December

December

சரணடைந்த முன்னாள் விடுதலைப்புலி உறுப்பினர்களை சமூகத்துடன் இணைப்பதற்கான செயலமர்வு.

சரணடைந்துள்ள விடுதலைப்புலிகளின் முன்னாள் உறுப்பினர்களை சமூகத்துடன் இணைப்பது தொடர்பாக நேற்று செவ்வாய் கிழமை மட்டக்களப்பில் விழிப்புணர்வு செயலமர்வு ஒன்று இடம்பெற்றுள்ளது. மட்டக்களப்பு டேபோ மண்டபத்தில் இந்நிகழ்வு இடம்பெற்றுள்ளது.

புனர்வாழ்வு ஆணையாளர் சுசந்த ரணசிங்க தலைமையில் இடம்பெற்ற இச்செயலமர்வில் மட்டக்களப்பு மாவட்ட அரசாங்க அதிபர் சுந்தரம் அருமைநாயகம் பிரதேசச்செயலர்கள் மற்றும், சமய சமூகத்தலைவர்கள் ஆகியோர், கலந்து கொண்டனர்.

சரணடைந்து புனர்வாழ்வளிக்கப்பட்ட விடுதலைப்புலிகளின் முன்னாள் உறுப்பினர்கள் புனர்வாழ்வளிக்கப்பட்டு அவர்களை மீள்குடியேற்ற புனர்வாழ்வு ஆணையாளர் திணைக்களம் நடவடிக்கை எடுத்து வருவதன் ஒரு கட்டமாகவே இவர்களை சமூகத்துடன் இணைக்கும் நடவடிக்கைகளும் மேற்கொள்ளப்பட்டு வருவதாக தெரிவிக்கப்பட்டுள்ளது.

வெள்ளத்தால் பாதிக்கப்பட்ட வடக்கு மக்களுக்கு நிவாரணப்பொதிகள் வழங்கப்படவுள்ளன.

அண்மைக் காலமாக பெய்து வரும் கடும்மழை காரணமாக வடபகுதியில் ஏற்பட்டுள்ள வெள்ளத்தினால் பாதிக்கப்பட்டுள்ள மக்களுக்கு நிவாரணம் வழங்க 45 மில்லியன் ரூபா ஒதுக்கப்பட்டுள்ளதாக தெரிவிக்கப்பட்டுள்ளது. மீள்குடியேற்ற அமைச்சில் நேற்று செவ்வாய் கிழமை இடம்பெற்ற ஊடகவியலாளர் சந்திப்பு ஒன்றின் போது மீள்குடியேற்ற அமைச்சர் குணரட்ண வீரக்கோன் இத்தகவலைத் தெரிவித்தார்.

பாதிக்கப்பட்ட மக்களுக்கு உணவு மற்றும் பாவனைப் பொருட்களடங்கிய நிவாரணப் பாதி வழங்கப்படவுள்ளதாகவும் இந்நிவாரணப் பொதி ஒவ்வொன்றும் 4ஆயிரத்து 500 ரூபா பெறுமதியானவை எனவும் அவர் தெரிவித்துள்ளார்.
வெள்ளத்தால் பாதிக்கப்பட்ட மக்களுக்கு எதிர்வரும் 18ஆம் திகதி தொடக்கம் 24ஆம் திகதி வரை வடபகுதிக்கு சென்று நேரில் இவற்றை வழங்கவுள்ளதாகவும் அவர் தெரிவித்துள்ளார்.

வன்னி இறுதிக்கட்டப் போரில் திறமையாக பணியாற்றிய படை வீரர்களுக்கு பதக்கங்கள் வழங்கி கௌரவிப்பு.

வன்னியில் இறுதிக்கட்டப்போரில் ஈடுபட்ட படைவீரர்களில் ஆயிரம் பேருக்கு நேற்று செவ்வாய் கிழமை பதக்கங்கள் வழங்கி மதிப்பளிக்கப்பட்டுள்ளது. விடுதலைப் புலிகளைத் தோற்கடிக்கும் இறுதிக்கட்டப் போரில் மிகவும் திறமையாக செயற்பட்ட முப்படைகளையும் சேர்ந்த ஆயிரம் படைவீரர்களுக்கே இப்பதக்கங்கள் வழங்கப்பட்டன.

அலரிமாளிகையில் ஜனாதிபதி மகிந்த ராஜபக்ச தலைமையில் இந்நிகழ்வு இடம்பெற்றுள்ளது. பிரதமர் டி.எம்.ஜயரட்ண, பாதுகாப்புச் செயலர் கோத்தாபய ராஜபக்ச, முப்படைத் தளபதிகள், பொலிஸ் மாஅதிபர் ஆகியோரும் இந்நிழ்வில் கலந்து கொண்டனர்.

இராணுவத்தைச்சேர்ந்த 680 பேருக்கும், கடற்படையைச் சேர்ந்த 170 பேருக்கும், விமானப்படையைச் சேர்ந்த 85 பேருக்கும், பொலிஸ் துறையைச் சேர்ந்த 65 பேருக்குமே இப்பதக்கங்கள் வழங்கப்பட்டுள்ளன.

புலித்தோல் போர்த்திய பச்சோந்திகளும் புலி வியாபாரமும் – புலி ஊடகங்கள் (1) ரி கொன்ஸ்ரன்ரைன் & த ஜெயபாலன்

Orupaper_Titleஇடிக்குந் துணையாரை ஆள்வாரை யாரே
கெடுக்குந்த தகைமை யவர்
                       (குறள் 447)

தமிழீழ விடுதலைப் புலிகளுடைய வீழ்ச்சியும் அழிவும் பல்வேறு காலகட்டங்களில் நியாயமான விமர்சனங்கள் மூலம் எடுத்துக் காட்டப்பட்டு வந்ததுடன் எவ்வாறான அணுகுறைகள் தவறானவை என்பதும் எவ்வாறான அணுகுமுறைகள் கடைப்பிடிக்க வேண்டும் எனவும் மிகத் தெளிவாகவே சுட்டிகாட்டப்பட்டு வந்தது. ஆனால் இவ்வாறான ஆரோக்கியமான விமர்சனங்களை எல்லாம் தமிழீழ விடுதலைப் போராட்டத்துக்கு எதிரானது என்றும் அவ்வாறான விமர்சனங்களை வைத்தவர்களை எல்லாம் துரோகிகளாக முத்திரை குத்தி ஒதுக்குவதில் குறிப்பாக புலம்பெயர் நாடுகளில் வெளியான தமிழீழ விடுதலைப் புலிகளின் ஊடகங்கள் முன்நின்றன.

இந்த ஊடகங்கள் என்றைக்குமே தமிழீழ விடுதலைப் புலிகளின் அரசியல் மற்றும் இராணுவ நடவடிக்கையை எந்தச் சந்தர்ப்பத்திலும் கேள்விக்கு உட்படுத்தவில்லை. அதற்குக் காரணம் அவர்களிடம் கேள்வியோ விமர்சனமோ இல்லை என்பதல்ல. ஆனால் கேள்வியை எழுப்பினால், விமர்சனத்தை முன் வைத்தால், எங்கே தங்களை ‘கழற்றி’ விடுவார்கள், தங்கள் பிழைப்பு படுத்துவிடும் என்ற பயம். இந்த ஊடகங்களும் கட்டுரையாளர்களும் செய்தது முற்று முழுதான ஊடக விபச்சாரம். இந்த ஊடகங்களின் மூலம் நேரடியாகவும் மறைமுகமாகவும் தங்கள் வாழ்வை வளம்படுத்திக்கொண்ட இவர்கள், தாயக மக்களின் பெருமூச்சில் குளிர்காய்ந்தனர். அங்கு நடக்கின்ற அவலங்கள் ஒவ்வொன்றையும் காசாக்கிக் கொண்டனர். அதற்காக தங்களை புலியாக்கிய பச்சோந்திகள் இவர்கள்.

தமிழீழ விடுதலைப் புலிகள் வடக்கு கிழக்கில் ஆயுதம் ஏந்திய அல்லது ஆயுதம் ஏந்தாத எந்தவொரு அமைப்பையும் விட்டு வைக்கவில்லை. அவர்களுக்கு எதிரான அல்ல ஆதரவு இல்லாத எந்தவொரு அமைப்பையும் அவர்கள் இயங்க அனுமதிக்கவில்லை. தங்களுக்கு ஆதரவான அமைப்புகளையும் அவர்கள் சுயாதீனமாக இயங்க அனுமதிக்கவில்லை. தங்கள் நேரடிக் கட்டுப்பாட்டிலேயே வைத்திருந்தனர். இந்த நிலை இலங்கையின் வடக்கு கிழக்கில் மட்டுமல்ல புலம்பெயர்ந்த நாடுகளிலும் உருவாக்கப்பட்டது. அதனை முன்னின்று நடத்தியவர்கள், ஆயுதம் தரிக்காத தமிழீழ விடுதலைப் புலிகளின் ஊடகங்களும் ஊடகவியலாளர்களும். ஒரு பேப்பர், ஈழமுரசு, தமிழ் கார்டியன், ரிரிஎன் (ஜிரிவி), ஐபிசி (ஐஎல்சி) போன்றனவும் இணையங்களும் இதில் முன்னின்றன.

தங்களுக்கு எதிரானதும் ஆதரவு இல்லாததுமான அமைப்புகளை அழித்தொழித்த தமிழீழ விடுதலைப் புலிகளும் வெகுவிரைவிலேயே, அதே அமைப்பைச் சார்ந்தவர்களாலேயே வீழ்ச்சி அடைந்து. அதன் தலைமைகள் முற்றாக அழிக்கப்பட்டு உள்ளது. தமிழீழ விடுதலைப் புலிகளின் வீழ்ச்சி ஆரம்பிக்கப்பட்ட உடனேயே புலம்பெயர் நாடுகளில் 300 மில்லியன் டொலர்கள் வரை ஆண்டு வருமானத்தைக் கொண்ட 5 பில்லியன் டொலர்கள் பெறுமதியான அசையும் அசையாச் சொத்துக்கள் மே 18 2009ல் காணாமல் போனது. இதற்கு மேல் தமிழீழ விடுதலைப் புலிகளின் சர்வதேசக் கட்டமைப்பில் எப்படியானவர்கள் இருந்தனர், உள்வாங்கப்பட்டனர் எனபதற்கு விளக்கம் அவசியமில்லை. (லண்டனில் தமிழீழ விடுதலைப் புலிகளின் நிதி விடயங்களுடன் தொடர்பு உடையவர்களின் பட்டியல் தயாராகிக் கொண்டு உள்ளது. மேலதிக தகவல் வைத்துள்ளவர்கள் தேசம்நெற் உடன் தொடர்பு கொள்ளவும். வெகுவிரைவில் தேசம்நெற் இல் இப்பட்டியலைக் காணலாம்.)

தமிழீழ விடுதலைப் புலிகளுடைய வீழ்ச்சிக்கு மாத்தையா, கருணா பிளவு மட்டும் காரணமல்ல. தமிழீழ விடுதலைப் புலிகளுக்குள் உள்வாங்கப்பட்டவர்களும் முக்கிய காரண கர்த்தாக்களாக இருந்துள்ளனர். குறிப்பாக வெளிநாடுக்குப் புலம்பெயர்ந்த பல பச்சோந்திகள் தங்கள் சுயலாப நோக்கங்களுக்காக, புலித்தோல் அணிந்துகொண்டு உள்ளே சென்றனர். இவர்கள் தமிழீழ விடுதலைப் புலிகளின் பல்வேறு கட்டமைப்புகளிலும் தங்களை நிலைப்படுத்திக் கொண்டனர். அவ்வாறான கட்டமைப்புகளில் இந்த தமிழீழ விடுதலைப் புலிகளுக்கு சார்பான ஊடகங்கள் முக்கியமானவை. இந்த ஊடக ஒட்டுண்ணிகள் தமிழ் மக்கள் மத்தியில் உருவான அத்தனை சிந்தனைகளையும் விவாதங்களையும் ஓரம்கட்டி ‘ஜிஞ்சா’ கலாச்சாரத்தை உருவாக்கி வளர்த்து, உடுக்கடித்து உடுக்கடித்து புலியை முருங்கை மரத்தில் ஏற்றிவிட்டனர்.

இந்த ஊடகங்களும் ஊடகவியலாளர்களும் தமிழ் உணர்வாளர்களோ அல்லது தமிழீழ விடுதலைப் புலிகளின் உணர்வாளர்களோ அல்ல. தங்கள் இருப்பை உறுதிப்படுத்திக் கொள்ளவும் தங்கள் சொந்த லாபங்களை உறுதிப்படுத்திக் கொள்ளவும் எந்த எல்லைக்கும் செல்லக் கூடியவர்கள். தமிழீழ விடுதலைப் புலிகளின் வீழ்ச்சியிலும், அழிவிலும், வன்னி மக்களுடைய அழிவிலும் இவர்களுடைய கரங்கள் இரத்தம் தோய்ந்தவை. இலங்கை அரசும் அதன் படைகளும் தமிழீழ விடுதலைப் புலிகளுடைய எதிரி. ஆனால் அவர்களுடன் கூட இருந்த புலித்தோல் போர்த்திய இப்பச்சோந்திகள் கூட இருந்தே குழி பறித்த மோசடியாளர்கள்.

இவர்களைப் பற்றி தொண்ணூறுக்களின் ஆரம்பத்தில் இடம்பெற்ற ஒரு சம்பவத்தை நினைவுபடுத்த விரும்புகிறோம்.  கேணல் கிட்டு தமிழீழ விடுதலை இயக்கம் அழிக்கப்பட்டதிலும் வேறுபல படுகொலைகளிலும் சித்திரவதைகளிலும் நன்கு அறியப்பட்டவர். பெண்கள் தொடர்பில் அவருக்கு இருந்த பலவீனமே அவருடைய கால் கைக்குண்டில் பறிபோனதற்குக் காரணம். லண்டன் வந்திருந்த வேளையில் அவருடைய மரணத்துக்கு அண்மையாக சில மாற்றங்கள் அவரிடம் இருந்தது. கிட்டு லண்டனில் உள்ள தமிழர் தகவல் நடுவத்தில் தமிழ் எழுத்தாளர்கள், பத்திரிகையாளர்கள் எனப் பலதரப்பட்டவர்களையும் கூட்டி ஒரு கூட்டம் வைத்தார். அதற்கு மாற்று இயக்கங்களைச் சேர்ந்தவர்களும் அழைக்கப்பட்டு இருந்தனர். கிட்டுவினால் சித்திரவதைக்கு உட்பட்டவர்களும் வந்திருந்தனர்.

கிட்டுவின் கவனத்தை ஈர்க்க பலர், சிலரை தமிழினத் துரோகிகள், புலிகளுக்கு எதிரானவர்கள் என முண்டியடித்துக் கொண்டு வசைபாடிக் கொண்டிருந்தனர். கிட்டு அனைத்தையும் செவிமடுத்துவிட்டுச் சொன்னார் “ஒருவர் தமிழீழ விடுதலைப் புலிகளுக்கு எதிராக அல்லது தமிழீழ விடுதலைப் போராட்டத்துக்கு எதிராக எழுதினால் அதில் எமக்கு பெரிய பிரச்சினையில்லை. ஏனெனில் சம்பந்தப்பட்டவரின் அரசியல் நிலைப்பாடு என்னவென்று எமக்கு தெட்டத்தெளிவாகத் தெரியும். என்னைப் பொறுத்தவரை யார் ஆபத்தானவர்கள் என்றால் எம்மைத் துதிபாடிக்கொண்டு, எமக்கு விசுவாசமானவர்கள் போல் நடித்துக் கொண்டு தமது சொந்த அபிலாசைகளை எம்மை வைத்துக் கொண்டு நிறைவேற்றுபவர்கள் தான் எனக்கு கவலை அளிக்கின்றது” எனக் கூறினார். 20 ஆண்டுகளுக்கு முன்னர் அன்று கிட்டு கூறியது இன்றும் பலருக்கும் பொருத்தமாக இருக்கிறது. புலி ஊடகங்களுக்கு குறிப்பாக ஒரு பேப்பர் கோஸ்டிக்கு மிகவும் பொருத்தமாக உள்ளது.

இடிப்பாரை இல்லாத எமரா மன்னன்
கெடுப்பா ரிலானுங் கெடும்
                      (குறள் 448)

ஆட்சி அதிகாரத்தில் உள்ளோருக்கு இடித்துக் கூறும் குற்றங் குறைகளைச் சுட்டிக்காட்டி வழிபடுத்துவோர் அவசியம். அவ்வாறான ஆலோசனையைப் பெற்று திருத்திக் கொள்ளும்போது அவர்கள் நல்லமுறையில் நிர்வாகத்தை ஆட்சியை நடத்த முடியும். ஆனால் அவ்வாறு இடித்துரைப்பவர்கள் இல்லையாயின் பகைவரின்றியே அரசு கெடும். இக்கட்டுரையின் ஆரம்பத்திலும் மேலேயும் குறிப்பிடப்பட்டுள்ள இரு குறள்களும் இதனையே விளக்குகின்றன.

இலங்கையின் வடக்கு கிழக்கில் ஆட்சி அதிகாரத்தை வைத்திருந்த தமிழீழ விடுதலைப் புலிகளுக்கு இடிப்பாரையாக இருந்து குற்றங்குறைகளைச் சுட்டிக்காட்ட வேண்டிய தமிழீழ விடுதலைப் புலிகளுக்கு சார்பான ஊடகங்கள் தாங்களும் இடிப்பாரையாக இருந்து தமிழீழ விடுதலைப் புலிகளை வழிப்படுத்தவில்லை. இந்த ஊடகங்களும் ஊடகவியலாளர்களும் தமிழீழ விடுதலைப் புலிகளுக்கு நல்ல நண்பர்களாக இருந்திருந்தால் புலிகளுக்கு கசப்பான விடயங்களையும் சுட்டிக்காட்டி அவர்களை வழிப்படுத்தி இருப்பார்கள். ஆனால் இவர்கள் அவ்வாறு வழிப்படுத்த முயன்றவர்களையும் அதனைச் செய்ய விடவில்லை. அதனால் தமிழீழ விடுதலைப் புலிகள் இந்த ஊடகங்களால் அவர்களைச் சுற்றி உருவாக்கப்பட்ட மாயைக்குள் சிக்கி வீழ்ச்சி அடைந்து அழித்தொழிக்கப்பட்டனர். இந்தப் புலி ஊடகங்களுக்கும் ஊடகவியலாளர்களுக்கும் இடையே இருந்த உறவு ஊடக விபச்சாரமே.

11 – 17 டிசம்பர் ஈழமுரசு பத்திரிகையில் இருந்து: ”….. அண்மையில் பிரித்தானிய வெளியிட்ட காணொளி ஆவணத்தில் காணப்படும் மட்டக்களப்பு கட்டளைத் தளபதி ரமேஸ்க்கு கொடுக்கப்பட்ட பணியும் அதுதான். அதாவது இறுதிக்கட்டச் சமரின் போது விடுதலைப் புலிகள் பயன்படுத்திய உத்திகள் என்பது ஸ்ரீலங்கா அரசை போர்க்குற்றங்களில் சிக்க வைப்பதை முதன்மைப்படுத்தியதாகவே இருந்தது…..

தான் அவமானப்படுத்தப்பட்டு கோரமாகக் கொல்லப்படுவேன் என தெரிந்தும், கழுத்தில் கிடந்த சயனைட் குப்பியை கழற்றி எறிந்துவிட்டு, தலைவனின் கட்டளையை ஏற்று எதிரிகளின் பாசறையை நோக்கி வெள்ளைக் கொடியுடன் சென்றார்.

….. நாலாவது ஈழப்போர் என்பது இறுதிப் போர் எனவும் அதில் 50000ற்கும் மேற்பட்ட மக்களை ஸ்ரீலங்கா அரசு படுகொலை செய்யலாம் எனவும் விடுதலைப் புலிகள் முன்னரே எதிர்வு கூறி இருந்தனர். ஆனால் அவர்களின் கணிப்புகள் இதுதான் என்பதை யாரும் கணிப்பிடவில்லை.”

ஈழமுரசு என்ன சொல்ல வருகிறது. தேசியத் தலைவரின் போரியல் வழிகாட்டலில் போரிட்டோம். தலைவரின் இராணுவத் தந்திரோபாய வழிகாட்டலில் பின்வாங்கினோம். தலைவரின் வியூகத்தில் உள்ளுக்கு விட்டு அடித்தோம். பிறகு தலைவனின் கட்டளையை ஏற்று கழுத்தில் கிடந்த சயனைட் குப்பியை கழற்றி எறிந்துவிட்டு, எதிரிகளின் பாசறையை நோக்கி வெள்ளைக் கொடியுடன் சென்றோம்.

ஈழமுரசு ஒரு பேப்பர் மற்றும் புலி மீடியா,
ஐயாமாரே அண்ணாமாரே அக்காமாரே தம்பிமாரே தங்கச்சிமாரே உந்தத் தலைவன் உதை ஒரு மாசத்துக்கு முதல் தன்னும் சொல்லி இருந்தா எத்தினை ஆயிரம் உயிர்கள் பிழைச்சு இருக்கும். நாங்கள் சொன்னம் துரோகிகள் நீங்கள் கேக்கமாட்டியல். நீங்கள் உங்கட மீடியாக்கள் எல்லாம் காவடி எடுத்தியளே சிவாஜிலிங்கம் அந்தாள் மூன்று மாதத்துக்கு முதல் சொல்லிச்சே. கேட்டியளோ. நாசமாய் போவாரே உங்கட சொந்தப் பிள்ளையளா இருந்தால் இப்பிடியா செய்வியல்? அந்த வன்னிச் சனம் எல்லாம் வெள்ளைக் கொடியோட புலிகளைத் தாண்டிப் போக சுட்டுக் கொன்றான்கள். தப்பிப் போக நிண்ட சனத்தை செல் அடிச்சு கொன்றியளே. அப்பிடிப் போன சனத்தை கூச்சமில்லாமல் துரோகி என்றியள். சிங்கள இராணுவத்தை எதிரிப்படை என்று சனத்துக்கு தெரியும். ஆனால் 300 000 வன்னி மக்களை மந்தைகளாக அடைத்து வைத்து எதிரியை வைச்சு 50 000 சனத்தை கொன்று அதை வைச்சு மனித உரிமை அரசியல் செய்கிறம் என்று சொல்லுறியளே இதைவிட ஒரு பொறுக்கி அரசியல் உலகத்தில எங்கேயும் நடகேல்லை.

தளபதி ரமேஸ் மட்டுமல்ல தலைவரும் கழுத்தில் கிடந்த சயனைட் குப்பியை கழற்றி எறிந்துவிட்டு, எதிரிகளின் பாசறையை நோக்கி வெள்ளைக் கொடியுடன் சென்றது காணொளியாக உள்ளது. யுத்தத்தின் இறுதி நாட்களில் தமிழீழ விடுதலைப் புலிகளின் தலைவர் வேலுப்பிள்ளை பிரபாகரன் சரணடைய ஏற்பாடு செய்யப்பட்ட நாடகத்தில் சரணடைந்தார். இந்த ஒளிப்பதிவு சிலரால் பார்க்கப்பட்டு உள்ளது. வே பிரபாகரனை என்ன செய்ய வேண்டும் என்ற முடிவை இந்தியா இலங்கையிடமே விட்டுவிட, வே பிரபாகரனுக்கு சயனைட் வழங்கப்பட்டது. ஆனால் வே பிரபாகரன் அதனை எடுக்கவில்லை. அதன் பின்னர் இடம்பெற்ற சித்திரவதைகளில் வே பிரபாகரன் நிர்வாணமாக ஆட்டம் போட நிர்ப்பந்திக்கப்பட்டு இராணுவத்தினரின் பூட்ஸ்களை நக்கவும் பணிக்கப்பட்டு அவ்வாறு பூட்ஸ்களை நக்கியும் உள்ளார். அதன் பின்னர் கொடூரமான முறையில் கொலை செய்யப்பட்டும் உள்ளார்.

இந்த நிலைக்கு தமிழீழ விடுதலைப் புலிகளைச் சுற்றி மாயைவலை கட்டமைத்து அவர்களே தங்கள் பலம், பலவீனங்களை அறிய முடியாத அளவுக்கு அவர்களை உசுப்பேத்திய ஜம்பவான்கள் இந்த ஒரு பேப்பர் மற்றும் புலித்தோல் போர்த்திய பச்சோந்திகள். இவர்கள் தமிழீழ விடுதலைப் புலிகளை மட்டும் அழிக்கவில்லை அவர்களுக்காக வன்னி மக்களையும் அழித்து, தங்கள் சுய இருப்பையும், சுயலாபத்தையும் உறுதிப்படுத்திக் கொண்டவர்கள். அவர்கள் மே 18 2009 வரை எழுதி வந்த பொய், புரட்டுக்கள் அனைத்தும் அம்பலத்திற்கு வந்து, அவர்களுடைய ஒவ்வொரு செய்தியும் கட்டுரைகளுமே அம்மணமாகி உள்ளது. ஆனாலும் தங்கள் சுய இருப்பையும் எதிர்கால சுயலாபத்தையும் தொடர்ந்து தக்க வைத்துக் கொள்வதற்காக உண்மைகளை மறைத்து தொடர்ந்தும் மாயைகளையே கட்டமைக்கின்றனர்.

மற்றையவர்களை ‘பொறுக்கிகள்’, ‘நக்குபவர்கள்’ என்றும் விமர்சிக்கும் இவர்கள், தங்கள் ‘மேதகு தேசியத் தலைவர்’ இலங்கை இராணுவத்தின் பூட்ஸ்களை நக்குகின்ற நிலைக்கு தள்ளியவர்கள் என்பதனை வரலாறு குறித்துக் கொள்ளும்.

இன்னும் தொடரும்…..

(அடுத்த பாகத்தில்: ஒரு பேப்பர் நிறுவனத்தின் இயக்குநர் ஸ்ரீதரன் ஸ்ரீபார்த்தீபன் (பார்த்தீபன்), பொறுப்பாசிரியர் கோபால் தேவதாசஸன் கோபிரட்ணம் (கோபி), ஆசிரியர் குழு மன்மதக்குஞ்சு இரவி அருணாச்சலம், சாந்தி வவுனியன், சுகிர்தகலா கோபிரட்ணம், தமிழ் உணர்வாளரும் சீலை வியாபார நிபுணருமான சிவானந்த சோதி ஆகியோருடைய அரசியல் பற்றி அலசி ஆராயப்படும்.)

தமிழ் மக்களின் அரசியல் தீர்வு குறித்து ஆராய தமிழ்தேசியக் கூட்டமைப்பு சார்பில் மூவர் தெரிவு.

தமிழ் மக்களுக்கான அரசியல் தீர்வு ஒன்றைக் காண்பதற்காக கூட்டமைப்பின் சார்பில் மூவர் தெரிவு செய்யப்பட்டுள்ளதாக கூட்டமைப்பு தெரிவித்துள்ளது. மாவை சேனாதிராஜா, எம்.ஏ.சுமந்திரன், சுரேஸ் பிரேமச்சந்திரன் ஆகிய மூவருமே கூட்டமைப்பின் சார்பில் தெரிவு செய்யப்பட்டவர்களாவர்.

தமிழ் மக்களின் பிரச்சினைகளுக்கு தீர்வு காண்பதற்காக தமிழ் அரசியல் கட்சிகள் யாவும் ஒன்றிணைந்து செயற்படுவது என கடந்த சனிக்கிழமை பத்து தமிழ் கட்சிகள் இணைந்துள்ள தமிழ் கட்சிகளின் அரங்கமும் தமிழ்தேசியக் கூட்டமைப்பும் கலந்துரையாடி இணக்கப்பாட்டிற்கு வந்துள்ளதையடுத்து இதற்காக இருதரப்பிலிருந்தும் ஆறு பேர் கொண்ட குழுவொன்றினை அமைப்பது எனத் தீர்மானிக்கப்பட்டது. இதனடிப்படையிலேயே கூட்டமைப்பு தங்கள் சார்பில் மூவரைத் தெரிவு செய்துள்ளது. தமிழ் கட்சிகளின் அரங்கத்தின் சார்பிலும் மூவர் தெரிவு செய்யப்படவுள்ளதாக தெரிவிக்கப்பட்டுள்ளது.

யாழ்ப்பாணத்தில் இரு இறங்குதுறைகள் புனரமைக்கப்பட்டு மக்கள் பாவனைக்கு விடப்படவுள்ளன.

புனர்நிர்மானம் செய்யப்பட்ட காக்கைதீவு, நாவாந்துறை ஆகிய இரு இறங்குதுறைகளும் மக்களின் பாவனைக்குத் விடப்படவுள்ளன. எதிர்வரும் 19ஆம் திகதி வைபவ ரீதியாக இப்பாதைகள் மக்கள் பாவனைக்கு அனுமதிக்கப்பட வுள்ளதாகவும், இந்நிகழ்வில் பாரம்பரிய கைத்தொழில்கள் மற்றும், சிறுகைத்தொழில் முயற்சி அபிவிருத்தி அமைச்சர் டக்ளஸ் தேவானந்தா பிரதம விருந்தினராக கலந்து கொள்ளவுள்ளார் எனவும் தெரிவிக்கப்பட்டுள்ளது.

‘ஜெய்கா’ நிறுவனத்தின் 30 மில்லியன் ரூபா நிதியுதவியுடன் இவ்விரு இறங்குதுறைகளும் புனர் நிர்மானம் செய்யப்பட்டுள்ளமை குறிப்பிடத்தக்கது.

யாழ்.மாநகரசபைக்குட்பட்ட வீதிகள் ‘காப்பெற்’ வீதிகளாக மாற்றப்படவுள்ளன.

யாழ்.மாநகரசபையின் கட்டுப்பாட்டிற்குட்பட்ட வீதிகள் ‘காப்பெற்’ வீதிகளாக மாற்றியமைக்கப்படவுள்ளதாக யாழ்.மாநகரசபை முதல்வர் திருமதி யோ.பற்குணராசா தெரிவித்துள்ளார். இதன்படி சிறு வீதிகளும் இவ்வாறு மாற்றியமைக்கப்படவுள்ளதாகவும் அவர் தெரிவித்துள்ளார்.

இதேவேளை, தற்போது பெய்து வரும் மழையால் சேதமடைந்துள்ள வீதிகள் துரிதகதியில் திருத்தியமைக்கப்படும் எனவும் அவர் தெரிவித்துள்ளார். தற்போது யாழ்.ஸ்ரான்லி வீதி இவ்வாறு மாற்றியமைக்கப்பட்டுள்ளமை குறிப்பிடத்தக்கது.

26 வருடங்களின் பின் களுவாஞ்சிக்குடியில் நீதவான் நீதிமன்றினை இயங்கச் செய்ய நீதிஅமைச்சர் இணக்கம்

களுவாஞ்சிக்குடியில் 26 வருடங்களின் பின்னர் நீதவான் நீதிமன்றத்தை இயங்கச் செய்வதற்கு புதிய நீதிஅமைச்சர் ரவூப் ஹக்கீம் இணக்கம் தெரிவித்துள்ளார். களுவாஞ்சிக்குடியில் 20 ஆண்டுகளுக்கு மேலாக இயங்கி வந்த இந்நீமன்றம் யுத்தம் காரணமாக 1984 ஆம் ஆண்டு தொடக்கம் இயங்கவில்லை. இந்த நீதிமன்றக் கட்டடத்தில் தற்போது விசேட அதிரடிப்படையினரின் முகாம் அமைந்துள்ளது.

மட்டக்களப்பு மாவட்ட தமிழ்தேசியக்கூட்டமைப்பின் நாடாளுமன்ற உறுப்பினர் பொன்.செல்வராசா நீதி அமைச்சர் ரவூப் ஹக்கீமை சந்தித்து இது தொடர்பாக அவரது கவனத்திற்கு கொண்டு வந்ததையடுத்தே களுவாஞ்சிக்குடி நீதவான் நீதிமன்றினை மீண்டும் இயங்கச் செய்ய அவர் இணக்கம் தெரிவித்துள்ளார்.

யாழ்ப்பாணத்தில் காலம் கடந்த பிறப்புப் பதிவுகளுக்கு நடமாடும் சேவை.

யாழ்.மாவட்டத்தில் காலம் கடந்த பிறப்புகள் பதிவு தொடர்பாக நடமாடும் சேவை நடத்தப்பட்டு வருகின்றது. ஆனால், இந்த நடமாடும் சேவைகளுக்கு பிள்ளைகளுடன் தாய்மார்களே 95 சத வீதம் வருகை தருவதாகவும் தந்தைமார் வருவதில்லை எனவும் பதிவாளர் நாயகம் என்.சதாசிவ ஐயர் தெரிவித்துள்ளார்.

இதனால் தந்தையரின் விபரங்களைப் ஆவணங்கள் மூலமாகப் பெறுவதில் நேர விரயம் ஏற்படுவதாகவும் அவர் தெரிவித்துள்ளார். தந்தைமார் பிள்ளைகளுடன் வரும்பொழுது அவர்களது கையெழுத்துடன் பதிவுகளை இலகுவாக மேற்கொள்ள முடியும் எனவும். காலம் கடந்த பிறப்புப் பதிவுகளை மேற்கொள்ளும் போது தந்தைமார் இவ்விடயத்தில் கவனம் செலுத்த வேண்டும் எனவும் அவர் கேட்டுக்கொண்டுள்ளார்.

இலங்கைத் தேசிய கீதத்தின் தமிழ் பதிப்பு நீக்கம் ஏற்படுத்தி உள்ள அதிர்வலைகள்! : வி அருட்செல்வன்

SL_Flag”இலங்கையின் தேசியக்கீதம் சிங்கள மொழியில் மாத்திரமே பாடப்படும் என்றும் இதன்படி உத்தியோகபூர்வ அரச வைபவங்களில் இனிமேல் தமிழில் தேசிய கீதம் இசைக்கப்பட மாட்டாது” என அமைச்சரவை தீர்மானித்துள்ளதாக சண்டே ரைம்ஸ் செய்தி வெளியிட்டுள்ளது.

தற்போது, ஸ்ரீலங்கா மாதா என ஆரம்பிக்கும் தேசிய கீதத்தின் சிங்கள பதிப்பு வடக்கு கிழக்கு தவிர்ந்த நாட்டின் ஏனைய பகுதிகளில் பயன்படுத்தப்படுகிறது. தமிழ் பேசும் மக்களை பெரும்பான்மையாகக் கொண்ட வடக்கு கிழக்கில் தமிழ் பதிப்பு பயன்படுத்தப்படுகிறது. டிசம்பர் 08ல் நடைபெற்ற அமைச்சரவையின் நீண்ட கலந்துரையாடலின் பின்னர் தேசிய கீதத்திலிருந்து தமிழ் பதிப்பை நீக்கும் தீர்மானம் மேற்கொள்ளப்பட்டதாக சண்டே ரைம்ஸ் செய்தி வெளியிட்டு உள்ளது.

தேசிய கீதத்தின் தமிழ் பதிப்பு நீக்கம் தொடர்பாக வெளியிடப்பட்டு உள்ள கருத்துக்கள்:

இலங்கையின் தேசிய கீதத்தை சிங்கள மொழியில் மட்டுமே இசைக்க வேண்டுமென அமைச்சரவையில் எவ்வித இறுதித் தீர்மானமும் நிறைவேற்றப்படவில்லை. தேசிய கீதத்தைப் பாடவேண்டிய விதிமுறைகள் பற்றிய அமைச்சரவைப் பத்திரம் அமைச்சரவைக்கு வந்தபோது, தேசிய கீதத்தை சிங்கள மொழியில் மட்டும் இசைக்க வேண்டும் என்கின்ற முன்மொழிவுகளும் முன்வைக்கப்பட்டது. கலந்தாலோசிக்கப்பட்டது.

ஒன்றுக்கு மேற்பட்ட இனங்கள் வாழும் கனடா போன்ற சில நாடுகளில், இரண்டு மொழிகளில் தேசிய கீதம் பாடப்படுகின்றமை ஜனாதிபதிக்கு எடுத்துக்காட்டப்பட்டது. அமைச்சர்களான ராஜித்த சேனாரத்னவும் வாசுதேவ நாணாயக்காரவும், தேசிய கீதத்தை சிங்கள மொழியில் மட்டும் இசைக்கும்படி சட்டம் கொண்டுவருவது சாத்தியப்படாது என்று கருத்துக் கூறினர்.  சில முஸ்லிம் அமைச்சர்களும் இந்தக் கருத்தையே கொண்டிருந்தனர்.

இந்தக் கருத்துக்களையெல்லாம் கவனத்தில் எடுத்த ஜனாதிபதி மகிந்த ராஜபக்ஸ, ஒரு மொழியில் தேசிய கீதம் இசைக்கும் திட்டத்தை நிறைவேற்றாது ஒத்திவைத்துள்ளார். சில ஊடகங்களில் வெளியான தகவலைப் போல, சிங்கள மொழியில் மட்டும் என்ற திட்டம் எதுவும் நடைமுறைக்கு வரவில்லை.
-டக்ளஸ் தேவானந்தா, அமைச்சர் (ஈபிடிபி).

இறந்தகாலத்தில் செய்த தவறை திருத்துவதற்காக எடுக்கப்பட்ட தீர்மானமே தேசிய கீதத்தை சிங்களத்தில் மாத்திரம் பாட வேண்டும் என்ற அரசாங்கத்தின் தீர்மானம். உலகில் எந்த நாடும் தனது தேசிய கீதத்தை மொழிபெயர்த்து பாடுவதில்லை.

இந்தியாவில் பல மொழிகள் பேசப்பட்ட போதிலும் ஒரே மொழியில் தேசிய கீதம் பாடப்படுகிறது. தேசிய கீதம் என்பது சகல இனங்களை பிரதிநித்துவப்படுத்துகிறது என்பதால், அதனை ஒரே மொழியில் பாட வேண்டும் என்ற தீர்மானத்தை அனைத்து இனங்களும் ஏற்றுக்கொள்ள வேண்டும். 1978 ஆம் ஆண்டில் தேசிய கீதத்தை மொழிபெயர்த்து, அதனை பாடப்புத்தகங்களில் கூட அச்சிட்டமை கேலிக்குரியது.
-விமல் வீரவங்ச, அமைச்சர் (ஜேவிபி)

ஒரு நாட்டின் தேசிய கீதம் அந்நாட்டின் பெரும்பான்மை மொழியில் இருக்கவேண்டும். உலகில் இவ்வாறான நடவடிக்கைகளே பின்பற்றப்படுகின்றன. இதனை ஏற்றுக் கொள்கிறேன். ஆனால், யுத்தம் முடிந்த நிலையில் முக்கியத்துவம் வழங்குவதற்கு எத்தனையோ பிரச்சினைகள் நம் முன்னிருக்கையில் தேசிய கீதம் தொடர்பில் மொழிப் பிரச்சினையை தற்போது தோற்றுவிப்பது இனங்களிடையே விரிசலை ஏற்படுத்தும்.

அத்தோடு, சர்வதேச ரீதியில் எமக்கு எதிரான நாடுகளுக்கு மெல்லுவதற்கு வாய்க்கு அவல் கிடைத்தது போல் அமையும். தேசிய கீதத்தையே தமிழில் தடைவிதிக்கும் இலங்கை அரசாங்கம் எவ்வாறு தமிழ் மக்களுக்கு உரிமைகளை வழங்கப்போகின்றதென புலி சார்பானவர்களின் பிரசாரத்திற்கு உந்துசக்தியாக அமைந்துவிடும்.
– பத்தரமுல்லே சீலரத்ன தேரர், தலைவர் ஜனசெத பெரமுன 

அரசியல் சாசனத்தின் உறுப்புரிமை 7, அட்டவணை 3ல் தேசிய கீதம் தமிழில் பாடப்படுதல் தொடர்பாகவும், தமிழில் பாடல் வரிகளும் குறிப்பிடப்பட்டுள்ளன. எனவே அரசியல் சாசனத்தில் உள்ள விடயங்களை மீறும் செயற்பாடானது அப்பட்டமான இனவாத நடவடிக்கையாகும். 1956 ஆண்டு கொண்டு வரப்பட்ட சிங்களம் மாத்திரம் என்ற சட்டத்தினை தமிழ் மக்கள் தொடர்ச்சியாக எதிர்த்து வந்துள்ளனர். அதன் பின்பு தான் 1988 ஆம் ஆண்டு தமிழும் அரச கரும மொழியாக்கப்பட்டது.

இவ்வாறிருக்கையில் அரசாங்கம் இந்த அமைச்சரவை முடிவை மீளப் பெற்றுக் கொள்ளாமல் பிடிவாதமாக இருப்பார்களானால் தமிழ் மக்கள் வேறு வழியில்லாமல் தேசிய கீதத்தினை பகிஸ்கரிக்க தள்ளப்படலாம்.
– சுரேஸ் பிரேமச்சந்திரன், தமிழ் தேசியக் கூட்டமைப்பு.

இலங்கையில் தமிழ் மக்களும், சிங்களவர்களும் வசிப்பதால் அந்த நாட்டு தேசிய கீதத்தை சிங்களம் மற்றும் தமிழ் ஆகிய இரண்டு மொழிகளிலும் இதுவரை பாடப்பட்டு வந்தது. இந்த நடைமுறையை இலங்கை அதிபர் ராஜபக்சே மாற்றி, இனிமேல் சிங்கள மொழியில் மட்டுமே தேசிய கீதம் பாடப்படும் என்றும் தமிழில் தேசிய கீதம் பாடுவதை ரத்து செய்து விட்டதாகவும் அதற்கான தீர்மானம் அமைச்சரவையிலும் நிறைவேற்றப்படிருப்பதாகவும் ஏடுகளில் செய்தி வந்துள்ளது.

அந்த செய்தி உண்மையானால் அது வன்மையாக கண்டிக்கத்தக்கது. புண்பட்டிருக்கின்ற ஈழத்தமிழர்களின் உள்ளத்தை மேலும் புண்படுத்தக் கூடியது. எனவே இந்த செயலை கண்டிக்கிறேன்.
– கலைஞர் கருணாநிதி, தமிழக முதலமைச்சர்.

தேசிய கீதம்

ஸ்ரீ லங்கா தாயே – நம் ஸ்ரீ லங்கா
நமோ நமோ நமோ நமோ தாயே
நல்லெழில் பொலி சீரணி
நலங்கள் யாவும் நிறை வான்மணி லங்கா
ஞாலம் புகழ் வள வயல் நதி மலை மலர்
நறுஞ்சோலை கொள் லங்கா
நமதுறு புகலிடம் என ஒளிர்வாய்
நமதுதி ஏல் தாயே
நமதலை நினதடி மேல் வைத்தோமே
நமதுயிரே தாயே – நம் ஸ்ரீ லங்கா
நமோ நமோ நமோ நமோ தாயே
நமதாரருள் ஆனாய்
நவை தவிர் உணர்வானாய்
நமதோர் வலியானாய்
நவில் சுதந்திரம் ஆனாய்
நமதிளமையை நாட்டே
நகு மடி தனையோட்டே
அமைவுறும் அறிவுடனே
அடல்செறி துணிவருளே – நம் ஸ்ரீ லங்கா
நமோ நமோ நமோ நமோ தாயே
நமதோர் ஒளி வளமே
நறிய மலர் என நிலவும் தாயே
யாமெல்லாம் ஒரு கருணை அனைபயந்த
எழில்கொள் சேய்கள் எனவே
இயலுறு பிளவுகள் தமை அறவே
இழிவென நீக்கிடுவோம்
ஈழ சிரோமணி வாழ்வுறு பூமணி
நமோ நமோ தாயே – நம் ஸ்ரீ லங்கா
நமோ நமோ நமோ நமோ தாயே

Mother Lanka we salute Thee!
Plenteous in prosperity, Thou,
Beauteous in grace and love,
Laden with grain and luscious fruit,
And fragrant flowers of radiant hue,
Giver of life and all good things,
Our land of joy and victory,
Receive our gratefull praise sublime,
Lanka! we worship Thee.
Thou gavest us Knowledge and Truth,
Thou art our strength and inward faith,
Our light divine and sentient being,
Breath of life and liberation.
Grant us, bondage free, inspiration.
Inspire us for ever.
In wisdom and strength renewed,
Ill-will, hatred, strife all ended,
In love enfolded, a mighty nation
Marching onward, all as one,
Lead us, Mother, to fullest freedom.