20

20

இலங்கைத் தமிழ் ஆவணங்கள்: ஆவணப்படுத்துதல் – வரலாறு – அதன் முக்கியத்துவம்: இராசையா மகேஸ்வரன்

இராசையா மகேஸ்வரன், B.A(Hons), Master of Library & Information Science சிரேஷ்ட துணைநூலகர், பேராதனை பல்கலைக்கழகம், இலங்கை.

அறிமுகம்:
உலகில் சகல நாடுகளிலும் ஆவணக்காப்பகங்கள் உண்டு. ஆவணக்காப்பகங்கள் என்பது குறிப்பேடுகளை, வெளியீடுகளை தொகுத்து வைத்து பாதுகாக்கும் இடமாகும். இன்றைய ஆவணங் களை வருங்காலத்தவர்களுக்கு பாதுகாத்து வழங்குவது இதன் பணிகளுள் முக்கியமானதாகும். இலங்கையில் ஆவணப்பாதுகாப்புக்கு நீண்டகால வரலாறு உண்டு. மூன்றாம் நூற்றாண்டில் மன்னர்காலந்தொட்டு இலங்கையின் பௌத்தமடாலயங்களிலும், கோயில்களிலும், நூல்கள் பாதுகாக்கப்பட்டும், பயிலப்பட்டும் வந்துள்ளன. மகாவிகாரைகள், அபயகிரி விகாரை ஆகியன ஆவணப்பாதுகாப்பு நிலையங்களாக விளங்கியிருந்தன. இலங்கையில் 3ம் நூற்றாண்டு முதல் ஆவணப்பாதுகாப்பு ஆரம்பிக்கப்பட்ட போதும் ஐரோப்பிய ஆட்சிக்காலத்திலேயே 16ம் நூற்றாண்டில் ஆவணப்படுத்துதல், நூலகம் என்பன முறைப்படி ஆரம்பிக்கப்பட்டுள்ளன.

பண்டைக்காலத்தில் மன்னர்களால் வழங்கப்பட்டவை குறித்துவைத்த ஆவணம்“பின்பொத்” (Pinpoth) என அழைக்கப்பட்டது. இதனை வைத்துக்காத்தவர் “பொத் வருன்” (Poth Varun) நூல்காப்பாளர் என அழைக்கப்பட்டுள்ளனர். கோட்டை இராச்சியகாலத்தில் (1415 -1597) மன்னரால் வழங்கப்பட்ட வாய்மூல தண்டனைகளைக் குறித்துவைத்த “முகவெட்டி” (Mukavetti) என்ற ஆவணம் பயன்படுத்தப்பட்டதாவும், கண்டி இராச்சியகாலத்தில் ஆவணங்களை ‘மகாமோட்டி’ (Mahamoutti) பாதுகாத்ததாக வரலாறுகளில் காணப்படுகின்றன. இக்காலத்தில் மன்னர்கள் கொடையாக வழங்கிய காணிகளுக்கான ஓலைச்சீட்டு (olai Sittu’ , ‘Cul Put’) என அழைக்கப்பட்டதுடன் இவ்வாவணங்களை எழுதுபவரும், பாதுகாப்பவரும் ‘எழுதுனர்’ (liannah) எனவும் அழைக்கப்பட்டதாகவும் வரலாற்றில் காணப்படுகின்றது. அநுராதபுரகாலத்தில் (300-1017) மன்னரது இராச்சிய நிதிக்கணக்குகள் ‘பண்டக பொத்தகம்’ (Pandaka–Pottagam) என அழைக்கப்பட்டுள்ளது. அதேபோல் வரிஅறவிட்டவை ‘வரி பொத்தகம்’ (Vari-Pottagam) என அழைக்கப்பட்டுள்ளது. இலங்கையின் வரலாற்றினை கூறும் மகா வம்சம், சூலவம்சம் என்பன தீபவம்சம் (Dipawamsa, Attakatha) எனும் 4ம்-6ம் நூற்றாண்டு ஆவண ஏடுகளைத் துணைக்கொண்டு எழுதப்பட்டுள்ளன.

போர்த்துக்கேயரே (1515-1656) ஆவணப்படுத்துதலை 16ம் நூற்றாண்டில் ஆரம்பித்துள்ளனர். ஓல்லாந்தர் (1640 – 1796) போர்த்துக்கேயரிடமிருந்து கொழும்பை 1656இல் கைப்பற்றியபோது ஆவணப்படுத்தப்பட்ட ஆவணங்களை கையளிக்கமறுத்து போத்துக்கேயர்கள் அழித்துள்ளனர். ஓல்லாந்தர் 1660-1662 காலப்பகுதியில் ஆவணப்படுத்துனர் (Record Keeper – Mr.Pieter de Bitter) நியமிக்கப்பட்டுள்ளார். இக்காலத்தில் பல நிர்வாகப் பிரிவுகளாகப் பிரிக்கப்பட்டு காலி, யாழ்ப்பாணம், திருகோணமலை, கொழும்பு என ஆவணப் படுத்துதல் ஆரம்பிக்கப்பட்டுள்ளது. ஒல்லாந்தர்களிடமிருந்து பிரித்தானியர் (1796-1947) இலங்கையை கைப்பற்றிய போது 1798 இல் ஒல்லாந்தரினால் (டச்சுக்காரர்) ஆவணங்கள் அழிக்கப்பட்டுள்ளன. 1815இல் கண்டிஇராச்சியம் பிரித்தானியரால் கைப்பற்றப்பட்டபோது கண்டி ஆவணங்கள், அழிக்கப்பட்டதாகக் கூறப்படுகின்றது.

பிரித்தானியர் ஆட்சிக்காலத்தில் மாவட்டக்காரியாலயங்களில் ஆவணக்காப்பாளர்கள் நியமிக்கப் பட்டுள்ளனர். 1870களில் நூலகங்களும், 1877ல் நூதனசாலையும் நூலகமும் (Museum and Library) ஆரம்பிக்கப்பட்ட பின் உள்ளுர் வெளியீடுகள் சேர்க்கப்பட்டுள்ளன. அச்சகம் மற்றும் வெளியீட்டாளர் சட்டம் 1885ல் கொண்டு வரப்பட்டுள்ளது. இலங்கை 19ம் நூற்றாண்டிலே நூல்கள் ஆவணப்படுத்தலை ஆரம்பித்துள்ளது. 1902ம் ஆண்டு ஆவணக்காப்பாளர் பதவிக்கு ஒருவர் நியமிக்கப்பட்டு கொழும்புக் கச்சேரியில் ஓர் அலுவலகமும் அமைக்கப்பட்டுள்ளது. 1902ம் ஆண்டு ஆவணப்படுத்தலில் ஒரு திருப்புமுனையாக ஆவணப்படுத்தல் மீண்டும் மாவட்டமட்டத்தில் ஆரம்பிக்கப்பட்டுள்ளது. கண்டி, யாழ்ப்பாணம், காலி, கொழும்பு ஆகிய இடங்களில் நூதனசாலைகள் (Museums) ஏற்படுத்தப்பட்டுள்ளன. 1942-1943 காலப்பகுதியில் 2ம் உலகயுத்தகாலத்தில், ஜப்பான் கொழுப்பில் குண்டுபோட்டதால், ஆவணக்காப்பகம் கொழும்பிலிருந்து நுவரெலியாவுக்கு மாற்றப்பட்டுள்ளது. இதேவேளை பிரித்தானியர் ஆட்சிக்காலத்தில் (1876-1947) காலனித்துவநாடுகளின் வெளியீடுகள் காலனித்துவ பதிப்புரிமைச்சட்டத்தின் கீழ் (Colonial copy right Act) சேர்க்கப்பட்டு பிரித்தானிய நூதனசாலையில் ஆவணப்படுத்தப்பட்டது.

1796 இலிருந்து 1948 வரையிலான காலப்பகுதி வெளியீடுகள், ஆவணங்கள் பிரித்தானியாவில் ஆவணப்படுத்தப்பட்டுள்ளது. 1947 இலங்கை சுதந்திரம் பெற்றபின், சிலகாலம் கல்வியமைச்சின் கீழ் ஆவணக்காப்பகம் காணப்பட்டுள்ளது. 1951இல் அச்சக பதிப்புச்சட்டம் (“Printing press ordinance” 1951–20ம் சட்டம்) கொண்டுவரப்பட்டுள்ளது. 1952 இல் இலங்கை தேசிய நூல்விபரப் பட்டியலுக்கான உபஆணைக்குழு ஒன்று நியமிக்கப்பட்ட பின், கல்வி அமைச்சிலிருந்து ஆவணக்காப்பகம் உள்ளுராட்சி மற்றும் கலாசாரஅமைச்சின் கீழ் கொண்டுவரப்பட்டுள்ளது. 1962இல் முதலாவது தேசிய நூற்பட்டியல் பேராதனைப் பல்கலைக்கழகத்திலிருந்தே வெளியிடப் பட்டதுடன், இதன் வெளியீட்டுக்கு பிரித்தானிய தேசியநூல் விபரப்பட்டியலின் பிரதமஆசிரியர் திரு.எ.ஜெ.வேல்ஜ்ஜின் சேவையும் பெறப்பட்டுள்ளது. 1963 தொடக்கம் வித்தியலங்கார பல்கலைக்கழகத்தில் ஆவணங்கள் ஆவணப்படுத்தப்பட்டு 1975இல் ஆவணக்காப்பகம் பதியகட்டிடத்துக்கு மாற்றப்பட்டுள்ளன. 1974ஆம் ஆண்டிலிருந்து தேசியநூற்பட்டியல் தேசியசுவடிகள் திணைக்களத்திலிருந்து தேசியநூலகசபை பொறுப்பில் விடப்பட்டுள்ளது.

இத்தேசிய நூற்பட்டியல் சட்டவைப்பு நூற்சேர்க்கையின் அடிப்படையில் தயாரிக்கப்படுகின்றது. 1962 தொடக்கம் 1974ஆம் ஆண்டு வரையிலான தேசியநூற்பட்டியல் தேசியசுவடிகள் திணைக்களத் தினால் வெளியிடப்பட்டுள்ளது. 1974ஆம் ஆண்டு 48ஆம் இலக்கச்சட்டத்தின் மூலம் இத்திணைக் களம் தேசிய ஆவணக்காப்பகம் என பெயர் மாற்றப்பட்டுள்ளது. இதன் நோக்கம், 1974ஆம் ஆணடு 48ஆம் இலக்கச்சட்டத்திலும், 1981ம் ஆண்டு 30ஆவது இலக்கச்சட்டத்திலும் குறிப்பிடப்பட்டுள்ளது. 1885ஆம் ஆண்டின் அச்சகம் வெளியீட்டு பதிவுச்சட்டத்திற்கு அமைவாக, அச்சகங்களும் வெளியீட் டாளர்களும் சகல நூல்களினதும் பிரதிகள் ஐந்தினை வழங்கவேண்டும். இதில் ஒரு பிரதி 1973க்குப் பின், தேசியநூலகசபைக்கு வழங்கப்பட வேண்டும். இன்னுமோர் பிரதி 1952இலிருந்து போராதனை பல்கலைக் கழகநூலகத்திலும், ஒரு பிரதி சுவடிகள் திணைக்களத்திலும் சட்டச்சேர்க்கையாக (Legal depository) ஆவணப்படுத்தப்பட்டுள்ளன.

1951 அச்சக வெளியீட்டாளர்கள் சட்டத்தின் பின், 1973இல், 45வது சட்டமாக தேசியசுவடிகள் சட்டம் (The National Archives Low no 48, 1973) கொண்டுவரப்பட்டது. 1973இல், 51வது சரத்துக் கேற்ப இலங்கை தேசிய நூலகசேவைகள் சபை(The Sri Lanka National Library service Board), ஸ்தாபிக்கப்பட்ட பின், இலங்கையில் வெளியிடப்படும் சகல வெளியீடுகளும் சட்டப்படி இச்சபை மூலம் ஆவணப்படுத்தப்பட்டுவருகின்றன. 1976 இல் இலங்கை தேசியநூலகசேவைகள் (The Sri Lanka National Library service), உருவாக்கப்பட்டதுடன் 1990 ஆம் ஆண்டில் இலங்கை தேசிய நூலகம் (The Sri Lanka National Library), ஆரம்பிக்கப்பட்டது. 1986ஆம் ஆண்டிலிருந்து இலங்கையில் வெளியிடப்படும் நூல்களுக்கு சர்வதேசதராதர நூல்எண் (ISBN) வழங்கும் முறை அறிமுகப்படுத்தப்பட்டது. இலங்கையில் சர்வதேசதராதர நூல்எண் (ISBN) பெற்றுக்கொண்டால் மாத்திரமே இலங்கை தேசிய நூற்பட்டியலில் (National Bibliography) பதியப்படுகின்றது. இலங்கையைச்சேருந்தவர்கள் சர்வதேசதராதரநூல் எண்களை (ISBN) வேறு நாடுகளில் பெற்றுக் கொண்டால் இலங்கையரது நூலாயினும் இலங்கை தேசியநூற்பட்டியலில் பதியப்படுவதில்லை.

இலங்கை உள்நாட்டு யுத்தம் நடைபெற்றகாலத்தில் ‘தமிழ் ஈழம்’ பிரதேசத்தின் வெளியீடுகள், ஆவணங்கள் தமிழ்ஈழவிடுதலை போராட்ட இயக்கங்களின் மூலம் ஆவணப்படுத்தப்பட்டுள்ளன. இவை 2009இல் நடைபெற்ற யுத்தத்தினால் அழிந்துள்ளதாகக் கருதப்படுகின்றது. இதேபோல் யாழ்ப்பாணம் குரும்பசிட்டி கனகரத்தினம் என்னும் தனிநபரால் ஆவணப்படுத்தப்பட்ட தமிழ்ஆவணங்கள் பற்றிய தகவல்களையும் அறிந்துகொள்ள முடியவில்லை.

ஆய்வின் பிரச்சினைகள்:
இலங்கையில் தமிழ்ஆவணங்கள் முழுமையாக ஆவணப்படுத்தப்பட்டுவதில்லை. தமிழ் நூல்கள் பல இந்தியாவிலும் பிறநாடுகளிலும் அச்சிட்டு வெளியிடப்படுவதும், இலங்கையில் வெளியிடப்படும் நூல்களுக்கு சர்வதேசதராதர நூல்எண் பெறப்படாமையும் எழுத்தாளர்கள், வெளியீட்டாளர்களின் அக்கறையின்மையும் போதிய தமிழ் உத்தியோகத்தர்களின்மையும், பாராமுகத்தன்மையும் தேசிய நூற்பட்டியலில் தமிழ்நூல்கள் பதியப்பட்டு ஆவணப்படுத்தப்படாதுள்ளன. இதனால் ஆய்வாளர்கள், எதிர்காலசந்ததியினர் இவை பற்றி அறியமுடியாதுள்ளன.

ஆய்வு முறை:
வரலாற்று துணையுடன் இலக்கிய வரலாற்று ஆய்வு நூல்களின் ஆதாரங்களுடன் இத்துறைசார்ந்த இரண்டாம் நிலை சான்றுகளுடன், களநிலையில் நேரடி அவதானிப்புகளுடனும், விளக்கநிலை வாயிலாகவும் இவ்வாய்வு மேற்கொள்ளப்பட்டது. ‘நூல் தேட்டம்’ என்ற நூல்பட்டியல் ஆவணம் முதலாம் தொகுதி முதல் ஐந்தாம் தொகுதி வரை அவதானிக்கப்பட்டது. வெளியீட்டாளர்களின் விலைப்பட்டியல்கள், நூலகங்களில் வைப்பிலுள்ள நூல்கள், வகுப்பாக்கப்பட்டியல்கள் ஆகியன அவதானிக்கப்பட்டது. இவற்றுள் அநேகமான நூல்கள் நூல்தேட்டத்தில் பதியப்பட்டுள்ளதால், நூல்தேட்ட பதிவுகளை அடிப்படையாகக் கொண்டே கணிப்பீடுகள் மேற்கொள்ளப்பட்டன. இந்த ஆய்வில் துண்டுப்பிரசுரங்கள், பாடசாலை பாடநூல்கள், பரீட்சைகளை அடிப்படையாகக் கொண்ட நூல்கள், வினாவிடைகள் வர்த்தமானி வெளியீடுகள், அரசதிணைக்கள அறிக்கைகள் ஆகியன தவிர்க்கப்பட்டுள்ளது.

ஆய்வின் நோக்கம்:
இலங்கைத்தமிழ் ஆவணங்களை ஆவணப்படுத்துதல் பூரணமாக நடைபெறவில்லை என வெளிக் காட்டல், இலங்கைத்தமிழ் ஆவணங்களை ஆவணப்படுத்துதலில் உள்ள இடர்பாடுகளை கண்டறிதலும், இவற்றினை களையும் வழிமுறைகளை கண்டறிதலும் தீர்வு காண்பதுமே இவ்வாய்வினது நோக்கமாகும்.

ஆய்வின் போது கண்டறிந்தவையும் அவதானிப்புகளும்:
‘சுவடிகள் ஆற்றுப்படை’ என்ற நான்கு தொகுதிகளாக எஸ்.ஏச்.எம்.ஜெமீல் இலங்கை முஸ்லீம் எழுத்தாளர்களது நூல்களை ஆவணப்படுத்தியுள்ளார். சா.ஜோ.செல்வராஜா மட்டக்களப்பு மாவட்ட நூலியல் தொடர்பான வரலாற்றினை ஆவணப்படுத்தியுள்ளார். க.குணராசா (செங்கை ஆழியான்) இலங்கை நாவல்கள் பற்றியும், கனக செந்திநாதன், தில்லையூர் செல்வராஜன் மற்றும் பேராசிரியர் பூலோகசிங்கம் ஆரம்பகால வெளியீடுகள் பற்றியும் ஆவணப்படுத்தியுள்ளனர். இதே போல் புகலிட மண்ணிலே நூல்களின் பதிவுகளை ஒன்று திரட்டியும் இலங்கையில் வெளியிடப்பட்ட நூல்களினது பதிவுகளையும் ‘நூல்தேட்டம்’ என்ற நூல்தொகுதியாக இலண்டனில் உள்ள நூலகர் என்.செல்வராஜ் வெளியிட்டுள்ளார். ஆயிரம் நூல்களுக்கு ஒரு தொகுதி; என்ற வகையில் ஆறு (6) நூல் தேட்டங்கள் வெளியிட்டுள்ளதுடன் இலங்கைத்தமிழர்களது, மலேசிய, சிங்கப்பூர் வாழ் இலங்கைத் தமிழர்களால் வெளியிடப்பட்ட நூல்கள் ஒரு தேட்டமாகவும் வெளியிடப்பட்டுள்ளன. தொடந்தும் இலங்கைத் தமிழ்நூல்களை பதிந்து வெளிகொணர்தலில் ஈடுபட்டுள்ளார்.

ஆய்வுக்காக உதாரணமாக, 2005ஆம் ஆண்டினை நோக்குவோமாயின், “நூல்த்தேட்டம்” என்ற நூலின் பதியப்பட்டுள்ள தமிழ் நூல்களினை எடுத்துக்கொண்டால், தொகுதி; ஒன்று – ஆறு வரை மட்டும் 2005ஆம் ஆண்டில் 361 இலங்கைத்தமிழ் எழுத்தாளர்களின் நூல்கள் பதியப்பட்டு காணப்படுகின்றன. இந்நூல்களில் இலங்கையில் 197 நூல்களும், சென்னையில் 99 நூல்களும், இங்கிலாந்தில் 24 நூல்களும், கனடாவில் 13 நூல்களும், ஜேர்மனியில் 08 நூல்களும், பாரிஸில் 07 நூல்களும், அவுஸ்ரேலியாவில் 05 நூல்களும், நோர்வேயில் 03 நூல்களும், டென்மார்க்கில் ஒரு நூலும் வெளியிடப்பட்டதாக பதியப்பட்டுள்ளன. இது 2005ஆம் ஆண்டு வெளியிடப்பட்ட நூல்களின் பதிவின் இறுதி முடிவல்ல. பின்தொடரும் ஏனைய தொகுதிகளிலும் 2005ஆம் ஆணடு வெளியீடுகள் பதிப்படவுள்ளன. ஆனால் இலங்கைத் தேசியநூல்பட்டியலில் (National Bibliogrphy) 91 இலங்கைத்தமிழ் நூல்கள் மட்டுமே பதியப்பட்டுள்ளன. இதில் இரண்டு இந்தியாவில் வெளியிடப்பட்ட நூல்கள் மத்திரமே பதியப்பட்டுள்ளன. 270 இலங்கைத்தமிழ்நூல்கள் பதியப்படாது காணப்படுகின்றது. எனவே இலங்கை தேசியநூல்பட்டியலானது பூரணமானதல்ல என்பதற்கு இது சிறந்த எடுத்துக்காட்டு ஆகும்.

மணிமேகலை பிரசுரம் வெளியிட்டுள்ள விலைப்பட்டியலில் 72 இலங்கை நூலாசிரியர்களின் நூல்கள் அவர்களால் வெளியிடப்பட்டுள்ளமையைக் காணக்கூடியதாகவுள்ளது. ஆனால் இலங்கை தேசிய நூல்பட்டியலில் ஒரே ஒரு நூல் மாத்திரமே பதியப்பட்டுள்ளது. இது இலங்கை தேசியநூற் பட்டியலானது பூரணமானதல்ல என்பதற்கு மற்றொரு சிறந்த எடுத்துக்காட்டு ஆகும். அத்துடன் இலங்கை நூலங்களில் வைப்பிலுள்ள பல நூல்களுக்கும், இலங்கை தேசிய நூல்பட்டியலில் பதிவுகளைக் காணமுடியவில்லை. இதுவும் தேசியநூல்பட்டியலானது பூரணமானதல்ல என்பதற்கு ஒரு சிறந்ததோர் எடுத்துக்காட்டு ஆகும்.

மேலும், புகலிட மண்ணிலே இலங்கைத்தமிழர் நூல்களை ஒன்று திரட்டியும், இலங்கையிலே ஒன்று திரட்டியும் ஈழத்தமிழர் தேசியநூல்களின் ஆவணப்படுத்தலினை மேற்கொண்டு வருகின்றனர். இவ்வாறான பணியை மேற்கொள்ளும் அமைப்புகளாவன:

 ஐரோப்பிய தமிழ் ஆவணக்காப்பகமும் ஆய்வகமும்.(European Tamil Documentation and Research centre-ETDRC.)
 உலகத்தமிழ் நூலகம் ஸ்காப்ரோ, ஒன்றாரியோ, கனடா.
 வல்வை ஆவணக் காப்பகம், கனடா
 முல்லை அமுதன் ஆவணக்காப்பகம்
 தமிழ்தகவல் மையம் – ஆவணக்காப்பகம் – (Tamil Information centre-TDC Library)
 மலையகஆவணக்காப்பகம் -புசல்லாவ,- (இந்திய வம்சாவளி இலங்கையரது ஆவணங்கள்)
 பிரித்தானிய நூலகம் (British Library)
 இலண்டன் பல்கலைக்கழக நூலகம்- (SOAS–School of Oriental and African Studies Library, University of London)

தமிழ் நூல்களின், வெளியீடுகளின் ஆவணப்படுத்துதலில் காணப்படும் பிரச்சினைகள்
1. இலங்கையில் ஆவணப்படுத்துதலில் தொடர்ச்சியின்மை:

2. இலங்கை தவிர்ந்த பிறநாடுகளில் தமிழ் நூல்கள் வெளியிடுதல்:
2.1.1 நூல்களை வெளியிடுவோர், எழுத்தாளர்கள், வெளியீட்டாளர்கள் செலவு குறைவு மற்றும் சந்தைவாய்ப்பு போன்ற பொருளாதார காரணங்களினால் பல இலங்கைத் தமிழ் நூல்களை தமிழ்நாட்டில் வெளியிடுகின்றனர். இவ்வாறு சென்னையில் வெளியிடப்பட்ட நூல்களுக்கு பதிவுகள் எதுவும் இலங்கையில் இல்லை. இவற்றுக்கு சர்வதேச தராதர எண் பெறப்படுவதும் இல்லை. எனவே, இவை இந்தியாவிலும் பதிவுசெய்யப்படுவதும் இல்லை.

2.1.2 1983-85 ஆண்டுக்காலப்பகுதியில் அரசியல்காரணங்களுக்காக பல நூல்கள் தமிழ் நாட்டில் வெளியிடப்பட்டு இலங்கை தவிர்ந்த பிற நாடுகளுக்கு விநியோகிக்கப்பட்டன. இவை இலங்கையில் தடைசெய்யப்பட்ட பிரசுரங்களாகும். இவ்வெளியீடுகளின் பதிவுகள் இந்தியாவிலும் இலங்கையிலும் இல்லை.

2.1.3 தமிழகத்தில் சென்னையில் வெளியிடுவதற்கான காரணங்களில் பிரதானமானது, சென்னையில் வெளியீட்டாளர்களின் மூலம் வெளியிடப்படும் நூல்களை தமிழகஅரசு கொள்வனவு செய்வதே. எனவே எழுத்தாளர்கள் இந்தியாவில் வெளியிட ஆர்வம் காட்டுகின்றனர். இவ்வாறு வெளியீடு செய்யும் போது தமிழகஅரசுக்கு விற்பனை செய்யும் நோக்குடன் இரண்டாம் பதிப்புகூட ‘இரண்டாம் பதிப்பு’ என குறிப்பிடப்படாது வெளியிடப்படுகின்றன.

2.1.4 ஈழத்து எழுத்தாளர்கள் தமது நூல்களின் முதல் பதிப்பினை இலங்கையில் வெளியிட்டு வரையறுககப்பட்ட விநியோகம் காரணமாக மீண்டும் தமிழகத்தில் மீள்பதிப்புச் செய்து இந்திய வாசகர்களுக்காக வெளியிடுகின்றனர். மாநிலமொழி அல்லாத நூல்களுக்கு விதிக்கப்படும் இறக்குமதி கட்டுப்பாடுகள் இருந்தபோதும், தமிழ்மொழி என்பதால் இலங்கை நூல்களுக்கு கட்டுப்பாடுகள் எதுவும் தமிழ்நாட்டில் இல்லை.

2.1.5 இந்தியாவில் வெளியிடப்படும் நூல்களுக்கு சர்வதேச தராதர எண்(ISBN) பெறப்படாமைக்கு வெளியீட்டாளர்கள், அச்சகங்கள் “தீர்வை அல்லது வரி“ யிலிருந்து விலக்குப் பெற்று தப்புவதற்காக என கருதலாம்.

2.2 புலம்பெயர்ந்தோர் வெளியீடுகள்

2.2.1 1786இல் மலேசியாவின் பினாங்கு தீவினை கைப்பற்றிய பின் ஆங்கிலேயரால் வரவழைக்கப்பட்டு பின் அங்கு குடியேறிய இலங்கைத்தமிழர்களும், 1950களுக்கு முன் மலேசியா, சிங்கப்பூர் போன்ற நாடுகளுக்கு தொழில் நிமித்தம் குடியேறிய இலங்கைத்தமிழர்களது வெளியீடுகளும் நூல்களும் எங்கும் பதியப்படவில்லை. மலேசியா வாழ் யாழ்ப்பாணத்தமிழர்கள் ‘இலங்கைத்தமிழர்’ என்ற வரையறைக்குள்ளும் அடக்கப்படவில்லை.

2.2.2 உள்நாட்டு–தமிழ்ஈழ யுத்தம் காரணமாக புலம்பெயர்ந்து இந்தியா, இங்கிலாந்து, பிரான்ஸ், ஜேர்மன், நோர்வே, டென்மார்க், சுவிற்சலாந்து, கனடா, கென்யா, அவுஸ்திடேலியா, ஐக்கியஅமெரிக்கா, மலேசியா, சிங்கப்பூர், பிஜி போன்ற நாடுகளில் வாழும் இலங்கைத்தமிழர்களது வெளியீடுகளும் நூல்களும் எங்கும் பதியப்படாது ஆவணப்படுத்தப்படாது காணப்படுகின்றன. புலம்பெயர்ந்தநாடுகளில் புலம்பெயர்ந்தோர் வெளியீடுகள் அந்த அந்த நாடுகளில் தேசியநூற் பட்டியலில் இடம்பெறுவதும் இல்லை. ஆவணப்படுத்தப்பட்டு இருப்பில்∕சட்டவைப்பில் வைக்கப்படுவதுமில்லை.

3.இலங்கை தேசியநூற்பட்டியலில் பதியப்படாமை:
3.1 இலங்கையில் வெளியிடப்படும் நூல்களில் சர்வதேசதராதர எண் பெறப்படாதவை தேசிய நூற்பட்டியலில் சேர்த்துக்கொள்ளப்படாதது போல் அச்சகம், வெளியீட்டாளர் சட்டப்படி கையளிக்கப்படாத தமிழ் நூல்களைத் ‘தேடிப்பெறல்’ இடம்பெறுவதுமில்லை.

3.2 இலங்கையில் கலாசார அமைச்சின் மூலம் சாகித்திய விருது வழங்கப்பட்ட நூல்கள் சிலவற்றின் பதிவுகளும் தேசிய நூற்பட்டியலில் காணப்படவில்லை. முன்னர் இலங்கையில் வெளியிடப்பட்ட நூல்களுக்கு மடடும் சாகித்திய விருது வழங்கப்பட்டது. தற்போது பல சிறந்த எழுத்தாளர்கள் இலங்கையில் வெளியிடுவது செலவு அதிகம் என்ற காரணத்தினால் இந்தியாவில் அச்சிடுகின்றனர். அவற்றுக்கு விருதும் வழங்கப்படுகின்றன. ஆனால், இவை ஆவணப்படுத்தப்படவில்லை. தேசியநூற்பட்டியலிலும் இல்லை. அதனால் சட்டவைப்பிலும் இல்லை.

4 உள்நாட்டு யுத்தமும் அதன் தாக்கமும்:
4.1 இலங்கையின் யுத்தசூழல்காரணமாக புலம்பெயர்ந்தோர் தம் நூல்களை இலங்கையில் வெளியிடுவதற்கு பயங்கொள்ளுகின்றனர். ஈழமக்கள் விடுதலை தொடர்பான தகவல்கள் இருப்பின் இலங்கையில் வெளியீட்டாளர்கள் பல விசாரணகளுக்கு முகம்கொடுக்க வேண்டியிருப்பதால் பல நூல்கள் இந்தியாவில் வெளியிடப்பட்டன. தற்போது இந்தியாவிலும் வெளியிடுவது சிக்கலாகியுள்ளதால் ஐரோப்பாவில் வெளியீட்டு முயற்சிகள் சிறப்புப்பெற்றுள்ளன. ஆனால் இவை இலங்கையில் தேசிய நூற்பட்டியலில் சேர்ப்பதற்கு எவ்வித பிரயத்தனமும் எடுக்கப்படவில்லை.

4.2 ‘ஈழம்’ என்ற வார்த்தைப்பிரயோகமும் இலங்கையில் நூல்களை அச்சிட்டு வெளியிட பல சிக்கல்களை தோற்றுவித்துள்ளமை மற்றொரு காரணமாகும். வடகிழக்கு தமிழ் எழுத்தாளர்கள் தமது விடுதலை பிரச்சினைகள் தொடர்பான இலக்கிய நூல்களை இலங்கையில் வெளியிடாமல் வெளி நாடுகளிலேயே வெளியிட்டனர். இந்தப் பதிப்புத்தளமாக இந்தியாவே அமைந்தது.

4.3 யுத்தசூழலில் இலங்கை வெளியீட்டாளர்கள், பதிப்பகத்தார் ஈழத்தமிழரின் நூல்களை வெளியிட ஆர்வம் காட்டவில்லை. இவர்கள் எழுத்தாளர்களை அணுகவும் இல்லை. இச்சந்தர்ப்பத்தினை இந்திய வெளியீட்டாளர்கள், பதிப்பகத்தார் பயன்படுத்திக்கொண்டார்கள்.

5. எழுத்தாளர், வெளியீட்டாளரின் புறக்கணிப்பும் திணைக்களத்தின் புறக்கணிப்பும்:
5.1தமிழ் பிரதேசஅச்சகங்களும், வெளியீட்டாளர்களும், பதிப்பகத்தார்களும் அச்சகச் சட்டமூலத்தின்படி சுவடிகள் காப்பகத்துக்கு ஒழுங்காக நூல்களை அனுப்பிவைக்காமை
5.2 தமிழ்நூல்கள் சுவடிகள் காப்பகததக்கு அனுப்ப வேண்டும் என்ற அக்கறையின்மை,
5.3 தேசிய சுவடிகள் திணைக்களத்துக்கு தமிழ் நூல்கள் கிடைக்காமை,
5.4 இலங்கைச்சுவடிகள் திணைக்களத்திலும், தேசியநூலகத்திலும் தமிழில் வேலைசெய்யக் கூடிய தேவையான தமிழ்ஆட்பலமின்மை நூற்பட்டியல் தயாரிப்பில் பின் தங்கியநிலை ஏற்பட ஒரு காரணமாகின்றது. இதனால் எதிர்கால சந்ததியினரின் ஆய்வுகளுக்குத் தேவையான பதிவுகள் குறைவடைந்துள்ளமை மாத்திரமல்லாது ஆவணப்படுத்துதல் இல்லாது போயுள்ளமை பெரும்குறைபாடு.

தீர்வும் முடிவுரையும்:
இலங்கையில் நூற்பதிவு இலக்கத்துடன் வெளியீட்டாளர் வெளியிடுவதை ஊக்கப்படுத்த வேண்டும்.
தமிழக அரசு இலங்கை தமிழ்நூல்கள் வெளியிடுவோரை “நூல் பதிவு” இலக்கம் பெற வேண்டும் என கட்டாயப்படுத்த வேண்டும். நூல் வெளியீட்டாளரும் நூல் பதிவு இலக்கம் பெற ஆர்வம் காட்டவேண்டும். நூல் பதிவு இலக்கம் பெறாமல் வெளியிடுவோரிடம் நூல் வெளியிடுவதை தமிழ் எழுத்தாளர்கள் தவிர்த்துக் கொள்ளவேண்டும்.
வெளியீடுகள் அனைத்தும் தேசிய நூலகத்திற்கு பெற்றுக் கொடுக்கப்பட்டு தேசியநூல் பட்டியலில் பதிவு செய்ய வழிகோல வேண்டும். இதற்காக அரசாங்கத்தினை வலியுறுத்த வேண்டும்.
.
தமிழ் உத்தியோகத்தர்கள் நியமிக்கப்பட வேண்டும். பாராமுகப்போக்கு தவிர்க்கப்பட வேண்டும். இலங்கையிலும், பிறநாடுகளிலும் சட்டப்படி நூல்பதிவுஎண் பெறாத நூல்களுக்கு எதிராக சட்ட நடவடிக்கை எடுக்கப் படுவது மூலம் நூற்பதிவினை ஊக்குவிக்க வேண்டும். அரச சார்பற்ற நிறுவனமாக எழுத்தாளர், வெளியீட்டாளர்கள் ஒன்றிணைந்து ஒரு ஆவணகாப் பகத்தினை அமைத்து தமிழ்நூல் ஆவணப்படுத்தலினை மேற்கொள்ள ஆவனசெய்ய வேண்டும்.

புகலிடநாடொன்றில் முழுமையான ஆவண காப்பகம் ஒன்றினை நிறுவுதல் வேண்டும். தற்போது ஆரம்பிக்கப்பட்டுள்ள ஐரோப்பிய தமிழ் ஆவணக்காப்பகத்துக்கு எழுத்தாளர், வெளியீட்டாளர்கள் நூல்களை வழங்க வேண்டும்
சுவடிகள் திணைக்களம், தேசிய நூலகம் ஆகியன தமிழ் நூல்களை தேடிப்பெற வேண்டும். மற்றும் சர்வதேசதராதர எண் பெறாத நூல்களையும் தேசிய நூல்பட்டியலில் சேர்த்து பதியப்படவேண்டும். மேலும் புலம்பெயர்ந்தவர்களின் நூல்களையும் தேடிப்பெறல் வேண்டும். சுயதணிக்கைக்குட்படாது இலங்கையை சேர்ந்த, புலம்பெயர்ந்த எழுத்தாளர்கள் நூல்களை சுவடிகள் திணைக்களம், தேசிய நூலகம் ஆகியனவற்றுக்கு வழங்க வேணடும்.

தமிழ் சாகித்திய பரிசு மற்றும் விருதுகள் வழங்கும் போது நூல் பதிவு இலக்கம் பெற்ற நூல்களை மட்டும் மதிப்பீடு செய்து பரிசுகள் வழங்கவேண்டும்.
உசாத்துணை நூல்கள்:
• கனக.செந்திநாதன், ‘ஈழத்து இலக்கிய வளர்ச்சி’ கொழும்பு, அரசு வெளியீடு, (1964)
• செல்வராஜ், என்., “மலேசிய சிங்கப்பூர் நூல்தேட்டம் -தொகுதி – 1”, ஐக்கிய இராச்சியம், அயோத்தி நூலக சேவைகள்;, 2007.
• செல்வராஜ்,என்., “நூல்தேட்டம் – தொகுதி – 1-5”, ஐக்கிய இராச்சியம், அயோத்தி நூலக சேவைகள், 2002-2008.
• செல்வராஜ், என்., “வேரோடி விழுதெறிந்து”, கொழும்பு, ஞானம் பதிப்பகம், 2009.
• நடராசா, எப், எக்ஸ், சி.,‘ஈழத்துதமிழ் நூல் வரலாறு’ கொழும்பு, அரசு வெளியீடு, 1970.
• பூலேகசிங்கம், பொ., “தமிழ் இலக்கியத்தில் ஈதை;தமிழர் பெருமுயற்சிகள்”, கொழும்பு, குமரன் இல்லம்’, 1970.
• மகாலட்சுமி, தி.,நிர்மலா, சூ., பூமிநாதன், த., ‘சுவடிச்சுடர்’,சென்னை, உலகத்தமிழாராய்ச்சி நிறுவனம், 2002.
• ஜெமீல்,எஸ்,எச்,எம், “சுவடிஆறறுப்படை” கல்முனை, இஸ்லாமிய நூல் வெளியீட்டுப்பணியகம், 1994
• Maheswaran, R.,(2007), “Bibilometric Study of Tamil Publications in Sri Lanka in 2005” , Colombo, University Librarian association of Sri Lanka.
• National Library of Sri Lanka: Colombo; Sri Lanka National Library Service Board, 1995.

Wimalaratne, K, D, G,. “An Introduction to the National Archives in Sri Lanka,

”Colombo, Social Science Research Centre, National Science Council of Sri Lanka, 1978.

கிழக்கு பல்கலைக்கழகத்தில் 14 மாணவர்கள் இடைநிறுத்தம்

கிழக்குப் பல்கலைக்கழக மாணவர்கள் 14 பேர் ஒரு வருடத்துக்கு இடைநிறுத்தப் பட்டுள்ளனர். கிழக்குப் பல்கலைக்கழகத்தின் வதிவிட மற்றும் ஒழுக்காற்றுச் சபை இந்நட வடிக்கை எடுத்திருப்பதாக கிழக்குப் பல்கலைக்கழகத்தின் பதில் துணைவேந்தர் பேராசிரியர் கலாநிதி பிரேமகுமார் தெரிவித்தார்.

மாணவியொருவரை பகிடிவதை செய்தமை, குழு மோதல்களில் ஈடுபட்டமை போன்றவைக்காகவே 14 மாணவர்களும் இடைநிறுத்தப்பட்டுள்ளனர். இவர்களுக்கு எதிரான விசாரணைகளை பல்கலைக்கழகத் தின் வதிவிட மற்றும் ஒழுக்காற்று சபை நடத்தி யிருந்ததுடன், குற்றச்சாட்டுக்கள் நிரூபிக்கப்பட்டமையால் 14 பேரும் ஒரு வருடத்திற்கு இடைநிறுத்தப்பட்டுள்ளனர்.

பேராயர் மல்கம் ரஞ்சித் இன்று கர்தினால் ஆகிறார் – வத்திக்கானில் விசேட வைபவம்

1111.jpgபேராயர் பேரருட்திரு மல்கம் ரஞ்சித் ஆண்டகை இலங்கையின் இரண்டாவது கர்தினாலாக இன்று திருநிலைப்படுத்தப்படவுள்ளார். வத்திக்கான புனித பேதுருவான வர் பேராலயத்தில் நடைபெறும் விசேட வைபவத்தின் போது பரிசுத்த பாப்பரசர் 16வது ஆசிர்வாதப்பர் மல்கம் ரஞ்சித் ஆண்டகையை கர்தினாலாக திருநிலைப்படுத்துவார். அந்த நிகழ்வு இன்று காலை 10.30 மணிக்கு இடம்பெறவுள்ளது.

கடந்த மாதம் கத்தோலிக்கத் திருச் சபையின் புதிய கர்தினாகளின் பெயர்களை பரிசுத்த பாப்பரசர் உத்தியோகபூர்வமாக அறிவித்தார். அதற்கிணங்க இன்றைய திருநிலைப்படுத்தல் நிகழ்வில் பேராயர் மெல்கம் ரஞ்சித் ஆண்டகையுடன் 24 பேர் கர்தினாலாகளாக பதவியேற்கின்றனர்.

புதிய கருதினால் பேரருட்திரு மெல்கம் ரஞ்சித் ஆண்டகையின் முதலாவது திருப்பலி வத்திக்கான பேராலயத்தில் எதிர்வரும் 23ம் திகதி நடைபெறுவதுடன், 27ம் திகதி அவர் மீண்டும் நாடு திரும்புகிறார். கட்டுநாயக்கா விமான நிலையத்தில் அவருக்கு மகத்தான வரவேற்பளிக்கப்பட்டு தேவத்தை பெஸிலிக்காவரை அவர் ஊர்வலமாக அழைத்து வருவதற்கான ஒழுங்குகள் மேற்கொள்ளப்பட்டுள்ளன. அதனையடுத்து நன்றித் திருப்பலியொன்றையும் அவர் நிறைவேற்றவுள்ளார்

‘வடக்கு, கிழக்கில் இடம்பெறும் ஒவ்வொரு அபிவிருத்தியும் பயங்கரவாதத்திற்கான வழிகளை மூடும் – ஜனாதிபதி

MR_Sworn_in_2nd_termவடக்கு, கிழக்கில் முன்னொருபோது மில்லாதவாறு செயற்றிட்டங்கள் முன்னெடுக்கப்பட்டுள்ளதாகக் குறிப்பிட்ட ஜனாதிபதி, அங்கு இடம்பெறும் ஒவ்வொரு அபிவிருத்தியும் பயங்கரவாதத்திற்கான வழிகளை மூடும் என ஜனாதிபதி மஹிந்த ராஜபக்ஷ தெரிவித்தார்.மேலும் வடக்கு மக்கள் மாகாண சபைக்கும் உள்ளூராட்சி சபைகளுக்கும் தமது பிரதிநிதிகளை தேர்ந்தெடுக்க சந்தர்ப்பம் வழங்குவதோடு அதனூடாக அதிகாரங்களை மக்கள் கைகளிலேயே ஒப்படைப்பதே தமது எதிர்பார்ப்பாகுமெனவும் தெரிவித்தார்.

ஜனாதிபதி மஹிந்த ராஜபக்ஷவின் இரண்டாவது பதவியேற்பு நிகழ்வு நேற்று காலி முகத்திடலிலுள்ள ஜனாதிபதி செயலகக் கட்டிட முன்றலில் நடைபெற்றது. பிரதமர் டி.எம். ஜயரட்ன, சிரேஷ்ட அமைச் சர்கள், மதத் தலைவர்கள், ராஜதந்திரிகள் பாராளுமன்ற உறுப்பினர்கள் மற்றும் முக்கியஸ்தர்கள் பலரும் கலந்துகொண்ட இந்நிகழ்வில் நாட்டு மக்களுக்கு உரையாற்றும்போதே ஜனாதிபதி இவ்வாறு தெரிவித்தார். அவர் தமதுரையில் மேலும் தெரிவித்ததாவது; ஐந்து வருடங்களுக்கு முன்னர் நீங்கள் என்னிடம் ஒப்படைத்த நாட்டை விட சிறந்த நாடொன்றிலேயே தற்போது நீங்கள் வாழ்கின்aர்கள் என்பது உண்மை.

வழங்கப்பட்ட பொறுப்பினை நிறை வேற்றி முன்பிருந்ததை விட சிறப்பான நாட்டைக் கட்டியெழுப்பிய பின் மக்கள் முன் உரையாற்றும் தலைவன் நான் என்பதில் மகிழ்ச்சியடைகின்றேன். கடந்த 2005 நவம்பர் 19ம் திகதி நான் பதவியேற்று நாட்டைப் பொறுப்பேற்றபோது இந்த நாடு இரண்டாகப் பிளவுபட்டிருந்தது. இரவு பகல் எனப் பாராமல் பெரும் எதிர்ப்புகளுக்கு மத்தியிலும் பொறுப்புடனும் அர்ப்பணிப்புடனும் நான் செயற்பட்டமை சகலரும் அறிந்ததே.அதனைத் தொடர்ந்து கடந்த வருடம் மே 19ம் திகதி பயங்கரவாதத்தை வென்று உலகின் பாராட்டைப் பெற்றுக்கொண்டதுடன் நாட்டை ஒன்றிணைத்தோம்.

இன்று நவம்பர் 19ம் திகதி எமது தாய் நாட்டை உலகின் முன்னிலையில் இலங் கையை உன்னத நாடாக உயர்த்துவதற்கான எதிர்பார்ப்புடனேயே பொறுப்பேற்கிறேன். 2005ம் ஆண்டு மஹிந்த சிந்தனை கொள் கைத் திட்டத்தை முன்வைத்து அதன் மூலம் நாட்டை மீட்டு ஐக்கியப்படுத்தினோம். இன்று முதல் மஹிந்த சிந்தனையின் எதிர் காலத் திட்டம் ஆரம்பமாவதுடன் அதன் மூலம் உலகின் உன்னத நாடாக இலங்கையைக் கட்டியெழுப்புவதே எமது இலக்கு. 2005 ல் இருந்தது போன்று பன்மடங்கு பலம் தன்னம்பிக்கையுடனேயே இம்முறை நாம் நாட்டைப் பொறுப்பேற்றுள்ளோம்.

நம்மில் பெரும்பாலானோர் தெற்கில் இரண்டு கிளர்ச்சியையும் வடக்கில் 30 வருட பிரிவினைவாதத்தையும் கண்டுணர்ந் தவர்கள். பிரிவினைவாதத்தைப் போன்றே கிளர்ச்சியின் மூலமும் நமது தாய்நாடு உலகப் படத்தில் அடிமட்டத்திற்கு வீழ்ச்சி யுற்றமையை நாம் கண்டுள்ளோம். இதனால் இன்னும் 20 அல்லது 30 வருடங்களில் நாடு மீண்டும் இரத்த ஆற்றில் மிதப்பதைத் தடுக்கவும் உலகின் முன்னி லையில் நாம் தனித்துவமாக எழுந்து நிற்கவும் வழிவகை செய்வதே எமது முதன்மையான நடவடிக்கையாகவேண்டும்.

அதற்காக எமது தாய் நாட்டில் இனங் களுக்கிடையிலான சமத்துவம் சமாதானம் நிலைப்பதற்கு வழி செய்வது அவசியம். அதனால்தான் நாட்டின் மக்கள் தொகையில் நூற்றுக்கு 80 வீதம் வாழும் கிராமப் பிரதேசங்களை முன்னேற்றுவதற்கு மஹிந்த சிந்தனை மூலம் தீர்மானித்தோம்.இதனால் கொழும்பிற்கு வெளியே நகரங்கள் கிராமங்களில் கவிழ்ந்திருந்த இருள் நீங்கி ஒளியேற்பட்டுள்ளது. ஐந்து துறைமுகங்கள் ஏற்படுத்தப்பட்டதும் இத்தகைய பகுதிகள் உயர் பொருளாதார வலயங்களாக மாற்றம்பெறுவது உறுதி.

பாரிய அபிவிருத்தியை முன்னெடுக்கும் போது இன்னும் பல நகரங்கள் கட்டி யெழுப்பப்படும். இதன் மூலம் வர்த்தகம் வேலை வாய்ப்புத்துறைகளில் பாரிய முன்னேற்றம் ஏற்படும். பயங்கரவாதத் திடமிருந்து மீட்கப்பட்ட நாடு 2012 இறுதிக்குள் இருளிலிருந்து மீட்கப்பட்ட நாடாக ஒளிபெறும். அது மட்டுமன்றி எமது மின்சாரத் திட்டங்களின் மூலம் நாட்டின் சகல குடும்பங்களும் ஒளிபெறுவதும் உறுதி எம்முன் உள்ள எதிர்காலமானது நாட்டிற்காக நாம் அனைவரும் உழைக்க வேண்டிய காலமாகும். பயனுள்ளதாகவும் வருமான மீட்டுவதாகவும் நாட்டை உயர்த்துவதே எமது எதிர்பார்ப்பு.

எமக்கு எமது இளைய தலைமுறை யினரின் மீது அதீத நம்பிக்கையுள்ளது. எமது இளைஞர்கள் முப்படைகளிலும் இணைந்து உலகம் பாராட்டும் வெற்றியை ஈட்டித் தந்தமையை நாம் நினைவில் கொள்ள வேண்டும்.எமது எதிர்கால சந்ததியினர் முன்மொழி யிலும் கற்றுத் தேர்ந்து தொழில்நுட்ப ரீதியில் 75 வீதமாக முன்னேற்றமடைவதையே நாம் எதிர்பார்ப்பாகக் கொண்டுள்ளோம். நாம் இந்த நாட்டை அறிவின் கேந்திரமாக் கும்போதுஅவர்கள் அத்தகைய நிலையை எட்ட முடியும் என்பதே எமது நம்பிக்கை.

எமது நாட்டின் பிரச்சினைகளை இனங்காணவும் அதனைத் தீர்க்கவும் போதிய தெளிவு எம்மிடமுண்டு. இலங்கை வளர்ச்சியடைந்து வரும் நாடுகளின் ஒரு மாதிரி அல்ல. எந்தவொரு கருத்தை தெரிவிப்பதற்கும் தீர்மானங்களை எடுப்பதற்கும் உரித்துடையவர்கள். எமது நாட்டுக்குச் சாதகமான தீர்வையே நாம் தேடுவோம். பயங்கரவாதிகளினது எதிர்பார்ப்பும் மக்களுடைய எதிர்பார்ப்பும் ஒன்றல்ல என்பதை நாம் அறிவோம். வரலாற்றில் முன்னெப்போதும் இல்லாத செயற் திட்டங்களை நாம் வடக்கு கிழக்கில் மேற்கொண்டுள்ளோம்.

வடக்கு, கிழக்கில் இடம்பெறும் சகல அபிவிருத்திகளும் பயங்கரவாதத்திற்கான வழிகளை இல்லாதொழிப்பது உறுதி. வறுமையை ஒழிப்பதும் உட்கட்டமைப்பு வசதிகளை வழங்குவதும் அரசியல் தீர்வின் பாரிய பகுதியாகும் என்பதே எனது நம்பிக்கை.வடக்கு மக்கள் ஜனாதிபதித் தேர்தலில் சுதந்திரமாக வாக்களித்துள்ளார்கள். பொதுத் தேர்தலில் தமது பிரதிநிதிகளைத் தேர்ந்தெடுத்துள்ளனர். எதிர்காலத்தின் உள்ளூராட்சி சபைகளுக்குப் பிரதிநிதிகளைத் தேர்ந்தெடுக்கும் வாய்ப்பு அவர்களுக்கு வழங்கப்படும். இதன் மூலம் மக்கள் கைகளிலேயே அதிகாரங்களை வழங்க நாம் எதிர்பார்க்கின்றோம்.

எமது வெளிநாட்டுக் கொள்கையானது பிளவுபடாத கொள்கையாகும். கடந்த யுகத்தில் தேசிய பாதுகாப்புக்காக நாம் பல நாடுகளுடன் இணக்கப்பாட்டுடன் செயற்பட்டோம். தற்போது உருவாகியுள்ள அபிவிருத்தி யுகத்தில் அதற்காக 1திlழி ஒத்துழைப்பு வழங்கும் நாடுகளுடன் நட்புக்கரம் நீட்டுவோம். சமாதானமின்றி அபிவிருத்தியில்லை. அபிவிருத்தியின்றி சமாதானமில்லை. அதனால் தேசிய பாதுகாப்புக்காக நட்புறவு கொண்ட நாடுகளுடன் உறவுகளை பலப்படுத்திக்கொண்டு புதிய தொடர்புகளை ஏற்படுத்தவும் நாம் நடவடிக்கை எடுப்போம்.

கஷ்டமான விடயங்கள் என கைவிடுவது எமது கலாசாரமல்ல. நாட்டை மீட்பது மட்டுமன்றி தற்காலத்தில் இந்த சமூகம் மீள முடியாது என சிலர் நினைக்கின்ற பிரச்சினைகளுக்கும் தீர்வு காண்பதற்கு நாம் பின்னிற்கப்போவதில்லை. கடந்த பொதுத் தேர்தல் மற்றும் ஜனாதிபதித் தேர்தலிலும் தொகுதி வாரியாக வேறு எந்த நாடும் எட்ட முடியாத வெற்றியை நாம் பெற்றுள்ளோம். பாதாள உலகமற்ற சட்டவிரோத செயல்களற்ற, கப்பம், ஆயுதப் பரிமாற்றமற்ற நாட்டை கட்டியெழுப்புவதே எமது எதிர்பார்ப்பு.

எதிர்கால வெற்றிகளின் முக்கிய பங்காளிகளாக இந்நாட்டுப் பிரஜைகள் அனைவரும் திகழவேண்டும் என்பதே எமது அவா. அதற்காக இன, மத, குல, அரசியல், கட்சி பேதமின்றி எம்முடன் இணையுமாறு நான் அழைப்பு விடுக்கின்றேன். இந்நாட்டை உயர்ந்த இடத்திற்கு நான் கொண்டு வந்துள்ளேன். நீங்கள் என்னை உயர்த்துவதற்கு வேறு இடமில்லை. எனது தாய்நாடு அன்றி உயர்ந்தது என்று எனக்கு எதுவுமில்லை.

நான் ஓய்வு பெற்ற நாளில் மெதமுலன வீட்டிலேயே இருப்பேன். அந்நாட்களில் இந்த நாட்டின் பிரஜையொருவர் என்னை வந்து பார்த்து ‘நீங்கள் நாட்டுக்கு செய்ய வேண்டிய கடமையை நிறைவேற்றியுள்ர்கள்’ என பெருமையுடன் கூறினால் அதுவே எனக்கு பெரும் திருப்தி எனவும் ஜனாதிபதி மேலும் தெரிவித்தார்