October

October

“கொவிட் நோய் பரவலைத் தடுப்பதற்கான அரசினுடைய அறிவுரைகளை மக்கள்“ முறையாக பின்பற்றாதது எனக்கு மிகுந்த மன வேதனையைத் தருகின்றது” – ஜனாதிபதி கோட்டாபய ராஜபக்ஸ

“கொவிட் நோய் பரவலைத் தடுப்பதற்கான அரசினுடைய அறிவுரைகளை மக்கள்“ முறையாக பின்பற்றாதது எனக்கு மிகுந்த மன வேதனையைத் தருகின்றது” என ஜனாதிபதி கோட்டாபய ராஜபக்ஸ தெரிவித்துள்ளார்.

இலங்கையில் கொரோனா தொற்று மீண்டும் சமூக மட்டத்தில் பரவுவதனையடுத்து சுகாதார நடைமுறைகளை பொது மக்கள் பின்பற்ற வேண்டும் என கோரிக்கைகள் விடுக்கப்பட்டுள்ளன.

இந்நிலையில் ஜனாதிபதி கோட்டாபய ராஜபக்ஸ சற்று முன்னர் விசேட அறிக்கையினை வெளியிட்டுள்ளார். அவர் வெளியிட்டுள்ள அறிக்கையில் தெரிவிக்கப்பட்டுள்ளதாவது,

கொவிட் தடுப்பிற்காக அரசாங்கம் வழங்கி இருந்த அறிவுரைகளைப் பின்பற்றுவதில் மக்கள் மத்தியில் ஆர்வம் குறைவடைந்ததே நோய்த்தொற்று மீண்டும் பரவியதற்கான அடிப்படை காரணமாகும் என சுகாதாரத் துறையினர் சுட்டிக்காட்டுகின்றனர்.

கொவிட் நோய்த் தடுப்புக்குப் பின்பற்ற வேண்டிய நடவடிக்கைகள் என்று கண்டறியப்பட்டு அறிவிக்கப்பட்ட செயற்பாடுகளை மக்கள் உரிய முறையில் பின்பற்றாமை பெரும் குறைபாடாக அமைந்து விட்டது என காவற்துறையினர் சுட்டிக்காட்டுகின்றனர்.

கொவிட் நோய்த் தொற்று உலகின் ஏனைய நாடுகளில் மிக வேகமாகப் பரவி வருகின்ற போதிலும் – அது தொடர்பான அறிவூட்டல்களை வழங்கி, மக்களுக்குத் தெளிவூட்டும் நடவடிக்கைகளை ஊடகங்களும் குறைத்துக்கொண்டுவிட்டிருந்தன.

கொவிட் நோய்த்தொற்று பரவல் மிகச் சாதாரணமாக நிகழத்தக்க தீவிர புறச்சூழல் ஒன்று நிலவியதை மக்கள் அலட்சியப்படுத்தி நடந்து கொண்டமை எனக்கு மிகுந்த மன வேதனையைத் தருகின்றது.

தற்போதைய நிலைமையைப் புரிந்துகொண்டு – கோவிட் பரவல் மேலும் நிகழ்வதனைத் தடுப்பதில் அரசாங்கத்திற்கு ஒத்துழைப்பு வழங்கும் பாரிய பொறுப்பு – அனைத்து ஊடகங்களுக்கும், எமது நாட்டின் ஒவ்வொரு குடிமகனுக்கும் குடிமகளுக்கும் உள்ளது என்பதனை நாம் புரிந்துகொள்ள வேண்டும்.

மக்களைத் தெளிவுபடுத்தும் நடவடிக்கைகளை, ஒரு கூட்டுப் பொறுப்புணர்வோடு ஊடகங்கள் தொடர்ந்து முன்னெடுக்க வேண்டும் எனவும், நிலைமையின் தீவிரத்தைப் புரிந்துணர்ந்து, உரிய தற்காப்பு அறிவுரைகளைப் பின்பற்றி, மக்களும் ஒழுக்கத்துடன் நடந்துகொள்ள வேண்டும் எனவும் நான் தாழ்மையோடு வேண்டி நிற்கின்றேன் என்று குறிப்பிடப்பட்டுள்ளது.

பிரித்தானிய பிரதமரின் இலங்கைக்கான வர்த்தக தூதராக மேர்வின் டேவிஸ் பிரபு நியமனம் !

பிரித்தானியப் பிரதமர் போரிஸ் ஜோன்சனின் இலங்கைக்கான பிரதமரின் வர்த்தக தூதராக இவான் மேர்வின் டேவிஸ் பிரபுவை நியமித்துள்ளார்.

பிரித்தானியப் பிரதமர் தனது வர்த்தக தூதர் திட்டத்திற்கு பதினைந்து புதிய நியமனங்களை செய்துள்ளார். இந்த புதிய நியமனங்களை அடுத்து பிரித்தானியாவின் 69 சந்தைகளுக்கான தூதுவர்களின் எண்ணிக்கை 31ஆக அதிகரித்துள்ளது.

டேவிஸ் பிரபு, 2009 – 2010ஆம் ஆண்டில் பிரித்தானியாவின் வர்த்தக, முதலீடு மற்றும் சிறு வணிக, உட்கட்டமைப்பு அமைச்சராக பதவி வகித்திருந்தமை குறிப்பிடத்தக்கதாகும்.

பிரித்தானியாவில் இருந்து சட்டவிரோதமாக இலங்கைக்கு இறக்குமதி செய்யப்பட்ட கழிவுக்கொள்கலன்களால் ஏற்பட்ட பாதிப்புக்கு இழப்பீட்டுத்தொகை 1.69 பில்லியன் ரூபாய் !

பிரித்தானியாவில் இருந்து 263 கழிவுகள் அடங்கிய கொள்கலன்களை இறக்குமதி செய்வதன் மூலம் ஏற்பட்ட பாதிப்புக்கு இலங்கை அரசாங்கம் 1.69 பில்லியன் ரூபாய் இழப்பீட்டு கோரியுள்ளது.

Basel சாசனத்தின் கீழ் இலங்கை வழக்கு தாக்கல் செய்துள்ளது என சுற்றுச்சூழல் அமைச்சு அறிக்கை ஒன்றினை வெளியிட்டு இந்த விடயம் தொடர்பாக தெரிவித்துள்ளது. கழிவுகள் அடங்கிய கொள்கலன்கள் பிரித்தானியாவில் இருந்து 2017 மற்றும் 2018 ஆம் ஆண்டுகளில் சட்டவிரோதமாக நாட்டிற்கு இறக்குமதி செய்யப்பட்டன.

130 கொள்கலன்கள் கட்டுநாயக்க சுதந்திர வர்த்தக வலயத்திலும், 133 கொள்கலன்ள் கொழும்பு துறைமுகத்தின் ஒரு பகுதியிலும் வைக்கப்பட்டன.

21 கொள்கலன்கள் இதுவரை பிரித்தானியாவிற்கு திருப்பி அனுப்பட்டுள்ள நிலையில் மேலதிக விசாரணைகள் முடிந்ததைத் தொடர்ந்து மீதமுள்ள கொள்கலன்கள் திருப்பியனுப்ப ஏற்பாடு  செய்யப்படும் என சுற்றுச்சூழல் அமைச்சு தெரிவித்துள்ளது.

“அ.தி.மு.க முதல்வர் வேட்பாளராக தற்போதைய முதலமைச்சர் எடப்பாடி பழனிசாமி போட்டியிடுவார்” – ஓ.பன்னீர்செல்வம்.

வரும் சட்டமன்ற தேர்தலில் அதிமுகவில் சார்பில் முதல்வர் வேட்பாளராக யார் முன்னிறுத்தப்படுவார்?  என்பது தொடர்பாக கடந்த சில தினங்களாக அக்கட்சி தீவிரமாக ஆலோசனை மேற்கொண்டது. கட்சியின் ஒருங்கிணைப்பாளர் ஓ.பன்னீர்செல்வம், இணை ஒருங்கிணைப்பாளர் எடப்பாடி பழனிசாமி இடையே அதிகாரப் போட்டி தலைதூக்கியது. செயற்குழு கூட்டத்திலும் இது எதிரொலித்தது. செயற்குழு செயற்குழு கூட்டத்திற்கு பிறகு பேட்டி அளித்த அதிமுக துணை ஒருங்கிணைப்பாளர் கேபி முனுசாமி அக்டோபர் 7ம் தேதி (இன்று) முதல்வர் வேட்பாளர் அறிவிக்கப்படுவார் என்று கூறினார்.

அதன்பின்னர் இந்த விவகாரம் சூடுபிடிக்கத் தொடங்கியது. கடந்த சில தினங்களாகவே முதல்வர் பழனிசாமி, துணை முதல்வர் ஓ.பன்னீர் செல்வம் ஆகியோர் தங்களின் ஆதரவு நிர்வாகிகள், மூத்த அமைச்சர்களுடன் தனித்தனியே ஆலோசனை நடத்தினர்.

குறிப்பாக நேற்று காலை முதல் அதிகாலை வரை மூத்த அமைச்சர்கள் ஒருங்கிணைப்பாளர்கள் இருவரையும்  மாறி மாறி சந்தித்து தீவிர ஆலோசனை நடத்தினர். இதனால், ஆளும் அதிமுகவில் உச்ச கட்ட பரபரப்பு நிலவியது. இன்று காலையிலும் ஆலோசனை நீடித்தது. சென்னையில் உள்ள தங்களது இல்லங்களில் முதலமைச்சர் எடப்பாடி பழனிசாமி, துணை முதலமைச்சர் ஓ.பன்னீர்செல்வம் தனித்தனியே ஆலோசித்தனர். அமைச்சர்கள் ஆர்.பி.உதயகுமார், சி.வி.சண்முகம், ஜெயக்குமார் உள்ளிட்டோருடன் முதலமைச்சர் ஆலோசனை நடத்தினார். தேனி மாவட்ட நிர்வாகிகளுடன் துணை முதலமைச்சர் ஓ.பன்னீர்செல்வம் இறுதிக்கட்டமாக ஆலோசனை நடத்தினார். பின்னர் இருவரும் ராயப்பேட்டையில் உள்ள கட்சி அலுவலகத்திற்கு புறப்பட்டனர்.

இதேபோல் அமைச்சர்கள், , கட்சி நிர்வாகிகள் கட்சி அலுவலகத்திற்கு வந்து சேர்ந்தனர். ஏராளமான தொண்டர்கள் கட்சி அலுவலகத்தில் திரண்டனர். முதல்வர் வேட்பாளர் யார்? என்ற அறிவிப்பை எதிர்பார்த்து காத்திருந்தனர். ஏராளமான நிர்வாகிகள், தொண்டர்கள் குவிந்ததால் பாதுகாப்பு ஏற்பாடுகள் செய்யப்பட்டிருந்தன.

இந்நிலையில், இந்நிலையில் காலை 10 மணியளவில் அதிமுக தலைமையகத்தில் கட்சியின் ஒருங்கிணைப்பாளர் ஓ.பன்னீர்செல்வம், இணை ஒருங்கிணைப்பாளர் எடப்பாடி பழனிசாமி ஆகியோர் செய்தியாளர்களை சந்தித்தார்.

அப்போது இணை ஒருங்கிணைப்பாளர் எடப்பாடி பழனிசாமி பேசுகையில், கட்சியை வழிநடத்த 11 பேர் கொண்ட வழிகாட்டுதல் குழுவை அறிவித்தார். அமைச்சர்கள் திண்டுக்கல் சீனிவாசன், தங்கமணி, வேலுமணி, ஜெயக்குமார், சி.வி.சண்முகம், காமராஜ், ஜேசிடி பிரபாகர், மனோஜ் பாண்டியன், முன்னாள் அமைச்சர் மோகன், கோபாலகிருஷ்ணன், மாணிக்கம் ஆகியோர் இந்த குழுவில் இடம்பெற்றுள்ளனர்.

பின்னர் ஒருங்கிணைப்பாளர் ஓ.பன்னீர்செல்வம் பேசுகையில், அதிமுக முதல்வர் வேட்பாளராக தற்போதைய முதலமைச்சர் எடப்பாடி பழனிசாமி போட்டியிடுவார் என அறிவித்தார். கட்சியின் முடிவுக்கு நிர்வாகிகள் மற்றும் தொண்டர்கள் ஒத்துழைப்பு அளித்து பணியாற்ற வேண்டும் என்றும் அவர் கேட்டுக்கொண்டார்.

“நான் சிறப்பாக இருக்கிறேன். வியாழக்கிழமை நடைபெறும் விவாதத்தில் பங்கேற்கத் தயாராக இருக்கிறேன்.  விவாதம் சிறப்பாக இருக்கும்” – ட்ரம்ப் அதிரடி ட்வீட் !

நான் சிறப்பாக இருக்கிறேன் என்று மருத்துவமனையிலிருந்து வெளியேறிய  அமெரிக்க ஜனாதிபதி டொனால்ட் ட்ரம்ப் தெரிவித்துள்ளார்.

கொரோனா வைரஸால் பாதிக்கப்பட்ட ஜனாதிபதி டொனால்ட் ட்ரம்ப், அவரின் மனைவி மெலானியா ட்ரம்ப் இருவரும் வீட்டில் தனிமைப்படுத்தப்பட்டனர். ஆனால், ட்ரம்ப்புக்குக் காய்ச்சல் தொடர்ந்து அதிகரிக்கவே வால்டர் ரீடில் உள்ள ராணுவ மருத்துவ மையத்தில் சிகிச்சைக்காக அனுமதிக்கப்பட்டார்.

இதனைத் தொடர்ந்து 3 இரவுகள் வால்டர் ரீட் தேசிய ராணுவ மருத்துவமனையில் சிகிச்சை பெற்றதையடுத்து ட்ரம்ப் வெள்ளை மாளிகை திரும்பினார். எனினும் ட்ரம்ப் கொரோனாவிலிருந்து முழுவதுமாக மீண்டாரா? என்ற தகவல் வெளிவராமல் இருந்தது.

இந்த நிலையில் தான் நலமாக இருப்பதாக அமெரிக்க அதிபர் ட்ரம்ப் தெரிவித்துள்ளார்.

இதுகுறித்து ட்ரம்ப் தனது ட்விட்டர் பக்கத்தில், “நான் சிறப்பாக இருக்கிறேன். வியாழக்கிழமை மாலை மியாமியில் நடைபெறும் விவாதத்தில் பங்கேற்கத் தயாராக இருக்கிறேன்.  விவாதம் சிறப்பாக இருக்கும்” என்று பதிவிட்டுள்ளார்.

அர்மீனியா, அசர்பைஜான் நாடுகளுக்கு இடையேயான எல்லை பகுதியில் தொடரும் சண்டை – பத்து நாட்களில் 290பேர் வரை இறப்பு !

அர்மீனியா, அசர்பைஜான் நாடுகளுக்கு இடையேயான எல்லையாக பிரிக்கும் பகுதியில் நகோர்னோ-கராபத் என்ற மாகாணம் அமைந்துள்ளது.  இந்த மாகாணம் அசர்பைஜானின் பகுதி என சர்வதேச நாடுகளால் அங்கீகரிக்கப்பட்டுள்ளது. ஆனால் இந்த மாகாணத்தில் பெரும்பான்மையானோர் அர்மீனிய ஆதரவாளர்கள் ஆகும்.
1994-ம் ஆண்டு இரு நாடுகளும் இடையே நடந்த போரில் இந்த மாகாணத்தின் பெரும் பகுதியை அர்மீனியா கைப்பற்றியது. மேலும், அந்த மாகாணத்திற்கு தன்னாட்சி அதிகாரம் வழங்கப்பட்டது. இதையடுத்து, அந்த மாகாணத்தை அர்மீனிய ஆதரவு மக்கள் நிர்வகித்து வந்தனர். மேலும், இதற்கு அர்மீனிய அரசும் உதவிகளை செய்துவந்தது.
அன்றில் இருந்து நகோர்னோ-கராபத் மாகாணத்தை மையமாக கொண்டு பல ஆண்டுகளாக அர்மீனியா – அசர்பைஜான் இடையே மோதல்கள் அரங்கேறி வருகிறது.  இதற்கிடையில், பல ஆண்டுகளாக சற்று தணிந்திருந்த பதற்றம் கடந்த மாதம் 27-ம் தேதி முதல் மீண்டும் தொடங்கியது.
தங்கள் வசம் இருந்த நகோர்னோ – கராபத் மாணத்தை முழுவதும் கைப்பற்ற வேண்டும் என்ற எண்ணத்தொடு அசர்பைஜான் தாக்குதல் நடத்தி வருகிறது. இந்த தாக்குதலுக்கு அர்மீனிய ஆதரவு படையினர் பதில் தாக்குதல் கொடுத்தும் வந்தனர். இந்த மோதலில் அசர்பைஜானுக்கு துருக்கி ஆயுதம் வழங்கியும், சிரியா, லிபியாவில் உள்ள கிளர்ச்சியாளர்களை சண்டையில் களமிறக்கியும் நேரடி உதவி செய்து வருகிறது. நோர்னோ-கராபாத் மாகாண மோதலில் துருக்கியின் தலையீட்டிற்கு ரஷியா, அமெரிக்கா, பிரான்ஸ், சிரியா போன்ற பல்வேறு நாடுகள் கண்டனம் தெரிவித்துள்ளன.
இந்நிலையில், 10 நாட்களாக நடைபெற்று வரும் இந்த மோதலில் குடியிருப்பு பகுதிகள் இரு தரப்பு படையினராலும் தாக்குதலுக்கு உள்ளாகி வருகிறது. மேலும், மோதலில் பொதுமக்கள், அசர்பைஜான் படையினர், அர்மீனிய படையினர், அர்மீனிய ஆதரவு நகோர்னோ-கராபாத் கிளர்சி படையினர் என அனைத்து தரபினரும் உயிரிழப்பை சந்தித்து வருகின்றனர்.
அர்மீனிய ஆதரவு நகோர்னோ-கராபத் படை தரப்பில் வெளியிட்டுள்ள தகவலில் தங்கள் பகுதியை சேர்ந்த 244 பாதுகாப்பு படையினரும், 19 பொதுமக்களும் அசர்பைஜான் தாக்குதலில் உயிரிழந்துள்ளதாக தெரிவிக்கப்பட்டுள்ளது.
அசர்பைஜான் தரப்பில் வெளியிட்டு தகவலில் 27 அசர்பைஜான் மக்கள் உயிரிழந்துள்ளதாக தெரிவிக்கப்பட்டுள்ளது. ஆனால், இந்த மோதலில் தங்கள் தரப்பை சேர்ந்த பாதுகாப்பு படையினர் எத்தனை பேர் உயிரிழந்துள்ளனர் என்ற தகவலை அசர்பைஜான் வெளியிடவில்லை. இதன் மூலம் நகோர்னோ-கராபாத் மோதலில் உயிரிழந்தவர்களின் எண்ணிக்கை 290 ஆக அதிகரித்துள்ளது. மோதல் தொடர்ந்து நீடித்து வரும் நிலையில் பலி எண்ணிக்கை அதிகரிக்கக்கூடும் என்ற அச்சம் நிலவுகிறது.

“கொரோனா தொற்று உறுதிப்படுத்தப்பட்ட பின்பும் கூட சிகிச்சைக்காக செல்லாமல் இருப்போர் மீது சட்ட நடவடிக்கை மேற்கொள்ளப்படும்” – சுகாதார அமைச்சர் பவித்ரா வன்னியாராச்சி

கொரோனா தொற்று உறுதிப்படுத்தப்பட்ட சிலர் சிகிச்சை பெற்றுக் கொள்வதற்கு வைத்தியசாலைகளுக்கு வர மறுப்பு தெரிவிப்பதாக சுகாதார அமைச்சர் பவித்ரா வன்னியாராச்சி தெரிவித்துள்ளார்.

அறிக்கை ஒன்றை வௌியிட்டு அவர் இதனை குறிப்பிட்டுள்ளார். அவர் தனது அறிக்கையில்..,

கம்பஹா மாவட்டத்தில் கொவிட் 19 தொற்றாளர்கள் அநேகமானோர் பதிவான நிலையில் சுகாதார அமைச்சினால் கம்பஹா மாவட்டத்தினுள் பி.சீ.ஆர் பரிசோதனை மேற்கொள்ளப்பட்டது. இதன் போது கொரோனா தொற்று உறுதிப்படுத்தப்பட்டவர்களை சிகிச்சை மத்திய நிலையங்களுக்கு அழைத்துச் செல்வதற்காக சுகாதார அமைச்சினால் அவர்களின் வீடுகளுக்கு நோயாளர் காவு வண்டிகளை பெற்றுக் கொடுக்க நடவடிக்கை எடுக்கப்பட்டுள்ளது. எனினும் சிலர் சிகிச்சை மத்திய நிலையங்களுக்கு செல்வதை நிராகரிப்பதாக தெரிவிக்கப்படுகிறது.

இலங்கை மக்களின் சுகாதார பாதுகாப்பினை கருத்திற் கொண்டு சுகாதார அமைச்சின் ஊடாக வீடுகளுக்கு அனுப்பி வைக்கப்படும் நோயாளர் காவு வண்டிகள் ஊடாக சிகிச்சை மத்திய நிலையங்களுக்கு செல்லுமாறு தொற்றுக்குள்ளான பொதுமக்களிடம் சுகாதார அமைச்சர் பவித்ரா வன்னியாராச்சி கேட்டுக் கொண்டுள்ளார்.

சிகிச்சைக்காக செல்லாமல் புறக்கணித்தல் தனிமைப்படுத்தல் சட்டத்தின் கீழ் குற்றம் என்பதால், அவ்வாறு செய்யும் நபர்களுக்கு எதிராக சட்ட நடவடிக்கை மேற்கொள்ளப்படும் என சுகாதார அமைச்சர் மேலும் குறிப்பிட்டுள்ளார்.

“20ம் திருத்தச் சட்டத்தின் ஆபத்துக்களை அரசாங்கம் புரிந்துகொள்ளத் தவறிவிட்டது“ – ஜனாதிபதி சட்டத்தரணி விஜயதாச ராஜபக்ச

20ம் திருத்தச் சட்டத்தின் ஆபத்துக்களை அரசாங்கம் புரிந்துகொள்ளத் தவறிவிட்டது என  ஸ்ரீலங்கா பொதுஜன முன்னணியின் நாடாளுமன்ற உறுப்பினரும் முன்னாள் நீதி அமைச்சருமான ஜனாதிபதி சட்டத்தரணி விஜயதாச ராஜபக்ச தெரிவித்துள்ளார்.

நேற்றைய தினம் (06.10.2020) கொழும்பில் நடைபெற்ற ஊடகவியலாளர் சந்திப்பில் அவர் இதனைக் குறிப்பிட்டுள்ளார். இதன் போது கருத்து தெரிவித்த அவர்,

20ம் திருத்தச் சட்டத்தின் மூலம் தற்போதைய ஜனாதிபதி கோட்டாபய ராஜபக்சவிற்கு பின்னர் பதவி ஏற்றுக் கொள்ளும் ஜனாதிபதி உச்சபட்ச நலன்களை பெற்றுக்கொள்வார் என அவர் சுட்டிக்காட்டியுள்ளார். 19ம் திருத்தச் சட்டத்தின் குறைபாடுகள் அடையாளம் காணப்பட்டுள்ளதாகவும் அவற்றை நீக்க நடவடிக்கை எடுக்கப்பட வேண்டுமெனவும் அவர் தெரிவித்துள்ளார்.

எனினும், 19ம் திருத்தச் சட்டம் நாட்டில் அமுல்படுத்தப்பட்டிருக்காவிட்டால் ஜனாதிபதி கோட்டாபய ராஜபக்ச ஒருநாளும் இந்த நாட்டின் ஜனாதிபதியாகியிருக்க முடியாது என அவர் குறிப்பிட்டுள்ளார். அரசாங்கம் 20ம் திருத்தச் சட்டத்தினால் ஏற்படக்கூடிய ஆபத்துக்களை புரிந்து கொள்ளத் தவறியுள்ளதாகத் தெரிவித்துள்ளார்.

“அமைச்சர் டக்ளஸ் தேவானந்தா 30 வருடங்களாகத் தமிழ் மக்களின் போராட்டத்தைக் காட்டிக் கொடுத்தவர்” – நாடாளுமன்றில் செல்வராசா கஜேந்திரன் !

“அமைச்சர் டக்ளஸ் தேவானந்தா 30 வருடங்களாகத் தமிழ் மக்களின் போராட்டத்தைக் காட்டிக் கொடுத்தவர்” என தமிழ்த் தேசிய மக்கள் முன்னணியின் பொதுச்செயலாளரும் நாடாளுமன்ற உறுப்பினருமான செல்வராசா கஜேந்திரன் குறிப்பிட்டுள்ளார்.

நாடாளுமன்றத்தில் நேற்று நடைபெற்ற நிதி திருத்தச் சட்டமூலம் மீதான விவாதத்தில் உரையாற்றுகையிலேயே மேற்கண்டவாறு கேள்வி எழுப்பிய அவர், மேலும் கூறுகையில்,

“கடந்த சில தினங்களுக்கு முன்னர் யாழ்ப்பாணம் வந்திருந்த அமைச்சர் கெஹலிய ரம்புக்வெல, தியாகி திலீபனை ஒசாமா பின்லேடனுடன் ஒப்பிட்டுப் பேசினார். இதனை நாம் வன்மையாகக் கண்டிக்கின்றோம். தனது மக்களுக்காக உண்ணாநோன்பிருந்து உயிர்நீத்த தியாகி திலீபன்  ஒசாமா பின்லேடனா..? அல்லது  2 வயது சிறுவன் பாலச்சந்திரனுக்கு பிஸ்கட், தண்ணி கொடுத்துவிட்டு சுட்டுக்கொன்றவர்கள்  பின்லேடன்களா..? எனக் கேட்க விரும்புகின்றோம்.

அடுத்தவர் அமைச்சர் டக்ளஸ் தேவானந்தாவும் தியாகி திலீபனைப் பற்றி மிகவும் கேவலமாக விமர்சிக்கின்றார். அமைச்சர் டக்ளஸ் தேவானந்தா 30 வருடங்களாகத் தமிழ் மக்களின் போராட்டத்தைக் காட்டிக் கொடுத்தவர். தியாகி திலீபன் தமிழ் மக்களைப் பொறுத்தவரையில் ஒரு மாவீரன்; தியாகி. எனவே, கெஹலியவுக்கும் டக்ளஸுக்கும் திலீபனைப் பற்றி விமர்சிக்க அருகதை கிடையாது”என குறிப்பிட்டுள்ளார்

யாழ்.மாவட்டத்தை சேர்ந்த 11 இளம்பெண்களுக்கு கொரோனாத்தொற்று உறுதி !

கம்பஹா – மினுவாங்கொடை ஆடைத்தொழிற்சாலையில் பணியாற்றிய ஊழியர்களில் இதுவரை 831 பேருக்குக் கொரோனா வைரஸ் தொற்று உறுதி செய்யப்பட்டுள்ளது. அவர்களில் யாழ்ப்பாணம் மாவட்டத்தைச் சேர்ந்த 11 இளம் பெண்களும் அடங்குகின்றனர் என்று யாழ். மாவட்ட கொரோனா ஒழிப்புச் செயலணி அறிவித்துள்ளது.

குறித்த பெண்களில் பெரும்பாலானவர்கள் புங்குடுதீவைச் சேர்ந்தவர்கள் என்றும், ஒருவர் புங்குடுதீவில் உள்ள வீட்டுக்கு விடுமுறையில் வந்தபோது யாழ். போதனா வைத்தியசாலையில் மேற்கொள்ளப்பட்ட பி.சி.ஆர். பரிசோதனையில் அடையாளம் காணப்பட்டுள்ளார் என்றும் யாழ். மாவட்ட கொரோனா ஒழிப்புச் செயலணி மேலும் தெரிவித்துள்ளது.

ஏனைய 10 பேருக்கும் மினுவாங்கொடையில் நடத்தப்பட்ட பி.சி.ஆர். பரிசோதனையில் தொற்று உறுதிப்படுத்தப்பட்டுள்ளது. இந்தத் தகவலால் குறித்த பெண்களின் குடும்பத்தினர் அதிர்ச்சியடைந்துள்ளனர்.

மினுவாங்கொடை ஆடைத்தொழிற்சாலையில் பணியாற்றிய ஊழியர்களில் நேற்று மட்டும் 729 பேருக்குக் கொரோனாத் தொற்று உறுதி செய்யப்பட்டுள்ளது. இலங்கையில் ஒரே நாளில் அதிகூடிய எண்ணிக்கையிலான கொரோனாத் தொற்றாளர்கள் நேற்றே அடையாளம் காணப்பட்டுள்ளனர்.

அதற்கமைய மினுவாங்கொடை ஆடைத்தொழிற்சாலையில் பணிபுரிந்தவர்களில் மொத்தமாக 831 பேர் கொரானாவால் பாதிக்கப்பட்டு வைத்தியசாலைகளில் சிகிச்சைக்காகச் சேர்க்கப்பட்டுள்ளனர். இதேவேளை, இலங்கையில் கொரோனாத் தொற்றால் பாதிக்கப்பட்டோரின் மொத்த எண்ணிக்கை 4 ஆயிரத்து 252ஆக உயர்ந்துள்ளது. அவர்களில் 3 ஆயிரத்து 266 பேர் குணமடைந்துள்ளனர். 973 பேர் வைத்தியசாலைகளில் சிகிச்சை பெற்று வருகின்றனர். 13 பேர் சிகிச்சைகளின்போது உயிரிழந்துள்ளனர்.