October

October

எதிர்ப்புகளுக்கு மத்தியிலும் மூன்றில் இரண்டு அறுதிப் பெரும்பான்மையுடன் 20ஆவது திருத்தச்சட்டம் நிறைவேற்றம் – தொடரும் ராஜபக்சக்களின் வெற்றி !

புதிய அரசாங்கம் பதவியேற்றது முதல் தொடங்கி 20ஆவது திருத்தம் தொடர்பான வாதப்பிரதிவாதங்கள் முன்வைக்கப்பட்டதுடன் எதிர்ப்புக்களுக்கு நடுவில் ராஜபக்ஸக்களினுடைய அரசு இதில் வெற்றி பெறுமா? என்பதே பல ஊடகங்களினுடைய கேள்வியாக காணப்பட்டது.

இந்நியைில் 20ஆவது திருத்தச் சட்டம் நாடாளுமன்றத்தில் அறுதிப் பெரும்பான்மையுடன் நிறைவேற்றப்பட்டுள்ளது.

அரசியலமைப்பின் 20ஆவது திருத்தத்தின் இரண்டாவது வாசிப்பு பாராளுமன்றத்தில் நிறைவேற்றப்பட்டது. இந்நிலையில் நடத்தப்பட்ட வாக்கெடுப்பில் 156ற்கும் மேற்பட்ட உறுப்பினர்கள் ஆதரவாக வாக்களித்துள்ளனர். எதிராக 65 உறுப்பினர்கள் வாக்களித்தனர். பல எதிர்க்கட்சி உறுப்பினர்கள் 20ஆவது திருத்தத்தை ஆதரித்து வாக்களித்துள்ளனர்.

பங்காளிக் கட்சிகளின் ஆசனங்களோடு பெரும்பான்மையாக ஆட்சியமைத்த ராஜபக்ச தரப்பினர், 20ஆவது திருத்தச் சட்டத்தை சர்வஜன வாக்கெடுப்பின்றி நிறைவேற்றுவோம் என்று ஆரம்பம் முதலே குறிப்பிட்டு வந்த நிலையில், நேற்றைய தினமும் இன்றைய தினமும் 20ஆவது திருத்தச் சட்டம் மீதான விவாதங்கள் இடம்பெற்ற நிலையில் சற்று முன்னர் அதன் மீதான வாக்கெடுப்பு நடத்தப்பட்டது.

இதன்போது பெரும்பான்மை வாக்குகளால் 20ஆவது திருத்தச் சட்டம் நிறைவேற்றப்பட்டது.

முன்னதாக ஆளும் தரப்பிலிருந்த பங்காளிக் கட்சிகள் 20ஆவது திருத்தச் சட்டத்தில் உள்ள இரட்டைக் குடியுரிமை தொடர்பில் அதிருப்தி வெளியிட்டிருந்தனர். எனினும் நேற்றைய தினம் ஜனாதிபதி கோட்டாபய ராஜபக்சவுடனான சந்திப்பின் பின்னர் 20வதுக்கு ஆதரவாக வாக்களிப்பது என்று முடிவெடுத்ததாக இன்று அறிவித்திருந்தனர் என்பது குறிப்பிடத்தக்கது.

20ஆவது திருத்தச் சட்டமானது தனி நபர் ஒருவரிடம் அதிகாரம் குவிவதாகவும், சர்வாதிகாரப் போக்குக்கு இது வழிவகுக்கும் என்றும், ஜனநாயகத்திற்கும், மனிதவுரிமைகளுக்கும் அடிக்கப்பட்ட சாவுமணி இது என்று ஐக்கியமக்கள் சக்தி, தமிழ்தேசியகூட்டமைப்பு உள்ளிட்ட பல கட்சிகளும் பாராளுமன்றத்தில் விமர்சித்திருந்தமை குறிப்பிடத்தக்கது.

“18ஆவது திருத்தச்சட்டத்தை போன்றே 20ஆவது திருத்தச்சட்டத்திலும் ஜனநாயம் குழிதோண்டி புதைக்கப்பட்டுள்ளது” – பாராளுமன்றில் சரத் பொன்சேகா!

“18ஆவது திருத்தச்சட்டத்தை போன்றே 20ஆவது திருத்தச்சட்டத்திலும் ஜனநாயம் குழிதோண்டி புதைக்கப்பட்டுள்ளது” என ஐக்கிய மக்கள் சக்தியின் பாராளுமன்ற உறுப்பினர் சரத் பொன்சேகா சபையில் தெரிவித்தார்.

பாராளுமன்றத்தில் இன்று (22.10.2020) நடைபெற்ற அரசியலமைப்பின் 20ஆவது திருத்தச்சட்டத்தின் இரண்டாம் நாள் விவாதத்தில் கலந்துகொண்டு உரையாற்றும் போதே அவர் இவ்வாறு கூறினார்.

அவர் மேலும் கருத்து வெளியிடுகையில்,

நிறைவேற்று அதிகாரத்தின் மூலம் ஏற்படும் பாதகத்தன்மை பற்றி கடந்த காலத்தில் அனைத்து தேர்தல்களிலும் வேட்பாளர்கள் பேசினர். அதனை அடிப்படையாக கொண்டு தான் மக்கள் ஆணையை பெற்றுக்கொண்டார்கள்.

19ஆவது திருத்தத்தில் சர்வாதிகார போக்குடைய ஜனாதிபதி முறையை ஓரளவு குறைத்தோம். மீண்டும் அதற்கு ஆபத்து ஏற்பட்டுள்ளது. ஒரு தனிநபரிடம் அதிகாரங்களை குவிக்காது பாராளுமன்றத்தில் மக்கள் பிரதிநிதிகளிடம் அதிகாரத்தை கொடுக்கும் சூழல் உருவாக்கப்பட்டதை மக்கள் ஏற்றுக்கொண்டிருந்தார்.

தேர்தல்களில் எந்தக் கட்சிக்கு வாக்களித்தாலும் ஜனநாயகம் வலுப்படுத்தப்பட வேண்டும் என்பதில் மக்கள் உறுதியாகவுள்ளனர். 18ஆவது திருத்தச்சட்டத்தில் ஜனநாயம் குழிதோண்டி புதைக்கப்பட்டது. தற்போது மீண்டும் 20ஆவது திருத்தச்சட்டத்தில் அதுதான் நடைபெறுகிறது. தனிப்பட்ட சுயலாபம் மனசாட்சியை தாண்டியுள்ளதால் 20ஆவது திருத்தம் கொண்டுவரப்படுகிறது.

பாராளுமன்றம் சர்வாதிகார ஜனாதிபதி முன்னிலையில் மண்டியிட்டிருக்கிறது. பிரதமரை நினைத்தவுடன் நீக்கும் அதிகாரம் ஜனாதிபதிக்கு கிடைக்கிறது. எந்தவொரு அமைச்சினையும் எச்சந்தர்ப்பத்திலும் பறிக்கலாம். இவ்வாறு ஜனாதிபதிக்கு அதிகாரங்கள் கிடைத்தால் அமைச்சர்களுக்கு அதிகாரம் இல்லாது போய்விடும். ஜனாதிபதியால் நினைத்தப்படி அமைச்சர்களை ஆட்டிவைக்கவும் முடியும்.

பாராளுமன்றத்தை கலைப்பதற்கான அதிகாரமும் ஜனாதிபதிக்கு கிடைக்கிறது. ஐந்து வருடத்திற்கு மக்கள் வழங்கு ஆணையை அடிபணிய வைக்கும் செயற்பாடே இது. கடும் அழுத்தங்களால் 20இல் சில திருத்தங்கள் மேற்கொள்ளப்பட்டுள்ளன. ஆரம்பத்தில் இருந்தவாறு இது நிறைவேற்றப்பட்டிருந்தால் மக்களின் அடிப்படை உரிமைக்கூட கேள்விக்குறியாகியிருக்கும் என்றார்.

“முஸ்லிம்களுக்கு எதிரான வாதம் அதிகரித்து வருகிறது. முஸ்லிம்களை ஒதுக்குவது தேசியத்தை கட்டியெழுப்ப பாதிப்பாகும்” – பாராளுமன்றில் ரவூப் ஹக்கீம் !

“முஸ்லிம்களுக்கு எதிரான வாதம் அதிகரித்து வருகிறது. வெறுப்புணர்வு குழுக்கள் ஒன்றிணைந்து முஸ்லிம்களை இலக்கு வைக்கின்றனர்” என முஸ்லிம் காங்கிரஸ் தலைவர் ரவூப் ஹக்கீம் தெரிவித்தார்.

பாராளுமன்றத்தில் இன்று (22.10.2020) இடம்பெற்ற அரசியலமைப்பின் 20ஆவது திருத்தம் மீதான இரண்டாம் நாள் விவாதத்தில் கலந்துகொண்டு உரையாற்றுகையிலேயே இவ்வாறு குறிப்பிட்டார்.

அவர் அங்கு தொடர்ந்து தெரிவிக்கையில்,

அரசியலமைப்பு என்பது ஒரு நாட்டின் நிலையானதொன்றாகும். நீதித்துறையின்  சுயாதீனம் இந்த திருத்தம் மூலம் பாதிக்கப்பட்டுள்ளதை ஓய்வு பெற்ற சட்டத்தரணிகள் சங்கம் நீதி அமைச்சருக்கு எழுத்து மூலம் தெரிவித்திருக்கின்றனர். அதுதொடர்பில் நீதி அமைச்சரினால் எந்த பதிலும் இல்லை.

நாம் வரலாற்றில் இருந்து கற்றுக்கொள்ள வேண்டும்.முழு அதிகாரங்களையும் தனித்தலைவருக்கு கொடுப்பது பாரதூரமானது. 19ஆம் திருத்தம் பல பரிமாணங்களை கொண்டது.இதனூடாக ஜனாதிபதியின் அதிகாரங்கள் பல நீக்கப்பட்டன.புதிய அரசியலமைப்பிற்கு இது வழிவகுத்தது.என்றாலும் எதிர்பாத்த விடயங்கள் இடம்பெறவில்லை.

19 திருத்தம் இரு அதிகார மையங்களை கொண்டிருந்தது.ஜனாதிபதியும் பிரதமரும் இரு கட்சியை சேர்ந்தவர்களாக இருந்ததால் பொருத்தமின்மை இருந்தது. ஜனாதிபதி ஆணைக்குழுவில் ஒருவரை ஒருவர் குற்றஞ்சாட்டுகின்றனர். அரசியல்,கலாசார பொருத்தமின்மை இருந்தது. இன்று ஜனாதிபதிக்கு அதிக அதிகாரமிருக்கிறது.

18 ஆம் திருத்தம் ஜனாதிபதியின் அதிகாரங்களை அதிகரிக்கவில்லை என்பதை உயர் நீதிமன்ற வழக்கின் போது கூறியிருந்தேன். பெரும்பான்மைவாதம்  ஜனநாயகத்தின் முக்கியங்களை அழித்து வருகிறது. உலக ரீதியில் இதுவே நடந்துள்ளது.பெரும்பான்மைவாதமானது புதுவகையான நியாயமான தீர்வுகளை அழிப்பதாக இருக்கும்.

மேலும் முஸ்லிம்களை ஒதுக்குவது தேசியத்தை கட்டியெழுப்ப பாதிப்பாகும். பெரும்பான்மை இனவாதம் மிகவும் பயங்கரமானது. சிறுபான்மை இனவாதம் அவ்வாறானதல்ல. வியாபாரத்தில் முஸ்லிம்கள் முன்னிலையில் இருந்தாலும் முஸ்லிம்களுக்கு எதிரான வாதம் அதிகரித்து வருகிறது. வெறுப்புணர்வு குழுக்கள் ஒன்றிணைந்து முஸ்லிங்களை இலக்கு வைக்கின்றனர்.

20ஆவது திருத்தத்தில் பல ஏற்பாடுகள் யாப்பிற்கு முரணாக உள்ளது. நீதித் துறை சுயாதீனம் பேணப்பட வேண்டும். அரசியலமைப்பு பேரவை  நாடாளுமன்ற சபையாக மாற்றி இருப்பதுடன் அதன் அதிகாரம் ஜனாதிபதிக்கு வழங்கி இருப்பது மிகவும் பயங்கரமானதாகும்” என்றார்.

“தமிழீழ விடுதலைப் புலிகள் மீதான தடையை பிரித்தானியா தொடர்ந்து பராமரிக்கும் என நம்புகிறேன்” – பிரதமர் மகிந்தராஜபக்ஸ ட்வீட் !

தமிழீழ விடுதலைப் புலிகள் மீதான பிரித்தானியாவின் தடைக்கு எதிராக நாடு கடந்த தமிழீழ அரசாங்கத்தினால் வழக்குத் தாக்கல் செய்யப்பட்ட நிலையில் , புலிகள் அமைப்பின் மீதான பிரித்தானிய அரசின் தடை தவறானது என குறித்த வழக்கின் தீர்ப்பு நேற்று வெளியாகியிருந்தது.

இந்நிலையில் “தமிழீழ விடுதலைப் புலிகள் மீதான தடையை பிரித்தானியா தொடர்ந்து பராமரிக்கும் என நம்புகிறேன்” என பிரதமர் மஹிந்த ராஜபக்ஷ ட்வீட்டரிரில் குறிப்பிட்டுள்ளார்.

விடுதலைப் புலிகள் மீதான பிரித்தானியாவின் தடை தவறானது என பிரித்தானியாவில் தடைசெய்யப்பட்ட அமைப்புக்கள் மேன்முறையீட்டு ஆணைக்குழு தீர்ப்பு வழங்கியிருந்தது.

இந்நிலையில், இதுகுறித்து இன்று (22.10.2020) பிரதமர் மஹிந்த ராஜபக்ஷ தனது ருவிற்றரில் பதிவிட்டுள்ளார்.

குறித்த பதிவில், “இலங்கையானது விடுதலைப் புலிகளைத் தோற்கடித்து அதன் மிருகத்தனமான பயங்கரவாத நடவடிக்கைகளுக்கு முற்றுப்புள்ளி வைத்தது. ஆனால், விடுதலைப் புலிகளின் செயற்பாடுகள் உலகம் முழுவதும் மிகவும் சுதந்திரமாக செயற்பாட்டில் உள்ளன. அத்துடன், இது எந்தவொரு நாட்டின் தேசிய பாதுகாப்பிற்கும் பெரும் அச்சுறுத்தலாகவே இருக்கின்றது.இந்நிலையில், விடுதலைப் புலிகள் மீதான தடையை பிரித்தானிய அரசாங்கம் தொடர்ந்து பராமரிக்கும் என நம்புகிறேன்” என்று குறிப்பிட்டுள்ளார்.

 

“தமிழ் மக்களுக்கு ஒரு நியாயமான,கௌரவமான தீர்வை இலங்கை அரசாங்கம் முன்வைப்பதற்கான அழுத்தத்தை பிரித்தானியா கொடுக்க வேண்டும்“ – பாராளுமன்ற உறுப்பினர் சிவஞானம் ஸ்ரீதரன்

“விடுதலைப் புலிகளின் கொள்கைகளும், எண்ணங்களும் நேர்மையான வழியில் இருந்தது என்பதை ஏற்று, தமிழ் மக்களுக்கு ஒரு நியாயமான,கௌரவமான தீர்வை இலங்கை அரசாங்கம் முன்வைப்பதற்கான அழுத்தத்தை பிரித்தானியா கொடுக்க வேண்டும்” தமிழ் தேசியக் கூட்டமைப்பின் பாராளுமன்ற உறுப்பினர் சிவஞானம் ஸ்ரீதரன் தெரிவித்துள்ளார்.

விடுதலைப் புலிகள் மீதான பிரித்தானியாவின் தடை தவறானது என பிரித்தானியாவில் தடைசெய்யப்பட்ட அமைப்புக்கள் மேன்முறையீட்டு ஆணைக்குழு வழங்கிய தீர்ப்பு குறித்து பி.பி.சி. செய்திப் பிரிவுக்கு வழங்கிய செவ்வியிலேயே அவர் இவ்வாறு குறிப்பிட்டுள்ளார்.

இந்நிலையில், விடுதலைப் புலிகள் அழிக்கப்பட்டதால் தமிழர்களின் உரிமைகள் இல்லாது செய்யப்பட்டதாக சுட்டிக்காட்டிய அவர், தற்போது பிரித்தானியாவின் நிலைப்பாட்டை தமிழர் என்ற வகையில் வரவேற்பதாகக் குறிப்பிட்டுள்ளார்.

அத்துடன், தமிழ் மக்கள் மீதான உரிமைகள் தொடர்ந்தும் நசுக்கப்பட்டு வரும் நிலையில், விடுதலைப் புலிகள் தவறிழைக்கவில்லை என்ற வகையிலான பிரித்தானிய நீதிமன்றத் தீர்ப்பு, அந்நாட்டு அரசாங்கத்துக்கு ஒரு செய்தியை விடுத்துள்ளதாகவும் ஸ்ரீதரன் தெரிவித்தார்.

இந்நிலையில், பிரித்தானிய ஆணைக்குழுவின் தீர்ப்பை மதித்து, விடுதலைப் புலிகள் மீதான தடையை பிரித்தானியா அரசாங்கம் நீக்க வேண்டும் என அவர் கோரிக்கை விடுத்துள்ளார்.

இதேவேளை, விடுதலைப் புலிகளின் கொள்கைகளும், எண்ணங்களும் நேர்மையான வழியில் இருந்தது என்பதை ஏற்று, தமிழ் மக்களுக்கு ஒரு நியாயமான,கௌரவமான தீர்வை இலங்கை அரசாங்கம் முன்வைப்பதற்கான அழுத்தத்தை பிரித்தானியா கொடுக்க வேண்டும் என இதன்போது ஸ்ரீதரன் வலியுறுத்தியுள்ளார்.

“தமிழ் மக்களின் அபிலாசைகளை பாதுகாக்கும் வகையில் ஜனாதிபதியின் செயற்பாடுகள் அமையும் என்ற அசைக்க முடியாத நம்பிக்கையில் 20ஆவது திருத்தத்தினை ஆதரிக்கின்றேன்” – அமைச்சர் டக்ளஸ் தேவானந்தா .

“தமிழ் மக்களின் அபிலாசைகளை பாதுகாக்கும் வகையில் ஜனாதிபதியின் செயற்பாடுகள் அமையும் என்ற அசைக்க முடியாத நம்பிக்கையில் 20ஆவது திருத்தத்தினை ஆதரிக்கின்றேன்” என  அமைச்சர் டக்ளஸ் தேவானந்தா தெரிவித்துள்ளார்.

நாடாளுமன்றத்தில் இன்று ( 22.10.2020 ) நடைபெற்ற 20 ஆவது திருத்தச் சட்டம்  தொடர்பான விவாதத்தில் கலந்து கொண்டு  உரையாற்றும் போதே அவர் இவ்வாறு குறிப்பிட்டுள்ளார்.

தொடர்ந்து கருத்து தெரிவித்த அவர் நிறைவேற்று அதிகாரஜனாதிபதியின் தேவையையும் அது தமிழர் வரலாற்றின் கடந்தகாலங்களில் ஏற்படுத்திய தாக்கங்கள் தொடர்பாகவும் சுட்டிக்காட்டி குறிப்பிட்டிருந்தார்.

“20வது திருத்தச் சட்டமானது சிறுபான்மை மக்களுக்கு மிகவும் ஆபத்தானது என்ற கருத்தும் தெரிவிக்கப்பட்டு வருகின்றது. ஆனால் இந்த நாட்டில் ஜனாதிபதியின் கரங்களில் நிறைவேற்று அதிகாரம் இருந்த காலப் பகுதியைவிட  ஏனைய காலப் பகுதியிலேயே அதிகளவில் சிறுபான்மை மக்களுக்கு எதிரான வன்முறைகள் கட்டவிழ்த்து விடப்பட்டிருந்தமை பற்றி கூறிய டக்ளஸ்தேவானாந்தா , 19 ஆவது திருத்தச் சட்டத்தின் மூலம் ஏற்படுத்தப்பட்ட அதிகார குழப்பங்கள் காரணமாக ஈஸ்தர் தாக்குதலுக்கான சூழல் ஏற்பட்டது எனவும்  அதன் காரணமாக சகோதர முஸ்லீம்களின் வாழ்வியலும் பொருளாதாரமும் பாரிய அச்சுறுத்தலுக்கு உள்ளாகியுள்ளது . சகோதர முஸ்லீம்களின் காய்கறி நறுக்கும் கத்திகள்கூட பயங்கரவாத ஆயுதங்களாக சித்தரிக்கும் சூழலை எற்படுத்திய 19 ஆம் திருத்தச் சட்டம் நீக்கப்பட வேண்டும் என்ற அவசியத்தின் அடிப்படையிலும் 20 ஆவது திருத்தச் சட்டத்தினை ஆதரிக்கிறேன்”  எனக் குறிப்பிட்ட அவர்,

“எமது அர்ப்பணத்துடன்கூடிய நியாயமான போராட்டத்தின் மூலம் பெற்றுக் கொள்ளப்பட்ட மாகாண சபை முறைமைக்கு வழிகோலும் 13வது திருத்தச் சட்டமானது, அன்று ஆட்சியில் இருந்த பிரதமர் உள்ளடங்கலான பிரபல தலைவர்களதும், எதிர்க்கட்சியினதும் பலத்த எதிர்ப்புகளுக்கு மத்தியிலும், அதற்கெதிரான தென்பகுதியின் ஆயுதமேந்திய வன்முறைகளுக்கு மத்தியிலும், நிறைவேற்றிக் கொள்வதற்கு ஜனாதிபதியின் கரங்களில் அதிகாரங்கள் இருந்தமையினாலேயே சாத்தியமாக்கப்பட்டது. அதேபோன்று நாடாளுமன்ற மற்றும் மாகாண சபைகளுக்கான தேர்தல்களுக்கான வெட்டுப் புள்ளியானது 12 விகிதத்திலிருந்து 5 விகிதம் வரையில் குறைக்கப்பட்டதும் சிறுபான்மை கட்சிகளினது பிரதிநிதித்துவம் அதிகரிப்பதற்குமான சந்தர்ப்பம் வழங்கப்பட்டதும் நிறைவேற்று அதிகாரம் கொண்ட ஜனாதிபதி ஆட்சியின் காரணமாகவேயாகும்” எனக்குறிப்பிட்டார்.

தமிழர் வரலாற்றில் மாபெரும் போராட்டங்களில் ஒன்றாக சித்தரிக்கப்படுகின்ற ஸ்ரீ எதிரப்புப் போராட்டத்தினாலும் அகற்றப்படாது போயிருந்த வாகனங்களில் காணப்பட்ட ஸ்ரீ எழுத்து ஒரே இரவில் அகற்றப்பட்டதும் நிறைவேற்று அதிகாரம் கொண்ட ஜனாதிபதியினால் என்பதை சுட்டிக்காட்டிய அமைச்சர் தேவானந்தா,  நிறைவேற்று அதிகாரத்தினை வலுவிழக்கச் செய்த 19 ஆவது திருத்தச் சட்டத்தின் ஊடாக தமிழ் மக்களின் அபிலாசைகள் எவற்றையும் நிறைவேற்ற முடியவில்லை என குறிப்பிட்டார்.

“ஜனாதிபதிக்கான அதிகாரங்களை வலுவடைச் செய்யும் வகையில் 20 ஆவது திருத்தச் சட்டம் அமைகின்ற போதிலும், சிறுபான்மை மக்களின் அபிலாசைகளை பாதுகாக்கும் வகையில் நாட்டின் சுபீட்சமான எதிர்காலத்தை உறுதிப்படுத்தும் வகையில் மாத்திரமே அவற்றை தற்போதைய ஜனாதிபதி பயன்படுத்துவார் என்ற நம்பிக்கை  உள்ளது”  என அவர் மேலும் தெரிவித்துள்ளார்.

இலங்கையில் கொரோனா வைரஸ் பாதிப்பால் மேலுமொருவர் மரணம் !

கொரோனா தொற்றுக்கு உள்ளாகி இருந்த மற்றுமொருவர் உயிரிழந்துள்ளதாக சுகாதார அமைச்சு தெரிவித்துள்ளது.

50 வயதுடைய குளியாபிட்டிய பகுதியை சேர்ந்த பெண் ஒருவரே இவ்வாறு உயிரிழந்துள்ளார்.
அதனடிப்படையில் இலங்கையில் கொரோனா தொற்றாரினால் உயிரிழந்தவர்களின் எண்ணிக்கை 14 ஆக உயர்ந்துள்ளது.

பூதாகரமாகும் தாய்வான் – சீனப்பிரச்சினை – 1 பில்லியன் டொலர் மதிப்புள்ள ஏவுகணைகளை வழங்கும் அமெரிக்கா !

கடந்த சில மாதங்களாக தாய்வானுக்கும் சீனாவுக்கும் இடையிலான மோதல் அதிகரித்து வருகிறது. எந்த நேரத்திலும் சீனா தாய்வான் மீது தாக்குதல் நடத்தலாம் என கூறப்படுகிறது. இந்த நிலையில் வானத்தில் இருந்து தரையில் உள்ள இலக்குகளை தாக்கி அழிக்கும் ஏவுகணைகள் மற்றும் பிற ஆயுத அமைப்புகள் ஆகியவைகளை விற்க 1 பில்லியன் டொலர் (ரூ.7329 கோடி) மதிப்புள்ள ஒப்பந்தம் செய்திருப்பதாக அமெரிக்க வெளியுறவுத்துறை தெரிவித்துள்ளது.
அமெரிக்கா தனது கூட்டாளியான தாவானுக்கு ஏஜிஎம்-84எச், எஸ்எல்ஏஎம்-ஈஆர் ஏவுகணைகள் ஆறு,எம்.எஸ்-110 விமான உளவு கண்காணிப்பு கருவிகள் மற்றும் ஏவுகணைகளுடன் 11 எம்142 மொபைல் லைட் ராக்கெட் வழங்குகிறது.
எஸ்.எல்.ஏ.எம்-ஈ.ஆர் ஏவுகணைகள் தாவானின் தற்போதைய மற்றும் எதிர்கால அச்சுறுத்தல்களுக்கு உதவும், ஏனெனில் இது அனைத்து வானிலையிலும் பகல் மற்றும் இரவு நேரத்தில், தரையில் அல்லது கடல் மேற்பரப்பில் நகரும் மற்றும் நிலையான இலக்குகளுக்கு எதிராக துல்லியமான தாக்குதலை நடத்தும்  திறன்களை கொண்டது.
“இந்த ஆயுத விற்பனை இந்தோ-பசிபிக் பிராந்தியம் மற்றும் தாய்வான் நீரிணையின் பாதுகாப்பு நிலைப்பாட்டிற்கு அமெரிக்கா மிகுந்த முக்கியத்துவத்தை அளிக்கிறது என்பதைக் காட்டுகிறது, மேலும் நமது ஒட்டுமொத்த பாதுகாப்பு திறன்களை வலுப்படுத்துவதில் நம் நாட்டுக்கு தீவிரமாக உதவுகிறது” என்று தாய்வானின் பாதுகாப்பு அமைச்சகம் தெரிவித்துள்ளது.

யாழ்ப்பாணம், வவுனியா உள்ளிட்ட இலங்கையின் 13 மாவட்டங்களில் கொரோனா பரவல் – ஏனைய மாவட்டங்களுக்கும் பரவும் அபாயம் !

மினுவாங்கொடயிலிருந்து பரவத்தொடங்கிய கொரோனா வைரஸ் தற்போது 13 மாவட்டங்களுக்கு பரவத் தொடங்கியுள்ளது எனத் தெரிவித்துள்ள தொற்றுநோயியல் பிரிவின் தலைமை அதிகாரி வைத்தியர் சுடத்சமரவீர ஏனைய மாவட்டங்களுக்கும் கொரோனா பரவும் ஆபத்துள்ளது எனத் தெரிவித்துள்ளார்.
குருநாகல், புத்தளம், கேகாலை, கண்டி, காலி, அம்பாந்தோட்டை, யாழ்ப்பாணம், வவுனியா, அனுராதபுரம், பொலனறுவை உட்பட பல மாவட்டங்களில் இருந்தும் விசேடமாக கம்பஹாவிலிருந்தும் நோயாளிகள் அடையாளம் காணப்பட்டுள்ளனர் என அவர் தெரிவித்துள்ளார்.
பேலியகொட மீன் சந்தையில் மீன் விற்பவர்கள் பலர் பாதிக்கப்பட்டுள்ளதைத் தொடர்ந்து மீன் விற்பவர்கள் ஊடாக கொரோனா வைரஸ் நாட்டின் பல பகுதிகளில் பரவும் ஆபத்துள்ளது என அவர் தெரிவித்துள்ளார்.
பேலியகொட மீன் சந்தையிலிருந்து நாட்டின் பல பகுதிகளுக்கும் மீன்களை விற்பனை செய்துள்ளனர் எனத் தெரிவித்துள்ள அவர் இதன் காரணமாக தொற்றிற்குள்ளானவர்கள் இருக்கக்கூடும் எனவும் தெரிவித்துள்ளார்.

ஒக்ஸ்போர்ட் பல்கலைகழகத்தின் கொரோனா தடுப்பூசி பரிசோதனையில் பங்கேற்றவர் மரணம் !

கொரோனா வைரஸைக் கட்டுப்படுத்துவதற்காக இங்கிலாந்து ஒக்ஸ்போர்ட் பல்கலைக்கழகம், இங்கிலாந்து அரசு மற்றும் அஸ்ட்ரா ஜெனேகா மருந்து நிறுவனத்துடன் இணைந்து ஒரு தடுப்பூசியை உருவாக்கியுள்ளது. இந்த ஒக்ஸ்போர்ட் தடுப்பூசியின் 1 மற்றும் 2ஆம் கட்ட மனித பரிசோதனையில் நல்ல முன்னேற்றம் ஏற்பட்டது.

மேலும், இந்த தடுப்பூசியை மனிதர்களுக்கு செலுத்தி பார்க்கும் இறுதிகட்ட மருத்துவ பரிசோதனை இங்கிலாந்து, இந்தியா, பிரேஸில், தென் ஆப்பிரிக்கா போன்ற நாடுகளில் நடைபெற்று வருகிறது. இந்த பரிசோதனையில் ஆயிரக்கணக்கான தன்னாவலர்கள் ஈடுபட்டு வருகின்றனர்.

இந்த நிலையில், பிரேஸில் நாட்டில் ஒக்ஸ்போர்ட் கொரோனா தடுப்பூசி பரிசோதனையில் பங்கேற்ற தன்னார்வலர் திடீரென உயிரிழந்துள்ளார். ரியோ டி ஜெனிரோ நகரில் வசித்துவந்த 28 வயதுடைய தன்னார்வளர் ஒருவரே இவ்வாறு உயிரிழந்துள்ளதாக ஊடகங்கள் தெரிவித்துள்ளன.

ஆனால், அந்த தன்னார்வலர் உயிரிழந்ததற்கான காரணங்கள் குறித்து பிரேஸில் அரசோ, ஒக்ஸ்போர்ட் பல்கலைக்கழகமோ, அஸ்ட்ரா ஜெனேகா நிறுவனமோ எந்த பதிலும் அளிக்கவில்லை.

மேலும், இந்த விவகாரம் குறித்து விசாரனை நடத்த பிரேஸில் சுகாதாரத்துறை சார்பில் குழு அமைக்கப்பட்டுள்ளது. ஆனால், தடுப்பூசி பரிசோதனை நிறுத்தப்படாது என தெரிவிக்கப்பட்டுள்ளது. அதேபோல், தடுப்பூசி பரிசோதனையின் பாதுகாப்பு குறித்து கவலைப்பட தேவையில்லை என ஒக்ஸ்போர்ட் பல்கலைக்கழகம் தெரிவித்துள்ளது. ஆனால், அஸ்ட்ரா ஜெனேகா மருந்து தயாரிப்பு நிறுவனம் இந்த விவகாரம் குறித்து பதிலளிக்கவில்லை.

எவ்வாறிருப்பினும் பிரேஸிலில் ஒக்ஸ்போர்ட் தடுப்பூசியின் பரிசோதனை தொடர்ந்து நடைபெற்று வருகிறதென்பது குறிப்பிடத்தக்கது.