இவ்வாரம் இலங்கை சென்றிருந்த ஊடகவியலாளர் கார்திகேயன் திருலோகசுந்தர் (சுந்தர்) கொழும்பில் கட்டுநாயக்கா விமான நிலையத்தில் கைது செய்யப்பட்டு விடுவிக்கப்பட்டு உள்ளார். விமான நிலையத்தில் இலங்கைப் புலனாய்ப்பிரிவினரால் கைது செய்யப்பட்ட இவர் நேற்று மாலை (நவம்பர் 18 2010) விசாரணைகளின் பின் விடுவிக்கப்பட்டு உள்ளார்.
சுந்தர் ஈரிபிசி வானொலியில் பணியாற்றி வந்தவர். அதன்பின் தீபம் தொலைக்காட்சியில் சிறிதுகாலம் பணியாற்றியவர். மார்ச் 19 2008ல் சுந்தரை வேலை நீக்கும் கடிதத்தை தீபம் தொலைக்காட்சி வழங்கியது. இதற்கு முன்னர் தீபம் தொலைக்காட்சிக்கும் சுந்தருக்கும் இடையே குற்றச்சாட்டுகளும் முரண்பாடுகளும் வாக்குவாதமும் ஏற்பட்டு இருந்தமை லண்டன் குரல் இதழ் 23 (மார்ச் – ஏப்ரல் 2008) ல் வெளிவந்திருந்தது.
அதன்பின்னர் சுந்தர் ரிரிஎன் – ஜரிவி தொலைக்காட்சியில் பணியாற்றி இருந்தார். தற்போது ஜிரிவி இன் முக்கிய நிகழச்சித் தயாரிப்பாளராகவும் நிகழ்ச்சி வழங்குனராகவும் உள்ள தினேஸ்குமாரும் தீபம் தொலைக்காட்சியில் இருந்தே ரிரிஎன் – ஜிரிவி தொலைக்காட்சிக்கு வந்தவர் என்பது குறிப்பிடத்தக்கது.
ஜிரிவி இலும் சுந்தர் நீண்டகாலம் நிலைக்கவில்லை. ஜிரிவி இல் சம்பளம் வழங்கப்படாத காரணத்தினால் சிலர் அத்தொலைக்காட்சியில் இருந்து விலகிய போது சுந்தரும் அதன் காரணமாக வெளியேறினார். அதன் பின்னர் தற்போது வடக்கின் வசந்தத்தில் யாழ்ப்பாணத்தில் ஹொட்டல் கட்டிவருகின்ற ஆணிவேர் படத் தயாரிப்பாளர் திலகராஜாவின் உணவகம் ஒன்றில் முகாமையாளராகக் கடமையாற்றினார்.
இலங்கைக்கு தனது தாயை பார்க்க சென்ற பொழுதே விமான நிலையத்தில் வைத்து கைதுசெய்யப்பட்டார். ஜிரிவி இல் பணியாற்றியது தொடர்பாகவே இவர் கைது செய்யப்பட்டதாகத் தெரியவருகிறது. இருப்பினும் இவர் நீண்ட காலத்திற்கு முன்னரேயே ஜிரிவி யை விட்டு வெளியேறியதும் மற்றும் அரசுசார்பானவர்கள் மத்தியில் இருந்து வந்த வேண்டுகோள்களை அடுத்தும் இவர் விடுவிக்கப்பட்டு உள்ளார்.