21

21

கருணா அம்மானின் சர்ச்சைக் கருத்து: மனு இரத்து

கருணா அம்மான் தெரிவித்திருந்த சர்ச்சைக்குரிய கருத்துத் தொடர்பில், அவரைக் கைது செய்ய வேண்டும் என நீதிமன்றில் தாக்கல் செய்யப்பட்ட மனு விசாரணையின்றி இரத்துச் செய்யப்பட்டுள்ளது.
அண்மையில் இடம்பெற்ற ஊடகவியலாளர் சந்திப்பில் கருத்துத் தெரிவித்த கருணா, ‘ஆனையிறவில் ஓர் இரவில் 2 ஆயிரம் தொடக்கம் 3 ஆயிரம் வரையிலான இராணுவச் சிப்பாய்களைக் கொன்றோம்’ என்று ஒரு வாக்குமூலத்தை தன்வாயாலேயே வழங்கியிருந்தார்.

தென்னிலங்கையில் இந்த கருத்து பரபரப்பையும் சிங்கள மக்களிடையே கண்டனத்தையும் ஏற்படுத்தியது.
கருணாவைக் கைது செய்யவேண்டும் என்று எதிர்ப்புக் குரல்கள் வலுத்தன. தேரர்களும் கருணாவின் கருத்துக் கண்டனம் தெரிவித்ததுடன் அவரைக் கைதுசெய்யும் படியாக வலியுறுத்தினர். இந்த நிலையில் கருணா தெரிவித்திருந்த சர்ச்சைக்குரிய கருத்துத் தொடர்பில், அவரைக் கைது செய்ய வேண்டும் என நீதிமன்றில் தாக்கல் செய்யப்பட்ட மனு இன்று விசாரணைக்கு எடுத்துக்கொள்ளப்பட்டது. எனினும் விசாரணைகள் இன்றி மனு இரத்துச் செய்யப்பட்டது.

நல்லூருக்கு இம்முறை 300பேருக்கே அனுமதி!

புகழ்பெற்ற நல்லூர் ஆலயத் திருவிழாவுக்கு இவ்வருடம் 300 பக்தர்களை மட்டுமே அனுமதிக்க முடிவு செய்யப்பட்டுள்ளதாக யாழ். மாநகர பதில் முதல்வர் து.ஈசன் தெரிவித்தார்.
அங்கப்பிரதஸ்டை, காவடி, அன்னதானம், தண்ணீர் பந்தல் மற்றும் வியாபார நடவடிக்கைகளுக்கு முழுமையான தடை விதிக்கவும் முடிவு செய்யப்பட்டுள்ளது என்றும் அவர் குறிப்பிட்டார்.
பிரதமர் மஹிந்த ராஜபக்ச நல்லூர் திருவிழாவில் 500க்கும் அதிகமான பக்தர்களை அனுமதிக்க நடவடிக்கை எடுக்குமாறு வலியுறுத்தியிருந்தார் என்பது குறிப்பிடத்தக்கது.

ரயிலுடன் மோதுண்டு 17 மாடுகள் பலி

யாழ்ப்பாணம் தென்மராட்சி மிருசுவில் ஆசைப்பிள்ளை ஏற்றத்துக்கு அருகாமையில் ரயிலுடன் மோதுண்டு 17 மாடுகள் பலியாகியுள்ளன.

இந்தச் சம்பவம் நேற்றிரவு (20.07) 10 மணியளவில் இடம்பெற்றுள்ளது.

கொழும்பிலிருந்து யாழ்ப்பாணம் நோக்கி பயணித்த ரயிலுடன் மோதுண்டே இந்த மாடுகள் உயிரிழந்துள்ளன.

இருந்தும் மாடுகளுக்கு எவரும் இதுவரை உரிமை கோரவில்லையென சாவகச்சேரி பிரதேச சபையின் வெளிக்கள மேற்பார்வை உத்தியோகத்தர் கைலாயபிள்ளை சிவநேசன் தெரிவித்தார்.

இதேவேளை அண்மையில் கிளிநொச்சி பரந்தன் ஏ -35 வீதியின் வெலிக்கண்டல் சந்திப்பகுதியில் டிப்பர் வாகனத்தில் மோதுண்டு 18 மாடுகள் உயிரிழந்தமை குறிப்பிடத்தக்கது.