17

17

”19ஆவது திருத்தச் சட்டத்தினை முற்றாக நீக்கிய 20ஆவது திருத்தச் சட்ட மூலம்  காலத்தின் தேவையாகும்” – அங்கஜன் இராமநாதன்

உத்தேச அரசியலமைப்பு மூலமாகத்தான் தமிழ் மக்களுக்கான தீர்வினை பெற்றுக் கொள்ளலாம் என பாராளுமன்ற  குழுக்களின் பிரதித் தலைவரும் யாழ். மாவட்ட ஒருங்கிணைப்பு குழுவின் இணைத் தலைவருமான அங்கஜன் இராமநாதன் தெரிவித்துள்ளார்.

19ஆவது திருத்தச் சட்டத்தினை முற்றாக நீக்கிய 20ஆவது திருத்தச் சட்ட மூலம்  காலத்தின் தேவையாகும். இதனுடாக நிறைவான ஒரு அரசியமைப்பு அபிலாஷைகளை எதிர்வரும் காலங்களில் கண்டுகொள்ள முடியும் எனவும் அவர் தெரிவித்துள்ளார்.

யாழ். மாவட்ட செயலகத்தின், மாவட்ட ஒருங்கிணைப்பு குழுவின் இணைத் தலைமை அலுவகத்தில் அங்கஜன் இராமநாதன் எம்.பி தலைமையில் இக்கூட்டம் நடைபெற்றது.

அங்கு கருத்து தெரிவிக்கும் போதே மேற் கண்டவாறு தெரிவித்தார். தொடர்ந்து பேசிய அவர்,

வடக்கு கிழக்கு மாகாணங்களில் தமிழ் மக்களின் இனப் பிரச்சினை தீர்க்கப்பட வேண்டியது மிக அவசியம். அதற்காக நீண்ட காலம் போராடிக் கொண்டு தான் இருந்து வருகின்றோம்.

அதற்கான உத்தேச அரசியமைப்பு யாப்பு மூலமாக தான் தமிழ் மக்களுக்கான தீர்வினை பெற்றுக் கொள்ளலாம்.

விக்னேஸ்வரன் மீதான வழக்கை மீளப்பெற்றார் டெனீஸ்வரன் !

இது ஒரு துன்பியல் சம்பவம். இரு தரப்பாருக்குமிடையே புரிந்துணர்வு இல்லாமையால் இதுவரையில் இவ்விடயம் தாமதிக்கப்பட்டு வந்துள்ளது என வடமாகாண முன்னாள் முதலமைச்சரும் பாராளுமன்ற உறுப்பினருமான சி.வி.விக்னேஸ்வரன் தெரிவித்துள்ளார். டெனிஸ்வரன் தொடர்ந்த வழக்கு நேற்று முடிவுகள் வந்த பின்னர் நீதிமன்ற வளாகத்தில் ஊடகவியலாளர்களுக்கு கருத்து  தெரிவிக்கும் போதே அவர் இவ்வாறு கூறினார்.

மாகாண சபையில் தொடங்கிய டெனீஸ்வரனுடனான இந்தப் பிரச்சினை நீதிமன்றம் சென்றது குறித்து என்ன சொல்கின்றீர்கள்?” என ஊடகவியலாளர் ஒருவர் எழுப்பிய கேள்விக்குப் பதிலளித்த அவர் மேலும் தெரிவித்ததாவது:

இது ஒரு துன்பியல் சம்பவம். அதாவது, இருதரப்பாருக்கு இடையே புரிந்துணர்வு இல்லாமையால் இதுவரையில் இவ்விடயம் தாமதிக்கப்பட்டுவந்துள்ளது.

அண்மையில் நான் கதிர்காமத்தில் இருந்த போது, டெனீஸ்வரன் தொலைபேசியூடாக என்னை அழைத்தார். அப்போது நான் அவருடன் பேசியபோது ஒரு விடயத்தை அறிந்துகொண்டேன். தன்னை குற்றவாளியாக நினைத்து அமைச்சர் குழாமிலிருந்து நான் அவரை வெளியேற்றியதாக அவர் நினைத்திருந்தார்.

ஆனால், அவரை வெளியேற்றியமைக்கான காரணம் அவர் சம்பந்தமாக முறைப்பாடு செய்த ஒருவர் அமைச்சரவையில் அப்போது இருந்தார்.

குற்றம் சுமத்தியவரையும், குற்றம் சுமத்தப்பட்டவரையும் அமைச்சரவையில் வைத்திருத்தல் உசிதம் இல்லை என்ற காரணத்தினால்தான் நான் அவரை பதவியிலிருந்து நீக்கினேன் என்ற விடயத்தை அவருக்கு அறியப்படுத்தினேன்.

அதன் பின்னர் பல சம்பவங்கள் நடைபெற்று  நேற்று வழக்கை அவர் வாபஸ் பெற்றுக்கொண்டார்.

அதற்கு ஈடாக நாங்கள் உச்ச நீதிமன்ற மேன்முறையீட்டு மனுவை கைவாங்குவதாக மன்றில் தெரிவித்தோம்.

இதன் அடிப்படையில் நீதிமன்றம் மன்றை அவமதித்தமை சம்பந்தமான வழக்கை கைவாங்க அனுமதியளித்தது“ எனக் குறிப்பிட்டுள்ளார்.

”திலீபனை நினைவுகூர முற்படுபவர்கள் கைதுசெய்யப்படுவார்கள். அவர்கள் யாராக இருந்தாலும் பாகுபாடின்றி கைதுசெய்யப்படுவார்கள்” – மேஜர் ஜெனரல் கமால் குணரத்ன

“இலங்கையில் பயங்கரவாதிகளை நினைவுகூர ஒருபோதும் அனுமதியில்லை. திலீபனும் பயங்கரவாதியே. எனவே, அவரை நினைவுகூருவோர் உடன் கைதுசெய்யப்படுவார்கள்.” என  பாதுகாப்பு அமைச்சின் செயலாளர் மேஜர் ஜெனரல் கமால் குணரத்ன தெரிவித்தார்.

வடக்கு, கிழக்கில் தியாக தீபம் திலீபனின் நினைவேந்தலுக்கு நீதிமன்றங்கள் விடுத்துள்ள தடையுத்தரவு தொடர்பிலும், தடையுத்தரவை மீறித் திலீபனை அஞ்சலித்த வடக்கு மாகாண சபையின் முன்னாள் உறுப்பினர் எம்.கே.சிவாஜிலிங்கம் பொலிஸாரினால் கைதுசெய்யப்பட்டமை குறித்தும் கருத்துத் தெரிவிக்கும்போதே அவர் மேற்கண்டவாறு கூறினார்.

அவர் மேலும் தெரிவித்ததாவது:-

“திலீபன் சாதாரண பொதுமகன் அல்லர். அவர் தமிழீழ விடுதலைப்புலிகளின் அமைப்பின் முன்னாள் தளபதிகளில் ஒருவர். இராணுவத்தினருக்கு எதிராகப் போரிட்டவர். போரில் பலத்த காயமடைந்து பல நோய்களினால் பாதிக்கப்பட்டிருந்த அவர் பிரபாகரனின் வலுக்கட்டாயத்தின் பேரில் 12 நாட்கள்  உண்ணாவிரதமிருந்து இறுதியில் உயிரிழந்தார். திலீபன் ஒரு பயங்கரவாதி. எனவே, இந்த ஆட்சியில் பயங்கரவாதிகளை நினைவுகூர ஒருபோதும் அனுமதியில்லை.

வடக்கு, கிழக்கில் திலீபனின் நினைவேந்தல் நிகழ்வுக்கு நீதிமன்றங்கள் வழங்கிய தடையுத்தரவுகளை நாம் வரவேற்கின்றோம். அந்த உத்தரவுகளை நடைமுறைப்படுத்த வேண்டியது பொலிஸாரின் பொறுப்பு.

இதை மீறி திலீபனை நினைவுகூர முற்படுபவர்கள் கைதுசெய்யப்படுவார்கள். அவர்கள் யாராக இருந்தாலும் பாகுபாடின்றி கைதுசெய்யப்படுவார்கள்.

நீதிமன்றங்களின் உத்தரவுகளை எவரும் மீற முடியாது. அதை எவரும் சவாலுக்குட்படுத்தி கருத்துக்களை வெளியிடவும் முடியாது” – என்றார்.

”அதிகளவில் கவலை கொள்ளத்தக்கதாகவே ராஜபக்ஷ அரசாங்கத்தின் கீழ் மனித உரிமைகளின் நிலை” – யஸ்மின் சூக்கா

இலங்கையின் அண்மைய நகர்வுகள் மிகவும் எதிர்மறையான போக்கை வெளிப்படுத்தி நிற்பதாக ஐக்கிய நாடுகள் மனித உரிமைகள் ஆணையாளர் மிச்சேல் பல்லெட் கருத்து வெளியிட்டிருந்தார். இந்நிலையில், சர்வதேச சமூகம்மிச்சேல் பல்லெட் கருத்து குறித்து விசேட கவனம் செலுத்த வேண்டும் என உண்மைக்கும் நீதிக்குமான சர்வதேச செயற்திட்டத்தின் நிறைவேற்றுப் பணிப்பாளர் யஸ்மின் சூக்கா வலியுறுத்தியுள்ளார்.

இதுதொடர்பாக அவர் வெளியிட்டுள்ள அறிக்கையில், “இலங்கையின் அண்மைய நகர்வுகள் மிகவும் எதிர்மறையான போக்கை வெளிப்படுத்தி நிற்பதாக ஐக்கிய நாடுகள் மனித உரிமைகள் பேரவையின் ஆணையாளர் மிச்சேல் பச்லெட் அவரது அறிக்கையில் குறிப்பிட்டிருக்கிறார்.

எனினும், அவருடைய அந்தக் குறுகிய அறிக்கையில் அவரால் விளக்கப்பட்டிருந்ததை விடவும் அதிகளவில் கவலைகொள்ளத் தக்கதாகவே ராஜபக்ஷ அரசாங்கத்தின் கீழ் மனித உரிமைகளின் நிலை காணப்படுகின்றது.

இலங்கையில் மனித உரிமைகள் நிலவரம் தொடர்பான கவனம் புதுப்பிக்கப்பட வேண்டும் என்று ஐ.நா. மனித உரிமைகள் ஆணையாளர் சுட்டிக்காட்டியுள்ளமை குறித்து சர்வதேச சமூகம் விசேட கவனம் செலுத்தவேண்டும்.

போர்க் குற்றங்களுடன் தொடர்புபட்டிருப்பதாகக் குற்றஞ்சாட்டப்பட்டிருக்கும் இராணுவ அதிகாரிகள் அரச நிர்வாகத்தின் முக்கிய பதவிகளுக்கு நியமிக்கப்பட்டிருப்பது குறித்தும் மிச்சேல் பச்லெட் தனது விசனத்தை வெளிப்படுத்தியிருக்கிறார்.

இலங்கை தொடர்பான ஐக்கிய நாடுகள் மனித உரிமைகள் ஆணையாளர் அலுவலகத்தின் விசாரணை அறிக்கையின் பிரகாரம், 2009 போரில் முக்கிய பங்கை வகித்ததாக சுட்டிக்காட்டப்பட்டிருக்கும் தற்போதைய பாதுகாப்புச்செயலாளர் மேஜர் ஜெனர் கமால் குணரத்னவும் மேற்படி முக்கிய பதவிகளில் அமர்த்தப்பட்டவர்களில் அடங்குகிறார்.

அத்துடன்,இராணுவத் தளபதியாக நியமிக்கப்பட்டிருக்கும் லெப்டினன் ஜெனரல் சவேந்திர சில்வா, வெளிவிவகார அமைச்சு, சுகாதார அமைச்சு, விவசாயத்துறை அமைச்சு ஆகியவற்றின் செயலாளர்களாக நியமிக்கப்பட்டிருக்கும் முன்னாள் இராணுவ அதிகாரிகள் தொடர்பாகவும் உண்மைக்கும் நீதிக்குமான சர்வதேச செயற்திட்ட சுட்டிக்காட்டியிருக்கிறது.

அத்தோடு ஜனாதிபதி பிரதிநிதித்துவப்படுத்தும் கட்சியைச் சேர்ந்த நாடாளுமன்ற உறுப்பினர் ஒருவர் மரணதண்டனைக் கைதி எனும் அதேவேளை, அவர் நாடாளுமன்ற அமர்வில் கலந்துகொள்வதற்கு அனுமதிக்கப்பட்டமை வியப்பிற்குரியதாகும்.

மேலும், தற்போது அனைத்து அதிகாரங்களும் தனியொரு குடும்பத்தின் கைகளுக்குக் கொண்டுவரப்பட்டிருப்பதும் வெகுவாக அவதானம் செலுத்தப்பட வேண்டியதொன்றாகும்” என்று குறிப்பிடப்பட்டுள்ளது.

”விளையாட்டு என்பது இளைஞர் சமூகத்தின் மொழியாகும்” – ஜனாதிபதி கோட்டாபாய

ஆரோக்கியமான, ஒழுக்கநெறி கொண்ட மற்றும் சக்திமிக்க சமூகமொன்றை கட்டியெழுப்புவதற்காக விளையாட்டு கலாசாரம் ஒன்றை உருவாக்குவது காலத்தின் தேவையாகுமென ஜனாதிபதி கோட்டாபய ராஜபக்ஷ தெரிவித்துள்ளார்.

விளையாட்டு என்பது இளைஞர் சமூகத்தின் மொழியாகும். கல்விக்கு இணையாக பிள்ளைகளை விளையாட்டில் ஈடுபடுத்துவதன் மூலம் பூரணத்துவமான மனிதனை சமூகத்திற்கு வழங்க முடியுமென்று ஜனாதிபதி சுட்டிக்காட்டியுள்ளார்.

கிராமிய மற்றும் பாடசாலை விளையாட்டு உட்கட்டமைப்பு வசதிகள் மேம்பாடு இராஜாங்க அமைச்சின் எதிர்கால திட்டங்கள் தொடர்பாக நேற்று (16.09.2020) பகல் ஜனாதிபதி அலுவலகத்தில் இடம்பெற்ற கலந்துரையாடலிலேயே ஜனாதிபதி இவ்வாறு குறிப்பிட்டார்.

நாடு பூராகவும் உள்ள பாடசாலைகளில் விளையாட்டுத்துறையில் திறமைகளை வெளிக்காட்டும் பிள்ளைகளை சிறுவயது முதல் தெரிவு செய்து அவர்களுக்கு அவசியமான உரிய போசாக்கு, தேசிய மற்றும் சர்வதேச பயிற்சிகள் உள்ளிட்ட வசதிகளை வழங்கக்கூடிய நிகழ்ச்சித்திட்டங்களின் அவசியம் பற்றியும் ஜனாதிபதி சுட்டிக்காட்டினார்.

கிராமிய பாடசாலைகளுக்கு விளையாட்டு மைதானங்களை பெற்றுத் தருமாறு கேட்டாலும் அவற்றை அமைத்துக் கொடுத்ததற்குப் பின்னர் ஒழுங்காக பராமரிக்காத நிலை பல்வேறு இடங்களில் காணப்படுவதாக ஜனாதிபதி குறிப்பிட்டார். புல் வெட்டுதல் போன்ற மிக இலகுவாக செய்யக்கூடிய பராமரிப்பு விடயங்களுக்கு பாரிய நிதி தேவையில்லை என்றும் ஜனாதிபதி குறிப்பிட்டார்.

அனைத்து மாவட்டங்களிலும் உள்ள பாடசாலைகளில் விளையாட்டு மைதானங்களை பராமரிப்பதற்காக தனியானதொரு பிரிவொன்றை ஸ்தாபிப்பதற்கு நடவடிக்கை எடுக்குமாறு ஜனாதிபதி அதிகாரிகளுக்கு ஆலோசனை வழங்கினார்.

கல்வி அமைச்ர் பேராசிரியர் ஜீ.எல்.பீரிஸ், அமைச்சர் நாமல் ராஜபக்ஷ, இராஜாங்க அமைச்சர் தேனுக்க விதானகமகே, பொருளாதார புத்தெழுச்சி தொடர்பான ஜனாதிபதி செயலணியின் தலைவர் பெசில் ராஜபக்ஷ, ஜனாதிபதியின் செயலாளர் பீ.பி.ஜயசுந்தர ஆகியோருடன் துறைசார் அமைச்சுக்களின் அதிகாரிகள் மற்றும் விளையாட்டு சங்கங்களின் பிரதிநிதிகள், முன்னணி விளையாட்டு வீரர்களும் இக்கலந்துரையாடலில் கலந்துகொண்டனர்.