14

14

காணாமல் போனோர், தடுத்து வைக்கப்பட்டோர் தொடர்பாக நாளை யாழ்ப்பாணத்தில் ஆர்ப்பாட்ட நிகழ்வு நடைபெறவுள்ளது.

Jaffna_Bus_Strandகாணாமற் போனோர் மற்றும், சிறைச்சாலைகளில் தடுத்து வைக்கப்பட்டோர் தொடர்பாக யாழ்ப்பாணத்தில் ஆர்ப்பாட்டம் ஒன்று நாளை திங்கள் கிழமை நடத்தப்படவுள்ளது.

Jaffna_Bus_Strandகாணாமல் போனோர் தடுத்து வைக்கபட்டுள்ளோர் தொடர்பான விபரங்களை வெளியிடுமாறு கோரி யாழ். பஸ் நிலையத்தில் அனைத்துலக பல்கலைக்கழக மாணவர் ஒன்றியத்தின் சக அமைப்பான ‘நாம் இலங்கையர்’ என்ற அமைப்பின் எற்பாட்டில் இந்த ஆர்ப்பாட்டம் நடைபெறவுள்ளது.

காணாமல் போனோரின் உறவினர்கள் அவர்களின் படங்களுடன் வந்து இந்த நிகழ்வில் கலந்து கொள்ளுமாறு ‘நாம் இலங்கையர்’ என்ற அமைப்பின் அமைப்பாளர் ருவான் போபகே கேட்டுக்கொண்டுள்ளார். இதில் மாணவர்கள் புத்திஜீவிகள், பொது அமைப்புக்களின் பிரதிநிதிகள் ஆகியோர் பங்கு பற்றுமாறும் அவர் வேண்டுகோள் விடுத்துள்ளார். தமது கோரிக்கையை வலியுறுத்தி கையெழுத்துப் போராட்டம் ஒன்றையும் நாளை அவர் நடத்தவுள்ளதாகவும் அவர் தெரிவித்துள்ளார்.

நாவற்குழி தேசிய வீடமைப்பு அதிகாரசபைக்குச் சொந்தமான காணியின் எஞ்சிய இடங்களை யாழ்.மக்கள் கைப்பற்றியுள்ளனர்.

நாவற்குழியிலுள்ள தேசிய வீடமைப்பு அதிகார சபைக்குச் சொந்தமான காணியில் சிங்கள குடும்பங்கள் குடியேறி கொட்டில்களை அமைத்துள்ள நிலையில், மிகுதியாகவுள்ள காணிகளில் யாழ்ப்பாண மக்கள் சென்று கைப்பற்றியுள்ளனர்.
நாவற்குழியிலுள்ள குறித்த காணியில் கடந்த 10ஆம் திகதி இரவோடிரவாக யாழ்.புகையிரத நிலையத்தில் தங்கியிருந்த 70 சிங்களக் குடும்பங்கள் குடியேறி கொட்டில்களையும் அமைத்துள்ள நிலையில் நேற்று சனிக்கிழமை சாவகச்சேரி மற்றும் குருநகர் பகுதி மக்கள் சென்று எஞ்சிய நிலப்பகுதிகளைக் கைப்பற்றியுள்ளனர்.

இவ்வேளையில் சிறிது பற்றம் நிலவிய போதும் சிங்கள மக்கள் பிடித்து வைத்திருக்கும் நிலங்களைத் தவிர்த்து ஏனைய இடங்களை தமிழ்மக்கள் பிடித்துக்கொண்டனர்.

தற்போது 50 வரையிலான கொட்டில்களை சிங்களக் குடும்பங்கள் அமைத்துள்ளன. ஆனால், 50 இற்கும் மேற்பட்ட கொட்டில்களை தமிழ்மக்கள் அமைத்துளதாக செய்திகள் தெரிவிக்கின்றன.

நேற்று மீள்குடியேறச் சென்ற யாழ்.கொழும்புத்துறை வலன்புரம் மக்களை படையினர் அனுமதிக்கவில்லை.

யாழ்.கொழும்புத்துறையைச் சேர்ந்த வலன்புரம் பகுதி மக்கள் நேற்று சனிக்கழமை தங்களது சொந்த இடங்களில் மீள்குடியேறச் சென்ற போது படையினரால் தடுத்து நிறுத்தப்பட்டனர். தங்களது சொந்த இடங்களில் மீள்குடியேறுவதற்காக சென்ற குறித்த பகுதி மக்கள் அப்பகுதிகளில் சிரமதானப் பணிகளில் ஈடுபட்டனர். ஆனால், அவர்கள் அப்பகுதிகளில் குடியேற படையினர் அனுமதிக்கவில்லை.

சுமார் 15 வருடங்களுக்கு மேலாக இப்பகுதிகளிலிருந்து இடம்பெயர்ந்த மக்கள் தங்களின் சொந்த இடங்களில் குடியேறி வாழும் விருப்பத்துடன் அப்பகுதிகளில் சிரமதானப் பணிகளை மேற்கொண்டனர். அப்பகுதிகளில் வெடிபொருட்கள் அகற்றப்பட வேண்டியுள்ளதாகவும் அதன் பின்னர் மீள்குடியேற்றத்திற்கான ஒழங்குகளை ஏற்படுத்தித் தருவதாகவும் படைத்தரப்பில் பின்னர் தெரிவிக்கப்பட்டதையடுத்து மக்கள் திரும்பிச்சென்று விட்டதாகவும் தெரிவிக்கப்பட்டுள்ளது.

பளையில் மீள்குடியமர்ந்த மக்களுக்கு பல்வேறு நிறுவனங்கள் உதவி.

பளைப் பிரதேசத்தில் மீளக்குடியமர்த்தப்பட்ட மக்களுக்கு பல்வேறு நிறுவனங்கள் உதவிகளை வழங்கி வருகின்றன. பளைப் பிரதேசத்தில மீளக்குடியமர்ந்த மக்களில் மோசமாகப் பாதிக்கப்பட்ட மக்களுக்கு இவ்வுதவிகள் வழங்கப்பட்டுள்ளன.

யாழ். வை.எம்.சி.ஏ நிறுவனம் உழைப்பாளிகளை இழந்த குடும்பங்களுக்கு தையல் இயந்திரங்களையும், தீவக லயன்ஸ் கழகத்தினர் வறுமை நிலையிலுள்ள இரு குடும்பங்களுக்கு சைக்கிள்களையும், வழங்கியுள்ளதாக தெரிவிக்கப்பட்டுள்ளது

ஜனாதிபதியின் செயலாளர் யாழ்.வருகை.

Lalith_Weerathunga_Secretaty_to_Presidentஜனாதிபதி மகிந்த ராஜபக்சவின் செயலாளர் லலித் வீரதுங்க நேற்று சனிக்கிழமை யாழ்ப்பாணத்திற்கு விஜயம் ஒன்றை மேற்கொண்டார். அவர் யாழப்பாணத்தில் காரைநகர் கசூரினா கடற்கரை, யாழ்.நூலகம் ஆகிய இடங்களுக்குச் சென்று
பார்வையிட்டார்.

யாழ். நூலகத்திற்குச் சென்ற ஜனாதிபதியின் செயலர் நூலகருடன் கலந்துரையாடி பல விடயங்களை கேட்டறிந்தார். ஜனாதிபதியின் செயலாளர் தனிப்பட்ட விஜயமாக யாழ்ப்பாணம் வருகை தந்ததாக தெரிவிக்கப்பட்டுள்ளது.

இறந்து கொண்டிருக்கும் எங்கள் உறவுகளின் குரல்கள் கேட்கிறதா? : ஆதவன் (வன்னி)

Maaveerar_Thuyilum_Illam_2010இது கார்த்திகை மாதம். நம் இல்லங்கள் தோறும் சோகத்தின் வெளிச்சம். அப்படியும் ஒரு காலம் இருந்தது என்பதை எவரும் மறுக்க முடியாதுதான். ஆனால் எல்லாமும் முடிந்துவிட்டது. சரிகளுடனும் பிழைகளுடன் முன்று தசாப்த கால அரசியல் வாழ்வு முற்றுப் பெற்றுவிட்டது. அது பல்லாயிரக் கணக்கான மக்களின், போராளிகளின் தியாகத்தால் உருப்பெற்ற ஒன்று. வெறும் வாய்ச் சொல் வீரத்தாலோ, விதண்டா வாதங்களாலோ நிலைபெற்ற ஒன்றல்ல. எனவே இனி அதனை நாம் காயப்படுத்தவும் தேவையில்லை. கொச்சைப்படுத்தவும் தேவையில்லை.

சமீப நாட்களாக நடந்தேறிக் கொண்டிருக்கும் சில நிகழ்வுகளை பார்த்தால் எல்லாவற்றையும் தூக்கி வீசிப்போட்டு போனால் என்ன என்று கூட யோசிப்பதுண்டு. ஒரு புறம், உணவுக்காவும், தங்கள் மானம் மறைப்பதற்கான உடு துணிக்காகவும் கையேந்தி நிற்கும் மக்கள். மறுபுறமோ எதுவுமே நடக்காதது போன்று நல்லூர் கோயில் திருவிழாவில் முட்டி மோதிக் கொண்டிருக்கும் மக்கள் கூட்டம். அடுத்து தமிழ்செல்வனுக்கு சிலை வைப்பதாகக் கூறி இன்னொரு கூட்டம். இப்போது மாவீரர் தினக் கொண்டாட்டத்திற்கான அழைப்பு விடும் பிறிதொரு கூட்டம். இது போதாதென்று தங்களை தாங்களே பிரதமர் என்றும் அமைச்சர்கள் என்றும் சொல்லிக் கொண்டும், அதற்காக பணத்தை வாரி இறைத்துக் கொண்டிருக்கும் இன்னொரு பிரிவு. கோமாளித்தனத்தின் எல்லை கூட எங்களுக்குத் தெரியவில்லை.

கடந்த முன்று தசாப்த கால போர் வாழ்வில் தன்னலமற்று தங்கள் உயிர்களை தியாகம் செய்தவர்களை நினைவு கொள்ள வேண்டும் என்பதில் தவறில்லை ஆனால் இறந்தவர்களுக்கு கொடுக்கும் முக்கியத்துவத்தில் சிறிதளவாவது இறந்து கொண்டிருக்கும் எங்கள் மக்களுக்கும் சரணடைந்த முன்னாள் போராளிகளுக்கும் ஏன் எங்களால் கொடுக்க முடியவில்லை. அவர்கள் குறித்து ஏன் எங்களால் கசினை கொள்ள முடியவில்லை. அவர்கள் செய்த துரோகம்தான் என்ன?

இப்படி எத்னையோ கேள்விகள் மனதை வருத்தும் போது கூடவே இன்னொரு கேள்வியும் எழுவதுண்டு. உண்மையிலேயே நாங்கள் ஒரு விடுதலை அவாவிய சமுகம்தானா? நடப்பவற்றை பார்த்தால் அப்படி நம்ப மனம் ஏனோ மறுக்கிறது. எப்படி எங்களால் இவ்வளவு சாதாரணமாக எல்லாவற்றையும் உதறித் தள்ளிவிட்டு சிந்திக்க முடிகின்றது. கடந்த மூன்று தசாப்பங்களாக போராட்டத்தின் பக்கபலமாக இருந்த உறவுகள்தான் இன்று நடு வீதியில் வாழ வழியின்றி இருக்கின்றனர். இந்த போராட்டத்தின் உயிர் மூச்சாக இருந்தவர்கள்தான் இன்று சரணடைந்து எதிகாலத்திற்காக ஏங்கிக் கொண்டிருக்கின்றனர். உங்கள் விருப்பங்களுக்கு பலியான மக்கள் இன்று மரணத்திற்கு இரையாகிக் கொண்டிருக்கின்றனர். உங்கள் கனவிற்கு முகம் கொடுக்க போராடிவர்கள் இன்று தங்கள் சமூக-முகமிழந்து (social face) இருக்கின்றனர். இவர்களை காப்பாற்ற வேண்டிய பெறுப்பு ஒவ்வொரு புலம்பெயர் தமிழனுக்கும் உண்டு. இதனை தட்டிக் கழிக்கும் எவருமே நிட்சமாக மனச்சாட்சியுள்ள மனிதர்களாக இருக்க முடியாது. ஏனென்றால் நீங்கள் அனைவரும் இன்று சிறப்பாக வாழ்ந்து கொண்டிருப்பது அவர்களது பேரால்தான். இன்று களத்திலும் புலத்திலும் நீங்கள் தூக்கி பிடிக்கும் அரசியல் சுலோகங்களில் இருப்பதெல்லாம் அவர்களின் குருதி தொட்டு எழுதிய வாசகங்களே!

இந்தச் சூழலில்தான் மாவீரர் தினத்திற்கான அழைப்புக்கள் விடுக்கப்படுகின்றன. உண்மையில் இது ஒரு கொச்சைப்படுத்தலுக்கான அழைப்புத்தான். இறந்து கொண்டிருக்கும் முன்னாள் போராளிகளின் வாழ்வு மீது சிறிதளவு கூட அக்கறை கொள்ளாதவர்கள் இறந்து போன போராளிகளை நினைவு கொள்வதை எந்தவகையில் உண்மையானது என்று நம்புவது? தயவு செய்து அவர்களை உங்களது அற்ப பிழைப்புக்காக கொச்சைப்படுத்தாதீர்கள். பல்லாயிரக்க கணக்கான போராளிகளும் பல நூற்றுக் கணக்கான தளபதிகளும் தங்களை இழந்த இந்த போராட்டத்தில்; சு.ப.தமிழ்செல்வனுக்கு மட்டும் ஏன் ஒரு பிரத்தியேக சிலை வழிபாடு.  அந்த பணத்தில் பத்து குழந்தைகளுக்கான எதிகாலத்தை உவாக்க முடியும். முகம் சிதைந்து மற்றவர்கள் முன் தோன்றுவதற்கே அஞ்சி ஒழியும் முன்னாள் பெண் போராளிகளின் வாழ்வை மீட்டெடுக்க முடியும்.

துரோகத்திற்கு உங்களிடம் ஏராளம் விளக்கங்கள் இருக்கலாம் நன்பர்களே! ஆனால் நம்மை நம்பிய ஏழை மக்களை வஞ்சிப்பதுதான் உண்மையான துரோகம். இன்று புலம்பெயர் சூழலில் வசதியாக இருந்து கொண்டு அரசியல் செய்வோரும், உதவி செய்ய முன்வருவோரைக் கூட தடுத்துக் கொண்டிருக்கும் கனவான்களும் ஒன்றை நினைவில் கொள்ளுங்கள் உங்களால் பலிக்கடாவாக்கப்பட்ட அந்த ஏழை மக்களுக்கும், எங்கள் அண்ணன்மார் இருக்கின்றனர் அவர்கள் எங்களைக் காப்பாற்றுவார்கள் என்று நம்பிக் கொண்டிருந்த அந்த போராளிகளுக்கும் நீங்கள் செய்து கொண்டிருக்கும் இந்த பச்சை துரோகத்தை வரலாறு நிட்சயம் பதிவு செய்யும்.

ஆயிரம் சாட்சிகளை விட பெரியது மனச்சாட்சி என்று ஒரு கருத்துண்டு. மனச்சாட்சி உறுத்தலுக்கு உட்பட்ட ஒவ்வொருவரும் பாதிக்கப்பட்ட மக்கள் குறித்தும் முன்னாள் போராளிகள் குறித்தும் ஏதோவொரு வகையில் குற்ற உணர்விற்கு ஆட்பட்டவர்களாகவே இருக்கின்றனர். கே.பி அண்ணருடன் கதைத்த சந்தர்ப்பங்களில் எல்லாம் அவர் அவ்வாறானதொரு குற்ற உணர்விற்கு ஆட்பட்டவராகவே பேசுகின்றார். எல்லோரும் ஒன்றுபட்டு கண்ட கனவு, தொடங்கிய பயணம் ஆனால் அதன் வலிகளையும் வேதனைகளையும் ஒரு குறிப்பிட்ட மக்களை மட்டும் அனுபவிக்கச் சொல்லுவது என்ன நியாயம். இதுதான் அவரின் வாதம். மனச்சாட்சிக்கு அஞ்சும் ஒவ்வொரு மனிதனையும் இந்த கேள்வி அலைக்கழிக்கின்றது. கே.பி ஒரு மனச்சாட்சிக்கு மதிப்பளிக்கும் மனிதர். அவர் பாவப்பட்ட வஞ்சிக்கப்பட்ட மக்களை விட்டுவிட்டு ஒதுங்கி வாழ விரும்பவில்லை. இந்த போராட்டத்தின் ஆதி அந்தம் வரை இருந்த ஒருவர் என்ற வகையில் அவர்களது இன்றைய துயர் வாழ்வில் தனக்கும் பங்குண்டு என்பதை மனப்பூர்வமாக ஏற்றுக்கொள்ளும் துனிவு அவரிடமுண்டு. எனவே தனது இறுதிக் காலத்தில் தன்னால் இயன்றதை அந்த மக்களுக்காக செய்ய முயல்கின்றார். அவருடன் பேசிய சந்தாப்பங்களிலெல்லாம் நான் இதனையே புரிந்து கொண்டேன். இதுதான் அவரது பணியின் அடிப்படை. இதற்கு பலரும் பல்வேறு விளங்கங்களைச் சொல்லலாம். நாம் விளக்கங்களில் காலங்களை கடத்தியதுதானே அதிகம்.

கார்த்திகை மாதத்தை முன்வைத்து புதுவை அண்ணன் எழுதிய கவிதை வரிகள்  இவை. கேட்கிறதா மணி? கேட்கிறதா பாடல்? தெரிகிறதா நெய் விளக்கு? எங்களாலும் சில ஓலிகளை கேட்க முடிகிறது. எங்களாலும் சில காட்சிகளை கான முடிகின்றது நன்பர்களே! அது – எங்களை காப்பாற்றுங்கள் என்னும் பாதிக்ப்பட்ட மக்களின் கதறல்கள். இறப்பை நெருங்கிக் கொண்டிருக்கும் அங்கவீனமடைந்த அந்த போராளிகளின் இறுதிக் குரல்கள். வெள்ளத்தில் இடுப்பளவு தண்ணீரில் தனது கைக் குழந்தையைத் தூக்கிக் கொண்டு நிற்கும் தாய்மாரின் காட்சிகள். இரவில் தான் தூங்கிவிட்டால் தன் குழந்தைகளை பாம்பு தீண்டிவிடுமோ, நட்டுவக்காலி குத்திவிடுமோ என்று அஞ்சி விழித்துக் கொண்டிருக்கும் உறவுகளின் காட்சிதான் எங்குமே தெரிகிறது. மணியும் இல்லை, பாடலும் இல்லை, எரியும் நெய்விளக்கும் இல்லை. நன்பர்களே கதறலும் கண்ணீரும் அவமானத்தில் கூனிக்குறுகிய முகங்களும்தான் இங்கு வாழ்வு. அவர்கள் இப்போதும் இருக்கிறார்கள் ஆனால் பின்னர் இறந்து போகலாம். இறந்து கொண்டிருப்பர்களை காப்பாற்றுவதே எங்கள் முன்னுள்ள ஒரேயோரு கடமையாகும். மனச்சாட்சியுள்ள ஒவ்வொரு புலம்பெயர் தமிழரும் ஒரு கணம் இறந்து கொண்டிருக்கும் உங்கள் உறவுகள் குறித்து சிந்திக்குமாறு நாம் கோருகிறோம். இறந்த போராளிகள் குறித்து சிந்திக்க முற்படும் இவ் வேளையிலாவது இறந்து கொண்டு இருக்கும் மக்கள் குறித்தும் முன்னாள் போராளிகள் குறித்தும் ஒரு கணம் சிந்தியுங்கள்.

ஆங் சாங் சூச்சி விடுதலை : பிபிசி தமிழழோசை

Aung_San_Suu_Kyiஜனநாயகத்திற்கு ஆதரவான பர்மிய தலைவரான ஆங் சாங் சூச்சி வீட்டு காவலில் இருந்து விடுவிக்கப்பட்டுள்ளார். ரங்கூனில் இருக்கின்ற அவரது இல்லத்தில் இருந்து ஆங் சாங் சூச்சி வெளியே வந்த போது ஆயிரக்கணக்கான அவரது ஆதரவாளர்கள் ஆரவாரித்தனர். கடந்த ஏழாண்டு காலமாக இவர் இந்த வீட்டில் சிறை வைக்கப்பட்டிருந்தார்.

அவரது இல்லத்தை சுற்றியிருந்த பாதுகாப்பு தடைகளை பாதுகாப்பு அதிகாரிகள் அகற்றினர். ஆதரவாளர் எண்ணிக்கை அதிகமானதை தொடர்ந்து ஏராளமான அதிரடி பொலிஸார் அவ்விடத்தை விட்டு வெளியேறினர்.

அமைதிக்கான நோபல் பரிசை வென்றவரான 65 வயதான ஆங் சாங் சூச்சி கடந்த 21 ஆண்டு காலத்தில், 15 ஆண்டு கால பகுதி தடுத்தே வைக்கப்பட்டிருந்தார்.

இவர், முன்னரே, அதாவது கடந்த வருடமே விடுவிக்கப்பட வேண்டியவராக இருந்தார். ஆனால் அமெரிக்கர் ஒருவர் வாவியைக் கடந்து நீந்திச் சென்று சூச்சியின் வீட்டுக்குச் சென்ற சம்பவத்தைச் சுட்டிக்காட்டி, அவர் சூச்சியை மீட்கும் முயற்சியில் ஈடுபட்டிருந்தார் எனக்கூறி, இறுதியாக மீண்டும் தடுத்துவைக்கப்பட்டார்.

கடந்த ஞாயிறன்று இராணுவ ஆட்சியாளர்களின் ஆதரவுபெற்ற கட்சியே, இருபது ஆண்டுகளுக்குப் பின்னர் நடைபெற்ற தேர்தலில் வெற்றிபெற்றது. ஆனால் இந்தத் தேர்தல் முறைகேடுகள் மிக்கது என பரவலாக கண்டிக்கப்பட்டது.

சனிக்கிழமை காலை முதலே, சூச்சியின் விடுதலைச் செய்தியைக் கேட்பதற்காக, அவரது வீட்டுக்கருகிலும் இதுவரை தடை செய்யப்பட்ட நிலையிலுள்ள என்.எல்.டீ என்ற ஜனநாயகத்துக்கான தேசிய லீக் கட்சியின் தலைமையகத்துக்கு அருகிலும் மக்கள் கூட்டம் உணர்வுபூர்வமாக காத்திருந்தது.

அனேகமானவர்கள் ‘நாம் ஆங்சாங் சூச்சிக்கு தோள்கொடுப்போம்’ என்ற பொருள்படும் டீசர்ட்டுகளுடன் காணப்பட்டனர்.

மாலை நேரமளவில், சூச்சியின் வாவிக் கரையோரத்து வீட்டுக்குச் செல்லும் பாதையை மறித்து போடப்பட்டிருந்த பாதுகாப்புத் தடைக்கு எதிர்ப்புறமாக இருந்த நூற்றுக்கணக்கான மக்களுக்கும் ஆயுதந் தரித்திருந்த கலகத்தடுப்புப் பொலிசாருக்கும் இடையில் வாக்குவாதங்களும் தள்ளு முள்ளுகளும் இடம்பெற்றன.

அதனைத்தொடர்ந்து, அந்த மக்கள் கூட்டத்தில் பலர் நடு வீதியிலேயே அமர்ந்துவிட்டனர்.

பின்னர், மாலை ஐந்து மணியளவில் நிலைமை இன்னும் மோசமடைந்த போது பாதுகாப்புப் படையினர் தடைகளை அகற்றத் தொடங்குவதாக செய்திகள் வர ஆரம்பித்தன.

இறுதியாக,அதிகாரிகளின் கார்கள் வீட்டு வளாகத்துக்குள் நுழைவதைக் காணமுடிந்தது.பின்னர், விடுதலை உத்தரவு சூச்சியிடம் வாசிக்கப்பட்டதாக சிவில் உடையில் வந்த அதிகாரிகள் அறிவித்தனர்.

உடனடியாக நூற்றுக்கணக்கணக்கான மக்கள் மகிழ்ச்சி ஆரவாரத்துடன் சூச்சியை வாழ்த்துவதற்காக அவரது வீட்டை நோக்கி ஒடிச்சென்றனர்.

அதனையடுத்து, பாரம்பரிய உடையுடன் ஆங்சாங் சூச்சி, அவரது வீட்டுவளாக வாயிலில் உள்ள பீடத்திலிருந்து மக்கள் முன்னிலையில் தோன்றினார்.மக்கள் கூட்டம் மகிழ்ச்சியில் ஆர்ப்பரித்தது.தேசிய கீதத்தைப் பாடி மக்கள் கௌரவத்தை செலுத்தினார்கள்.

1947ம் ஆண்டு படுகொலை செய்யப்பட்ட, பர்மாவின் சுதந்திர போராட்ட வீரராக சித்தரிக்கப்படும் ஜெனரல் ஆங் சானின் மகளாக 1945 ஆம் ஆண்டில் பிறந்தார் சூச்சி.

1960களில் பர்மாவிலிருந்து வெளியேறிப்பின் பிரிட்டனில் கல்வி பயின்ற இவர், 1988 ஆம் ஆண்டில் தனது தாயாரின் உடல்நலனைக்கருத்தில் கொண்டு நாடுதிரும்பினார்.

இக்காலத்தில், சர்வாதிகார ஆட்சிநடத்திய ஊன ந வின் இற்கு எதிரான போராட்டத்தில் ஈடுபட்டபோதே 89 இல், பர்மிய ஜூன்டா ஆட்சியாளர்களால் வீட்டுக்காவலில் வைக்கப்பட்டு இராணுவ சட்டத்துக்குள்ளாக்கப்படுவதாக அறிவிக்கப்பட்டார்.

1990 ஆம் ஆண்டில் சூச்சியின் ஜனநாயக ஆதரவு முன்னணிக்கட்சி வெற்றிபெற்றபோதும் இராணுவத்தினர் அந்த முடிவை ஏற்றுக்கொள்ளவில்லை.

1991 ஆம் ஆண்டில் நோபல் பரிசை வென்ற ஆங்சாங் சூச்சி, 1995 ஆம் ஆண்டில் வீட்டுக்காவலிலிருந்து விடுவிக்கப்பட்ட போதிலும் அவரது நடமாடும் சுதந்திரம் கட்டுப்படுத்தப்பட்டிருந்தது.

2000 ஆம் ஆண்டில் மீண்டும் வீட்டுக் காவலுக்குள்ளானார் சூச்சி.

இறுதியாக இந்த மாதத்தில் நடைபெற்ற தேர்தலை, சூச்சியின் என்.எல்.டி கட்சி நிராகரித்த நிலையில், அந்தக்கட்சி தடைசெய்யப்பட்டது.

தற்போது சூச்சியின் நீண்ட வீட்டுக் காவலும் ஒருவாராக முடிவுக்கு வந்துவிட்டது. பர்மாவின் அடுத்த அரசியல் களம் எவ்வாறு அமையப்போகிறது.

சூச்சியின் அடுத்த கட்ட நடவடிக்கை என்ன என்பதை முழு உலகும் மிக உன்னிப்பாக அவதானித்துக்கொண்டிருக்கின்றது.