01

01

கொரோனா காரணமாக பூட்டப்பட்டிருந்த இங்லாந்து கல்வி நிலையங்கள் இன்று திறப்பு ! – பாடசாலைகளின் நிலையை நேரில் சென்று பார்வையிட்டார் பிரதமர்!

மாணவர்கள், ஆசிரியர்கள் இதற்குரிய கட்டுப்பாடுகளுடன் வகுப்புகளுக்கு வரவேண்டும். நேரடி தொடர்பு இல்லாமல் சமூக இடைவெளியைக் கடைப்பிடிப்பது அவசியம் என்று பிரிட்டன் கல்வித்துறை அறிவுறுத்தியுள்ளது.

அதே போல் முகக்கவசங்களும் அவசியம். புதிய பள்ளி ஆண்டில் பலருக்கு இது கல்வியாண்டின் முதல்நாள், முழுநேர கல்வி அனைவருக்கும் திறக்கப்படுவதையடுத்து அங்கு மாணவர்கள் உற்சாகமடைந்துள்ளனர்.

இது தொடர்பாக பிரிட்டன் கல்விச் செயலர் கேவின் வில்லியம்சன் கூறும்போது, கடந்த சில மாதங்கள் மாணவர்கள் எத்தகைய சவால்களை சந்தித்து இருப்பார்கள் என்பதை நான் குறைத்து மதிப்பிட விரும்பவில்லை, எனவே பள்ளிகள் திறக்கப்படுவது அவர்களுக்கு எவ்வளவு முக்கியத்துவம் வாய்ந்தது என்பது எனக்குத் தெரியும். கல்விக்காக மட்டுமல்ல, அவர்களின் வளர்ச்சி, நல்லுணர்வு ஆகியவற்றுக்கும் பள்ளிகள் திறப்பு அவசியம்.

ஆனாலும் ஆசிரியர்களுக்கும் மாணவர்களுக்கும் எதுவும் சுலபமல்ல. ஆனால் பெற்றோர் ஆதரவு இல்லாமல் நாங்கள் எதுவும் செய்ய முடியாது, எனவே அவர்களுக்கு நன்றி தெரிவிக்கிறேன்.

நாட்டில் உள்ள தலைமை மருத்துவ அதிகாரிகளை ஆலோசித்ததன் பேரில் கோவிட்-19 வைரஸ் குழந்தைகளைப் பாதிப்பது மிகவும் குறைவே என்றனர், மேலும் இளம் மாணவர்கள் பள்ளிக்கு வராமல் இருந்தால் அவர்களது நல்லுணர்வு பாதிக்கப்படும் என்று அவர்கள் ஆலோசனை வழங்கினர், என்றார் கேவின் வில்லியம்சன்.

பிரிட்டிஷ் மெடிக்கல் ஜர்னல் ஆய்வின்படியும் கரோனாவினால் குழந்தைகளுக்கு தீவிர நோய் ஏற்படும் வாய்ப்பு மிகமிகக் குறைவு என்று தெரிவித்துள்ளது.

பிரதமர் போரிஸ் ஜான்சன் முதலில் லெய்சஸ்டர்ஷயர் பள்ளிகளுக்கு சென்று நோய்ப்பரவல் தடுப்பு நடைமுறைகளைப் பார்த்து உறுதி செய்தார். கல்வி அமைச்சர் உட்பட அமைச்சர்களும் பள்ளிகளுக்கு வருகை தந்து கோவிட் 19 தடுப்பு நடவடிக்கைகள், மருத்துவ வசதிகள் ஆகியவற்றை உறுதி செய்த பின்னரே பள்ளிகள், கல்லூரிகள் திறப்புக்கு ஒப்புக்கொள்ளப்பட்டது.

40% பள்ளிகள் இன்று திறக்கப்படுகின்றன. ஸ்காட்லாந்து, வேல்ஸ், நாதர்ன் அயர்லாந்து ஆகியவை வேறுபட்ட தேதிகளில் திறக்கப்படுகின்றன. இங்கு சில பள்ளிகள் ஏற்கெனவே திறக்கப்பட்டுள்ளன.

மாணவர்கள் பள்ளிகளுக்கு நடந்தோ, சைக்கிள் மூலமோ அல்லது இருசக்கர மோட்டார் வாகனம் மூலம் வர வேண்டும். பொதுப் போக்குவரத்தைப் பயன்படுத்த வேண்டாம் என்று அறிவுறுத்தப்பட்டுள்ளனர். வீடுகளிலிருந்து பள்ளிகளுக்கு போக்குவரத்துக்காக 40 மில்லியன் பவுண்டுகளை கூடுதலாக பிரிட்டன் அரசு ஒதுக்கியுள்ளது.

இந்தியாவின் மூத்த அரசியல்வாதியும் முன்னாள் குடியரசு ஜனாதிபதியுமான பிரணாப்முகர்ஜி நேற்று காலமானார்!

இந்தியாவின் முன்னாள் ஜனாதிபதியும், இந்திய அரசியலின் பிரபல தலைவர்களில் ஒருவருமான, பிரணாப் முகர்ஜி நேற்று (31.08.2020)காலமானார்.

1935ஆம் ஆண்டு டிசம்பர் 11ஆம் திகதி பிறந்த அவர், மரணிக்கும்போது 84 வயதாகும்.

இந்த தகவலை அவரது மகன் அபிஜித் முகர்ஜி தனது உத்தியோகபூர்வ ட்விற்றர் கணக்கில் அறிவித்துள்ளார்.

“என் தந்தை பிரணாப் முகர்ஜி மரணித்துவிட்டார். ஆர்.ஆர் மருத்துவமனையின் டாக்டர்களின் சிறந்த முயற்சிகள் மற்றும் இந்தியா முழுவதும் உள்ளவர்களிடமிருந்து பிரார்த்தனைகள், துவாக்கள், வேண்டுதல்கள் ஆகியவற்றையும் தாண்டி அவர் காலமாகிவிட்டார் என்பதை கனத்த இதயத்துடன், உங்களுக்குத் தெரிவித்துக் கொள்கிறேன்”

சிரேஷ்ட அரசியல்வாதியான பிரணாப் முகர்ஜி, அண்மையில் சிகிச்சைக்காக இராணுவ மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டபோது, அவருக்கு கொரோனா வைரஸ் தொற்று இருப்பது கண்டறியப்பட்டது.

இந்நிலையில் அவரது மூளையில் இரத்தம் உறைந்த கட்டியை நீக்கும் அறுவை சிகிச்சையொன்றும் மேற்கொள்ளப்பட்டிருந்தது.

அதனைத் தொடர்ந்து பிரணாப் முகர்ஜியின் உடல்நிலை மோசமடைந்து, செயற்கை சுவாசத்தின் ஆதாரத்துடன் பல நாட்கள் சிகிச்சை பெற்று வந்தார்.

இந்நிலையில், நேற்று அவரது நிலை மிக மோசமடைந்துள்ளதாக, அவரது மகன் அபித் முகர்ஜி தனது ட்விற்றர் கணக்கில் பிற்பகல் 2.00 மணியளவில் ட்விற்றர் பதிவொன்றை இட்டிருந்தார் என்பது குறிப்பிடத்தக்கது.

பிரணாப் முகர்ஜியின் அரசியல் வாழ்க்கை ஐந்து தசாப்தங்களைக் கடந்து வந்ததாகும். அதில் அவர் இந்திய ஜனாதிபதியாக தெரிவானது அவர் கண்ட உச்ச பதவியாகும். அவர் 2012 முதல் 2017 வரை ஜனாதிபதி பதவியில் இருந்தார். ஆயினும் அவர் இந்தியாவின் ஜனாதிபதி எனும் நிலையை அடைவதற்கு முன்பிருந்தே, இந்திய அரசாங்கத்தின் முதுகெலும்பாக திகழ்ந்தார்.

அவர் 2009 – 2012 காலப்பகுதியில் இந்தியாவின் நிதி அமைச்சராகவும், 2004 – 2006 காலப்பகுதியில் பாதுகாப்பு அமைச்சராகவும், 2006 – 2009 காலப்பகுதியில் வெளிவிவகார அமைச்சராகவும் பணியாற்றியுள்ளார்.

பிரணாப் முகர்ஜி ஒரு தீவிர காங்கிரஸ்காரராக இருந்தபோதிலும், பாரதிய ஜனதா கட்சி தலைமையிலான தேசிய ஜனநாயக முன்னணியின் (NDA) ஆட்சியில் ஜனாதிபதியாக தனது கடமையைத் தொடர்ந்தார்.

பிரதமர் நரேந்திர மோடி பிரதமர் பதவியில் தனது முதலாவது பதவிக்காலத்தில், ஜனாதிபதி பிரணாப் முகர்ஜியிடமிருந்து தான் பெற்றுக்கொண்ட வழிகாட்டல்களுக்கு பலமுறை நன்றி தெரிவித்திருந்தார் என்பது குறிப்பிடத்தக்கது.

பிரணாப் முகர்ஜி, 2008இல் பத்ம விபூஷண் மற்றும் 2019இல் பாரத ரத்னா ஆகிய விருதுகள் வழங்கி கௌரவிக்கப்பட்டார் என்பது குறிப்பிடத்தக்கது.

ஜனாதிபதியின் பொது மன்னிப்பில் சிறுகுற்றங்கள் செய்த 444 சிறைக்கைதிகள் விடுதலை!

சிறு தவறுகள் தொடர்பில் சிறைப்படுத்துப்பட்டுள்ள சிறைக்கைதிகள் சிலரை ஜனாதிபதி பொது மன்னிப்பின் கீழ் விடுதலை செய்ய அரசாங்கம் தீர்மானித்துள்ளது.

அதனடிப்படையில் 444 சிறைக்கைதிகள் பொது மன்னிப்பின் கீழ் விடுதலை செய்யப்படவுள்ளதாக சிறசை்சாலைகள் ஆணையாளர் துஷார உப்புல் தெனிய தெரிவித்துள்ளார்.

29 சிறைச்சாலைகளை சேர்ந்த் 18 பெண்கள் உட்பட 444 கைதிகளே இவ்வாறு விடுதலை செய்யப்படவுள்ளனர்.

அவர்களுள் அதிகமானவர்களான 83 பேர் வெலிகட சிறைச்சாலையை சேர்ந்தவர்கள் என தெரிவிக்கப்படுகின்றது.

தண்டப்பணம் செலுத்த முடியாமல் சிறு தவறுகளுக்காக சிறையில் உள்ளவர்கள் மற்றும் 65 வயதிற்கு மேற்பட்ட சிறு தவறுகளுக்காக சிறையில் உள்ளவர்கள் இவ்வாறு விடுதலை செய்யப்படவுள்ளதாக தெரிவிக்கப்படுகின்றது.

கொலை, கொள்ளை, கற்பழிப்பு மற்றும் சிறுவர் துஷ்பிரயோகம் போன்ற தவறுகளுடன் தொடர்புடைய எவருக்கும் பொது மன்னிப்பு வழங்கப்படவில்லை எனவும் அவர் மேலும் தெரிவித்துள்ளார்.

இலங்கையின் கல்வி வளர்ச்சிக்கு உதவ சீனா இணக்கம்!

நாட்டின் கல்வி மற்றும் தொழிற் கல்வி அபிவிருத்தி, ஹம்பாந்தோட்டை மாவட்டத்தில் நிர்மாணிக்கப்படவுள்ள கைத்தொழில், மற்றும் டயர் தொழிற்சாலை செயற்றிட்டங்களில் உதவுவதற்கு சீனா இணக்கம் தெரிவித்துள்ளது.

சீனத் தூதுவர் ஹுவெய்க்கும் கல்வி அமைச்சர் பேராசிரியர் ஜீ. எல். பீரிசுக்குமிடையில் இடம்பெற்ற பேச்சுவார்த்தையின் போதே இந்த இணக்கம் எட்டப்பட்டுள்ளது.

மேற்படி பேச்சுவார்த்தையின் போது நாட்டின் கல்வித் துறை மற்றும் தொழிற்கல்வி ஆகியவற்றில் அபிவிருத்தியை மேற்கொள்ளும் வகையில் மேற்கொள்ள வேண்டிய வேலைத் திட்டங்கள் தொடர்பில் முக்கிய கவனம் செலுத்தப்பட்டுள்ளது.

நாட்டின் கல்வி அபிவிருத்தி தொடர்பில் கல்வி அமைச்சு மேற்கொள்ளும் செயற்திட்டங்களை வெற்றிகரமாக முன்னெடுப்பதற்கு மேற்கொள்ள வேண்டிய நீண்ட கால வேலைத் திட்டங்கள் தொடர்பில் சீன அரசாங்கம் எவ்வாறு உதவ முடியும் எனவும் இங்கு கலந்துரையாடப்பட்டுள்ளது.

குறிப்பாக பாடசாலைக் கல்வி, உயர் கல்வி, தொழிற் கல்வி ஆகிய துறைகளை அபிவிருத்தி செய்வதற்கு சீன அரசிடமிருந்து இலங்கை அரசாங்கம் எதிர்பார்க்கும் ஒத்துழைப்பு தொடர்பில் இதன்போது அமைச்சர் ஜி. எல். பீரிஸ் தெளிவுபடுத்தியுள்ளார்.

ஹம்பாந்தோட்டை மாவட்டத்தில் உத்தேச திட்டமான கைத்தொழில் மற்றும் முதலீட்டு வலயங்களில் மருந்து உற்பத்தி மற்றும் டயர் தொழிற்சாலை உள்ளிட்ட அபிவிருத்தி செயற்றிட்டம் தொடர்பிலும் அதற்கான மனித வள விருத்தியை மேம்படுத்துவது தொடர்பிலும் இங்கு கவனம் செலுத்தப்பட்டுள்ளது.

அபிவிருத்தி வேலைத் திட்டங்களை துரிதமாக முன்னெடுத்துச் செல்வதற்காக நிர்மாணத்துறை மற்றும் வளங்கள் துறையின் திறன பிவிருத்தி அவசியம் தொடர்பில் அமைச்சர் இங்கு சுட்டிக்காட்டியுள்ளார்.

அது தொடர்பில் இருவருக்கிடையில் இணக்கம் ஏற்பட்டுள்ள நிலையில், எதிர்வரும் சில மாதங்களில் அது தொடர்பான துரித நடவடிக்கைகளை முன்னெடுக்கவும் இணக்கம் காணப்பட்டுள்ளது.

இரு நாடுகளுக்குமிடையிலான புரிந்துணர்வு மற்றும் ஒத்துழைப்புகளை பலப்படுத்துவது தொடர்பில் செயற்படுவதற்கு தாம் விருப்பமாக உள்ளதாக சீனத் தூதுவர் இதன்போது தெரிவித்துள்ளார். அதன் அடுத்தகட்ட நடவடிக்கையான வீடியோ கலந்துரையாடல் மூலம் மேலும் விடயங்கள் தொடர்பில் பேச்சுவார்த்தை நடத்த தீர்மானிக்கப்பட்டுள்ளது.

இரு நாடுகளுக்குமிடையிலான ஒத்துழைப்புகளை வலுப்படுத்தும் வகையில் இரு தரப்பு அதிகாரிகளுக்கிடையில் இணைப்புகளை ஏற்படுத்துவது தொடர்பிலும் இங்கு இணக்கம் காணப்பட்டுள்ளது.

ஐக்கிய அரபு எமிரேட்ஸின் அபுதாபி மற்றும் டுபாயில் குண்டுவெடிப்பு!

ஐக்கிய அரபு எமிரேட்ஸ் தலைநகர் அபுதாபி மற்றும் அதன் சுற்றுலா மையமான டுபாயில் இரண்டு தனித்தனி வெடிப்பு சம்பவம் நேற்று (31.08.2020) இடம்பெற்றுள்ளது.

இந்த வெடிப்பு சம்பவத்தில் மூன்று பேர் கொல்லப்பட்டனர் மற்றும் பலர் காயமடைந்தனர் என்று பொலிஸார் மற்றும் உள்ளூர் ஊடகங்கள் தெரிவித்தன.

தலைநகரில் நடந்த குண்டுவெடிப்பில் இரண்டு பேர் கொல்லப்பட்டதாக அபுதாபி அரசாங்க ஊடக அலுவலகம் தெரிவித்துள்ளது.

அபுதாபி சம்பவத்தில் பல சிறிய அளவிலான பாதிப்புக்கள் ஏற்பட்டுள்ளதாகவும், கட்டிடம் மற்றும் சுற்றியுள்ள பகுதிகளில் வசிப்பவர்கள் வெளியேற்றப்பட்டதாகவும் பொலிஸார் தெரிவித்தனர்.

இதேவேளை டுபாயில், நேற்று அதிகாலை உணவகத்தில் எரிவாயு சிலிண்டர் வெடித்ததில் ஒருவர் கொல்லப்பட்டதாக உள்ளூர் ஊடகங்கள் செய்தி வெளியிட்டுள்ளன.

டுபாயில் நடந்த குண்டுவெடிப்பில் கட்டிடத்தின் தரை தளம் சேதமடைந்தது என்பதோடு தீ 33 நிமிடங்களுக்குள் கட்டுப்படுத்தப்பட்டது என்றும் தெரிவிக்கப்பட்டுள்ளது.