13

13

இலங்கைத் தேசிய கீதத்தின் தமிழ் பதிப்பு நீக்கம் ஏற்படுத்தி உள்ள அதிர்வலைகள்! : வி அருட்செல்வன்

SL_Flag”இலங்கையின் தேசியக்கீதம் சிங்கள மொழியில் மாத்திரமே பாடப்படும் என்றும் இதன்படி உத்தியோகபூர்வ அரச வைபவங்களில் இனிமேல் தமிழில் தேசிய கீதம் இசைக்கப்பட மாட்டாது” என அமைச்சரவை தீர்மானித்துள்ளதாக சண்டே ரைம்ஸ் செய்தி வெளியிட்டுள்ளது.

தற்போது, ஸ்ரீலங்கா மாதா என ஆரம்பிக்கும் தேசிய கீதத்தின் சிங்கள பதிப்பு வடக்கு கிழக்கு தவிர்ந்த நாட்டின் ஏனைய பகுதிகளில் பயன்படுத்தப்படுகிறது. தமிழ் பேசும் மக்களை பெரும்பான்மையாகக் கொண்ட வடக்கு கிழக்கில் தமிழ் பதிப்பு பயன்படுத்தப்படுகிறது. டிசம்பர் 08ல் நடைபெற்ற அமைச்சரவையின் நீண்ட கலந்துரையாடலின் பின்னர் தேசிய கீதத்திலிருந்து தமிழ் பதிப்பை நீக்கும் தீர்மானம் மேற்கொள்ளப்பட்டதாக சண்டே ரைம்ஸ் செய்தி வெளியிட்டு உள்ளது.

தேசிய கீதத்தின் தமிழ் பதிப்பு நீக்கம் தொடர்பாக வெளியிடப்பட்டு உள்ள கருத்துக்கள்:

இலங்கையின் தேசிய கீதத்தை சிங்கள மொழியில் மட்டுமே இசைக்க வேண்டுமென அமைச்சரவையில் எவ்வித இறுதித் தீர்மானமும் நிறைவேற்றப்படவில்லை. தேசிய கீதத்தைப் பாடவேண்டிய விதிமுறைகள் பற்றிய அமைச்சரவைப் பத்திரம் அமைச்சரவைக்கு வந்தபோது, தேசிய கீதத்தை சிங்கள மொழியில் மட்டும் இசைக்க வேண்டும் என்கின்ற முன்மொழிவுகளும் முன்வைக்கப்பட்டது. கலந்தாலோசிக்கப்பட்டது.

ஒன்றுக்கு மேற்பட்ட இனங்கள் வாழும் கனடா போன்ற சில நாடுகளில், இரண்டு மொழிகளில் தேசிய கீதம் பாடப்படுகின்றமை ஜனாதிபதிக்கு எடுத்துக்காட்டப்பட்டது. அமைச்சர்களான ராஜித்த சேனாரத்னவும் வாசுதேவ நாணாயக்காரவும், தேசிய கீதத்தை சிங்கள மொழியில் மட்டும் இசைக்கும்படி சட்டம் கொண்டுவருவது சாத்தியப்படாது என்று கருத்துக் கூறினர்.  சில முஸ்லிம் அமைச்சர்களும் இந்தக் கருத்தையே கொண்டிருந்தனர்.

இந்தக் கருத்துக்களையெல்லாம் கவனத்தில் எடுத்த ஜனாதிபதி மகிந்த ராஜபக்ஸ, ஒரு மொழியில் தேசிய கீதம் இசைக்கும் திட்டத்தை நிறைவேற்றாது ஒத்திவைத்துள்ளார். சில ஊடகங்களில் வெளியான தகவலைப் போல, சிங்கள மொழியில் மட்டும் என்ற திட்டம் எதுவும் நடைமுறைக்கு வரவில்லை.
-டக்ளஸ் தேவானந்தா, அமைச்சர் (ஈபிடிபி).

இறந்தகாலத்தில் செய்த தவறை திருத்துவதற்காக எடுக்கப்பட்ட தீர்மானமே தேசிய கீதத்தை சிங்களத்தில் மாத்திரம் பாட வேண்டும் என்ற அரசாங்கத்தின் தீர்மானம். உலகில் எந்த நாடும் தனது தேசிய கீதத்தை மொழிபெயர்த்து பாடுவதில்லை.

இந்தியாவில் பல மொழிகள் பேசப்பட்ட போதிலும் ஒரே மொழியில் தேசிய கீதம் பாடப்படுகிறது. தேசிய கீதம் என்பது சகல இனங்களை பிரதிநித்துவப்படுத்துகிறது என்பதால், அதனை ஒரே மொழியில் பாட வேண்டும் என்ற தீர்மானத்தை அனைத்து இனங்களும் ஏற்றுக்கொள்ள வேண்டும். 1978 ஆம் ஆண்டில் தேசிய கீதத்தை மொழிபெயர்த்து, அதனை பாடப்புத்தகங்களில் கூட அச்சிட்டமை கேலிக்குரியது.
-விமல் வீரவங்ச, அமைச்சர் (ஜேவிபி)

ஒரு நாட்டின் தேசிய கீதம் அந்நாட்டின் பெரும்பான்மை மொழியில் இருக்கவேண்டும். உலகில் இவ்வாறான நடவடிக்கைகளே பின்பற்றப்படுகின்றன. இதனை ஏற்றுக் கொள்கிறேன். ஆனால், யுத்தம் முடிந்த நிலையில் முக்கியத்துவம் வழங்குவதற்கு எத்தனையோ பிரச்சினைகள் நம் முன்னிருக்கையில் தேசிய கீதம் தொடர்பில் மொழிப் பிரச்சினையை தற்போது தோற்றுவிப்பது இனங்களிடையே விரிசலை ஏற்படுத்தும்.

அத்தோடு, சர்வதேச ரீதியில் எமக்கு எதிரான நாடுகளுக்கு மெல்லுவதற்கு வாய்க்கு அவல் கிடைத்தது போல் அமையும். தேசிய கீதத்தையே தமிழில் தடைவிதிக்கும் இலங்கை அரசாங்கம் எவ்வாறு தமிழ் மக்களுக்கு உரிமைகளை வழங்கப்போகின்றதென புலி சார்பானவர்களின் பிரசாரத்திற்கு உந்துசக்தியாக அமைந்துவிடும்.
– பத்தரமுல்லே சீலரத்ன தேரர், தலைவர் ஜனசெத பெரமுன 

அரசியல் சாசனத்தின் உறுப்புரிமை 7, அட்டவணை 3ல் தேசிய கீதம் தமிழில் பாடப்படுதல் தொடர்பாகவும், தமிழில் பாடல் வரிகளும் குறிப்பிடப்பட்டுள்ளன. எனவே அரசியல் சாசனத்தில் உள்ள விடயங்களை மீறும் செயற்பாடானது அப்பட்டமான இனவாத நடவடிக்கையாகும். 1956 ஆண்டு கொண்டு வரப்பட்ட சிங்களம் மாத்திரம் என்ற சட்டத்தினை தமிழ் மக்கள் தொடர்ச்சியாக எதிர்த்து வந்துள்ளனர். அதன் பின்பு தான் 1988 ஆம் ஆண்டு தமிழும் அரச கரும மொழியாக்கப்பட்டது.

இவ்வாறிருக்கையில் அரசாங்கம் இந்த அமைச்சரவை முடிவை மீளப் பெற்றுக் கொள்ளாமல் பிடிவாதமாக இருப்பார்களானால் தமிழ் மக்கள் வேறு வழியில்லாமல் தேசிய கீதத்தினை பகிஸ்கரிக்க தள்ளப்படலாம்.
– சுரேஸ் பிரேமச்சந்திரன், தமிழ் தேசியக் கூட்டமைப்பு.

இலங்கையில் தமிழ் மக்களும், சிங்களவர்களும் வசிப்பதால் அந்த நாட்டு தேசிய கீதத்தை சிங்களம் மற்றும் தமிழ் ஆகிய இரண்டு மொழிகளிலும் இதுவரை பாடப்பட்டு வந்தது. இந்த நடைமுறையை இலங்கை அதிபர் ராஜபக்சே மாற்றி, இனிமேல் சிங்கள மொழியில் மட்டுமே தேசிய கீதம் பாடப்படும் என்றும் தமிழில் தேசிய கீதம் பாடுவதை ரத்து செய்து விட்டதாகவும் அதற்கான தீர்மானம் அமைச்சரவையிலும் நிறைவேற்றப்படிருப்பதாகவும் ஏடுகளில் செய்தி வந்துள்ளது.

அந்த செய்தி உண்மையானால் அது வன்மையாக கண்டிக்கத்தக்கது. புண்பட்டிருக்கின்ற ஈழத்தமிழர்களின் உள்ளத்தை மேலும் புண்படுத்தக் கூடியது. எனவே இந்த செயலை கண்டிக்கிறேன்.
– கலைஞர் கருணாநிதி, தமிழக முதலமைச்சர்.

தேசிய கீதம்

ஸ்ரீ லங்கா தாயே – நம் ஸ்ரீ லங்கா
நமோ நமோ நமோ நமோ தாயே
நல்லெழில் பொலி சீரணி
நலங்கள் யாவும் நிறை வான்மணி லங்கா
ஞாலம் புகழ் வள வயல் நதி மலை மலர்
நறுஞ்சோலை கொள் லங்கா
நமதுறு புகலிடம் என ஒளிர்வாய்
நமதுதி ஏல் தாயே
நமதலை நினதடி மேல் வைத்தோமே
நமதுயிரே தாயே – நம் ஸ்ரீ லங்கா
நமோ நமோ நமோ நமோ தாயே
நமதாரருள் ஆனாய்
நவை தவிர் உணர்வானாய்
நமதோர் வலியானாய்
நவில் சுதந்திரம் ஆனாய்
நமதிளமையை நாட்டே
நகு மடி தனையோட்டே
அமைவுறும் அறிவுடனே
அடல்செறி துணிவருளே – நம் ஸ்ரீ லங்கா
நமோ நமோ நமோ நமோ தாயே
நமதோர் ஒளி வளமே
நறிய மலர் என நிலவும் தாயே
யாமெல்லாம் ஒரு கருணை அனைபயந்த
எழில்கொள் சேய்கள் எனவே
இயலுறு பிளவுகள் தமை அறவே
இழிவென நீக்கிடுவோம்
ஈழ சிரோமணி வாழ்வுறு பூமணி
நமோ நமோ தாயே – நம் ஸ்ரீ லங்கா
நமோ நமோ நமோ நமோ தாயே

Mother Lanka we salute Thee!
Plenteous in prosperity, Thou,
Beauteous in grace and love,
Laden with grain and luscious fruit,
And fragrant flowers of radiant hue,
Giver of life and all good things,
Our land of joy and victory,
Receive our gratefull praise sublime,
Lanka! we worship Thee.
Thou gavest us Knowledge and Truth,
Thou art our strength and inward faith,
Our light divine and sentient being,
Breath of life and liberation.
Grant us, bondage free, inspiration.
Inspire us for ever.
In wisdom and strength renewed,
Ill-will, hatred, strife all ended,
In love enfolded, a mighty nation
Marching onward, all as one,
Lead us, Mother, to fullest freedom.

தடுப்பு முகாம்களில் புனர்வாழ்வளிக்கப்பட்ட முன்னாள் விடுதலைப்புலி உறுப்பினர்கள் 211 பேர் இம்முறை க.பொ.த. உயர்தரப் பரீட்சையில் மூன்று பாடங்களிலும் சித்தி.

000stud.jpgதடுப்பு முகாம்களில் புனர்வாழ்வளிக்கப்பட்ட முன்னாள் விடுதலைப்புலிப் போராளிகளில் க.பொ.த உயர்தரப் பரீட்சையில் இம்முறை 360 பேர் தோற்றியதாகவும் அவர்களில் 211பேர் மூன்று பாடங்களிலும் சித்தியடைந்து பல்கலைக்கழகத்திற்கு விண்ணப்பிக்க தகுதியைப் பெற்றுள்ளனர் எனவும் புனர்வாழ்வு ஆணையாளர் பிரிகேடியர் சசந்த ரணசிங்க தெரிவித்துள்ளார். இவர்களில் 40பேர் பல்கலைக்கழத்திற்குத் தெரிவாகும் வாய்புக் கிடைக்கும் எனவும் அவர் தெரிவித்தார்.

அண்மையில் வெளியாகியுள்ள க.பொ.த உயர்தரப் பரீட்சைப் பெறுபேறுகளின் அடிப்படையில் நாடு முழுவதும் 1இலட்சத்து 50 ஆயிரம் பேர் வரை பல்கலைக்கழகத்திற்கு விண்ணப்பிக்கத் தகுதி பெற்றுளளனர். ஆனால் புள்ளிகளின் அடிப்படையில் 22ஆயிரம் பேர் மட்டுமே பல்கலைக்கழகத்தில் உள்வாங்கப்படுவர் என பரீட்சைகள் ஆணையாளர் தெரிவித்துள்ளார்.

யாழ்.மாவட்ட மாணவிகள் மத்தியில் நடத்தைப் பிறழ்வுகள் அவதானிக்கப்பட்டுள்ளன.

யாழ்.மாவட்டப் பாடசாலை மாணவிகளின் மத்தியில் நடத்தைப்பிறழ்வுகள் காணப்படுவதாக சுட்டிக்காட்டப்பட்டுள்ளது. சமகாலத்தில் 15 வயது தொடக்கம் 19 வயது வரையிலான மாணவிகள் மத்தியில் இந்நிலை காணப்படுவதாக தெரிவிக்கப்பட்டுள்ளது.

இந்நிலைமை தொடர்பாக யாழ்.போதனா வைத்தியசாலை பெண் நோயியல் வைத்திய நிபுணர்களும் உளநல மருத்துவ நிபுணர்களும் இணைந்து பெற்றோர் ஆசிரியர்களை ஒன்று கூட்டி கலந்துரையாடி வருகின்றனர்.

மாணவர்களின் நடப்தைப்பிறழ்வுகள் தொடர்பான காரணிகளை ஆராய்ந்து பெற்றோர், ஆசிரியர்கள் எவ்வாறு அவர்களை வழிநடத்தலாம் என்பது குறித்து இக்கலந்துரையாடல்களில் ஆராயப்பட்டு வருகின்றது. யாழ் நகரிலுள்ள பெண்கள் பாடசாலைகளில் வகுப்பு ரீதியாக பெற்றோர் ஆசிரியர்களை உள்ளடக்கி இக்கலந்துரையாடல்கள் மேற்கொள்ளப்பட்டு வருகின்றன.

மாணவிகள் தினமும் எதிர்நோக்கும் பிரச்சினைகள், பாதிப்புகள், யாழ்.போதனா வைத்தியசாலையில் அவர்கள் எதிர்கொள்ளும் வைத்தியப் பிரச்சினைகள் குறித்து வைத்திய நிபுணர்களும் உளமருத்துவ நிபுணர்களும் உணர்வு பூர்வமாக பெற்றோர் ஆசிரியர்களுக்கு விளக்கி வருவதாக தெரிவிக்கப்படுகின்றது.

மட்டக்களப்பில் ஊடகவியலாளர் ஒருவர் தாக்கப்பட்டார்.

மட்டக்களப்பில் ஊடகவியலாளர் ஒருவர் தாக்கபட்டுள்ளார். மாணிக்கப்போடி சசிகுமார் (வயது 35) என்ற தமிழ் ஊடகவியலாளர் நேற்று ஞாயிற்றுக்கிழமை இரவு மூவர் கொண்டு குழுவினரால் தாக்கப்பட்டுள்ளார்.

மட்டக்களப்பு ஜெயந்திபுரத்திலுள்ள அவரது வீட்டில் வைத்தே இவர் தாக்கப்பட்டுள்ளார். இதாக்குதலினால் தலையிலும் கையிலும் காயமேற்பட்டுள்ள நிலையில் அவர் தற்போது மட்டக்களப்பு போதனா வைத்தியசாலையில் அனுமதிக்கப்பட்டுள்ளார். இச்சம்பவம் குறித்து பொலிஸார் விசாரணைகளை மேற்கொண்டு வருகின்றனர்.

வயலில் தேங்கி நின்ற நீரை வானம் உறிஞ்சியது. நவாலியில் மக்கள் வியப்புடன் அவதானித்தனர்.

வயல் நிலத்தில் தேங்கியிருந்த மழை வெள்ளத்தை வானம் உறிஞ்சிய காட்சியை நேற்று ஞாயிற்றுக்கிழமை நவாலி மேற்கில் பொதுமக்கள் கண்டு அதிசயித்தனர். யாழ்.நவாலி மேற்கில் நண்பகல் வேளையில் இச்சம்பவம் இடம்பெற்றது. வயல் வெளியில் தேங்கி நின்ற நீர் திடீரென் பெரும் ஒலியுடன் வானை நோக்கி சுழன்று சுழன்று சென்றது. இதனை அதிசயத்துடன் பார்த்த மக்கள் அச்சமடையவும் செய்தனர் சுனாமி அல்லது சூறாவளி ஏற்பட்டு விட்டதென அவர்கள் பதறியடித்துக்கொண்டு ஓடியதையும் காணக்கூடியதாகவிருந்தது.

இந்நீர் உறிஞ்சல் சுமார் அரைமணி நேரம் இடம்பெற்றது. கடந்த இரு நாட்களாக மழை விட்ட நிலையில் கடும் வெப்பம் நிலவியது. வளியமண்டலத்திலுள்ள அமுக்க வேறுபாடு காரணமாக இச்சம்பவம் இடம்பெற்றிருக்கலாம் எனவும், இவ்வாறான சம்பவம் சாதாரணமாக இடம்பெறக்கூடியதுதான் என வளிமண்டலவியல் அவதான நிலைய பொறுப்பதிகாரி புஸ்பநாதன் தெரவித்துள்ளார். இவ்வாறான மினி சூறாவளிகள் மக்களின் உயிர் மற்றும், உடமைகளுக்கும் சேதத்தை எற்படுத்தலாம் எனவும் அவர் குறிப்பிட்டார்.

நீரை வான் உறிஞ்சும் சம்பவங்கள் சில சமயங்களில் கடலில் தோன்றுவதை பலர் அவதானித்துள்ளனர் ஆனால், வயல் நீர் இவ்வாறு உறிஞ்சப்பட்டுள்ளமை மக்கள் மத்தியில் வியப்பினை எற்படுத்தியுள்ளது.

குடாநாட்டில் புதிய இராணுவ காவல்நிலையங்கள் தோற்றம் பெறுகின்றன.

போர் முடிவிற்கு வந்ததன் பின்னர் யாழ்.குடாநாட்டில் கட்டம் கட்டமாக அகற்றப்பட்டு வந்த இராணுவ காவலரண்கள், சோதனைநிலையங்கள் என்பன மீண்டும் புதிய முறையில் அமைக்கப்பட்டு வருவதாக பொது மக்கள் தெரிவிக்கின்றனர்.

குடாநாட்டு வீதிச் சந்திகளின் சில இடங்களில் இராணுவ சோதனை நிலையங்களையும், காவலரண்களையும் இராணுவத்தினர் புதிதாக அமைத்து வருகின்றமையை அவதானிக்க முடிகின்றது. முன்னர் இருந்த இடங்களிலேயே இவை மீண்டும் அமைக்கப்பட்டு வருகின்றன.

அண்மையில் இணுவில் கந்தசாமி கோவில் சந்தியிலும், வண்ணார்பண்ணை நாச்சிமார் கோவில் தேர்முட்டிக்கு அருகாமையிலும் புதிய இராணுவ காவல்நிலையங்கள் அமைக்கப்பட்டுள்ளன. குடாநாட்டின் சில பகுதிகளில் இவ்வாறு புதிய இராணுவ காவல் நிலையங்கள் அமைக்கப்பட்டு வருகின்றமை குறிப்பிடத்தக்கது.