15

15

“வருகின்ற மார்ச் மாதத்திற்குள் அரசு திருந்திநடக்க வேண்டும். இல்லையேல் அரசின் மீது சர்வதேச சட்டம் பாயும் ” – எச்சரிக்கின்றார் சம்பந்தன் !

“ சர்வதேசம் போற்றும் வகையில் எதிர்வரும் மார்ச் மாதத்துக்குள் அரசு திருந்தி நடக்க வேண்டும். அந்தக் கால அவகாசத்துக்குள் ஐ.நா. தீர்மானத்தையும் அரசு முழுமையாக நிறைவேற்ற வேண்டும். இல்லையேல் சர்வதேச சட்டங்கள்  அரசு மீது பாயும்.” என  தமிழ்த் தேசியக் கூட்டமைப்பின் தலைவரும் திருகோணமலை மாவட்ட நாடாளுமன்ற உறுப்பினருமான இரா.சம்பந்தன் எச்சரிக்கை விடுத்துள்ளார்.

இது தொடர்பில் இரா. சம்பந்தன் மேலும் தெரிவிக்கும் போது –

“இந்த நாடு மூவின மக்களுக்கும் சொந்தமான நாடு. ஓர் இனத்துக்கும் மட்டும் இந்த நாடு சொந்தமல்ல. இங்கு மூன்று இனத்துக்குமான அரசியல் உரிமை, மொழி உரிமை மற்றும் மத உரிமை ஆகியன பேணிப் பாதுகாக்கப்பட வேண்டும். ஆட்சியிலுள்ள அரசு சர்வதேசத்தை அவமதித்துச் செயற்பட முடியாது. அதன் அறிவுரைகளைக் கேட்டு நடக்க வேண்டும். நாட்டின் நலன் கருதிய சர்வதேசத்தின் தீர்மானங்களை அரசு நிறைவேற்ற வேண்டும்.

தமிழ் – முஸ்லிம் சமூகம் மீதான அடக்குமுறைகளையும், பழிவாங்கல் நடவடிக்கைகளையும் உடன் அரசு நிறுத்த வேண்டும். சர்வதேசம் போற்றும் வகையில் எதிர்வரும் மார்ச் மாதத்துக்குள் அரசு திருந்தி நடக்க வேண்டும். ஏனெனில், இலங்கைக்கு ஐ.நா. மனித உரிமைகள் சபையில் சர்வதேச நாடுகள் வழங்கியுள்ள கால அவகாசம் எதிர்வரும் மார்ச் மாதத்துக்குள் நிறைவடைகின்றது. அந்தக் கால அவகாசத்துக்குள் ஐ.நா. தீர்மானத்தின் பரிந்துரைகளை அரசு முழுமையாக நிறைவேற்ற வேண்டும். இல்லையேல் பாரிய விளைவுகளை இந்த அரசு சந்திக்கும். சர்வதேச தீர்மானங்களை நிராகரித்தால் சர்வதேச சட்டங்கள்தான் அரசு மீது பாயும். இதைக் கவனத்தில்கொண்டு ராஜபக்ச அரசு செயற்பட வேண்டும்” – எனவும் இரா.சம்பந்தன் அரசை எச்சரித்துள்ளார்.

“மக்களால் விரும்பப்படுபவர்கள், மக்களின் விருப்பத்துக்கு ஏற்ப செயற்படுவார்கள் என நான் நம்புகிறேன்” – விஜய்சேதுபதிக்கு நடிகர் விவேக் அறிவுரை !

இலங்கை கிரிக்கெட் அணியின் முன்னாள் நட்சத்திர சுழல்பந்து வீச்சாளர் முத்தையா முரளிதரனின் வாழ்க்கை வரலாற்றுப் படத்தில் விஜய்சேதுபதி கதாநாயகனாக நடிப்பதற்கு பல்வேறு தரப்பினரும் கடும் கண்டனங்களையும், எதிர்ப்புகளையும் தெரிவித்து வருகின்றனர்.

அந்தவகையில், இன்று(15.10.2020) தமிழ்நாட்டில் இடம்பெற்றிருந்த பத்திரிகையாளர் சந்திப்பொன்றில் கலந்து கொண்ட நடிகர் விவேக் இதுபற்றி தெரிவிக்கையில்,

“உங்கள் அனைவரதும் பார்வைதான் எனது பார்வையுமாக உள்ளது. கருத்து சொல்லும் அளவுக்கு அவ்வளவு பெரியமனிதனல்ல நான். இருந்தாலும் மக்களால் விரும்பப்படுபவர்கள், மக்களின் விருப்பத்துக்கு ஏற்ப செயற்படுவார்கள் என நான் நம்புகிறேன்” என தெரிவித்துள்ளார்.

இலங்கை கிரிக்கெட் அணியின் முன்னாள் நட்சத்திர சுழற்பந்து வீச்சாளர் முத்தையா முரளிதரனின் வாழ்க்கை வரலாற்றுப் படத்தில் விஜய்சேதுபதி கதாநாயகனாக நடிப்பதற்கு எதிர்ப்பு தெரிவித்து டுவிட்டர் உட்பட சமூக வலைத்தளங்களில் எதிர்ப்பலைகள் கொந்தளித்த வண்ணம் இருக்கிறது.

குறிப்பாக டுவிட்டரில் #shameonvijaysethupathi என்ற ஹாஸ்டாக்குகள் மூலமாக இந்திய அளவில் எதிர்ப்பு பதிவுகள் இந்திய சமூகவலைத்தள மக்களால் பகிரப்பட்டு வைரலாகி வருகின்றமையும்  குறிப்பிடத்தக்கது.

கொரோனா 2ம் அலை ஆரம்பம் – மீள முடங்குகிறது பிரான்ஸ் !

உலகின் பல பகுதிகளிலும் கொரோனா வைரஸ் மீளவும் வேகமாக பரவ ஆரம்பித்துள்ளது. முன்னதாக சீனா, பிரித்தானியா போன்ற நாடுகளிலும் கொரோனா இரண்டாம் அலை ஏற்பட்டதை அடுத்து பிரான்ஸிலும் கொரோனா 2ம் அலை வேகமாக வீச ஆரம்பித்துள்ளது.
பிரான்ஸ் நாட்டில் கொரோனா வைரசால் 7.56 லட்சம் பேர் பாதிக்கப்பட்டுள்ளனர். இதுவரை 32,942  பேர் உயிரிழந்துள்ளனர். நோய்த்தடுப்பு நடவடிக்கை தொடர்ந்து மேற்கொள்ளப்படும் நிலையில், பாரிஸ், லில்லி, லியோன், மார்சில்லி, துலூஸ் உள்ளிட்ட நகரங்களில் கொரோனா வைரசின் இரண்டாவது அலை பரவத் தொடங்கி உள்ளது. இதனால் கட்டுப்பாடுகள் அதிகரிக்கப்பட்டுள்ளன.
இந்நிலையில் கொரோனா பரவலை தடுக்கும் வகையில், முக்கிய நகரங்களில் சனிக்கிழமை முதல் 4 வாரங்களுக்கு ஊரடங்கு உத்தரவு அமல்படுத்தப்படும் என ஜனாதிபதி இம்மானுவேல் மேக்ரான் அறிவித்துள்ளார்.  இரவு 9 மணி முதல் காலை 6 மணி வரை ஊடரங்கு அமுலில் இருக்கும் என அவர் தெரிவித்தார்.
இதுபற்றி தொலைக்காட்சி பேட்டியின்போது பேசிய ஜனாதிபதி மேக்ரான், ‘ஐலே-டி-பிரான்ஸ் பிராந்தியத்திலும், லில்லி, கிரெனோபில், லியோன், மார்சில்லி, ரூவன், செயின்ட்-எட்டியென், மான்ட்பெல்லியர், துலூஸ் நகரங்களிலும் இந்த ஊரடங்கு உத்தரவு நடைமுறையில் இருக்கும்’ என்றார்.
கொரோனாவின் இரண்டாவது அலை பரவத் தொடங்கியதால், கட்டுப்பாட்டை நாம் இழக்கவில்லை. நம்மை கவலையடையச் செய்யும் சூழ்நிலையில் இருக்கிறோம். தொற்றுநோயின் முதல் அலையின் தாக்கத்தை வைத்து இந்த முடிவுகளை எடுத்துள்ளோம் என்றும் மேக்ரான் குறிப்பிட்டார்.

அரசு தரப்பிலுள்ள தமிழ்பாராளுமன்ற உறுப்பினர்களிடம் எம்.ஏ.சுமந்திரன் முன்வைத்துள்ள வேண்டுகோள் !

இலங்கை அரசினால் கொண்டுவரப்பட்டுள்ள புதிய அரசியல் சீர்திருத்தமாகிய 20ஆவது அரசியலைப்பு திருத்த சட்டத்திற்கு நாடாளுமன்ற உறுப்பினர்களான வியாழேந்திரன் மற்றும் பிள்ளையான் உட்பட அனைத்து தமிழ் நாடாளுமன்ற உறுப்பினர்களும் வாக்களிக்க கூடாது என தமிழ்த் தேசியக் கூட்டமைப்பின் பேச்சாளரான, நாடாளுமன்ற உறுப்பினர் எம்.ஏ.சுமந்திரன் தெரிவித்துள்ளார்.

மட்டக்களப்பில் நேற்று (14.10.2020) இடம்பெற்ற மக்கள் சந்திப்பில் கலந்துகொண்டு உரையாற்றியபோது அவர் இதனைத் தெரிவித்துள்ளார்.

இது குறித்த அவர் மேலும் தெரிவித்ததாவது,

அரசால் கொண்டுவரப்பட்டுள்ள 20ஆவது திருத்த சட்டமானது தமிழ் மக்களுக்கு பயனற்றது. அவற்றால் தமிழ் மக்களுக்கு எந்த நன்மையும் கிடைக்கப்போவதில்லை எனவே அதற்கு ஆதரவாக தமிழ் நாடாளுமன்ற உறுப்பினர்கள் எவரும் வாக்களிக்க கூடாது. மேலும் அமைச்சர் டக்ளஸ் தேவானந்தா மற்றும் அங்கஜன் இராமநாதன் ஆகியோருக்கும் வடக்கில் இதனைத்தான் கூறியுள்ளேன்” என மேலும் தெரிவித்துள்ளார்.

ரஷ்யாவின் சோயுஸ்.எம்.எஸ்-17 விண்கலம் 3 மணி நேரத்தில் சர்வதேச விண்வெளி மையத்தை அடைந்து புதிய சாதனை !

விண்ணில் உள்ள சர்வதேச விண்வெளி மையத்தை நோக்கி 3 வீரர்களுடன் பயணித்த ரஷ்ய விண்கலம், 3 மணி நேரத்தில் சென்றடைந்து புதிய சாதனை படைத்துள்ளது.

அமெரிக்கா, ரஷ்யா, ஜப்பான் உள்ளிட்ட நாடுகள் விண்வெளியில் சர்வதேச விண்வெளி ஆய்வு மையத்தை அமைத்துள்ளன. இதில் பணியாற்றுவதற்காக வீரர்கள் சுழற்சி முறையில் பூமியில்இருந்து அனுப்பி வைக்கப்படுகின்றனர்.

அந்த வகையில் ரஷ்யாவின் ரோஸ்காஸ்மோஸ் விண்வெளி ஆய்வு நிறுவனத்தைச் சேர்ந்த செர்ஜி ரைசிகோவ், செர்ஜி குட்-ஸ்வெர்கோவ், அமெரிக்காவின் நாசாவை சேர்ந்த கேத்லீன் ரூபின்ஸ் ஆகிய 3 வீரர்கள் நேற்று காலை சர்வதேச விண்வெளி மையத்துக்கு சென்றனர்.

russia-spacecraft

கஜகஸ்தானில் உள்ள பைக்கானூர் ஏவுதளத்தில் இருந்து ரஷ்யாவின் சோயுஸ் எம்எஸ்-17 விண்கலத்தில் இவர்கள் சென்றனர். இவர்களுடைய விண்கலம் 3 மணி நேரத்தில் சர்வதேச விண்வெளி மையத்தை அடைந்து புதிய சாதனை படைத்துள்ளது. இதன்மூலம் பயண நேரம் பாதியாக குறைந்துள்ளது. இதற்கு முன் சரக்குப் பொருட்களுடன் சென்ற விண்வெளி ஓடமே இந்த அதிவேகப் பயணத்தை மேற்கொண்டுள்ளது. வீரர்களுடன் செல்லும் விண்கலம் அதிவேகப் பயணம் மேற்கொண்டது இதுவே முதல் முறையாகும்.

மாதந்தோறும் 1½ கொரோனா தடுப்பூசியை கோடி தயாரிக்க ரஸ்யா முடிவு !

நாளுக்கு நாள் வேகமாக பெரவிவரும் கொரோனா வைரஸை கட்டுப்படுத்த வழி தெரியாது உலக நாடுகள் ஒருபுறம் திணறிக்கொண்டிருந்தாலும் கூட சிலநாடுகள் கொரோனாவுக்கான மருந்தை உருவாக்கும் முயற்சியில் இறுதிக்கட்ட நிலையில் உள்ளன.

இந்நிலையில் ரஸ்யா தடுப்பு மருந்தை கண்டுபிடிப்பதில் முன்னணியிலுள்ளது. கொரோனா வைரஸ் பெருந்தொற்றை தடுத்து நிறுத்துவதற்காக ‘ஸ்புட்னிக்-வி’ என்ற தடுப்பூசியை ரஸ்யா உருவாக்கி, அதன் இறுதிக்கட்ட மருத்துவ பரிசோதனையை நடத்தி வருகிறது.

இந்த தடுப்பூசியை நவம்பர் மாதம் 8 லட்சம் ‘டோஸ்’, டிசம்பர் மாதம் 15 லட்சம் ‘டோஸ்’, ஜனவரியில் 30-35 லட்சம் ‘டோஸ்’ தயாரிக்க ரஸ்யா திட்டமிட்டுள்ளது. அதே நேரத்தில் வசந்த காலத்தில் (மார்ச், ஏப்ரல், மே) தடுப்பூசி தயாரிப்பை மாதந்தோறும் 1½ கோடி ‘டோஸ்’ அளவுக்கு அதிகரிக்க முடிவு செய்துள்ளதாக தொழில், வர்த்தக மந்திரி டெனிஸ் மந்துரோவ் தெரிவித்தார்.

“தெற்கின் கடும்போக்குவாதிகளை திருப்திப்படுத்துவதற்காக ஒரு சிறுபான்மை கட்சியின் தலைவரை இலக்குவைத்து அரசு செயற்படுவது மிகவும் கண்டிக்கத்தக்க செயலாகும் ” – சட்டத்தரணி எச்.எம்.எம். ஹரீஸ் வருத்தம் !

“தெற்கின் கடும்போக்குவாத செயற்பாட்டாளர்களைத் திருப்திப்படுத்துவதற்காக ஒரு சிறுபான்மை கட்சியின் தலைவரை இலக்குவைத்து அரசு செயற்படுவது மிகவும் கண்டிக்கத்தக்க செயலாகும் ‘ என ஸ்ரீலங்கா முஸ்லிம் காங்கிரஸின் பிரதித் தலைவரும் அம்பாறை மாவட்ட நாடாளுமன்ற உறுப்பினருமான சட்டத்தரணி எச்.எம்.எம். ஹரீஸ் வருத்தம் தெரிவித்துள்ளார்.

அகில இலங்கை மக்கள் காங்கிரஸின் தலைவரும் வன்னி மாவட்ட பாராளுமன்ற உறுப்பினருமான ரிஷாத் பதியுதீனைக் கைதுசெய்யும் முயற்சி தொடர்பில் வெளியிட்டுள்ள ஊடக அறிக்கையிலையே அவர் மேற்கண்டவாறு குறிப்பிட்டுள்ளார்.

அதில் மேலும் தெரிவிக்கப்பட்டுள்ளதாவது:-

“இந்த நாட்டில் இனவாத முரண்பாடுகளை உண்டாக்கி நாட்டைச் சீரழிக்கத் துடிக்கும் சில பேரினவாத சக்திகளின் நிகழ்ச்சிநிரலுக்கு அரசு செவிசாய்ப்பது அவ்வளவு ஆரோக்கியமான விடயமல்ல. நாட்டிலுள்ள சகல இனங்களையும் சரி சமமாக மதித்து உரிய கௌரவத்தை வழங்க வேண்டிய அரசே ஜனநாயகக் கடமையைச் செய்வித்த அப்போதைய அமைச்சர் ஒருவரைக் கேள்விக்குட்படுத்திக் கைதுசெய்ய எத்தனிப்பது ஏற்றுக்கொள்ள முடியாத ஒன்றாகும்.

இடம்பெயர்ந்து வாழும் மக்களுக்கு ஜனநாயகக் கடமையான வாக்கைச் செலுத்த வழியேற்படுத்திக் கொடுத்தார் என்பதைக் குற்றமாகச் சுமத்தி கைதுசெய்ய முனைவது கவலையளிக்கின்றது. அரசின் இந்தச் செயலானது சிறுபான்மை மக்களை அரசிடமிருந்து வெகுவாகத் தூரமாக்கும் என்பதை அரசுக்கு எத்திவைக்க விரும்புகின்றேன். இவ்வாறான செயற்பாடுகளை மக்கள் பிரதிநிதி என்ற வகையில் வன்மையாகக் கண்டிக்கின்றேன்.

இலங்கை முஸ்லிம்களை இலக்குவைத்து முஸ்லிங்களுக்கும், முஸ்லிம் தலைமைகளுக்கும் அபகீர்த்தியை உண்டாக்க முயற்சித்துக் கொண்டிருக்கும் தெற்கின் கடும்போக்குவாத செயற்பாட்டாளர்களைத் திருப்திப்படுத்துவதற்காக ஒரு சிறுபான்மை கட்சியின் தலைவரை இலக்குவைத்து செயற்படுவது மிகவும் கண்டிக்கத்தக்க செயலாகும் எனவும் அவர் தன்னுடைய வருத்தத்தை வெளியிட்டுள்ளார்.

“இலங்கையில் கொரோனா வைரஸானது இன்னும் சமூகப் பரவலாக மாறவில்லை“ – இலங்கை சுகாதார அமைச்சு !

இலங்கையில் நாளுக்கு நாள் கொரோனாத்தொற்றாளர்களின் தொகை அதிகரித்து வருவதுடன் நேற்றைய தினம் முடிவடையும் போது நாட்டின் 21 மாவட்டங்களில் கொரோனாத்தொற்று ஏற்பட்டதாக குறிப்பிடப்பட்டிருந்தது.

இந்நிலையில் மக்களிடையே அச்சமான சூழல் ஒன்று உருவாகி வருகின்ற நிலையில் “கொரோனா வைரஸானது இன்னும் சமூகப் பரவலாக மாறவில்லை“ என சுகாதார அமைச்சு இன்று  மீண்டும் வலியுறுத்தியுள்ளது.

மினுவங்கொடை கொவிட்-19 கொத்தணிப் பரவலைத் தொடர்ந்து, கொரோனா பரவலானது சமூகப் பரவலாக மாறயுள்ளதாக கூறப்படுவது அறிவியல்பூர்வமாக இன்னும் நிரூபிக்கப்படவில்லை என்று சுகாதார அமைச்சின் செய்தித் தொடர்பாளர் டாக்டர் ஜெயரூவன் பண்டார தெரிவித்துள்ளார்.

எனவே எந்தவொரு ஆபத்தும் இல்லாமல் கொத்தணி பரவலை முடிவுக்கு கொண்டுவருவதில் சுகாதார அதிகாரிகள் நம்பிக்கை கொண்டுள்ளனர் என்றும் பரவலை கட்டுப்படுத்த பொதுமக்களும் அதிகாரிகளுடன் ஒத்துழைக்க வேண்டும் என்றும் அவர் கோரியுள்ளார்.

20ஆவது திருத்தச் சட்டத்தில் மேற்கொள்ளப்படவுள்ள திருத்தங்கள் தொடர்பில் கலந்துரையாடுவதற்காக விசேட கட்சித் தலைவர் கூட்டத்திற்கு சபாநாயகர் அழைப்பு !

அரசியலமைப்பின் 20ஆவது திருத்தச் சட்டத்தில் மேற்கொள்ளப்படவுள்ள திருத்தங்கள் தொடர்பில் கலந்துரையாடுவதற்காக நாளை வெள்ளிக்கிழமை விசேட கட்சித் தலைவர் கூட்டத்திற்கு சபாநாயகர் அழைப்பு விடுத்துள்ளார். சபாநாயர் மஹிந்த யாப்பா அபேவர்தன தலைமையில் பி.ப. 1.30 மணிக்கு கட்சித் தலைவர் கூட்டம் பாராளுமன்ற வளாகத்தில் நடைபெறவுள்ளது.

20ஆவது திருத்தச் சட்டத்தில் மேற்கொள்ளப்படவுள்ள திருத்தங்கள் தொடர்பில், இதன்போது விரிவாக கலந்துரையாடல்கள் நடத்தப்படுமென அரசாங்கத்தின் தகவலறியும் வட்டாரங்களில் அறிய முடிகிறது.

20ஆவது திருத்தச் சட்டம் தொடர்பிலான உயர் நீதிமன்றத்தின் வியாக்கியானம் சபாநாயகருக்கு அறிவிக்கப்பட்டுள்ளதுடன், அதனை எதிர்வரும் 20ஆம் திகதி பாராளுமன்றில் சமர்ப்பிக்கவுள்ளதாக சபாநாயகர் ஏற்கனவே அறிவித்துள்ளார். இந்தப்பின்புலத்தில் கட்சித் தலைவர் கூட்டத்தில், கலந்துரையாடப்படவுள்ள திருத்தங்களையும் அன்றைய தினம் சபாநாயகர் பாராளுமன்றத்திற்கு அறிவிக்கவுள்ளதாகவும் அறிய முடிகிறது. இருபதாவது திருத்தச் சட்டம் தொடர்பிலான உயர்நீதிமன்றத்தின் வியாக்கியானத்தை, ஐவரடங்கிய நீதியரசர் குழாம் கடந்த சனிக்கிழமை, ஜனாதிபதி கோட்டாபய ராஜபக்ஷவுக்கும் சபாநாயகர் மஹிந்த யாப்பா அபேவர்தனவுக்கும் அறிவித்திருந்தது.

அரசியலமைப்பின் 20ஆவது திருத்தச் சட்டத்தை சவாலுக்குட்படுத்தி 39 அடிப்படை உரிமை மீறல் மனுக்கள் உயர்நீதிமன்றில் தாக்கல் செய்யட்டது. உயர்நீதிமன்ற நீதியரசர் ஜயந்த ஜயவிக்கிரம தலைமையிலான ஐவரடங்கிய நீதியரசர் குழாம் இந்த அடிப்படை உரிமை மீறல் மனுக்களை விசாரணைக்கு உட்படுத்தியிருந்த நிலையிலேயே கடந்த 10ஆம் திகதி 20ஆவது திருத்தச்சட்டம் தொடர்பிலான உயர்நீதிமன்றத்தின் வியாக்கியானம் ஜனாதிபதிக்கும் சபாநாயகருக்கும் அறிவிக்கப்பட்டிருந்தமை குறிப்பிடத்த்கது.

“20ஆம் திருத்தச் சட்டமூலத்தை முன்னோக்கி கொண்டுசென்று, நாடாளுமன்றில் நிறைவேற்றுவதை அனுமதிக்க முடியாது” – அகிலவிராஜ் காரியவசம்

புதிய 20ஆவது அரசியலமைப்புச்சட்டமூலத்தை அரசு நடைமுறைக்கு கொண்டு வருவதற்கான நடவடிக்ககைகளில் மும்முரமாக இறங்கியுள்ள நிலையில் ஐக்கியமக்கள் சக்தி எல்லாவகையிலும் அதனை எதிர்ப்பதாக அறிக்கை ஒன்றை வெளியிட்டிருந்தது. இந்நிலையில் 20ஆவது திருத்தத்தின் மீதான தன்னுடைய அதிருப்தியை ஐக்கிய தேசியக் கட்சியும் வெளியிட்டுள்ளது.

இந்தநிலையில் இது பற்றி குறிப்பிட்ட ஐக்கிய தேசியக் கட்சியின் பொதுச் செயலாளர் அகிலவிராஜ் காரியவசம் “20ஆம் திருத்தச் சட்டமூலத்தை முன்னோக்கி கொண்டுசென்று, நாடாளுமன்றில் நிறைவேற்றுவதை அனுமதிக்க முடியாது” என தெரிவித்துள்ளார்.

குறித்த விடயம் தொடர்பில் கருத்து தெரிவித்தபோது அவர் இதனை தெரிவித்துள்ளார். அதில் மேலும் குறிப்பிட்டுள்ள அவர்,

சமயத் தலைவர்களும் கூட தங்களது நிலைப்பாட்டை 20ஆம் திருத்தச் சட்டமூலத்துக்கு எதிராக  தெளிவாக வெளிப்படுத்தியுள்ளனர். இவ்வாறான நிலையில், 20ஆம் திருத்தச் சட்டமூலத்தை முன்னோக்கி கொண்டுசென்று, நாடாளுமன்றில் நிறைவேற்றுவதை அனுமதிக்க முடியாது என்று அகிலவிராஜ் காரியவசம் தெரிவித்துள்ளார்.