31

31

உயிர்த்த ஞாயிறு தாக்குதல் தொடர்பாக ஜனாதிபதி விசாரணை ஆணைக்குழு முன்னாள் பிரதமர் ரணில் விக்கிரமசிங்ஹவிடம் 04 மணிநேர விசாரணை!

முன்னாள் பிரதமரும், ஐக்கிய தேசியக் கட்சியின் தலைவருமான ரணில் விக்ரமசிங்க 4 மணி நேர வாக்குமூலம் வழங்கிய பின்னர், உயிர்த்த ஞாயிறு தாக்குதல் ஜனாதிபதி விசாரணை ஆணைக்குழுவின் பொலிஸ் பிரிவிலிருந்து வெளியேறியுள்ளார்.

இன்று (31) முற்பகல் 10.00 மணியளவில் குறித்த பிரிவில் ஆஜரான அவர், வாக்குமூலம் வழங்கிய பின்னர் அங்கிருந்து வெளியேறியுள்ளார்.

இதேவேளை, இன்று முற்பகல், உயிர்த்த ஞாயிறு தாக்குதல் விசாரணை ஜனாதிபதி ஆணைக்குழுவில் முன்னிலையான ஐ.தே.க. பொதுச் செயலாளர் அகில விராஜ் காரியவசம் சுமார் 2 மணி நேரத்திற்கும் அதிக நேரம் வாக்குமூலம் வழங்கிய பின்னர் அங்கிருந்து வெளியேறியுள்ளார்.

குடிமக்களின் உரிமைகளை வலுப்படுத்தவே அரசியலமைப்பு திருத்தம் தேவை என்றும் ஒரு நபரின் நலனுக்காக அல்ல! – ஐக்கிய மக்கள் சக்தி

தனிப்பட்ட தேவைகளை பூர்த்தி செய்ய அரசியலமைப்பில் திருத்தங்களை மேற்கொள்ளக்கூடாது என ஐக்கிய மக்கள் சக்தி தெரிவித்துள்ளது.

இன்று (திங்கட்கிழமை) காலை இடம்பெற்ற ஊடக சந்திப்பில் கருத்து தெரிவித்த அக்கட்சியின் பொதுச் செயலாளர் ரஞ்சித் மத்தும பண்டார, நாடு 2015 க்கு முந்தைய காலத்திற்கு மீண்டும் திரும்பியுள்ளது என குறிப்பிட்டுள்ளார்.

அத்தோடு குடிமக்களின் உரிமைகளை வலுப்படுத்தவே அரசியலமைப்பு திருத்தம் தேவை என்றும் ஒரு நபரின் நலனுக்காக மாற்றங்கள் செய்யப்பட கூடாது என்றும் அவர் தெரிவித்தார்.

20 வது திருத்தம் புதிய நபர்களை நாடாளுமன்றத்திற்கு அழைத்து வருவதற்கான அரசாங்கத்தின் தந்திரமாகும் என்றும் அவர் குற்றம் சாட்டினார்.

அரசாங்கம் மூன்றில் இரண்டு பெரும்பான்மையைப் பெற்றது, நாட்டை 2015 க்கு முன்னர் இருந்த நிலைக்குத் திரும்பக் கொண்டுவதற்காக இல்லை என்றும் அவர் குறிப்பிட்டார்.

மேலும் அனைத்து சுயாதீன ஆணைக்குழுக்களையும் ஒழிப்பது என்பது ஒரு குடும்பத்தைச் சுற்றி அதிகாரத்தை பகிந்துகொள்வதற்கான நோக்கம் என்றும் ரஞ்சித் மத்தும பண்டார தெரிவித்தார்.

“தமிழ் மொழி என்பது இலங்கையின் மூத்த மொழியா – இல்லையா என்பது எனக்கு தெரியாது. ஆனால், தமிழ் மொழி உலகிலேயே பழைய மொழியாகும்” – மனோகணேசன்.

கொழும்பில் ஊடகங்களுக்கு கருத்து வெளியிட்டபோதே அவர் இவ்வாறு கூறினார்.

இதன்போது தொடர்ந்தும் கருத்து வெளியிட்ட அவர், “சி.வி.விக்னேஸ்வரனின் நாடாளுமன்ற உரையானது பெரும் சர்ச்சையை ஏற்படுத்தியுள்ளது. அது அவரது தனிப்பட்ட கருத்து என்றே நான் கூறவேண்டும். சபாநாயகரே அதற்கு பதிலளித்துவிட்டார். எனவே, இனியும் இதனை விவாதப் பொருளாக கருதக்கூடாது.

ஏனெனில், இதற்கு முன்னரும் நாடாளுமன்றில் இவ்வாறான கருத்துக்கள் வெளியிடப்பட்டுள்ளன.

தமிழ் மொழி என்பது இலங்கையின் மூத்த மொழியா – இல்லையா என்பது எனக்கு தெரியாது. ஆனால், தமிழ் மொழி உலகிலேயே பழைய மொழியாகும். இதற்கான சான்றுகளும் உள்ளன.

எனவே, இதனை பெரிதுப்படுத்தக்கூடாது. இதனை இனவாதமாகக் கருதக்கூடாது. இனவாதமாக கருத்துக்களை வெளியிட்டு, மக்களை குழப்பியடிக்கவும் முடியாது” என அவர் மேலும் குறிப்பிட்டார்.

தீர்வுகள் எதுவுமின்றி பல வருடங்களாக தொடரும் காணாமலாக்கப்பட்டோருக்கான போராட்டம்! – நேற்று தாய் ஒருவர் தற்கொலை முயற்சி!

யாழில் நீண்ட இடைவெளியின் பின்னராக கட்சி பேதங்களை கடந்து யாழில் முன்னெடுக்கப்பட்ட வலிந்து காணாமல் ஆக்கப்பட்டவர்களின்
உறவினர்களது கவனயீர்ப்பு போராட்டம் உலகின் கவனத்தை ஈர்த்துள்ளது.

இதனிடையே போராட்டம் யாழ்.மத்திய பேரூந்து நிலையத்தில் புறப்பட்டு மாவட்ட செயலகத்தை சென்றடைந்திருந்த நிலையில் தாய் ஒருவர் பகிரங்க வெளியில் கயிற்றை கழுத்திலிட்டு தற்கொலைக்கு முயன்றமை அதிர்ச்சியை தோற்றுவித்துள்ளது.

எனினும் நீண்ட பிரயத்தனத்தின் மத்தியில் உயிருடன் காப்பாற்றப்பட்ட அவர் தற்போது யாழ்.போதனா வைத்தியசாலையில் அனுமதிக்கப்பட்டுள்ளார்.

உலகளாவிய ரீதியில் சர்வதேச காணாமலாக்கப்பட்டோர் தினம்  அனுஷ்டிக்கப்படுகின்றது.  அந்த வகையில், நேற்று காலை 11 மணிக்கு வடக்கு கிழக்கில் காணாமலாக்கப்பட்டோருக்கான மாபெரும் போராட்டத்திற்கு அழைப்பு விடுக்கப்பட்டிருந்தது.

அதற்கமைவாக வடமாகாணத்திற்கான மாபெரும் கவனயீர்ப்பு போராட்டம் யாழ்.நகரில் நேற்று நடைபெற்றது.

இறுதி யுத்தத்திற்கு முன்னரும் யுத்தத்தின் போதும் பலர் கைது செய்யப்பட்டும், இராணுவத்தினரிடம் ஒப்படைக்கப்பட்டும் காணமாலாக்கப்பட்டுள்ளனர் என தொடர்ச்சியாக குற்றம் சுமத்தப்பட்டு வருகிறததோடு பல்வேறு போராட்டங்களும் இடம்பெற்று வருகிறது.

அதுமட்டுமல்லாது உலகின் பல நாடுகளிலும் பல்வேறு காரணங்களுக்காகவும் கைது செய்யப்பட்டு காணாமலாக்கப்பட்டோர் குறித்த விழிப்புணர்வை ஏற்படுத்தும் முகமாக இந்த நாள் அனுஷ்டிக்கப்பட்டு வருகிறது.

காணாமல் ஆக்கப்பட்டவர்களினை கண்டுப்பிடித்து தருமாறு வலியுறுத்தி தமிழர் தாயகமெங்கும் கடந்த 2009ஆம் ஆண்டு முதல் போராட்டங்கள் முன்னெடுக்கப்பட்டு வருகின்றன.

இந்த நிலையில், யுத்தம் நிறைவடைந்து 11 வருடங்களாகியும் காணாமலாக்கப்பட்ட தமது உறவுகள் தொடர்பாக எந்தவொரு தகவலும் கிடைக்கவில்லை என காணமலாக்கப்பட்டோரின் உறவுகள் குற்றம் சாட்டியுள்ளனர்.

இந்நிலையில் குறித்த காணாமல் ஆக்கப்பட்டவர்களின் உறவினர்கள் கடந்த 2017 ம் ஆண்டு முதல் வடக்கு கிழக்கு எங்கும் தொடர் போராட்டங்களை நடத்தி வருகின்றனர்.

இந்நிலையில் தமக்கான நீதி இதுவரை கிடைக்காததனையடுத்து தமது உறவுகள் தொடர்பாக நீதி வழங்குமாறு சர்வதேசத்திடம் வலியுறுத்தி இன்று வடக்கு, கிழக்கில் பாரிய போராட்டங்கள் முன்னெடுக்கப்படுகின்றன.

அந்த வகையில் சர்வதேச காணாமல் ஆக்கப்பட்டோர் தினமாகிய இன்று வடக்கு மாகாணத்தின் யாழ்ப்பாணம், கிளிநொச்சி, முல்லைத்தீவு, வவுனியா, மன்னார் ஆகிய மாவட்டங்களைச் சேர்ந்த வலிந்து காணாமல் ஆக்கப்பட்டவர்களின் உறவினர்கள் யாழ்ப்பாணம் மத்திய பேருந்து நிலையத்திலிருந்து பேரணியை ஆரம்பித்து மாவட்ட செயலகம் முன்னதாக அதனை முடித்திருந்தனர்.

இதேவேளை கிழக்கு மாகாணத்தில் மட்டக்களப்பு, அம்பாறை, திருகோணமலை ஆகிய மாவட்டங்களில் காணாமல் ஆக்கப்பட்டவர்களின் உறவினர்களும் கிழக்கு மாகாணத்தில் மாபெரும் கவனயீர்ப்பு போராட்டமொன்றை முன்னெடுத்திருந்தமையும்  குறிப்பிடத்தக்கது.

தமிழர் பகுதிகளில் தொடரும் நுண்கடன் தற்கொலைகள்!

நுண்கடன் மற்றும் அது தொடர்பான வட்டி சுமையால் தமிழர் பகுதிகளில் தொடர்ந்தும் பல அபத்தங்கள் அரங்கேறிக்கொண்டிருக்கின்றன. இதன் ஒரு பகுதியாகை நுண்கடன் மற்றும் வட்டி சுமையால் இரண்டு குழந்தைகளின் தாய் தற்கொலை செய்துள்ள சம்பவம் மட்டக்களப்பில் இடம்பெற்றுள்ளது.

நுண்கடன் நிறுவனங்களிடமிருந்து கணவனுக்குப் பெற்றுக்கொடுத்த கடன் தொகையையும் அதற்கான வட்டியையும் செலுத்த முடியாது கடன் பழு காரணமாக மனைவி இவ்வாறு தற்கொலை செய்துள்ளதாக தெரிவிக்கப்படுகிறது.

இந்தச் சம்பவம், மட்டக்களப்பு, பதுளை வீதியை அண்டியுள்ள கரடியனாறு சிவத்தபோக்கடி கிராமத்தில் 29.08.2020 இடம்பெற்றுள்ளதாக பொலிஸார் தெரிவித்தனர். இச்சம்பவத்தில் குணரத்தினம் சிந்துஜா (வயது 26) என்பவரே இவ்வாறு தற்கொலை செய்துள்ளார்.

இச்சம்பவம் பற்றி மேலும் தெரியவருவதாவது, தற்கொலை செய்து கொண்டுள்ள இந்த இளம் பெண்ணுக்கு ஆறு வயதில் ஒரு மகளும், 15 மாதங்களேயான ஒரு கைக்குழந்தையும் உள்ளதாக உறவினர்கள் தெரிவித்தனர்.

இந்த இளம் பெண் நுண்கடன் வழங்கும் இரு நிறுவனங்களிடமிருந்து இரண்டு இலட்சம் ரூபாய் கடன் பெற்று அதனை மேசன் வேலை செய்யும் தனது கணவன் தொழிலுக்குச் சென்று வருவதற்காக மோட்டார் சைக்கிளொன்றை வாங்கிக் கொடுத்துள்ளார்.

அதேவேளை, கணவன் மது போதையுடன் தலைக்கவசமின்றியும் மோட்டார் சைக்கிளின் சாரதி அனுமதிப்பத்திரம், இன்சூரன்ஸ் இன்றியும் மோட்டார் சைக்கிளில் பயணம் செய்ததால் போக்குவரத்துப் பொலிஸாரின் சட்ட நடவடிக்கைக்கு உட்பட்டு 30 ஆயிரம் ரூபாயை தண்டப்பணமாகச் செலுத்த வேண்டியதாகிவிட்டது.

இதற்கான பணத்தை இன்னொருவரிடம் வட்டிக்குப் பெற்று தண்டப் பணம் செலுத்தியுள்ளார். அதேவேளை, வட்டிக்குப் பெற்ற பணத்தை மீளச் செலுத்தும் வகையில் மோட்டார் சைக்கிளை விற்று அந்தப் பணத்தைச் செலுத்தியுள்ளார். அத்துடன் நகைகளும் அடைவு வைக்கப்பட்டுள்ளன.

இந்நிலையில், குடும்ப பொருளாதார தகராறு காரணமாக கணவன் கடந்த ஆறுமாதங்களுக்கு முன்னர் மனைவியை விட்டுப் பிரிந்து சென்றுள்ளார். இந்த நிலைமை காரணமாக குறித்த பெண் தனது பிள்ளைகளுடன் பெற்றோர், சகோதரி வசிக்கும் வீட்டுக்கு சென்றுள்ளார்.

கடனைத் தீர்க்க முடியாத மன அழுத்தம், கணவன் பிரிந்து சென்ற விரக்தி ஆகியவற்றால் அவர் கடுமையா பாதிக்கப்பட்டு எவருடனும் மனம் விட்டுப் பேசாது இருந்துள்ளார். இந்நிலையில், தான் குறித்த வீட்டில் கழுத்தில் சுருக்கிட்டு உயிரிழந்துள்ளார்.

சம்பவ தினத்தன்று, தனது கைக் குழந்தையை குளிப்பாட்டி, படுக்கையறையில் உறங்க வைத்த பின்னர் இவ்வாறு உயிரை மாய்த்துள்ளதாக பெண்ணின் உறவினர்கள் பொலிஸ் விசாரணையில் தெரிவித்தனர்.

இச்சம்பவம் தொடர்பாக கரடியனாறு பொலிஸார் மேலதிக விசாரணைகளில் ஈடுபட்டுள்ளனர்.

“தமிழ் மக்களின் விடுதலைக்காக போராடிய முன்னாள் போராளிகள் இன்று அன்றாடம் பசி பட்டினியுடன் போராடிக் கொண்டிருக்கும் போது, உலகின் மூத்த மொழி எது? என்று இப்போது பாராளுமன்றத்தில் விவாதம் நடந்து கொண்டிருக்கின்றது” – ஆனந்தசங்கரி

என்னை துரோகியென்று கூறிய தமிழ் தேசிய கூட்டமைப்பு வெட்கித் தலைகுனியவேண்டும். புலிகளை அழித்ததாகக் கூறும் சரத் பொன்சேகாவை ஜனாதிபதியாக்க முயற்சி செய்தோர் கூட்டமைப்பினரே என்று தமிழர் விடுதலைக் கூட்டணியின் செயலாளர் நாயகம் வி.ஆனந்த சங்கரி தெரிவித்துள்ளார்.

இது தொடர்பாக அவர் விடுத்துள்ள அறிக்கையில் மேலும் தெரிவித்துள்ளதாவது,

‘புலிகளை முற்றுமுழுதாக அழித்தவர் பாராளுமன்ற உறுப்பினர் சரத் பொன்சேகாதான் என்பது அவர் பாராளுமன்றத்தில் ஆற்றிய உரையில் இருந்து வெளிப்படையாகத் தெரிகின்றது.

இந்த விடயம் நன்கு தெரிந்திருந்த போதிலும் 2010 ஆம் ஆண்டு நடைபெற்ற ஜனாதிபதித் தேர்தலின் போது சரத் பொன்சேகாவுக்கு வாக்களிக்க வேண்டுமென்று தமிழ் மக்களை வலியுறுத்திக் கேட்டுக் கொண்ட தமிழ் தேசியக் கூட்டமைப்பு இப்போது வெட்கித் தலைகுனிய வேண்டும்.

பாராளுமன்றத்தில் சமீபத்தில், ஜனாதிபதியின் கொள்கைப் பிரகடனம் மீது தமிழ் மக்கள் கூட்டணியின் பாராளுமன்ற உறுப்பினரான உயர்நீதிமன்ற ஓய்வு பெற்ற நீதியரசர் சி.வி.விக்னேஸ்வரன் உரையொன்றை ஆற்றியிருந்தார்.

அதன் பின்னர் விக்னேஸ்வரனின் உரைக்குப் பதிலளிக்கும் விதத்தில் சரத் பொன்சேகா எம்.பி உரையாற்றியிருந்தார்.

“பாராளுமன்ற உறுப்பினர் சரத் பொன்சேகாவின் அந்த உரையை வைத்துப் பார்க்கின்ற போது, விடுதலைப் புலிகளை முழுதாக அழித்தவர் சரத் பொன்சேகாதான் என்பது வெளிப்படையாகத் தெரிகின்றது. பாராளுமன்றத்தில் சரத் பொன்சேகா எம்.பியின் உரையை உற்று நோக்கினால் விடுதலைப் புலிகளை முற்றுமுழுதாக அழித்தவர் சரத் பொன்சேகா என்பது வெளிப்படையான உண்மையாகும். இது தமிழ் தேசிய கூட்டமைப்பினருக்கு 2010ம் ஆண்டு சரத் பொன்சேகா ஜனாதிபதி தேர்தலில் போட்டியிட்ட போது தெரியாதா? தெரிந்திருந்தும் அவருக்கு வாக்களிக்கக் கூறிய கூட்டமைப்பும், வாக்களித்த மக்களும் வெட்கித் தலைகுனிய வேண்டும்.

இதை நான் அன்றே சொன்ன பொழுது என்னை துரோகி என்றார்கள். ஆனால், இப்போது சரத் பொன்சேகாவே பாராளுமன்றத்தில் ‘தேசியம், சுயநிர்ணயம் பேசி தமிழ் இளைஞர்களை தவறாக வழிநடத்திய அமிர்தலிங்கம், பிரபாகரனிற்கு நேர்ந்தது என்ன என்பது அனைவருக்கும் தெரியும்’ என்று கூறியுள்ளார். சரத் பொன்சேகாவின் கூற்றுப்படி அமரர் அமிர்தலிங்கம் அவர்களின் கொலையும் அன்றைய அரசினுடைய முழு ஒத்துழைப்போடுதான் நடந்தேறியதென்பதை மறைமுகமாக ஒப்புக் கொண்டுள்ளார்.

அமிர்தலிங்கம் உயிரோடு இருந்திருந்தால் இணைந்த வடக்குகிழக்கில் இந்திய முறையிலான ஒரு அரசியல் தீர்வை பெற்றுக் கொடுத்து விடுவார் என்ற பயத்தில், அவரை ஒழிக்க வேண்டுமென்று எண்ணிய அன்றைய அரசுக்கு ஆயுதம் தாங்கிய தமிழ் இளைஞர்கள் என்று தங்களை கூறிக் கொண்டவர்கள், விலை போனார்கள் என்பது இன்று சரத் பொன்சேகாவினால் உறுதிப்படுத்தப்பட்டுள்ளது.

உலகிலேயே முதல் தோன்றிய மொழியும் மூத்தகுடியும் தமிழும், தமிழர்களும்தான் என்பது உலகிலுள்ள அனைத்து இன மொழி மக்களுக்கும் தெரிந்த ஒரு விடயம். தகவல் தொழில்நுட்பம் மிக வளர்ச்சி பெற்ற இந்த காலத்தில் ஐந்து வயது சிறுவர்களுக்கே இந்த உண்மை தெரியும். நிலைமை இவ்வாறு இருக்கும் போது பாராளுமன்ற உறுப்பினர் விக்னேஸ்வரன், பாராளுமன்றத்திற்கு சென்றுதான் இதை பேசி நிரூபிக்க வேண்டிய அவசியம் இல்லை. கைத்தொலைபேசியிலேயே ஒரு தட்டுத்தட்டினால் தெரிந்து விடும். இதை பேசியதால் புதிய வடிவில் ஒரு பிரச்சினை எழுந்துள்ளது. தமிழ் மக்கள் எதிர்நோக்கும் தீர்வு மற்றும் பிரச்சினைகள் எவ்வளவோ இருக்கின்ற இந்த நேரத்தில், இதை நிரூபிப்பதற்காகத்தான் பாராளுமன்றம் அனுப்பினோமா என்று இவருக்கு வாக்களித்த மக்கள் விசனமடைந்துள்ளனர்.

எல்லோருக்கும் தெரிந்த ஒரு விடயத்தை பாராளுமன்றத்தில் பேசுவதில் அர்த்தமில்லை. இப்போது எமது மக்களுக்கு என்ன தேவை? தமிழ் மக்களின் விடுதலைக்காக போராடிய முன்னாள் போராளிகள் இன்று அன்றாடம் பசி பட்டினியுடன் போராடிக் கொண்டிருக்கும் போது, உலகின் மூத்த மொழி எது? என்று இப்போது பாராளுமன்றத்தில் விவாதம் நடந்து கொண்டிருக்கின்றது.

இந்த விவாதம் பாராளுமன்றத்தின் கால எல்லை முடியும் வரையும் தொடரும். அடுத்த பாராளுமன்றத் தேர்தலில் வாக்குகளும் அவருக்கு அதிகரிக்கும்.

2010ம் ஆண்டிலிருந்து பாராளுமன்றத்திற்கு செல்லும் தமிழ் தேசியம் பேசும் பாராளுமன்ற உறுப்பினர்கள் தமிழ் மக்களின் அபிலாசைகளையும், எதிர்பார்ப்புகளையும் பற்றி அக்கறையில்லாமல் செயற்படுவதால் தமிழ் மக்களின் எதிர் காலம் கேள்விக்குறியாகியுள்ளது. இதனால்தான் தமிழர் விடுதலைக் கூட்டணியின் ஸ்தாபகர் தந்தை செல்வா அவர்கள் ‘தமிழ் மக்களை ஆண்டவன் தான் காப்பாற்ற வேண்டும்’ என்று தீர்க்கதரிசனமாக கூறினாரோ தெரியவில்லை.

இவ்வாறு வீ.ஆனந்தசங்கரி தனது அறிக்ைகயில் தெரிவித்துள்ளார்.

“ஒரு இனத்தையே அழித்துக் கொண்டிருக்கின்றது இந்த அரசாங்கம். அனைத்தையும் சிங்களப் பௌத்தமயமாக்கத் துடித்துக் கொண்டிருக்கின்றது” – அமல்ராஜ் அமலநாயகி

இந்த நாட்டில் போராடக்கூட முடியாத சூழ்நிலையில் தமிழ் மக்கள் உள்ளதாகவும் சர்வதேசம் கண்திறந்து பார்க்க வேண்டும் எனவும் வலிந்து காணாமல் ஆக்கப்பட்டோர் உறவுகள் சங்கத்தின் மட்டக்களப்பு மாவட்ட தலைவி அமல்ராஜ் அமலநாயகி தெரிவித்துள்ளார்.

சர்வதேச காணாமல்போனோர் தினத்தையிட்டு நேற்று மட்டக்களப்பில் ஏற்பாடு செய்யப்பட்டிருந்த பேரணிக்கு தடைவிதிக்கப்பட்டமை தொடர்பாக கருத்துத் தெரிவிக்கும்போதே அவர் இவ்வாறு குறிப்பிட்டார்.

இதுதொடர்பாக அவர் கூறுகையில், “யுத்தம் மௌனிக்கப்பட்டதும் கடந்த 11 வருடங்களாக நாங்கள் எமது உறவுகளைத் தேடிக் கொண்டிருக்கின்றோம். பல்வேறு விதங்களில் எமது போராட்டங்களை மேற்கொண்டு வருகின்றோம்.

கடந்த மூன்று வருடங்களாக வடக்கு கிழக்கில் உள்ள மாவட்டங்களில் உள்ள உறவுகள் அனைவரும் இணைந்து எமது உறவுகளுக்கான நீதியைக்கோரி தொடர் பேராட்டத்தினை நடத்தி வருகின்றோம்.

அந்தவகையில் உயிர் அச்சுறுத்தல்கள், தொலைபேசியில் அச்சுறுத்தல்கள், விபத்துக்கள் மூலமான அச்சுறுத்தல்கள், பின்தொடர்தல்கள் என பல்வேறுபட்ட அச்சுறுத்தல்களுக்கு மத்தியில் நாங்கள் எங்கள் போராட்டங்களை முன்னெடுத்து வருகின்றோம்.

இன்று சர்வதேச வலிந்து காணாமல் ஆக்கப்பட்டோர் தினமாகும். கடந்த அரசாங்க காலங்களில் ஒவ்வொரு வருடமும் நாங்கள் இதனை மேற்கொண்டு வருகின்றோம். இன்றைய தின பேரணி தொடர்பாக தற்போதைய கொரோனா சூழ்நிலையில் அதனைக் கருத்திற்கொண்டு நாங்கள் சுகாதாரப் பிரிவிடம் அனுமதிபெற்று பொலிஸாரிடமும் அனுமதிக்காகக் கொடுத்து அதனையும் பெற்றோம். இந்த அனுமதிகள் எல்லாம் ஒரு வாரத்திற்கு முன்னமே பெறப்பட்டுவிட்டன.

ஆனால், இன்று இந்தப் போராட்டத்தை நடத்தக் கூடாது என என்மீது தடையுத்தரவு பெற்று பொலிஸார் அதனைத் தடுக்க முற்பட்டனர். ஆனால், என்மீதே தடையுத்தரவு பெறப்பட்டிருந்தமையால் எமது அம்பாறை மாவட்டத் தலைவியின் தலைமையில் பலரின் ஆதரவுடனும் நாங்கள் இந்தப் போராட்டத்தினை நடத்தியிருந்தோம்.

எனது கணவரைத் தொலைத்து 11 வருடங்களாக அவருக்கு என்ன நடந்தது என்று தெரியாமல் நாங்கள் பரிதவித்துக் கொண்டிருக்கின்றோம். ஆனால் இன்று என்னை இந்தப் போராட்டத்தில் கலந்துகொள்ள தடையுத்தரவு பெறப்பட்டு அனுமதிக்கப்படவில்லை.

இன்று மட்டுமல்லாது இனிவரும் காலங்களிலும் இது தொடரும் விடயமாகும். இனி வடக்கு கிழக்கில் நாங்கள் எந்தவொரு போராட்டத்தையும் செய்யமுடியாத ஒரு நிலையையே இது வெளிப்படுத்துகின்றது. அத்துடன் இந்த அரசாங்கத்தினூடாக எமது உறவுகள் பற்றி அறியமடியுமா என்ற சந்தேகங்களும் எமக்குள் எழுகின்றன.

நாங்கள் அழிக்கப்படப் போகின்றோம். எம்மைக் கொல்வதற்கான முயற்சிகளும் இடம்பெற்றுக் கொண்டிருக்கின்றன. எங்களால் இந்த நாட்டில் போராடக்கூட முடியாத ஒரு சூழ்நிலையில் நாங்கள் இருந்துகொண்டிருக்கிறோம். சர்வதேசமே எங்களைக் கண்திறந்து பார்க்க வேண்டும். எங்களுக்கான தீர்வைப் பெற்றுத் தருவதற்கும் எங்கள் பிரச்சினைகள் தொடர்பாக விசாரணைகளை மேற்கொள்வதற்கும் சர்வதேசம் முன்வர வரவேண்டும்.

சர்வதேசத்திலுள்ள புலம்பெயர் உறவுகள் இவ்விடயம் தொடர்பாக கரிசனை கொள்ளவேண்டும். இங்கு போராடிக் கொண்டிருப்பவர்களும் உங்கள் உறவுகளே. எங்கள் விடயங்களை சர்வதேச குற்றவியல் நீதிமன்றத்திற்குப் பாரப்படுத்தும் அளவிற்குக் கொண்டு செல்லுங்கள்!

எதிர்காலத்தில் நாங்கள் இருப்போமா, அல்லது இனியொரு போராட்டத்தினை செய்வோமா என்றுகூட எமக்குத் தெரியவில்லை. ஒரு இனத்தையே அழித்துக் கொண்டிருக்கின்றது இந்த அரசாங்கம். அனைத்தையும் சிங்களப் பௌத்தமயமாக்கத் துடித்துக் கொண்டிருக்கின்றது.

எமது உறவுகள், எமது சந்ததிகளின் எதிர்காலம் மிகவும் பாரியதொரு அடக்குமுறைக்குள் தள்ளப்படப் போகின்றது. எனவே அனைவரும் இதனைக் கருத்திற்கொண்டு இவற்றை வெளிக்கொணர வேண்டும். சர்வதேச குற்றவியல் நீதிமன்றத்திற்கு எமது விடயங்களைக் கொண்டு செல்வதற்குரிய நடவடிக்கைகளை மேற்கொள்ள வேண்டும்” என்று தெரிவித்தார்.