05

05

புதிதாக நான்கு கொரோனா நோய்த் தொற்றாளர்கள் அடையாளம்!

நாட்டில் இன்று (05.08.2020) புதிதாக நான்கு கொரோனா நோய்த் தொற்றாளர்கள் இனங்காணப்பட்டுள்ளதாக சுகாதார அமைச்சு தெரிவித்துள்ளது.

சேனாபுர புனர்வாழ்வு மத்திய நிலையத்தில் இருந்த நபரொருவரும், ஐக்கிய அரபு இராச்சியத்தில் இருந்து வருகை தந்த இருவரும் மற்றும் சென்னையில் இருந்து இலங்கை வந்த ஒருவருக்கும் இவ்வாறு கொரோனா தொற்று உறுதிப்படுத்தப்பட்டுள்ளது.

அதன்படி, இந்நாட்டு கொரோனா தொற்றாளர்களின் எண்ணிக்கை 2838 ஆக அதிகரி்த்துள்ள அதே நேரம் , 13 நோயாளர்கள் இன்று பூரணமாக குணமடைந்து வௌியேறியுள்ளதை அடுத்து, மொத்தமாக குணமடைந்த கொரோனா தொற்றாளர்களின் எண்ணிக்கை 2537 ஆக அதிகரித்துள்ளது.

வாக்குப்பதிவின் போது எவ்வித கடுமையான பிரச்சினைகளும் ஏற்படவில்லை – மஹிந்த தேசப்பிரிய

இலங்கையின் 2020 பாராளுமன்றத்தேர்தலானது இன்று காலை 07 மணியிலிருந்து மாலை 05 மணி வரை நடைபெற்றிருந்தது. இம்முறை பொதுத் தேர்தலில் நாடளாவிய ரீதியில் 71% வாக்குகள் பதிவாகியுள்ளதாக தேர்தல் ஆணைக்குழுத் தலைவர் மஹிந்த தேசப்பிரிய தெரிவித்துள்ளார்.

தேர்தல் ஆணைக்குழுவில் சற்றுமுன்னர் இடம்பெற்ற ஊடக சந்திப்பில் கலந்து கொண்டு அவர் இதனை தெரிவித்தார்.அங்கு தொடர்ந்தும் கருத்து தெரிவித்த அவர்,

கொவிட் 19 தொற்று காரணமாக விதிக்கப்பட்டிந்த சுகாதார வழிகாட்டல்களுக்கு அமைவாக தேர்தல் இடம்பெற்றதன்  காரணமாக 10 மணித்தியாலங்கள் வாக்குப்பதிவு இடம்பெற்றது.

பல மாவட்டங்களில் வாக்களிப்பு விகிதம் 70 % விட அதிகரித்திருந்தது.

இம்முறை குருணாகலை, காலி, புத்தளம் ஆகிய மாவட்டங்களில் குறைந்தளவான வாக்குகள் பதிவாகியிருந்தன.

கொரோனா வைரஸ் பரவலுக்கு மத்தியிலும் தமது வாக்கினை பதிவு செய்வதற்காக வாக்களிப்பு மத்திய நிலையங்களுக்கு வருகை தந்த அனைத்து வாக்காளர்களுக்கும் விசேடமாக தனது நன்றியை தெரிவித்துக் கொள்கிறேன்.

அதேபோல், சுகாதார வழிகாட்டலை தயாரித்து தந்து ஆரோக்கியமான தேர்தல் ஒன்றினை நடாத்துவதற்கு ஆதரவினை பெற்றுத் தந்த சுகாதார பிரிவினருக்கு தனது நன்றியை தெரிவித்துக் கொள்கிறேன்.

அதேபோல், வாக்குப்பதிவின் போது எவ்வித கடுமையான பிரச்சினைகளும் ஏற்படவில்லை என தேர்தல் ஆணைக்குழுத் தலைவர் மேலும் தெரிவித்தார்.

யாழ்.தேர்தல் மாவட்டத்தில் கள்ளவாக்கு பதிவு !

யாழ்.தேர்தல் மாவட்டத்தில் உள்ள சாவகச்சேரி தொகுதியில் கள்ளவாக்கு பதிவு செய்யப்பட்டுள்ளமை கண்டுபிடிக்கப்பட்டுள்ளதாக அப்பகுதி பொலிஸார் தெரிவித்துள்ளனர். இதனால் குறித்த தொகுதியில் வாக்களிக்க வந்தவர்களிடையே பெரும் பரபரப்பு ஏற்பட்டள்ளது.

சம்பவம் குறித்து தெரியவருகையில் தமிழ் தேசிய கூட்டமைப்பு உறுப்பினரான சாவகச்சேரி நகரசபை தவிசாளர் சிவமங்கை இராமநாதனின் கணவர் இராமநாதன் சாவகச்சேரி இந்து ஆரம்பப் பாடசாலைக்கு வாக்களிக்கச் சென்றிருக்கின்றார். அங்கு அவர் ஏற்கனவே வாக்களித்தாக பதிவாகியிருப்பதாக அங்கிருந்த அதிகாரிகள் தெரிவித்திருக்கின்றனர்.

இதனால் சம்பவம் தேர்தல்கள் திணைக்கள அதிகாரிகள், பொலிஸார் மற்றும் கட்சிப் பிரமுகர்கள் கவனத்திற்கு கொண்டு செல்லப்பட்டதால் விசாரணைகளை மேற்கொள்வதற்கு  நடவடிக்கை எடுக்கப்பட்டுள்ளது.

சுமார் எட்டாயிரத்துக்கும் மேற்பட்ட தேர்தல் முறைப்பாடுகள் பதிவு – தேர்தல்கள் ஆணைக்குழு

தேர்தல் சட்டங்களை மீறியமை தொடர்பில் இதுவரையில் எட்டாயிரத்திற்கும் மேற்பட்ட முறைப்பாடுகள் கிடைக்கப்பெற்றுள்ளதாக தேர்தல்கள் ஆணைக்குழு தெரிவித்துள்ளது.
அதன் அடிப்படையில் இதுவரையில் 8025 முறைப்பாடுகள் கிடைக்கப் பெற்றுள்ளதாக தெரிவிக்கப்படுகின்றது.

எவ்வாறாயினும் ஒரு வன்முறை செயல் கூட இதுவரை பதிவாகவில்லை என தேர்தல் ஆணைக்குழு வௌியிட்டுள்ள அறிக்கையில் குறிப்பிடப்பட்டுள்ளது.

இதேவேளை, இன்று (05.08.2020) காலை 06 மணி முதல் முற்பகல் 11 மணி வரையான காலப்பகுதியில் 421 தேர்தல் முறைப்பாடுகள் கிடைக்கப்பெற்றுள்ளதாக தேர்தல்கள் ஆணைக்குழு குறிப்பிட்டுள்ளது.

2020 பாராளுமன்ற வாக்களிப்பில் மாவட்டங்களின் வாக்களிப்பு வீதம் வெளியானது! – வன்னியில் 73% வாக்களிப்பு.

பாராளுமன்ற தேர்தலுக்கான வாக்களிப்பு நடவடிக்கைகள் இன்று காலை 7 மணி முதல் ஆரம்பமாகி மாலை 5 மணியுடன் நிறைவடைந்தது. மிகுந்த பாதுகாப்புடனும் சுகாதார நடைமுறைகளுடன் நடைபெற்ற இந்த தேர்தலில் எதிர்பாக்கப்பட்டதை விட மக்களுடைய வரவு சிறப்பாக காணப்பட்டதாக பல தரப்பினரும் பாராட்டி வருகின்றனர்.

இதே நேரத்தில் தமது வாக்கினை பதிவு செய்வதற்காக கொவிட் 19 தொற்று பரவலுக்கு மத்தியிலும் வாக்களிப்பு மத்திய நிலையங்களுக்கு வருகை தந்த அனைத்து வாக்காளர்களுக்கும் விசேடமாக தனது நன்றியை தெரிவித்துக் கொள்வதாக தேர்தல் ஆணைக்குழுத் தலைவர் மஹிந்த தேசப்பிரிய தெரிவித்தார்.

கிடைத்திருக்கக் கூடிய தகவல்களின் படி  இன்று காலை 07 மணி முதல்  மாலை 5 மணி வரை 22 தேர்தல் மாவட்டங்களில் அளிக்கப்பட்ட மொத்த வாக்குகளின் விகிதம் பின்வருமாறு,

நுவரெலியாவில் 75%
மொணராகலையில் 74%
பதுளையில் 74%
திருகோணமலையில் 74%
ஹம்பாந்தோட்டையில் 73%
வன்னியில் 73%
இரத்தினபுரியில் 73%
கொழும்பில் 72%
திகாமடுல்லையில் 72%
மட்டக்களப்பில் 72%
மாத்தறையில் 71%
களுத்துறையில் 71%
மாத்தளையில் 71%
பொலன்னறுவையில் 71%
கண்டியில் 71%
அனுராதபுரத்தில் 71%
கேகாலையில் 71%
கம்பஹாவில் 69%
குருணாகலையில் 69%
காலியில் 69%
யாழ்ப்பாணத்தில் 64%
புத்தளத்தில் 63%

என்ற வகையில் மக்களின் வாக்களிப்பு வீதம் காணப்படுகின்றது.

லெபனானில் வெடிவிபத்து – உருக்குழைந்தது பெய்ரூட்

லெபனான் தலைநகர் பெய்ரூட் நகரில் நேற்று(04.08.2020) இடம்பெற்ற மிகப்பெரிய வெடிவிபத்து சம்பவம் நகரையே உருக்குலைத்து, சின்னாபின்னமாக்கியுள்ளது. சம்பவத்தில் இதுவரை 100 பேர் உயிரிழந்துள்ளதுடன், மேலும் 4,000 பேர் காயமடைந்துள்ளனர் என அந்நாட்டு செய்திகள் தெரிவிக்கின்றன.
வெடிவிபத்தால் பெய்ரூட் நகரிலிருந்த வீடுகள், கடைகள், மருத்துவமனைகள், நிறுவனங்கள் என அனைத்துக் கட்டிடங்களும் இடிந்து தரைமட்டமாகியுள்ளன. பெரும் போரினான் சிதைவுற்ற நகர் போல பெய்ரூட் நகர் காட்சியளிக்கின்றது. இச் சம்பவத்தில் பெய்ரூட் நகரில் இருந்த ஒரு கோட்டை முற்றிலும் இடிந்து தரைமட்டமாகியுள்ளது. இந்த வெடிவிபத்து நில அதிர்வில் 3.5 ரிக்டர் அளவில் பதிவாகியுள்ளது. மத்திய தரைக்கடல் பகுதி முழுவதும் இந்த வெடிவிபத்து சத்தம் கேட்டுள்ளது, ஏறக்குறைய 200 கி.மீ. தொலைவில் உள்ள சைப்ரஸ் நகரத்துக்கும் இந்த சத்தம் கேட்டு, அதிர்வு உணரப்பட்டுள்ளது. கொரோனாப் பிரச்சினை, பொருளாதாரச் சிக்கல் போன்றவற்றில் லெபனான் நாடு திண்டாடிவரும் நிலையில் இந்த வெடிவிபத்து பேரிடியாக அமைந்துள்ளது. இந்த வெடிவிபத்து நடந்தபின் ஏராளமான அம்புலன்ஸ்கள் வீதிகளிலும், வீடுகளிலும் கிடக்கும் உடல்களைக் கொண்டு சென்றவாறு இருந்தன. சிறிது நேரத்தில் வைத்தியசாலைகள் அனைத்தும் நிரம்பியதால், காயமடைந்தவர்களைச் சாலையில் வைத்து சிகிச்சையளிக்க வேண்டிய நிலை ஏற்பட்டுள்ளது.

சுங்கத்தினால் கைப்பற்றப்பட்டு துறைமுக களஞ்சியசாலையில் சுமார் 2,750 தொன் அமோனியம் நைட்ரேட் இரசாயனம் பாதுகாப்பற்ற முறையில் வைக்கப்பட்டிருந்தமையே மிகப்பெரிய வெடிவிபத்துக்கு காரணமாக இருக்கலாம் என லெபனான் ஜனாதிபதி மைக்கல் அவுன் தெரிவித்துள்ளார். துறைமுக களஞ்சியசாலையில் உரிய பாதுகாப்புடன் இரசாயனம் களஞ்சியப்படுத்தப்பட்டிருக்கவில்லை எனவும் சம்பவத்திற்கு காரணமானவர்கள் தண்டிக்கப்படுவார்கள் எனவும் ஜனாதிபதி மேலும் தெரிவித்துள்ளார். இந்த இரசாயனம் 06 வருடங்களாக களஞ்சியப்படுத்தப்பட்டிருந்தது என்றும் தெரிவிக்கப்பட்டுள்ளது. மேலும் சம்பவம் தொடர்பிலான விசாரணைகளை முன்னெடுக்க விசாரணைக்குழு அமைக்கப்பட்டுள்ளதுடன், அடுத்து ஐந்து நாட்களில் பொறுப்புக்கூற வேண்டியவர்கள் கண்டுபிடிக்கப்படுவார்கள் என்று விசாரணைக்குழு தெரிவித்துள்ளது.

பெய்ரூட் நரில் இடம்பெற்ற வெடிவிபத்தையடுத்து லெபனான் ஜனாதிபதி மைக்கல் அவுன் உயர் பாதுகாப்பு பேரவையை அவசரமாகக் கூட்டியதுடன் பெய்ரூட் நகரம் பேரழிவால் பாதிக்கப்பட்ட நகரமாக அறிவித்துள்ளார். விபத்தையடுத்த லெபனானில் 3 நாட்கள் துக்கதினத்தை பிரகடனப்படுத்தி அந்நாட்டு அரசாங்கம் 66 மில்லியன் அமெரிக்க டொலர் நிதியை ஒதுக்கியுள்ளது.

இரு நாடுகளிடையே சிறந்த இருதரப்பு உறவுகள் காணப்படாவிடினும் லெபனானுக்குத் தேவையான உதவிகளை வழங்கவுள்ளோம் என்று இஸ்ரேல் தெரிவித்துள்ளது. சர்வதேச பாதுகாப்பு மற்றும் அரசியல் ஊடகங்களூடாக வெளிவிவகார அமைச்சு தொடர்பை ஏற்படுத்தியுள்ளது என்றும் பதில் பிரதமர் பென்னி கன்ஸ் தனது ட்விட்டர் தளத்தில் பதிவிட்டுள்ளார். உலக அரச தலைவர்கள் பலரும் அனர்த்தத்தில் உயிரிழந்தோருக்கு தமது இரங்கல்களை தெரிவித்துள்ளனர். லெபனானுக்கு ஆதரவாக பிரான்ஸ் எப்போதும் இருக்கும் என பிரெஞ்ச் ஜனாதிபதி இமானுவேல் மெக்ரோன் தெரிவித்துள்ளார். லெபனானுக்குத் தேவையான உதவிப் பொருட்கள் அனுப்பப்பட்டுள்ளன என்றும் அவர் தமது ட்விட்டரில் பதிவிட்டுள்ளார். சாதகமான அனைத்து வழிகளிலும் தேவையான அனைத்து உதவிகளை வழங்கத் தயாரகவுள்ளதாக பிரித்தானியப் பிரதமர் போரிஸ் ஜோன்சன் தெரிவித்துள்ளார். இதனிடையே, லெபனானுக்கு தேவையான மருத்துவ உதவிப் பொருட்களை வழங்குகின்றோம் எனக் கட்டார் தெரிவித்துள்ளது. இதுவாரு பயங்கரமான வெடிப்புச் சம்பவமென அமெரிக்க ஜனாதிபதி டொனால்ட் ட்ரம்ப் தெரிவித்துள்ளார். லெபனானுடன் சிறந்த நட்புறவு காணப்படுகின்றது எனத் தெரிவித்துள்ள அவர், அந்நாட்டுக்கு தேவையான அனைத்து உதவிகளையும் வழங்க தயாரெனவும் கூறியுள்ளார்.

லெபனானின் பெய்ரூட்டில் இடம்பெற்ற வெடிப்புச் சம்பவத்தை தொடர்ந்து, அந்நாட்டிலுள்ள இலங்கைத் தூதரகத்திற்கு சிறியளவில் பாதிப்பு ஏற்பட்டுள்ளது ஆனால், தூதரக ஊழியர்களுக்கு எவ்வித பாதிப்பும் இல்லை எனவும், லெபனானுக்கான இலங்கைத் தூதரகம் தெரிவித்துள்ளது. வெடிப்புச் சம்பவம் இடம்பெற்ற இடத்திலிருந்து 10 கிலோமீற்றர் தொலைவில் லெபனானுக்கான இலங்கைத் தூதரகம் அமைந்துள்ளது. வெடிப்புச் சம்பவத்தினால் ஏற்பட்ட அதிர்வில் தூதரகத்தின் கண்ணாடிகளுக்கு சேதம் ஏற்பட்டுள்ளது.