September

September

ஜனாதிபதியின் தொல்லியல் செயலணிக்கு பொருத்தமான தமிழ், முஸ்லீம் புத்திஜீவிகளை தெரிவு செய்வது கடினமாகவுள்ளது ! – அமைச்சர் டக்ளஸ் தேவானந்தா

கிழக்கு தொல்லியல் சின்னங்களை பாதுகாக்கும் ஜனாதிபதி செயலணிக்கு பொருத்தமான தமிழ், முஸ்லீம் மக்களின் பிரதிநிதிளை தெரிவு செய்வது சவாலான விடயமாக இருக்கின்றது என ஆதங்கத்தினை வெளியிட்டுள்ள அமைச்சர் டக்ளஸ் தேவானந்தா, கடந்த கால அரசியல் தலைமைகளின் செயற்பாடுகளும் இந்த துர்ப்பாக்கிய நிலைக்கு காரணமாக அமைந்துள்ளன என்று தெரிவித்துள்ளார்.

தமிழ், முஸ்லீம் மக்களின் மன உணர்வுகளை பிரதிபலிக்கும் வகையில், குறித்த ஜனாதிபதி செயலணிக்கு பிரதிநிதிகள் உள்வாங்கப்பட வேண்டும் என்ற அமைச்சர் டக்ளஸ் தேவானந்தாவின் கோரிக்கையை ஏற்றுக் கொண்ட ஜனாதிபதி மற்றும் பிரதமர் ஆகியோர், பொருத்தமான இருவரை சிபாரிசு செய்யுமாறு அமைச்சரிடம் தெரிவித்திருந்தனர்.

எனினும், இதுவரை குறித்த இருவர் நியமிக்கப்படாமை தொடர்பில் கருத்து தெரிவிக்கும்போதே அமைச்சர் டக்ளஸ் தேவானந்தா மேற்கண்டவாறு தெரிவித்துள்ளார்.

இதுதொடர்பில் அவர் மேலும் தெரிவிக்கையில், “ஒரு காலத்தில் புத்திஜீவிகளினால் நிரம்பியவர்களாக நம்மவர்கள் இருந்தனர். ஆனால், கடந்த காலத்தில் தமிழர்களின் தலைமைகள் என்று கூறிக்கொண்டவர்களின் விவேகமற்ற வீரத்தின் வெளிப்பாடுகள் ஏற்படுத்திய விளைவுகளில் ஒன்றாக புத்திஜீவிகளுக்கும் வெற்றிடத்தை ஏற்படுத்தியுள்ளது.

கடந்த கால ஆயுதச் செயற்பாடுகளினால் பல புத்திஜீவிகள் விவேகமற்ற முறையில் கொல்லப்பட்டுள்ளனர். அதன் காரணமாக பெருமளவானோர் நாட்டை விட்டு வெளியேறியுள்ளனர்.

தற்போது நாட்டில் இருக்கின்றவர்களும் பெரும்பாலும் சமூகம் சார் செயற்பாடுகளில் இருந்து ஒதுங்கி இருப்பதிலேயே ஆர்வம் காட்டுகின்றனர். இவ்வாறான காரணங்களினால் குறித்த செயலணிக்கு பொருத்தமான தமிழ் மற்றும் முஸ்லீம் பிரதநிதிகளை நியமிக்க முடியாமல் இருக்கின்றது.

எனினும் தொடர்ந்தும் பல்வேறு முயற்சிகள் மேற்கொள்ளப்பட்டு வருகின்றமையினால் விரைவில் இருவர் நியமிக்கப்படுவார்கள்” எனக் குறிப்பிட்டுள்ளார்.

”எங்களுக்கு அடிக்கல் நாட்டுவது பிரச்சினை அல்ல. செய்யும் திட்டம் முறையாகவும், பயனாளர்களுக்கு நன்மை பயக்ககூடியதாகவும் இருக்கவேண்டும்” – ஜீவன் தொண்டமான்

” எங்களுக்கு அடிக்கல் நாட்டுவது பிரச்சினை அல்ல. செய்யும் திட்டம் முறையாகவும், பயனாளர்களுக்கு நன்மை பயக்ககூடியதாகவும் இருக்கவேண்டும்.” என்று இலங்கைத் தொழிலாளர் காங்கிரஸின் பொதுச்செயலாளரும், இராஜாங்க அமைச்சருமான ஜீவன் தொண்டமான் தெரிவித்தார்.

ஹட்டன் கல்வி வலயத்திற்குட்பட்ட ஹட்டன் புனிதஜோன் பொஸ்கோ கல்லூரியில் அருகிலுள்ள பாடசாலை சிறந்த பாடசாலை எனும் திட்டத்தின் கீழ் இரண்டு மாடிக் கட்டடம் இன்று (04.09.2020) திகதி இலங்கை தொழிலாளர் காங்கிரஸின் பொதுச்செயலாளரும் தோட்ட வீடமைப்பு மற்றும் சமுதாய உட்கட்டமைப்பு வசதிகள் இராஜாங்க அமைச்சருமான ஜீவன் தொண்டமான் தலைமையில் திறந்து வைக்கப்பட்டன.

இந்நிகழ்வில் பிரதம அதிதியாக கலந்து கொண்டு உரையாற்றும் போதே அவர் இவ்வாறு தெரிவித்தார். இது தொடர்பில் அவர் மேலும் கூறியவை வருமாறு,

” பாராளுமன்றத்தில் அண்மையில் நிறைவேற்றப்பட்ட இடைக்கால கணக்கறிக்கை மூலம் எனது அமைச்சுக்கு ஆயிரத்து 56 மில்லியன் ரூபா ஒதுக்கப்பட்டுள்ளது. ஏனெனில் கடந்த நான்கரை வருடங்களில் கடன் அடிப்படையிலேயே மலையகத்தில் வேலைகள் நடந்துள்ளன. அவற்றை மீள செலுத்த வேண்டியுள்ளது.

முதலில் அடிக்கல் நாட்டவேண்டும், கட்டிடத்தை நாமே திறந்து வைக்க வேண்டும் என்ற குறுகிய அரசியல் நோக்கில் திட்டங்களை உரிய வகையில் செய்யவில்லை. எங்களுக்கு அடிக்கல் நாட்டுவது பிரச்சினை அல்ல. செய்யும் திட்டம் முறையாகவும், பயனாளர்களுக்கு நன்மை பயக்ககூடியதாகவும் இருக்கவேண்டும்.

பிரச்சினைகளை பேசி, பேசி காலத்தை ஓட்டமுடியாது. நீங்கள் பாடசாலை பிரச்சினையை அறிவித்தீர்கள். இன்று தீர்வை வழங்கினோம். மைதானம் தேவையென கூறினீர்கள். இட ஒதுக்கீடு தொடர்பில் கம்பனியுடன் பேசி அனுமதி பெறப்பட்டுள்ளது. விரைவில் நிதி ஒதுக்கப்பட்டு மைதானப்பணியும் ஆரம்பமாகும். இது தொடர்பில் விளையாட்டுத்துறை அமைச்சர் நாமலை சந்தித்தும் கலந்துரையாடவுள்ளேன்.

அதேவேளை, கல்வி என்பது புத்தக படிப்பு மட்டும் அல்ல, அதனையும் தாண்டி பல விடயங்கள் உள்ளன. விளையாட்டு உட்பட பல் துறைகளில் மாணவர்களால் சாதிக்க முடியும் அதேபோல் அமைதி, அமைதி எனக்கூறி மாணவர்களை முடக்காமல், அவர்களுக்கு கேள்வி கேட்பதற்கான வாய்ப்புகளை ஆசிரியர்கள் வழங்கவேண்டும். அப்போதுதான் சிறந்த தலைவர்களை உருவாக்கமுடியும். ” – என்றார் ஜீவன் தொண்டமான்.

ஒரு லட்சம் பேருக்கான வேலை வாய்ப்பு வடக்கு மாகாணத்திற்கு அனுமதிக்கப்பட்ட 13,540 பேரில் 4,230 பேர் நீக்கம் ! – கிளிநொச்சியில் 950 பேர் மட்டுமே தெரிவு.

ஒரு லட்சம் பேருக்கான வேலை வாய்ப்பு வடக்கு மாகாணத்திற்கு அனுமதிக்கப்பட்ட 13,540 பேரில் 4,230 பேர் நீக்கப்பட்டு எஞ்சிய தொகையினருக்கு மட்டுமே நியமனம் வழங்கப்படவுள்ளது.

குறிப்பாக யுத்தத்தினால் பெரிதும் பாதிக்கப்பட்ட கிளிநொச்சி மாவட்டத்திலிருந்து 2,261 பேரிற்கு வழங்கப்பட்ட அனுமதி 950 பேராக குறைக்கப்பட்டுள்ளதும் நோக்கத்தக்கது.

வருமானம் குறைந்த ஒரு லட்சம் பேருக்கான வேலை வாய்ப்பில் வடக்கு-கிழக்கு மாகாணத்தினை  தற்சமயத்திற்கு கவனத்தில்கொள்வதில்லை என உள்நாட்டு அலுவல்கள் அமைச்சு 19ம் திகதி மாலை அவசர உத்தரவை பிறப்பித்தது.

க.பொ.த சாதாரணம் வரை கல்வி கற்றவர்களில் இருந்து நாடு பூராகவும் ஒரு லட்சம் பேருக்கு வேலை வாய்ப்பினை வழங்கவுள்ளதாக அறிவித்த அரசு தற்போது வடக்கு-கிழக்கில் மட்டும் அதனை நிறுத்த உத்தரவிட்ட அதேநேரம் ஏனைய 7 மாகாணங்களிலும் அதனை வழங்க அனுமதி வழங்கியுள்ளது.

இவ்வாறு இடைநிறுத்துவதற்கான உத்தரவு வடக்கு கிழக்கின் 8 மாவட்டத்திலும் உள்ள மாவட்டச் செயலகங்களிற்கு கடந்த 19 ஆம் திகதி மாலை தொலை நகல் மற்றும் மின் அஞ்சல்கள் மூலம் அனுப்பி வைக்கப்பட்டது. இதேநேரம் இந்த எண்ணிக்கையில் ஏனைய 7 மாகாணத்திற்கு பகிர்ந்தளிக்கப்பட்டு ஒரு லட்சம் வேலை வாய்ப்பும் 7 மாகாணத்திற்குள் முடக்கப்படுமா என்ற ஐயம் அப்போது எழுப்பப்பட்டது.

இதேநேரம் வடக்கு-கிழக்கில் போட்டியிட்ட அரச ஆதரவுக் கட்சிகள் இந்த வேலை வாய்ப்பினை வழங்குவதாக ஆசை வார்த்தைகள் கூறியே இளையோரின் வாக்கினையும் தேர்தல் பணிகளையும் பெற்றதான குற்றச் சாட்டுக்களும் எழுந்தன.

இந்த நியமனத்தில் யாழ்ப்பாணம் மாவட்டத்தில் 6,626 பேரும் , கிளிநொச்சியில் 2,261 பேரும் , மன்னாரில் 1830 பேரும் , முல்லைத்தீவில் 1565 பேரும் நியமிக்கப்படவிருந்ததோடு வவுனியாவில் 1258 பேரும் என 13,540 பேர் நியிமிக்க தயாராக இருந்தனர். இவர்களிற்கு கடந்த 31ஆம் திகதி முதல் நியமனம் வழங்கப்படும் எனவும் மாவட்டச் செயலகங்களிற்கு உறுதியளிக்கப்பட்டது.

இருந்தபோதும் வடக்கு-கிழக்கிற்கு அதிக நியமனம் செல்வதாக தெரிவித்து அனைத்தும் இடை நிறுத்தப்பட்டு தற்போது ஒரு கிராம சேவகர் பிரிவில் 10 பேரிற்கு மட்டுமே என்ற அடிப்படையில் குறித்த எண்ணிக்கை பாதியாக குறைகின்றது.

இதனால் யாழ்ப்பாணம் மாவட்டத்திற்கு அனுமதிக்கப்பட்ட 6626 பேரிற்குப் பதிலாக 4,350 பேருக்கும் , கிளிநொச்சியில் 2,261 பேரிற்கு வழங்கப்பட்ட அனுமதி 950 பேராகவும் , மன்னாரில் 1,830 பேரிற்கு முன்பு அனுமதிக்கப்பட்ட நிலையில் தற்போது 1,530 பேரிற்குமே சந்தர்ப்பம் கிடைக்கவுள்ளது.

முல்லைத்தீவு மாவட்டத்திற்கு முன்னர் 1,565 பேரிற்கு அனுமதிக்கப்பட்ட நிலையில் தற்போது 1,360 பேர் நியமிக்கப்படவிருப்பதோடு வவுனியாவில் 1,258 பேரும் என முன்னர் அனுமதிக்கப்பட்ட நிலையில் தற்போது 1,020 பேரிற்கே அனுமதி கிடைக்கும் எனத் தெரிவிக்கப்பட்டுள்ளது.

இதன் அடிப்படையில் வடக்கு மாகாணத்திற்கு முன்னர் 13 ஆயிரத்து 540 பேர் நியமிக்க அனுமதிக்கப்பட்டபோதும் இந்த தொகையில் 4,230 பேரை நீக்கி 9,210 பேரிற்கு மட்டுமே நியமனம் வழங்கப்படவுள்ளது.

வடக்கு – கிழக்கிற்கு இடை நிறுத்தினாலும் இந்த நியமனம் கிடைக்கும் எனவும் அரசு எந்த பாராபட்சமும் காட்டாது எனவும் ஆளுங்கட்சிக்கு ஆதரவு வழங்கிய டக்ளஸ் தேவானந்தா உள்ளிட்டோர் குறிப்பிட்டிருந்த நிலையில் , இது இவ்வாறு நடைபெற்றமையானது பலரையும் அதிருப்திக்குள்ளாக்கியதுடன் அரசு ஒரு தலைப்பட்சமாக நடக்கின்றதோ..? என்ற சந்தேகத்தையும் ஏற்படுத்தியுள்ளது.

சசிகலா சிறையில் இருந்து இம்மாத இறுதியில் வெளியே வர வாய்ப்பு ! – சட்டத்தரணி ராஜா செந்தூர்பாண்டியன்

சசிகலா சிறையில் இருந்து இம்மாத இறுதியில் வெளியே வர வாய்ப்பு உள்ளதாக அவரது சட்டத்தரணி ராஜா செந்தூர்பாண்டியன் கூறியுள்ளார்.

சசிகலா மற்றும் அவரது உறவினர்களுக்கு சொந்தமான இடங்களில் கடந்த 2017-ம் ஆண்டு வருமான வரி சோதனை நடைபெற்றது. அதனடிப்படையில் சென்னை போயஸ் கார்டனில் மறைந்த முதல்-அமைச்சர் ஜெயலலிதா இல்லத்துக்கு எதிரே 8 கிரவுண்டு இடத்தை சசிகலா பினாமி பெயரில் வாங்கி இருப்பதாக கூறி, அந்த இடத்தை வருமான வரித்துறை முடக்கி உள்ளது.

அங்கு கட்டுமான பணிகள் நடைபெற்று வரும் வேளையில் நேற்று முன்தினம் வருமான வரித்துறை சார்பில், ‘பினாமி தடுப்பு சட்டத்தின் கீழ் இந்த இடம் முடக்கப்பட்டு உள்ளது’ என்று நோட்டீஸ் ஒட்டப்பட்டது.

இந்த இடம் மட்டுமின்றி சசிகலாவின் பல கோடி மதிப்பிலான சொத்துகள் முடக்கப்பட்டு உள்ளன. இது தொடர்பாக சிறையில் இருக்கும் சசிகலா மற்றும் சொத்துகளை பதிவு செய்த சார்பதிவாளர் உள்ளிட்டோருக்கும் விளக்கம் கேட்டு நோட்டீஸ் அனுப்பப்பட்டு உள்ளது.

வருமான வரித்துறையினரின் இந்த நடவடிக்கைக்கு சசிகலா தரப்பில் கடும் எதிர்ப்பு தெரிவிக்கப்பட்டு உள்ளது. இதுகுறித்து சசிகலாவின் சட்டத்தரணி ராஜாசெந்தூர் பாண்டியன் கூறியதாவது:-

வருமான வரித்துறையினர் நடந்து கொண்ட விதம் மிகவும் தவறாகும். இப்பிரச்சினையை நாங்கள் சட்ட ரீதியாக எதிர்கொள்வோம். போயஸ் கார்டனில் கட்டப்பட்டு வரும் ஒரு வீட்டை சசிகலாவின் பினாமி சொத்து என்று வருமான வரித்துறையினர் எப்படி சொல்கிறார்கள்? என்று தெரியவில்லை.

ஏனென்றால் அந்த இடம் தெலுங்கானா மாநிலத்தைச் சேர்ந்த தனியார் நிறுவனத்துக்கு சொந்தமானதாகும். இந்த இடம் 2013-2014-ம் ஆண்டு வாங்கப்பட்டது. இந்த நிறுவனத்தில் சசிகலா பங்குதாரராக இருக்கிறார். ஒருவர் பங்குதாரராக சேர்ந்தால் அந்த கம்பெனியின் சொத்து, அவரது சொத்தாக எப்படி மாறும்?

இந்தியாவில் எத்தனையோ கம்பெனிகள் உள்ளன. அந்த கம்பெனியில் யார் வேண்டுமானாலும் பங்குதாரராக சேருவார்கள். அப்படி சேர்ந்தால் அந்த கம்பெனியின் சொத்தை அவரது சொத்து என்று எப்படி கூற முடியும்?

ஒருவர் தான் செலவு செய்த பணத்திற்கு முறையாக கணக்கு காட்டவில்லை என்றால்தான் வருமான வரித்துறையினர் நுழைய முடியும். இதில் பங்குதாரர் மீது தவறு என்றால் ‘ரிஜிஸ்திரார் ஆப் கம்பெனி’ என்ற துறைதான் நடவடிக்கை எடுக்க முடியும். வருமான வரித்துறை அதிகாரிகள் தவறாக புரிந்து கொண்டு இது போன்ற நடவடிக்கையில் ஈடுபட்டு வருகிறார்கள்.

இதற்கு சட்டம் இடம் கொடுக்காது. எங்களது பதிலை 90 நாட்களுக்குள் உரிய அதிகாரியிடம் சமர்ப்பிப்போம். அந்த பதிலை ஏற்காத பட்சத்தில் நாங்கள் நீதிமன்றத்துக்கு செல்வோம்.

நான் சசிகலாவின் வக்கீலாக சொல்ல விரும்புவது அவருக்கோ அல்லது எங்களுக்கோ இதுவரை வருமான வரித்துறை நோட்டீஸ் நகல் கிடைக்கவில்லை. சசிகலா இந்த மாத இறுதிக்குள் (செப்டம்பர்) வெளியே வருவதற்கான வாய்ப்புகள் உள்ளன. சசிகலா கடந்த 2019ம் ஆண்டு நவம்பர் மாதம் தண்டனை குறைப்பு பெற்று விடுதலை நிலையை அடைந்துவிட்டார். அதற்கான சட்டப்பணிகளை நாங்கள் மேற்கொண்டு இருக்கிறோம்.

கர்நாடக சிறை விதிகளின் அடிப்படையில் சிறை கைதிகள் நன்னடத்தையின் படி ஒவ்வொரு மாதமும் 3 நாட்கள் தண்டனை குறைப்பு சலுகையை பெற முடியும். ஊழல் தடுப்பு சட்டத்தில் கைது செய்யப்பட்டவர்களுக்கு இந்த சலுகை கிடையாது என்று கர்நாடக சிறை விதியில் எங்கும் குறிப்பிடப்படவில்லை. எனவே 43 மாத காலம் சிறைவாசம் முடிவடைந்து உள்ள சசிகலா, 43 மாதங்களுக்கு தலா 3 நாட்கள் வீதம் 129 நாட்கள் தண்டனை குறைப்பு சலுகை பெற தகுதி உடையவர் ஆகிறார். எனவே இந்த மாதம்(செப்டம்பர்) இறுதியில் அவர் வெளியே வருவதற்கு வாய்ப்புகள் மிக அதிகம் எனவும் அவர் குறிப்பிட்டுள்ளார்.

‘உலகிலேயே கோலியின் ஆட்டத்துக்கு அருகில் கூட யாரும் இல்லை ” – ஷோய்ப் அக்தர்

ஷோய்ப் அக்தர் அடிக்கடி இந்திய வீரர்களைப் புகழ்ந்து பேசி வருவது வழக்கம், அதுவும் நட்சத்திர வீரர்கள், செல்வாக்குள்ள வீரர்களை தேர்ந்தெடுத்து புகழ்வார்,  இந்த நிலையில் அவர் விராட் கோலியை புகழ்ந்தது கடும் விமர்சனங்களை ஏற்படுத்தியுள்ளது.

விராட் கோலியை அவர் பெரிய அளவில் புகழ்ந்துள்ளார், காரணம் அதற்குள்ளேயே கோலி சர்வதேச கிரிக்கெட்டில் 70 சதங்களையும், 80 அரைசதங்களையும் அடித்துள்ளார். இந்நிலையில் அக்தர் இந்திய வீரர்களை, குறிப்பாக கோலியைப் புகழ்வது குறித்து பாகிஸ்தான் ரசிகர்கள் கடும் விமர்சனங்களை முன்வைத்துள்ளனர்.

இதற்கு பதிலடி கொடுக்கும் வகையில் அக்தர் பதில் கூறுகையில், “நான் இந்திய வீரர்களையும், விராட் கோலியையும் புகழக்கூடாது. பாகிஸ்தானில்.. ஏன் உலகிலேயே கோலியின் ஆட்டத்துக்கு அருகில் கூட யாரும் இல்லை.

ஏன் என் மீது கோபப்பட வேண்டும், போய் புள்ளி விவரங்களைப் பார்த்து விட்டு பேசுங்கள், பிறகு என்னை விமர்சியுங்கள். ஒரு காலத்தில் பாகிஸ்தான் வீரர்கள் போல் இருக்க வேண்டும் என்று இந்திய மக்கள் தங்கள் வீரர்களிடத்தில் எதிர்பார்த்தனர், ஆனால் இன்றைய நிலமை தலைகீழாகி விட்டது” என்றார் ஷோயப் அக்தர்.

மேலும் சமீபத்தில் இங்கிலாந்திடம் டெஸ்ட் போட்டிகளில் பாகிஸ்தான் தோற்றதையும் கடுமையாக ஷோயப் அக்தர் விமர்சித்துள்ளார்.

உள்நாட்டு மற்றும் வெளிநாட்டு முதலீடுகளை மேலும் விரிவாக்குவதற்கு அரசாங்கம் முன்னுரிமை. – ஜனாதிபதி தலைமையில் அமைச்சரவை உபகுழு நியமிப்பு !

நாட்டின் பொருளாதாரத்தை வலுப்படுத்தும் நோக்கில் உள்நாட்டு மற்றும் வெளிநாட்டு முதலீடுகளை ஊக்குவிப்பதற்கு ஏற்றவாறான நடைமுறைச்சாத்தியமான செயற்திட்டமொன்றை உருவாக்குவதற்காக ஜனாதிபதி கோட்டாபய ராஜபக்ஷ தலைமையில் அமைச்சரவை உபகுழுவொன்று நியமிக்கப்பட்டுள்ளது.

ஜனாதிபதி கோட்டாபய ராஜபக்ஷவின் சுபீட்சமான எதிர்காலம் என்ற திட்டத்தில் குறிப்பிடப்பட்டுள்ளவாறான தேசிய அபிவிருத்தி செயற்திட்டத்தின் ஊடாக வறுமையை ஒழித்து, அனைத்து மக்களும் பயனடையத்தக்க வகையிலான உயர் உற்பத்தி, ஏற்றுமதி, இறக்குமதிப் பொருளாதாரத்தை உருவாக்குவதற்காக உள்நாட்டு மற்றும் வெளிநாட்டு முதலீடுகளை மேலும் விரிவாக்குவதற்கு அரசாங்கம் முன்னுரிமை வழங்கியுள்ளது.

அதனை முன்னிறுத்தி கொள்கை ரீதியானதும் நடைமுறைச் சாத்தியமானதுமான செயற்திட்டம் தொடர்பில் ஆராயும் நோக்கில் ஜனாதிபதி கோட்டாபய ராஜபக்ஷ தலைமையில் முதலீட்டு விரிவாக்கம் தொடர்பான அமைச்சரவை உபகுழுவொன்று நியமிக்கப்பட்டுள்ளது.

அந்த உபகுழுவில் பிரதமரும் நிதியமைச்சருமான மஹிந்த ராஜபக்ஷ, அமைச்சர்களான டக்ளஸ் தேவானந்தா, காமினி லொகுகே, பந்துல குணவர்தன, டளஸ் அழகப்பெரும, ஜோன்ஸ்டன் பெர்னாண்டோ, விமல் வீரவன்ச, மஹிந்த அமரவீர, எஸ்.எம்.சந்திரசேன, வாசுதேவ நாணயக்கார, உதய கம்மன்பில, ரமேஷ் பத்திரண, பிரசன்ன ரணதுங்க, ரோஹித அபேகுணவர்தன மற்றும் அலி சப்ரி ஆகியோர் உள்ளடங்குகின்றனர்.

அதேவேளை மேற்படி உபகுழுவின் செயற்பாடுகளுக்காக இராஜங்க அமைச்சர்களான துமிந்த திஸாநாயக்க, ஜயந்த சமரவீர, திலும் அமுணுகம, டி.வி.சானக, நாலக கொடஹேவா மற்றும் அஜித் நிவாட் கப்ரால் ஆகியோரின் பங்களிப்பைப் பெற்றுக்கொள்வதற்கும் அமைச்சரவை அனுமதி வழங்கியிருக்கிறது.

”தொழில் கிடைக்காத பட்டதாரிகள் எதிர்வரும் 17ஆம் திகதி வரை மேன்முறையீடு செய்ய முடியும் ” – அமைச்சர் கெஹலிய ரம்புக்வெல்ல

62,000 பட்டதாரிகளுக்கு தொழில்வாய்ப்பு வழங்கும் அரசாங்கத்தின் வேலைத் திட்டத்தின் கீழ் தொழில் கிடைக்காத பட்டதாரிகள் எதிர்வரும் 17ஆம் திகதி வரை மேன்முறையீடு செய்ய முடியும் என அமைச்சரவைப் பேச்சாளர் அமைச்சர் கெஹலிய ரம்புக்வெல்ல தெரிவித்துள்ளார்.

அரசாங்க தகவல் திணைக்களத்தில் நேற்று(வியாழக்கிழமை) நடைபெற்ற ஊடகவியலாளர்கள் சந்திப்பின் போதே அவர் இந்த விடயத்தினைக் குறிப்பிட்டுள்ளார்.

இதன்போது அங்கு தொடர்ந்தும் கருத்து வெளியிட்ட அவர், “பட்டதாரி அல்லது இதற்கு முன்னர் தொழில் ஒன்றிலிருந்து ஊழியர் சேமலாபநிதி நிதியத்தின் அங்கத்துவராக இருந்தால் மேற்படி தொழில்வாய்ப்பு கிடைக்காமல் போகுமென அதற்கான செயற்பாட்டு முறைமைகளில் குறிப்பிடப்பட்டிருந்தாலும் விண்ணப்பதாரிகள் தமது உண்மையான நிலையை குறிப்பிட்டு மேன்முறையீட்டை சமர்ப்பிக்க முடியும்.

சில பட்டதாரிகள் கடந்த காலங்களில் அவர்களுக்கு தொழில் இல்லாத நிலையில் ஏற்பட்ட பொருளாதார பின்னடைவை கருத்திற்கொண்டு தாம் பெற்றுக்கொண்ட பட்டத்திற்கு பொருத்தமற்ற சிறு தொழில்களில் ஈடுபட்டுள்ள நிலையில் அவர்கள் ஊழியர் சேமலாப நிதியத்தின் அங்கத்தவர்களென மேற்படி செயற்பாட்டு முறைமைகளில் குறிப்பிடப்பட்டுள்ளது.

அவ்வாறு தமக்கு பொருத்தமில்லாத சம்பளத்தைப் பெற்றுக்கொண்டுள்ள பட்டதாரிகள் இத்தகைய அனைத்து காரணங்களையும் குறிப்பிட்டு தமது மேன்முறையீட்டை எதிர்வரும் 17ஆம் திகதிக்கு முன் அனுப்ப வேண்டும்.

மேற்படி வேலைத் திட்டத்தின் கீழ் 50,000 பேருக்கு தொழில்வாய்ப்பு வழங்குவதாக குறிப்பிடப்பட்டாலும் ஜனாதிபதி கோட்டாபய ராஜபக்‌ஷவின் பணிப்புரைக்கமைய மேலும் 12,000 பட்டதாரிகளை இணைத்துக்கொள்வதற்கு அரசாங்கம் தீர்மானித்துள்ளது.

முதல் கட்டத்தின் கீழ் அரச சேவையில் 38,760 பெண்கள் உட்பட 50,171 பட்டதாரிகள் நியமிக்கப்பட்டனர். கலைப் பட்டதாரிகள் 31,172, உள்ளக பட்டதாரிகள் 29,156 மற்றும் வெளிவாரி பட்டதாரிகள் 20,322 பேரும் நியமனம் பெற்றுக்கொண்டுள்ளனர். இதில் 1,000 பௌத்த துறவிகளும் உள்ளடங்குகின்றனர்.

அரச துறையை பலவீனப்படுத்தி தனியார் துறையை மட்டும் பலப்படுத்தும் நோக்கில் கடந்த அரசாங்கத்தின் கொள்கைகள் அமைந்திருந்தன. கடந்த அரசாங்க காலத்தில் போக்குவரத்து சபையில் மறுசீரமைப்பு மேற்கொள்வதற்காக ஊழியர்களை வெளியேற்றிய சம்பவத்தின் பிரதிபலனை இன்றும் அரச துறை போக்குவரத்து சேவை வீழ்ச்சி எமக்கு சுட்டிக்காட்டுகின்றது“ எனத் தெரிவித்துள்ளார்.

ஜனாதிபதி கோட்டாபய ராஜபக்ஷவுக்குப் பின் பசில் ராஜபக்ஷ, அவருக்குப் பின் நாமல் ராஜபக்ஷ என ராஜபக்ஷக்கள் மாத்திரமா அரசியல் செய்ய வேண்டும்?- ஹிருணிகா பிரேமசந்திர கேள்வி !

நாட்டில் ஒரு சாதாரண அரசியல்வாதிக்கு எழுந்து நிற்க வாய்ப்பு வழங்காமல் இருப்பது மிகவும் கொடுமையான விடயமென முன்னாள்  நாடாளுமன்ற உறுப்பினர் ஹிருணிகா பிரேமசந்திர தெரிவித்துள்ளார்.

நாட்டின் தற்போதைய அரசியல் நிலைமைகள் தொடர்பாக  கருத்து  தெரிவிக்கும்போதே அவர் இவ்வாறு குறிப்பிட்டுள்ளார்.

இவ்விடயம் தொடர்பாக அவர் மேலும் கூறியுள்ளதாவது, “மக்கள் மனங்களில் ஏற்பட்ட விரக்தியின் காரணமாகவே அரசாங்கத்திற்குப் பெரும்பான்மை அதிகாரத்தை வழங்கியுள்ளனர். அத்துடன் இன்று  ஜனாதிபதி, கிராமப்பகுதிகளுக்கு  சென்றால், கடவுள் வருகிறார் எனக் கூறும் நாடு இது. நேற்று முன்தினம் நாடு முழுவதும் பலத்த மழை  பெய்து இருந்தது.

இதன்காரணமாக ஜனாதிபதி விமானத்தின் ஊடாக  நாடு முழுவதும் சென்றமையால் இருக்கலாம். இவ்வாறு மக்கள் மனநிலை இருக்கும்போது அரசியலமைப்பு திருத்தம் குறித்துக் கலந்துரையாடுவது பொய்யான விடயமாகும்.

ஆகவே கொடுப்பதை உட்கொண்டு விட்டு வேறு எதற்காவது காத்திருப்பதுதான் தற்போது செய்ய வேண்டிய விடயம்.

இதேவேளை 19 ஆவது திருத்தம் நீக்கப்பட்டால் ஜனாதிபதி பதவிக்காலம் மீண்டும் வரம்பற்றதாக இருக்கும். அதாவது, ஜனாதிபதி கோட்டாபய ராஜபக்ஷவுக்குப் பின் பசில் ராஜபக்ஷ, அவருக்குப் பின் நாமல் ராஜபக்ஷ என நாட்டில் ஆட்சி நடைபெறும்.

இவ்வாறு  ராஜபக்ஷக்கள் மாத்திரமா அரசியல் செய்ய வேண்டும்” என அவர்  கேள்வி எழுப்பியுள்ளார்.

”சவுதி அரேபியா எப்போதும் எங்கள் நண்பன்தான்” – பாகிஸ்தான் பிரதமர் இம்ரான்கான்

சவுதி அரேபியா எப்போதும் பாகிஸ்தானின் நண்பன்தான் என்று பாகிஸ்தான் பிரதமர் இம்ரான்கான் தெரிவித்துள்ளார்.

காஷ்மீர் விவகாரத்தில், இஸ்லாமிய நாடுகளின் கூட்டமைப்பு (ஓ.ஐ.சி) சர்வதேச அளவில் குரல் கொடுப்பதில்லையே? என்று பாகிஸ்தான் பிரதமர் இம்ரான் கானிடம் பத்திரிகையாளர்கள் கேள்வி எழுப்பினர். இதற்கு இம்ரான்கான் பதிலளித்துள்ளார்.

அதில், “ஆம். காஷ்மீர் விவகாரத்தில் இஸ்லாமிய நாடுகளின் கூட்டமைப்பு முக்கியப் பங்காற்ற வேண்டும் என்று விரும்புகிறோம். இருப்பினும் ஒன்றை நாங்கள் தெளிவுபடுத்த விரும்புகிறோம். சவுதி அரேபியா எப்போதும் எங்கள் நண்பன்தான்” என்று இம்ரான்கான் தெரிவித்தார்.

முன்னதாக, காஷ்மீர் விவகாரம் தொடர்பாகக் குரல் எழுப்பத் தவறும் ஒருங்கிணைக்கப்பட்ட இஸ்லாமிய அமைப்புகளை பாகிஸ்தான் வெளியுறவுத்துறை அமைச்சர் குரேஷி விமர்சித்திருந்தார்.

காஷ்மீர் விவகாரம் குறித்து விவாதிக்க இஸ்லாமிய நாடுகளின் வெளியுறவு அமைச்சர்களின் கூட்டத்தை அவசரமாகக் கூட்டுமாறு சவுதி அரேபியாவுக்கு பாகிஸ்தான் பிரதமர் இம்ரான்கான் கோரிக்கை விடுத்தார். இந்தக் கோரிக்கையை சில மாதங்களுக்கு முன்னர் சவுதி அரேபியா நிராகரித்துள்ளது.

இஸ்லாமிய அமைப்புகளின் கூட்டத்தைக் கூட்டி காஷ்மீர் பிரச்சினையை விவாதிக்க வேண்டும் என்ற இம்ரான் கானின் கோரிக்கைக்கு 57 நாடுகள் கொண்ட இஸ்லாமிய நாடுகளின் கூட்டமைப்பு செவி சாய்க்கவில்லை. இதனால் பாகிஸ்தானுக்கு சர்வதேச அளவில் ஆதரவு கிடைப்பதில் பெரும் பின்னடைவு ஏற்பட்டது குறிப்பிடத்தக்கது.

இஸ்லாம் மாணவர்களின் பாடத்திட்டங்களிலிருந்து தீவிரவாத மற்றும் வஹாபி போதனைகளை அகற்றுவதற்கான யோசனை !

இஸ்லாம் பாடப் புத்தகத்தின் பாடத்திட்டங்களிலிருந்து தீவிரவாத மற்றும் வஹாபி போதனைகளை அகற்றுவதற்கான யோசனையொன்றை விரைவில் கல்வி அமைச்சிக்கு முன்வைக்கவுள்ளதாக முஸ்லிம் விவகார திணைக்களத்தின் பணிப்பாளர் தெரிவித்துள்ளார்.

உயிர்த்த ஞாயிறு தாக்குதல் தொடர்பில் விசாரணை செய்யும் ஜனாதிபதி ஆணைக்குழுவில் சாட்சி வழங்கிய அவர், முஸ்லிம் விவகார திணைக்களம் கடந்த காலத்தில் தீவிர அரசியல்மயமாக்கலில் சிக்கியதாக தெரிவித்தார்.