் முதல் முறையாக அவுஸ்திரேலிய மண்ணில் அவுஸ்திரேலியாவை தொடரொன்றில் வீழ்த்தி சாதனை படைத்துள்ளது.

சிட்னியில் நேற்று நடைபெற்ற இரண் டாவது ஒருநாள் போட் டியின் நாணய சுழற்சியில் வென்ற இலங்கை அணி முதலில் துடுப்பெடுத்தாட தீர்மானித்தது. இதில் முதல் போட்டியில் பங்கேற்காத ஆஸி. அணித் தலைவர் ரிக்கி பொன்டிங் கள மிறங்கினார். இந்நிலையில், துடுப்பெடுத்தாட களமிறங்கிய இலங்கை அணிக்கு உபுல் தரங்க, டி. எம். டில்ஷான் ஆகியோர் சிறந்த ஆரம்பத்தை வழங்கினர். இருவரும் இணைந்து 119 பந்துகளுக்கு 98 ஓட்டங்களை இணைப்பாட்டமாக பெற்றனர். இதில் டில்ஷான் 57 பந்துகளில் 5 பெளண்டரிகளுடன் 47 ஓட்டங்களை பெற்ற நிலையில் ஆட்டமிழந்தார்.

தொடர்ந்து வந்த மஹேல ஜயவர்தனவினால் 5 ஓட்டங்களையே பெற முடிந்தது. எனினும் 3ஆவது விக்கெட்டுக்காக அணித் தலைவர் குமார் சங்கக்காரவுடன் இணைந்த உபுல் தரங்க இலங்கை அணியின் ஓட்டங்களை மேலும் அதிகரித்தனர். இதன்போது இருவரும் இணைந்து 70 ஓட்டங்களை இணைப்பாட்டமாக பெற இலங்கை அணியின் மொத்த ஓட்டங்கள் 186 ஆக அதிகரித்தது.

இதனிடையே 34 ஆவது ஓவரில் வைத்து மழை குறுக்கிட்டது. தொடர்ந்து நடைபெற்ற போட்டியில் 41.1 ஆவது ஓவரில் வைத்து மீண்டும் மழை குறுக்கிட்டது. இதன்போது இலங்கை அணி 3 விக்கெட்டுகளை இழந்து 213 ஓட்டங்களைப் பெற்றிருந்தது.

இந்நிலையில் போட்டி நீண்ட நேரம் மழையால் தடைப்பட்டதால், இலங்கை அணியின் இன்னிங்ஸ் 41.1 ஓவர்களுக்கே வரையறுக்கப்பட்டது. இதில் இலங்கை சார்பில் சிறப்பாக துடுப்பெடுத்தாடிய உபுல் தரங்க 112 பந்துகளுக்கு 6 பெளண்டரிகளுடன் ஆட்டமிழக்காது 86 ஓட்டங்களைப் பெற்றார். அணித் தலைவர் சங்கக்கார 52 பந்துகளில் 4 பெளண்டரிகளுடன் 47 ஓட்டங்களை குவித்தார். இதன்படி டக்வர்த் – லுவிஸ் முறை அடிப்படையில் அவுஸ்திரேலிய அணிக்கு 39 ஓவர்களில் 244 ஓட்டங்கள் வெற்றி இலக்காக நிர்ணயிக்கப்பட்டது. இதற்கமைய வெற்றி இலக்கை நோக்கி பதிலெடுத்தாடிய அவுஸ்திரேலிய அணியின் விக்கெட்டுகள் முக்கியமான தருணங்களில் பறிபோயின.

இறுதியில் ஆஸி. அணி 39 ஓவர்கள் முடிவில் சகல விக்கெட்டுகளையும் இழந்து 210 ஓட்டங்களையே பெற்றது. இதன் மூலம் ஆஸி. ஒரு நாள் அரங்கில் தொடர்ச்சியாக 7ஆவது போட்டியிலும் தோல்வியை சந்தித்தது. கடந்த 13 ஆண்டுகளில் ஆஸி. அணி ஒருநாள் அரங்கில் பெற்ற மிக மோசமான பெறுபேறு இதுவென்பது குறிப்பிடத்தக்கது.

மறுபுறத்தில் இலங்கை அணி ஆஸி. மண்ணில் முதல் முறையாக ஒருநாள் தொடர் ஒன்றை வென்று சாதித்தது. இரு நாடுகளுக்கும் இடையிலான மூன்று போட்டிகளைக் கொண்ட ஒருநாள் தொடரை இலங்கை 2 – 0 என்ற கணக்கில் கைப்பற்றியது. இரண்டாவது ஒரு நாள் போட்டியில் இலங்கை சார்பில் சிறப்பாக செயல்பட்ட உபுல் தரங்க போட்டியின் ஆட்ட நாயகனாக தெரிவானார்.

இலங்கையை நோக்கி நகர்கிறது ‘ஜல்’ சூறாவளி

jal.jpgதிரு கோணமலையிலிருந்து 750 கிலோ மீட்டருக்கு அப்பால் வங்காள விரிகுடாவின் கிழக்கில் உருவான தாழமுக்கம் நேற்று முதல் சூறாவளியாக மாறி நகரத் தொடங்கி இருப்பதாக வானிலை அவதான நிலையத்தின் பிரதிப் பணி ப்பாளர் எஸ். ஆர். ஜயசேகர நேற்று தெரிவித்தார். இச்சூறாவளி இலங்கையின் வடக்கு, வட கிழக்கு கரையை அண்மித்தபடியே கடலில் பயணம் செய்து நாளை 7ம் திகதி தென்னிந்தியாவின் சென்னையை அடையும் எனவும் அவர் கூறினார்.

இச்சூறாவளி குறித்து வடக்கு, கிழக்கு மக்கள் மிகுந்த முன்னெச்சரிக்கையோடு இருக்க வேண்டும் எனவும் அவர் கேட்டுக்கொண்டார். இது தொடர்பாக அவர் மேலும் குறிப்பிடுகையில், திருமலையிலிருந்து 750 கிலோ மீட்டர் தூரத்தில் வங்காள விரிகுடாவில் கடந்த 3ம் திகதி இத்தாழமுக்கம் உருவானது. இது நேற்று முதல் சூறாவளியாக மாறி நகர ஆரம்பித்திருக்கிறது. இச் சூறாவளிக்கு ‘ஜல்’ என பெயரிடப்பட்டுள்ளது.

இச்சூறாவளி மணித்தியாலத்திற்கு 15 கிலோ மீட்டர்கள் வேகத்தில் நகர்ந்து கொண்டிருக்கும் அதேவேளையில், காற்றின் வேகம் மணித்தியாலத்திற்கு நூறு கிலோ மீற்றர்களாக உள்ளது. இச்சூறாவளி இன்று 6ம் திகதி இலங்கையை அண்மிக்கும் என எதிர்பார்க்கின்றோம். அதாவது, திருமலையிலிருந்து 600 கிலோ மீற்றர்களுக்குள் இச் சூறாவளி வந்து சேரும். அச்சமயம் இச்சூறாவளி தொடர்பாக மக்களுக்கு பாதுகாப்பு முன்னெச்சரிக்கை விடுப்பதற்கு எதிர்பார்த்துள்ளோம். இதனால், வடக்கு, கிழக்கு மக்கள் இன்று ஊடகங்களில் வளிமண்டலத் திணைக்களத்தால் விடுக்கப்படும் அறிவுறுத்தல்கள் குறித்து கூடிய கவனம் செலுத்துமாறு கேட்டுக்கொள்கின்றேன்.

இச் சூறாவளி இலங்கையின் வடக்கு, வட கிழக்கு கரையை அண்டியபடி கடலில் பயணம் செய்யும் என்பதால் அதன் தாக்கத்தை அப்பகுதி மக்களால் அதிகம் உணரக் கூடியதாக இருக்கும். அப்பிரதேசங்களில் இடி,மின்னலுடன் தொடர் மழை வீழ்ச்சி காணப்படும். காற்றின் வேகமும் அதிகரித்துக் காணப்படும். இச்சூறாவளி காரணமாக அதிகரித்த காற்று, இடி, மின்னல் என்பவற்றின் பாதிப்புக்களிலிருந்து தவிர்ந்து கொள்வதில் ஒவ்வொருவரும் கூடிய கவனம் செலுத்த வேண்டும். இச்சூறாவளி காரணமாகவே கடல் கொந்தளிப்பாக உள்ளது. அதனால் வடக்கு, கிழக்கு கடற்பரப்பில் கடற்றொழிலில் ஈடுபடுவதை மீனவர்கள் தவிர்த்துக்கொள்ள வேண்டும். இச் சூறாவளியின் விளைவாகவே காலநிலையில் திடீரென மாற்றம் ஏற்பட்டுள்ளது.